அப்பாவின் தாடி
சிலருடைய
தாடிகள்
அப்பாவை
ஞாபகப்படுத்துகின்றன.
கருப்பும் வெள்ளையுமாய்
அவை
நினைவுகளின் மீது
வண்ணமடிக்கின்றன.
அப்பாவின்
விரல் கோதிய தாடி
விசேஷமானது.
மழலை வயதில்
எங்களை
கிச்சு கிச்சு மூட்டி
சிரிப்பவை அவை.
கோபித்துக் கொள்ளும்
உயிர் நண்பனைப் போல
தற்காலிகமாய்
காணாமலும் போகும்.
காலங்களின்
பழுப்பேறிப்போன நினைவுகளில்
இன்னமும்
அப்பாவின் தாடி
வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கோ
ஒட்டப்படும் ஒரு போஸ்டரில்
சட்டென
கடந்து செல்லும் ஒருவரில்
நகரும் பேருந்தின்
சன்னலோர மனிதரில்
என
பலரும்
அப்பாவின் தாடியை
நினைவுபடுத்திக் கொண்டே
இருக்கின்றனர்.
எனினும்
அப்பாவின் தாடி
விசேஷமானது.
காரணம்
அது அப்பாவிடம் இருந்தது.
*
சேவியர்
You must be logged in to post a comment.