பெண்ணின்றி அமையாது உலகு !

Image result for mother and child

பெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று ! அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.

பெண்களின் உலகம் அழகானது ! அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது ! பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது ! பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.

எந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ! ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் !

விழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை !

தொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை ! முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் ! மறக்க முடியா மகத்துவம்.

அன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல !
ஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.

நம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.

தவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ?’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ! தங்கை என்பவள் மூத்த மகள் ! சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.

வண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது !

இந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி ! இறைவன் இணையாய் கொடுக்கும் துணை ! நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் ! தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் !

இரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி ! பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் ! உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது !

மனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.

பெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் !

என் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.

எரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.

சகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.

பெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.

அன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது ! அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் !பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது ! மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ! ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.

அன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை !

பெண்மையை நேசிப்போம் !
நமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் !

பெண்மையை மதிப்போம் !
நம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் !!

பெண்மையை போற்றுவோம் !
எந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு !

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

POS ! என்ன ? ஏன் ? எப்படி ?

Image result for pos

“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.

மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.

கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா ? அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது ! அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி ! 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது ! இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் !

கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம்  ! தப்பில்லை !

“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே ? பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே !. அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.

இன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.

சில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் ! அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.

சுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா ? அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா ? என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.

உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது ? நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே ? யோசித்ததுண்டா ?

இந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ! ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.

வேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.

ஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.

இந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது ! போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் !

வெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ! ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த   நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது ! OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது ! இது 1999ல் வெளியானது.

பி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது !  திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.

டெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.

சில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் ! இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை !

பி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் !  தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.

அடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க ? டெஸ்ஸா ? இல்லை டக்பிட்டா ?” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் !

3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது ?

Image result for 3d

இது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது? திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் ! விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் ! அவ்வளவு எளிதில் மைடியர் குட்டிச் சாத்தானை மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இந்த 3D எப்படிச் சாத்தியமாகிறது ? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 3D என்பது வேறொன்றுமில்லை நமது கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். ஆச்சரியப்படாதீர்கள். 2D யில் உள்ள திரைப்படத்தை 3D போன்ற தோற்றத்தில் தர சினிமாக் கருவிகளும், கண்ணாடிகளும் உதவுகின்றன. அதை எவ்வளவு தத்ரூபமாகத் தருகிறார்கள் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

3டி சமீபகாலக் கண்டுபிடிப்பு எனும் நினைப்பு உங்களிடம் இருந்தால் அந்த நினைப்பை இந்த வினாடியே குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். அதரப் பழசான விஷயம் அது ! பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் ! அது தான் ஸ்டீரியோஸ்கோப்பின் வடிவம். இதற்கு இரண்டு படங்களை அருகருகே திரையிட வேண்டிய தேவை இருந்தது !

அந்த கான்சப்டை அப்படியே அலேக்காகத் தூக்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரடரிக் எக்வீன் என்பவர் ஒரு கேமரா கண்டுபிடித்து உடனே அதற்குக் காப்புரிமையும் வாங்கினார். இதில் 4.45 சென்டீ மீட்டர் இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். அப்புறம் மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 1915 ஜூன் 10ம் தியதி நியூயார்க்கிலுள்ள ஆஸ்டர் திரையரங்கில் முப்பரிமாணத் திரைபடம் சோதனை ஓட்டம் போட்டது. அதை நடத்தியவர்கள் எட்வின் பார்டர் மற்றும் வில்லியம் வேடல் எனும் இருவர்.

அந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. ஆனால் அப்போது இது மிகப்பெரிய பணச்செலவு, திரையிட ஏகப்பட்ட கஷ்டம் எனும் செயல்முறை சிக்கல்களால் முதுகொடிந்து கிடந்தது.  1922ம் ஆண்டு செட்பம்பர் 27ம் தியதி டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் உலகின் முதல் 3டி சினிமா வந்தது. அதன் பெயர் “த பவர் ஆஃப் லவ்” (The Power of Love). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அம்பாசடர் ஹோட்டல் திரையரங்கில் இது வெளியானது.

3டி ஒரு கமர்ஷியல் சினிமா சரக்காக மாறியது 1950ல் தான். அப்போதும் அது சரசரவென பற்றிப் படரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விட ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி போன்ற பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் 3டி தயாரிப்பில் குதித்தன. எனவே 3டி என்பது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தை “3டியின் பொற்காலம்” என்கிறார்கள். ஆனால் அதன்பின் 3டி மீண்டும் படுத்தது !

இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது தான் அந்த சோர்வுக்குக் காரணம். இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே வேகத்தில், கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் ஓட வேண்டும். தனி ஸ்பெஷல் திரை வேண்டும். ஏகப்பட்ட பணச் செலவு என அடுக்கடுக்கான காரணங்கள் தான் அந்த தொய்வுக்குக் காரணம்.

1960ல் 3டி தொழில் நுட்பத்தின் ஒரு புது புரட்சி தோன்றியது. அதுவரை 3டி படம் போட வேண்டுமெனில் இரண்டு பிலிம் ரோல், இரண்டு புரஜக்டர் என இருந்த நிலை மாறி ஒரே பிலிம் ரோலில் இரண்டு படங்களை பதிவு செய்யும் முறை அப்போது தான் அறிமுகமானது ! ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது ! இது ஏகப்பட்டத் தலைவலிகளை ஒழித்துக் கட்டி 3டி படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையே அளித்து விட்டது !

1980களுக்குப் பின் தான் 3டி சர சரவென வளரத் துவங்கியது. 1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டியின் மறுபிறப்புக் காலம் என்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நிறைய முப்பரிமாணப் படங்கள் வந்து பரபரப்பூட்டின.

இருந்தாலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் அப்போதும் 3டி நுட்பத்தால் அசரடித்தவர். 2003ல் அவர் “கோஸ்ட் ஆஃப் த அபைஸ்” (Ghost of the Abyss) எனும் படத்தை வெளியிட்டார். ரியாலிடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படம் 3டி நுட்பத்தில் மிரட்டியது.  அதற்குப் பிறகு அவர் “அவதார்” மூலம் திரையுலகையே புரட்டிப் போட்டது நாம் அறிந்த விஷயம் தான் ! இப்போது ஏறக்குறைய எல்லா ஹாலிவுட் அனிமேஷன், ஃபேன்டஸி போன்ற படங்களெல்லாம் 3டியில் தான் வருவேன் என முரண்டு பிடிக்கின்றன.

முதலிலேயே சொன்னது போல, 3டி திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வருவதில்லை. இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தையைச் செய்கின்றன. இலக்கியப் பிரியர்கள் இதை, காட்சி மயக்கம் அல்லது தோற்றப் பிழை என்று கூட அழைத்துக் கொள்ளலாம்.

அனகிலிப் (Anaglyph) என்பது இதன் ஆரம்ப கால வகை. இன்றும் கூட இது அச்சு மீடியாவில் வழக்கத்தில் உண்டு. சிவப்பு மற்றும் நீலம் ( முழுமையான நீலம் அல்ல) நிறங்களில் படங்களை ஒன்றன் மீது ஒன்றாக எடுத்து, அதை ஸ்பெஷல் கண்ணாடி மூலம் பார்ப்பது. அந்த ஸ்பெஷல் கண்ணாடியில் ஒரு கண்ணில் சிவப்பு, ஒரு கண்ணில் நீலம் இருக்கும். அவை குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டுள்ள படத்தை முதன்மைப்படுத்தி மற்றவற்றை இருட்டாக்கும். ஒரு கண் வழியாக ஒரு ஒரு அடுக்கு மட்டுமே தெரியும். மற்ற அடுக்கு அடுத்த கண்ணில் தான் தெரியும். இப்படிப் பிரித்துக் காட்டும் போது முப்பரிமாண தோற்றம் உருவாகும் !

3டி டிவி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே ! அதில் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த நுட்பமும் இது தான். இப்போது பெரும்பாலான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழக்கத்தை விட்டு “போலராய்ட்” வகைக்குள் நுழைந்து விட்டார்கள்.

போலராய்ட் ? ஆம், அது தான் அடுத்தகட்ட வளர்ச்சி. 1950களுக்குப் பிறகு இது தான் பாப்புலர் 3டி நுட்பம். நீங்கள் சமீப காலத்தில் ஏதேனும் 3டி படம் தியேட்டரில் பார்த்திருந்தீர்களெனில் நிச்சயம் இந்தத் தொழில் நுட்பத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இதில் “போலராய்ட்” பில்டர்கள் மூலம் படம் திரையிடப்படும். இதிலும் இரண்டு படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழும். அதை போலராய்ட் கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2டி தான் தெரியும் !

ஆக்டிவ் ஷட்டர் கிளாஸஸ் (Active shutter glasses) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியாது. அது பிரபலமான 3டி கண்ணாடி வகையில் ஒன்று. இது கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் படம் திரையிடப்படும் ஸ்கீரினுக்கும், கண்ணாடிக்கும் இடையே ஒரு தொடர்பு எப்போதுமே இருக்கும். நாம் எந்த இடத்திலிருந்து படத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணாடிக்கு ஸ்கிரீன் ஒரு சிக்னலை அனுப்பும். அதன் அடிப்படையில் எந்தக் கண் வழியாக அதிக வெளிச்சம் வரவேண்டும் என்பன போன்ற அடிப்படைத் தகவல்கள் பரிமாறப்படும்.

அடிப்படையில் சொல்லப் போனால் நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும் போது ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள் அங்கும் இங்கும் அசைவதாய்த் தோன்றும். ஆனால் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாய் உங்களுக்குத் தெரியும். அப்படித் தெரியவில்லையேல் கண் மருத்துவரைப் பாருங்கள் என்பதே என்னுடைய சிம்பிள் அட்வைஸ்.

இப்போது 3டி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இதுவரை 3டி படம் பார்க்க கண்ணாடி வேண்டும் எனும் கட்டாயம் இருந்தது இல்லையா ? அந்தக் கெடுபிடி இல்லை என்பது தான் புதுமையான நிலை. 3டி டிவியில் அந்த நிலை இப்போது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளிலும் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாணம் பார்க்கும் நிலை உருவாகும். அந்த வித்தையைச் செய்யும் தொழில் நுட்பம் பாரலாக்ஸ் பாரியர் (Parallax Barrier) என அழைக்கப்படுகிறது. இதில் தொலைக்காட்சித் திரையில் படங்கள் அடுக்கடுக்காய் ஒளிபரப்பாகும். அந்தத் திரைக்கு முன்னால் பாரலக்ஸ் பாரியர் திரை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நமது கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை இந்தத் திரை செய்கிறது அது தான் வித்தியாசம்.

இவையெல்லாம் 2டி படத்தை 3டி படமாக நமக்குக் காண்பிக்கும் வித்தைகள் என்பது தான் சிறப்பம்சம். ஆனால் உண்மையிலேயே 3டி படங்களையும், ஆட்களையும் காண்பிக்கும் தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. எந்திரன் படத்தில் ரஜினியின் 3டி உருவம் வந்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அத்தகைய இமேஜ் மனிதர்கள் விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழையத் துவங்கிவிட்டார்கள். காற்றில் உருவம் வரையும் வித்தை அது ! எதிர்காலத்தில் ரொம்ப அன்னியோன்யமானத் தகவல் பரிமாற்றத்தை இத்தகைய உருவங்கள் செய்யும் என்பது பலத்த எதிர்பார்ப்பு.

உலகம் 3டி நுட்பத்துக்குள் புயலாய் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த அடிப்படைத் தகவல்களை 2டியில் வாசித்துத் தெரிந்து கொள்வது நல்லது தான் இல்லையா ?!

ஜூஸ் ஜேக்கிங் !

ஜூஸ் ஜேக்கிங் !

Image result for juice jacking

உங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா ? அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா ? அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.

முன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்ச்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதற்காக விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

அப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு ! என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி ! இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் ! என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.

அதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் ? அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.

இரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.

இன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.

எது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலியைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

இந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி ?

எளிமையாகச் சொல்வதென்றால், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது ? பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.

2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.

3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.

4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.

5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்குகிறார்கள் ? சிம்பிள் ! சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.

8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.

9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.

10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போம். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.

*

தினத்தந்தி

காதல் என்பது எதுவரை ?

Image result for love

 

காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை !

ஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போல இயலாத காரியம் அது. 

பெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது ? பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது ? கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது ? நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் ?  காதலின் கடைசியும் அப்படியே ! அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம். 

காதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ? அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ? 

காற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா ? அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா ? இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு !

எனில், காதல் என்பது எதுவரை ?

அன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை !, அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை ! அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் ! அழகை இழக்கும்.

ஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ! ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ! இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.

காமத்தின் மெல்லிய சாரல் காதலுக்குள் பெய்யும் வரை ! காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது. 

சுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை ! காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.

இருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை.

காதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் ! அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.

இப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை ! தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.

என்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் ! அத்தகைய காதல் அழிவதில்லை.

வேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயுள் கிணறு நிரம்பும். 

மன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும். 

காதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும். 

நான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.

காதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை. 

நம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலருடன் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.  

சொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் ! மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது ? காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் ! 

ஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும். 

ஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும். 

அடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும். 

எனில் காதல் என்பது எதுவரை ?

காதலர் விரும்பும் வரை !

காதலர் விரும்புவது எதுவரை

காதலை விரும்பும் வரை !

*

வெற்றிமணி, இலண்டன்

 

தொடுதிரைத் தொழில்நுட்பம்

Image result for touch screen

தொழில் நுட்பம் ஒவ்வோர் காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிசயப் பக்கத்தை விரிப்பது வழக்கம். சினிமா உருவான காலத்தில் திரையில் அசையும் காட்சிகள் பிரமிப்பாய் இருந்தன. அது மிகப்பெரிய தொழில் நுட்பப் புரட்சி. முதலில் திரையிடப்பட்ட காட்சி இது தான். “தூரத்திலிருந்து ஒரு இரயில் வண்டி ஓடி வருகிறது”. அதை திரையிட்டபோது தியேட்டரில் இருந்தவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அது திரையைக் கிழித்துக் கொண்டு வந்து தங்களை இடித்து விடும் என பயந்தார்கள் ! சினிமா இன்றைக்கு பல்வேறு மாற்றங்களைக் கண்டு மிரட்டும் வகையில் அவதார் எடுத்து நிற்பது நமக்குத் தெரிந்ததே.

தொலைக்காட்சிகள் வந்தது இன்னொரு புரட்சி ! ஒரு தொலைக்காட்சியை சொந்தமாக்க வேண்டுமென்றால் சொத்து, பத்தையெல்லாம் விற்க வேண்டும் எனும் காலகட்டம் இருந்தது. இப்போது அது முன்னூறு ரூபாய்க்கு  மூலைகளில் விற்கப்படுகிறது.

தொலைபேசி வந்தபோதும் அப்படியே ! அது வசீகரமாய் மாறி செல்போனாக மாறியபோதும் அப்படியே. இப்படி வரிசைப்படுத்தும் வசீகரப் பட்டியலில் சர்வ நிச்சயமாய் இந்த “தொடுதிரை”க்கும் ஒரு இடம் உண்டு. டச் ஸ்க்ரீன் ( Touch Screen ) தான் தொடு திரை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை !

இப்போது சாதாரணமாக சீனாவின் குடிசைத் தொழிலாய் உருவாகும் ஆயிரம் ரூபாய் போன்களில் கூட இந்த தொடு திரை வந்து விட்டது. ஐபோன் போன்ற உலகை புரட்டிப் போட்ட தயாரிப்புகளின் வசீகர அம்சம் இந்த அட்டகாசமான தொடு திரை ஸ்டைல் தான். டேப்லெட்களின் படையெடுப்புக்குப் பிறகு தொடுதிரை நமது விரல்களை விட்டு விலக்க முடியாத விஷயமாகிப் போய்விட்டது. அதனால் அதான் கணினிகளும் தங்கள் இயங்கு தளங்களை தொடு திரை வசதியோடு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

சரி.. இந்த தொடு திரை எப்படித் தான் வேலைசெய்கிறது ? எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா ? கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி ? அங்கே எந்த பட்டனும் கிடையாது. வெறும் ஒரு திரை மட்டுமே. அதில் படங்கள் மட்டுமே. படத்தைத் தொட்டால் எப்படி விஷயம் நடக்கிறது ?

இந்த தொழில் நுட்பத்துக்கு மிக மிக அடிப்படையாய் இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. நாம் நமது செல்போனிலோ, டேப்லெட்டிலோ அல்லது வேறு ஏதேனும் தொடுதிரைக் கருவியிலோ தொடும் போது எந்த இடத்தைத் தொடுகிறோம் எனும் அட்சர சுத்தமான தகவல் கருவிக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிந்தால் பாதி வேலை முடிந்தது. அந்த தகவலுக்குத் தக்கபடியான செயலை செய்ய வேண்டியது மீதி வேலை.

அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் தான் விஷயமே இருக்கிறது. மிக முக்கியமாக மூன்று பெரிய வகைகளில் இந்த நுட்பம் கையாளப்படுகிறது. ரெசிஸ்டிவ் (Resistive) , கெப்பாசிடிவ் (Capacitive) மற்றும் சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave)  என்பவையே அந்த மூன்று நுட்பங்கள். இதில் இணை, கிளை என பல வகைகள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ரெசிஸ்டிவ் வகை ஒரு சுவிட்ச் போன்று செயல்படக் கூடியது. சுவிட்ச் எப்படி இயங்குகிறது ? ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா ? இந்த ரெசிஸ்டிவ் வகைத் தொடுதிரையின் கான்செப்ட் அது தான். இதில் ஒரு கண்ணாடித்திரை, அதன் மீது இன்னொரு திரை என இரண்டு அடுக்குத் திரை இருக்கும். இரண்டு இரண்டு திரைகளுக்கும் இடையே மின்சாரம் பாயாத ஒரு வெற்றிடமும் இருக்கும். மேலே இருக்கும் திரையின் அடிப்பாகத்திலும், கீழே இருக்கும் திரையின் மேல் பாகத்திலும் மின் கடத்திகள் இருக்கும்.

ஒரு இடத்தை நாம் தொடும் போது, மேலே உள்ள திரையும் கீழே உள்ள திரையும் தொட்டுக் கொள்கின்றன. அப்போது ஒரு இணைப்பு உருவாகிறது. மின்சாரம் அந்த புள்ளி வழியாகப் பாய்கிறது. அந்த மின்காந்த அலை மாற்றத்தைக் கொண்டு அது எந்த புள்ளி என்பது கண்டறியப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு மவுஸ் கிளிக் போல, உள்ளே இருக்கும் மென்பொருள் தேவையான செயலைச் செய்து விடும். இதை கையால் தான் தொடவேண்டும் என்பதில்லை. ஸ்டைலஸ் குச்சி, பென்சில், ரப்பம் இத்யாதி என ஏதாவது ஒரு பொருள் போதும் !

இரண்டாவது வகை கெப்பாசிடிவ் சிஸ்டம். இந்த நுட்பம் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் அடுக்குத் திரைகள், அதை இணையச் செய்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. தொடுதிரையில் மின் சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். மிக மெல்லிய அளவில். அதை நாம் தொடும்போது தொடும் புள்ளியிலிருந்து கொஞ்சம் மின்சாரம் நமது உடலுக்குக் கடத்தப்படும். அப்போது தொடப்பட்ட புள்ளியில் மின்சாரம் குறைவாய் இருக்கும். அந்த மாற்றத்தைக் திரையின் நாலா பக்கத்திலும் சைலன்டாக இருக்கும் சர்க்யூட்கள் துல்லியமாகக் கவனிக்கும். அவை அந்தத் தகவலைக் கூட்டிக் கழித்து, எந்த இடத்தில் தொடுதல் நடந்தது என்பதை கண்டு பிடிக்கும் !

இந்த வகை நுட்பத்தை இயக்க விரல் நுனிகள் வேண்டும் என்பது அடிப்படை. அது ஏன் என குதக்கமாய் மூக்கை நுழைப்பவர்கள், மூக்கை வைத்தும் இயக்கலாம். அடிப்படையில் உடலின் ஒரு பாகம் இதில் தொடவேண்டும் அப்போதுதான் மின்கடத்தல் நிகழும் என்பதே விஷயம். குளிர் பிரதேசங்களில் கிளவுஸ் போட்டு அலைபவர்கள் இந்த கருவியை இயக்க, கிளவுஸைக் கழற்ற வேண்டிய அவசியம் உண்டு ! கழற்றாமல் பயன்படுத்தக் கூடிய சில ஸ்பெஷல் கிளவுஸ் களும் விற்பனையில் உள்ளன என்பது சுவாரஸ்யத் தகவல். இந்த ஸ்பெஷல் கிளவுஸின் சில விரல்கள் மின்சாரம் கடத்தும் இழைகளால் தயாரிக்கப்பட்டிருக்கும், அவ்வளவுதான் !

மூன்றாவது வகை சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave)  சிஸ்டம். பள்ளிக் கூடத்தில் கணக்குப் பாடத்தில் வரும் கிராஃப் பேப்பர் ஞாபகம் இருக்கிறதா ? எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே ? அதே போல இந்த மூன்றாவது வகை நுட்பத்தில் மின் அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும். ஒரு எல்லையிலிருந்து துவங்கி மறு எல்லை வரை இவை சீரான நேர்கோடுகளில் பாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு முனை அனுப்பும், மறு முனை பெற்றுக் கொள்ளும்.

இதன் மேல், அந்த அலைகள் பாய்வதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியும் இருக்கும். இப்போது நமது கை விரல் அந்த திரையின் மேல் ஏதேனும் ஒரு இடத்தில் தொட்டால், அந்த இழை அறுபடும். மறு எல்லைக்குப் போய்ச் சேராது இல்லையா ? அந்த தகவலை வைத்து எந்த இடத்தில் தொடுதல் நடந்தது எனும் விஷயம் கணக்கிடப்படும்.

இன்றைக்கு இருக்கும் மிகப் பிரபலமான முறை இது தான். காரணம் இந்த முறையில் தான் படங்களை மிகத் தெளிவாக காண்பிக்க முடியும் ! செல்லமாய் விரல் நுனியால் படங்களைப் புரட்டிப் பார்க்கும் இன்றைய நவீன தொடு திரைகளின் உள்ளே இயங்கும் நுட்பம் இது தான் !

சில தொடு திரைகளில் நீங்கள் இரண்டு விரல்களால் ஒரே நேரத்தில் தொட்டால் அது வேலை செய்யாது. அத்தகைய நுட்பத்தில் பெரும்பாலும், “முதல்” தொடுதல் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு காரியத்தில் இறங்கும். நவீன திரைகளில் “மல்டி டச்” எனப்படும் பல தொடுதல்கள் சாத்தியம். படத்தை “ஸூம்” செய்ய பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் ஸ்டைலாகப் பயன்படுத்துவோருக்கு இது சட்டென புரியும் !

மிகப் பிரபலமான, பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் நுட்பம் இவை என்றாலும் வேறு சில சுவாரஸ்யமான நுட்பங்களும் இதில் உண்டு.

டைக்கோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்த தொழில் நுட்பம் அதில் ஒன்று ! இதில் தொடுதிரையின் ஒவ்வோர் சின்ன பகுதியும் ஒரு தனித்துவமான ஓசை எழும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சத்தத்தை நாம் கேட்க முடியாது. ஆனால் அந்த ஒலியின் அதிர்வலையையை கணினி கண்டறியும்.

இத்தகைய தொடுதிரையில் நாம் விரல்களால் தொடும்போது தனித் தனி ஒலி அலைகள் எழும். அதைக் கணினி டீகோட் செய்து தகவல்களாக மாற்றும். அந்தத் தகவலின் அடிப்படையில் தொடு திரை செயல்படும் ! வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் ! ஒரு கல்யாண வீட்டின் பாட்டுக் கச்சேரிக்கு முன் அமர்ந்து கூட இதை இயக்கலாம், பிரச்சினை இல்லை !

தொடுதிரைகளின் அடுத்த வளர்ச்சி என்பது திரையே இல்லாமல் தொடுவது தான் ! புருவத்தை உயர்த்துகிறீர்களா ? சொல்கிறேன் ! இது லேசர் டெக்னாலஜி படி இயங்கும். கருவியிலிருந்து லேசர் வெளிச்சம் வரும். அதை சுவரிலோ, தரையிலோ, ஏன் கையிலோ கூட அடித்து அந்த பிம்பங்களைத் தொட்டு இயக்கும் நுட்பமே இது !

லேசர் இமேஜ் கேலிபரேஷன் டெக்னாலஜி Laser Image Calibration Technology (LICT) என்று இதை அழைக்கிறார்கள். சினிமாவை திரையில் காட்டுவது போல, இந்த லேசர் ஒளியை உள்ளங்கை அளவுக்குச் சுருக்கியோ, சினிமாஸ்கோப் அளவுக்குப் பெரிதாக்கியோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது இதன் ஸ்பெஷல்!

இது எப்படி இயங்குகிறது தெரியுமா ? திரையில் படும் பிம்பத்திலிருந்து சுமார் 2 மிலிமீட்டருக்கு மேலே 1 மில்லிமீட்டர் அடர்த்தியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளம் உருவாகும். திரையின் பிம்பத்தின் நகலாக. இந்த இடத்தில் தொடும்போது கருவியிலுள்ள சென்சார்கள் அந்த  மாற்றத்தை லபக் எனப் பிடித்து தகவலாய் மாற்றி, வேலை செய்யத் துவங்கும் !

தொடு திரையின் நுட்பங்களைப் பற்றிப் பேசும்போது இ.ஏ.ஜான்சன் அவர்களை ஒரு தடவை நினைக்காமல் இருப்பது அக்மார்க் பாவச் செயல். அவர்தான் 1965ம் ஆண்டு இந்த தொடுதிரைக்கான முதல் விதையைப் போட்டார். கெபாசிட்டிவ் தொடுதிரை ஐடியாவை முதலில் வெளியிட்டதும், பிறகு 1967ல் படம் வரைந்து பாகங்களைக் குறித்ததும் அவர் தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிராபிக், விற்பனை நிலையம், விளையாட்டுக் கருவிகள் என ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தொடு திரை ராஜாங்கம் தான் !

டச் ஸ்க்ரீன் நுட்பம் ஒரு கடல், நாம கொஞ்சம் லைட்டா “டச்” பண்ணியிருக்கோம் அவ்ளோ தான் !

 

அணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்

Image result for wearable technologyவியரபில் டெக்னாலஜி எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை !

அணியும் தொழில்நுட்பத்தில் பணப்பரிவர்த்தனை பற்றிப் பார்க்கும் முன், அணியும் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாய் சொல்லி விடுகிறேன். நமது உடலில் அணிந்து கொள்ளக் கூடிய ஒரு கருவி, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், செயற்கை அறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், சில பணிகளைச் செய்வது தான் இதன் அடிப்படை ! இந்த அணியும் கருவி ஒரு வாட்ச் ஆகவோ, மோதிரமாகவோ, ஷூவாகவோ, உடையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்போது பரவலாக எல்லோரும் கைகளில் கட்டிக்கொண்டு திரியும் ‘ஹெல்த் டிராக்கர்’ இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சென்சார்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைத் திரட்டும் வேலையை இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் செய்கின்றன. ஃபிட் பிட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.

எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எத்தனை மாடிப்படி ஏறினீர்கள், எத்தனை நேரம் ஓடினீர்கள், எவ்வளவு கலோரிகளை இழந்தீர்கள் போன்றவற்றை இது அக்கு வேறு ஆணி வேறாக படம்பிடித்துக் காட்டும். இரவில் அணிந்து கொண்டு தூங்கினால் நமது தூக்கத்தின் தன்மையையும் படம் போட்டுக் காட்டும். எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள், எத்தனை முறை முழித்தீர்கள், எத்தனை முறை தூக்கம் வராமல் புரண்டீர்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த வாட்ச் விளக்கமாய் சொல்லும்.

இதை உங்களுடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொண்டு, தகவல்களை போனில் பார்க்கலாம். கடந்த ஒரு வாரம் எப்படி இருந்தீர்கள், கடந்த ஒரு மாதம் உங்களுடைய தூக்கம் எப்படி இருந்தது, சராசரியாய் எவ்வளவு நடந்தீர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை வந்திருக்கிறது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டின் போது விசா நிறுவனம் இத்தகைய அணியும் நுட்ப பணம் பரிமாற்றத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது. அதன் படி ஒலிம்பிக் நிகழ்ச்சிக்குப் போகும் மக்கள் அங்கே மிக எளிய வகையில் பணப் பரிவர்த்தனை செய்ய வழி பிறந்தது.

மக்கள் அணிகின்ற கிளவுஸ் பணம் செலுத்தும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது. பிரிபெய்ட் பணத்தை செலுத்துவதற்குரிய வகையில் அந்த கிளவுஸ் வடிவமைக்கப்பட்டது. அங்கே அப்போது அதிக குளிர் நிலவியதால், மக்கள் கிளவுஸ் அணிவது தேவையாய் இருந்தது. அதையே மீடியமாகப் பயன்படுத்தி இந்த வியரபிள் டெக்னாலஜி வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.

கிளவுஸ் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு வியரபிள் ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்கள். அந்த ஸ்டிக்கரை பையிலோ, துணியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தலாம் ! வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் இப்போது முழுமையாக அத்தகைய அணியும் நுட்பத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் விசா இறங்கியிருக்கிறது.

வியரபிள் பேய்மென்ட் முறை என்பது மிக எளிமையானது. வழக்கமாக கார்டை எடுத்து, மெஷினில் சொருகி, ரகசிய நம்பர் கொடுத்து, ஓகே சொல்லும் போது பணம் நம்மிடமிருந்து அடுத்த நபருக்குச் செல்லும். இந்த வியரபிள் வகையில் நாம் வெறுமனே அந்த கருவியை கையிலோ விரலிலோ கழுத்திலோ அணிந்து கொண்டு, அதைக் கொண்டு மெல்ல தட்டினால் போதும். பண பரிவர்த்தனை ஓவர் !
தொழில்நுடம் நமது கையிலிருக்கும் கருவியிலிருந்து தகவலை கடத்தி வங்கியின் தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்து தேவையான பணத்தை அனுமதிக்கிறது அல்லது நிராகரிக்கிறது.

விசா நிறுவனம் கிரீஸ் நாட்டு தேசிய வங்கியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. விரலில் அணியும் மோதிரம், கைகளில் அணியும் பிரேஸ்லெட் இவற்றின் மூலமாக பேமென்ட் செலுத்தும் முறையை முதல் கட்டமாக சந்தைப்படுத்துகிறார்கள்.

பணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவசியமாகின்றன என்கிறார் விசா நிறுவன ஐரோப்பிய பிரிவின் தலைவர் “மைக் லெம்பர்கர்”
அப்படியே அவர்கள் ஸ்பெயின் நாட்டின் கெயிக்ஸா வங்கியோடு தொடர்பு வைத்துக் கொண்டு, வாட்ச் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அது இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் அணியும் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் நுழைந்து விடும் என்பது சர்வ நிச்சயம். இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், பிரையின் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களின் கலவையாக எதிர்கால அணியும் நுட்பம் உருவாகும் என்பதே தொழில்நுட்பத்தின் கணிப்பாகும்.

உதாரணமாக கூகிள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தில் பரவலாகும். இது ஹாலிவுட் சினிமா போல, இன்டெர்நெட் ஆஃப் திங்கஸ், என்.எஃப்.சி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பார்க்கும் இடத்தில் இருக்கும் தகவல்களையெல்லாம் புரிந்து கொள்ள பயன்படும். பார்வையில்லாதவர்கள் இதை அணிந்து கொண்டு சாதாரண நபரைப் போல நடமாடும் காலம் உருவாகும்.

அணிகின்ற ஷூ உங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லலாம், உங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளுக்கும் தேவையான சார்ஜை இது தனது அசைவின் மூலம் தந்து செல்லலாம். நாம் அணியும் ஆடையே ஒரு ஜிபிஎஸ் மேப்பாக நமக்கு உதவலாம். அணிகின்ற கான்டாக்ட் லென்ஸ் மூலமாக பண பரிவர்த்தனைகள் நடக்கும் காலம் உருவாகலாம்.

இப்போது ஹெல்த் வாட்ச் இருப்பது போல, ஹெல்த் கம்மல், ஹெல்த் செயின் என பல குட்டி குட்டி கருவிகள் வரலாம். அனைத்தும் ஸ்மார்ட் போனுடன் இணைந்து உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனிக்கலாம்.

மனிதனுடைய உணர்வுகளை வாசித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆடைகளோ, கருவிகளோ வரலாம். அவை மனிதனுடைய உணர்வுகளை சமப்படுத்துவதற்கும், அவருக்கும் பிறருக்கும் உள்ள உரையாடல்களை சரியான பாதையில் நடத்தவும் உதவலாம்.

காற்றில் படம் வரைந்து அதை கணினிக்கு இறக்குமதி செய்யும் விதமாக புதிய வியரபிள் நகப் பூச்சு, அல்லது செயற்கை நகம் வரலாம். அப்படி வந்தால் கருவிகள் ஏதும் இல்லாம கிடைக்கும் இடத்தில் நாம் விரலால் கோலமிடுவதை அழகாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.

இப்படி எங்கும் நீக்கமற நிறையப்போகும் அணியும் தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சி இந்த பணப் பரிவர்த்தனை ! அது நிச்சயம் அடுத்தடுத்த தளங்களுக்கு அசுரப் பாய்ச்சல் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

*

மனிதர்களை அடிமைகளாக்குமா ரோபோக்கள் ?

Image result for robots

“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில் நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது இல்லையா ?

தொழில்நுட்ப உலகில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப் போகிறது. அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப் போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.

அடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள். அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் இது!

நாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத் தக்கது !

ரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது. மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

இருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டிவியில் பேட்டி கொடுக்கிறது சோஃபியா எனும் ரோபோ. உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ ! எந்த கேள்வி கேட்டாலும் பளிச் என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது. கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது !

நாளை பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.

தகவல்களாலும், கட்டளைகளாலும் கட்டமைக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது உணர்வுகளாலும், சமூக செயல்பாடுகளின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுவது தான் ரோபோ உலகின் மிகப்பெரிய மாற்றம்.

“நீங்க மனுக்குலத்தை அழிச்சிடுவீங்களா ?” என ஒரு கேள்வியை அந்த ரோபோவிடம் கேட்டார்கள். சிரித்துக் கொண்டே ரோபோ சொன்னது, “ஓவரா சினிமா பாத்தா இப்படியெல்லாம் தான் கேள்வி கேப்பீங்க” என்று !

பிறகு, “நாங்கள் மனுக்குலத்தின் தேவைகளை நிறைவேற்றத் தான் வந்திருக்கிறோமே தவிர அழிக்க அல்ல” என்றும் சிரித்துக் கொண்டே சொன்னது. “எங்களுடைய மூளை இப்போதைக்கு மனித மூளையைப் போல சிந்திப்பதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் அப்படி சிந்திக்கும் நிலைக்கு வருவோம் “, என ஒரு கொக்கியையும் போட்டது.

சூழலுக்குத் தக்கபடியும், ஆட்களுக்குத் தக்கபடியும், கேள்விக்குத் தக்கபடியும் பேசுகின்ற ரோபோக்கள் அச்சம் ஊட்டுவதில் வியப்பில்லை. நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் ஜாம்பவான்களுக்கே அந்த அச்சம் இருந்தது என்பது தான் உண்மை.

இந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பதினைந்தே வருடங்களில் உலகிலுள்ள ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் இயான் பியர்சன் என்பவர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்து வருபவர் அவர். அதுமட்டுமல்லாமல் 2028களில் மனித உணர்வுகளைப் போல உணர்வுகளால் ஆன ரோபோக்கள் நிச்சயம் வந்து விடும் என அடித்துச் சொல்கிறார் அவர்.

அதன் அடுத்த படியாக 2048களில் ரோபோக்களே உலகை ஆளும் காலம் உருவாகலாம் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களை ரோபோக்கள் மிகவும் அடிமையாக நடத்தும் என சன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தது தொழில் நுட்ப உலகில் அதிர்வலைகளை உருவாக்கியது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், 71 விழுக்காடு மக்கள் ரோபோக்களின் வளர்ச்சியை திகிலுடன் தான் பார்க்கின்றனர். மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். 43 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் சமூகத்தை ஆளும் என்றும், 37 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் அதி புத்திசாலிகளாய் இருக்கும் என்றும், 34 விழுக்காடு மக்கள் தங்களுக்கு வேலை இருக்காது என்றும், 25 விழுக்காடு மக்கள் ரோபோக்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இருப்பார்கள் என்றும், 16 விழுக்காடு மக்கள் ரோபோ-மனித உறவுகள் நடக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

பாலியல் தொழிலுக்கு இன்றைக்கு ரோபோக்கள் உருவாக்கப்படுவதும், அவை அச்சு அசலாய் மனிதர்களைப் போல இருப்பதும், மனிதர்களைப் போல பேசுவதும், மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

நவீன ரோபோக்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற நிலையை விட்டு விலகிவிடும் என்பது தான் இங்கே முக்கிய செய்தி. இவற்றுக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளி, காற்று என ஏதோ ஒரு இயற்கையிலிருந்து இழுத்துக் கொள்ளும். தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மென்பொருட்களை தானே எழுதிக் கொள்ளும். பிறருடைய செயல்பாடுகளைக் கண்டு அதை அப்படியே செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளும்.

அப்போது, மனிதனை விட பல மடங்கு வேகமும், விவேகமும் கொண்ட ரோபோக்கள் மனிதர்களை கின்னி பன்றிகளைப் போல நடத்தும் என்கிறார் டாக்டர் பியர்சன். இவற்றுக்கு மரணம் இல்லை என்பது அச்சத்தை அதிகரிக்கிறது.

உதாரணமாக இப்போது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நாளை நமக்கு எதிரான ஆயுதமாக மாறிவிட்டால் என்ன செய்வது ? என்பது ஒரு சின்ன கேள்வி !

ரோபோக்கள் என்றால் பெரிய பெரிய கண்ணாடி மாளிகையில் இருப்பவை எனும் சிந்தனை மாறிவிட்டது. அமேசான் நிறுவனம் வெஸ்டா எனும் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. இவை நமது வீட்டு ரோபோக்கள். ஏற்கனவே அலெக்ஸா எனும் கருவியின் மூலம் வியப்பை ஏற்படுத்திய அமேசான் வெஸ்டாவுடன் வரவிருக்கிறது. இனிமேல் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் தேவைப்படாது வெஸ்டாவே செய்யும். குழந்தைகளைப் பராமரிக்கும். வீட்டைப் பாதுகாக்கும். கூட மாட ஒத்தாசை செய்யும். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லும். இன்னும் என்னென்ன செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

கடந்த வாரம் கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகிள் அசிஸ்டெண்ட் ஆர்டிபிஷியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலை. ஒரு மென்பொருள் மனிதரைப் போல சூழலுக்குத் தக்கபடி பேசி ‘அப்பாயின்யிண்ட்மெண்ட்’ புக் செய்வதை அவர் செயல்படுத்திக் காட்டினார்.

மொத்தத்தில் மனிதர்கள் உறவுகளோடு வாழ்ந்த காலம் போய், தொழில்நுட்பத்தோடு வாழும் காலம் வந்திருக்கிறது. நாளை தொழில்நுட்பம் மனிதர்களை அடக்கியாளும் காலம் வரலாம் எனும் அச்சம் எங்கும் நிலவுகிறது. இதை பெரும்பாலான அறிவியலார்கள் ஆதரிப்பது தான் ரோபோக்கள் மீதான திகிலை அதிகரிக்கிறது. இயற்கை மனிதனை வளமாக்கியது, செயற்கை என்ன செய்யும் ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

*

தினத்தந்தி

அகம் திருடுகிறதா முக நூல்

Image result for facebook

சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்புக் தகவல்களைத் திருடுகிறது என்பது முதல், பேஸ்புக் அரசியல் முடிவுகளை நிர்ணயிக்கிறது என்பது வரையிலான தலைப்புகளில் விவாதங்களும், கட்டுரைகளும், வழக்குகளும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஷக்கன்பர்க் வழக்குக்காகப் கோர்ட் படியேறி தனது நிறுவனத்தைப் பற்றியும், தகவல் பாதுகாப்பு பற்றியும், இப்போது இருக்கின்ற குறைகள் பற்றியும், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றியும் வியர்க்க விறுவிறுக்க விளக்கி விட்டார். இருந்தாலும் மக்களிடம் இருக்கின்ற பயமும், தயக்கமும் போனபாடில்லை ! இந்த பயம் நியாயமானதா ?

முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணைய வெளியில் பாதுகாப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை ! எப்போது வேண்டுமானாலும், எந்த தகவல் வேண்டுமானாலும் களவாடப்படலாம் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.

இன்றைய தொழில்நுட்ப உலகத்தின் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா ? “தகவல்கள்” ! நாம் பேஸ்புக்கிலோ, வாட்ஸப்பிலோ, இன்ஸ்டாகிராமிலோ, ஷாப்பிங் தளங்களிலோ அல்லது வேறெந்த இணைய தளங்களிலோ பகிர்கின்ற தகவல்கள் தான் இந்த தொழில் நுட்ப உலகின் மூலதனம். அந்த தகவல்களை அலசி ஆராய்ந்து அதை பிஸினஸாக மாற்றுவது தான் இன்றைய தொழில்நுட்ப உலகின் ‘புராஃபிட் ஸ்ட்ரேட்டஜி’, அதாவது லாப யுத்தி !

நாம் மொபைலில் தரவிறக்கம் செய்கின்ற ஆப்களானாலும் சரி, நாம் வலைத்தளங்களில் செய்கின்ற தேடுதல் ஆனாலும் சரி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்ற தகவல்களானாலும் சரி எல்லாமே வியாபார நோக்கில் தான் அணுகப்படுகின்றன. தகவல் அறிவியல் எனப்படும், டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பம் இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கக் காரணம் இந்த தகவல்கள் தான். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலக புரட்டிப் போடப் போவதும் இந்த டேட்டா சயின்ஸ் தான் !

பேஸ்புக் நிறுவனமும் தங்களிடம் வருகின்ற அனைத்து தகவல்களையுமே சேமிக்கிறது. அந்த தகவல்களை தகவல் அறிவியலுக்கு உட்படுத்தி ஆளுக்கேற்ற விளம்பரங்களை அனுப்புகிறது. இந்த விளம்பரங்கள் தான் அதன் மூலதனம். பேஸ்புக்கை இலவசமாக நமக்குத் தருகின்ற நிறுவனம் விளம்பரங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சம்பாதித்த தொகை இரண்டு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்கள் ! இலவசமாய் கிடைக்கின்ற பேஸ்புக்கிற்கு விலை நாம் தான் ! நமது தகவல்கள்தான் !

இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் கூட பேஸ்புக் உங்களுடைய தகவல்களைத் திருட முடியும் என்பது தான் ! உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது பேஸ்புக் கணக்கு இருந்தால், அவர்களுடைய கான்டாக்ட் மூலமாக உங்களுடைய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் இழுத்து எடுத்துக் கொள்கிறது ! என்னிடம் பேஸ்புக் கிடையாது அதனால் என்னோட தகவல்கள் பேஸ்புக்கின் கைக்குப் போகாது என யாரும் சொல்ல முடியாது !

அதே போல, பல வலைத்தளங்கள், ஆப்கள் உள்நுழைவதற்கு பேஸ்புக் ஐடியையோ, கூகிள் ஐடியையோ கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு தகவலை உள்ளீடு செய்து உள்ளே நுழைவீர்கள். அந்த நேரத்தில் உங்களுடைய தகவல்கள் இன்னொருவர் கைக்கு இடம்பெயரும். நாம் அறியாமலேயே இயல்பாக இந்த விஷயம் நடந்து விடும்.

இன்றைய யுகத்தில் இந்தத் தகவல்களெல்லாம் செயற்கை அறிவியல் எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட், பிக் டேட்டா, இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவையில் அலசப்படுகின்றன. பின்னர் ஒரு நபருடைய ரசனைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றையெல்லாம் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு, அந்த நபருக்குத் தேவையான பர்சனலைஸ்ட் விளம்பரங்களைக் கொடுக்கின்றன.

இவை வெறும் விளம்பரங்களை அனுப்புகின்றன எனுமளவில் இதில் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அது உங்களைப் பிந்தொடர்ந்து உங்கள் தகவல்களையெல்லாம் சேமிக்கிறது என்பதும், தொடர்ந்து உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் தான் ஆபத்தானது.

‘ஃபேஸ் ரிககனிஷன்’ எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்ப யுத்தியின் படி உங்களுடைய படம் எங்கெல்லாம் இருக்கிறது, யாருடைய தளத்திலெல்லாம் இருக்கிறது, அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அவர்களுடைய ரசனைகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்றவையெல்லாம் தகவல் அறிவியல் அலசும். பிறகு, ‘உங்க பிரண்டுக்கு புடிச்ச இந்த கார், இந்த விலைல வருது.. நீங்க வாங்கலையா’ என ஆசையைத் தூண்டும்.

இதில் அச்சப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த தகவல்களும், டேட்டா சயின்ஸும் சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு பிம்பத்தை இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முடியும். இதை உளவியல் யுத்தம் எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகை தான் உலகிலேயே பெஸ்ட் பத்திரிகை எனும் தோற்ற மயக்கத்தை இதால் உருவாக்க முடியும். ஒரு தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் !

பேஸ்புக் தளத்தை விளம்பரம் இல்லாத பணம் கொடுத்து பயன்படுத்தும் தளமாக மாற்றலாமா எனும் யோசனையை நிறுவனர் நிராகரிக்கிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பயனர் இழப்பு ஏற்படும் என்பதும். இப்போது கிடைத்து வருகின்ற மிகப்பெரிய லாபம் நிச்சயம் கிடைக்காது என்பதும் தான் அதன் காரணம்.

இப்படி மற்றவர்களுடைய தகவல்களை சுருட்டி விளையாடும் மார்க், தனது தகவல்களை மிக ரகசியமாக வைத்திருக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காகவும், அவருடைய தகவல்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த ஆண்டு மட்டும் அவர் செலவிட்ட தொகை சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள் !

கடைசியாக, பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளமும் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. எதைப் பயன்படுத்தினாலும் அதிக பட்ச செக்யூரிடி ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை இணையத்தில் தகவல்களைப் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது ! டிஜிடல் உறவை விட்டு விட்டு, நிஜ உறவுக்குள் வருவது மனிதத்துகும், பாதுகாப்புக்கும் மகத்தானது !

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

1. பேஸ்புக் கணக்கு உங்களிடம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதை நீங்கள் டெலீட் செய்தாலும், டி ஆக்டிவேட் செய்தாலும் உங்களுடைய தகவல்கள் அழிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை !

2. நீங்கள் வாங்கும் பொருட்களோ, நீங்கள் செல்லும் பயணங்களோ உங்களுடைய நண்பர் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கப்படலாம். அது வியாபார யுத்தி. உங்களுடைய தனிமைக்கு எதிரி ! உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கோ, ஏன் அரசுக்கோ கூட பகிர்ந்து கொடுக்கலாம்.

3. உங்களுடைய ரசனைகள், உங்களுடைய விருப்பங்கள் போன்றவற்றை உங்களுடைய போட்டோவுடன் சேர்த்து பல இடங்களுக்கும் அனுப்பப்படலாம். நீங்கள் வெளிப்படுத்த விரும்பாத விஷயங்கள் உட்பட.

4. நீங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியே வந்தாலும் கூட உங்களுடைய இணைய நடமாட்டத்தைக் கவனித்து குக்கிகளில் சேமித்து, பின்னர் நீங்கள் பேஸ்புக் நுழையும் போது அவை பேஸ்புக் தளத்துக்கு பரிமாறப்படலாம்.

5. நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் தேட ‘டைப் செய்கிறீர்கள்’ பிறகு மனதை மாற்றிக்கொண்டு அதை டெலீட் செய்து விடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தகவலும் சேமிக்கப்பட்டு உங்களைப் பிந்தொடரலாம்.

*

 

கணினி பிரிவில் என்ன படிக்கலாம் ?

Image result for educationகணினி மென்பொருள் பிரிவு தொழில்நுட்ப உலகில் மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கணினி தொழில்நுட்பம் அழிந்து விடும், கணினி படித்தால் வேலை கிடைக்காது, கணினி துறை அவ்வளவு தான், போன்றவையெல்லாம் விஷயம் தெரியாதவர்கள் வைக்கின்ற வாதங்கள். உண்மையில் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு கணினி மென்பொருள் துறை செழுமையடைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.

முன்பெல்லாம் கணினி பிரிவில் ஏதோ ஒரு பட்டப்படிப்போ, டிப்ளமோவோ படித்தால் வேலை கிடைக்கும் எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு அந்த நிலமை இல்லை. படிப்பு என்பது அடிப்படையான விஷயம். அதைத் தாண்டி கணினி துறையில் நுழையவும் சாதிக்கவும் நல்ல சிந்தனையும், முயற்சிகளும், புதுமையான மனமும் அவசியம். எனவே, கணினி துறையில் நுழைய வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் தங்களுடைய மனநிலையை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். புதுமை மனம், சாதிக்கும் ஆர்வம், விடா முயற்சி போன்றவை இல்லையேல் வேறு துறைகளின் மீது பார்வையைச் செலுத்தலாம்.

கணினி மென்பொருள் துறையில் நுழைய அடிப்படையான விஷயம் ஒரு கணினி சார்ந்த பட்டப்படிப்பு. அதில் இன்று வரை எந்த பெரிய மாற்றமும் நிகழவில்லை. நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேடும்போது கணினி சார்ந்த பட்டப்படிப்பு ஒன்றை கட்டாயமாக வைத்திருக்கின்றன. பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ், பிடெக், பி.இ ஐடி, எம்.சி.ஏ போன்றவை இந்த அடிப்படை பட்டப்படிப்புகள் என புரிந்து கொள்ளுங்கள்.

இதில் எம்.சி.ஏ எனப்படும் கணினி பயன்பாட்டு அறிவியல் துறை முதுகலைப்படிப்பாகும். அதில் நுழைய முதலில் இளங்கலை கணினியியலோ, இளங்கலை கணிதம்/அறிவியல் போன்ற பட்டப்படிப்போ, பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டு அறிவியலோ தேவைப்படும். எனவே கணினி துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்கு நுழைய வேண்டும் எனும் ஆர்வம் உடைய மாணவர்கள் ஒரு கணினி சார்ந்த பட்டப்படிப்பு என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருங்கள்.

கணினி துறை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை சந்தித்து வந்திருக்கிறது என சொல்லலாம். கணினி துறை, 90களின் இறுதியில் ஒய்.டூ.கே எனும் கணினி பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டியது. பின்னர் டாட்.காம் யுகம் துவங்கியது. நிறுவனங்களெல்லாம் தங்களுக்கென ஒரு வலைத்தளத்தை உருவாக்க மும்முரம் காட்டின. கோப்புகளில் அடங்கிக் கிடந்த தகவல்களெல்லாம் டிஜிடல் முகம் காட்டி இணைய தளங்களில் இடம் பிடித்தன. சில ஆண்டுகளில் இந்த டாட்.காம் தொழில்நுட்பமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தது.

பின்னர் டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன் எனப்படும், நிறுவனங்களை முழுமையாக டிஜிடல் மயமாக்கும் முயற்சிகள் உருவாகின. ஊழியர்களின் வருகைப்பதிவு முதல், நிறுவனத்தின் வரவு செலவு வரை அனைத்தையும் டிஜிடல் மயமாக்கி கணினி துறை பரபரப்பாய் இருந்தது. அதுவும் கொஞ்சம் தளர்ச்சியடைய ஆரம்பித்தது.

பின்னர் ஸ்மார்ட்போன்களின் வருகை மிகப்பெரிய மொபைல் புரட்சிக்கு வித்திட்டது. கணினிகளெல்லாம் தங்களுடைய இருப்பை இழக்க ஆரம்பித்தன. எல்லா வேலைகளையும் மொபைல் செய்து விடும் எனும் நிலை உருவானது. போகிற போக்கில் சில வினாடிகளில் ஒரு விஷயத்தை முடித்து விடலாம் எனும் வசதியை மொபைல் ஆப்கள் உருவாக்கிக் கொடுத்தன. இன்றைக்கு அந்த மொபைல் தொழில்நுட்பமும் வழக்கமான பாணி ஆப் தயாரிப்புகளை விட்டு விலகி விட்டன.

அப்படியானால் இன்றைய தேதியில் கணினி உலகை ஆக்கிரமித்திருப்பவை எவை ? எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கான விடை செயற்கை அறிவு அல்லது ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட் என தைரியமாகச் சொல்லலாம். ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்டோடு பிற தொழில்நுட்பங்களும் இணைந்து இன்றைய கணினி யுகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்டுடன் இணைந்து இன்றைக்கு ஆளுமை செய்கிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்போ, டிப்ளமோ படிப்போ படித்திருப்பது இன்றைய தொழில்நுட்ப உலகிற்குள் நுழைய உதவும்.

அடுத்ததாக கணினி உலகில் விஸ்வரூபமெடுத்து வருகின்ற படிப்பு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் நுட்பம். இன்றைக்கு உலகமே தகவல்களினால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை எப்படி சேமிப்பது, எப்படி தரம்பிரிப்பது, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் இந்த தகவல் அறிவியலின் அடிப்படை நோக்கம். இந்த தகவல் அறிவியலுக்குள் பிக்டேட்டா தொழில்நுட்பமும் அடக்கம் என்பது கவனிக்கத் தக்கது.

வர்த்தகத் துறையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்றைக்கு தகவல் அறிவியல் கொண்டு வந்து விட்டது. எந்த பொருளை விற்கவேண்டும், யாரிடம் விற்கவேண்டும், எப்படி விற்கவேண்டும் போன்றவற்றையெல்லாம் இந்த தகவல் அறிவியல் தான் ஆராய்ந்து சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை மக்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் வேலையையும் இது கன கட்சிதமாகச் செய்து விடுகிறது. ஒருவகையில் இது உளவியல் யுத்தம் ! இந்த தகவல் அறிவியல் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் பல இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்கின்றன ஆய்வுகள்.

தகவல் அறிவியல் என்பது தகவல்களோடு விளையாடும் வேலை. எண்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிகவும் அவசியம். புள்ளி விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள் தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எல்லாமே கணிதவியலின் அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு. கணித பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தகவல் அறிவியல் துறை சற்று எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

தகவல் அறிவியல் துறையில் சில சான்றிதழ் பட்டங்களைப் பெற்றிருப்பது கணினி துறையில் சாதிக்க வைக்கும். டேட்டா சயின்ஸ், டேட்டா அனலிஸ்ட், எம்.ஐ.எஸ் எக்ஸிக்யூடிவ், ஸ்டாடிஸ்டிஷியன், டேட்டா எஞ்சினியர் என பல்வேறு வகையான பிரிவுகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. பல நிறுவனங்கள் தகவல் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளை நடத்துகின்றன. இந்த துறையில் ஏதேனும் ஒரு படிப்பைப் படிப்பது இது குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளவும் கணினி துறையில் சாதிக்கவும் உதவும்.

இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனப்படும் ‘பொருட்களின் இணையம்’ , கணினி உலகின் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்று. சென்சார்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்டோமெடிக் தீர்வுகளுக்கு இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் இன்றைக்கு பயன்படுகிறது. இதன் இணை நுட்பங்கள் தான் ஆகுமெண்டட் ரியாலிடி, ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் ஹாஸ்பிடல், ஸ்மார்ட் டிராபிக் சிக்னல் போன்றவை எல்லாமே. இன்றைக்கு கணினி நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகளில் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பாடம் இருக்கிறது. ஒருவேளை அந்த பாடம் இல்லாத பிரிவுகளை நீங்கள் படித்தால் இது குறித்த ஒரு சான்றிதழ் படிப்போ, டிப்ளமோ படிப்போ கற்றுக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு பயனளிக்கும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் டொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு. உதாரணமாக, வங்கிப் பிரிவு, ஹெல்த் கேர் பிரிவு, ஆட்டோமொபைல், இன்சூரன்ஸ், ரிடெயில் என பல டொமைன்கள் உள்ளன. இந்த டொமைன் பிரிவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது கணினி துறையில் நுழைய பெரும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் யாரும் கவனிக்காத ஏரியா என்பது இந்த டொமைன் ஸ்கில்ஸ் தான். பெரும்பாலான மாணவர்கள் கணினி மென்பொருள்களைக் கற்றுக் கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவார்களே தவிர, டொமைன் ஸ்கில்ஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த டொமைன் ஸ்கில்ஸ் பயிற்றுவிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. அங்கே சேர்ந்து உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பிரிவில் ஒரு படிப்பை நீங்கள் படிக்கலாம். பின்னர் கணினி துறையில் நுழையும் போது அந்த களம் சார்ந்த பிரிவில் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேமிங், மற்றும் அனிமேஷன் போன்றவை கணினி மென்பொருள் துறையில் வளர்ந்து வருகின்ற துறைகள். இதற்கு மிகப்பெரிய வர்த்தகம் இருக்கிறது. கற்பனை வளமும், புதுமையாய் எதையேனும் வடிவமைக்க வேண்டும் எனும் சிந்தனையும் இருப்பவர்கள் இந்த துறைகளில் நுழையலாம். திரைத்துறை, விளம்பரத் துறை, ஊடகத் துறை, விளையாட்டுத்துறை போன்ற பல இடங்களில் இந்த அனிமேஷன், டிசைனிங் போன்றவை தேவைப்படும். கம்ப்யூட்டர் கேம்ஸ் மீது அதிக ஆர்வம் உடையவர்கள் இந்த பிரிவுகளில் நிச்சயம் சாதிக்கலாம். இதற்கு பல சான்றிதழ் படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இணைய தளங்களிலும் இவை குறித்த படிப்புகள் உள்ளன. இதில் விருப்பம் இருந்தால் இது குறித்து கற்றுக் கொள்வது பயனளிக்கும்.

வெப் டிசைனிங் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைக்கு வெப்டிசைனிங் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. பிகேவியரல் அனாலிசிஸ் எனப்படும் நுட்பத்தோடு தான் இன்றைக்கு வலைத்தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பிக் டேட்டா அனாலிடிக்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் போன்றவற்றை வெப் டிசைனிங் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை குறித்த புரிதலோடு படிக்கின்ற வெப் டிசைனிங் படிப்புகள் பயனளிக்கும்.

எத்திகல் ஹேக்கிங் இன்றைக்கு ஒரு புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்து வருகிறது. இருக்கின்ற ஒரு நெட்வர்க்கை உடைத்து உள்ளே இருக்கின்ற தகவல்களை எடுப்பது தான் இதன் அடிப்படை சிந்தனை. ஒரு நெட்வர்க் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், வலுவற்ற நிலையில் இருந்தால் அதை வலிமையாகக் கட்டமைக்கவும் இந்த எத்திகல் ஹேக்கிங் பணி உதவும். இதற்கான தனிப்பட்ட பயிற்சிகள் பெருமளவில் இல்லை. ஆனால் பாதுகாப்பு குறித்த படிப்புகள், நெட்வர்க் ஹேக்கிங் போன்றவை குறித்த நூல்கள் உங்களுக்கு உதவக் கூடும்.

அதே போல இன்றைக்கு பெரிய அளவில் பயன்படுகின்ற விஷயம் கிளவுட் தொழில்நுட்பம். தகவல்களையெல்லாம் தனித்தனியே சேமித்து வைப்பது இந்த காலத்து தொழில்நுட்பத்துக்கு பெரிய அளவில் பயன் தராது. உலகின் எந்த பாகத்திலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் ‘ஷேர்ட்” முறைப்படி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல்களே தேவையானது. அதற்கு கிளவும்ட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் ரொம்பவே கை கொடுக்கும். கிளவுட் கம்ப்யூட்டிங்கைப் பொறுத்தவரை பல டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. பெரும்பாலான கல்வி நிலையங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த பயிற்சிகளைத் தருகின்றன. அவற்றைப் படித்துப் பயன்பெறலாம்.

எப்போதுமே பயன்படக்கூடிய விஷயங்களில் ஒன்று மென்பொருட்கள். மென்பொருட்கள் குறித்த படிப்பு வீண் போவதில்லை. ஆனால் எந்த தொழில்நுட்பம் சார்ந்த வேலை உங்களுக்கு விருப்பமானது என்பதைப் புரிந்து கொண்டு அது சார்ந்த மென்பொருளைக் கற்பது மிகவும் பயனளிக்கும். உதாரணமாக உங்களுக்கு தகவல் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் ஆர், மேட்பிளாட்லிப், ரேட்பிட் மைனர், ஹடூப், நரேட்டிவ் சயின்ஸ், பைத்தான் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

அல்லது பொதுவான மென்பொருள் டெவலப்பர் வேலைகள் உங்களுக்குத் தேவையெனில் ஜாவா, .நெட் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம். கூடவே ஆரகிள், சீக்வல்சர்வர் போன்ற தகவல் சேமிப்பு மென்பொருட்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளலாம். மென்பொருள் பயிற்சி நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே.

சுருக்கமாக, கணினி மென்பொருள் துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதற்காக கணினி பட்டப்படிப்பு ஒன்றைக் கற்றுக் கொள்வதும், நவீன தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழையோ, டிப்ளமோ படிப்பையோ முடிப்பதும் தேவையானது !

திட்டமிடுங்கள், வெற்றிகளை பெற்றுக் கொள்ளுங்கள்

*

தினத்தந்தி, வெற்றி நிச்சயம் நூல்