எப்பிராயின் என்னும் மலை நாட்டில் எல்கானா என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் நம்பிக்கையிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு அன்னா, பென்னினா என்று இரண்டு மனைவியர் இருந்தனர். எல்கானா தம் மனைவியரோடு ஆண்டுதோறும் சீலோ என்னும் இடத்துக்குச் சென்று, அங்குள்ள ஆலயத்தில் கடவுளுக்குப் பலியிடுவதையும் அவரிடம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அந்த ஆலயத்தில் குருவாக இருந்தவர் ஏலி என்பவர். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
பென்னிகாவிற்கு கடவுள் மழலைச் செல்வங்களைக் கொடுத்து மகிழ்ச்சியாய் வைத்திருந்தார். அன்னாவுக்கோ குழந்தைப் பாக்கியமே இல்லை.
குடும்பமாகக் கடவுளுக்குப் பலியிடச் செல்லும்போதெல்லாம் அன்னா தனக்குப் பிள்ளைகள் இல்லையே என மிகவும் வருந்துவாள்.
‘ ஏய் அன்னா…. குழந்தைகள் இல்லாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா ? வெட்கமாக இல்லை ? ஒரு மலடி கூட நடப்பதே எனக்கு அருவருப்பாய் இருக்கிறது’
‘குழந்தை என்பது கடவுளின் பரிசு. அது பாவிகளுக்குக் கிடைக்காது ‘
‘நல்ல மனம் படைத்தவர்களுக்கே கடவுள் தாய்மையைத் தருவார் ‘ என்னும் பென்னிகாவின் குத்தல் பேச்சுகள் அன்னாவை வாட்டி வதைத்தன.
ஆனால் எல்கானா அன்னாவின் மனதைப் புண்படுத்தியதே இல்லை. அவர் அவளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார்.
‘ஏன் கடவுள் எனக்குக் குழந்தையைத் தரவில்லை’ என்று கூறி அன்னா அழும்போதெல்லாம்.
‘அதுக்காக ஏன் அழுகிறாய் அன்னா ? நான் உனக்கு பத்து குழந்தைகளுக்குச் சமம் இல்லையா ?’ என்று கூறு அன்னாவைச் சமாதானப் படுத்துவார். ஆனாலும் அந்த வார்த்தைகள் ஏதும் அன்னாவை ஆறுதல் படுத்தவில்லை. தொடர்ந்து அவள் ஆண்டவரிடம் தன் குறையைச் சொல்லி விண்ணப்பித்துக் கொண்டே இருந்தாள்.
ஒருநாள் சீலோவில் அவர்கள் பலியிடச் சென்றபோது அன்னா தனியாக ஆலயத்தில் ஆண்டவரின் சன்னிதி முன் நின்று
அழுது, புலம்பி செபித்துக் கொண்டிருந்தாள்.
‘ஆண்டவரே… எனக்கு ஒரு மகனைக் கொடும். எனக்கு இருக்கும் மலடி என்னும் பட்டத்தை நீக்கும். நீர் எனக்கு ஒரு ஆண்குழந்தையைத் தந்தால் அவனை உமது சந்திதியிலேயே விட்டு விடுவேன். அவன் உம் பிள்ளையாய் இருப்பான்’ என்று தொடர்ந்து வேண்டிக் கொண்டே இருந்தாள்.
அன்னா மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டுமே அசைந்து கொண்டிருந்தன. அன்னா வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை ஏலி பார்த்தார். அன்னா குடிபோதியில் ஏதோ பிதற்றிக் கொண்டிருப்பதாக நினைத்தார்.
‘ஏய்… ஆலயத்துக்குள் மது அருந்திவிட்டு வந்திருக்கிறாயே ? உனக்கு வெட்கமாக இல்லை ? கடவுளின் முன்னிலையில் வரும்போது மது அருந்திவிட்டு வரலாமா ? அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உளறிக்கொண்டிருக்கிறாயா ? வெளியே போ ?’ ஏலி கத்தினார்.
அன்னா கலங்கிய விழிகளோடு நிமிர்ந்தாள்.
‘இன்னும் எத்தனை காலம் தான் மது அருந்தி மயங்கிக் கிடப்பாய். இந்த பழக்கத்தை நிறுத்தி விடு’ ஏலி குரலில் கொஞ்சம் கோபம் கலந்து பேசினார்.
‘ஐயா… என்னை ஒரு குடிகாரியாக நினைக்காதீர்கள். நான் மது அருந்தவில்லை. என்னுடைய குறையை நான் ஆண்டவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்’ அன்னா சொன்னாள்.
‘உண்மையாகவா ? நீ குடித்துக் கொண்டு உளறுவதாய் நினைத்து விட்டேன். என்னை மன்னித்து விடு… உனக்கு என்ன குறை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா ?’ ஏலி பரிவோடு கேட்டார்.
அன்னா அழுதாள். ‘எனக்கு குழந்தைகள் இல்லை. கடவுள் எனக்கு குழந்தைச் செல்வத்தைத் தராததால் எல்லோரும் என்னை ஏளனமாகப் பேசுகிறார்கள். அதனால் கடவுளிடம் ஒரு குழந்தைச் செல்வத்திற்காக வேண்டினேன்’.
‘கவலைப் படாதே.. கடவுள் உனக்கு மிக விரைவிலேயே ஒரு ஆண் குழந்தையைக் கொடுப்பார்’ ஏலி வாழ்த்தினார்.
ஏலியின் அன்பான வார்த்தைகள் அன்னாவை ஆறுதல் படுத்தின. ‘ஐயா… உங்கள் வாக்கு பலிக்கட்டும். கடவுள் எனக்கு ஒரு ஆண் குழந்தையைத் தந்தால் அவனை இதே ஆலயத்தில் கடவுளின் பணிக்கென ஒப்படைப்பேன்’ அன்னா வாக்குறுதி கொடுத்தாள்.
அன்னாவின் வேண்டுதல் ஆண்டவனைத் தொட்டது. விரைவிலேயே அன்னா கர்ப்பமடைந்தாள்.
அன்னாவின் ஆனந்தம் கரைபுரண்டது. அவள் எப்போதும் ஆண்டவரைப் போற்றிக் கொண்டே இருந்தாள். அன்னாவை குத்திப் பேசிக் கொண்டிருந்த பென்னினா வாயடைத்துப் போனாள்.
பிரசவ வேளை வந்தது. அன்னா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அது ஒரு அழகான ஆண்குழந்தை. அவனைப் பார்த்த அன்னாவின் கண்களும், தந்தை எல்கானாவின் கண்களும் ஆனந்தத்தில் நிறைந்தன. குழந்தைக்கு ‘சாமுவேல்’ என்று பெயரிட்டனர். சாமுவேல் என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று பொருள்.
அன்னா தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறியதை நினைத்துப் பூரித்தாள். குழந்தையை நெஞ்சோடணைத்துத் தாலாட்டினாள். குழந்தை பால் குடிப்பதை நிறுத்திய வயதில் அவனை ஆலயத்துக்கு எடுத்துப் போனாள்.
ஆலயத்துக்குச் சென்று ஏலியின் முன்னால் நின்றாள்.
‘ஐயா… என்னைத் தெரிகிறதா ?’ அன்னா கேட்டாள்.
‘சட்டென நினைவுக்கு வரவில்லை…’ ஏலி யோசித்தார்.
‘நான் தான். கடந்தமுறை ஆண்டவரிடம் அழுது வேண்டிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஆறுதல் படுத்தினீர்களே… அந்த அன்னா தான் நான்’ அன்னா சொன்னாள்.
அன்னாவின் கையிலிருந்த குழந்தையைப் பார்த்த ஏலி பரவசமானார்.
‘அப்படியானால்… கடவுள் உன் வேண்டுதலைக் கேட்டார் ! அப்படித்தானே ! அவர் பெயர் போற்றப் படட்டும்’ என்றார்.
‘ஆம்… கடவுள் என் அவப்பெயரை நீக்கினார். இதுதான் அவர் தந்த பரிசு. சாமுவேல். இதோ அவனை நான் இந்த ஆலயத்தில் விட்டுச் செல்கிறேன். அவன் இனி கடவுளின் ஆலயத்தில் வளரட்டும்.’ என்றாள்.
‘கவலைப் படாதே. நான் அவனைப் பராமரிப்பேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரே பிள்ளையைக் கூட குழந்தை பால்குடிப்பதை நிறுத்தியதும் ஆண்டவன் முன்னிலையில் கொண்டு விட்டாயே ! உன் இறைபக்தி பெரிது. கடவுள் உனக்கு மேலும் குழந்தைகள் தந்து ஆசீர்வதிப்பார்’ ஏலி அவளை வாயார வாழ்த்தினார்.
அன்னா மகிழ்ந்தாள்,’ கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துவார், உயர்ந்தோரைத் தாழ்த்துவார். எல்லோரும் எப்போதும் அழவோ, எப்போதும் சிரிக்கவோ அவர் அனுமதிப்பதில்லை’ என்றாள்.
சாமுவேல் ஆலயத்தில் வளர்ந்தான். நல்ல அமைதியான குணமும், நன்னடத்தையும் அவனிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன. ஏலியின் அருகாமை அவனை இன்னும் பக்தியில் ஆழமாகச் செய்தது.
ஏலிக்கு இருந்த இரண்டு மகன்களும் தந்தைக்கு நேர் எதிராக இருந்தனர். ஆலயத்துக்கு வரும் பெண்களிடம் வம்பு செய்வதும், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுமாக இருந்தனர். கடவுளுக்கு இஸ்ரயேலர்கள் பலிசெலுத்த வரும்போது பலிப் பொருட்களையும், பலியையும் அவமதித்தும் வந்தார்கள்.
ஏலி அவர்களை அழைத்து ‘ இதெல்லாம் கடவுளுக்கு விரோதமான செயல்… உடனே நிறுத்துங்கள்’ என்றார்.
‘எது கடவுளுக்கு விரோதம் ? எந்தக் கடவுளுக்கு ??’ ஏலியின் பிள்ளைகள் ஏளனம் செய்தனர்.
‘மனிதருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தால் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கலாம். நீங்கள் கடவுளுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள்’ ஏலி மீண்டும் எச்சரித்தார்.
‘கடவுளே சும்மா இருக்கிறார். நீ ஏன் முதிர்ந்த காலத்தில் முணுமுணுக்கிறாய்’ பிள்ளைகள் தந்தையை கிண்டலடித்தார்கள்
கடவுள் அவர்கள் மேல் கோபம் கொண்டார்.
சாமுவேல் கடவுளின் முன்னிலையில் பக்தியாய் இருந்து, தூபம் காட்டி, ஆலயப் பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வந்தான்.
ஒருநாள் இரவு. ஏலி தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சாமுவேல் ஆலயத்தில் ஆண்டவன் சன்னிதானத்தின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
‘சாமுவேல்…. சாமுவேல்….’ இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு குரல் தெளிவாய்க் கேட்டது.
சாமுவேல் எழுத்து ஏலியின் அருகே ஓடினான்.
‘ஐயா.. ஏன் அழைத்தீர்கள் ?’ சாமுவேல் கேட்டான்.
‘நான் அழைக்கவில்லையே சாமுவேல். நீ ஏதேனும் கனவு கண்டிருப்பாய்…’ ஏலி சொன்னார். சாமுவேல் மீண்டும் தன்னுடைய இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
‘சாமுவேல்… சாமுவேல்’ மீண்டும் குரல் ஒலித்தது. சாமுவேல் மீண்டும் ஏலியின் இடத்துக்கு ஓடினான்.
‘இந்த முறை நீங்கள் தானே அழைத்தீர்கள் ? கனவில்லை தானே ?’ சாமுவேல் கேட்டான்.
‘இல்லை சாமுவேல். நான் அழைக்கவில்லை. போய்த் தூங்கு. சோர்வாய் இருக்கிறாய் என நினைக்கிறேன். அதனால் தான் யாரோ அழைப்பது போல உனக்குக் கேட்கிறது’ ஏலி சொன்னார். சாமுவேல் மீண்டும் வந்து படுத்துக் கொண்டான்.
‘சாமுவேல் …. சாமுவேல்’ மூன்றாம் முறையாகக் குரல் ஒலித்தது. சாமுவேல் ஏலியிடம் போனான்.
‘ஐயா… மூன்று முறை என்னை அழைத்தீர்கள். ஏன் என்று சொல்லவேயில்லை’ சாமுவேல் சொன்னான்.
ஏலிக்கு மனசுக்குள் ஏதோ ஒன்று மின்னியது. சாமுவேலை அழைப்பது கடவுள் தான் என்று புரிந்து கொண்டார்.
‘சாமுவேல்.. இனிமேல் உன்னை யாராவது அழைக்கும் சத்தம் கேட்டால்… ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன் என்று சொல்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
சாமுவேல் வந்து படுத்துக் கொண்டான். ஆண்டவர் சாமுவேலை மீண்டும் அழைத்தார்.
‘ஆண்டவரே… பேசும்… உம் அடியேன் கேட்கிறேன்…’ சாமுவேல் கூறினான்.
‘ஏலியின் பிள்ளைகள் வழி தவறி விட்டார்கள். திருந்துவதற்காக நான் அமைத்துக் கொடுத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டார்கள். எனவே அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கூட அழிக்கப் போகிறேன். இனிமேல் உன்னோடு நான் இருப்பேன். ஏலியின் குடும்பத்தினரோடு எனக்கிருந்த உறவை விலக்கிக் கொள்வேன்’ என்றார்.
சாமுவேல் கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு வருத்தமடைந்தான். மறுநாள் காலையில் ஏலி வந்து சாமுவேலை எழுப்பினார்.
‘சாமுவேல்… சாமுவேல்… ‘
சாமுவேல் எழுந்தான். ‘ சொல்லுங்கள் ஐயா…’
‘நேற்று கடவுளிடம் பேசினாயா ?’ ஏலி கேட்டார்.
‘பேசினேன்…’ சாமுவேல் சுருக்கமாய் சொன்னான்.
‘கடவுள் உன்னோடு என்ன பேசினார் ?’ ஏலி மீண்டும் கேட்டார்.
‘அது… வந்து…..’ சாமுவேல் இழுத்தான்.
‘சொல் சாமுவேல்… பொய்சொல்வதும், என்னிடம் உண்மையை மறைப்பதும் பாவச் செயல். நீ உண்மையைச் சொல்’ ஏலி வற்புறுத்த சாமுவேல் உண்மையைச் சொன்னார். ஏலி மிகவும் மனவருத்தமடைந்தார். ‘கடவுளுக்கு எதிராய்ப் பேச நான் யார் ?’ என்று அவருடைய உதடுகள் முணு முணுத்தன.
சிறிது நாட்களில் பிலிஸ்தியர் இஸ்ரயேலர் மீது படையெடுத்து வந்து அவர்களைத் தாக்கினார்கள். பிலிஸ்தியரின் வலிமைக்கு முன் இஸ்ரயேலர்கள் தோற்றுப் போனார்கள். தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுள் எப்போதும் இஸ்ரயேலரோடு இருக்கிறாரே, பின் எப்படி இந்தமுறை தோற்றுப் போனோம் ? என்று இஸ்ரயேலர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்கள்.
‘கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய உடன்படிக்கைப் பேழையை நாம் போரிடும் இடத்துக்குக் கொண்டு போவோம்… கடவுள் நம்மைக் காப்பார்…’ என்று முடிவெடுத்தனர். பிலிஸ்தியர்கள் மீண்டும் தாக்கியபோது கடவுளின் பேழை இஸ்ரயேலரோடு இருந்தது. ஆனால் இந்த முறையும் பிலிஸ்தியரே வென்றனர். ஏலியின் பிள்ளைகள் இருவரும் போரில் கொல்லப்பட்டனர். கடவுளின் பேழையும் பெலிஸ்தியரால் கவர்ந்து செல்லப் பட்டது.
பெலிஸ்தியர்கள் பேழையை எடுத்துக் கொண்டு தாகோன் என்னும் தெய்வத்தின் கோயிலில் தாகோனின் சிலைக்கு முன்பாக வைத்தார்கள். மறுநாள் காலையில் வந்து பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். தாகோனின் சிலை பேழைக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடந்தது.
அவர்கள் அதை நிமிர்த்தி வைத்தார்கள். ஆனால் மறுநாளும் அது அப்படியே கிடந்தது.
மீண்டும் அவர்கள் சிலையை நிமிர்த்தி வைத்து ஆலயத்தை நன்றாகப் பூட்டினார்கள்.
மறுநாளும் சிலை பேழை முன்னால் விழுந்து கிடந்தது. அதன் கைகள் வெட்டப்பட்டிருந்தன. பிலிஸ்தியர் இதைக் கண்டு மிகவும் பயந்து போனார்கள்.
அந்த பேழையைப் பெலிஸ்தியர்கள் தங்கள் நாட்டில் கொண்டு வைத்தது முதல் மக்களுக்கு நோய்கள் வர ஆரம்பித்தன. கடவுள் அந்த நகரின் பெரும்பாலானோரை மூல நோயால் தாக்கினார். அந்தப் பேழை இருந்த ஏழு மாத காலமும் மக்கள் பிணியாளிகளாய் நடமாடினர்.
‘இனிமேலும் இது இங்கே இருக்கக் கூடாது…. ஏதாவது செய்யுங்கள்’ மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது
‘என்ன செய்வது ? ‘ தலைவன் கேட்டான்.
‘உடைப்பதோ, அழிப்பதோ மீண்டும் பெரிய ஆபத்தையே உண்டாக்கும். பேசாமல் மீண்டும் இதை இஸ்ரயேலரிடமே ஒப்படைப்போம்’ பலர் சொன்னார்கள்.
தலைவன் குறி சொல்வோரை அழைத்து யோசனை கேட்டார். அவர்களோ,’ இதை இஸ்ரயேலரிடம் திருப்பி அனுப்பலாம். ஆனால் அதற்கு முன் நீங்கள் பரிகாரமாக ஐந்து மூலக் கட்டிகளின் உருவங்களையும், ஐந்து சுண்டெலி உருவங்களையும் பொன்னினால் செய்து பேழையோடே அனுப்பி வையுங்கள்.’ என்றார்கள்
அவ்வாறே அவர்கள் ஒரு மாட்டு வண்டியில் பேழையையும் பரிகார பொன் உருவங்களையும் வைத்தார்கள். மாடுகள் நேராக இஸ்ரயேலரின் நாட்டை நோக்கி ஓடியது ! அந்த வண்டி சென்ற இடங்களிலெல்லாம், அந்தப் பேழையை உற்று நோக்கிய கெட்டவர்கள் எல்லாரும் அழிந்தார்கள். மர்மமான முறையில் மரித்தார்கள். கடவுளின் பேழை மீண்டும் தன்னுடைய இடத்துக்கே வந்து சேர்ந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள்.
சாமுவேல் இஸ்ரவேல் இன மக்களுக்கு வழிகாட்டியானார். பிலிஸ்தியர்கள் மீண்டும் படையெடுத்தனர். ஆனால் இந்த முறை கடவுள் சாமுவேலுடன் இருந்தார். பிலிஸ்தியர்கள் ஓட ஓட விரட்டப் பட்டனர்.
சாமுவேல் தன்னுடைய முதுமைக் காலம் வரை இஸ்ரயேல் மக்களுக்குத் தலைவராக இருந்தார். கடவுள் அவரோடும் இஸ்ரயேலரோடும் இருந்து அவர்களை வழிநடத்தினார்.
ஃ
எனது கி.மு விவிலியக் கதைகள் நூலிலிருந்து