என்
படுக்கை விழித்திருக்கிறது…
என் கதவு,
தாழ்ப்பாள் விலக்கிக் காத்திருக்கிறது.
எந்தக் கோவலனால்
அழியப்போகுதோ
இன்றைய என் அலங்காரம்.
உணர்வுகள் எல்லாம்
ரணமாகி,
பின் மரணமாகிப் போயின.
இப்போது இருப்பதெல்லாம்
இரவுக்குக் காத்திருக்கும்
இந்த
தற்கொலைத் தாமரை மட்டும் தான்.
பகலில்
புரவிச் சவாரி செய்யும்
பல பாண்டிய மன்னர்கள்
இரவில் மணிமுடி கழற்றிவிட்டு
என்
கொல்லைப்படி தேடி வருவதுண்டு.
பகலில்
தோளில் கம்பீரமாகும் துண்டு
இரவில் சிலருக்கு இடம்மாறி
தலையிலும் முகத்திலும்
தற்காப்புக்கவசம் ஆவதுண்டு.
மனைவியின் சண்டையும்,
பிரிவின் வலியும்,
சுமந்து சுமந்தே
இந்த உடம்பு
கட்டில் கால்களுக்குள் கசங்கிப் போனது.
இயலாமையில் இதயம்
எரியும் போதெல்லாம்
வயிற்றுத்தீ வந்து
தண்ணீர் வார்த்துப் போகும்.
கேலிகளின் நீள் நாக்கு குத்தி
காதுகள் கிழியும் போதெல்லாம்
கண்ணீர்க்கால்வாய்கள் ஓடி வந்து
ஒட்டுப்போடும்.
அம்மா
எனும் மழலைக்குரலுடன்
என் முந்தானை முனை இழுக்கும்
மூன்று வயது மூத்தமகன்.
கணவன் வரவுக்காய்
இருண்ட வாசலில் வெளிச்சமாய்
விளக்கேற்றிக் காத்திருக்கும்
என் முகம்.
கனவுகள் அவ்வப்போது வந்து
கதவு திறக்கும் போது
அவிழ்க்க மட்டுமே பழக்கப்பட்ட
ஏதோ ஒரு பாம்புக் குரல் வந்து
முடிச்சிட்டு இழுக்கும்.
மாங்கல்யக் கனவுகளின்
முற்றுப்புள்ளியாய்
என் முந்தானை முடிச்சுகள்
மீண்டும்
கழன்று வீழும்.
*
அற்புதமான உணர்வுகளை வார்த்த கவிதை !
LikeLike
Pingback: ஒரு விலைமகள் விழித்திருக்கிறாள் – TamilBlogs