பேய்மென்ட் டொமைன் 5

Image result for payment systems

இந்த டிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ? வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன ? எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது ? என்பதெல்லாம் இந்த செட்டில்மென்ட் பிரிவின் பாகங்கள்.

இதன் முதல் கட்டம் பி.ஓ.எஸ் மெஷினுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கும் இடையே நடக்கும். இதை ரீகன்சிலியேஷன் (reconciliation) அதாவது சரிபார்த்துக் கொள்தல் என்பார்கள். ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பமாகும் அத்தனை பரிவர்த்தனைகளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்தாக வேண்டும். அது அடிப்படை விதி ! இதைத் தான் முதலில் வங்கிகளும், பி.ஓ.எஸ் மெஷின் வைத்திருக்கும் கடைகளும் செய்யும்.

ஒருவேளை இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். வேறுபாடு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலோ, பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றின் மதிப்பிலோ இருக்கலாம்.  

முதலில் எந்த பரிவர்த்தனை தொலைந்து போயிருக்கிறது, அல்லது தவறாய் பதிவாகி இருக்கிறது என்பதைப் பார்ப்பார்கள். அதைக் கண்டுபிடித்தபின் அதைத் தவிர மற்ற பரிவர்த்தனைகளை செட்டில்மென்ட்க்காக ஃபைல்களாக சேமிப்பார்கள். பிரச்சினைக்குரிய பரிவர்த்தனைகள் எக்ஸப்ஷன் எனப்படும் விதிவிலக்கு செயல்பாட்டுக்குள் செல்லும்.

இப்போது அக்யூரர் வங்கிக்கும், இஷ்யூயர் வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இது எப்படி நடக்கிறது ?

வங்கிகளில் ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிவர்த்தனை வாங்குபவர் வங்கியிலிருந்து பேய்மென்ட் சிஸ்டம் வழியாக இஸ்யூயர் வங்கிக்குச் செல்கிறது. அங்கிருந்து “அங்கீகரிக்கலாம்” எனும் பதிலோடு திரும்பி வருகிறது. அப்போது அந்த பரிவர்த்தனையில் ‘செட்டில்மென்ட்க்கு எடுக்கலாம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்படும். ஆனால் முதலில் அதன் நிலை ‘என்’ (N – No) என இருக்கும்.  

இப்போது வங்கி பி.ஓ.எஸ் மெஷினுடைய ரிகன்சிலியேஷன் ஃபைலுக்காகக் காத்திருக்கும். அது ஒவ்வொரு நாளும் இரவில் தான் கிடைக்கும். இரவில் பி.ஓ.எஸ் மெஷின் பரிவர்த்தனைகளை கேகரித்து ஒரு ஃபைலாக அதன் வங்கிக்கு அனுப்பும். அது மெசேஜ் எண் 500 எனும் பெயரில் செல்லும். அதை வங்கி சரிபார்த்தபின் 510 என ஒரு பதிலை அனுப்பும்.

இந்த செயல் முடிந்தால் தான், ‘செட்டில்மென்டுக்குத் தகுதியானது’ என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் “என்” எனும் அடையாளத்தை மாற்றி “ஒய்” (Y – Yes ) என எழுதிக்கொள்ளும். அப்போது செட்டில்மென்ட் கட்டத்துக்குள் அவை நுழையும்.

இந்த என் நிலைக்கும் ஒய் நிலைக்கும் இடையே பல செயல்பாடுகள் நடக்கலாம். குறிப்பாக ஒரு பரிவர்த்தனை சரியாக இல்லை என புகார் வரலாம், சந்தேகம் எழலாம், வழக்கு நடக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் “என்” என்பது “டபிள்யூ” என மாறும். அதாவது வெயிட்டிங் நிலை. எல்லா குழப்பங்களும் முடிந்த பின்பே “ஒய்” நிலைக்கு வரும்.  

இப்படி சரி செய்யப்பட்ட தகவல்கள் தினம் தோறும் செட்டில்மென்ட் நிலைக்குள் வரும். செட்டில்மென்ட் மென்பொருள் வங்கி வாரியாக கணக்கை பிரித்து தெளிவான அறிக்கைகளாய் மாற்றும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன என்பது முடிவு செய்யப்பட்டபின் அவை வங்கிகளுக்கும், வங்கிகளின் மேலாண்மை அமைப்புக்கும் ஃபைல்களை அனுப்பும். 

வங்கிகள் அந்த ஃபைலை எடுத்து தங்களுடைய மர்ச்சன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (எம்.எம்.எஸ்) (MNS – Merchant management System ) எனும் மென்பொருளுக்குக் கொடுக்கும். அது ஒவ்வொரு பி.ஓ.எஸ் கணக்குக்கும் உரிய பணத்தை அவரவர்க்கு அனுப்பும்.  

வெளிநாடுகளில் இதே கார்ட் பரிவர்த்தனையைச் செய்யும் போது அந்தந்த நாட்டு பணத்துக்கு ஏற்ப ‘கன்வர்ஷன் ரேட்'(Conversion Rate) பயன்படுத்தப்பட்டு செட்டில்மென்ட் நடக்கும். உதாரணமாக அமெரிக்காவில் நாம் நூறு டாலருக்கு ஒரு பொருளை வாங்கினால் அது நமது அக்கவுண்டில் வரும்போது அதற்குரிய கன்வர்ஷன் முடிந்த‌ இந்திய ரூபாயாக வரும். அதே நேரத்தில் வழங்குநர் வங்கியும் பேய்மென்ட் சிஸ்டமும் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒரு கரன்சியை முடிவு செய்து கொள்ளும். அது டாலராகக் கூட இருக்கலாம்.

இந்த பரிவர்த்தனைகளை செய்கின்ற பேய்மென்ட் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கும். உதாரணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நாள் ஐந்து கோடி பரிவர்த்தனைகள் நடந்தால், நிறுவனம் தினமும் ஐந்து கோடி ரூபாய்களை சம்பாதிக்கும். 

பேய்மென்ட் டொமைன் தொடர்பான மேலோட்டமான ஒரு புரிதலை இந்த குறுந்தொடர் உங்களுக்குத் தந்திருக்கும் என நம்புகிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும்.

*

இயேசு சொன்ன உவமைகள் ‍: 1 காய்க்காத அத்திமரம்

காய்க்காத அத்திமரம்

hqdefault

லூக்கா 13 : 6..9

“ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.

திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?

இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.

தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.

அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.

இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.

மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.

இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.

இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.

இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?

கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.

அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.

இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.

கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.

அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.

கனி கொடுத்தால் விண்ணக வாழ்வாகிய மீட்பு.
கனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.

நமது வாழ்க்கையை மறு பரிசீலனை செய்வோம். நமது வாழ்க்கை கனிதரும் வாழ்வாய் இருக்கிறதா ? நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா ? நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா ? பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா ? நம்மை நாமே ஆராய்கிறோமா ?

சிந்திப்போம்.
கனி தருவதே மரத்தின் பணி.
கனி தராவிடில் வாழ்வேது இனி.

*

இயேசு சொன்ன உவமைகள் : 2 : விதைகளும், களைகளும்

Jesus Loves Xavier
( மத்தேயு 13 : 24..30 )

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து,

‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்’ என்றார்.”
இயேசுவின் உவமைகள் மிகவும் வசீகரமானவை. எப்போதுமே சாதாரண மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை. பெரிய பெரிய தத்துவார்த்தமான குழப்பங்களை அவர் எப்போதும் சொன்னதேயில்லை. விதைகள், பயிர், பறவை, செடிகள், மேய்ப்பன் என அவருடைய உவமைகள் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்துக்கு பரிச்சயமான பொருட்கள் மட்டுமே. தன் உவமை எவ்வளவு அழகானது என்பதை விட எவ்வளவு வீரியமாய் மக்களிடம் செல்கிறது என்பதையே அவர் விரும்பினார். கேட்பவர்களுக்கு சட்டென புரிய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இந்த உவமையின் விளக்கத்தையும் இயேசுவே விளக்குகிறார். (மத்தேயு 13 : 37..43 )

““நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” என்பது தான் அவருடைய விளக்கம்.
இந்த உவமை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது.

Related image1. இறைமகன் இயேசு விதைக்கின்ற விதைகள் எப்போதுமே நல்ல விதைகள்.

களைகள் சாத்தானின் சந்ததிகள். நாட்டில் நடக்கின்ற கெட்ட விஷயங்களுக்கோ, மனிதனுடைய அசுர சுபாவங்களுக்கோ காரணம் அவர்கள் கடவுளை விட்டு விலகி சாத்தானோடு சகவாசம் வைத்துக் கொள்வது தான்.

உலகில் மனித உயிர்களைப் படைக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. சாத்தானால் உயிர்களை உருவாக்க முடியாது. ஆனால் அந்த உயிர்களுக்குள் தனது சிந்தனையை ஊற்றி வைக்க முடியும். ஏவாளைப் பொய் சொல்லி ஏமாற்றிய அதே சாத்தானின் தந்திரம் இன்றும் அமோக விளைச்சலை அறுவடை செய்கிறது.

இறைவனோடு இணைந்து பயணிக்கும் போது அவர் நட்ட விதைகள் பலனளிக்கத் தவறுவதில்லை.

Related image2. பணியாளர்கள் தூங்குகையில் சாத்தான் நுழைகிறான்.

எப்போதெல்லாம் நமது ஆன்மீக வாழ்க்கை வெளிச்சத்தை விட்டு விலகி இருட்டின் பக்கத்துக்குச் சாய்கிறதோ அப்போது இருட்டின் அரசனான சாத்தான் வலிமையடைகிறான். நமது ஆன்மீக வாழ்வின் தொய்வு, நாம் அவனுக்கு அளிக்கும் வரவேற்புக் கம்பளம்.

நமது பலவீனத்தைப் பயன்படுத்தி அவன் இறைவன் விதைத்த வயலில் நுழைகிறான். விதைகளிடையே களைகளை விதைக்கிறான். சாத்தானுடைய அத்தனை உலக ரீதியிலான ஈர்ப்புகளும் இந்தக் களைகள் எனலாம். அல்லது சாத்தானின் சிந்தனைகளை உள்வாங்கிய மனங்களை களைகள் எனலாம்.

Related image3. கதிர்களே களைகளை வேறுபடுத்துகின்றன.

பயிர் முளைத்த போதோ, மெல்ல மெல்ல வளர்ந்த போதோ பயிர்களிடையே வித்தியாசம் தெரியவில்லை. களைகளும் பயிர்களும் ஒன்றே போலவே இருந்தன. கதிர் விட்ட போது தான் களைகள் கண்டறியப்படுகின்றன.

நமது வாழ்க்கை கனிகொடுக்கிறதா ? கனிகொடுக்காத வாழ்க்கையெனில் களைகளோடு களைகளாய் களையப்படுவோம். நல்ல விதையாய் விழுந்தவர்கள், நல்ல பலனைக் கொடுக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.

Related image4. களைகளைக் கண்டால் இறைவனிடம் கேட்போம்.
வயலில் களைகள் ஒன்றிரண்டு காணப்படுவது இயல்பு. அவற்றை பணியாளர்களே பிடுங்கி எறிவது தான் வழக்கம். ஆனால் இங்கே பணியாளர்கள் தலைவனிடம் சென்று முறையிடுகிறார்கள். “நல்ல விதையல்லவா விதைத்தீர்? ” என வியப்புடன் கேட்கின்றனர்.

இது வழக்கத்துக்கு மாறான செயல். இரண்டு விஷயங்கள் இங்கே நமக்குப் புலனாகின்றன. ஒன்று, வயலில் இருந்த களைகள் ஒருவேளை பயிர்களை விட அதிகமாய் இருக்கலாம். அல்லது ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருக்கலாம். எது எப்படியோ, வழக்கத்துக்கு மாறான அளவில் அங்கே எக்கச்சக்கமான களைகள் இருந்தன என்பது கண்கூடு.

ஒரு திருச்சபையிலோ, இறைமக்கள் குழுவிலோ களைகள் இருப்பதைக் கண்டால் அதை உடனடியாக இறைவனிடம் தான் சொல்ல வேண்டுமே தவிர அதைக்குறித்த விமர்சனங்களில் ஈடுபடக் கூடாது என்பது ஒரு பாடம்.

Related image5. இரண்டையும் வளரவிடும் இறைவன்.

இறைவனின் பதில் அவருடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது. பயிர்கள் காயமடைந்து விடக் கூடாது எனும் அவருடைய அளவிலா அன்பு அங்கே வெளிப்படுகிறது. களைகளும், பயிர்களும் இணைந்தே வளரட்டும் என்கிறார்.

அறுவடை என்பது நமது பணியல்ல, அது வான தூதர்களின் பணி. அவர்கள் அதில் எக்ஸ்பர்ட். பயிர்கள் பாதிக்கப்படாமல் களைகளை அறுத்து எறிவது அவர்களுடைய பணி.

களைகளைக் களைதலோ, அவர்களைத் தீர்ப்பிடுவதோ நமது பணியல்ல. பாரபட்சம் இல்லாமல் இறைவனின் அன்பை அறிவிப்பதும், பறைசாற்றுவதுமே நமது பணி. இறைவனின் கட்டளைப்படி வாழ்வதே நமது பணி.

Related image6. தீர்ப்பிடுவது இறைவனே

கடைசி நாள் என்று ஒன்று உண்டு. மரணத்துப் பிந்தைய வாழ்க்கை நிஜம். இதை இன்று அறிவியலும் ஒத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. நமது பிரபஞ்சமே ஒரு இரு பரிமான சிமுலேஷன் எனும் வாதங்களும் அதன் நிரூபணங்களும் பரவலாகத் துவங்கியிருக்கின்றன.

கனி கொடுப்பவர்கள் மட்டுமே இறைவனின் அன்பில், பரலோக வாழ்வில் இணைய முடியும். மற்றவர்களுக்கு நரக நெருப்பே முடிவு.

சுருக்கமாக, இந்த வாழ்வில் நமது பயணம் பயிர்களும் களைகளும் கலந்த சூழலிலேயே இருக்கும். விழிப்பாய் இருந்து இறைவனுக்கேற்ற கனிகளைக் கொடுப்பவர்களாக நாம் வாழவேண்டும். இறைவனின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

*

இயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை


“இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” ( மார்க் 4 : 26 .. 29 )

இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள், மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும். இந்த உவமையும் அப்படியே, விதைகளையும், விதைப்பவனையும் இயேசு களமாக தேர்ந்தெடுக்கிறார்.

விதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களை கண்கள் காண்பதில்லை இறைவனே காண்கிறார். அதன் பலனை நமக்கு இறைவன் அளிக்கிறார்.

Image result for jesus talking clipart1. விதை இருப்பது அவசியம்.

விதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே முதல் தேவையாக இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

Image result for jesus talking clipart2. விதைத்தல் அவசியம்

விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

இறைவனுடைய வார்த்தைகளை நமது இதயத்திலும், பிறருடைய இதயங்களிலும் விதைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

Image result for jesus talking clipart3. நிலங்கள் அவசியம்

விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை. விதைகள் தான் வீணாகும். எனவே நிலங்களைப் பக்குவப்படுத்தி வைப்பது அவசியம்.

Image result for jesus talking clipart4. காலம் அவசியம்.

விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

Image result for jesus talking clipart5. கட்டாயப்படுத்த முடியாது.

சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது. எனவே விதைத்தபின் அந்த விதைகளின் மீதோ, நிலத்தின் மீதோ தேவையற்ற அழுத்தங்களை வைக்க வேண்டாம்.

Image result for jesus talking clipart6. விதை முளைப்பது தெரிவதில்லை.

எந்தக் கணத்தின் விதையின் தோடுடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது ? எந்த கணத்தில் முதல் இதழ் மெல்ல விரிந்தது ? எந்தக் கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது ? யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார். எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.

Image result for jesus talking clipart7. மூன்று நிலைகள்.

முளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.

இரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.

மூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமையடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை. இதுவே நல்ல நிலத்தின் அடையாளம். இத்தகைய நிலைக்கு உயரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

Image result for jesus talking clipart8. பயனளிப்பது நிலம்

விதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும் ? இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் துவங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். விதையை நிலத்தின் போட்டாலும், நிலமே பயனளிக்கிறது என்பதை கவனத்தில் கொள்வோம். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.

Image result for jesus talking clipart9. அறுவடை பயன்

மனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.

விளைச்சலில் காலம் வராவிட்டால் அதனால் பயனில்லை. விதைகள் வளர்ந்து தானியமாய் ஆகும்போது அந்த பயன் இறைவார்த்தைகளைச் சொன்னவனுக்குக் கிடைக்கும்.

Image result for jesus talking clipart10 தூய ஆவியெனும் விதை.

நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

தூய‌ ஆவியானவர் நம்மிடம் வந்து தங்குவதற்குரிய வகையில் நமது இதயத்தைச் செவ்வையாக வைத்திருந்தால் தூய ஆவியார் வந்து பயனளிக்கும் நிலமாய் நம்மை மாற்றுவார். அப்போது நாம் முழுமையான கனியைக் கொடுக்க முடியும்.

இயேசு சொன்ன உவமைகள் : 4 : கடுகு விதை உவமை

 

“இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” ( புதிய மொழி பெயர்ப்பு மார்க் 4 : 30, 31, 32 )

தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
இயேசு இறையாட்சியை இந்த முறை ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். கடுகு விதையைக் குறித்து வரலாறு பல பதிவுகளைச் சொல்கிறது.

இயேசு வாழ்ந்த பகுதியில் வளர்ந்த கடுகு புதர்கள் சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவனவாக இருந்தன என்பது ஒரு செய்தி. மண்ணில் போட்டால் முளைக்கக் கூடிய மிகச்சிறிய விதை கடுகு விதை தான். அதை விடச் சிறிய செடிகள் தானாக வளரும் தன்மையற்றவை என்கிறது ஒரு ஆய்வு.

இறையரசின் துவக்கம் மிகச்சிறிய விதையளவுக்கு இருந்தாலும் அதன் விஸ்வரூபம் அதன் வளர்ச்சியில் தெரியும். ஒரு பழத்தில் இருக்கும் விதைகளை எண்ணிவிட நம்மால் கூடும். ஆனால் ஒரு விதையில் இருக்கும் பழங்களை எண்ணிவிட இறைவனால் மட்டுமே ஆகும். கடுகு விதை கூட கடவுள் நினைத்தால் பறவைகளின் புகலிடமாய் மாறிவிடும்.

Image result for jesus talking clipart1. கடுகுவிதை எனும் தூய ஆவி

தூய ஆவியானவர் நமது இதயத்தில் நடப்படும் போது, பிறரால் அதை அறிந்து கொள்ள முடிவதில்லை. நமது வாழ்க்கையிலும் உடனடியாக பெரிய மாற்றம் வெளியே தெரிவதில்லை. ஒரு விதை இருப்பதையே நிலம் அறிந்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு சின்னது கடுகு விதை. ஆனால் அது நமக்குள் பதியமிடப்பட்டு வளர்ந்து பெரிதாகும் போது பலருக்கும் பயனளிக்கிறது. பிறருடைய கண்களுக்கு பளிச் என புலப்படுகிறது. நமது செயல்களின் நிழல்களில் பலர் வந்து இளைப்பாற அது வகை செய்கிறது.

Image result for jesus talking clipart2. விதைக்காத விதை பலனளிக்காது.

கடுகு விதை விதைக்கப்பட்டால் மட்டுமே அதன் பயன் தெரியும். விதைக்கப்படாத விதை விரல்களிடையே நழுவி விழுந்தால் கூட வெளியே தெரிவதில்லை. எனவே விதைக்கப்படுதல் மிகவும் முக்கியம். தூய ஆவியானவரை இறைவன் பூமிக்குக் கொடுத்தார். அவர் எங்கும் நிரம்பியிருக்கிறார். அவரை நமது இதயத்தில் நட்டிருக்கிறோமா ? இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. நாம் நமது அவரை இதயத்தில் நடவேண்டும்.

Image result for jesus talking clipart3. விதைக்கப்பட்ட பின் பயன்

விதைக்கப்பட்ட தூய ஆவியானவர் மறைவாய் இருந்து பயனளிக்க ஆரம்பிக்கிறார். உள்ளுக்குள் வேர் இறக்கி, வெளியே கிளைகளை விரிக்கிறார். அதனால் நமது செயல்கள் வலுவடைகின்றன. பிறர் பார்க்குமளவுக்கு விரிவடைகின்றன. கிளைகள் விரிக்கின்றன. தூய ஆவியானவர் நம்முள் இருந்தால் நமது செயல்களும் நம்மை அறியாமலேயே தூய்மையடைகின்றன. பிறருக்கு பயனுள்ள வகையில் மாறுகின்றன.

Image result for jesus talking clipart4. விதையின் அளவு முக்கியமில்லை.

விதை என்பதை இறை வார்த்தையோடும் ஒப்பிடலாம். இறை வார்த்தை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது நமது மனதில் நடப்படும் போது நமக்குள் முளைத்து வளர்ந்து பயனளிக்கிறது. நமது வாழ்க்கை பின்னர் பிறருக்கு நிழல் தரும் ஒரு செடியாக மாறிவிடுகிறது.

Image result for jesus talking clipart5. விதையின் அடர்த்தி முக்கியம்.

கடுகளவு விசுவாசம் இருந்தால் மலையைப் பெயர்க்கலாம் என்றார் இயேசு. கடுகின் அளவு என்பதை, கடுகின் அடர்த்தி என கொள்ளலாம். ஒரு கடுகு விதையை உடைத்தால் அது தன்னுள் முழுமையான அளவில் நிரம்பியிருக்கும். நமக்குள்ளும் விசுவாசம் என்பது இடைவெளியின்றி, முழுமையாய் நிரம்பியிருந்தால் பெரிய செயல்களைச் செய்ய முடியும்.

Image result for jesus talking clipart6. இயேசுவே விதை

அந்த விதையை இறை வார்த்தையைப் போல, இறைமகனாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பயனளிக்கும் என அவரே சொல்கிறார். இயேசு பூமிக்கு வந்து ஒரு விதையாக நடப்படுகிறார். அவரது கிளைகளாக திருச்சபை மக்கள் இணைகின்றனர். வளர்கின்ற அந்தத் திருச்சபை ஒரு பெரிய நிழல் தருவாய் வளர்ந்து விடுகிறது.
இந்த உவமை இப்படி பல்வேறு முகம் காட்டி நம்மை வியக்க வைக்கிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நமது இதயத்தில் இறைவார்த்தையும், தூய ஆவியானவரும் தங்கியிருக்கும் போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் மாறுகிறது. துவக்கம் என்பது கடுகைப் போல சிறிதாய் இருந்தாலும், முடிவு பிறருக்கு நிழல் தரும் மரமாய் விரிவடைகிறது.

இயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும்.

Image result for pearl parable

மத்தேயு 13 :44,45

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

மத்தேயு 13 :44,45

மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்
இயேசு தனது போதனைகளை எப்போதுமே சாமான்யர்களின் வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கிறார். அவருடைய உவமைகள் ஏனோ தானோ என இருப்பதில்லை. ஒவ்வோர் தேர்வுக்குப் பின்னும் ஆழமான அர்த்தம் உண்டு.

முத்து உவமையும் அப்படி விரிவான விளக்கங்களை நமக்குத் தருகிறது. விலையுயர்ந்த முத்தைத் தேடிச் செல்லும் வணிகராக இறைமகன் இயேசு இருக்கிறார். ஒரு வணிகருக்குத் தான் தெரியும் முத்துகளில் எது சிறப்பானது, எது உண்மையானது, எது போலியானது எனும் சகல விஷயங்களும். உள்ளங்களை அறிய மனிதர்களால் முடிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தின் அழகு ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

முத்து என்பதை ஏன் இயேசு பயன்படுத்துகிறார் ? அது மட்டும் தான் ஒரு உயிரினமான சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கின்ற விலையுயர்ந்த பொருள். அது உருவாகும் விதமும் கவனிக்கத் தக்கது. சிப்பியின் வயிற்றுக்குள் நுழைந்து விடுகின்ற மணல் அங்கேயே தங்கி விடுகிறது. அது சிப்பியின் வயிற்றுக்கு ஒரு உறுத்தலாகவே எப்போதும் இருக்கிறது. மெல்ல மெல்ல அந்த மணலின் இயல்பு மாறத் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் நிகழ்கிறது. அடுக்கடுக்காய் அதன் பளபளப்பு அதிகரிக்கிறது. கடைசியில் அந்த முத்தானது முழுமை அடைகிறது. முழுமை அடையாத முத்து வியாபாரியை வசீகரிப்பதில்லை.

நமது வாழ்க்கையில் நேர்கின்ற சோதனைகள் நமது இதயத்தில் மணல் துகளைப் போல, நெருஞ்சி முள்ளைப் போல உறுத்திக் கொண்டே இருக்கின்றன‌. அந்த சோதனைகளை இறைவனின் துணையுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வரும்போது நாம் ஆன்மீகத்தில் பலம் பெறுகிறோம். சோதனைகளைக் கண்டு விலகி ஓடாமல், சோதனைகளை சந்திக்கப் பயந்து அதை புறந்தள்ளாமல் தொடர்ந்து போரிட வேண்டும்.

நம்மை பாவத்திற்குள் விழவைக்கின்ற சோதனைகள், பிறரை பாவத்துக்குள் விழத் தூண்டும் சோதனைகள் அனைத்தையும் தூய ஆவியின் துணையுடன் நாம் எதிர்க்கும் போது நாம் இயேசுவைப் போல மாறத் துவங்குகிறோம். கடைசியில் சிப்பி உடையும்போது, தனது வாழ்க்கையை ஒப்படைக்கும் போது, அந்த அழகிய முத்து வெளிப்படுகிறது. அந்த அழகிய மாற்றத்தையே இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நமது வாழ்க்கை முத்தைப் போல பிரகாசிக்கிறதா ? நாம் சிப்பியாய் இருந்த போதே நம்மைத் தேர்ந்து கொண்ட இறைவனுக்கு நாம் முத்தைப் பரிசளிக்க ஆயத்தமாய் இருக்கிறோமா ? அந்த முத்துக்காக இறைமகன் எவ்வளவோ ஆவலாய் இருக்கிறார்.

இறைமகன் எனும் மகிமையை, விண்ணக வாழ்வின் ஆனந்தத்தை, தந்தையுடனே இணைந்திருக்கும் பரவசத்தை, புனிதரான அவருடைய தூய்மையை எல்லாவற்றையும் விட்டுத் தர தயாராய் இருந்தார். நமது பாவங்களை சுமந்து, நமது குற்றங்களுக்காக அவர் பாவியாகவே உருவம் எடுத்தார். எல்லாவற்றையும் இழந்து அவர் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நமது வாழ்க்கை முத்தைப் போல இருக்க வேண்டும் என்பதை !

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது.

வெறும் சிப்பியாய் வாழ்ந்து முடித்தால் விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் நிராகரிக்கப்படுவோம். நிலைவாழ்வு கிடைக்காமலேயே போய்விடும். பிறருடைய பார்வைக்கு மட்டும் முத்து இருப்பவர்களைப் போல நடித்து நடந்தாலும் இறைவனால் புறக்கணிக்கப்படுவோம். காரணம், இயேசு மட்டுமே அறிகிறார் முத்தின் உண்மையான தரத்தை.

இயேசுவின் உவமை நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறது.

1. பரிசுத்த ஆவியின் துணையுடன் நமது வாழ்க்கையை ஒரு விலையுயர்ந்த முத்தாக மாற்றுவோம்.
2. இறைவன் தந்த வாழ்க்கையை அவருக்கே ஒப்படைப்போம்.

விலையுயர்ந்த அந்த முத்தை இறைமகன் இயேசுவுக்கு ஒப்பிடுவோரும் உண்டு. எல்லாவற்றையும் விற்றும், எல்லாவற்றையும் விட்டும், இயேசுவைப் பற்றிக் கொள்ளும் மனம் வேண்டும் என்பதே அவர்கள் தரும் விளக்கம். உவமைகள் தரும் விளக்கத்தில் எது சரி, எது தவறு என்பது இல்லை. இறை வசனத்தை தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விளக்குகிறார் என்று புரிந்து கொள்வதே சரியானது.

இயேசு சொன்ன உவமைகள் 6 : புதையல் கண்ட மனிதன்

Image result for hidden treasure jesus parables

மத்தேயு 13: 44

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

மத்தேயு 13 : 44

பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, விண்ணரசு இந்த புதையலைப் போன்றது என்கிறார். இந்த உவமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.

Image result for parable of treasure1. இயேசுவே அந்த நிலம், புதையல் அவர் தரும் வாழ்வு.

இயேசுவை அந்த நிலமாகப் பார்க்கலாம். இயேசு எனும் நிலத்தில் பரலோக வாழ்வு எனும் புதையல் இருக்கிறது. ஒரு மனிதன் இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளை, வாழ்க்கையை, போதனையை ஆழமாய்த் தோண்டும்போது புதையல் அவனுக்குச் சொந்தமாகிறது.

இயேசு எனும் நிலத்தை விட்டு விட்டு, வேறு வளமான நிலங்களிலோ, வறண்ட நிலங்களிலோ அல்லது மற்றெந்த நிலங்களிலோ தேடினால் இந்தப் புதையல் கிடைக்கப் போவதில்லை. எனவே விண்ணக வாழ்வு எனும் புதையலுக்கு முதல் தேவை, இயேசு எனும் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதே.
Image result for parable of treasure2. எதேச்சையாய்க் கண்டடையும் புதையல் :

நிலத்தில் இருக்கின்ற புதையலை ஒருவர் எதேர்ச்சையாய்க் கண்டு பிடிக்கிறார். அவர் புதையலுக்காக அந்த நிலத்தைத் தோண்டவில்லை. ஆனால் அவர் தோண்டிக்கொண்டிருக்கிறார். அது அவருடைய உழைப்பைக் காட்டுகிறது. ஒருவர் விண்ணரசு எனும் புதையலைக் கண்டடைய வேண்டுமெனில் சோர்வைக் கழற்றி வைத்து விட்டு சுறுசுறுப்பாய் இயங்குபவராய் இருக்க வேண்டும்.

இயேசு வாழ்ந்த காலத்தில் எந்தக் கணத்திலும் அவர் சோம்பி இருக்கவில்லை. அவருடைய சீடர்களும் உழைப்பாளிகளாகவே இருந்தார்கள். சோம்பல் இறைவனின் எதிரி. சோம்பலாய் இருப்பவர்கள் விண்ணக வாழ்வைக் கண்டடைவதில்லை.

Image result for parable of treasure3. சொந்தமல்லாத நிலம்.

நிலத்தைத் தோண்டுபவருக்குச் சொந்தமானதல்ல அந்த நிலம். கிறிஸ்தவர் அல்லாத ஒருவர், இயேசு எனும் நிலத்தை ஆழமாய்த் தோண்டி ஆன்மீகத்தின் உண்மை அர்த்தத்தைக் கண்டுணரும் பரவச தருணமாக இதைப் பார்க்கலாம்.

தேடல் இல்லாத மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை. தொடர்ந்த தேடல் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகிறது. அது இறைவனைத் தேடுவதாகும் போது அர்த்தமடைகிறது.

4. மகிழ்ச்சி தரும் புதையல்

Image result for parable of treasureபுதையல் முதலில் மகிழ்ச்சி தருகிறது. இறை அனுபவம் ஒரு பரவச மகிழ்ச்சியைத் தராவிட்டால் நமது ஆன்மீக வாழ்வில் ஏதோ குறைபாடு என்பதே அர்த்தம். பிற மார்க்கங்களிலிருந்து கிறிஸ்தவத்துக்கு வரும் மக்கள் ஒரு பரவச நிலையை அடைவதாகவும், சொல்லொண்ணா மகிழ்ச்சிக்குள் நுழைவதாகவும் பகிர்ந்து கொள்வதுண்டு.

அத்தைய பெரும் மகிழ்ச்சியே இறை தரிசனத்தின் மிக முக்கியமான அம்சம். அந்த அனுபவம் வாய்த்தால் பின் எல்லாவற்றை விடவும் இறைவனே தேவை எனும் உறுதி மனதில் எழும்.

5 தற்காலிகமாய் மறைக்கும் மனிதன்.

Image result for parable of treasureபரவசம் தரும் ஆன்மீக அனுபவம் தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதே அவன் புதையலை மறைக்கக் காரணம். எப்பாடு பட்டேனும் எனக்குப் புதையல் வேண்டும் என்பதே அவனுடைய சிந்தனை.

இயேசுவை பெற்றுக் கொண்டபின் அவரை மறைத்தல் பாவம். அவரை வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் பெற்றுக் கொள்ளும் வரை எழுகின்ற சமூக, உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட தற்காலிக மறைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அது இயேசுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அதீத ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.

6. எல்லாவற்றையும் விற்கும் மனிதன்.

Image result for parable of treasureஎது முக்கியம், எது முதன்மையானது, எது தேவையானது என்பதை ஒரு மனிதன் கண்டுணரும் போது அவன் தனக்குள்ள யாவற்றையும் இழக்கத் தயாராகிறான். தனக்குள்ள யாவற்றையும் விற்று, அல்லது விட்டு விட்டு இயேசுவை மட்டுமே பெற்றுக் கொள்ள தயாராகிறார்.

இந்த மனிதனும் இதுவரை தான் சேமித்து வைத்திருந்த பணம், அசையும் அசையாச் சொத்துகள் எல்லாவற்றையும் விற்று விட்டு அந்த நிலத்தை வாங்க முடிவு செய்கிறான்.

7. நிலத்தை வாங்கும் மனிதன்.

Image result for parable of treasureஎல்லாவற்றையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை அவன் முழுவதுமாய் நிலத்தை வாங்க செலவிடுகிறான். அவனுக்கு அந்த நிலமும், அந்தப் புதையலும் அதி முக்கியமாகிவிட்டன.

நிலத்தை குத்தகைக்கு எடுக்கவோ, அல்லது சொந்தமற்ற நிலத்தில் திருட்டுத் தனமாய் புதையலை எடுக்கவோ அவன் விரும்பவில்லை. இயேசுவும் வேண்டும், கூட நான்கைந்து தெய்வங்களும் வேண்டும் எனும் வலுவற்ற ஆன்மீகம் அவனிடம் இல்லை.

அனைத்தையும் விட்டு விட்டேன் இயேசுவுக்காக, அனைத்தையும் விற்றுவிட்டேன் அவருக்காக என அவன் ஆனந்தமாய் இருக்கிறான். இயேசுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் இழக்கும் பணம், புகழ், பதவி, நேரம் எல்லாமே நம்மை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.

8 புதையலை சொந்தமாக்கும் மனிதன்.

Image result for parable of treasureநிலத்தை வாங்கியபின் மனிதன் சோர்ந்து போய்விட்டலோ, அல்லது நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் இனிமேல் எதுவும் தோண்டத் தேவையில்லை என்று நினைத்தாலோ அதனால் ஒரு பயனும் இல்லை. அவன் விற்றது அவனுக்கு கேடாகவே அமையும்.

வாங்கிய பின் நிலத்தை இன்னும் ஆழமாக, கவனமாகத் தோண்டுவதும், நுனி கண்ட புதையலில் ஆழம் கண்டு ஆனந்தப்படுவதும் தேவையான விஷயங்கள்.

9. இழந்ததை திரும்பப் பெறலாம்

Image result for parable of treasureபுதையல் வலிமையானது. முதலில் கடவுளுக்குரிய விஷயங்களைத் தேடினால் மற்றவை கூடக் கொடுக்கப்படும் என்பது போல, புதையலைக் கைக்கொண்ட மனிதன் அதன் பின் தான் இழந்த அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

முக்கியமாக இயேசு தரும் விண்ணக வாழ்வுக்கான புதையலைக் கண்டடைந்தவன் பாவமற்ற வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். நிம்மதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலை மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும். நிறைவான ஆனந்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எதையெல்லாம் இழந்தானோ அவற்றையெல்லாம் இறைவன் திரும்ப தருவார். எவையெல்லாம் நமக்குத் தேவையோ அவற்றையெல்லாம் இறைவன் நிச்சயமாய்த் திரும்பத் தருவார்.

10 பிறருக்கும் பகிர்ந்து வாழலாம்.

Image result for parable of treasureதன்னைப் போல பிறரையும் நேசிக்கச் சொன்னார் இயேசு. தான் அடையும் மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, மீட்பு எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதே உண்மையான அழைத்தல்.

பரலோக ராஜ்ஜியமாகிய புதையலை, விண்ணரசாகிய புதையலை சொந்தமாக்கிக் கொண்டவன் சற்றும் தயங்காமல் அதை பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது இந்த உவமை சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தியாகும்.

இயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.

Image result for jesus parable fishing nets and angels

மத்தேயு 13 : 47 – 50

“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

மத்தேயு 13 : 47 – 50

பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.  இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,

அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்

இங்கே இயேசு விண்ணக வாழ்க்கையை வலைக்கு ஒப்பிடுகிறார். வலை கடலில் வீசப்படும்போது பாகுபாடு பார்ப்பதில்லை. சில மீன்களுக்கு கண்ணியாகவும், சில மீன்களுக்கு கருணையாகவும் செயல்படுவதில்லை. மீன்கள் எல்லாமே வலைக்கு ஒன்று தான்.

எல்லா வகையான மீன்களையும் அள்ளி வருகின்ற மீன்களில் நல்ல மீன் எது கெட்ட மீன் எது என்பது நமக்குத் தெரியாது. அது  மீனவர்களுக்கு மட்டுமே தெரியும். நமது பார்வைக்கு அட்டகாசமான மீனைப் போல தோன்றுவதை அவர்கள் ஜஸ்ட் லைக் தேட் தூக்கிப் போடுவார்கள்.

தூரத்திலிருந்து பார்த்தே ஒரு மீனின் எடையைக் கணிக்கும் அவர்களுடைய திறமையையும், மெதுவாகத் தொட்டுப் பார்த்தே ஒரு மீன் பிடிக்கப்பட்டு எவ்வளவு நாள் ஆகிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லும் அவர்களுடைய திறமையையும் நேரடியாய் வியந்திருக்கிறேன்.

இயேசு சொல்லும் இந்த உவமை இரண்டு வித மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. இறைவார்த்தையைக் கேட்டு, இறைவனை ஏற்றுக் கொண்டு வழிவிலகிப் போகும் மக்கள் நிராகரிக்கப்பட்ட மீன்கள் எனலாம். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அந்த வலையின் உள்ளே மையத்தில் நின்று, இயேசுவை விட்டு வெளியே செல்ல விரும்பாத‌ மக்களை நல்ல மீன்கள் எனலாம்.

வலையில் தொங்கிக் கொண்டு கிழிந்த மீன்களை மீனவர் நிராகரிப்பார். உலகம், கடவுள் என உள்ளே வெளியே விளையாட்டு விளையாடுபவர்களின் நிலையும் அது தான். அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் மக்கள் செய்த முக்கியமான பணிகள் நான்கு.

ஒன்று விவசாயம். இயேசு தனது உவமைகளில் பலவற்றை விவசாயத்தோடு தொடர்பு படுத்திப் பேசினார். பயிராக வளராமல் களையாக இருந்தால் தூதர்கள் கைகளால் அறுபட்டு, தீச்சூளையில் எறியப்படுவோம் என எச்சரித்தார்.

இரண்டாவது தொழில், கால்நடை மேய்த்தல். அதை வைத்தும் அவர் பல உவமைகள் சொன்னார். செம்மரிகளையும், வெள்ளாடுகளையும் பிரிப்பேன். செம்மரியாடுகள் விண்ணகம் செல்ல, வெள்ளாடுகள் எரிநரகத்தில் எறியப்படும் என்றார்.

மூன்றாவது தொழில், வணிகம். நல்ல வணிகன் ஒரு நல்ல முத்தைக் கண்டடைவான். வணிகனின் கையில் நாம் ஒரு நல்ல முத்தாக இருக்க வேண்டும். அப்போது தான் விண்ணக வாழ்க்கை சாத்தியமாகும். விலைமதிப்பற்ற, போலித்தனமான முத்துகள் புறங்கையால் ஒதுக்கப்படும் என்றார்.

நான்காவது மீன்பிடி தொழில். இந்த உவமையில் நல்ல மீன்கள் கெட்ட மீன்கள் என தரம்பிரிக்கப்படும். நல்ல மீன்கள் மட்டுமே விண்ணகம் செல்லும் என்றார்.

விண்ணரசுக்கான உவமைகளில் கடைசியாக இந்த உவமையைச் சொல்லி, இதுவரை இறையரசின் செய்திகளைக் கேட்ட நீங்கள் மனம் திரும்பாவிடில் நீங்கள் நரகத்துக்கே தகுதியானவர்கள் என்கிறார் இயேசு.

தூதர்கள் விண்ணகத்தின் பிரதிநிதிகள். நல்ல விஷயங்களை மண்ணுலகிற்குப் பகிர்ந்தவர்கள். இயேசுவின் பிறப்பை அறிவித்ததும் அவர்கள் தான். இயேசுவின் உயிர்ப்பை அறிவித்ததும் அவர்கள் தான். நமக்கு பாதுகாவலர்களாய் இருப்பவர்களும் அவர்கள் தான். ஆனால் கடைசியில் நம்மை தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போவதும் அவர்கள் தான் !!!

நமது வாழ்வின் கடைசி வரை நமக்கு நன்மை செய்யவும், நன்மையைச் சொல்லவும் வழிகாட்டவும் இருக்கும் தூதர்கள் கடைசியில் நமக்கு தீர்ப்பிட வருவார்கள். அப்போது அவர்கள் சற்றும் வழுவாத நீதியுடன் செயல்படுவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதே போல இறைவார்த்தை நமக்கு வாழ்வளிக்கிறது. இறுதியில் அந்த வார்த்தையே நமக்கு தீர்ப்பிடும் வாளாகவும் மாறிவிடும் என்கிறது பைபிள். எனவே இறைவார்த்தையைக் கேட்கின்ற இந்த காலத்தில் நாம் மனம் திரும்பி இறைவனின் வழியில் வரவேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு.

உலகத்தின் முடிவு நிச்சயம் உண்டு. ஒவ்வொருவருடைய மரணமும், அவருடைய‌  உலகத்தின் முடிவு. இறுதித் தீர்ப்பு இறைவன் முடிவு செய்யும் நாளில் நடக்கும். இப்போது வலை வீசப்பட்டுள்ளது. இந்த வலைக்குள் நுழைந்து இறைவனின் எல்லைக்குள் பிரியத்துடன் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.

இறைவனுக்கு ஏற்புடைய நல்ல‌ மீன்களாக வாழும் ஒவ்வொருவரும் இறைவனின் கூடையில் நுழைவது நிச்சயம். இறைவார்த்தையைக் கேட்டபின்பும் கெட்ட மீன்களாகவோ அல்லது இரண்டாங்கெட்டானாகவோ வாழ்பவர்கள் முடிவில்லா நெருப்பில் விழப் போவதும் சர்வ நிச்சயம்.

வலைவாழ்வே நிலைவாழ்வு !

மனம் வருந்துவோம்

உடன் திருந்துவோம்.

இயேசு சொன்ன உவமைகள் 8 : வழி தவறிய ஆடு

Image result for lost sheep parable

லூக்கா 15 : 4..7

(புதிய மொழிபெயர்ப்பு )

“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

( பழைய மொழிபெயர்ப்பு )

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டு பிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

( இதே உவமை மத் 18:12 ‍ 14 பகுதியிலும் உண்டு )
இயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விஷயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார்.

ஒருவரையும் சிறியவராய் எண்ணக் கூடாது, இறைவனின் பார்வையில் எல்லோரும் மதிப்பு மிக்கவர்கள். எந்த ஒரு மனிதனும் தனது மீட்பை இழந்து விடக் கூடாது என்பதே இறைவனின் விருப்பம். என்பதே இந்த உவமையில் இழையோடும் சிந்தனையாகும்.

இந்த உவமையில் இயேசுவே மேய்ப்பனாக இருக்கிறார். அவரிடம் நூறு ஆடுகள் இருக்கின்றன. அவரிடம் இருக்கும் ஆடுகள், அவரை நம்பி அவரை மீட்பராக ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கிறது. இயேசுவை விட்டு விலகி பாவத்தின் வழியில் நடப்பவர் தான் வழி விலகிப் போன ஆடு.

விலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது.

வரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த சூழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.

விண்ணக மாட்சியை விட்டு, மண்ணுலகில் மனிதனாய் வந்து, சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன் அவர். “என் வேலை முடிஞ்சது, இனி வேணும்ன்னா நீயா மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கைடுல் மீண்டும் அவர் தேடி வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் கரிசனையும் தெரிகிறது.

ஆட்டுக்கு ஒரு இயல்பு உண்டு. அது சும்மா வழிதவறி விடாது. அருகில் ஏதேனும் புல்லைப் பார்த்தால் அந்தப் பக்கம் தாவும், அங்கிருந்து இன்னொரு அழகிய புல் கூட்டத்தைப் பார்த்தால் அங்கே போகும், இப்படியே சென்று கொண்டிருக்கும் ஆடு, தாமதமாகத் தான் புரிந்து கொள்ளும் தான் வழி விலகிவிட்டோம் எனும் உண்மையை !

ஊரில் ஆட்டுக்குட்டியைக் காணோமெனில் சொல்வார்கள், “பக்கத்து மரச்சீனித் தோட்டத்துல பாரு, இல்லேன்னா சானல் கரைல புல் கூட்டத்துல போய் பாரு” என்று. ஆடு புல்லைத் தேடியோ இலையைத் தேடியோ தான் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

உலக செல்வத்தையும், உடனடிச் சிற்றின்பங்களையும் நாடித் தேடி ஓடும் மக்கள் இப்படித் தான் வழி விலகுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு படி, இன்னொரு படி என தாவித் தாவி அவர்கள் உலக சிற்றின்பங்களில் சிக்கிக் கொள்கின்றனர். கடைசியில் மந்தையை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகின்றனர்.

ஒரு சின்ன கோணப் பிழை கப்பலை பல மைல் தூரம் வழிவிலகச் செய்து விடும். முதலில் சிறிதாக இருக்கும் இடைவெளி போகப் போகப் பெரிதாகிவிடும். கடைசியில் எங்கே நிற்கிறோம் என்பதே புரியாமல் வெலவெலக்கும் சூழல் உருவாகும்.

ஆடு, நாயைப் போல மோப்பம் பிடிக்காது. வழி விலகிவிட்டால் பதறிப்போகும். மே..மே எனும் அபயக் குரல் மூலம் யாரையேனும் தொடர்பு கொள்ள முயலும். அந்தக் குரல் கொடிய விலங்குகளை அடைந்தால் மரணம் சர்வ நிச்சயம். மந்தையிலுள்ள ஒரு ஆட்டுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் தப்பிவிடலாம்.

ஆடுகளின் தொடர்பு அப்படித் தான் இருக்கும். எங்கிருந்தோ குரல் கொடுக்கும் குட்டி ஆட்டின் குரலுக்கு அன்னையின் குரல் மறு முனையிலிருந்து வழிகாட்டும். அது தான் அந்த ஆட்டை மீண்டும் மந்தையில் சேர்க்கும். அல்லது மேய்ப்பனின் குரல் கேட்க வேண்டும்.

இங்கே ஆடு, தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. அதைத் தேடி வருகிறார் மேய்ப்பன். ஆட்டைக் கண்டு பிடிக்கிறார்.

ஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போடுகிறார். நடக்கிறார்.

ஒரு ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.

ஆட்டைச் சுமந்து வரும் மேய்ப்பன் நேரடியாக வீட்டுக்குச் சென்று அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து விருந்து வைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது. கொண்டாடுகிறது.

99 ஆடுகளையும் மேய்ப்பன் உதாசீனம் செய்யவில்லை, அவர்களை மந்தையாய் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஆட்டைத் தேடிச் செல்கிறார்.

நமது வாழ்க்கையில் நாம் தவறிய ஆட்டைப் போல இருக்கிறோம் என்பது இதயத்தால் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை வைத்தே கணக்கிடப்படும். நூறு பேர் இருக்கின்ற ஒரு திருச்சபையில், ஒருவர் மட்டும் இதயத்தால் மற்றவரை விட தொலைவில் இருக்கலாம். ஆங்காங்கே சிதறி இருக்கும் நூறு பேர் இதயத்தால் இணைந்தே இருக்கலாம். பாவ வழியினால் இயேசுவின் இதயத்தை விட்டு விலகி இருக்கும் மக்களை இறைவன் தேடிவருகிறார்.

Image result for lost sheep parable

இந்த உவமை சில முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது.

Image result for lost sheep parable1. இறைவனின் பார்வையில் சிறியவர் என்று யாரும் இல்லை. எல்லோரையும் இறைவன் நேசிக்கிறார். தன்னை நோக்கி அழைப்பவர்களை எல்லாம் அவர் அரவணைக்கிறார்.

Image result for lost sheep parable2. உலக தற்காலிக இன்பங்களில் பார்வையை வைக்கும் போது நாம் இறைவனை விட்டு விலகிவிடுகிறோம். சில வேளைகளில் பேதுருவைப் போல, உயிர்மீதான அச்சத்தால் விலகிவிடுகிறோம்.

Image result for lost sheep parable3. வழிவிலகிவிட்டால் உடனடியாக இறைவனை நோக்கிக் குரல் கொடுக்க வேண்டும். இறைவன் நம்மை மீண்டும் வந்து மீட்டுக் கொள்வார்.

Image result for lost sheep parable4. இறைவனை அடைந்தபின் அவரோடு கலந்திருப்போம். அவருடைய தோளில் அமர்ந்திருப்போம். இது இறைவார்த்தையின் மீது நாம் பயணம் செய்வதை சுட்டுகிறது.

Image result for lost sheep parable5. விண்ணகம் நமது மனந்திரும்புதலினால் மகிழ்கிறது. விண்ணகத்தை மகிழ்ச்சியாய் வைத்திருக்க தூதர்களால் கூட முடியாது. ஆனால் மனந்திரும்பும் ஒரு பாவியால் முடியும் என்பது எவ்வளவு பெரிய நற் செய்தி !!

Image result for lost sheep parable6. மந்தையை விட்டு விலகாமல் இருப்போம். எப்போதும் ஆன்மீக நண்பர்களோடு தொடர்பில் இருப்போம். வழி விலகுகையில் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.

Image result for lost sheep parable7. நம்மை மீட்ட இறைவனைக் காயப்படுத்தும் பாவ வழிகளில் மீண்டும் நுழையாதிருப்போம்.

 
நீ
வழி தவறிய ஆடு.
இயேசுவையே நாடு.

*

இயேசு சொன்ன உவமைகள் 9 : தலைவனும், பணியாளரும்

Image result for master and servant parable

லூக்கா 17 : 5..10

( புது மொழிபெயர்ப்பு )

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

( பழைய மொழிபெயர்ப்பு )

அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

சீடர்கள் இயேசுவிடம் வந்து “எங்களது விசுவாசத்தை அதிகப்படுத்தும்” என கேட்கின்றனர். இயேசு அவர்களுக்கு நேரடியாக ஒரு பதிலைச் சொல்லாமல் ஒரு உவமையைச் சொல்கிறார். அதற்கு முன் விசுவாசத்தின் வலிமையை ஒரு வசனத்தில் விளக்குகிறார்.

கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும், நிலத்தில் நிற்கும் மரத்தை வேரோடு பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில் என சொன்னால் அது கீழ்ப்படியும் என்கிறார் இயேசு. சற்றும் சாத்தியமில்லாதது போலத் தோன்றும் இது விசுவாசத்தினால் சாத்தியம் என்கிறார் இயேசு.

உலகப் பாவத்தில் நிலைத்திருக்கும் மனிதன், அப்படியே பிடுங்கப்பட்டு திருமுழுக்கு எனும் நீருக்குள் அமிழ்த்தப்பட்டு அங்கே வேரூன்றி வளர்வான். கனிகொடுப்பான் எனும் ஆன்மீக விளக்கமாகவும் இதைக் கொள்ளலாம்.

அதன்பின் இயேசு இந்த தலைவர், பணியாளர் உவமையைச் சொல்கிறார். ஒரு பணியாளன் வெளியே கடுமையான, உடல் உழைப்பைச் செலுத்தி விட்டு வந்தாலும் வீட்டில் தலைவன் இருந்தால் அவனுக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும். அதை விட்டு விட்டு பிரதிபலன் எதிர்பாக்கக் கூடாது என்கிறார்.

இந்த உவமை இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.

Image result for jesus

  1. விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் செய்யவேண்டியது ஒன்று தான்.

எப்போதும் இறைவனுக்குப் பணிசெய்யும் மனநிலையில் இருப்பது. தனக்கென எந்த விருப்பு வெறுப்பையும் வைக்காமல் எல்லாவற்றையும் இறைவனில் சமர்ப்பித்து அவருக்காகவே வாழ்தல். அவரிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்து வாழ்தலல்ல. முழுமையாய் இறையில் சரணடைந்து வாழ்தல்.

பணிசெய்து வருகிறான் பணியாளன். வீட்டில் தலைவர் இருக்கிறார். உடனே மனமகிழ்ச்சியோடு, இடையைக் கட்டிக்கொண்டு, அதாவது பணியாளனுக்குரிய உடையோடு, பணி செய்கிறார். அதில் மகிழ்ச்சியடைகிறார். எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இப்படிப்பட்ட எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற இறை அர்ப்பணிப்பு, விசுவாசத்தை அதிகரிக்கும். அல்லது விசுவாசம் அதிகரிப்பதன் வெளிப்பாடாய் இந்த அர்ப்பணிப்பு நடக்கும் என்பது ஒரு செய்தி.

  1. Image result for jesusஇரண்டாவதாக, ஒரு பணியாளன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உவமையாகவும் இது இருக்கிறது.

விசுவாசம் வல்ல செயல்களைச் செய்யும். ஆனால் அந்த செயல்களினால் எந்த விதமான கர்வமும் பணியாளனின் மனதில் நுழைந்து விடக் கூடாது. கர்வத்தை அனுமதிக்காமல், இடையில் கட்டிக் கொண்டு பணி செய்கின்ற மனநிலையோடே எப்போதும் இருக்க வேண்டும்.

“எல்லா” பணிகளையும் செய்து முடித்த பின்பும் கூட, “என் கடமையைத் தான் செய்தேன்” என பணிவுடன் சொல்லும் மனநிலையே பணியாளனின் மனநிலை. அந்த பணியை மகிழ்வுடனும், அர்ப்பணிப்புடனும் செய்வதே உண்மையான பணியாளனின் அடையாளம்.

அத்தகைய தன்மை பணியாளர்களிடம் இருக்க வேண்டும் என்கிறார் இயேசு.

“தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என லூக்கா 12:37 ல் இயேசு சொல்கிறார்.

அதாவது, அர்ப்பணிப்புடன் பணிசெய்கின்ற ஊழியர்களை இயேசு அங்கீகரிக்கிறார். அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்குகிறார். ஆனால் “இதைச் செய்ததால் எனக்கு இது கிடைக்க‌ வேண்டும்” என பிரதிபலன் கேட்கும் மனநிலை இருப்பவர்களை அவர் விட்டு விடுகிறார். எதையும் எதிர்பாராமல் அன்பின் வெளிப்பாடாய் பணி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

இந்த உவமை சொல்லும் அடிநாதமான இன்னொரு விஷயம், மீட்பு என்பது செயல்களின் அடிப்படையில் கிடைப்பதல்ல. இறைவனில் சரணடைதலில் கிடைப்பது மட்டுமே எனும் உண்மை !!!

மோசேயின் வாழ்க்கையில் அவர் இந்த மனநிலையில் இருந்தார் என்பதைப் பார்க்க முடியும். இறைவனின் துணையுடன் வல்ல செயல்களைச் செய்தவர் அவர். இஸ்ரயேலரின் மீட்பின் பயணத்தில் மோசேயைத் தவிர்த்து விட்டு எதையும் பார்க்கவே முடியாது. ஆனால் கடவுள் அவரிடம், “நீ கானானுக்குள் நுழைய முடியாது” என சொன்னபோது எதுவும் மறுத்துப் பேசவில்லை.

“எனது பணியை செய்தேன். பயனற்ற ஊழியன் நான்” எனும் மனநிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அத்தனை நீண்ட நெடிய ஆண்டுகள் துயரத்தின் பாதையில் கடந்து வந்தாலும் தனக்கு ஒரு ஆசுவாசமான முடிவு வேண்டும் என அவர் வாதிடவில்லை. அவருடைய வாழ்க்கை இதன் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

இந்த சிந்தனைகளை, இந்த உவமையிலிருந்து பெற்றுக் கொள்வோம்.