இந்த
கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.
எழுத்துக்களின் மேல்
ஓடி ஓடி
கை விரல்களுக்குக்
கால் வலிக்கிறது.
எத்தனை நேரம் தான்
வெளிச்ச முகம் பார்ப்பது ?
கண்களுக்குள் பார்வை கொஞ்சம்
பழுதடையும் வாசனை.
உட்கார்ந்து உட்கார்ந்தே
என்
முதுகெலும்புக்கும்
முதுகு வலி.
எல்லாம் எழுதியபின்
அவ்வப்போது
தொலைந்துபோகும் மின்சாரம்,
எரிச்சலின் உச்சிக்கு
என்னை எறியும்.
வேண்டுமென்றே
பிடிவாதம் பிடிக்கும்
சில சில்லறை வேலைகள்.
நிம்மதியை
நறுக்குவதற்காகவே
கத்தியோடு அலையும் வைரஸ்கள்.
அவ்வப்போது எட்டிப்பார்த்து
நிலமை கேட்கும் மேலதிகாரி.
முரண்டுபிடித்து ஸ்தம்பிக்கும்
என் கணினி.
தேனீர் தேடச்சொல்லும் தளர்வு.
அப்பப்பா.
இந்த கணிப்பொறி வேலை
பாடாய்ப் படுத்துகிறது.
சோர்வில் சுற்றப்பட்டு
மாலையில்,
வீடுவந்ததும்
மனைவி சொல்வாள்
“உங்களுக்கென்ன
உக்காந்து பாக்கிற உத்யோகம்”