வித்யாவின் விழிகள் முழுதும்
மகிழ்வின் மின்மினிகள்
மின்னின.
கண்ணன்
ஆச்சரியப் பட்டான்.
இது தான் நட்பா ?
ஆறாண்டு கடந்தபின்னும்
வினாடி நேரத்தில்
எப்படி என்பெயரை
நினைவுப் பரலிருந்து
தூசு தட்டி எடுக்க முடிகிறது ?
எப்படி இருக்கே வித்யா ?
கண்ணனின்
கண்ணுக்குள் இருந்து
கால்முளைத்த கனவுகள்
இமை மயிர்களைப் பிடித்திறங்கின.
நான் நல்லா இருக்கேன்
நீங்க ?
வித்யாவின் விழிகளும்
கேள்விகளை
மனசுக்குள்ளிருந்து
வரவழைத்துக் கொடுத்தன.
நீண்ட நாட்களுக்குப் பின்
அருவியில்
சந்தித்துக் கொண்ட
நதிகள் போல
அகம் ஆரவாரமாய் இருந்தது
இருவருக்கும்.
வருடங்களுக்குக் கொஞ்சம்
வயதாகி விட்டது
வித்யா,
கல்லூரி வாழ்க்கையில்
பருந்துகளாய் பறந்தவர்கள்
பின்
எருதுகள் போல
உருமாற வேண்டி இருக்கிறது.
காலத்தின் கட்டாயம்
வயிற்றின் கட்டளை
வாழ்க்கையின் அழைப்பு !
எப்படி வேண்டுமானாலும்
பெயரிட்டழைக்கலாம்.
எனக்கு அயல் தேச வாழ்க்கை
சிலருக்கு
தாய் மண்ணின் மீது
பாதம் பதித்து நடக்கும் பணி.
நீ.
எப்படி இங்கே ?
எப்போ திருமணம் ஆச்சு ?
வித்யா சிரித்தாள்.
கல்லூரிக்கு வெளியே
கால் வைத்ததும்
கால்க்கட்டும் வந்தது.
காதல் கல்யாணம் அல்லவா ?
அதனால்
மோதித் தான் எங்களால்
தீபம் கொளுத்த முடிந்தது.
உங்கள் காதல்
வெற்றியில் முடிந்ததில்
எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி !
பொய் சொல்லி சிரித்தான்
கண்ணன்.
திருமண வாழ்க்கை எப்படி
போகிறது வித்யா ?
வாழ்க்கைக்கு என்ன ?
பழக்கப் பட்ட பாய்மரக் கப்பல்
அது.
காற்று வீசும் திசையில்
காதல் துணிகளை
கட்டி வைக்கிறேன்.
பயணம் போகிறது.
புன்னகைத்தாள் வித்யா .
சரி,
உமா எப்படி இருக்கிறாள் ?
உங்கள் மனைவி?
எதிர்பாராத கேள்வியில்
ஒருவினாடி
உறைந்தான் கண்ணன்.