கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

 3

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான்.

“இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்”

சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை.  அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்து அடிக்கடி சாத்துவார். இப்போ இந்த மந்திரத் தண்ணீர் கிடைச்சிருக்கு. இது தண்ணீர் எல்லா சிக்கலுக்கும் விடிவு என சிறுவன் நினைத்தான்.

அன்று மாலை மந்திரக் குடுவையைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஒரு செடியின் தலையில் விட்டான்.

ஜீ..பூம்…பா போல செடி கடகடவென வளரும் என நினைத்தான்… ஊஹூம் வளரவில்லை.

அடுத்த செடியில் விட்டான்…

ஊஹூம்…

அதற்கு அடுத்த செடி ?

ஒரு மாற்றமும் இல்லை.

அப்படியே கடைசிச் செடி வரை முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ரொம்ப சோகமாகிவிட்டது. மிச்சமிருந்த பாட்டில் தண்ணீரையெல்லாம் கடைசிச் செடியின் தலையில் கவிழ்த்தான். கொஞ்ச நேரம் செடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ரொம்ப சோகமும் சோர்வும் பிடித்துக் கொள்ளப் போய்ப் படுத்து தூங்கிவிட்டான்.

மறு நாள் காலை.

டேய்.. சீக்கிரம் எழும்புடா…. அப்பா உலுக்கினார்.

என்னப்பா ?

உன் தோட்டத்தைப் போய் பாரு ? என்ன பண்ணினே ?

என்னாச்சுப்பா ?

எழும்புடா போய்ப் பாரு.

சிறுவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே தோட்டத்தைப் போய்ப் பார்க்க செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்து அழகழகாய்ப் பூக்கள் பூத்திருந்தன. புது வகையான பூக்கள் !

சிறுவனுக்கு குஷி தாங்கவில்லை. ஓடிப் போய்க் கடைசிச் செடியைப் பார்த்தான். அந்தச் செடிக்குத் தான் மிச்சமிருந்த தண்ணீரையெல்லாம் ஊற்றியிருந்தான்.

அந்தச் செடி வானளாவ வளர்ந்து மேகத்துக்குள் புகுந்திருந்தது…

ஓ…வாவ்… எவ்ளோ பெருசு ? சிறுவன் ஓடிப் போய் அந்த மரத்தில் தொங்கினான். அந்தக் கிளையில் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. தகதகவென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பொன் நிறத்திலான குட்டி டிராகன் !

சரி… ஸ்கூல் வந்துச்சு… இனிமே மிச்ச கதை நாளைக்கு. வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிவிட்டு சீட் பெல்டைக் கழற்றிக் கொண்டே இடப்பக்கம் திரும்பி மகனைப் பார்த்தேன். மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, கொஞ்சம் சாம்பல் கலரில் ஒரு டவுசர். கழுத்தில் தொங்கும் டேகில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பெயர். அருகில் குட்டிப் புகைப்படத்தில் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். கீழே யூகேஜி பி. என்று பளிச் என எழுதப்பட்டிருந்தது.

டாடி… பிளீஸ்… கார்ல இருந்தே கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்….  

நோ… டா செல்லம்.. இட்ஸ் லேட். நைன் ஓ க்ளாக். மிச்சம் நாளைக்கு.

ஒரு கையில் பையையும், மறுகையில் பையனையும் அள்ளிக் கொண்டு ஸ்கூல் காம்பவுண்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி கம்பீரமாய் நின்றிருந்தது. பள்ளியின் தலையில் டிரீம், டேர், டூ என வாசகங்கள். வாசலில் குட்டிக் குட்டி மழலைப் பூக்கள் ஓடியாடிக் கொண்டிருந்தன. குட் மார்ணிங் மிஸ் எனும் குரல்களுக்கிடையே ஆசிரியர்களும் ஆங்காங்கே தெரிந்தார்கள்.

எனக்கு இது தினசரிப் பழக்கம் தான். காலையில் 6.20 க்கு அலாரம் அடிக்கும். அடிக்கும் அலாரத்தை சபிப்பதில்லை. காரணம் இப்போதேனும் எழும்பாவிட்டால் எல்லாம் குளறுபடியாகிவிடுமென்பது ரொம்ப நல்லா தெரியும். ஒருபக்கம் மகள், மறுபக்கம் மகன் என ஆளுக்கொரு திசையில் அற்புதமான தூக்கத்தில் லயித்திருப்பார்கள். அழகான தூக்கத்தில் இருக்கும் ஒரு மழலையை எழுப்புவது போல ஒரு மோசமான வேலை இருக்க முடியாது. என்ன செய்ய ? இப்போ எழும்பினால் தான் மகளை 8 மணிக்கு ஸ்கூலில் கொண்டு விட முடியும். பிறகு திரும்ப வந்து பையனை 9 மணிக்கு ஸ்கூலில் கொண்டு போய் விட வேண்டும்.

வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் தான். சென்னை ஸ்பெஷல் ஏரியா ! சந்துகளைச் சந்தித்து, டிராபிக்கை அனுசரிக்க வேண்டியிருப்பதால் பத்து நிமிட கார்ப் பயணம்.

காரில் ஏறியவுடன் சீட்பெல்ட் போட்டு, ஒரு குட்டிப் பிரேயர் முடித்த கையோடு “டாடி ஸ்டோரி” என்பார்கள் இருவரும்.

ஆளுக்குத் தக்கபடி கதைகளைச் சொல்ல வேண்டும்.

மகளுக்கு பிடித்தவை தேவதைக் கதைகள். ஃபேரி டெய்ல்ஸ் அவளுடைய ஃபேவரிட். அழகழகான பூந்தோட்டங்கள், அதில் உலவும் ஃபேரி கள், அந்த ஃபேரிகளுக்கு வில்லனாய் வரும் தூரதேசத்து மோசமான சூனியக்காரி, பிறகு எப்படி அந்த ஃபேரிகள் கடைசியில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று முடியும். ஒரு ஃபேரி கதை முடிந்தபின் அடுத்த கதைக்கு டால்பின், கடல்க் கன்னி, தூரதேசத்து ராஜகுமாரி, அரச கோட்டையில் கிடந்த நீலக் கல் என ஏதோ ஒரு கதை அன்றைய காலைப் பொழுதில் உதயமாகி தானாகவே வளரும்.

பையனுக்குப் பிடித்தமானவை ஆக்‌ஷன் கதைகள். மந்திரவாதி, டிராகன், டைனோசர், சிங்கம், புலி என பரபரப்பாய் இருக்கும் கதைகள் தான் பிரியம். அப்படி இல்லாவிட்டால் கார் ரேஸ், கடல் பயணம் என அதிரடியாய் இருக்க வேண்டும். பசங்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ரசனை சின்னவயதிலேயே நிர்ணயமாகிவிடுகிறது பாருங்கள். எல்லாம் கடவுள் படைப்பின் விசித்திரம் என்றால் நாத்திகவாதிகள் அடிக்க வருவார்கள். சரி அது கிடக்கட்டும். அப்படி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி கதைகள் எப்படியோ எனது மூளையின் வலது பக்கத்தில் உதயமாகிக் கொண்டே இருக்கும்.

எந்தக் கதையையும் முன்கூட்டியே யோசிப்பதில்லை. எந்தக் கதை எப்படி துவங்கி எங்கே போய் முடியும் என்று சத்தியமாய்த் தெரியாது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. கதை எப்படி இருந்தாலும் அதைச் சொல்லும் போது ஒரு நாடகம் போல ஏற்ற இறக்கம் முக்கியம். கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் இருக்கலாம் தப்பில்லை. பிள்ளைகள் எந்த இடத்தை ரசிக்கிறார்களோ அந்த இடத்தை டெவலப் செய்து கொண்டே போக வேண்டும். எந்த இடம் அவர்களுக்குச் சுவாரஸ்யம் இல்லையோ, அந்த இடத்தைக் கட்பண்ணி கடாசவேண்டும். அந்த நுணுக்கம் தெரிந்தால் எல்லோருமே கதை சொல்லிகள் தான். என் கதைகள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். தினமும் கதை சொல்வேன். எந்த இடத்தில் நேற்று முடித்தேன் என்பதையே மறுநாள் மறந்து விடுவதும் உண்டு. ஆனால் பிள்ளைகள் மறப்பதேயில்லை.

“டாடி, அந்த டிராகனோட முதுகுல இருந்து கடல்ல குதிப்பான்ல, அதுவரைக்கும் சொன்னீங்க. அவன் குதிக்கிற இடத்துல நிறைய முதலைங்க நீந்திட்டு இருந்துச்சு…” என்று அட்சர சுத்தமாய் நினைவில் வைத்து சொல்வார்கள்.

“ஓ.. குதிச்சானா, அங்கே முதலை வேற இருந்துச்சா… ” சட்டென மூளையைக் கசக்குவேன். எனக்கு உதவ ஒரு திமிங்கலமோ, கடல்கன்னியோ, அல்லது விழும் முன் தூக்கிக் கொண்டு பறக்க ஒரு ராட்சத வெள்ளை கழுகோ வரும். அது அந்த நாளைப் பொறுத்தது !

பையனை ஸ்கூலில் அனுப்பியாகிவிட்டது. இனிமேல் அலுவலகத்தை நோக்கி 30 நிமிட டிரைவ்.

கண்ணாடிகளை ஒட்டி வைத்து சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப முயலும் ஐடி நிறுவனம் ஒன்றில் தான் வேலை. பிஸினஸ் எனேபிள்மென்ட் என ஸ்டைலாக அழைக்கும் துறையில் மேனேஜர். பேரைக் கேட்டு பயந்துடாதீங்க, கலர் கலரா பிரசன்டேஷன் பண்ணி, அதை திரையில் காட்டி கஸ்டமர்களை வசீகரிப்பது தான் வேலை. கொஞ்சம் டீசன்டா சொல்லணும்ன்னா அடுத்த கம்பெனிக்கு பிஸினஸ் போகாம நம்ம பக்கத்துக்கு இழுக்கிறது. ஓடைல ஓடற தண்ணியை இடையில வாய்க்கால் வெட்டி நம்ம வயலுக்குத் திருப்பற மாதிரி. விவசாயம் பத்தி தெரியாதவங்க,  டக் ஆஃப் வார் ன்னு வேணும்ன்னா வெச்சுக்கோங்க. 

கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு புராஜக்ட்க்காக மாடாய் உழைக்கிறோம். புராஜக்ட் புரபோஸல் கடைசி ஸ்டேஜ் ! கடைசி நிலைன்னு சொல்றது கஸ்டமரிடம் நமது பிரசன்டேஷனைக் கொடுத்து அவனுக்கு விளக்கிச் சொல்வது. அலுவலகத்தில் ஒவ்வொருத்தரிடமும் தகவல் கறந்து, சொல்யூஷனிங், டைமிங், காஸ்ட் அது இது என புரண்டு புரண்டு ஓடியதில் முதுகுக்கே முதுகு வலி. இன்னிக்கு நைட் கிளையன்ட் பிரசன்டேஷன். ஒரு நட்சத்திர ஹோட்டலில் கான்ஃபரன்ஸ் ஹால் புக் பண்ணியிருந்தார்கள்.

வைன் கோப்பைகளும், கோட் சூட்டுகளும் இருக்கும் அறையில் பிரசன்டேஷன் செய்வதே ஒரு பெரிய மேஜிக். கத்தியில் நடப்பது போல கவனம் வேண்டும். நாமும் கோட்டு சூட்டுக்கு மாறவேண்டியது முதல் கொடுமை ! வாடகைக்காவது ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொள்ள வேண்டியது இரண்டாவது கொடுமை. உதட்டிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடாத புன்னகையை ஆணி அடித்து வைக்க வேண்டியது மூன்றாவது கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல் கிளையண்ட் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது உலக மகா கொடுமை.

இந்த கொடுமைகளையெல்லாம் தாண்டி, இந்த பிரசன்டேஷன் வெற்றி கரமாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மேனேஜரிம் மனசிலும் அதே சிந்தனை தான்… ஸீ… ஹி..ஈஸ் காலிங்…

சார்…

இட்ஸ் லேட்… வயர் ஆர் யு ?

ஆன் மை வே… ராஜ்….. ஐ..ல் …பி …. இன் ஃபியூ மினிட்ஸ்.

சீக்கிரம் வாங்க… ஒரு ஃபைனல் ரன் துரூ தேவையிருக்கு. நீட் மோர் கிளாரிடி ஆன் ஆன்ஸர்ஸ்.

கண்டிப்பா சார்… வெச்சுடலாம்… ஒரு லெவன் ஓ கிளாக் உங்களை மீட் பண்றேன்.

ஓகே… சப்போர்ட்டிங் டாக்குமென்ட்ஸ்..

எல்லாம் ரெடி சார்…

வீ நீட் டு கட் துரோட் மேன்…. ஐ ஆம் ஆல் எக்ஸைட்டிங்…

பண்ணிடலாம் சார். ஆல் செட்…. இந்த புரபோசல் நமக்கு தான் சாதகமா இருக்கு. காஸ்ட் வைஸ் நாம மத்த கம்பெனியை விட கம்மியா இருக்கோம்ன்னு நமக்கே தெரியுது. அப்படியே அவங்க இதை விடக் கம்மியா கோட் பண்ணியிருந்தா கூட, நாம நாலெட்ஜ் டிரான்சிஸன் இலவசமா பண்ணிக் கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அது ஒரு இன்வெஸ்ட்மென்ட் நம்ம சைட்ல. அவங்களுக்கு அது ஒரு ஆடட் அட்வான்டேஜ்… எல்லாமே நல்லா தான் இருக்கு…. எந்திங் மிஸ்ஸிங் ?

நோ..நோ… யூ ஆர் ரைட்… நல்லா பிரசன்ட் பண்ணணும். தேட்ஸ் இம்பார்டன்ட்.

கண்டிப்பா சார்.

ஓகே,.. ஸீ..யூ.. இன் ஆபீஸ்.

அன்று மாலை,

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு பேர் இருந்தார்கள். ஒட்டடைக்குச்சி போல ஒருவர் கழுத்தில் டையுடன் நீளமான ஒரு கோப்பையில் வைன் வைத்திருந்தார். அவருக்கு நேர் எதிராய் ஒரு குண்டு மனிதர் பழச் சாறுடன் அமர்ந்திருந்தார். மிச்ச நபர்கள் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வை எமோஷன்ஸ் ஏதும் காட்டாத ஜேம்ஸ்பாண்ட் லுக்.

கழுத்தில் இருந்த டையை கொஞ்சமாய் அழுத்தி தலையை அசைத்துக் கொண்டே…

“ஐ ஆம் ரியலி எக்ஸைடட் டு வெல்கம் யூ ஃபார் திஸ்……” என்று பேசத் துவங்கினேன்.

தயாரித்து வைத்திருந்த பவர் பாயின்ட் பிரசன்டேஷன் திரையில் கலர்கலராய் வரைபடங்களோடு மின்னியது.

எங்களுக்கு வேலை கொடுத்தால் மூன்று ஏரியாக்களில் நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த செலவு, நிறைந்த தரம் மற்றும் சரியான நேரம். இந்த விஷயங்களை எப்படி நாங்கள் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கப் போகிறேன். அதற்காக எங்களிடம் என்னென்ன ஸ்பெஷல் திறமைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லப் போகிறேன். அதற்கு முன் எங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் வீர தீர பராக்கிரமங்களையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மென்மையான ஆங்கிலத்தில் விழுந்து விடாத புன்னகையில் பேசத் தொடங்கினேன்.

எனக்கு முன்னால் கதை கேட்க சுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் மகனின் முகம் தெரிந்தது. உள்ளுக்குள் மெல்லப் புன்னகைத்தேன். ‘டாடி.. சொல்லுங்க டாடி’ என்று அவன் சொல்வது போல ஒரு பிரமை.

நான் என் கையிலிருந்த மந்திரக் கோப்பையை எடுத்தேன். அதிலிருந்த திரவத்தை எடுத்து தெளித்தேன். செடிகள் அசுர வளர்ச்சியடைந்தன. எதிரே இருப்பவர்களின் சுவாரஸ்யங்களை அறிந்து அந்த ஏரியாக்களில் உயர்வு நவிர்ச்சி அணியைப் புகுத்தினேன். மற்ற இடங்களைத் தவிர்த்தேன். சரளமாக நான் சொல்லிக் கொண்டிருந்த ஃபேரி டேல் கலந்த பிரசன்டேஷனைப் பார்த்து தூரத்தில் அமர்ந்திருந்த மேனேஜர் பிரமித்துப் போய்விட்டார். நான் தொடர்ந்தேன்… தொடர்ந்து கொண்டே இருந்தேன். 

எனக்கு எதிரே அமர்ந்து உதட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

எனி கொஸ்டின்ஸ் ?  என்றேன், புன்னகை மாறாமல்.

சேவியர்

 

 

 

தாவீது மன்னனின் சலனம்

king-david-and-bathsheba
ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தாவீது தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் குளிப்பதையே பார்த்துக் கொண்டே நின்றார். அவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

‘சொல்லுங்கள் அரசே….’, பணியாளன் ஒருவன் ஓடி வந்து பவ்யமானான்.

‘அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை என் அந்தப் புரத்துக்கு வரச் சொல்’ மன்னன் ஆணையிட்டான்.

‘அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் உரியா என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

‘நான் விரும்பும் பெண் யாருடைய மனைவியாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று அவள் என்னோடு மஞ்சத்தில் படுக்கவேண்டும்’ தாவீது அழுத்தமாய்ச் சொல்ல பணியாளன் அகன்றான்.

அரசனின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது ? பத்சேபா அரண்மனை அந்தப் புரத்துக்கு வரவழைக்கப் பட்டாள். அங்கே தாவீது அவளுடன் உறவு கொண்டார். மன்னனின் ஆசைக்கு மறுப்புச் சொல்ல இயலாத பத்சாபா உடைந்த மனதோடு ஏதும் பேசாமல் தன்னுடைய இல்லம் சென்றாள். பத்சேபாவின் கணவன் உரியா யோவாபு என்னும் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான். அரசின் மேலும், அரசர் மேலும் மிகவும் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார் அவர்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன்,
காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.
உரியா அதை அப்படியே யோபாவுவின் கைகளில் கொடுத்தான்.

யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான்.

அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாகவேண்டும்’  மன்னன் தனக்கிட்டிருந்த ஆணை அவனுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்
யோபாவு உரியாவை அழைத்தான்.

‘உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்’ யோபாவு சொன்னார்.

‘சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’ உரியா பணிவானான்.

‘நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

‘மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்’ உரியா கூறினான்.

‘கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’ யோபாவு சொன்னான்.

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா மகிழ்ச்சியுடன் தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கிப் புறப்பட்டான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா கலங்கிய விழிகளோடு தாவீது மன்னனின் முன்னிலையில் வந்து நின்றாள்.

தாவீது அவளிடம் ‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே… இனிமேல் நீ எனக்கு மனைவியாகி என் அந்தப்புரத்தில் இரு’ என்றார். பத்சேபா மறுத்துப் பேசும் உரிமையற்றவள். மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி அவருடன் வாழ்ந்து ஒரு மகனுக்கும் தாயானாள்.

தாவீதின் இந்தச் செயலைக் கண்ட கடவுள் கோபம் கொண்டார். அவர் நாத்தான் என்னும் இறைவாக்கினரை தாவீதின் அரண்மனைக்கு அனுப்பினார்.
நாத்தான் தாவீது மன்னனின் முன் வந்து நின்றார்.

‘அரசே வணக்கம்…. நீங்கள் நீடூழி வாழவேண்டும்’ நாத்தான் வாழ்த்தினான்.

தாவீது மகிழ்ந்தார். ‘சொல்லுங்கள் நாத்தான்… தங்கள் வருகையின் நோக்கம் என்னவோ ?’ தாவீது கேட்டார்.

‘அரசே நான் ஒரு வழக்கோடு வந்திருக்கிறேன்… ‘ நாத்தான் சொன்னான்.

‘வழக்கோடு வருவது தானே உங்கள் வழக்கம். சொல்லுங்கள். உங்கள் வழக்கு எதுவானாலும் தீர்த்து வைப்பேன்’ தாவீது உறுதியளித்தார்.

‘அரசே… ஒரு நகரில் ஒரு செல்வந்தனும், ஒரு வறியவனும் வாழ்ந்து வந்தார்கள். செல்வந்தனிடம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் நிறைந்திருந்தன. அவனுக்குத் தேவையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த ஏழையிடமோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் மிகவும் அன்பாக நேசித்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை தன்னுடன் அணைத்துக் கொண்டு, தான் உண்ணும் உணவில் முதல் தரமானதை அதற்கும் அளித்து அதனோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். அந்த ஆட்டுக்குட்டியும் தன் எஜமானனிடம் ஒரு நண்பனைப் போல மிகவும் அன்புடன் இருந்தது… ஒரு நாள் அந்த செல்வந்தனைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். அந்த செல்வந்தனோ, தன்னுடைய மந்தைகளை விட்டு விட்டு, அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்துக் கொன்று சமைத்து விட்டான்….’ நாத்தான் நிறுத்தினார்.

தாவீதின் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘என்னுடைய ஆட்சியில் இத்தனை பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறானா ? யாரவன் ? இப்போதே வெட்டிக் கொன்று விடுகிறேன்… ‘ தாவீது சினந்தான்.

‘அது நீர் தான் மன்னா….’ நாத்தான் அரசனின் முன் நேராக நின்று கொண்டு தன்னுடைய ஆட்காட்டி விரலை தாவீதின் முகத்துக்கு நேராக நீட்டினார்.

தாவீது திடுக்கிட்டார். ‘ என்ன… நானா ? நான் எப்போது அப்படி நடந்து கொண்டேன்’ தாவீது கேட்டார்.

‘புரியவில்லையா மன்னா ? உமக்கு எத்தனையோ மனைவிகள் இருக்க, ஒரு ஏழை உரியாவின் மனைவியை நீ கவர்ந்து கொள்ளவில்லையா ? அவனை சதித்திட்டம் தீட்டிக் கொன்று விடவில்லையா ? …’ நாத்தான் தொடர்ந்தார்.

தாவீது திகைத்துப் போய் நின்றார்.

‘உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?’ நாத்தான் தைரியமாய் பேசினார்.

தாவீது தம்முடைய தவறை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். ‘கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும், பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார்.

தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார்.
‘அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’.

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார்.

பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை.

குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது ! ஏழாம் நாளில் இறந்துபோனது.

தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.

பொருந்தாக் காதல் பெரும் தீது !

22j
இஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம்.
அப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள்.

தாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தாமாரின் மீது ஆசைப்பட்டான். தன்னுடைய தங்கை என்று தெரிந்திருந்தும் அவள் மீது கொண்ட மோகத்தை அவனால் நிறுத்தி வைக்க முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகளில் அவன் தாமாரின் நினைவில் புரண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்னும் நினைப்பிலேயே அவன் நோயுற்றான்.

ஒரு நாள், அம்மோனைக் காண அவனுடைய நண்பன் யோனத்தாபு வந்தான்.

‘இளவரசே… என்னவாயிற்று உடம்புக்கு ? ‘ யோனத்தாபு கேட்டான்.

‘மனசு சரியில்லாததால் உடம்பும் வாடிவிட்டது… ‘ அம்மோன் சொன்னான்.

‘இளவரசருக்கே மனசு சரியில்லையா ? என்ன சொல்கிறீர்கள் ? மனசில் இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கள். எந்தக் குழப்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு.  உங்கள் கலக்கத்தைச் சொல்லுங்கள், அதைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்வேன்’

‘நான் ஒரு பெண்ணை அடைய வேண்டும். ஆனால் அது எப்படியென்று தான் தெரியவில்லை’ அம்மோன் கூறினான்.

‘இவ்வளவு தானா விஷயம். நீர் தான் இளவரசராயிற்றே. எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை அறைக்கு அழையுங்கள். இதில் என்ன சிக்கல் ? இதற்கு ஏன் மனவருத்தம் ?’ நண்பன் கேட்டான்.

‘இல்லை… அந்தப் பெண்ணை நான் படுக்கைக்கு அழைக்க முடியாத நிலை’

‘புரியவில்லையே !!’

‘நான் விரும்புவது தாமாரை. அவள் எனக்குத் தங்கை முறை. ஆனால் அவளை அடையவில்லையெனில் நான் செத்து விடுவேன் போலிருக்கிறது’ அம்மோன் உண்மையைச் சொன்னான்.

‘ஓ… அதுதான் விஷயமா ?’ என்று இழுத்த யோனத்தாபு சிறிது நேரம் யோசித்தான்.
‘ம்ம்… நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறீர்களா ?’

‘தாமாரை அடையவேண்டும். அதற்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இதற்காக அவமானப் பட நேர்ந்தால் கூடக் கவலையில்லை’ அம்மோன் சொன்னான்.

‘அந்த அளவுக்கு நீங்கள் தாமார் மீது ஆசைப்படுகிறீர்களா ? சரி..ஒன்று செய்யுங்கள். நீங்கள் உடம்பு சரியில்லாதது போல நடியுங்கள். போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உம்முடைய தந்தை உம்மைக் காண வருவார். அவரிடம், எனக்கு உடம்பு சரியில்லை, தாமாரை அனுப்பி கொஞ்சம் உணவு தயாரிக்கச் சொல்லுங்கள். தங்கை கையால் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ நண்பன் திட்டம் தயாரித்துக் கொடுத்தான்.

அம்மோனுக்கும் அந்தத் திட்டம் பலிக்கும் போல தெரிந்தது. ஒத்துக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் மிகவும் நோயுற்றவர் போல நடிக்க தாவீது அவரைக் காண வந்தார்.

‘மகனே… என்னவாயிற்று உனக்கு ? படுக்கையிலேயே கிடக்கிறாயே’ தாவீது கேட்டார்.

‘உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது. நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பாசத்துக்குரிய யாராவது அருகில் இருக்க வேண்டும் போல இருக்கிறது. தாமாரை அனுப்புவீர்களா ? அவள் கையால் கொஞ்சம் சாப்பிடவேண்டும்’ அம்மோன் நடித்தான்.

தாவீதிற்கு அம்மானின் சூழ்ச்சி புரியவில்லை. ‘ தங்கையை அனுப்புவது தானே… இதோ இப்போதே அனுப்புகிறேன்’, என்று சொல்லி உடனே தாமாரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.

தாமார் அண்ணனைக் காண ஓடி வந்தாள்.

‘அண்ணா… என்னவாயிற்று. உங்கள் பாசம் என்னை நெகிழச் செய்கிறது. நான் இதோ இப்போதே உங்களுக்கு சூடான உணவு தயாரித்துத் தருகிறேன்… ‘ தாமார் பாசத்தால் நனைத்தாள். ஆனால் அம்மோனின் மனமோ மோகத்தில் மூழ்கிக் கிடந்தது.

தாமாரும், அம்மோனும் மட்டும் தனியறையில் இருந்தார்கள். தாமார் உணவு தயாரித்து வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள். அம்மான் சட்டென தாமாரின் கையைப் பிடித்தான். அவனுடைய கையில் காமத்தின் சூடு தெரிந்தது.

தாமார் திடுக்கிட்டாள். ‘அண்……ணா…’ அவளுடைய குரல் பாதி வழியில் தடுக்கி விழுந்தது.

‘தாமார்.. கவலைப்படாதே. வா… என்னுடன் படு…என்னுடைய நோய்க்குக் காரணமே நீ தான். உன் நினைவில் தான் எனக்கு நோயே வந்தது. இப்போது அந்த நோய்க்கு மருந்தும் நீதான். வா..’ அம்மான் சொன்னான்.

தாமார் அதிர்ந்து போய் எழுந்தாள். ‘ இல்லை அண்ணா.. நீங்கள் என் சகோதரர். இதெல்லாம்… கூடவே கூடாது…’ தாமார் மறுத்தாள்.

அம்மான் விடவில்லை. ‘இல்லை நீ என் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.

‘அண்ணா… குறைந்தபட்சம் நீ நம்முடைய தந்தையிடம் பேசு. நானே உனக்கு மனைவியாகிறேன். இஸ்ரயேலரிடம் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கூட உன் நலனைக் கருதி தந்தை இதற்கு உடன்படக் கூடும். என்னை இப்போதைக்கு விட்டு விடு’ தாமார் எழுந்தாள்.

அம்மானுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்குள்ளிருந்த மிருகம் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தானே காத்திருந்தது. அடுத்த வினாடி வரை காத்திருக்கும் பொறுமை கூட அதனிடம் இருக்கவில்லை. அவன் அவளை பலாத்காரம் செய்து விட்டான்.

அதற்குப் பின்பு அம்மான் தாமாரை வெறுப்புடன் பார்த் தான். அவனுக்கு தாமாரின் மீதிருந்த காமம் சுத்தமாய் வடிந்து போயிருக்க மனம் வறண்டு போயிருந்தது.
‘இனிமேல் நீ வெளியே போய்விடு… இங்கே நிற்காதே’ என்றான்.

‘அம்மான்… நீ என்னுடன் உறவு கொண்டுவிட்டாய். இது வழக்கம் இல்லை என்றால் கூட என்னை மனைவியாக்கி விடு. கன்னித் தன்மை இழந்த என்னை வெளியே அனுப்பி விடாதே. இது என்னை பலாத்காரம் செய்ததை விடக் கொடுமையானது’ தாமார் கெஞ்சினாள்.

அம்மான் அவளைப் பார்க்கவே வெறுப்படைந்து அவளை விரட்டி விட்டான்.

தாமார் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று தான் அணிந்திருந்த அழகிய ஆடைகளைக் கிழித்துவிட்டு, தலையில் சாம்பல் தடவி துக்கம் அனுசரித்தாள். அப்போது அவளுடைய அண்ணன் அப்சலோம் வீட்டிற்கு வந்தான். தாமார் தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அவனுடைய உயிர் துடித்தது.

‘தாமார்… என்னவாயிற்று உனக்கு ? எந்தப் பாவி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினான். சொல்.. அவன் தலையைக் கொண்டு வருகிறேன்’ அப்சலோம் கோபத்தில் கேட்டான்.

‘அம்மான் தான் அவன்….’ தாமார் அழுதுகொண்டே சொன்னாள்.

அம்மான் என்னும் பெயரைக் கேட்டதும் அப்சலோம் இன்னும் அதிகமாக அதிர்ந்தான். ‘அவனா ? உன் சகோதரனா உன்னைக் கெடுத்தான்…. அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்… ‘ என்று புறப்பட்டான்.

நடந்தவற்றை அனைத்தையும் அறிந்த தாவீது மிகவும் கோபமடைந்தார். தன் மகனே தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டானே என வருந்தினார். ஆனாலும் அம்மோனை அவர் எதுவும் செய்யவில்லை.

அப்சலோம் அம்மோனைக் கொல்லத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என காலம் ஓடியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்ட ஒரு நாளில் அப்சலோம் தாவீதின் முன் சென்றான்.

‘தந்தையே… நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்களும் பணியாளர்களும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும்’ அப்சலோம் அழைத்தான்.

‘அழைப்புக்கு நன்றி மகனே. ஆனாலும் நான் வந்தால் என்னோடு கூடவே படைவீரர்கள், பணியாளர்கள் எல்லோரும் வருவார்கள். உனக்கு வீண் சுமை..’ தாவீது மறுத்தார்.

‘சுமையெல்லாம் இல்லை தந்தையே… தந்தை மகனுக்குச் சுமையாக முடியுமா ? வாருங்கள்…’ அப்சலோம் கட்டாயப் படுத்தினார்.

‘இல்லை மகனே… வேண்டாம்… அது சரிப்பட்டு வராது’ தாவீது திட்டவட்டமாக மறுத்தார்.

‘அப்படியானால் அம்மோனையாவது அனுப்புங்கள்’ அப்சலோம் கேட்டான்

‘அம்மோனா ? அவன் எதற்கு ? வேண்டாம்… உனக்கும் அவனுக்கும் சரிவராது…’ தாவீது அதையும் மறுத்தார்.

‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே ? நீங்கள் பழசை இன்னும் மறக்கவில்லையா ? அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா ? அவன் என் சகோதரனல்லவா ? சகோதரர்களுக்கு இடையே சண்டை வருமா என்ன ?’ அப்சலோம் நடித்தான்.

‘சரி.. அப்படியானால் அம்மோனை அழைத்துப் போ…’ தாவீது அனுமதியளித்தார்.

இந்த வாய்ப்புக்காகத் தானே அப்சலோம் காத்திருந்தான். அம்மோனைக் கட்டித் தழுவி, அவனை விருந்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே தாமாரும், அப்சலோமும் அவனுக்கு ஏராளமான இனிப்புகளும், மதுவகைகளும் வழங்கினர்.
அம்மோன் உற்சாகமாய்க் குடித்தான். குடித்துக் குடித்து போதையில் சரிந்தான்.

அந்த நேரத்துக்காகக் காத்திருந்த அப்சலோம், இரண்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த கணக்கை அன்று தீர்த்துக் கொண்டான்.
அன்றே போதையில் மிதந்த அம்மோனை அப்சலோம் கொன்றான்.

அதுவரைக்கும் அப்சலோமின் கண்களில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் தீ அப்போது தான் அணைந்தது.
தகாத உறவுக்கு ஆசைப்பட்ட அம்மோன், துடி துடித்து இறந்தான்.

கி.மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து

சிறுகதை : அம்மாவைப் பாக்கணும்

( உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை )

thinnai

“லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ? ” தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன்

பொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்போதும் வெகு சகஜமாய் இருக்கும் வசந்தனால் இன்றைக்கு அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று மனசில் பாரமாய் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து விட்டது. அம்மா சாகக் கிடக்குது – எனும் வார்த்தையாய் இருக்கலாம். 

ஏறக்குறைய பத்து வருஷம். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இந்த ஊருக்கு வந்தபின் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஊருடனான தொடர்பை விட ஆழமாய் அம்மாவுடனான தொப்புள் கொடி உறவே வலுவிழந்து போய்விட்டது. எப்போதாச்சும் மனசுக்குள் எழுகின்ற அம்மா ஆசையையும் மனைவி உடைத்துப் போடுவாள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஊரில் தம்பி உண்டு. சொத்து என்று பெருசாக ஒன்றும் இல்லை. சேத்த சொத்து என் பிள்ளைங்க தான் என்று அம்மா அடிக்கடி சொல்லும். 

ஒரு சண்டை. அந்தச் சண்டையிலிருந்து வசந்தன் வெளியே வரவேயில்லை. “நாடுகளுக்கெடையில நடக்கிற சண்டையே நாலு வாரத்துல தீருது, பேசி சமாதானமாயிடறாங்க. உனக்கென்னடே… விட்டுத் தொலைக்கலாமில்லையா ?” இப்படியெல்லாம் அவ்வப்போது சொல்லும் ஒரே நபரும் தங்கசுவாமி மாமா தான். 

“சார் எங்க போணும் ?” பஸ்ஸின் ஓர சீட்டில் அமர்ந்து நினைவுகளைக் கொறித்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது கண்டெக்டரின் குரல். 

தொடுவெட்டிக்கு ஒண்ணு குடுங்க…. ஆங்… போய் சேர எத்தற மணி ஆவும் ? 

இப்போ மணி பத்தாவப் போவுது, காலைல ஒரு ஒம்பதரை பத்துக்குள்ள போவும். 

ஓ.. பத்து மணி ஆவுமோ ? 

ஆவும். டிரைவரு இழுத்து பிடிச்சாருன்னா ஒரு ஒம்பது மணிக்கு போலாம். மழ வேற வருதில்லையா…. கரக்டா ஒண்ணும் சொல்ல முடியாது. 

பேசிக்கொண்டே கண்டக்டர் கிழித்துக் கொடுத்த டிக்கெட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்மூடினான் வசந்தன்.

“மக்களே மழையில நனையாதே ஜலதோசம் பிடிக்கும்”

அம்மாவின் குரல். எந்த அம்மாவின் குரல் தான் குழந்தைகளின் குதூகல மழைக் குளியலை அனுமதித்திருக்கிறது ?. வசந்தனின் அம்மா ஞானம்மாவுக்கும் மழைக் கவலை ரொம்ப உண்டு. பிள்ளைகள் கண்டு கொள்வார்களா என்ன ? பட்டன் பிய்ந்து போன காக்கி டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வசந்தன் ஓடினான். வீட்டின் கூரையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீருக்கு இடையே ஒரு மழை தின்னும் குருவி போல பறந்து திரிந்தான். மழை ஓயும் வரை அம்மாவின் குரல் ஓயவில்லை. வசந்தனும் ஓடி ஓயவில்லை. 

அன்றைய இரவில் வசந்தனுக்கு ஏறக்குறைய ஜுரம் வந்து விட்டது. குளிரில் விறைத்து விரல் நுனிகளிலெல்லாம் உலகப் படம் போல சுருக்கங்கள். 

வெள்ளியாவளை வைத்தியரிடம் வாங்கிய பொடி அம்மாவிடம் எப்பவும் இருக்கும். கரண்டியில் கொஞ்சம் பொடி போட்டு, அடுப்பில் காட்டி சூடாக்கினாள். அதை உள்ளங்கையில் கொட்டி, வசந்தனின் உச்சந்தலையில் இளம் சூட்டுடன் வைத்துத் தேய்த்தாள். வசந்தன் மண் அடுப்பின் பக்கவாட்டில் கைகளை வைத்து சூடு பிடித்துக் கொண்டிருந்தான். ‘சொன்னா கேக்க மாட்டினும், பொறவு இருமலும், தும்மலும் எல்லா எழவும் வரும்’. அம்மாவின் வாய் ஓயாது. கை வைத்தியம் பார்ப்பதை நிறுத்தவும் செய்யாது. பாத்திரத்தை எடுத்து சுக்கு காப்பி போட தயாரானாள். சுக்கு காப்பியும், சுடு கஞ்சியும் எல்லா நோயை விரட்டி விடும் என்பது அம்மாவின் நம்பிக்கை. அம்மாவின் நம்பிக்கை பொய்த்துப் போனதில்லை, பெரும்பாலும் ஊசி போடாமலேயே எல்லா நோயும் தீர்ந்து விடும். அப்படியும் மறு நாள் உடம்பு கொதித்தால் கம்பவுண்டரின் வீட்டுக்குப் போய் ஊசி போடுவது தான் ஒரே வழி.

சர்ப்பக் குளத்தில் குதித்து நீச்சலடிக்கும் போதும் இதே பல்லவி தான். சகதியில் புதையுண்டு கிடக்கும் சிப்பிப் புதையலை அள்ளி அள்ளி நேரம் போவதே தெரியாது. வசந்தனுக்கு ஒரு தம்பி உண்டு, செல்வன். இருவருமாக குளத்தில் குதித்தால் சிப்பி பொறுக்கியோ, டவலை முறுக்கிப் பிடித்து கயிலி மீன் பிடித்தோ மணிக்கணக்காய் தண்ணீர் பறவையாய் மூழ்கிக் கிடப்பார்கள். அப்போதும் அம்மாவின் வைத்தியம் தான் கை கொடுக்கும் “எப்பளும் வெள்ளத்தில தானே கெடக்குதிய.. நீங்க கெண்ட மீனா பொறக்க வேண்டியவங்கடே” என்று சிரித்துக் கொண்டே திட்டுவாள்.
ஒரே ஒரு அக்கா வாசந்தி. கிராமத்து நிறம். அப்படியே கிராமத்தின் அக்மார்க் நடை உடை பாவனைகள். ரொம்ப அமைதியானவள். ஊரில் அவளுக்கு பொய்ங்கி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. எந்த விஷயத்திலும் முன்னால் நிக்காமல் பின்னால் போய் நிற்பவர்களுக்கு வழங்கப்படும் கிராமத்துப் பட்டப் பெயர் அது.

பகல் முழுக்க குளத்தில் குதித்தும், மரத்தில் தொங்கியும் விளையாடினாலும் ராத்திரி அம்மாவின் அரவணைப்பு வேண்டும். அம்மாவின் இரண்டு பக்கங்களிலும் படுப்பது யார் என்று மூன்று பேருக்கும் நடக்கும் சண்டை தினசரி வழக்கு. கடைசியில் பொய்ங்கி அக்கா தான் விட்டுக் கொடுப்பாள். வசந்தனும், செல்வனும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டு அம்மாவின் சேலை முனையைப் பிடித்துக் கொண்டே தூங்கிப் போவார்கள். அம்மா அவர்களுடைய உச்சி மோந்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாள். பிறகு எப்போ தூங்குவாள் என்று தெரியாது, காலையில் தேயிலை வெள்ளம் போட்டு தான் பிள்ளைகளை எழுப்புவாள்.

மூணாவது பையன் பொறந்ததும் கண்ணை மூடின புருஷன் அடிக்கடி கண்களில் ஈரமாய் வழிவான். அதையெல்லாம் பிள்ளைகளிடம் அவள் காட்டியதில்லை. பனை ஓலையைக் கீறிப் பரம்பு செய்வதோ, கடவம் செய்வதோ, மொறம் செய்வதோ என அவளுடைய பொழுது கழியும். அதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் தான் வறுமையை விரட்டும். முழுசா விரட்ட முடிந்ததில்லை. ஒரு ரெண்டு பர்லாங் தள்ளி எப்பவும் வறுமை இவர்களையே முறைச்சுப் பாத்துக் கொண்டு நிற்கும். நாலு நாள் ஞானம்மாள் காய்ச்சலில் படுத்தால் போதும், மறுபடியும் அது ஓடி வந்து திண்ணையில் வந்து குந்திக் கொள்ளும்.

“வண்டி பத்து நிமிஷம் நிக்கும், டீ..காபி சாப்டறவங்க சாப்டுங்க, டின்னர் சாப்டறவங்க சாப்டலாம்… இனிமே வண்டி வழியில நிக்காது” பஸ்ஸின் பக்கவாட்டில் அடித்துக் கொண்டே கிளீனர் பையன் போட்ட கத்தல் வசந்தனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. 

எந்த இடம் என்று தெரியவில்லை. ஒரே இருட்டு. டியூப் லைட் வெளிச்சத்தில் ஏதோ ஒரு பைபாஸ் ஹோட்டல். பசிக்கவில்லை. இறங்கினான். டீ கடையில் டி.எம்.எஸ் ஏதோ ஒரு பாட்டை உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார். அவர் மறைந்த பிறகு அந்தக் குரல் இன்னும் அதிகமாய் மனதைப் பிசைந்தது. பொட்டிக் கடையில் ஒரு கிங்க்ஸ் வாங்கி பற்ற வைத்தான். விரல்களிடையே புகை வழிய, இதயம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணில் கனல் இருந்தது.

“உனக்க பெண்டாட்டி சொன்னது சரியில்லடே” அம்மாவின் குற்றச்சாட்டு வசந்தனுக்கு எரிச்சல் மூட்டியது. கல்யாணம் ஆன நாளில் இருந்தே இந்த புராணம் தான். அடிக்கடி இப்படி ஏதாவது குற்றச்சாட்டை இருவரும் மாறி மாறி வைப்பது மனசுக்குள் இருந்த நிம்மதியை எல்லாம் குழி தோண்டிப் புதைப்பதாய் தோன்றியது அவனுக்கு. 

“அம்மா.. உங்க சண்டைல என்ன இழுக்காதீங்கம்மா” 

“ஏதோ கைவெஷம் குடுத்து பயல மயக்கிட்டா… இல்லங்கி அம்மன்னா அவனுக்கு உசுரு” அம்மா வருவோர் போவோரிடமெல்லாம் அம்மா இப்படிப் பேசுவது சர்வ சாதாரணம். உண்மையிலேயே அம்மாவுக்கு வசந்தன் என்றால் உயிர் தான். முதலில் ஒரு பெண்ணைப் பெற்றபின் அடுத்தது பையனா பொறக்கணுமே என தவம் கிடந்து பெற்ற பையன் இவன். நாலு பெண்ணு பொறந்தா நடைகல்லைப் பெயர்க்கும் என்று ஊரில் சொல்வார்கள். இவர்கள் இருக்கும் நிலமைக்கு நாலு தேவையில்லை, இரண்டு பெண் பொறந்தாலே அந்த நிலமை தான். 

ஆனால் கடவுள் கண் திறந்தார். பையனா பொறந்திருக்கான், இனிமே நமக்கு வசந்தம் தான் என்று தான் வசந்தன் என்று பெயரையும் வைத்தார்கள். சாப்பாட்டில் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் இருக்கும். எல்லாருக்கும் ஒரு துண்டு பொரிச்ச மீன் என்றால் இவனுக்கு ரெண்டு கிடைக்கும். சோற்றுக்குள் அப்பப்போ அவிச்ச முட்டை ஒளிச்சிருக்கும். அப்படி ஒரு தனி கவனம் அம்மாக்கு வசந்தன் மேலே. 

அதனால் தான் சண்டையில் வசந்தன் தன் பக்கம் நின்று பேசவேன்டும் என அம்மாக்கு உள்ளூர ஆசை. அம்மா பக்கம் நின்றால் பொண்டாட்டியின் ஓயாத நச்சரிப்பில் நிம்மதியே போய்விடும் எனும் பயம் வசந்தனுக்கு. 

அதனாலேயே அவன் அமைதி காத்தான். அந்த நாள் வரை. அந்த நாளில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது.

அந்த நாள் வராமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு சண்டை நிகழாமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு வார்த்தையை வசந்தன் சொல்லாமலேயே போயிருக்கலாம். வாழ்க்கை வேறு விதமாய் அமைந்திருக்கும். அந்த சண்டையின் முதல் பொறி என்ன என்பது இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை. 

“கொம்பியே… பயலை மயக்கி என்னை கொல்லுலாண்ணா பாக்குதே” அம்மாவின் குரல் எகிறியது.

“நான் எதுக்கு உன்னை கொல்லுதேன். நீ காட்டுத வேலைக்கு கடவுளு உன்னை எடுத்தோண்டு போவாரு” வசந்தனின் மனைவி அதை விட எகிறினாள்.

“நான் என்ன காட்டினேன் ? எனக்க பிள்ளைக்கோட பேசவும் விட மாட்டேங்குதே, அவன் ஏதெங்கிலும் வாங்கி தாறதும் உனக்கு பொறுக்க மாட்டேங்குது. அவன நானாக்கும் பெற்றது. நீயில்லா”

“கல்யாணம் வர பாத்தா மதி. எப்பளும் பிள்ள பிள்ள, பிள்ளைக்க பைசான்னு இருக்காதே கெழவி”

“பெண்ணே கெளவின்னா விளிச்சுதே”

“பின்ன நீ குமரியா ? சாவப் போற கெளவி”

சண்டையின் உச்சஸ்தாயியில் வசந்தன் பொறுமை இழந்தான். தாயை நோக்கி விரல் சூண்டினான்.

“கள்ளி.. மிண்டாத கெடப்பியா. உன்னால எனக்க நிம்மதியெல்லாம் போச்சு. வயசானா போய்த் தொலைய வேண்டியது தானே. மனுஷனுக்கு உயிர வாங்கிட்டு ” ஆவேசத்தில் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் குதித்தன. 

அம்மா அதிர்ச்சியானாள். அவளுடைய இமைகள் மூடவில்லை. கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதன் பின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனைவி ஏதேதோ கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மா பேசவேயில்லை. அமைதியாய் உள்ளே போனாள். 

தகப்பன் போனபிறகு ஒரு வினாடி கூட பிள்ளைகளைப் பிரிந்து அவள் இருந்ததில்லை. அந்த வீடு, அந்த ஊர், அந்த எல்லை என்பது மட்டுமே அவளுக்குப் பிடித்திருந்தது. எப்போதும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் கையால் ஏதேனும் வாங்கி சாப்பிடவேண்டும். அவர்களுடன் பேசிச் சிரிக்க வேண்டும். எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் மட்டுமே அவளுடைய உலகமாகிப் போயிருந்தது. 

அந்த நாளுக்குப் பிறகு அம்மா எதுவும் பேசுவதில்லை. வசந்தனின் மனைவி பிடிவாதமாக எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினாள். அப்போதும் அம்மா எதுவும் பேசவில்லை. வசந்தனும் ஏதும் பேசவில்லை. பிரச்சினை இல்லாமல் போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. ‘இனி அந்த கெளவி கிட்டே ஒரு வாக்கு பேசினா நான் அறுத்துட்டு போயிடுவேன்’ என்பது மனைவியின் மிரட்டலாய் இருந்தது.

அதற்குப் பிறகு தம்பியின் கல்யாணத்துக்கு ஒரு முறை சம்பிரதாயமாய் வந்ததுடன் சரி. அப்போதும் அம்மாவிடம் சரியாகப் பேசவில்லை. அம்மா வழக்கத்தை விட இன்னும் அதிகமான மௌனத்துக்குள்ளாகவே போய்விட்டாள். 

பஸ் இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சாலைக் கோடுகளெல்லாம் பஸ் சக்கரத்தில் அடிபட்டு அலறி பின்னால் ஓடிக் கொண்டிருந்தன. சின்ன வயதில் அம்மாவோடு விளையாடிய, பேசிய, களித்த நிமிடங்களெல்லாம் அந்த இரவில் ஓடும் மின்மினிகளாய் வசந்தனின் மனசுக்குள் பறந்து திரிந்தன. தப்பு பண்ணிட்டோம் எனும் உணர்வு முதன் முதலாய் அவனுக்கு வந்தது.
அம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும். பேசணும். நிறைய பேசணும். மன்னிப்பு கேக்கணும். அம்மாவோட காலடியில கொஞ்ச நேரம் இருக்கணும். கால் நோவுதாம்மா ன்னு கேட்டு கொஞ்சம் தைலம் தேச்சு விடணும். கட்டிப் புடிச்சு கொஞ்ச நேரம் அழணும். அம்மா பேசுவாங்களா, ‘சாரமில்லே மோனே.. நீ நல்லா இருக்கியா’ என்று கையைப் பிடிச்சு முத்தம் தருவாளா ? மனசில் கேள்விகளோடு கண்ணை மூடினான் வசந்தன். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. 

ரெண்டு சொட்டு மழைத்தண்ணி முகத்தில் விழுந்தபோது தான் விழித்தான். 

வெளியே விடிந்திருந்தது. மெல்லிய சாரல் மழை. பஸ் கண்ணாடியை இழுத்துச் சாத்தினான். அது முழுமையாய் மூடாமல் முரண்டு பிடித்தது. சாரல் துளிகள் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்தன.
“மக்களே… நனையாதே ஜலதோஷம் பிடிக்கும்” அம்மா சொல்வது போல ஒரு பிரமை.

திடீரென செல்போன் ஒலித்தது.

தங்கஸ்வாமி மாமா தான் பேசினார்.

டேய்… தூக்கமா ?

இல்ல மாமா… அம்மாவைப் பாக்கலாம்ன்னு ஊருக்கு வந்திட்டிருக்கேன். நேற்று சொன்னீங்கல்லா.. அதுக்கப்புறம் வீட்ல இருக்க முடியல. அதான் சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டேன்.

ஓ.. வீட்டுக்கு வந்திட்டிருக்கியா…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியாடே… ம்ம்…. செரி… நீ… நீ இப்பம் எவ்வளவு தூரம் வந்திருக்கே ? 

நான் தொடுவெட்டி வந்தேன் மாமா. ஒரு அர மணிக்கூர்ல வீட்ல இருப்பேன்.

செரி.. பஸ் ஒந்நும் பிடிக்க நிக்காதே. ஒரு ஆட்டோ பிடிச்சோண்டு சீக்கிரம் வா.

ம்…மாமா…. என்ன சொல்லுதீய ? வசந்தனின் குரல் நடுங்கியது.

ஆமாடே…. போச்சு… ஒரு ரெண்டு மணிநேரம் ஆச்சு. நீ வா.

வசந்தனின் தொண்டையில் சட்டென துக்கம் வந்து அடைத்தது. கண்ணீர் குபுக் என வழிந்தது. வாயைப் பொத்திக் கொண்டு, தலையைக் கவிழ்த்தான். பிடிவாதமில்லாமல் விமானத்திலிருந்து நழுவி விழுவது போல தோன்றியது.

வீடு துக்கத்தில் கிடந்தது. 

சொந்த வீட்டை மரணம் சந்திக்கும்போது வரும் துயரம் சொல்ல முடியாதது. ஆட்கள் வந்தும், போயும், விசாரித்தும்… முற்றம் அமைதியான பாதச் சுவடுகளால் நிரம்பியது. முற்றத்தின் நடுவில் புதிய ஆடையில் அம்மா. அந்த முகத்தில் என்ன உணர்வு இருந்தது என்பதை வசந்தனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மாவின் கால்களைத் தொட்டபோது விரல் நடுங்கியது.

மாலையில் எடுத்தாகிவிட்டது. சுடுகாட்டுப் பயணத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. 

வசந்தனின் மனதில் இயலாமையும் ஒன்றும் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியும், அழுகையும் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. இந்தத் தவறை எப்படித் திருத்துவது. வழியே இல்லை. வாய்ப்புகள் இருந்தபோது மனம் இறங்கி வரவில்லை. மனம் கசிந்தபோது வாய்ப்பு இல்லை. அன்பையும் மன்னிப்பையும் தள்ளிப் போடக் கூடாது. அடுத்த வினாடில என்ன நடக்கும்ன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். வசந்தன் கலங்கினான். மரண வீட்டின் ஓலத்தையும் ஒப்பாரியையும் விடக் கனமானது அந்த இரவு நேர மவுனம் என்பது வசந்தனுக்கு உறைத்தது.

தூறல் இன்னும் முழுமையாய் விடவில்லை. வானம் விட்டு விட்டு அழுது கொண்டிருந்தது. 

“அப்பப்போ வந்து பாத்திருக்கலாம் இல்லியாடே. அம்மா ஒரு வாரமா இழுத்துட்டு கெடக்குது. உன் பேரை சொல்லிட்டு மேல பாத்துச்சு, அப்போ கண்ணீரு பொல பொலன்னு வந்துது. அதான் மனசு பொறுக்காம உனக்கு போன் பண்ணினேன்.” 

தங்கசுவாமி மாமா திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் மனசை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்தன. செல்வன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். தலையைக் கவிழ்ந்திருந்தான்.

நீ வருவேன்னு எனக்குத் தெரியாதுடே… ஒரு போன் அடிச்சு சொல்லியிருக்கலாம் இல்லியா ? – செல்வன் தான் கேட்டான்.

ஒண்ணும் தோணலடே, தங்கசுவாமி மாமா சொன்னதும் நான் கெளம்பி வந்துட்டேன். மாமா கிட்டே வருவேன்னும் சொல்லல. அம்மா சாவக் கிடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இருப்பு கொள்ளல. நான் குடுத்து வெச்சது அத்தற தான். ஒரிக்கலாச்சும் அம்மாவை வந்து பாத்திருக்கணும். செய்யாம போயிட்டேன்டே. வசந்தனின் குரல் இடறியது.

உன்ன பாக்கணும்ன்னு அம்மா சொல்லிச்சு. நீ வரும்ன்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணியிருப்பேன்.

வெயிட் பண்னியிருப்பியா ? என்னடே சொல்லுதே.

ஆமாண்ணா.. நேற்று நைட்டு தான் அம்மாக்கு தலைக்கு தண்ணி ஊத்தினோம்.

வசந்தனை சட்டென அதிர்ச்சி அடித்தது. திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தான். சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை நள்ளிரவில் உட்கார வைத்து தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி விடுவதுண்டு. அப்போது அந்தக் குளிரிலேயே இரவில் உயிர் பிரிந்து விடும். ஒருவகைக் கருணைக் கொலை ! 

அம்மக்கி தண்ணி ஊத்தினியா ? என்னடே சொல்லுதே… வசந்தனின் கண்களில் திட்டுத் திட்டாய் அதிர்ச்சி தெரிந்தது. 

ஆமாண்ணா… நீ மாமாட்டயும் வருவேன்னு சொல்லல. மாமா நிறைய தடவை உனக்கு இதுக்கு மின்னேயும் போன் செஞ்சிருக்காரு. நீ வரல. அது போல நீ இப்பவும் வரமாட்டேன்னு நெனச்சேன்டே. அம்மா படுத கஷ்டத்த என்னால பாத்து சகிக்க முடியல. எழும்பவும் முடியாம, பேசவும் முடியாம இழுத்தோண்டு கெடந்துது. எப்படியெல்லாம் நம்மள பாத்த அம்மா. இப்படி கஷ்டப்படறதைப் பாக்க முடியலே. நீ வருவேன்னு தெரியாதுன்னே.. நீ வருவேன்னு தெரியாது…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியா…. செல்வன் கண்கள் கலங்கின.

வசந்தன் நிலைகுலைந்து போயிருந்தான். அவனுடைய பார்வை உறைந்து போயிருந்தது. கால்கள் நடுங்கின.

இன்னும் நிற்காத குளிர் சாரல் அவ்வப்போது தெறித்துக் கொண்டிருந்தது. 

“மக்களே மழையில நனையாதே.. குளிர் பிடிச்சுரும்” அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. மனசுக்குள்ளிருந்து. 

சேவியர்

கல்கி : பழைய காதலி

thinking
பழைய காதலி !
——————–

போச்சுடா… நேத்தும் நைட் ஃபுல்லா சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான்.

வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். ‘ஆமா மச்சி… அவள மறக்க முடியல. அவளும் என்னை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப் படறா. முதல் காதலை மறக்கிறது ஈசி கிடையாதுடா’

டேய்… அதுக்கு சுடர் உன்னோட முதல் காதலி இல்லையே…

யா… பட்… இருந்தாலும் இரண்டாவது காதலையும் மறக்க முடியாதுடா மச்சி.

எலேய்.. அவ உனக்கு இரண்டாவது காதலியும் கிடையாதுடா !

ஓகே..ஓகே… அதென்னவோ தெரியல மச்சி, சுடரை மட்டும் என்னால மறக்கவே முடியல.

டெய்லி நைட் தூங்காம ஃபேஸ்புக்கை சுரண்டிட்டே இருந்தா எப்படிடா மறக்க முடியும் வெண்ணை ! அவளைத் தூக்கிப் போட்டுட்டு மத்த விஷயங்களைப் பாக்க வேண்டியது தானே ! அவ என்ன உன்னை நினைச்சுட்டா இருக்கா ? கனடால போய் செட்டில் ஆகல ?

டேய் அவ கனடால இருந்தாலும், கர்நாடகால இருந்தாலும் என் மனசுல எப்பவுமே இருப்பாடா…

ஐயோ.. லவ் பண்ணும்போ தான் டயலாக் டயலாக்கா அவுத்து உட்டு சாகடிச்சே. இப்போ பிரிஞ்சப்புறமுமாடா ?

நாங்க பிரியவே இல்லையேடா ?

அது உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா ?

ஹி..ஹி… தெரிஞ்சா நாங்க பிரிஞ்சுடுவோம்.. ஐ மீன் என் பொண்டாட்டி மாலதியைச் சொன்னேன்.

வாசன் சிரித்தான். போதும்டா.. அவ மகேஷ்வரனைக் கல்யாணம் பண்ணி கனடால செட்டில் ஆகி ஆறு வருஷம் ஆச்சு. அவளோட பொண்ணுக்கும் இப்போ அஞ்சு வயசாச்சு.

பட்.. அவளோட குழந்தை பேரு தெரியும்ல ? சாரினி. என் பேரோட முதல் எழுத்துடா மச்சி. சாகர்.. சாரினி ! ஸீ.. தட்ஸ் லவ்.

மண்ணாங்கட்டி. அவ பாட்டி பேரு சாரினீஷ்வரி. அந்த பேரைத் தான் வைக்கணும்ன்னு சுடரோட அம்மா ஒத்தக் காலில நின்னாங்க. அதேதோ லேடி ரஜ்னீஷ் பேரு மாதிரி இருக்குன்னு மகேஷ் சண்டை போட்டு கடைசில வாலைக் கட் பண்ணி சாரினி ன்னு வெச்சாங்க. அதெல்லாம் தெரியாதது மாதிரி நடிக்காதே..குடுத்த காசுக்கு மட்டும் நடி.

சரி… அப்படியே இருந்தா கூட அது ஒரு தெய்வ சித்தம் மாதிரி அமஞ்சு போச்சு பாத்தியா ?

டேய்.. தெய்வ சித்தம் இல்லடா.. தெய்வக் குத்தம்… கல்யாணத்துக்கு அப்புறம் பழைய காதலி கூட கொஞ்சிக் குலவறது குத்தம்டா… இதெல்லாம் மாலதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் !

டேய்.. அதெல்லாம் தெரியாதுடா. இதுல என்ன தப்பிருக்கு. அவ கனடால இருக்கா, நான் இங்கே இருக்கேன். சும்மா பேச்சு தானே !

பேச்சு இல்ல மச்சி. மனசு. மனசுல என்ன இருக்கோ அது தான் செயல்ல வரும். மனசுல சுடரை நீ வெச்சிருந்தா மாலதியோட வாழற வாழ்க்கை நல்லா இருக்காது. நீ கவனிக்க வேண்டியது உன் மனைவியை.

போதுண்டா உன் அட்வைஸுக்கு. நீயும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவன் தானே. ஏதோ லவ்வே பண்ணாத மாதிரி பேசறே. குடும்பத்தையெல்லாம் நான் நல்லாதாண்டா பாத்துக்கறேன் என்ன குறைவெச்சிருக்கேன்.

என்ன ம்ம்… வாயில நல்லா வருது. உன் பொண்ணோட ஸ்கூல் புராஜக்டை பண்றதுக்கு நேரமில்லை, புண்ணாக்கு இல்லைன்னு புலம்பினே. சுடர் கூட கடலை போட டைம் இருக்கோ ?

சரி.. அந்த பேச்சை விடு.. இப்போ என்ன விஷயம் சொல்லு…

ஒண்ணும் இல்லை சும்மா தான் வந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது சாகரின் மானிட்டரில் சேம்டைம் சேட் வின்டோ டொங் என்று திறந்தது.

‘சாகர் ஒரு நிமிஷம் இங்கே வரமுடியுமா பிளீஸ் ‘ மானேஜர் தான் கூப்பிட்டார்.

‘கண்டிப்பா’ என்று பதில் தட்டிவிட்டு சாகர் எழுந்தான்.

வாசன் சாகரின் கம்ப்யூட்டர் வின்டோவைப் பார்த்தான். டாஸ்க் பாரில் ஃபேஸ் புக் திறந்திருந்தது. கிளிக்கினான். அப்படி என்ன தான் சுடர் கூட பேசறான்னு பாப்போமே என்று நுழைந்தான். சுடரோடு சாகர் பேசிய சேட் ஹிஸ்டரி அனுமர் வால் போல நீண்டு கிடந்தது.

ஹாய் சுடர்.. எப்படியிருக்கே.

ம்ம்.. இருக்கேன் நீங்க ?

ஏதோ இருக்கேன்.. நினைவுகள் வாழவைக்குது.

ம்ம்ம்…

வீட்ல எல்லாரும் நலமா ?

யா… இருக்காங்க.. உங்க வீட்ல..

ம்ம்… இருக்காங்க…

நைட் தூங்காம சேட் பண்றீங்க ?

உன்னை மறக்க முடியுமா ? உலகத்துல எல்லாத்தையும் விட முக்கியமானது உன்கூட பேசறது தான் சுடர். அது தான் உலகத்துல என்னை வாழ வைக்குது.

ம்ம்ம்… ஐ யாம் மிஸ்ஸிங் தோஸ் டேஸ்

ம்ம்ம்… அந்த அருகாமை, அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம்.

ம்ம்…. ஆமா…

ஞாபகம் இருக்கா.. அந்த வேலன்டைன்ஸ் டேக்கு.. முதல் முதலா….

வாசன் கடகடவென வாசித்தான். சேட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காதல், கவர்ச்சி, ஆபாசம் என தாவ வின்டோவை மூடினான். டெஸ்க் டாப்பில் ஒரு நோட் பேட் தென்பட்டது. பாஸ்வேர்ட்.டெக்ஸ்ட்

திறந்தான். சாகரின் மின்னஞ்சல்கள், ஃபேஸ்புக் எல்லாவற்றுக்குமான ஐடி மற்றும் பாஸ்வேர்ட். மடப்பயல் என்று நினைத்து கொண்டிருந்தவனின் மனதில் சட்டென ஒரு பொறி. ஃபேஸ்புக் ஐடி, பாஸ்வேர்ட்களை மனதில் பதித்துக் கொண்டு ஃபைலை மூடினான். இன்னும் சாகர் திரும்பி வரவில்லை.

அன்று இரவு, மணி பதினொன்று. வாசனின் போன் அடித்தது. மறுமுனையில் சாகர். சாகரின் குரலில் பதட்டம் தெரிந்தது.

மச்சி.. என்னோட டேட்டா கார்டைப் பாத்தியா ? பேக்ல போட்டிருந்தேன் காணோம். நெட் கணெக்ட் பண்ண முடியல.

ஓ.. இல்லையேடா… ஆபீஸ்ல விட்டுட்டியா தெரியலையே !

தெரியலடா மச்சி.. சே..நெட் கனெக்ட் பண்ண முடியல.. சுடர்வேற வெயிட் பண்ணிட்டிருப்பா…

டேய்… போய் தூங்குடா.. ம…. எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். சொல்லிக் கொண்டு போலிக் கோபத்துடன் போனை ஆஃப் பண்ணினான் வாசன். அவனுடைய கையில் சாகரின் டேட்டா கார்ட் சிரித்தது. அவனுடைய லேப்டாப்பில் சாகரின் ஃபேஸ் புக் பக்கம் சுடருக்காகக் காத்திருந்தது !

அரை மணி நேரத்துக்குப் பின் சுடர் பச்சை விளக்குடன் ஆன்லைனில் வந்தாள்.

கொஞ்ச நேரம் வாசன் அமைதிகாத்தான். சுடரே பேச்சை ஆரம்பித்தாள்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

பேசினான். சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள். மறுமுனையில் இருப்பது வாசன் என்பதை சுடர் அறியவில்லை. சாகர் என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

மறு நாள் மதிய வேளையில் பதட்டத்துடன் ஓடி வந்தான் சாகர்.

மச்சி… சுடர் கிட்டே நேத்திக்கு பேசல. அவ கோச்சுகிட்டா போலிருக்கு. என்னை அன்பிரண்ட் பண்ணிட்டா. இப்போ நான் அவளோட ஃபேஸ் புக் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்லயே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு.

ம்ம்ம்…

என்னடா நான் டென்ஷன்ல சொல்லிட்டிருக்கேன்.. நீ சைலன்டா இருக்கே.

மச்சி.. கொஞ்சம் பொறுமையா கேளு ! நேற்று சுடர் நைட் ஒரு மணி நேரம் சாகர் கூட பேசினா.. அப்புறம் போயிட்டா.

என்னடா சொல்றே ?

சாரி மச்சி.. நான் தான் பேசினேன், உன் பெயர்ல. உன் ஐடில நான் நுழைஞ்சுட்டேன். நீ இடையில வரக்கூடாதுன்னு தான் உன் டேட்டா கார்டை சுட்டுட்டு போனேன். கூல் டவுன்… இந்த சேட்டை படிச்சுப் பாரு ! வாசன் நேற்று இரவு நடந்த சேட் ஹிஸ்டரியை சாகரிடம் நீட்டினான்.

சாகரின் பொறுமை எல்லை மீறியது. டேய்.. மயி….இதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா. என்னோட பர்சனல் விஷயத்துல அளவுக்கு மீறி தலையிடறே. அவகிட்டே என்ன சொன்னே ? என் லைஃப்பை டிசைட் பண்ண நீ யாரு ? நான் பேசுவேன், பேசாம இருப்பேன். அது என் இஷ்டம். திஸ் ஈஸ் டூ மச். ஐ ஆம் டோட்டலி இரிடேட்டட்.

முதல்ல நீ சேட்டை படி.. நான் ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா செருப்பால அடி..

சாகர் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் சேட்டை வாசித்தான்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே ?

ம்ம்… இருக்கேன்.

வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? மகேஷ்வர், சாரினி நலமா ?

ம்ம்… இருக்காங்க… உங்க வீட்ல..

எல்லாரும் நல்லா இருக்காங்க. இன்னிக்கு என்னோட பொண்ணுக்கு டான்ஸ் புரோக்ராம் இருந்துச்சு. ஷி வாஸ் டூயிங் வெரி வெல். ரொம்ப சந்தோசமா இருந்துது !

ஓ.. நைஸ்.. நைஸ். என்ன டான்ஸ்

பரதநாட்டியம் கத்துக்கிறாங்க. லாஸ்ட் ரெண்டு வருஷமா. குட்டிப் பொண்ணு தான் ஆனா பின்றா. ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகளை டான்ஸர் என கேட்ட டாடி… ( ஸ்மைலி )

ம்ம்… என் பொண்ணு கூட மியூசிக் கிளாஸ் போறா… வயலின்.

வாவ்.. வயலின் ரொம்ப கஷ்டமாச்சே…

ம்ம்.. ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு.

யூ. நோ வாட்… என்னோட மனைவிக்கு வயலின்னா உசுரு. ரொம்ப அழகா வாசிப்பா. அவ வாசிச்சா நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாம். அடிக்கடி சாயங்காலம் மொட்டை மாடில போய் உட்கார்ந்து அவ வாசிக்கிறதை நானும் பொண்ணும் கேப்போம். மியூசிக் ரொம்பவே அற்புதமான விஷயம் யா.

ம்ம்…. என் ஹஸ்பன்ட் கூட நல்லா கீ போர்ட் வாசிப்பாரு. முன்னாடி ஒரு குரூப்ல சேர்ந்து ஆல்பம்ஸ் எல்லாம் போட்டிருக்காரு.

வாவ்.. வெரி இன்டரஸ்டிங். நீ சொன்னதே இல்லை.

ம்ம்… நீங்க கேட்டதில்லை அதனால நான் சொன்னதில்லை.

ஆமா.. உண்மை தான்.. ( ஸ்மைலி )

அப்புறம்.. வீக் எண்ட் என்ன பிளான் ?

என் பொண்ணோட அஞ்சாவது பிறந்த நாள் நெக்ஸ்ட் வீக் வருது. அதுக்கு பிளான் பண்ணணும். சில ஹோட்டல்ஸ் போய் பாக்கலாம்ன்னு இருக்கோம்.

வய்ஃப் கூடவா ?

ஆமா… அவங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்கும்ல, அது மாதிரி பண்ணலாம்ன்னு பிளான். அவங்க சஜஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். எங்க வெட்டிங் ஆனிவர்சரி கூட அவளோட பிளான் படி தான் இருந்துது. தேட் வாஸ் கிரேட். அதனால அவங்க கிட்டயே இதையும் விட்டுட்டேன்.

நானும் அப்படி தான். என் ஹஸ்பன்ட் என்ன சொல்றாரோ அது தான் ஃபைனல். பட்… ஹி ஈஸ் வெரி லவ்லி.. எனக்கு என்ன புடிக்குதோ அது தான் செய்வாரு. குட்டிம்மா குட்டிம்மா ன்னு சுத்தி சுத்தி வருவாரு (ஸ்மைலி)

நம்ம பார்ட்னருக்குப் பிடிச்சதைச் செய்றதுல தான் லைஃபே இருக்கு சுடர்…

ம்ம்ம்.. தோஸ் ஆர்… ஹேப்பி மொமன்ட்ஸ். குறிப்பா பிளேயிங் வித் மை கிட்.. வாழ்க்கையிலயே ரொம்ப சந்தோசமான விஷயம்.

கண்டிப்பா… குழந்தைங்க தானே நமக்கு உசுரு மாதிரி. அதுக்கு அப்புறம் தானே மற்றதெல்லாம்.

ம்ம்…. யா… நானும் அப்படித் தான் குழந்தையைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்க முடியாது.

வாவ்.. எனக்கும் அப்படியே தான் சுடர். அவ பொறந்த நாளு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான நாள்.

ம்ம்ம். அப்போ ரெண்டாவது சந்தோசமான நாள் எது ?

அது என் பொண்ணோட முதல் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது தான். ரொம்ப ரொம்ப அற்புதமான நாள். இன்னும் என் கண்ணுக்கு முன்னடியே அவளோட பாதங்கள் நடனமாடிட்டே இருக்கு.

ம்ம்ம்… மூணாவது சந்தோசமான நாள் ?

என்னோட கவிதை ஒண்ணு பிரசுரமான நாள். ரொம்ப சந்தோசப்பட்ட நாள் அது !

உன்னோட ஃபேவரிட் டேஸ் என்னென்ன சொல்லேன்.

ஆல்மோஸ்ட் சேம். என் குழந்தை பிறந்த நாள்… அவ ஸ்கூல் போன நாள்… நான் கனடா வந்த நாள். எங்க வெட்டிங் ஆனிவர்சரி. இப்படி !

வெரி நைஸ். இப்படி குழந்தைங்க கூட குடும்பமா சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஆனந்தமான வாழ்க்கை தான். அதெல்லாம் சின்ன வயசுல தெரியல. லவ் மட்டும் தான் தெரிஞ்சுது. இப்போ குடும்பம் முன்னால வந்துடுச்சு. மற்ற எல்லாமே பின்னால போயிடுச்சு.

ஆமா சாகர். உண்மை தான். வாழ்க்கைல மிகப்பெரிய சந்தோசமே மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நாம கல்யாணம் பண்ணிக்காம இருந்த அந்த கெட்ட விஷயத்துல நடந்த நல்ல விஷயம் நமக்கு நல்ல இரண்டு குடும்பங்கள் கிடைச்சது தான். நம்ம குழந்தைங்க இடத்துல வேற குழந்தைங்களை வெச்சு நினைச்சுக் கூட பாக்க முடியல இல்லையா !

யா.. யா… நீங்க லைஃப்ல மகிழ்ச்சியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு !

கண்டிப்பா.. நான் கூட நீ ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகி, கணவன் கூட சந்தோசமா இருக்கிறதுல ரொம்ப ரொம்ப சந்தோசப்படறேன்.

ஓ.கே… போணும்… பொண்ணுக்கு லஞ்ச் டைம் வந்துடுச்சு… சீ யூ…

கண்டிப்பா.. நானும் கொஞ்சம் தூங்கறேன். டயர்டா இருக்கு… குட் நைட்…

சாகர் சேட் ஹிஸ்டரியை முழுமையாய் வாசித்து விட்டு அமைதியானான். வாசன் எதுவும் தப்பாய்ப் பேசவில்லை. எதுவும் தப்பான தகவல்களையும் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு உரையாடலை நான் நடத்தியதே இல்லை. அவனுடைய மனசுக்குள் என்னவோ செய்தது. இதுக்கு ஏன் சுடர் என்னை நட்பு வளையத்திலிருந்து விலக்கினாள் ?

வாசன் சாகரின் தோள் தொட்டான்.

மச்சி, நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. லவ்ல சில முகங்கள் உண்டு. ஒண்ணு ஐயோ நம்ம லவ் பண்ணின ஆளு நல்லா இல்லையோ, சந்தோசமா இல்லையோ அப்படீன்னு குழம்பி, குற்ற உணர்ச்சியாகி, அவங்க கிட்டே பேசிட்டே இருக்கிறது. பழைய நினைவை கிளறிக் கிளறி நிகழ்கால வாழ்க்கை நாசமா போவும். இன்னொரு வகை என்னன்னா, நாம காதலிச்ச பொண்ணோ பையனோ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா எரிச்சல் பட்டு, கட் பண்ணிட்டு போயிடறது. என்கிட்டே இருந்தால் கிடைக்கிற சந்தோசமும், நிம்மதியும் நம்ம ஆளுக்கு வேற எங்கயும் கிடைக்காது ன்னு நினைக்கிற மனநிலை அது. கிடைச்சா எரிச்சலோ, கோபமோ கொள்ளும். அதனால உண்மையை எப்பவுமே அது பேசாது. ரியாலிட்டியை நீங்க ரெண்டு பேருமே பேசிக்கிட்டதில்லை. நீங்க போலியா ஒரு வளையத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாத்திட்டிருந்தீங்க. நான் உங்க மனசுல இருந்த உண்மை உணர்வை வெளியே கொண்டு வந்தேன். இப்போ உனக்குத் தெரியும், அவ சந்தோசமான ஒரு வாழ்க்கைல இருக்கான்னு. நீயும் அப்படியே தான் இருக்கே. அதை ஏற்றுக் கொண்டா போதும் !

சாகர் அமைதியாய் இருந்தான். அவனுடைய மனதில் இருந்த குழப்பங்கள் தெளிவடையத் தொடங்கியது போல் இருந்தது. ஏன் சுடர் தன்னை நட்பு வட்டத்திலிருந்து விலக்கினாள் என்பதும் அவனுக்கு புரியத் தொடங்கியது. மௌனமாய் இருந்தான். வாசன் வழக்கம் போல அவனுடைய மௌனத்தைக் கலைத்தான்.

மச்சி.. லீவ் இட். வாழ்க்கைல நீ ஒரு தடவை காதலிச்சே. இனி வாழ்க்கையை ஒரு தடவை காதலி ! சிம்பிள். சொல்ல சாகர் புன்னகைத்தான்.

சேவியர்.
கல்கி 22 செப்டம்பர் 2013

அமரர் கல்கி சிறுகதைப் போட்டி 2013 – ல் பிரசுரத்துக்குத் தேர்வான பழைய காதலி எனும் எனது சிறுகதை

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா

பெருவிரல் உயர்த்தலில்
உணர்த்தி விடுகிறார்கள்
தேவையை.

எதிர் சந்து வரையோ
சாலைகள் கைகுலுக்கும்
சந்திப்பு வரையோ,
நெரிசல் பேருந்து
நிலையம் வரையோ
என
விண்ணப்பங்கள் வேறுபடும்.

பயணக் கட்டண பயமுறுத்தலோ
வருமானத்தின் வறுமையோ
அவசரத்தின் படபடப்போ
எதுவாகவும் இருக்கலாம்
காரணம்.

பின்னால் அமர்ந்து
கடத்திச் செல்வார்கள் என்றும்,
வழிப்பறிக்கான
வசதியான உத்தியென்றும்,
எய்ட்ஸ் ஊசி போட்டு
சாகடிப்பார்கள் என்றும்
கல்வெட்டுத் திகில் கதைகள்
மனசைக் கல்லாக்கும்.

எனினும்
ஹெல்மெட் கவசத்தையும்
தாண்டி
நிறுத்தாத வாகனத்தைத்
தொடரத்தான் செய்கின்றன
லிப்ட் பிளீஸ் கோரிக்கைகள்.

தேவர்களும்
அசுரர்களும்
ஒரே சீருடையில் அலையும்
நகரத்துச் சாலைகளில்

எனது
கிராமத்து முகமும்
சொல்லாத முகமூடிக்குள் பதுங்கியே
நில்லாமல் விரைகிறது.
ஒரு
வெற்றியின் தோல்வியாய்.

கி.மு கதை : கிதியோன், The 300 !!!

இஸ்ரயேலர்கள் சிறிதுகாலம் தங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு வந்த கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவர்களின் குணம் மாறத் துவங்கியது. அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபடவும், இஸ்ரயேலர்களின் கடவுளை நிராகரிக்கவும் துவங்கினர். தன்னை மதிக்காத இஸ்ரயேலர்களைக் கடவுளும் கைவிட்டார். அவர்கள் மிதியானியரால் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானியரின் கொடுமைக்குப் பயந்து மலைக்குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் ஒளிந்து வாழ்ந்தார்கள். மிதியானியரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்கள் இஸ்ரயேலரின் கால்நடைகள் , விளைபொருட்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர், அல்லது அழித்தனர். ஏழு ஆண்டுகள் மிதியோனியரின் அடக்குமுறைக்குள் கொடுமை அனுபவித்த இஸ்ரயேலர்கள் மனம் திருந்தி கடவுளை நாடினார்கள். கடவுள் அவர்களுடைய வேண்டுதல் ஒலிகளைக் கேட்டார்.

கடவுள் அவர்களிடம் ஒரு இறைவாக்கினரை அனுப்பினார்.

‘நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறினீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்தச் சோதனைகள்’ இறைவாக்கினர் சொன்னார்.

‘ஆம் உண்மை தான், நாங்கள் அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டோ ம். வேற்று தெய்வங்களுக்கு பலிபீடங்கள் அமைத்து பலி செலுத்தினோம். இதெல்லாம் தீமை என்பதை கடவுள் எங்களுக்குச் சொல்லியிருந்தார். நாங்கள் தான் கேட்கவில்லை. எங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காதா ? நாங்கள் மீட்படைய வழியே இல்லையா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுள் நினைத்தால் உங்கள் துயரங்களை நீக்க முடியும். அவரை மட்டும் நம்பி, அவரிடம் மன்றாடுங்கள்’ இறைவாக்கினர் சொன்னார்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாகக் கடவுளை வேண்டினார்கள். கடவுள் மனமிரங்கினார். யோவாசின் மகனான கிதியோன் மூலம் மக்களை மீட்க கடவுள் தீர்மானித்தார்.  தன்னுடைய தூதர் ஒருவரை கிதியோனிடம் அனுப்பினார். கடவுளின் தூதர் கருவாலி மரத்தின் அருகே வந்து அமர்ந்தார். அங்கே கிதியோன் மிதியானியர்களுக்குப் பயந்து தன்னுடைய தானியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘வீரனே…. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ தூதர் கிதியோனை வாழ்த்தினார்

‘இல்லை… கடவுள் எங்களோடு இல்லை. கடவுள் எங்களோடு இருந்திருந்தால் ஏன் எங்களுக்கு இத்தனை துன்பம்’ கிதியோன் விரக்தியாய்ச் சொன்னார்.

‘நீ ஏன் விரக்தியாய் பேசுகிறாய் ? கடவுள் உன்னுடைய மூதாதையர்களுக்குச் செய்த உதவிகளை நீ மறந்தாயா ?’

‘கதைகள் நினைவில் இருக்கின்றன. கடவுளைத் தான் காணோம்’

‘கதைகளா ? எகிப்தியர்களின் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் கிடந்த உன்னுடைய மூதாதையர்களைக் கடவுள் பல்வேறு அதிசய, அற்புதச் செயல்களின் மூலம் தான் மீட்டார் தெரியுமா ? செங்கடலையே இரண்டாகப் பிளந்து வழியமைத்தார் தெரியுமா ? இவைகளெல்லாம் கதைகளல்ல, உண்மைச் சம்பவங்கள் ‘ தூதர் சொன்னார்.

‘அப்படியானால் இப்போது எங்கே அந்த அதிசயச் செயல்கள் ? கடவுள் எங்களை மீண்டும் அடிமைகளாய் விட்டு விட்டாரே. எகிப்தியரிடமிருந்து மீட்டு மிதியானியர்களிடம் தானே அனுப்பி வைத்திருக்கிறார். எங்களை மீட்கவேண்டும் என்று தோன்றவில்லையா அவருக்கு ? எங்கள் கதறல் ஒலிகள் அவர் காதுகளை எட்டவில்லையா ? ‘ கிதியோன் கேட்டார்.

‘அதற்காகத் தானே உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ தூதர் சொன்னார்.

‘என்னையா ?’

‘ஆம்… உன்னைத் தான், உன் மூலமாகத் தான் கடவுள் இஸ்ரயேலர்களை மிதியானியரிடமிருந்து மீட்கப் போகிறார்.’

‘என்ன விளையாடுகிறீர்களா ? நான் என் குடும்பத்திலேயே மிகவும் சிறியவன். என்மூலமாக மீட்பா ? நல்ல வேடிக்கை தான். நான் இதற்குத் தகுதியானவன் அல்ல’

‘இல்லை நீ தான்.. நீ ஒருவன் இதற்குத் தகுதியானவன். நீ தனியாகவே சென்று மிதியானியரைத் தோற்கடிப்பாய். கடவுள் உன்னோடு இருப்பார்’ தூதர் அழுத்தமாய்ச் சொன்னார்.

‘தூதரே, நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நான் மிதியானியரோடு போரிடவேண்டும் என்கிறீர்களா ?’ கிதியோன் கேட்டார்.

‘ஆம்… உன் தலைமையில் ஒரு படையைத் திரட்டி நீ மிதியானியருக்கு எதிராகப் போரிடவேண்டும். கடவுள் உன்னை வழி நடத்துவார். ‘ தூதர் சொன்னார்.

‘தூதரே…ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உடனே வருகிறேன். எங்கும் போய்விடாதீர்கள்’ கிதியோன் தூதரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினார். வீட்டிற்குச் சென்று சில புளியாத அப்பங்களையும், கொஞ்சம் இறைச்சியையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

‘நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருந்தால், நீர் உண்மையிலேயே கடவுளின் தூதனாக இருந்தால், எனக்கு ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே கிதியோன் அப்பங்களையும் இறைச்சியையும் தூதரின் முன்னால் வைத்தார்.

‘ நீ கொண்டு வந்திருக்கும் இந்த அப்பங்களையும், இறைச்சியையும் வைத்தே நான் உனக்கு ஒரு இறை அடையாளத்தைக் காட்டுகிறேன். கொஞ்சம் அப்பத்தையும், இறைச்சியையும் எடுத்து அந்தப் பாறை மீது வை.’ தூதர் சொன்னார். கிதியோன் அவ்வாறே செய்தார்.
தூதர் அந்த அப்பங்களையும், இறைச்சியையும் தன்னிடமிருந்த கோலின் நுனியால் தொட்டார். உடனே நெருப்பு சட்டென்று தோன்றி அந்தப் பொருட்களை எரித்தது.

கிதியோன் பரவசமானார். கடவுள் நெருப்பை அனுப்பிப் பலி பொருட்களை எடுத்துக் கொண்டதை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

‘இப்போதாவது நம்பு…’ சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்தார் ஆண்டவரின் தூதர். கிதியோன் பயந்து போனார்.
‘ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். கடவுளின் தூதரை நான் நேருக்கு நேராய் சந்தித்தேனே…’ என்று பரவசமடைந்தார்.

அன்று இரவே கிதியோன் அன்னிய தெய்வங்களுக்காய் எழுப்பப்பட்டிருந்த பலிபீடங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார். இஸ்ரயேலரின் கடவுளுக்காய் அவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, அங்கே ஒரு கொழுத்த மாட்டை பலிசெலுத்தினார்.

மறுநாள் மக்கள் தங்கள் தெய்வங்களின் பலிபீடங்கள் தகர்ந்து கிடப்பதைக் கண்டு ஆவேசமடைந்தனர்.

‘இந்தக் கொடுமையைச் செய்த பாவி யார் ? அவனைக் கொல்லவேண்டும்’ என்று மக்கள் கோபமாகச் சுற்றித் திரிந்தனர்.

‘அது கிதியோன் தான்… இரவில் அவன் தன்னுடைய ஆட்களுடன் வந்து பலிபீடம் கட்டுவதைக் கண்டோ ம்…’ அந்தப் பக்கமாய் வசித்து வந்த மக்கள் சொன்னார்கள்.

‘அதெப்படி கிதியோன் எங்கள் கடவுளின் பலிபீடங்களை இடிக்கலாம். அவனை அழிக்காமல் விடப்போவதில்லை’ ஆவேசமடைந்த மக்கள் கிதியோனின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

‘கிதியோனே… வெளியே வா… உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்கள் கடவுளர்களை அவமானப் படுத்துவாய் ?’ மக்கள் கூச்சலிட்டனர்.

கிதியோனின் தந்தை வெளியே வந்தார். ‘கிதியோன் இங்கே இல்லை… என்ன விஷயம் ? ஏன் கூச்சலிடுகிறீர்கள் ?’

‘ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாயா ? எங்கள் கடவுளர்களின் பலி பீடங்களை உன் மகன் இடித்துத் தகர்த்திருக்கிறான். அவனைக் கொல்லவேண்டும்’

‘யார் உங்கள் கடவுள் ? ‘

‘பாகால் !… பாகாலின் பலிபீடத்தையும், அதன் அருகே நின்றிருந்த அசேராக் கம்பத்தையும் உன் மகன் அழித்திருக்கிறான்’ மக்கள் கத்தினார்கள்.

‘பாகால் !! அவன் என்ன பெரிய கடவுளா ? ‘ கிதியோனின் தந்தையும் கோபமானார்.

‘ஆம்.. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்’ மக்கள் சொன்னார்கள்.

‘அந்த பாகால் பெரிய சக்திவாய்ந்தவனாக இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும். நீங்கள் அவனைக் கொல்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் கையாலாகாதவர் என்று தான் அர்த்தம். போங்கள்… உங்கள் கடவுளிடம் சொல்லி என் மகனைக் கொல்லச் சொல்லுங்கள். உங்கள் கடவுளுக்கு வீரம் இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும்’ கிதியோனின் தந்தையும் பதிலுக்குக் கத்தினார்.

‘பாகாலின் கையால் அவன் சாகப் போவது உறுதி. அவனைப் பாகால் அழிப்பான் என்பதைக் குறிக்கும் விதமாக இனிமேல் அவனை நாங்கள் எருபாகால் என்று அழைப்போம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கலைந்து போனார்கள்.

கிதியோன் மக்களின் கையிலிருந்து தப்பினான். ஆனாலும் இன்னும் அவனுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘ இது ஒருவேளை கடவுளின் அழைத்தல் இல்லையென்றால் என்ன செய்வது ? கடவுள் தான் தூதரை அனுப்பினாரா ? இல்லை ஏதேனும் கண்கட்டு வித்தையா ?’
கிதியோனின் மனம் பல்வேறு கேள்விகளால் நிறைந்தது.

அவன் கடவுளை நோக்கி,’ கடவுளே… நீர் தான் என்னை அழைத்தீர் என்பதற்கு எனக்கு இன்னுமொரு அடையாளத்தைக் காட்டும். நான் என்னுடைய கம்பளி ஆடையை இன்று இரவு வெட்டவெளியில் வைப்பேன். என்னை அழைத்தது நீர் தான் என்றால் என்னுடைய ஆடையில் மட்டும் காலையில் பனி நிறைந்திருக்கட்டும். மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கட்டும்’ என்றார். சொல்லிவிட்டு அன்று இரவே தன்னுடைய கம்பளியைக் கழற்றி வெட்டவெளியில் வைத்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவருடைய கம்பளியில் மட்டும் பனி நிறைந்திருந்தது. தரை உலர்ந்து கிடந்தது.

‘ஒருவேளை தரையில் விழுந்த பனி உலர்ந்து போயிருக்குமோ ? கம்பளியானதால் மட்டும் உலராமல் ஈரமாய் இருக்கிறதோ ? இது இயற்கையாகவே நடக்கும் சாதாரண நிகழ்வோ ?’ கிதியோனின் மனம் மீண்டும் சந்தேகப் பட்டது.

அவன் மீண்டும் கடவுளை நோக்கி, ‘கடவுளே இன்னும் எனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் செய்து காட்டும். இன்றைக்கும் நான் என் கம்பளியை இங்கே வைத்து விட்டுப் போவேன். நாளைக் காலையில் நான் வந்து பார்க்கும்போது கம்பளியில் மட்டும் பனி இருக்கக் கூடாது. தரையெங்கும் பனி நிறைந்திருக்க வேண்டும். உம்மில் நம்பிக்கை வைக்கக் கடைசியாக எனக்கு இந்த அடையாளத்தைச் செய்து காட்டும்’ என்றான்.

மறுநாள். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. முந்தைய நாள் உலர்ந்து கிடந்த தரை இப்போது பனியில் குளித்து தொப்பலாய்க் கிடந்தது. புற்களின் தலைகளிலெல்லாம் பனிக் கூடுகள். ஆனால் கிதியோனின் கம்பளி மட்டும் உலர்ந்து கிடந்தது.

‘கடவுளே… என்னை அழைத்தது நீரே ! உம்மை நம்புகிறேன்’ கிதியோன் மண்டியிட்டு கடவுளிடம் பேசினான்.

மிதியானியருடம் போரிட கிதியோன் தயாரானான். அவன் மக்களை பெருமளவில் திரட்டி கடல் அலையென மிதியானியரை நோக்கிப் படையெடுத்தான். கடவுள் அவனை அழைத்தார்.
‘கிதியோனே… நீ இத்தனை மக்களை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். வெற்றி பெற்றபின் அவர்கள் கர்வம் கொள்வார்கள். மக்கள் சக்தியே வென்றது என்று அவர்கள் ஆணவம் அடைவார்கள். அவர்களில் சிலர் மட்டும் போதும் உனக்கு. அப்போதுதான் என்னுடைய வலிமையை மக்கள் உணர்வார்கள்’ கடவுள் சொன்னார்.

கிதியோன் கடவுளின் வார்த்தையின் படி மக்களை நோக்கி,’ உங்களில் யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை. போரில் ஆர்வம் இல்லாதவர்களும், பயப்படுபவர்களும் உடனே திரும்பிப் போய்விடுங்கள்’ என்றான்.

மக்களில் முக்கால் வாசி  பேர் உடனே திரும்பி நடந்தார்கள். மிச்சமிருந்த கூட்டம் சுமார் பத்தாயிரம் இருந்தது.

கடவுள் மீண்டும் கிதியோனிடம், ‘இதுவும் மிக அதிகமான கூட்டம் தான். இவர்களை அதோ அந்த நீர் நிலைக்கு அழைத்துப் போய் தண்ணீர் குடிக்கச் சொல். யாரெல்லாம் தண்ணீரை கைகளில் அள்ளிக் குடிக்கிறார்களோ அவர்களை தனியே நிற்க வை. யாரெல்லாம் மண்டியிட்டுக் குடிக்கிறார்களோ அவர்களை திரும்ப அனுப்பிவிடு’ என்றார்.

கிதியோன் மக்களை நோக்கி,’ நீங்கள் எல்லோரும் அந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.

அவர்களில் பெரும்பாலானோர்கள் மண்டியிட்டுத் தண்ணீர் குடித்தார்கள். வெறும் முந்நூறு பேர் மட்டுமே கைகளில் நீரை அள்ளிக் குடித்தார்கள்.
கிதியோன் கலங்கினார். ‘கடவுளே… மிதியானியரை அழிக்க வெறும் முந்நூறு பேர் போதுமா ?’.

கடவுள் அவரிடம் ‘போரிடப் போவது முந்நூறு பேர் என்றால் தோல்வி நிச்சயம் ! ஆனால் போரிடப் போவது முந்நூறு பேர் அல்லவே ! நான் ஒருவன் மட்டுமல்லவா ? அதனால் வெற்றி நிச்சயம் தான். கவலையை விடு’ கடவுள் பதிலளித்தார்.

அன்று இரவு கிதியோனின் நண்பன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு வட்டமான கோதுமை அப்பம் சுழன்று சென்று மிதியானியரின் கூடாரத்தை இடித்துத் தகர்த்தது. நண்பன் கிதியோனிடம் ஓடோ டி வந்தான்.

‘நண்பா… நீ வெற்றி பெறும் வேளை வந்துவிட்டது ! உன்னுடைய வாள் தான் அந்த அப்பம். நீ அவர்களை துரத்தும் நேரம் வ்ந்துவிட்டது என்பதைத் தான் கடவுள் என் கனவு வாயிலாகச் சொல்லியிருக்கிறார்’ நண்பன் சொன்னான்.

‘கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். நமக்கு நிச்சயம் வெற்றிதான். நாம் போருக்குத் தயாராவோம்’ கிதியோன் சொன்னான்.

கிதியோன் அந்த முந்நூறு பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்தார். அவர்களில் ஒவ்வொருவர் கைகளிலும் ஒவ்வொரு நெருப்புப் பந்தமும், ஒரு காலிப் பானையும், ஒரு எக்காளமும் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.

நள்ளிரவில் எல்லோரும் கைகளில் நெருப்புப் பந்தத்தோடும், காலிப் பானைகளோடும் மிதியானியர் கூடாரமடித்திருந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

கிதியோன் திடீரென்று எக்காளத்தை எடுத்து ஊதினார். உடனே மிதியானியர்களைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு எக்காளம் ஊதினார்கள். பெரும் சத்தத்தைக் கேட்ட மிதியானியர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அப்போது கிதியோனின் வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த பானையை ஒரே நேரத்தில் உடைத்து பெரும் சத்தம் எழுப்பினார்கள். மிதியானியர்கள் இதென்ன சத்தம் என்று அதிர்ந்து போய் நிமிர்கையில் கிதியோனின் வீரர்கள் எல்லோரும் ஒரே குரலாக

‘ஆண்டவருக்காக…. கிதியோனுக்காக’ என்று சத்தமிட்டார்கள். கிதியோனின் திட்டம் வெற்றியடைந்தது. மிதியானியர்கள் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். கடவுள் மிதியானியர்களுக்குள்ளேயே திடீர்க் கலகத்தை உண்டாக்கினார். இரவில் மிதியானியர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட ஆரம்பித்தார்கள்.

மிதியானியர்கள் தங்களுக்குள்ளேயே வெட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சிதறி ஓட, கிதியோன் மாபெரும் வெற்றி பெற்றார். கடவுளின் வழிகாட்டுதல் அவரை வெற்றி வீரனாக்கியது. மக்கள் எல்லோடும் அவரிடம் வந்து,’ இனிமேல் நீங்கள் தான் எங்களை ஆளவேண்டும்.. வாருங்கள். எங்கள் அரசராகுங்கள்’ என்று அழைத்தார்கள்.

அவரோ அவர்களிடம்,’ மீண்டும் தவறிழைக்காதீர்கள்.. கடவுள் ஒருவரே அரசர். அவர் சொல்வதை மட்டுமே கடைபிடித்து வாழுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தமிழிஷில் வாக்களிக்க…

கி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.

jericho_walls_wide_view

மோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.

யோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.

இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.

யோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்டும். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.

‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் ? எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் ? நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன ? மக்கள் எப்படிப்பட்டவர்கள் ? என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

மதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.

‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’

‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.

‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.

‘அப்படியா ? அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.

உளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.

வந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.

‘நீங்கள் யார் ? உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.

‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.

இதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.

‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ?’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.

‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா ? அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.

‘அவர்கள் இப்போது எங்கே ?’

‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.

‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.

‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’

‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் ?’

‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’

‘இஸ்ரயேலரின் உளவாளிகளா ? எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ?’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.

‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’

‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா ?’ ராகாப் கேட்டாள்.

‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.

‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவியிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’

‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.

‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.

‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.

‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.

‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’

‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.

அவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.

‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.

‘கவலைப்படாதே.. எங்களைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.

தப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.

‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ?’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.

‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.

‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே ? இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.

‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.

‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.

‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.

கடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.

என்ன ஆச்சரியம் ! யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.

மக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந்திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.

அவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன ? என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.

எரிகோவை எப்படிப் பிடிப்பது ? என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.

யோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.

‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ?’ யோசுவா பணிவுடன் கேட்டார்.

‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.

‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.

யுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.

ஏழாவது நாள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.

‘ஆர்ப்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.

இதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ! ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.

எரிகோ, இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாயிற்று.

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்.

கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்

16

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.

பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.

பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’

‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.

‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.

பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’

161பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.

வீரர்கள்  மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,

‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.

‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.

பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.

‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.

பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.

கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.

மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.

உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.

கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.

‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும்  பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.

பாலாக்கின் அரண்மனை.

பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம்,  உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.

‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.

‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.

உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.

பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்

கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது

mozes_slangen1இஸ்ரயேல் மக்களின் கானானை நோக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் காதேஸ் என்னும் ஊரை வந்தடைந்தார்கள். அந்த நாட்டில் ஏதோம் என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். இஸ்ரயேல் தலைவர்கள் சிலர் ஏதோம் மன்னனிடம் சென்றனர்.

‘அரசே வணக்கம்’

‘நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ?’

‘நாங்கள் இஸ்ரயேல் குலத்தினர். எகிப்து நாட்டில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாய் இருந்த எங்களைக் கடவுள் மீட்டு வழி நடத்தி வருகிறார். இப்போது நாங்கள் கானானை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.’

‘ஓ.. கடவுள் உங்களை மீட்டாரா ? நல்லது நல்லது ? அதை ஏன் என்னிடம் வந்து தெரிவிக்கிறீர்கள் ?’ ஏதோம் மன்னன் நக்கலாய்ச் சிரித்தான்.

‘உங்கள் நாடு வழியாகக் கடந்து போனால் நாங்கள் விரைவிலேயே கானானை அடைந்து விடுவோம். அதனால் தான் உங்கள் அனுமதி கேட்டு வந்திருக்கிறோம்’

‘நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் ?’

‘நாங்கள் பல இலட்சம் பேர் இருக்கிறோம்’

‘பல இலட்சம் மக்கள் என்னுடைய தேசம் வழியாகக் கடந்து போனால்… என்னுடைய தேசத்தின் விளைச்சல்கள் எல்லாம் மிதிபட்டு அழிந்து போகும் என்பது உங்களுக்குத் தெரியாதா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன்’ மன்னன் சொன்னான்.

‘அரசே. உங்கள் தானியங்களில் எங்கள் கைவிரல் நுனிகூடப் படாது. உங்கள் வளங்கள் எதையும் எங்கள் கால்கள் மிதித்து அழிக்காது. இதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம். மறுக்காமல் எங்கள் விண்ணப்பத்தை அங்கீகரியுங்கள் ‘ இஸ்ரயேல் தலைவர்கள் பணிந்தார்கள்.

‘இல்லை. நான் முடியாது என்றால் முடியாது தான். என் முன்னால் நிற்காதீர்கள். என் நாட்டில் எந்த இஸ்ரயேலனின் காலும் நுழையக் கூடாது. இது அரச ஆணை’ ஏதோம் மன்னன் உறுதியாகச் சொன்னான். இஸ்ரயேலர்கள் வருந்தினர்.

மோசே மக்கள் கூட்டத்தைப் பார்த்து,’ வருந்தாதீர்கள். நாம் மனம் தளராமல் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிப்போம். நேரடியாகச் செல்ல முடியாதெனில் சுற்றுப் பாதை வழியாகச் செல்வோம். வருந்தாதீர்கள். வாருங்கள் ‘ என்றார்.

‘பயணத்திலேயே எல்லோரும் மடிந்து போகப் போகிறோம்…. ‘

‘கடவுளாம் கடவுள்… நம்முடைய பணிகளை கடினப்படுத்திக் கொண்டே இருக்கின்ற கடவுள்…’

‘நாம் எகிப்திலிருந்து வந்தது தான் மிகப் பெரிய தவறு….’

மக்கள் அனைவரும் மீண்டும் கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முணுமுணுத்தார்கள். கடவுள் மீண்டும் அந்த மக்கள் மீது கோபமடைந்தார்.

அவர்கள் ஒரு மலைப்பாதை வழியாகச் சென்றபோது. கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களுக்கு எதிராக அனுப்பினார்.

திடீரென கொள்ளிவாய்ப்பாம்புகள் மலையிடுக்குகளிலிருந்தும், மரங்களிலிருந்தும் வெளிவந்து இஸ்ரயேலரின் கூட்டத்தில் புகுந்தன. மக்கள் பயந்துபோய் அங்கும் இங்கும் ஓடினார்கள். பாம்புகள் விடவில்லை. அவர்களில் பலரை அவை துரத்தித், துரத்திக் கடித்தன. அந்தப் பாம்புகள் கொடிய விஷம் உடையவை. பாம்புக் கடி பட்டவர்கள் எல்லோரும் இறந்து போனார்கள்.

மக்கள் அதிர்ந்தார்கள். திடீர்த் திடீரெனத் தோன்றி கடித்து விட்டு ஓடி மறையும் பாம்புகளை என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். அவர்கள் மோசேயிடம் ஓடிச் சென்று,

‘தலைவரே… எங்களை மன்னியும்…. நாங்கள் தான் உம்மையும் கடவுளையும் பழித்துப் பேசினோம். அதனால் தான் கடவுள் பாம்புகளை அனுப்பியிருக்கிறார். எங்கள் மரணம் இப்படி நிகழ்வது கொடுமையானது. எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்து விட்டோ ம். எங்களை மன்னியுங்கள். கடவுளிடம் மன்றாடி இந்தக் கொடிய பாம்புகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ மக்கள் கதறினார்கள்.

‘எத்தனையோமுறை கடவுள் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார். எத்தனையோ முறை உங்கள் முணுமுணுப்புகளை மன்னித்திருக்கிறார். அப்படியிருந்தும் நீங்கள் திருந்தவில்லை… ‘ மோசே எரிச்சல் பட்டார்.

‘தவறு தான். இனிமேல் அப்படி நடக்கமாட்டோ ம். நீர் தான் கடவுளிடம் பேசி எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ மக்கள் மிகவும் பணிவுடன் சொன்னார்கள். மோசே ஒத்துக் கொண்டார். அன்றைக்கே அவர் தனிமையில் கடவுளிடம் பேசினார். கடவுள் மோசே கேட்பதை எல்லாம் நிறைவேற்றுபவராக இருந்தார். எனவே இந்த வேண்டுதலையும் அவர் நிராகரிக்கவில்லை. அவர் மோசேயிடம்

‘உன் நிமித்தம் நான் இந்த மக்களை மன்னிக்கிறேன். நீ போய் வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்து அதை ஒரு கோலில் கட்டி உயர்த்திக் காட்டு. பாம்பு கடி பட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பின் சிலையைப் பார்த்தால் பிழைப்பார்கள்’ என்றார்.

மோசே உடனே சென்று வெண்கலத்தினால் ஒரு பாம்பின் உருவத்தைச் செய்தார். அதை ஒரு கோலில் கட்டி உயரமான மலை ஒன்றில் ஏறி அதை உயர்த்திக் காட்டினார்.

‘பாம்பு யாரையேனும் கடித்திருந்தால் உடனே இந்த வெண்கலப் பாம்பைப் பாருங்கள். பிழைப்பீர்கள்’ மோசே உரத்த குரலில் சொன்னார்.

மக்கள் கூட்டத்தினரிடையே பாம்பு கடி பட்டவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் அந்த வெண்கலப் பாம்பைப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம். அந்தப் பாம்பின் உருவத்தைப் பார்த்ததும் கடிபட்டவர்கள் உடனே நலம் பெற்று எழுந்தார்கள். அவர்களுடைய வலியும், சோர்வும் எல்லாம் காணாமல் போயின. அரவம் தீண்டிய அவர்களை மரணம் தீண்டவில்லை.

மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். விலக்கி வைத்திருந்த அவர்களுடைய கடவுள் நம்பிக்கை இதனால் துலக்கி வைக்கப்பட்டது.

===============================================================

முந்தைய கி.மு விவிலியக் கதைகளைப் படிக்க

===============================================================

 1. உலகம் உருவான கதை

2. முதல் பாவம்

3. முதல் கொலை

4. மொழிகள் உருவான கதை

5. நோவாவின் பேழை

6. விசுவாசத்தின் தந்தை ஆபிர(க)஡ம்

7 ஈசாக்கின் திருமணம்.

8 சோதோம் நகரம் சேதமாகிறது.

9 இரு சகோதரர்கள்.

10. யாக்கோபின் திருமணம்

11. அழகு தேவதை தீனா

12. அடிமை ஆளுநன்.

13. மோசேயின் விடுதலைப் பயணம்

14. கானானை நோக்கிய பயணம்.