தர்பார் : ஒரு விரிவான விமர்சனம்

தர்பார் எனும் இந்தி டப்பிங் திரைப்படத்தை முதல் நாளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதொன்றும் புதிதல்ல. ஏதோ விமர்சனம் எழுதுவதற்காக அலாரம் வைத்து எழுந்து போய் படம் பார்க்கும் இந்த டிஜிடல் தலைமுறை மனிதன் அல்ல நான். ரத்தமும் சதையும் போல‌ உள்ளுக்குள் ரஜினியிசமும் ஊறிப் போன அக்மார்க் ரஜினி ரசிகன். அவர் தொடங்கியும் தொடங்காமலும் இருக்கின்ற அரசியலோ, பேசியும் பேசாமலும் இருக்கின்ற சமூக சிந்தனைகளோ இந்த விமர்சனத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது முன் குறிப்பு.

மும்பையில் இருக்கின்ற அத்தனை தாதாக்களையும் உண்டு இல்லையென துவம்சம் செய்யும் ஒரு வெறிபிடித்த வேங்கையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதை விட ஒரு அட்டகாசமான கதாபாத்திரம் ரஜினிக்கு யாரால் கொடுக்க முடியும். “அவரு யாரையோ தேடறாரு.. யாருன்னு தான் தெரியல” என ஆங்காங்கே பில்டப்கள் ஏற்றப்படுகின்றன. என்கவுண்டர்கள் என்ட்லெஸ் ஆகப் போனபோது வழக்கம் போல ஒரு பாப் கட்டிங் மனித உரிமை அதிகாரி வருகிறார். அவரையும் உருட்டி மிரட்டி அறிக்கையில் கையெழுத்து வாங்க வைக்கிறார் ஆஅ, அதாவது ஆதித்ய அருணாச்சலம், ரஜினி.

அதன் பிறகு மும்பை, நாசிக், கோவா என பல இடங்களில் போதை கும்பலையும், குழந்தை கடத்தும் கும்பலையும் கழுவி சுத்தம் செய்கிறார். அந்த களையெடுக்கும் படலத்தில் ஒரு முக்கியமான நபர் கொல்லப்படுகிறார். அந்த நபருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒருவர் குடுமியோடு வந்து தலைவரை அழிக்கப் பார்த்து, வேறு வழியில்லாமல் அழிந்து போகிறார். இப்படி ஒரு மாஸ் மசாலா படத்தின் மானே தேனே பொன்மானே என காதல், அப்பா மகள் சென்டிமென்ட், நகைச்சுவை என மேலாக்கில் தூவியிருக்கிறார்கள். இருந்தாலும் கடைசியில், “சாருக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று தான் பார்வையாளர்கள் காதில் கேட்கிறது.

ரஜினியின் முகமும், பார்வையும், ஸ்டைலும், சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை மயிர்க்கூச்சரியச் செய்கின்றன. அதன்பின் அந்த மயிர் கூச்சரிய மறந்து தூங்கி விடுகிறது என்பது தான் சோகம். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைன்ட் என்பது போல, ரஜினி இப்படி முழுக்க முழுக்க அட்டகாசமான பங்களிப்பு செய்தும் படத்தில் ஒரு திருப்தி வரவில்லை என்பது தான் உண்மை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதாவது வெந்து கொண்டிருக்கின்ற பானையிலிருந்து ஒரு அரிசியை எடுத்து சாப்பிட்டு பாத்து சோறு வெந்துதா, வேகலையா, வேகுமா என்பதையெல்லாம் கண்டுபிடிக்கும் பாட்டிகால வழிமுறை அது. இப்பல்லாம் குக்கர் விசிலடிக்காவிட்டால் நமக்கு சோறு வெந்துதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அது அப்படியே இருக்கட்டும். சினிமாக்களைப் பொறுத்தவரையில் ஹீரோ அறிமுகமாகும் காட்சியை வைத்து அந்த படம் எப்படிப் போகும் என்பதைக் கணிக்கலாம்.

இந்தப் படத்தில் ஊரிலுள்ள அத்தனை வில்லன்களும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியோடு ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். அங்கே ரஜினி வருவார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. வருகிறார். வானத்திலிருந்து வருகிறார், ஸ்டைலாக, ஸ்லோவாக‌. நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் அவரை நோக்கிச் சீறிப் பாய்ந்தாலும் அவரது ஸ்லோமோஷனை விட வேகமாக அவற்றால் பயணிக்க முடியவில்லை. தோற்றுப் போய் வேறெங்கோ முட்டி மோதி கீழே விழுந்து கதறி அழுகின்றன. இருநூறு கைத்துப்பாக்கிக்கு எதிராக மெஷின் கண்ணை எடுத்தால் அது ஹீரோ, அதுவே வெறும் வாளை எடுத்தால் மாஸ் ஹீரோ. ரஜினி வாளை எடுக்கிறார், எல்லாருடையை வயிற்றையும் கிழிக்கிறார். ஸ்டைலாக செயரில் உட்கார்ந்து சிரிக்கிறார். வில்லன்களெல்லாம் ஓரமாய், ஏகமாய்ப் பயந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ரசிகர்களும் தான்.

அப்படிப் பதம் பார்த்ததால் தான், படம் முழுவதும் நம்மைப் பதம் பார்க்கிறது திரைக்கதை. படத்தில் தொடக்கத்திலேயே மகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொன்னபிறகு, அந்த கதாபாத்திரத்தின் மீதான சஸ்பென்ஸ் உடைந்து விடுகிறது. அதனாலேயே ஜாலியான அப்பா மகள் காட்சியைக் கூட அனுதாபத்தோடு பார்க்கும் மனநிலை நமக்கு வந்து விடுகிறது.

அதேபோல, வில்லன் யார் என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது, ஆனால் பாவம் ஆளானப்பட்ட ஆதித்ய அருணாச்சலத்துக்கு இந்த மேட்டரை யாரும் சொல்லவில்லை. அவர், ‘யாரோ ஒருத்தர்’ அவரு இப்படியா ? அப்படியா என்றெல்லாம் கேட்கும்போது தியேட்டரில் பலர் வெண்ணிற ஆடை மூர்த்தியாய் மாறி உதட்டை உருட்டியதைக் கேட்க முடிந்தது.

நான் மும்பைக்கு போகணும்ன்னா மூணு கண்டிஷன் என அமர்க்களமாய் ஆரம்பிக்கிறார் ரஜினி. ஒன்று, வேலையை முடிக்காம பாதில‌ வரமாட்டேன். ரெண்டு, யாராய் இருந்தாலும் விடமாட்டேன். மூணு, தாடியை எடுக்கமாட்டேன். அப்படியே நான்காவதாக, “பேன்டை இன் பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருக்கலாம் என தொடர்ந்து வருகின்ற காட்சிகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஒரு ரஜினி ரசிகனாக ரஜினியை வைத்துப் படமெடுப்பதற்கும், ரஜினி ரசிகர்களுக்காகப் படமெடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டை பேட்டையும், தர்பாரும் நமக்குப் புரிய வைக்கின்றன.

ஒரு கட்டத்தில் இது சிங்கம் 4 படமா ? இதை இயக்கியது ஹரியா எனும் சந்தேகமே வந்து விடுகிறது. சந்தேகம் வந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தப் படத்தில் வருவது போல சில காட்சிகளும் வந்து வியக்க வைக்கிறது. சந்தோஷ் சிவன் போன்ற ஜாம்பவான்களுக்கு இந்தப் படத்தில் வேலை குறைவு. குறைந்தபட்சம் புதுமையாய் எதையும் சிந்தைக்க வேண்டிய வேலை சுத்தமாய் இல்லை.

பவர்புல் வில்லன் இல்லாத ரஜினி படம் என்றைக்குமே வியக்க வைக்காது. இந்தப் படத்திலும் வில்லன் பெரிய சைஸ் புஸ்வாணம். சுனில் ஷெட்டியைச் சுற்றி டான்கள் முதியோர்க் கல்வி ஸ்கூல் மாணவர்கள் போல அமர்ந்திருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் போல உணர்ச்சியற்ற முகபாவனையோடு மிரட்ட நினைக்கிறார் அவர். ஆனால் அவருக்குக் கொடுக்கப்படும் காட்சிகள் ஸ்பெஷல் வில்லனை சாதா வில்லனாக மாற்றித் துவைத்துக் காயப் போடுகிறது.

வலியண்ணன் தோட்டத்து வேலியை, பெருச்சாளிகள் ஓட்டை போடுவது போல தேச எல்லையை கட்டிங் பிளேயர் வைத்து கட்பண்ணி இந்தியாவுக்குள் வருகிறார் வில்லன். டிரோன்களை வைத்து அட்சர சுத்தமாய் மனிதனை ஸ்னேன் பண்ணி சுடுகின்ற இந்த ஹைடெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் காலத்தில், பட்டனை அமுக்கினா கத்தி விரியும் என ஒரு சிறுபிள்ளை விளையாட்டை நடத்துகிறார். அந்த கத்தியை ஒரு சோபாவில் குத்தி கிழித்து, செய்முறை விளக்கமும் சொல்கிறார். ஒரு பாழடைந்த பில்டிங்கில் போனதும், அட இங்கே செம பாதுகாப்பு என்கிறார். இவரையெல்லாம் எப்படி சர்வ தேசத்து போலீஸ்படையும் தேடித் தேடித் தோற்றுப் போச்சு என்பது ஹரிக்கே விளக்கம், சாரி முருகதாஸ் இல்ல ?

கடைசிக் காட்சியில் வில்லன் தப்பித்துப் போகிறான். ஐயோ, எங்கே போனான்னு தெரியலையே என ஹீரோ டென்ஷன் ஆகிறார். அப்போ வில்லனே கூப்பிட்டு, தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்கிறார். ஹீரோ ஒண்டிக்கட்டை என்பதால், செத்துப் போன போலீஸ்காரங்க குடும்பங்களை பணையக் கைதிகளாய்ப் பிடித்து வைத்திருக்கிறார். அப்புறம் என்ன, நூறு இள வில்லன்களை கத்தியை வைத்தே வேட்டையாடிய‌ ரஜினி, கிழ வில்லன் ஒருவரை ஒற்றைக்கு ஒற்றை வேட்டையாடுவது பெரிய விஷயமா என்ன ?

ரஜினி படங்களிலேயே பார்க்க முடியாத ஒரு அதிசயம், அவரது போலீஸ் படையில் கூடவே நடக்க ஒரு இளம் பெண் போலீசை சேர்த்திருப்பது. ஐபிஎல் ஆட்டத்துக்கு சீர் லீடர்ஸ் தேவைப்படுவது போல, ஆதித்ய அருணாச்சலத்தின் ஆட்டத்திற்கும் ஒரு சீர்லீடர் தேவைப்பட்டிருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும், எழுபது வயசுல தலைவர் இதெல்லாம் பண்றாருல்ல என்கிறார்கள். ஏதோ எழுபது வயசுல அவரு இதையெல்லாம் பண்ணணும்ன்னு நாம கம்பல் பண்ணின மாதிரி.

ரொம்ப சாரி, நயந்தாரா ந்னு ஒரு நடிகையும் இந்தப் படத்துல இருக்காங்க. மறந்துட்டேன். யோகிபாபு உண்மையிலேயே சில ஒன் லைனர்களில் வசீகரிக்கிறார். ‘நீயெல்லாம் பையனா ?’ , ‘உன்னை விட பெரியவன்னா போதி தர்மனை தான் புடிக்கணும்’ என்றெல்லாம் சகட்டு மேனிக்கு தலைவரை அவர் கலாய்ப்பது ரசிக்க வைக்கிறது. ஆனா, ‘உன் வயசுக்கு’ நயந்தாரா ஒரு கேடா என அவளோட அண்ணன் கேக்கும்போ பாவமா இருக்கிறது. எழுபது வயசுல இவ்ளோ கஷ்டப்படறாருல்ல, கன்சிடர் பண்ணினா என்னவாம் ?

படத்தில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ், உண்மையிலேயே கலங்க வைக்கிறார். அவரது கண்களும் நடிக்கின்றன. அவர் நடிக்கும்போது தலைவர் போட்டி போட்டு நடித்து கஷ்டப்பட வேண்டாமென அவரை படுக்க வைத்து விடுகிறார்கள். பாவம் எழுபது வயசாகுதுல்ல ?!

பல காட்சிகள் சட்டென ஆரம்பித்து சடக்கென முடிந்து விடுகின்றன. உதாரணமாக கைதிகளைக் கொண்டு வில்லனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் காட்சி. பேச ஆரம்பிச்சு ஒரு நிமிசத்துல நேரடியாக போலீஸ் பட்டாளம் வில்லனின் இடத்தை முற்றுகையிடுகின்றன. காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்க கிடைக்கின்ற க்ளூ எல்லாம் ராஜேஷ்குமாராக வேண்டுமென நினைத்து பள்ளிப் பிள்ளைகள் எழுதிப் பார்க்கும் துப்பறியும் கதை போல இருந்தது. அதிலும், மூக்கில வெள்ளையா இருந்துச்சு… ஓ.. அப்போ கோகைன்… என்று சொல்லும்போது, ஷப்ப்பா… என்றிருக்கிறது.

இரண்டு காட்சிகள் முருகதாஸ் டச்சுடன் இருந்தன. ஒன்று மந்திரியின் மகளைக் கண்டுபிடித்த பின்பும், அதைச் சொல்லாமல் அவளைத் தேடும் சாக்கில் அவர் நடத்துகின்ற வேட்டை. இன்னொன்று வில்லன், பொதுமக்களைக் கொண்டே போலீஸை வேட்டையாட வைக்கும் காட்சி. இரண்டுமே அட போட வைத்தன.

ரயில் நிலைய சண்டைக்காட்சி ‘சிறப்பு, வெகு சிறப்பு’ பாணியில் வியக்க வைத்தது. சில இடங்களில் ரஜினியே அடுத்த தலைமுறை நடிகர்களின் மேனரிசத்தைச் செய்தது வியக்க வைத்தது. ரசிக்கவும் வைத்தது.

அனிருத் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ரசிகர்களுக்கு உற்சாகமே இல்லாமல் போயிருக்கும். ஒண்ணுமே இல்லாத வாணலியில் கூட அம்மாக்கள் கிளறோ கிளறென்று கரண்டியால் கிளறுவது போல, ரசிகர்களை உருப்பேற்றி உசுப்பேற்றி விட்டதில் முக்கிய பங்கு அனிருத்தையே சாரும். அதிலும் அண்ணாமலை இசை, பில்லா கால சிக்னேச்சர் இசையையெல்லாம் நவீனப்படுத்தி அளித்திருப்பது புதுமை.

படம் முடிந்தபோது அருகில் இருந்த நண்பர் கேட்டார், உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா ? அவர் கேட்டு முடித்ததும் திரையில் கொட்டை எழுத்தில் எழுதிக்காட்டினார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் முருகதாஸ் என்று. நல்லவேளை, சந்தேகம் தீர்ந்தது.

அட்டகாசமான ரேஸ்காரை களமிறக்கியவர்கள், அதற்கான டிராக்கைப் போட மறந்தது ஏமாற்றமே.

தர்பார் என்றால் அரசவை என்று பொருள். இங்கே அரை சுவை என வைத்துக் கொள்ளலாம். தமிழாவது வாழட்டும்.

பேட்ட விமர்சனம்

Image result for petta

கெட்ட பயலா இருந்த காளி, பேட்ட பயலா உருமாறிய படம் பேட்ட !

ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைன்னு பேச ஆரம்பிக்காதீங்க, சில விதி விலக்குகள் உண்டு.

ரஜினியின் வெற்றிப்படங்களைக் கூட்டிக் கழித்து அலசிப் பார்த்தால் ‘பழிவாங்குடா’ எனும் ஒற்றை வரியில் அடங்கிவிடுபவை தான் பெரும்பாலானவை. அதை எப்படி திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ரஜினியிசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பதை வைத்தே படம் பாக்ஸ் ஆபீஸில் நிலைப்பதா, பாக்ஸ்லேயே நிலைப்பதா என்பது முடிவாகிறது.

அந்த வகையில் ரஜினியின் அத்தனை பலங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து, பிரேமுக்கு பிரேம் அலங்காரப்படுத்தியிருக்கும் படம் தான் பேட்ட.

“வயசானாலும் உன் அழகும் இளமையும் இன்னும் போகல” என படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பில்டப் கொடுப்பார். அந்த படம் வந்தே இருபது வருடங்கள் ஆகி விட்டது. அந்த வசனத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தலாம் எனுமளவுக்கு, மேக்கப்பும், ஆடைகளும் கேமராவும் ரஜினியை அழகுபடுத்தியிருக்கின்றன.

அட இந்த சீன் பாஷா மாதிரி, அட இது நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைல், ஆஹா இது தளபதி காட்சி என ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி சிலாகிக்கிறார்கள். பழைய படங்களையெல்லாம் நினைவுபடுத்தி இதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.

அனிருத்தின் இசை கூட ரஜினியின் பிரபல பின்னணி இசைகளின் கோர்வையாய் இருப்பது ஒரு தனி ரசனை. அதை தனது ஸ்பெஷல் முத்திரைகளுடிடன் கலந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக அனிருத் இசையை ம்யூட் போட்டுக் கேட்டால் கூட காதில் இரத்தம் வடியும். இதில் அந்த சத்தங்களில் சண்டை இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.

கதாபாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் உடல் மொழியும் நடிப்பும் ஆஹா ரகம் என்றால், வெறும் கண்களாலேயே நடித்து முடித்து விடும் நவாசுதீன் சித்திக் ஆஹாஹா ரகம். ஆனால் பெரிய வாழையிலையில் வைத்த ஒரு தேக்கரண்டி பிரியாணி போல அவர்களுடைய பார்ட் சட்டென முடிந்து விடுகிறது.

என்ன தான் இருந்தாலும் அந்த அக்மார்க் மதுரைக்கார பாம்படப் பாட்டியின் வீட்டில் மகேந்திரனின் ஒரு மகனாக நவாசுதீனையும் இன்னொரு மகனாக அருவா ஆறுமுக மீசையையும் பார்ப்பது உறுத்துகிறது. மகளின் முகத்திலும் மதுரை சாயல் இல்லை. சரி, குடும்பத்துல எதுக்கு பிரச்சினை கிளப்பிகிட்டு… வேண்டாம் விட்டுடுவோம்.

ஓ.. சொல்ல மறந்து விட்டேன் சிம்ரன், திரிஷா இருவரையும் பார்த்த ஞாபகம். அட, சசிகுமாரைக் கூட பார்த்தேனே, ஓ பாபி சிம்ஹா கூட வந்தாரே.. இப்படித் தான் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. காளியை திரையுலகில் அறிமுகப் படுத்திய மகேந்திரனையே ரெண்டு காட்சியோடு மட்டையாக்கியிருக்கிறார் சுப்புராஜ்ன்னா பாத்துக்கோங்க.

தொன்னூறுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களில் கடைசியில் ஒரு வரி சேர்ப்பார்கள். “பாட்டு பைட்டு சூப்பர்”. அதை இதிலும் சேர்க்கலாம், ரசிக்க வைக்கிறார்கள்.

ரஜினிக்கு வயசாயிடுச்சு, அந்த நிஜத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை முடிந்தவரை ஸ்டைலாக‌ மாற்ற கேமரா கோணங்களையும், அரையிருட்டுக் காட்சிகளையும், மெல்லிய புகைமண்டலப் போர்வைகளையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பு.

முதல் பாதி அழகான இயற்கைக் காட்சிகளுடனும், சுவாரஸ்யங்களுடனும், பில்டப்களுடனும் பிரமாதப்படுத்துகிறது. பாஷாவைப் போல ! இரண்டாவது பாதி, அந்த பாஷாவின் பில்டப்பை ஈடு செய்யவில்லை என்பது தான் நிஜம். ஆனாலும் பரபரக்கிறது. ஒருவகையில் இரண்டு வில்லன் குரூப், இரண்டு கதைக் களம் என கடைசியில் இரண்டு ரஜினி படங்கள் பார்த்த உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இது எதிர்பார்த்த டுவிஸ்ட் தான் என சினிமா ஜாம்பவான்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என இன்னொரு டுவிஸ்ட் கொடுத்து பீட்ஸா பரந்தாமன் கார்த்திக் சுப்புராஜ் வியக்க வைக்கிறார்.

ஆங்காங்கே வைத்திருக்கும அரசியல் பொடிகள் விசிலடிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு காட்சியையும் ரஜினியின் அறிமுகக் காட்சியைப் போல செதுக்கியிருப்பது இயக்குனரின் உள்ளே ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகருக்கானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவனிடமிருந்து வழிந்த ஒரு படம் இது.

காலா படத்தின் ஆழமான சமூகப் பார்வையை இதில் பார்க்க முடியாது. ஆனால் ரஜினியிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை இதில் நிச்சயம் பார்க்கலாம்.

போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம். வெற்றி சர்வ நிச்சயம் என்பது இந்தப் படம் ரஜினிக்குச் சொல்லும் பாடம்.

சுருக்கமாக, இது ரஜினி 2.0

*
சேவியர்
Xavi.wordpress.com

குடியிருந்த கோயில்

Image result for MGR Mother sentiment

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரது ரசிகர்களும், மக்களும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள்.

“பிறந்த நாள் தான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மலர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே? ஏன் “

அதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

“நான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க,  இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார்கள். இந்த நாளில் தானே அவர்கள் வலியால் துடியாய்த் துடித்திருப்பார்கள். என் அம்மாவின் பிரசவ வலி தான் இந்த நாள் முழுவதும் எனது கண்களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன ?”

எம்.ஜி.ஆர் சொன்ன இந்த வார்த்தைகள் அவர் தனது அன்னையின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் தனது படங்களில் கூட அம்மாவை போற்றும் காட்சிகளைத் தான் வைத்திருப்பார். ஏன், படத்தின் தலைப்புகளில் கூட எம்.ஜி.ஆரைப் போல அம்மாவைச் சிறப்பு செய்த நடிகர் உண்டா என்பது சந்தேகமே.

தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தாய்க்குத் தலை மகன், தெய்வத் தாய், தாயின் மடியில், தாயைக் காத்த தனையன் என எக்கச் சக்க படங்கள் அம்மாவை குறிப்பிடுவனவாக அமைந்தது மிகச் சிறப்பு !

காற்றில்லாத‌ பூமியும், ஊற்றில்லாத நீர்நிலையும் போல அன்னையில்லாத வாழ்க்கையும் வறண்டே போகும். தமிழ் இலக்கியமும், கலாச்சாரமும் அன்னையை எப்போதுமே முதலிடத்தில் தான் வைத்திருக்கின்றன. இறைவனையே மூன்றாவது இடத்தில் தள்ளி அன்னையை முதலிடத்தில் அமர வைத்தது தான் நம் வரலாறு. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசை ஆனாலும் சரி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் கொன்றை வேந்தனானாலும் சரி, ஆதி பகவன் எனும் குறளானாலும் சரி, எங்கும் எதிலும் அன்னையே முதன்மையாய் !

அன்னை நாம் குடியிருந்த கோயில். ஆலய கருவறை அல்ல, அன்னையின் கருவறையே நமக்கு முதலில் பரிச்சயமானது. சதையாலான வீடே நாம் முளை விட்ட முதல் நிலம். தொப்புள் கொடியில் ஒரு பட்டமாய் முதலில் நாம் பறந்தது அங்கே தான். விரல் விரித்து, கால் உதைத்து நாம் முதலில் குதித்து விளையாடிய இடம் தண்ணீர் குளமல்ல, பன்னீர் குடம்.

தொட்டும் தொடாத தூரத்தில் முதன் முதலில் வருடிச் சென்றது அன்னை விரல்கள் தான். பேசாக் கடவுளுடன் பேசிக் களிக்கும் பக்தனைப் போல, வயிற்றுச் சுவருக்குள் வாகாய் நாம் கிடக்கையிலே,  செல்லம் கொஞ்சிச் சிரித்து மகிழ்ந்தது அன்னையின் குரல்கள் தான். எப்பக்கம் படுத்தாலும் பிள்ளைக்கு வலிக்குமோ என தூங்காமல் தவமிருந்தே சோராமல் சோர்ந்தவைஅன்னை இமைகள் தான்.

பசிக்காமல் உண்டு, குடம் குடமாய் தண்ணீர் குடித்து, எடை இழுக்க நடை தளர நடைப்பயிற்சி செய்து, பிடித்தவற்றை ஒதுக்கி பிடிக்காதவற்றை விரும்பி, தன் குழந்தைக்காய் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு அன்னையைப் போல வேறு யாருமே இல்லை. தன் மழலையின் பாதம் பூமிக் காற்றை முத்தமிடும் போது வலிமையாய் இருக்க வேண்டுமென்றே அன்னை ஆசிக்கிறாள். அதற்காகவே அத்தனை வலிகளையும் வலிமையாய்த் தாங்கிக் கொள்கிறாள். பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே !

குழந்தையின் முதல் அழுகை, அன்னையின் தேசிய கீதம். பிந்தைய அழுகைகள் அன்னையின் துடிப்பின் கணங்கள். முதல் புன்னகை அன்னையின் பரவச தேசம். தொடரும் புன்னகைகள் பரவச தேசத்தின் பளிங்கு மாளிகைகள். ஏழு கடல் ஏழு மலை தாண்டி கிளியின் உடலில் உயிரை வைக்கும் மந்திரவாதியைப் போல, தனது உயிரை அள்ளி குழந்தையின் உடலில் வைத்து உலவ விடுகிறாள் அன்னை.

அந்தக் குழந்தையின் வளர்ச்சி தான், அவளுடைய மகிழ்ச்சி. அந்த குழந்தையின் வெற்றி தான் அவளுடைய வெற்றி. அந்தக் குழந்தையின் புன்னகை தான் அன்னையின் புன்னகை. அந்தக் குழந்தையின் கண்ணீர் தான் அன்னையின் அழுகை. ஜீவனோடு கசிந்துருகி இரண்டறக் கலந்து இளைப்பாறுவாள் அன்னை. பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே !

பால்யப் பருவத்தில் தோளில் தாங்கி, பதின் வயதுப் பருவத்தில் நெஞ்சில் தாங்கி, இளைய பருவத்தில் இதயத்தில் தாங்கி, மரணம் வரைக்கும் உயிரில் தாங்குவாள் அன்னை. குயவன் ஒரு பாண்டத்தைச் செய்வது போல அன்னை ஒரு குழந்தையை வனைகிறாள். குயவன் மண்ணினால் வனைகிறான், அன்னையோ தன்னையே குழைத்து வனைகிறாள்.

அத்தகையை அன்னையைத் தொழுதும், இதயத்தில் அவளைத் தாங்கியும் வாழும் பிள்ளைகள் வாழ்க்கையில் உயரிய நிலைகளில் இருக்கிறார்கள். தன்னை அடிக்கும் மகனைக் கூட, “சாப்பிட்டுப் போடா ராசா’ என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொல்லும் அன்னையின் மனம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது !

அன்னையை அன்பு செய்வது பிள்ளைகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆனந்த வாய்ப்பு. அன்னையின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் பிள்ளைகள் வாழ்வின் உன்னத நிலைகளை அடைகின்றனர். அன்னையின் தலைகோதும் விரல்களுடன் வாழும் பிள்ளைகள் ஆசீர்வாதங்களோடு வாழ்கின்றனர் தொலைவில் இருந்தால் தினமும் தொலைபேசியிலேனும் அவர்களுடன் பேசுங்கள். வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்னையைப் போற்றுங்கள். அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் மூச்சு விழுந்திருக்காது ! அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் குரல் ஒலித்திருக்காது ! அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் அன்பின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்காது !

அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் தியாகத்தின் வடிவம் உங்களுக்கு விளங்கியிருக்காது !

உங்கள் பெற்றோரை உங்கள் அன்பின் வளையத்திலேயே வைத்திருங்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்யும் அதிகபட்ச அன்பு அது தான். முதிர் வயதில் அவர்களுடைய பேச்சை அருகமர்ந்து கேளுங்கள், நீங்கள் செய்யும் அதிகபட்ச மரியாதை அது தான். அவர்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருங்கள், நீங்கள் அளிக்கும் அதிகபட்ச நிம்மதி அது தான்.

அவர்கள் வேண்டுவதெல்லாம் உங்களுடைய ஆறிலக்க வருமானமல்ல, ஆறுதலான வார்த்தைகள் தான். முதியோர் இல்லத்தின் முற்றங்களில் அவர்களின் அன்பை புதைக்காதீர்கள். நிராகரிப்பின் வீதிகளில் அவர்களுடைய நேசத்தை அவமதிக்காதீர்கள்.

பூமியில் உங்கள் வாழ்க்கை வளமானதாகவும், ஆயுள் நீளமானதாகவும் இருக்க பெற்றோரை அன்பு செலுத்த வேண்டும் என்கிறது கிறிஸ்தவம்.

அன்னையை நேசிப்போம்

வாழ்க்கை அர்த்தம் பெறும்.

Thanks : Vettimani, London & Germany

பாகுபலி 2 : எனது பார்வையில்

Image result for Bahubali 2

உலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ?’ என்பதை சமூக வலைத்தளங்கள் அலசிக் காயப்போட்டன.

இப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.

மகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒருவரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக‌ வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

அதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.

பாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது படத்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.

காதலும் காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் ! அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.

லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பனைகளையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.

சிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தலைகளை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.

மூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.

முதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

இவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.

எதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை
நம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.

பாகுபலி !
ரசனைகளின் அதிபதி !

*

12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

12-angry-men-1-800“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.

ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.

வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன்கள் புதிது புதிதாய் இருக்கவேண்டும் இல்லையேல் பார்வையாளனுக்குப் போரடிக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் இலக்கணங்களை உடைத்துக் காட்டும் பல திரைப்படங்கள் மேலை நாடுகளில் தான் பிறப்பெடுக்கின்றன என்றே கருதுகிறேன். போன்பூத் – சில வருடங்களுக்கு முன்பு அந்த வகையில் பிரமிப்பூட்டிய படங்களில் ஒன்று.

சரி, 12 Angry Men படத்தின் கதை தான் என்ன ?

தந்தையைக் கொலை செய்து விட்டான் எனும் குற்றச் சாட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் சேரியில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் கொலை செய்திருக்கிறான் என்பதை நம்பி விடுகிறது நீதி மன்றம்.

நேரில் பார்த்த பெண்ணின் சாட்சியம், கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கேட்ட சத்தங்கள், இளைஞன் அறையிலிருந்து ஓடி வருவதைப் பார்த்த முதியவர் என சாட்சியங்கள் எல்லாம் இளைஞன் குற்றவாளி என அடித்துச் சொல்கின்றன.

போதாக்குறைக்கு அந்த நேரத்தில் படம் பார்க்கப் போனேன் எனச் சொல்லும் இளைஞனுக்கு அந்த படத்தின் பெயரோ, கதையோ, கதாபாத்திரங்களோ எதுவும் நினைவில் இல்லை. பட்ட காலிலேயே படும் என்பது போல அவனிடமிருந்த கத்தியும் அந்த இரவில் காணாமல் போய்விடுகிறது.tn2_12_angry_men_4

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்பா – நீ குற்றவாளிதான் என நீதிமன்றம் ஏறக்குறைய முடிவெடுத்து விடுகிறது.

இனி இந்த வழக்கைக் கவனித்து வரும் 12 நடுவர்கள் இவன் தான் குற்றவாளி அல்லது நிரபராதி என்று ஒரு தீர்ப்பை எழுதவேண்டும் அவ்வளவு தான் பாக்கி. இந்தப் பன்னிரண்டு பேருமே ஒத்த முடிவுடன் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்பது தான் சட்டம்.

அந்த பன்னிரண்டு பேரும் முன்பின் அறிமுகமற்றவர்கள். புழுக்கமாய் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்து, “சரி சரி.. இவன் குற்றவாளி தானே. சீக்கிரம் முடிவெடுத்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்” என அமர்ந்தால், ஒருவர் மட்டும் (கதாநாயகன் ஹென்ரி பாண்டா ) இவன் நிரபராதியாய் கூட இருக்கலாமே என ஒரு வாதத்தை முன்வைக்கிறான்.

ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போலவும், தீண்டத்தகாதவனைப் போலவும் மற்ற பதினோரு பேரும் அவனைப் பார்க்கிறார்கள். “சரி.. என்ன தான் சொல்ல வரே ?” என அலட்சியமாய் கேட்கும் அவர்களிடம் “இது ஒரு இளைஞனுடைய வாழ்க்கைப் பிரச்சனை. எனவே இதைப் பற்றி நாம் கொஞ்ச நேரம் விவாதிப்போம்” என்கிறான்.

இளைஞன் கொலையாளி என்பதை சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் பதினோரு பேருமாக கதாநாயகனை ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கி, கடைசியில் எல்லோருமே இளைஞன் நிரபராதியாய் இருக்கலாம் என  படம் நிறைவுறுகிறது.

அந்த விவாதக் களமே முழு திரைப்படமும். கொலையோ, கொலை நிகழ்ந்த இடங்களோ, நபர்களோ யாருமே காட்சிகளாய் காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கதை வசனமே கதையை விளக்குவதும், நகர்வதும், நிற்பதும், ஓடுவதும், அழுவதும் என எல்லா வேலைகளையும் செய்கிறது.

ஒரு அறைக்குள் விவாதிக்கும்போது தெரியவரும் சங்கதிகளும், சந்தேகங்களும் ஏன் உண்மையான வழக்கு விசாரணையில் எழவில்லை எனும் நியாயமான கேள்விக்குப் பதிலாகத் தான் அந்த இளைஞன் சேரியில் வசிப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்பது நுட்பமான இழை.

பன்னிரண்டு வேறுபட்ட குணாதிசயமுடைய நபர்களின் இயல்புகளையும், அவர்களுடைய சிந்தனை ஓட்டங்களையும், சிக்கல்களையும், சண்டைகளையும் சற்றும் போரடிக்காமல் ஒன்றரை மணி நேரம் வார்த்தைகளாலேயே படமாக்கியிருக்கும் இயக்குனர் சிட்னி லூமெட் பிரமிக்க வைக்கிறார்.

இந்தத் திரைப்படம் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இதன் அசாத்தியத் தாக்கம் காரணமாக திரைப்படமாக வெளியிடப்பட்டதாம் ( இதை எழுதும் போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி திரை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்த டூயல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது )

1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் தாண்டிய இன்றைய நவீன திரைப்படங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கிறது என்றால் மிகையல்ல.

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்

உயிரை உலுக்கிய குறும்படம்

picture-7

 

வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.

ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.

தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.

படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,

பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.

மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.

வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.

ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும்.

கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி to சரவணன் பிச்சாண்டி, லிங்க் அனுப்பியமைக்கு.

உலகை உலுக்கிய செய்திப்படம் : Hell Hole !

நரகமல்ல, அதைவிடக் கொடியது !

zim1

உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது.

ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.

zim3

நிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.

ஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.

இந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழாயிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.

zim2

ஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.

காட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.

ஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,

zim5

 

 

 

 

 

வெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.

ஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.

zim4

பொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.

எத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜிம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

உணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.

அடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.

அப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.

இந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.

zim6

ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.

ஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.

காஞ்சிவரம் : எனது பார்வையில்

kanchivaram-2

காஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா ? என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.

வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.

1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.

திருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.

மகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வேங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.

மோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.

தன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகின்றன.

உயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.

பிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

மழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.

முன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் மோகன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.

காஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.

The Curious Case of Benjamin Button : விமர்சனம்

த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.

 the_curious_case_of_benjamin_button

மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள்.

முதலாம் உலகப் போரில் மகனை இழந்த ஒரு தந்தையின் துயர நினைவுகளுடன் துவங்குகிறது படம். பார்வையிழந்த அந்த மனிதர் கடிகாரம் செய்பவர். மகனின் நினைவாக அவர் செய்யும் கடிகாரம் பின்னோக்கி ஓடுகிறது !

“வாழ்க்கையில ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தா எப்படி இருக்கும்” எனக் கேட்கும் முதல்வன் பட வசனம் போல, வாழ்க்கை பின்னோக்கி ஓடினால் எப்படி இருக்கும் ? என் மகன் என்னுடன் இருந்திருப்பான் என மனதை உலுக்கும் சோக உணர்வுகளுடன் படம் துவங்குகிறது.

அந்த நிகழ்வின் மையம் கதையை உணர்த்த, படு கிழவனாய் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாய் இளமை திரும்பப் பெற்று, தனது கடைசி காலத்தில் சிறுவனாய், மழலையாய், கைக்குழந்தையாய் மாறி உயிர்விடும் பெஞ்சமின் பட்டரின் கதை விரிகிறது.

அருவருப்பாய், வயதானவனாய் பிறக்கும் கதாநாயகன் பிறக்கும் போதே அம்மாவை முழுங்கியவன். அவனது அப்பாவும் அவனை ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் முழுகி விட அங்கேயே வளர்கிறார் நாயகன்.

இவனுக்கு ஆயுள் இன்னும் கொஞ்ச நாள் தான். எப்போ வேண்டுமானாலும் இறப்பான் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவரும் வியக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறான் நாயகன் என கதை பயணிக்கிறது.

முதலாம் உலகப் போர் காலத்தில் படம் நகர்வதாகக் காட்டுவதும், முதியோர் இல்லத்தை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதும் படத்தை சற்றே பலப்படுத்த எடுத்துக் கொண்ட உத்திகள் என்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இல்லை.

வயதான காலத்தில் சிறுமியாய் இருந்து, சிறுமி வயதாகிக் கொண்டே செல்ல, நாயகன் வயது குறைந்து கொண்டே வர அந்த வயது முரணின் இடைவெளி குறையும் காலத்தில் வருகிறது காதல்.

கடைசியில், காதலன் கைக்குழந்தையாகி மரணத்தை எதிர் நோக்கி காதலியின் கைகளில் இருக்க, துயரத்துடன் காதலி குழந்தையின் முகத்தையே பார்க்க, மெல்ல மெல்ல கண் மூடிக்கொள்ள பெஞ்சமின் மரணமடையும் காட்சி மனதைக் கனக்க வைக்கின்றன.

இந்த வயதாகும் முரணைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தில் சிலாகிக்க ஏதுமே இல்லாமப் போவது தான் படத்தின் மிகப்பெரிய குறை.

மேக்கப்பில் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வயதான தோற்றத்தில் வரும் நாயகனின் உடல், கைகால், பார்வை என ஒப்பனை கன கட்சிதம். ஒளிப்பதிவும் மனதை மயக்குகிறது. நேர்த்தியான கால இடைவெளிகளை கவனித்து ஒளிப்பதிவு நிறங்களால் பேசுவது சிலிர்க்க வைக்கிறது.

மற்றபடி ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்ட அளவுக்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது எனது கருத்து.

இழுத்து இழுத்து படத்தை நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது முடியும் என்ற சலிப்பே வந்து விடுகிறது ஒரு கட்டத்தில்.

என்ன வித்தியாசமான கதை கிடைத்தாலும், உலகம் சுற்றுதல், கற்பை இழத்தல், காதலித்தல், மரணித்தல் எனும் வட்டத்துக்குள் அடைக்கப்பட்டால் அது வலுவிழக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.

1922ல் ஸ்காட் என்பவர் எழுதிய கதையாம் ! அந்த சிறுகதையை படமாக்கியிருக்கிய விதத்தில் தனது வேலையை முடித்திருக்கிறார் இயக்குனர் டேவிட் பிஞ்சர்.

Man On Wire : விமர்சனம்

6236இத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம்.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப் பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ ஏதும் பேசாமல் முடிவுறும் தருவாயிலிருந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கம்பி கட்டி நடந்த ஒருவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் படம் பரவசமூட்டுகிறது.

1974ல் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே நடந்த நிகழ்ச்சி எப்படி சாத்தியமாயிற்று, என்னென்ன சிக்கல்கள் இருந்தன என்பதையெல்லாம் உரையாடல்கள் வழியே திரும்பிப் பார்க்கிறார் நாயகன்.

இளமையிலேயே கழைக்கூத்தாடி போல நீளமான குச்சியுடன் விறைப்பாய்க் கட்டியிருக்கும் கம்பியின் மீதும் கடிற்றின் மீதும் நடந்து திரிவது நாயகனின் பொழுது போக்கு.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க வர்த்தகக் கட்டிடத்தைக் குறித்த செய்தியைப் பத்திரிகையில் படித்தவுடன் அதில் ஏறுவதே வாழ்க்கை இலட்சியம் என்றாகிவிட்டது.

அதை எப்படி நிறைவேற்றினார் என்பதை படபடப்புடன் பதிவுசெய்திருக்கின்றனர்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், கருப்பு வெள்ளை வழியே பயணிக்கும் பழைய நிகழ்ச்சிகள் திடீர் திடீரென நிகழ்காலத்துக்குத் தாவி உரையாடல் அறைக்கு வருகிறது.

அங்கிருந்து மீண்டும் பழைய காலத்துக்குள் புகுந்து விடுகிறது. இப்படி மாறி மாறி பயணிக்கும் இடங்கள் வெகு சிரத்தையாக, சற்றும் தொய்வின்றி அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.

அன்றைய நியூயார்க் தெருக்கள், பல நூறு பவுண்ட் எடையுள்ள பொருட்களை WTC யின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமம், பாதுகாவலர்களின் கண்களின் மண்ணைத் தூவ எடுத்துக் கொள்ளும் பொறுமை என வெகு நேர்த்தியாய் நகர்கிறது படம். ஆறு வருடமாய் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது இந்த நடைபயணம் என்பது சிலிர்ப்பூட்டுகிறது!

நியூயார்க் நகரின் அச்சுறுத்தும் அதிகாலைக் குளிர், ஆளையே தூக்கி வீசும் காற்று, ஐந்தடிக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதையே கணிக்க முடியாத மேக மூட்டம் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் படபடப்பை ஏகத்துக்கு எகிற வைக்கிறது.

ஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு மறு கட்டிடத்துக்கு கயிறைக் கொண்டு செல்ல அம்பில் தூண்டில் நூலைச் சுற்றி அடுத்த கட்டிடத்துக்கு எய்வது, அதை எதிர் கட்டிடத்தில் காணாமல் நிர்வாணமாய் மாடி முழுக்க அலைவது (நூல் உடலில் பட்டால் உணர வேண்டும் என்பதற்காக ), கட்டிடத்தின் நுனியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்பைத் தேடி எடுப்பது என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத காட்சிகள் தொடர்கின்றன.

கடைசியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டினால் அது வளைந்து தொங்குகிறது ! இத்தனை வருட உழைப்பு, திட்டமிடல் எல்லாம் வீணா என வினாடி நேரம் திகைத்துப் போகின்றனர். எனினும், இலட்சியம் வெல்கிறது

ஒரு வழியாக எல்லாம் சரியாக முடிய, காலை 7 மணி கடந்தவுடன் கயிற்றில் காலை வைத்து நடக்கத் துவங்குகிறார்.

பயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். “இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால்..அ து எத்துணை இனிமையான மரணம். இலட்சியத்தின் உச்சியில் இருக்கும் போது உதிர்வதில் எத்தனை ஆனந்தம்” என்பதே நாயகனின் கருத்து.

நாற்பத்து ஐந்து நிமிடங்கள் கயிற்றின் மேல் எட்டு முறை அங்கும் இங்கும் நடந்து, நடனமாடி, கம்பியின் அமர்ந்து, படுத்து என நாயகனின் செயல்கள் வீதியில் கவனிக்கத் தொடங்கிய கூட்டத்தினரையும், மாடியில் அவரைக் கைது செய்யக் காத்திருந்த காவலரையும் ஸ்தம்பிக்க வைக்கிறது !

இலட்சியம் நிறைவேற ஒரு வழியாய் காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறார் நாயகன்.

அறுபது வயது கடந்த நிலையில் இன்றும் கம்பியில் நடப்பதை நிறுத்தாத மனிதராய் அவரைக் காட்டி முடிகிறது படம். தொய்வின்றி இயக்கியதற்காக இயக்குனர் James Marsh அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். !

வாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள்.

 

mow