தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பயன் !

ஆண்டு இறுதித் தேர்வு வந்தாலே போதும் பள்ளி மாணவர்களெல்லாம் எதோ கொள்ளி வாய்ப் பிசாசு கொல்லையில் காத்திருப்பது போல வெலவெலக்கத் துவங்குவார்கள். அரக்கப் பரக்க ஓடுவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும். 

பையனுக்கு எக்ஸாம் இருக்குல்ல..” என்று தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருப்பார்கள். அந்த பரபரப்பை அப்படியே பிள்ளைகளுடைய தலையிலும் ஏற்றி விடுவார்கள். ஒரு துரும்பைத் தூக்கி தூரமாய்ப் போடும் வேலையைக் கூட பிள்ளைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். “படி.. படிஎன்று பிள்ளைகளுடைய காதைச் சுற்றி பெற்றோரின் குரல் ஸ்டீரியோ சரவுண்ட் சிஸ்டம் போல ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அத்துடன் விட்டாலாவது பரவாயில்லை. மாமா பையன் மகேஷை விட நீ ஒரு மார்க்காவது அதிகம் வாங்கணும்டா. அத்தை பொண்ணு இலக்கியாவைக் காட்டிலும் அரை மார்க்காவது அதிகம் வாங்கணும்டி என தங்கள் பழி தீர்க்கும் படலத்துக்கு பிள்ளைகளை வைத்துக் காய் நகர்த்துவார்கள். 

கிளாஸ்ல நீ தான் ஃபஸ்ட்டா வரணும், ஸ்டேட் ரேங்க் வரணும், கணக்குல நூத்துக்கு நூறு வாங்கணும்இப்படி இந்த தேர்வுக் காலம் முழுவதும் மாணவர்களைச் சுற்றி எப்போதும் இல்லாத அழுத்தமான சூழல் உருவாகிவிடும். பெரும்பாலும் இத்தகைய அழுத்தங்களில் விழுந்துவிடும் மாணவர்கள் தங்கள் திறமையை விடக் குறைவான மார்க்கையே வாங்குவார்கள் என்கிறது உளவியல்.

கல்வி ரொம்ப முக்கியமானது. ஆனால் கல்வி என்பதை மார்க் ஷீட் தீர்மானிப்பதில்லை. முன்பெல்லாம் மாணவர்கள் குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு குருவைக் கண்டு பிடித்தால் அந்த குருவுடனே பல ஆண்டுகாலம் தங்கினார்கள். அங்கேயே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கல்வி கற்றார்கள். அப்போது கல்வி என்பது நல்லொழுக்கம், பணிவு எனும் இரண்டு படிகளைத் தாண்டியபிறகே கலைகள் கற்கும் நிலைக்கு வரும் !

ஒரு வருடம் கல்வி. அதன்பின் தேர்வு. தேர்வு முடித்ததும் புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு மூளையைக் கழுவிக் காயப் போடும்இன்றைய கல்வி முறை அன்றைக்கு இல்லை. வாழ்க்கைக்குக் கல்வி எனும் அடிப்படை விஷயத்தையே அன்றைய பாடம் போதித்தது !

கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகவானாக மாற்ற வேண்டும். சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குரிய நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டும் என்பதே பால பாடம். அந்தக் கல்வி அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டப் பயன்படுவது அடுத்த கட்டம்.

இந்த வரிசை மாறும் போது தான் சிக்கல் உருவாகிறது. கல்வி என்பது வேலைக்கான சாவி என்று இன்றைய மாணவர்கள் நினைக்கிறார்கள். சுரண்டிப் பார்த்து நம்பர் வந்தால் வெற்றி என கொண்டாடும் லாட்டரிச் சீட்டு போல சிலர் பார்க்கிறார்கள். அதனால் தான் மதிப்பெண் குறைந்து விட்டால் கற்ற கல்வியே பயனில்லாதது என கருதி விடுகிறார்கள். 

இந்த மார்க் எடுக்கவா உன்னை விழுந்து விழுந்து கவனிச்சேன் வெளங்காதவனேஎன வசவுகள் வருவதன் காரணமும் இது தான்.

இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. காரணம் இன்றைய சமூகம் அதை எதிர்பார்க்கிறது. ஆனால் அதையே வெற்றியின் எல்லைக் கோடாகக் கருதிவிட வேண்டாம் என்பதே நான் சொல்ல வரும் விஷயம்.

மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டும் எனும் ஆர்வம் ஆயிரம் பேருக்கு இருக்கலாம். ஓரிருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக மிச்சம் தொள்ளாயிரத்துத் தொன்னூற்றுச் சொச்சம் பேரும் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லையே ! எனவே வெற்றி என்பதை மதிப்பெண் கொண்டு அளக்காதீர்கள். உங்கள் குணாதிசயங்கள், இயல்புகள், அறிவு, தன்னம்பிக்கை இவற்றைக் கொண்டு அளக்க வேண்டும்.

தன்னம்பிக்கை உடைய இளைஞன் பள்ளியில் தோற்றால் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுவான். அவன் தன்னுடைய கல்வியின் மூலமாக பெற்ற மூலதனம் அவனுடைய தன்னம்பிக்கை ! காகிதத்தில் எழுதி வைத்த மதிப்பெண் அல்ல.

அறிவியல் மேதை ஐன்ஸ்டீனை உலகமே கொண்டாடுகிறது. காரணம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகள். ஆனால் அவர் படிப்பில் சுமார் தான் தெரியுமா ? ஐன்ஸ்டீனை உலகுக்கே தெரியும். அவருடைய காலத்தில் ஸ்டேட் ஃபஸ்ட் வாங்கிய மாணவன் பெயர் உங்களுக்குத் தெரியுமா ?

ஐசக் நியூட்டனைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அவரொன்றும் வகுப்பில் முதல் மாணவனாக வந்தவரல்ல. அவருடைய பள்ளியில் முதல் மாணவன் யார் என்பது யாருக்காவது தெரியுமா ? 

தாமஸ் ஆல்வா எடிசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர்முட்டாள்என்று பள்ளிக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் காலத்தில் படித்து முதல் மாணவனாக வந்து பதக்கம் குத்திக் கொண்டவர்களில் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம் !

வாழ்க்கை தான் ஒரு மனிதனுடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையை அவன் எப்படி அணுகுகிறான் என்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியடைந்தவனிடம் யாரும் போய்உனக்கு ஸ்கூல்ல என்ன மார்க் ?” என கேட்பதில்லை. வாழ்க்கையில் தோல்வியடைந்தவன், “நான் ஸ்கூல்ல கோல்ட் மெடலிஸ்ட்டாக்கும்என்று சொல்லிக் கொள்வதிலும் பயனில்லை ! போன வருஷம்  பதக்கம் வாங்கியவனைக் கூட யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை.  

கல்வி நமக்கு அறிவைத் தரவேண்டும். வாழ்க்கையில் நிகழ்கின்ற சிக்கல்களைப் பக்குவத்துடன் கையாளும் மனநிலையைத் தரவேண்டும். உலகமும் அதைத் தான் எதிர்பார்க்க்கிறது. அதனால் தான் படித்தவன் ஒருவன் தப்பு செய்யும் போது, “படிச்சவன் மாதிரியாய்யா நடந்துக்கறேஎனும் கோப வாக்கியங்கள் எழுகின்றன. 

கல்வியில் தோற்றதற்காகவோ, மதிப்பெண் குறைந்ததற்காகவோ ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுடைய கல்வியால் என்ன பயன் ? அவனுடைய கல்வி அவனுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் தரவில்லை ! வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைத் தரவில்லை. மொத்தத்தில் அவனை ஒரு கோழையாய் உருவாக்கியிருக்கிறது. 

கல்வி எப்போதும் முடிவதில்லை. கடைசிப் பரீட்சையுடன் அது முடிகிறது என்று கருதுவோர் அறிவிலிகள். கல்வி வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தரும். அந்த அனுபவப் பாடத்துக்கு வலிமை அதிகம்.

நீதிக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும் நமக்கு ஏன் கற்பிக்கிறார்கள் ? நமது குணாதிசயம் மனித மதிப்பீடுகளின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்பப் பட வேண்டும் என்பதற்காகத் தான். வாழ்வின் ஒவ்வோர் தருணத்திலும் சரியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சக மனித கரிசனையில் வாழவேண்டும் என்பதற்காகத் தான்.

இந்த சிந்தனைகளை மாணவர்கள் முதலில் மனதில் இருத்த வேண்டும். பெற்றோர் அதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதை மாணவர்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அப்போது தான் கல்வி தன் முழு பயனை அடையும்.

வளமான தேசத்தை கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்டு தான் எடை போடுவார்கள். அதிகம் கல்வியறிவு பெற்ற மக்கள் இருக்கும் தேசம் வளர்ச்சியான பாதையை நோக்கிச் செல்கிறது. கல்வியறிவில் பின் தங்கும் தேசம் தனது தோல்விகளை நோக்கிய பயணத்தையே தொடர்கிறது !

கல்வி நமது மூடநம்பிக்கைகளை அகற்றி அனைத்தையும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் அணுகும் மனநிலையைத் தரவேண்டும். கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்றாமல் அனைத்தையும் தெளிவான மனநிலையில் கேள்வி கேட்கும் அறிவையும் அது தரவேண்டும். அது மாணவர்களிடையே பொறாமையையும்,  வெறுப்பையும் வளர்க்கக் கூடாது. ஒருவரை விட இன்னொருவர் சிறந்தவர், உயர்ந்தவர், வல்லவர் எனும் சிந்தனைகளை உருவாக்கும் பணியைச் செய்யவே கூடாது. 

அதே போல கல்வி என்பது வெறுமனே வாசித்து விட்டு, அதைப் பிரதியெடுக்கும் ஜெராக்ஸ் வேலையைச் செய்யக் கூடாது. புரிந்து படிக்கும் நிலை உருவாக வேண்டும். கல்வி முறையின் மாற்றம் மாணவர்களை, தலைமைப் பண்புகள், குழுவாய் இணைந்து செயல்படும் தன்மை, நிர்வாகத் திறமை போன்றவற்றிலும் சிறந்தவர்களாக்க வேண்டும். என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாடங்கள் வசீகரிக்காதபோது மாணவர்கள் அதை அரவணப்பதில்லை. மாணவர்களுடைய விருப்பம் பெரும்பாலும் பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை. “நாளைக்கு நாலு பேரு மதிக்கணும்என்பது தான் பெற்றோருடைய தாரக மந்திரம். அதனால் தான் குழந்தைகள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற துறைகளை விட்டு விட்டு வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தால் பெற்றோர் குதிக்கிறார்கள்.

சமூகம் தன் பங்குக்கு மன அழுத்தங்களை இளைஞர்களின் மனதில் திணிக்கிறது. மாய பிம்பங்களையே மாணவர்கள் பெரும்பாலும் பார்க்கின்றனர். வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்களுக்கு பெற்றோரும் சமூகமும் கற்றுக் கொடுக்க வேண்டும்.  

சில வேளைகளில் அந்த அழுத்தம் சக மாணவர்களிடமிருந்தும் வருவதுண்டு. அத்தகைய நண்பர்களைவிட்டு விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்களும் மாணவர்களை விமர்சிக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தும் செயலையே முக்கியமாய்ச் செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை இத்தகைய செயல்பாடுகள் கழுவிக் கரைத்து விடும்.

கல்வி நமக்கு அறிவைத் தருகிறது. அத்துடன் நமக்கு நல்ல சிந்தனைகளும், உணர்வுகளும் இருக்கும் போதுதான் கற்ற கல்வி முழுமையடைகிறது. வெறுமனே அடைத்து வைக்கும் அறிவு, மூளையை ஒரு லைப்ரரி ஆக்கலாம். ஆனால் ஒரு முழுமையான மனிதனாக்க முடியாது. படித்தவர்கள் சமூக விரோதிகளாகவும், வங்கிக் கொள்ளையர்களாகவும், மக்களை ஏமாற்றும் மனிதர்களாகவும் மாறும் போது கல்வி கேலிக் கூத்தாகி விடுகிறது இல்லையா ?

எனவே நல்ல குணாதிசயங்களையும், தன்னம்பிக்கையையும் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கி வையுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ஆனந்தமான சாலைகளை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது. நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

தோல்வி என்பது மரணமல்ல. 

மரணம் என்பது தான் தோல்வி

தன்னம்பிக்கை : நேர்மை பழகு

எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லைநூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது.

எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை. நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் நெட்டோட்டம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம். அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம்.

சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை.

நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட பையைத் திருப்பித் தரும் ஆட்டோக்காரர் நம் கண்ணுக்கு வியப்பின் சின்னமாகத் தெரிகிறார் !

நேர்மையை விதைப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும். ஆனால் நேர்மையாய் இருப்பதும், உண்மையாய் இருப்பதும் எளிதா ? கேட்பதற்கு எளிமையாய் தோன்றினாலும் நிஜமான வாழ்க்கையில் மிகவும் கடினமான விஷயம் இது ! இதைப் பின்பற்ற வேண்டுமானால் உறுதியான மனம் ரொம்ப அவசியம்.

அன்றாட வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த மன உறுதியைக் காற்றில் பறக்க விட்டு விடுகிறோம். நம்மிடம் ஏதும் தப்பு இல்லை என்று சாதிப்பதற்காக சில வேளைகளில் உண்மையை மறைக்கிறோம்.

அடுத்தவர்களுடைய தோள்களில் பழியைச் சுமத்த பல வேளைகளில் நேர்மையை கைவிடுகிறோம். தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் எளிய வழி நேர்மையைக் கைவிடுவது தான் என பலவேளைகளில் முடிவுகட்டி விடுகிறோம்.

பிறருக்கு முன்னால் அவமானப்படக் கூடாதே என்பதற்காக சில வேளைகளில் பொய் முகமூடி போடுகிறோம்.

வறட்டுக் கவுரவம் கூட பல வேளைகளில் நம்மைக் குறித்தும், நமது பின்புலத்தைக் குறித்தும் அடுக்குப் பொய்களை வாரி இறைக்க காரணமாகிவிடுகிறது.

சிலருடன் கருத்து வேற்றுமை வரக் கூடாதே என்பதற்காக பொய்க்கு வக்காலத்து வாங்கி மௌனமாய் இருக்கிறோம்.

சிலவேளைகளில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட உண்மையை மறைக்கவும், நேர்மையை விலக்கவும் செய்கிறோம்.

இப்படி பல வேளைகளில் நம்முடைய மனதின் உறுதி கொஞ்சம் ஒளிந்து கொள்ள நேர்மையும் கூடவே காணாமல் போய் விடுகிறது. மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை பொருளாதாரமல்ல, மதிப்பீடுகளே. நல்ல மதிப்பீடுகளின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரம்.

எந்த ஏரியாவில் நீங்கள் அதிகம் பொய் சொல்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கே உங்களுடைய தடுமாற்றத் தளம் புரிந்து விடும். அது ஒரு குறிப்பிட்ட சூழலாய் இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட நபரிடமாய் இருக்கலாம். எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டால் உங்கள் நேர்மையையும், உண்மையையும் அந்த இடத்தில் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

பண விஷயத்தில் தான் நேர்மையற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை விலக்க என்னென்ன செய்ய முடியும் என யோசியுங்கள். நேர்மையான மனம் கொள்ளும் நிம்மதி அளவிட முடியாதது. வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றுவது முதல் மனைவியிடம் பொய் சொல்வது வரை என்னென்ன என்பதை சிந்தியுங்கள். மன்னிப்புக் கேட்கவோ, உங்களுக்குச் சொந்தமில்லாததை திருப்பிக் கொடுக்கவோ தயங்கவே தயங்காதீர்கள்.

பொய் பயத்தின் பிள்ளை. மிகுந்த தைரியசாலிகளே நேர்மையாளர்களாய் இருக்க முடியும். உங்களுடைய பலவீனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியமானாலும் சரி, மேலதிகாரியிடம் உண்மையைச் சொல்லும் கம்பீரமானாலும் சரிநேர்மையின் பின்னால் தைரியம் இருக்கிறது. அச்சமற்ற மனதில் மட்டுமே நேர்மையும், உண்மையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். எனவே நேர்மையினால் எழும் விளைவுகளைச் சந்திக்கலாம் எனும் மனதிடம் கொள்ளுங்கள்.

நேர்மையாளர்களைபொழைக்கத் தெரியாதவன்என உலகம் வெளியில் பேசினாலும் அவர் மீது உயரிய மரியாதையை சமூகம் வைத்திருக்கும். அவருடைய வார்த்தைகளுக்கு அசையாத ஆணியின் நம்பிக்கையும் இருக்கும்.

உண்மையாய் இருக்க வேண்டுமெனில் உண்மையாய் சிந்திக்கவும் வேண்டும். கண்களால் காணாதவற்றை வாயால் அறிக்கையிடாமல் இருப்பது நல்லது. பலருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் பலவற்றைக் கற்பனை செய்து கொள்வதும், காதில் கேட்பவற்றுக்கு ஆடைகட்டி அலைய விடுவதும் தான். கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும்உண்மையின் மனம் கொண்டு வாசிக்கப் பழகினால் உங்கள் செயல்களிலும் அது வெளிப்படும்.

இப்படியாய் இருக்கலாம்”, “இதுவாக இருக்கலாம்”, “அப்படி நடந்திருக்கலாம்போன்ற கணிப்புகள் பெரும்பாலும் நேர்மையற்ற உரையாடல்களுக்கு முதல் சுவடு எடுத்து வைக்கும். அதைத் தவிர்ப்பது நேர்மையான பார்வையின் அடையாளம்.

சின்னச் சின்ன விஷயங்களில் பொய் சொல்வது தவறில்லை என்பது பலரும் நினைக்கும் ஒரு தப்பான விஷயம். ஒரு பொய் ஒரு பொய் தான், அது எப்போதுமே உண்மையாவதில்லை. அது பக்கத்து வீட்டு ரோஜாவில் பறித்த பூவுக்காகவும் இருக்கலாம், அலுவலகத்தில் திருடிய பென்சிலாகவும் இருக்கலாம். பொய் பொய் தான். சின்ன விஷயங்களில் நேர்மையாய் இருக்கப் பழகினால் பெரிய விஷயங்களிலும் அந்தப் பழக்கம் வந்து ஒட்டிக் கொள்ளும். எனவே சின்ன விஷயங்களிலிருந்தே உண்மை சொல்வதை ஆரம்பியுங்கள்.

பிறரைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்களைவெள்ளைப் பொய்கள்என்று சொல்வார்கள். பொய்மையும் வாய்மையிடத்து என வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்களையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. “இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்குஎன்பது போன்ற பொய்கள் யாரையும் காயப்படுத்தாது. ஆனாலும் அது உங்களுடைய உண்மைக் குணத்தை கறைப்படுத்தும். சொல்ல முடியாத மனநிலையெனில் அமைதி காப்பது நல்லது.

நேர்மையாய் இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல குணாதிசயத்தை உருவாக்கித் தரும். நீங்கள் தொடர்ந்து நேர்மையை நேசிக்கும்போது உங்கள் மீதான நம்பிக்கை பல மடங்கு வலுவாகும். உங்கள் வாழ்க்கையை பிறர் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கவனிக்கத் துவங்குவார்கள். நீங்கள் பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவே மாறிப் போவீர்கள்.

சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. அது நேர்மையாளராய்க் காட்டும் என்பது பொதுவான கருத்து. உண்மையில் அப்படியல்ல. பக்கத்து வீட்டுப் பையன் தம் அடிக்கும் விஷயத்தை மறைப்பதை விடச் சிறந்தது பெற்றோரிடம் உரைப்பதே !

ஒரு செயலைச் செய்கிறீர்களெனில் அது உங்களைப் பிறகு பொய் சொல்ல வைக்குமா என்பதை யோசியுங்கள். அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என்பது பெரியவர்கள் சொல்லும் வழி. திருட்டுத் தனமான செயல்கள் உங்களை நிச்சயம் பொய்சொல்ல வைக்கும். எனவே செயல்களில் நேர்மையைப் புகுத்துங்கள்.

பாதி உண்மை என்பது ஒரு முழு பொய் ! உண்மை என்பது முழுமையானது. கொஞ்சம் உண்மை சொல்லிவிட்டால் உங்கள் மனசாட்சியின் கேள்வியிலிருந்து தப்பிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். உண்மையை பேசுங்கள். உண்மை எந்தக் கேள்வியைக் கண்டும் அஞ்சுவதில்லை.

ஒரு விஷயம் சொல்றேன் யார் கிட்டேயும் சொல்லாதீங்கஎன பீடிகையோடு வரும் நபர்களிடம்அந்த விஷயத்தை என்கிட்டேயும் சொல்லாதீங்கஎன நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் நல்லது. வெளியே சொல்லாத உண்மையும், பொய்யின் இன்னொரு வடிவமே.

பொய் சொல்வது நமக்குள்ளே நம்மை அறியாமலேயே குற்ற உணர்வை உருவாக்கிவிடும். கூடவே குழப்பத்தையும் தன்னம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கும். மனசு ரொம்பக் கனமாய் இருக்கிறது என்பவர்கள் பல வேளைகளில் உண்மைகளை நேசிக்காதவர்களாய் இருப்பார்கள்.

நேர்மை முளைவிட வேண்டிய முதல் இடம் குடும்பம். குடும்ப உறவினர்களிடையே பொய்கலக்காத உண்மை உரையாடல்களும், நேசமும் இருக்கும்போது அந்த வாசம் சமூகத்திலும் வீசும். பிரச்சினைகள் வருமோ என நினைத்து போலித்தனமாய் வாழ்வதை விட நேர்மையாய் வாழ்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பதே சிறப்பானது.

ஆபிரகாம் லிங்கன் இளம் வயதில் ஒரு கடையில் வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களிடம், அன்பாகவும், பணிவாகவும், நேர்மையாகவும் இருப்பதில் அவர் வல்லவர். ஒருமுறை நள்ளிரவில் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கையில் கணக்கு இடித்தது ! ஒரு நபருக்கு சில காசுகள் கம்மியாகக் கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தார். தாமதிக்காமல் கடையைப் பூட்டிக் கொண்டு வெகு தொலைவில் இருந்த அந்த நபரைத் தேடிப் போய் மிச்ச காசை கொடுத்து விட்டு வந்தார். நேர்மை என்பது அவருக்குள் வேர்விட்டு வளர்ந்திருந்தது.

நாம் பல வேளைகளில் எது உண்மை என்பதை விட, எதைச் சொல்லலாம் என்பதிலேயே கவனத்தைச் செலுத்துகிறோம். பல மனிதர்களை விட ஓடாத வாட்ச் நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது மிகச் சரியான நேரத்தை அது காட்டும்.

 நேர்மை பழகு

அதுவே அழகு

தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்

காலை முதல் மாலை வரையிலான ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். எத்தனை விவாதங்கள், எத்தனை பேரங்கள் ! எத்தனை கருத்து மோதல்கள். காலையில் காய்கறி வாங்குவதில் துவங்கி, அலுவலகத்தில் சம்பள உயர்வுக்காய் வாதிடுவது வரையில் எத்தனை விதமான உரையாடல்கள். இதில் எத்தனை சதவீதம் பேச்சுகளில் வெற்றி நமக்குக் கிடைத்திருக்கும் ?

நமது வாழ்க்கையின் ஒவ்வோர் படியிலும் ஏதோ ஒரு பேரமும், விவாதமும் காத்திருக்கிறது. அப்பாவிடம் அடம்பிடிக்கும் குழந்தையும், கணவனிடம் விண்ணப்பிக்கும் மனைவியும், மனைவியிடம் சமாதானம் பேசும் கணவனும் எல்லோருமே எதோ ஒரு விதத்தில் இந்த பேரத்தில் ஈடுபடுகிறார்கள்.

சிலர் இந்த விஷயங்களில் கில்லாடிகள். எந்த விதமான பேச்சிலும் தனது தரப்பு நாசூக்காய் வெற்றி பெறும்படி செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குபேசியே ஆளை மயக்கிடுவான்எனும் பட்டம் கிடைத்து விடும். இன்னும் சிலருக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. “இவனெல்லாம் பேரம் பேசினா தலையில மொளகா அரச்சுடுவாங்கஎனும் பட்டம் தான் மிஞ்சும். q

இது காய்கறிக் கடையிலோ, சந்தை வீதியிலோ மட்டும் நடக்கும் சங்கதியல்ல. இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கும் எல்லா பெரிய பெரிய நிறுவனங்களும் இந்தபேச்சு வார்த்தைப் பார்ட்டிகளால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் .டி நிறுவனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிளையண்ட்களை இழுக்கும் வடம் இழுக்கும் போட்டியை இவர்கள் வசீகர வார்த்தைகளால் நடத்துவார்கள். 

பேரம் பேசுதல் என நாம் சொல்லும் இந்தத் திறமையை ஆங்கிலத்தில்நெகோஸியேஷன் ஸ்கில்ஸ்என்கிறார்கள். இதைச் சின்ன விஷயமாக நினைத்து விடாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எந்த இடத்தை அடையப் போகிறீர்கள் என்பதை இந்தத் திறமை நிர்ணயிக்கப் போகிறது !

ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகிலேயே சிறந்த நெகோஷியேட்டர் விருது ஒன்றை வழங்கி வருகிறது. பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்டி அதிஷாரி க்கு கடந்த ஆண்டின் விருது வழங்கப்பட்டது.

இந்தத் திறமை ஏதோ வானத்திலிருந்து விழுகின்ற சமாச்சாரமல்ல, இதை நாமே வளர்த்தெடுக்க முடியும். அதற்கு ஏகப்பட்ட பயிற்சி நிலையங்கள் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கின்றன. உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் இத்தகைய பயிற்சி நிலையங்களுக்கு ஏகக் கிராக்கி. செலவும் எக்கச் சக்கம். அவை ஏதும் இல்லாமலேயே சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என சத்தியம் செய்கின்றனர் வல்லுனர்கள்.  

எல்லா பேரங்களுமே நான்கு நிலைகள் கொண்டது. தயாரிப்பு, தகவல் பரிமாற்றம், விவாதம், ஒப்பந்தம். இவையே அந்த நான்கு நிலைகள். 

எதைக் குறித்து பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், நமது தேவை என்ன ? எனும் மும் மூர்த்திகளைப் பற்றி ரொம்பத் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது முதல் தேவை. குறிப்பாக நீங்கள் பேசப் போகும் விஷயத்தின்மதிப்புஎவ்வளவு என்பதைப் பற்றி சரியான தகவல் கையில் இருக்கட்டும். பேரம் என்பது மாறி மாறி தங்கள் தரப்பை நியாயப் படுத்திக் கொண்டிருப்பதல்ல. தனது கருத்தை அடுத்தவன் ஏற்கச் செய்வது. அதுவும் அடுத்தவர் மனமுவந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சிறப்பாகத் தயாராகாமல் எந்த ஒரு பேரத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியாது. உங்கள் தேவை என்ன என்பதை மட்டும் பார்க்காமல், எதிர் நபருடைய தேவை என்ன என்பதையும் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அவருடைய தேவைகள் சந்திக்கப் படுவதன் மூலமாக உங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். அது தான் சிறந்த பேச்சு வார்த்தை ! 

நேர்மைஇங்கும் பிரதானமாகிறது ! நிறுவன பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரைஎது சாத்தியம்என்று சொல்வதைப் போலவே முக்கியமானதுஎது தன்னால் இயலாதுஎன்பதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்வது. நீங்கள் நேர்மையாய் உண்மையாய் இருக்கிறீர்கள் என்பது தெரிந்தபிறகே எதிர் தரப்பும் உண்மையாய் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருமுறை நீங்கள் சொல்லும் கருத்தில் நிலைத்திருங்கள். உங்கள் கருத்தை நீங்களே  மறுத்துப் பேசினால் எல்லாம் போச்சு. உங்கள் மீதான நம்பகத் தன்மை அதல பாதாளத்தில் விழுந்து விடும். ஒருவேளை மறுத்தே ஆகவேண்டிய சூழல் நேர்ந்தால் கூடநாளை தொடர்வோம்என ஒரு இடைவெளி விடுதல் நலம்.  

உங்களுடைய எல்லையை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருங்கள். குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் எனும் எல்லைகள் தெளிவாய் இருந்தால் உங்களுடைய விவாதம் வலிமையாய் இருக்கும்.  யார் பெரியவன் என்பதைப் பறைசாற்றும் இடமல்ல இத்தகைய விவாத அறைகள். கொடுக்கப்பட்டிருக்கும் மையப் பிரச்சினையை எப்படி இரு தரப்பும் சுமூகமாக, மன நிறைவுடன் முடித்துக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம். 

பேசுவதை விட முக்கியம் கவனிப்பது, வார்த்தைகளைக் கவனிப்பதை விடக் கவனமாக பேசுபவரின் உடல் மொழியைக் கவனிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். 7 சதவீதம் வார்த்தைகளும், 93 சதவீதம் வார்த்தைகளற்ற அசைவுகளுமே பேசுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள். எனவே மிக நுணுக்கமாய்க் கவனிப்பவர்களே இந்த ஏரியாவில் ஜாம்பவான்கள் ! 

ஒரு முக்கியமான விஷயம் ! புள்ளி விவரங்கள், விலைப்பட்டியல்களை அவிழ்த்து விடும் போது எக்காரணம் கொண்டும் பொய் சொல்லாதீர்கள். உங்கள் குட்டு மிக விரைவிலேயே வெளிப்பட்டு விடும். அதற்குப் பிறகு நீங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் கவனிக்கப்படுவீர்கள்.  

இலவச இணைப்புக்கு இருக்கும் மரியாதையே தனி தான். ஒரு சேலை வாங்கினால் ஒரு தோசைக்கல் இலவசம் என்பார்கள். சேலை தேவையில்லாவிட்டால் கூட அங்கே கூட்டம் அலை மோதும். நிறுவனங்களும் கிட்டத் தட்ட அப்படியே. உங்கள் பேரத்தில் சில கூடுதல் பயன்களை இலவசமாகக் கொடுத்தால் உங்கள் டீல் நல்லபடியாய் முடிய வாய்ப்பு அதிகம்.

பேரத்தில் உங்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பேரம் முடிவதும் இல்லை. இரு தரப்புக்குமே வெற்றி என்பதே அடிப்படை நியதி. அதில் யார் அதிக பயன் பெறுகிறார்கள் என்பதே விஷயம். 

தெருவோர பொம்மைக்காரர் ஐநூறு ரூபாய் என ஒரு பொம்மையைக் காட்டுவார். அதன் விலை 100 ரூபாயாக இருக்கும். அதை அவர் 100 ரூபாய்க்குக் கீழே விற்கப் போவதில்லை. நீங்கள் அந்த பொம்மையை நானூறு ரூபாய் என பேரம் பேசுகிறீர்களா ? இல்லை நூற்றைம்பது என வாங்கிப் போகிறீர்களா என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். 

பேரம் பேசுகையில் மிக வலுவான சில பாயிண்ட்கள் உங்களிடம் இருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். அத்தகைய வலுவான விஷயங்களைச் சுற்றியே உங்கள் பேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தரப்பு விவாதக் கருத்துகளுக்கான தெளிவான காரண காரியங்களையும் கையோடே வைத்திருங்கள். அதே போல ஒரே ஒரு முடிவை நோக்கியே விவாதங்களை அமைக்காமல் இருப்பது நல்லது. அதற்கு உங்களிடம் இரண்டு மூன்று மாறுபட்ட அணுகுமுறைகள் இருப்பதே புத்திசாலித் தனம். 

நாட்டாமைக்கு ஒரே நாக்கு ஒரே வாக்குஎன்பதெல்லாம் சினிமாவுக்குத் தான். நிறுவனங்களைப் பொறுத்தவரை எழுதிக் கையெழுத்திட்டுத் தராதவரை எதுவும் உத்தரவாதமில்லை. எனவே எந்த ஒரு விவாதத்தின் முடிவிலும் ஒரு ஆதாரம், சாட்சி, எழுத்து வடிவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பாடு.

எப்பாடு பட்டாவது இந்த பேரத்தை முடிக்க வேண்டும் எனும் உங்கள் மனநிலையைக் வெளிக் காட்டாதீர்கள். ஒருவேளை பேரம் உங்களுக்குச் சாதகமாக இல்லாமல் போனால் கூட நட்புடன் விடை பெறுங்கள்.

பேரத்தில் உணர்ச்சி வசப்படுவது ரொம்பவே தவறு. அது நமது திறமையின்மையை பளிச் என பறை சாற்றி விடும். வெகு இயல்பாய் இருங்கள். எப்போதும் புன்முறுவலையும், நட்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

உதாரணமாக சம்பள உயர்வுக்காக உங்கள் மேலதிகாரியுடன் பேசுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அறைக்குள் உங்கள் நிலையை மிகத் தெளிவாக விளக்குங்கள். உங்கள் தேவைகள் எதிர்பார்ப்புகள், மனக்கசப்பு எல்லாவற்றையும் சொல்லுங்கள். ஆனால் அந்த விவாதம் முடிந்ததும் மீண்டும் நட்புடன் நடமாடுங்கள்.

பேரத்தை முடிப்பது ஒரு கலை. சரியான நேரத்தில் முடிக்காமல் வள வளவென இழுத்துக் கொண்டிருந்தால் முடிய வேண்டிய டீல்கள் கூட முடியாமல் போய்விடும் என்பதே உண்மை. 

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொள்ளுங்கள், உங்கள் நிறுவனத்திலோ, சமூகத்திலோ நடக்கும் பேச்சு வார்த்தைகளில் வெற்றியுடன் திரும்பி வாருங்கள். 

விவாதத் திறமை சிறக்கட்டும்

வெற்றிக் கதவுகள் திறக்கட்டும்

தன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் !

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளைகூடப் பொறந்ததுகஎன்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம்.

சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும்  ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள்.  இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம். 

பொம்மைக்காகவோ, சாக்லெட்டுக்காகவோ சின்ன வயதில் போடும் சண்டைகளின் நீளம் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ தான். வயது ஏற ஏற சண்டைகளின் நீளமும் வளர்ந்து கொண்டே போகிறது. பெரியவர்களானபின் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ பிணக்கு நீடிக்கிறது. சில சமயங்களில் வருடங்களையும் விழுங்கி இது நிரந்தரப் பிரிவாய் நிலைத்தும் விடுகிறது.

அரையடி நிலத்துக்காக அண்ணனை வெட்டும் தம்பி. சொத்துக்காக தம்பியின் குடும்பத்தையே காலி பண்ணும் அண்ணன் என தினசரிகள் குடும்ப உறவின் பலவீனங்களை சோகமாய் எழுதிச் செல்கின்றன.  குடும்ப உறவுகளெல்லாம் பின் வரிசைக்குத் தள்ளப்பட வெறும் பொருளாதார வசீகரங்கள் வாழ்வின் முன் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன

சகோதர பாசம் எப்படி இருக்கிறது என இங்கிலாந்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் தெரிய வந்தது இது தான். மூன்றில் ஒரு பங்கு சகோதரர்கள் தங்கள் கல்லூரி காலத்திலும் நெருங்கிய ஸ்னேகமாய் இருக்கிறார்கள். இன்னொரு 33 சதவீதம் பேர்ரொம்ப நெருக்கமும் இல்லை, ரொம்பத் தூரமும் இல்லைரேஞ்சுக்கு இருப்பவர்கள். மிச்சமுள்ளவர்களோ தொடர்பில்லாமல் இருப்பவர்கள் அல்லது எதிரிபோலவே முறைத்துக் கொள்பவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சுமார் 70 சதவீதம் பேர் ஆழமான சகோதர உறவு இல்லாமல் தான் இருக்கிறார்களாம் !  

குடும்பம் மனிதனின் முதல் தேவை. சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர் எனும் உறவுகள் அவர்களுடைய வேர்களைப் போன்றவர்கள். சமூகத்தில் கிளை பரப்பும் மரம் பூக்களையும், கனிகளையும் கிளைகளில் தாங்குகிறது. பிறருடைய பார்வைக்குத் தெரிபவை இந்த பூக்களும் கனிகளும் தான். ஆனால் வேர்களின் பலத்தைப் பொறுத்தே கிளைகளின் வசீகரம் இருக்கும். வெற்றிகளின் பச்சையத்தைத் தாவரங்கள் தயாரிக்க வேர்கள் மண்ணில் இறுக்கமாக இருக்க வேண்டும். தண்ணீரை அவை இலைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

அத்தகைய சகோதர, சகோதரிகள் அமைந்தால் வாழ்க்கை சுவர்க்கமாகும். அவர்களைத் தோல்விகள் அச்சுறுத்துவதில்லை. அவர்கள் தங்களுடைய இளைப்பாறுதலை சகோதரர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இங்கே தற்கொலைகள் தலை தூக்குவதில்லை. 

சகோதரர்களிடையே ஆழமான அன்புறவைக் கட்டியெழுப்புவதன் முதல் பங்கு பெற்றோரைச் சார்கிறது. சின்ன வயதில் குழந்தைகளைச் சமமாய்ப் பாவிப்பதும், பகிர்தல் மனப்பான்மையைக் கற்றுக் கொடுப்பதும், தவறுகளைச் சுட்டி காட்டுவதுமாய் நல்ல பெற்றோர் நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்புவார்கள். அந்த குடும்பம் சகோதர பாசத்தில் வலுப்படும். 

சின்ன வயதிலேயே குழந்தைகளிடையே வேறுபாடு காட்டி வளர்க்கும் பெற்றோர் தங்களை அறியாமலேயே தவறிழைக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் அவர்களிடையே அந்த வெறுப்புணர்வு பெரிதாகிறது. “நான் தான் பெரியவன்என்றோ, “நானும் பெரியவன் தான்என்றோ ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொள்ள அடிப்படை குடும்ப பந்தம் உடைந்து போய்விடுகிறது.

குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் தேவையைப் போதிக்க வேண்டும். அத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். நாம் பெரும்பாலும் குழந்தைகளைப் பாராட்டுவது அவர்கள் தேர்வில் சாதிக்கும்போதோ, அல்லது போட்டிகளில் வெல்லும் போதோ தான். அது தவறு. குழந்தைகள் சகோதர பாசத்துடன் இருப்பதையோ, பகிர்ந்தலில் மிளிர்தலையோ, அன்புச் செயல்கள் செய்வதையோ பாராட்டுங்கள். ஊக்கப்படுத்துங்கள். அவர்களுடைய ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அது உதவும்.

கணவன் மனைவியரிடையே உண்மையான அன்பும் ஆழமான குடும்ப உறவும் இருந்தால் குழந்தைகளிடமும் அந்த அன்பு இருக்கும் என்கின்றனர் உளவியலார்கள். பெற்றோரிடையே சண்டை, விவாகரத்து போன்றவை எழும்போது குழந்தைகள் தங்களுக்குள்ளே ஆழமான அன்பை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. சகோதரர்களிடையே அன்பாய் இருக்க முடியாத குழந்தைகள் பல வேளைகளில் பள்ளிக்கூடம், கல்லூரி,  அலுவலகம் என தொடரும் இடங்களில் பிறருடனான நட்புறவில் தடுமாறிவிடுகிறார்கள்.

சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அவை அதிக நேரம் தொடராமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். “விட்டுக் கொடுத்தலைக்  கற்றுக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். மகிழ்ச்சி என்பது பெற்றுக் கொள்வதிலல்ல, பிறருக்குக் கொடுப்பதில் என்பதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டும். 

சகோதரர்களிடையே ஆழமான அன்பு இருப்பது உடலுக்கும் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.” ஆழமான சகோதர உறவு இருந்தால் முதுமையில் உளவியல் பாதிப்புகள் ஏற்படாதுஎன்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக அறுபது வயதைத் தாண்டியவர்கள் அமைதியான முதுமையை அனுபவிக்க அவர்களுடைய இளம் வயதில் ஆரோக்கியமான சகோதர உறவு இருந்தால் போதும் என்கிறது இந்த ஆய்வு. 

பெய்லார் பல்கலைக்கழகத்தின் மார்க் மார்மன் என்பவர் சகோதரத்துவம் சார்பான ஆராய்சிகளை மேற்கொள்பவர். “மன அழுத்தமற்ற வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான இதயத்துக்கும் ஆழமான சகோதர பந்தம் அவசியமானதுஎன்கிறார் இவர்.

உரையாடல்கள் சகோதரர்களிடையே அன்பையும் நெருக்கத்தையும் காப்பாற்றும். இன்றைய தகவல் யுகம் நமக்கு எப்போதும் பிறருடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பைத் தருகிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடனோ, காதலருடனோ மணிக்கணக்கில் மெய் மறந்து பேசும் நாம் பல வேளைகளில் ஒரு போன் போட்டு சகோதரனை நலம் விசாரிக்க மறந்து போய்விடுகிறோம். 

நண்பர்களுடன் மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகும் நாம் சகோதரனுடனான சண்டையை ஒரு மன்னிப்பின் மூலம் தீர்க்க மறுக்கிறோம் என்பதே உண்மை. நமது இதயத்தின் ஆழத்தில் வேர்விட்ட சகோதர பாசம் எந்த நட்பினாலும் நிரப்பி விட முடியாதது. பல ஆண்டுகளாக சண்டையில் இருக்கும் சகோதரனின் வீட்டுக் கதவை ஒரு முறை அன்பினால் தட்டிப் பாருங்கள். நேசத்தின் நீரூற்று அங்கே புறப்படத் தயாராக இருக்கும்.

குடும்ப உறவுகள் உங்களுக்கான வேடந்தாங்கல் போல. மகிழ்வு வரும்போது குடும்பம் அந்த மகிழ்ச்சியை பலமடங்காக்கி உங்கள் சிறகுகளை உயரப் பறக்க வைக்கிறது. சோகம் வரும்போது குடும்பம் அதைத் தனது தோள்களில் ஏந்தி உங்கள் கால்களை இளைப்பாற விடுகிறது. 

ஆத்மார்த்தமான குடும்ப உறவும், அன்பும் இருக்கின்ற வாழ்க்கையில் எது இல்லாவிட்டாலும் ஆனந்தம் நிலை பெறும். குடும்ப அன்பு பலவீனமானால் வேறு என்ன இருந்தாலும் ஓட்டை விழுந்த படகாகவோ, வேர்கள் வெட்டப்பட்ட மரமாகவோ அழிவை  நோக்கியே வாழ்க்கை செல்லும்.

அன்பான சகோதர, சகோதரிகளைப் பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கும். வேலையிலோ, கலைகளிலோ அவர்கள் சாதிக்கும் உயரம் அதிகமாக இருக்கும். வலுவான அஸ்திவாரத்தைக் கொண்ட கட்டிடம் போல அவர்களுடைய வாழ்க்கையும் உயரும் என்கின்றனர் குடும்ப நல ஆய்வாளர்கள்.

அன்பு சிறக்க நம்பிக்கை ரொம்ப முக்கியம். சகோதரர்களுக்கிடையே வலுவான ஒரு நம்பிக்கையை நிலைபெறும் போது பிறர் அந்த உறவை உடைக்க முடியாது. தாயின் அன்பைப் போன்ற நம்பிக்கையை சகோதர சகோதரிகளிடையே வைத்துப் பாருங்கள். பிறர் உங்களுடைய பாசக் கூட்டுக்குத் தீ வைக்க நினைத்தாலும் அது உங்களுடைய நம்பிக்கை நதியினால் அணைக்கப்படட்டும்.

மனம் விட்டுப் பேசிச் சிரிப்பது சகோதரர்களிடையேயான அன்புறவைக் கட்டியெழுப்ப உதவும் என்கின்றனர் உளவியலார். பேசும்போது இதயத்தைத் திறந்தும், கேட்கும் போது மனதைத் திறந்தும் வைத்திருப்பதே சகோதரர்களுக்கு இருக்க வேண்டிய உரையாடல் பாணி. 

சேர்ந்து நேரம் செலவிடுங்கள். அடிக்கடி போனில், மின்னஞ்சலில் என பாசத்தைப் பரிமாறிக் கொண்டாலும் அவ்வப்போது சந்தித்து, இணைந்து உண்டு, நினைவுகள் பரிமாறிக் கொள்வது சகோதர பாசத்தை ரொம்பவே வலுவாக்கும்.

சகோதரர்களுடைய தேவையில் கேட்காமலேயே உதவுங்கள். உங்கள் சகோதரரின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவருடைய வாழ்க்கை ஆனந்தமாய் இருந்தால் மகிழுங்கள். கடினமாய் இருந்தால் உதவுங்கள். இதுவே அடிப்படைக் குணாதிசயம். 

பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்னவிட்டுக் கொடுத்தலில்இருக்கிறது. அன்பாய் நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை அழகாகிறது.

 இரண்டு சகோதரர்கள் அருகருகே தோட்டம் அமைத்து பயிர்செய்து வந்தார்கள். தோட்டத்துக்கு இடையே ஒரு சின்ன நதி ஓடியது. பல காலம் அன்பாக வாழ்ந்த சகோதரர்களிடையே திடீரென பிணக்கு. சின்னவன் அண்ணனை ரொம்பவே திட்டி விட்டான். கோபம் கொண்ட அண்ணன் ஒரு பணியாளரை அழைத்து தனது எல்லையில் மதில் கட்டச் சொல்லி விட்டுச் சென்று விட்டார். 

சில நாட்களுக்குப் பின் அவர் திரும்பி வந்து பார்த்தபோது தனது தோட்டத்திலிருந்து தம்பியின் தோட்டத்துக்கு ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. மதிலுக்குப் பதிலாக பாலம் கட்டியிருந்தார் பணியாளர். அண்ணன் அமைதியாக பாலத்தின் மேல் நடந்தார். தூரத்தில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்த தம்பி ஓடோடிச் சென்று அண்ணனைக் கட்டியணைத்தார். “நான் இவ்வளவு திட்டியும் நீ அன்பாக பாலம் கட்டினாயே. நீ என்மேல எவ்ளோ பிரியம் வைத்திருக்கிறாய் அண்ணாஎன கண் கலங்கினார். 

அண்ணன் நெகிழ்ந்தார். தம்பியை இறுக அணைத்துக் கொண்டார். மதிலுக்குப் பதிலாய் பாலம் கட்டிய பணியாளருக்கு மானசீகமாய் நன்றி சொன்னார்.

பாசக் கூடு பின்னுங்கள்

நேசத் தோடு நில்லுங்கள்

தன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.

வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம்.

ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கைல முன்னேற முடியும்இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம். ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது. “கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்என்கிறது நவீன உலகம். 

ஸ்மார்ட் வர்க்என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்கள். வேலையில் சுட்டித் தனம், திறமை கலப்பது, வித்தியாசமாய் சிந்திப்பது, புதுமையாய்ச் செயல்படுவது இவற்றையே ஸ்மார்ட் வேலை என்கிறார்கள். ஒரே மாதிரி ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்க நாம் இயந்திரங்கள் இல்லையே !  

காலையில் அலுவலகம் சென்றவுடன் ஒரே மாதிரியான வேலையை மாலை வரைச் செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு போரடிக்கும் ! அதே வேலையை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? வேலைக்குப் போவதே ஒரு போரடிக்கும் போராட்டக் களத்துக்குள் போவது போல் இருக்கும் இல்லையா ?

திறமை இல்லாமல் வெறும் கடின உழைப்பு மட்டும் இருப்பது வெட்கக் கேடானது. திறமை இருந்து கடின உழைப்பு இல்லாத நிலையோ துயரமானதுஎன்கிறார் ராபர்ட் ஹால்ஃப். மனிதனுக்கு கடவுள் வெறும் உடலை மட்டும் தரவில்லை, சிந்திக்கும் மூளையையும் சேர்த்தே தந்திருக்கிறார். எனவே வெறும் கடின உழைப்பு எனும் வட்டத்தை விட்டு விலகி சிந்தனையின் நாற்றுகளை நட வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களே உயரிய இருக்கைகளை விரைவில் சென்றடைகிறார்கள்.  

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள். ஒரு நாள் காலை முதல் மாலை வரை  மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப் படுவார்கள். 

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதட்டமடையவில்லை. மரங்களை வெட்டினார். ஓய்வெடுத்தார். மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் இவரே வெற்றியும் பெற்றார். 

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். “நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தான். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத் தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய் ?” வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார். “நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால் தான் வென்றேன்

பல வேளைகளில் நாம் நம்முடைய சிந்தனைகளைக் கூர் தீட்ட மறந்து போய் விடுகிறோம். எறும்புகள் போல ஒரே பாதையில் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதை விட நல்ல பாதை, எளிய பாதை இருந்தாலும் நாம் பாதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. கடினமாக அந்தப் பாதையில் ஓடிக் கொண்டே இருந்தால் போதும் என நினைக்கிறோம்.

ஒரு செயலை நாம் முதலில் செய்யும் போது அது நமக்குக் கடினமாக இருக்கிறது. அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் எளிதாகிவிடுகிறது. பிறகு அந்தச் செயல் நமது மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நம்மை அறியாமலேயே மூளை நம்மை அந்தச் செயலைச் செய்யப் பணிக்கிறது. அதனால் தான் பல வேளைகளில் பழக்கமான வழியை விட்டு வேறு வழிக்குச் செல்ல மிகுந்த தயக்கம் எழுகிறது என்கின்றனர் உளவியலார்கள். 

ஸ்மார்ட் வேலை என்பது வழக்கமான வழியை விட்டு புதுமையான வழிக்குத் தாவுவது. ராத்திரி பகலாகக் கண் முழித்துப் படிப்பவர்கள் சில வேளை தோல்வியைச் சந்திப்பதுண்டு. ஆனால் திட்டமிட்டு, குறிப்பெடுத்து, முக்கியமானவற்றை வரிசைப்படுத்திப் படிப்பவர்கள் குறைந்த உழைப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் உண்டு. 

ஒரு சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது உங்கள் வெற்றியும், தோல்வியும். இந்தச் சூழலுக்கு இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மனம் எப்போதும் சொல்லும். அதைத் தாண்டிய வழிகளைச் சிந்திக்க மூளையைப் பழக்கப் படுத்துபவர்களே அறிவாளிகளாக நிலைபெற்றிருக்கிறார்கள்.

ஒரு பற்பசை நிறுவனம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் விற்பனைக்காக ஓடி ஓடி உழைத்தார்கள். ஏன் பற்பசை விற்பனையாகவில்லை என நிறுவனம் யோசித்தது. வாங்கும் பற்பசை மக்களுக்கு ரொம்ப நாளைக்குப் போதுமானதாய் இருப்பதைக் கண்டு பிடித்தது. அதற்கான தீர்வு என்ன என எல்லோரும் யோசித்துத் தளர்ந்தார்கள். ஒருவர் சொன்னார், “இனிமேல் பற்பசையின் வாய்ப் பகுதியைப் பெரிதாக வைப்போம் ! மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். விரைவில் பற்பசை காலியாகும். வாங்குவார்கள் ! ”. அந்த ஸ்மார்ட் சிந்தனை நிறுவனத்தை மீண்டும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது !

யார் வேண்டுமானாலும் ஸ்மார்ட் வேலைக்காரர் ஆக முடியும். சில அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருந்தாலே போதும்.

முதலாவது, ஒரு வேலையில் வலது காலை வைக்கும் முன் அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உங்களிடம் இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கள். அது பொருளாகவும் இருக்கலாம், தகவலாகவும் இருக்கலாம், அறிவாகவும் இருக்கலாம் !

என்ன செய்யப் போகிறோம் என்பதை வரிசைப்படுத்துங்கள். அப்படித் திட்டமிடும் போது மாற்று வழிகளையும் மனதில் கொள்ளுங்கள். அது உங்களை புதிய செயல்பாடுகளை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஒரு திட்டத்தை வரையறுத்தபின் அதில் நிலைத்திருங்கள்.  

குறிப்பாக பல வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது கற்கால வழிமுறை. பல வேலைகளை ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செய்ய முடியுமா என்பதை திட்டமிட்டுச் செய்வது ஸ்மார்ட் முறை !  

மிக முக்கியமான வேலைகளை, அதிக பயனுள்ள வேலைகளை, அதிக மரியாதை தரும் வேலைகளை முதலில் செய்யத் துவங்குங்கள். அது அடுத்தடுத்த எளிய வேலைகளை சுலபமாய்ச் செய்ய உங்களைப் பக்குவப்படுத்தும்.

ஒருவேலையை இன்னொரு நபருக்குக் கொடுக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று, சரியான நபரிடம் அதைக் கொடுப்பது. இன்னொன்று சரியான நேரத்தில் அதைக் கொடுப்பது. இதில் ஒன்று தவறினாலும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு அது உங்களை இட்டுச் செல்லலாம்.

ஸ்மார்ட் வேலை மூன்று முக்கியமான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறைந்த உழைப்பில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். இரண்டாவது குறைந்த செலவில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக சரியான நேரத்தில் முடிக்க முடிவதாக இருக்க வேண்டும். இந்த மும் மூர்த்திகளை மனதில் கொண்டே எல்லா செயல்களையும் திட்டமிடுங்கள்.

ஸ்மார்ட் வேலைக்காரர்களிடம் தன்னம்பிக்கையும், ரிஸ்க் எடுக்கத் தயங்காத மனமும் இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் வேலையை அப்படியே செய்து கொண்டே இருப்பார்கள். தோற்று விடுவோமோ, தவறாகிப் போய்விடுமோ எனும் பயமே அதன் முக்கியக் காரணம். சில ரிஸ்க் களை எடுக்கத் தயங்காதீர்கள்.

ஒரு செயலைச் செய்வது எவ்வளவு முக்கியமோ, வசீகரிக்கும் விதமாய் அதை முடிப்பது மிக மிக முக்கியம். சரியான வகையில் உங்கள் வேலையை நீங்கள் விளம்பரப் படுத்திக் கொள்ள அது உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், கற்றுக் கொள்ளத் தயங்காத மனம். நீங்கள் செய்வது போன்ற அதே வேலையை உங்களைச் சுற்றி பலரும் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஏதேனும் நல்ல டெக்னிக் இருந்தால் அதை உள்வாங்கிக் கொள்ளத் தயங்க வேண்டாம். அடுத்தவருடைய ஐடியாவை ஏற்றுக் கொள்ள மாட்டேனெனும் வறட்டுப் பிடிவாதங்கள் அர்த்தமற்றவை.

திறமையான உழைப்பாளிகளிடம், கடின உழைப்பும் கை கூடும்போது பயன் பல மடங்கு அதிகமாகி விடுகிறது. ஸ்மார்ட் வேலை என்பது சோம்பேறித்தனத்துக்கான முன்னுரையல்ல. அது கடின உழைப்புடன் கலக்கும் போது உங்களுக்கு வங்கக் கடலும் வணக்கம் சொல்லும், வானமும் வந்து வாழ்த்துப் பாடும்.

பழைய முறைகள் தப்பில்லைஅதில்

புதுமை கலந்தால் ஒப்பில்லை !

தன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க !

சிலர் வெற்றி பெறவேண்டுமென கனவு காண்பார்கள். சிலர் விழித்தெழுந்து கடின உழைப்பால் வெற்றியின் பாதையில் நடப்பார்கள். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு ! ஆனால் அதைவிடக் கடினமானது கிடைத்த வேலையில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விடுவது ! 

சிலரைப் பாருங்கள். அலுவலகத்தில் நுழைந்த சில வருடங்களிலேயே வெற்றிப் படிகளில் தடதடவென ஏறிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ முதல்படியிலேயே முடங்கி விடுவார்கள். 

வெற்றி எட்டாக்கனியுமல்ல, கைகளில் கிட்டாக்கனியல்ல. சரியான முறையில் வேலையை அணுகினால் உயர் பதவிகள் உங்களுக்கே !

வேலையில் நுழைந்ததும்அப்பாடா.. எல்லாம் முடிந்து விட்டதுஎன நினைத்து விடாதீர்கள். இப்போது தான் கதவு திறந்திருக்கிறது, இனிமேல் தான் உங்கள் பயணம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 

புதிதாக அலுவலகத்துக்குள் வரும் நபரை எல்லோரும் கவனிப்பார்கள். கவனமாய் இருக்க வேண்டிய தருணம் இது. உஷாராய் வேலையிலேயே லயித்திருங்கள்.

கேள்வி கேட்காதவர்கள் பதில்களைப் பெற்றுக் கொள்வதில்லை. உங்களுக்குத் தெரியாததைத் தயக்கமின்றிக் கேளுங்கள். புதிதாய் வேலையில் சேர்ந்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் எல்லோருமே பொறுமையாய்ப் பதில் சொல்வார்கள். ஆனால் துவக்கத்தில் தயக்கம் காட்டிவிட்டு நாலு மாதம் கழிந்து கேள்விகள் கேட்டால்இன்னுமா இதையெல்லாம் கத்துக்கல ?” என ஒரு வில்லன் லுக் விடுவார்கள். 

உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையைக் கவனமாகச் செய்யுங்கள். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலையை எவ்வளவு நேர்த்தியாக, விரைவாக, அழகாகச் செய்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களைப் பெரிய வேலைகள் வந்தடையும். இந்த அடிப்படை விஷயத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

புரோ ஆக்டிவ்னெஸ்எனப்படும் தாமாகவே முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும், ஐடியாக்கள் சொல்வதும் உங்களைக் கவனிக்க வைக்கும்.“ சுறுசுறுப்பு பார்ட்டிஎனும் இமேஜ் உங்களுடைய வளர்ச்சிக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

 காலம் காலமா இப்படித் தான் …..” என்று பல வேலைகள் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும். அதை சீர்திருத்தவோ, புது மாதிரியாக முயற்சி பண்ணவோ பலரும் தயங்குவார்கள். நீங்கள் அந்த விஷயத்தில் தயக்கம் காட்டக் கூடாது. “இப்படிச் செஞ்சா என்ன ?” என்பன போன்ற புதுப் புது ஐடியாக்களை மேலதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். “நமக்குத் தோணாம போச்சேஎன உங்கள் மேலதிகாரி எப்போதேனும் நினைத்தால் உங்களுக்கு ஜாக்பாட் தான்.

உங்க வேலைகள், கடமைகள் இவை தான்என மேலதிகாரி ஒரு லிஸ்ட் கொடுப்பார். ஒருவேளை அப்படி ஏதும் தரப்படவில்லையேல் அமைதியாக இருக்காதீர்கள். நீங்களாகவே ஒரு லிஸ்ட் தயார் செய்து கொண்டு மேலதிகாரியின் கதவைத் தட்டுங்கள். “சார்.. என்னோட பணிகள் இவையென நினைக்கிறேன். சரிதானே ? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா ?” என தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் ! சபாஷ் பெறுவீர்கள் !

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் மேனேஜரிடம் போய் உங்களைப் பற்றிய அவருடைய அபிப்பிராயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த பணிகளில் நீங்கள் சரியாகச் செயல்படுகிறீர்கள், எந்த இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது எனும் இரண்டு பிரிவுகளில் உங்களுடைய உரையாடல் இருப்பது நல்லது.

உசுரைக் கொடுத்து உழைக்கிறது நான் ! பேரெடுக்கிறது அவனா ? ” என்பது அலுவலகத்தில் உலவும் கற்காலக் கம்ப்ளையிண்ட். உங்கள் மேலதிகாரியுடனான இத்தகைய உரையாடல்கள் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் ஒரு நல்ல முடிவாக அமையலாம்.

தவறுவது இயல்பு ! தவறு செய்தால் அதை மறைக்காத துணிச்சலும் நேர்மையும் உங்களுக்கு இருக்கட்டும். முதலில் நீங்கள் குற்றவுணர்வுக்குள் குறுகி விடாதீர்கள். இரண்டாவது, அதை மேலதிகாரியிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள். இதே தவறை அடுத்தவர்களும் செய்யாமல் தடுக்க ஏதேனும் வழிவகை இருந்தால் அதையும் கூடவே யோசியுங்கள். ! உங்கள் நெகடிவ் விஷயத்தை பாசிடிவ் ஆக்கும் சூட்சுமம் அது !

சின்னச் சின்னப் பிரச்சினைகளையெல்லாம் மேலதிகாரியிடம் கொண்டு போய்ப் புலம்பாதீர்கள். அது உங்களை திறமையற்றவராய்ச் சித்தரிக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை நீங்களாகவே தீர்க்க முயலுங்கள். முடியாத பட்சத்தில் மேலதிகாரியிடம் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட, “இவையெல்லாம் எனக்குத் தெரிந்த தீர்வுகள்என சில ஐடியாக்களை அவிழ்த்து விட்டால் மதிக்கப்படுவீர்கள்.  

கிசுகிசு, கோள் மூட்டுதல், புறணி பேசுதல் இத்யாதிகளெல்லாம் அலுவலகத்தில் வேண்டாம். அதே போல உங்களிடம் மேலதிகாரி ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் அதை முரசு கொட்டி விளம்பரப்படுத்தாதீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை உயரும்.

தரம்நேரம்விலை !  இந்த மூன்றும் தான் எந்த ஒரு வேலைக்கும் அடிப்படை சங்கதிகள். செய்ய வேண்டிய வேலையை அட்சரசுத்தமாய் உயர் தரத்தில் செய்து முடிக்கவேண்டும். செய்வதைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். செலவு அதிகம் ஆகாமல் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று சங்கதிகளையும் மனதில் கொண்டிருங்கள். இதுவே சர்வ வேலைகளுக்குமான உலகப் பொது விதி !

உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். “ரொம்ப அவசரம்”, “கொஞ்சம் அவசரம்”, “அப்புறம் பாத்துக்கலாம்எனும் மூன்று பிரிவுகளில் உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். ரொம்ப அவசரமான செயல்களிலிருந்து உங்கள் வேலைகளைத் துவங்குங்கள். மிக முக்கியமான வேலையை நழுவ விடாமலிருக்க அது உதவும்.

வேலை சம்பளத்துக்கானது எனும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். வேலையும் வாழ்க்கையின் ஒரு அழகான பகுதி எனும் சிந்தனையை மனதில் கொண்டால் வேலை உங்களுக்கு சுமையற்ற பணியாகிவிடும். 

உங்களுக்கென நீங்களே உருவாக்கிய இலட்சியம் ஒன்று இருக்கட்டும். அதை அடைய என்னென்ன செய்யவேண்டுமென பட்டியலிடுங்கள். உங்கள் வேலை அந்த இலட்சியத்தை நோக்கி உங்களை இட்டுச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வேலையில் தயக்கம் காட்டுவது உயர்வுக்கு உதவாது. புதிய வேலைகள் வந்தால் அதை சவாலாக எடுத்துச் செய்யுங்கள். கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதிக்க வேண்டுமென்பதல்ல அதன் அர்த்தம். செய்யப் போகும் வேலைக்கான தயாரிப்புகள் அவசியம். அதையெல்லாம் தாண்டி முதல் சுவடை தைரியமாக எடுத்து வையுங்கள். முதல் சுவடு வைக்காத எந்த ஒரு பயணமும் இலக்கை அடைவதில்லை.

எந்தக் காரணம் கொண்டும், அலுவலகத்திலுள்ள பேனா, பேப்பர், பென்சில் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகாதீர்கள். செலவு விஷயத்தில் பொய்க் கணக்கு காட்டவே காட்டாதீர்கள். நேர்மைக்கு உதாரணமாய் இருங்கள், உயர்வு தேடி வரும்.

அலுவலகத்திலுள்ள எல்லா சட்டதிட்டங்களும் உங்களுக்குப் பிடிக்க வேண்டுமென்றில்லை. ஆனால் நிச்சயம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க முடியாது என தீர்க்கமாய்த் தோன்றினால் வேறு வேலை தேடுவது மட்டுமே ஒரே வழி. 

நிச்சயமாய்ச் செய்ய முடியாத வேலைகளை, “சாரி.. என்னால முடியாதுஎன சொல்லலாம் தப்பில்லை. ஆனால்செய்கிறேன்என ஒத்துக் கொண்டால் உங்கள் முழு திறமை, நேரம் என எல்லாவற்றையும் பயன்படுத்தி அதைச் செய்து முடியுங்கள். உங்கள் பெயர் நிலைக்கும்.

அலுவலகத்தில் சக நண்பர்கள் ஏதேனும் உதவி கேட்டால் தயங்காமல் செய்யுங்கள். சின்ன உதவியை யாரேனும் செய்தால் கூடநன்றிசொல்லத் தவற வேண்டாம். அதே போல தவறுகளுக்கு மனப்பூர்வமான மன்னிப்புக் கேட்பதும் சக மனித நட்பை வலுவாக்கும். அலுவலகத்தில் ஆத்மார்த்தமான ஒரு நட்பாவது உங்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். 

உங்களுடைய திறமைகளை நீங்கள் கூர்தீட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் திறமைகளை துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்க. படித்துக் கொண்டே இருங்கள்., பட்டை தீட்டிக் கொண்டே இருங்கள் அப்போது தான் திடீரென வரும் ஒரு வாய்ப்பில் நீங்கள் வால்நட்சத்திரமாய் மின்ன முடியும்,

கடின உழைப்பு ரொம்ப முக்கியம். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க மறக்காதீர்கள். சரியான தூக்கம், அளவான உடற்பயிற்சி இவை தாண்டித் தான் அலுவலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அலுவலகத்துக்குரிய மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுக்க எப்போதும் மறக்காதீர்கள். நல்ல நேர்த்தியான தூய்மையான ஆடை அணிவது, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்வது, தேவையற்ற அரட்டைகள் தவிர்ப்பது, அலுவல் நேரத்தில் சொந்த வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது, இணையத்தில் உலவாமல் இருப்பது, என இந்தப் பட்டியல் நீளும். இவை ஒரு பணியாளனின் அடிப்படை பண்புகள் என்பதை மறக்கவேண்டாம்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டிருந்தால் வெற்றியின் சாவி உங்களுக்கு வசப்படும்.

உள்ளம் வேட்கை கொள்ளட்டும்

துள்ளும் வெற்றி அள்ளட்டும்.

தன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே !

நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சேஎன்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.  

உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனுக்கு ஒரு கோழிப் பண்ணையின் விலை இருக்கலாம் என்பது தான் பதறடிக்கும் உண்மை ! நண்பனிடம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள்.   

தாங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக் கூடாதுஎன பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். புழுதியில் புழங்கினாலும் பிள்ளை ஏசியில் உறங்க வேண்டுமென விரும்புவார்கள். பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகிவிடுகிறது. 

இளம் பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம் ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது. மேக்கப் பொருட்களை அதிகமாய்ப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய்க் கத்தினாலும் பலரும் பொருட்படுத்துவதில்லை. 

அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம் பெண்கள் உணர்ந்தாலே போதும். குறைந்த பட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள.

ஹேய்என்னோட சட்டை எப்படி இருக்கு ? லூயி பிலிப் பிராண்ட்இரண்டாயிரம் ரூபாய்..” என பந்தா விடுவதில் பல இளைஞர்களுக்கு சில வினாடி சுகம் கிடைக்கிறது. இது தன்னம்பிக்கைக் குறைபாடின் வெளிப்பாடு என்கிறது உளவியல். 

பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மனம் இவர்களுடையது. தனது பணத்தை வீணாக பிறருடையஅபிப்பிராயத்துக்காகச்செலவிடும் அப்பாவிகள் என்று வேண்டுமானால் வைத்துக்  கொள்ளலாம். நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப் படுத்த அல்ல ! எனும் அடிப்படை உண்மை உணர்தல் முக்கியம்.

பலர் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்து விடுகிறார்கள். நண்பர்களுடன் உயர் ஹோட்டல்களில் உணவருந்துவதே ஸ்டேட்டஸ் என கருதிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்காக கடற்கரை ஓரங்களிலோ, ஹோட்டல்களிலோ அவர்கள் செலவு செய்யும் பணத்தில் பல ஏழைகளின் பட்டினியை பல வாரங்களுக்கு விரட்டலாம். வீடுகளில் சாப்பிடுவது உங்கள் பர்ஸை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தையும், குடும்ப உறவையும் வலுவாக்கும். 

சில சமயங்களில் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து இந்தப் பழக்கம் இளம் வயதினருக்குத் தொற்றுவதுண்டு. பல அம்மாக்களும், ஐயாக்களும் விளம்பரங்களைக் கண்டால் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இலவசமாய்க் கிடைக்கும் கரண்டிக்காக பட்டு சேலை வாங்க முண்டியடிப்பார்கள். 

சூப்பர் ஆஃபர்என அடித்துப் பிடித்து வாங்கிய பொருட்களில் எத்தனை பொருட்கள் நமக்குத் தேவையானவை ?  கண்டிப்பாக வேண்டும்என வாங்கிக் குவித்த பொருட்களை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஒரு ஆண்டில் எத்தனை முறை அது பயன்பட்டது ? அதை வாங்காமல் இருந்திருந்தால் என்னென்ன இழப்புகள் நேரிட்டிருக்கும் ? வாங்கியதால் என்னென்ன நன்மைகள் வந்திருக்கின்றன ? என கொஞ்சம் யோசியுங்கள் ! பாதிக்கு மேல் பொருட்கள்ஏண்டா வாங்கினோம் ?” என நம்மை யோசிக்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்பும் பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம். 

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உதாரணமாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன் பில், இத்யாதி என பட்டியலிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கட்சிதமாக நிறுத்துங்கள். “எது ரொம்ப முக்கியம்என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள். மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள். 

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் என முடிவெடுங்கள். அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள். சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல, சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது.

புத்திசாலித் தனமான இளைஞர்கள் வேலை கிடைத்த உடனேயே தங்கள் ரிட்டையர்மெண்ட் க்காக சேமிக்கத் துவங்குவார்கள். சின்னத் தொகையாக இருந்தாலும், பணிவாழ்க்கை முடிந்தபின் அந்தப் பணம் நமக்கான பொருளாதார ஊன்று கோலாய் உருமாறும்.  

இளைஞர்கள் சிக்கிக் கொள்ளும் இன்னொரு இடம் கிரடிட் கார்ட். கிரடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது. சரியாகக் கையாளவில்லையேல் காயம் நிச்சயம். சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான ஒரே அட்வைஸ், “என்ன செலவு செய்தாலும் பணப் பரிமாற்றமே வைத்துக் கொள்ளுங்கள்என்பது தான். செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம். 

பிரியத்துக்குரியவர்களுக்குகிஃப்ட்கொடுப்பதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பரிசுப் பொருட்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அன்பில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பல வேளைகளில் கையால் நாம் உருவாக்கும் கடிதங்களோ, கைவினைப் பொருட்களோ தரும் ஆத்ம திருப்தி போகும் வழியில் வாங்கிச் செல்லும் விலையுயர்ந்த பொருட்களுக்கு இருப்பதில்லை !

அப்படியே ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் அலைபாயும் போது செலவு அதிகமாகும். சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக்குப் பொருட்கள் கிடைக்கக் கூடும்.

இன்றைக்கு உங்கள் பின்னால் ஓடி ஓடி வரும்பர்சனல் லோன்புதைகுழியில் மறந்தும் விழுந்து விடாதீர்கள். கால் வைத்து விட்டால் அப்படியே உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். முதலில் வசீகரமாய்ப் பேசி பின் கோரமாய்ப் பல்லிளிக்கும். அதீத எச்சரிக்கை தேவை ! பலரும் நண்பர்களை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என லோன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை டைனோசர் மாதிரிக் கடித்துக் குதறிவிடும்.

பல இளைஞர்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்பதற்காக ஜிம், டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப், நீச்சல் கிளப்  என ஒரு பந்தாவுக்காக எல்லாவற்றிலும் உறுப்பினர் ஆகி விடுவார்கள். ஆனால் எதிலும் உருப்படியாகப் போவதில்லை. தேவையற்ற இடங்களில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தாலே கணிசமான பணம் சேமிக்கலாம்.

உங்களிடம் உறைந்து கிடக்கக் கூடிய ஏதோ ஒரு திறமையைக் கூர்தீட்டினால் கிடைக்கக் கூடிய மரியாதை அலாதியானது. எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் ஸ்பெஷாலிடி இருக்கலாம். உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கவுரவம் நீங்கள் நல்ல ஓவியர் என்பது ! இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.

  • உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்ன இருக்கிறது என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
  • அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை விடுங்கள். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும் தவிருங்கள்.
  • என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு துளிப் பணமும் பலகோடி மக்களுக்கு எட்டாக் கனி என்பதை நினைவில் எப்போதும் வைத்திருங்கள். 
  • சூதாட்டம், மது, போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள். உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு.
  • பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு நேரம் ஹோட்டலில்  சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுங்கள், கொடுப்பதில் இருக்கும் சுகம் வாங்கிக் குவிப்பதில் இருப்பதில்லை எனும் உண்மை உணர்வீர்கள்.

பொருட்கள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆழமான நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் தருபவை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.

வீணான செலவுகளை விலக்கு

அன்பே உலகத்தின் விளக்கு

தன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.

அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே !

பல முதியவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடந்த காலத்தை அசை போடுகையில் வெப்பப் பெருமூச்சையே வெளி விடுவார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்எனும் உச்சுக் கொட்டல் பலருடைய சிந்தனைகளிலும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

விட்டுக் கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி. மண் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் முளை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை. எதையும் இறுகப் பற்றிக் கொள்வதிலல்ல, விட்டுக் கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்.

குடும்பத்தில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் என்ன செய்யலாம் என எல்லோரும் அமர்ந்து பேசுவீர்கள். “ புதுப் படம் பாக்க போலாம்என்பான் தம்பி. “அதெல்லாம் வேண்டாம் கோயில் போகலாம்என்பார் அம்மா. “பீச் போகலாம்என்பது உங்களுடைய கருத்தாய் இருக்கும். “எங்கே போலாம்ன்னு முடிவு பண்ணிச் சொல்லுங்கஎன ஹாயாக அமர்ந்து விடுவார் அப்பா !

இந்தச் சூழலின் முடிவு என்ன? இங்கே ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை வைத்தே விட்டுக் கொடுத்தலைப் புரிந்து கொள்ளலாம். 

பெரும்பாலும் விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் வெளிப்பாடே ! யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த நபர் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். முதலில் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர் தான் ! அவர்களுடைய அன்பு நிபந்தனைகளற்ற அன்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

நமது உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு குத்துச் சண்டை போலவே நடக்கும். சண்டையில் எதிராளி தாக்கப்படுவதில் நமது வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் குடும்ப விவாதங்களில் அடுத்த நபர் காக்கப் படுவதில் தான் வெற்றி இருக்கிறது. 

விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்குள்நான் பெரியவன்எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. “என் மகிழ்ச்சியே முக்கியம்எனும் சுயநலம் அதற்குள் விழித்திருக்கிறது. ‘நான் தோற்று விடக் கூடாதுஎனும் பிடிவாதம் அதற்குள் படுத்திருக்கிறது. 

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தைநான் தான் ஜெயிச்சேன்என்றோ, தோல்வியடைந்த குழந்தைநான் தோற்று விட்டேன்என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டுவிளையாட்டு நல்லா இருந்ததுஎன்று தான் சொல்ல வேண்டும் ! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது !

இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே !

விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து. உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வியல்ல ! விட்டுக் கொடுத்தல் என்பதே  வெற்றி. “வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில் தான் இருக்கிறதுஎன்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது. 

நான் விட்டுக் கொடுத்ததால தான் அவன் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கான். இல்லேன்னா இன்னிக்கு அவன் அடையாளம் தெரியாம போயிருப்பான். ” என்றெல்லாம் பலர் புலம்புவதுண்டு. தயவு செய்து அதை நிறுத்துங்கள் !  

விட்டுக் கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பது தான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.  

ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு வாழ்க்கையையோ அழகாய் எழுதி விட முடியும். பெரும்பாலான மண முறிவுகளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப் பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.  

விட்டுக் கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். “நாம ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறார். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கி வர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொன்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக் கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.

பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக் கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

நான் செய்வதெல்லாம் சரிஎனும் மனநிலையை விட்டு வெளியே வருவது  விட்டுக் கொடுத்தலுக்கு முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க வேன்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அது தான் கற்றுத் தரும். தனக்கு பலவீனம் உண்டு என்பதை உணரும் போது தான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக் கொள்வதும் எளிதாகும்.

பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடப்பவையே. கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது அடடாஇந்த விஷயத்துக்கா இவ்ளோ எனர்ஜி வேஸ்ட் பண்ணினேன்என்று தான் பல வேளைகளில் உள்மனசு சொல்லும்.

அது உண்மையிலேயே மிக மிக முக்கியமான விஷயமெனில் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த விவாதத்தை நடத்தலாம். இதை வின்வின் அதாவது வெற்றிவெற்றி விவாதம் என்பார்கள். இருவருக்கும் வெற்றி எனும் விவாதங்களில் விட்டுக் கொடுத்தல் சர்வ நிச்சயம். !

நமது பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும். பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் சுருக் சுருக் என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொள்வது பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது வினாடிகளேனும் அமைதி காப்பது விட்டுக் கொடுத்தலுக்கான முதல் படியாய் அமையும்.

சாலையில் வாகனம் ஓட்டும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா ? அடுத்த சிக்னலுக்குள் அவனை முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா ? கொஞ்சம் ஆர அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றுமே இல்லை. முந்திச் செல்பவர் முந்திச் செல்லட்டும் என விட்டுக் கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும்.

விட்டுக் கொடுத்தலை பலவீனத்தின் அடையாளமாகவே பலரும் பார்க்கிறார்கள். உண்மையில் அது ஆன்ம பலத்தின் அடையாளம். மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ ? தன்னை இளக்காரமாய் நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலைகள் இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் சாத்தியமாகிறது.

விட்டுக் கொடுத்தல் நமது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும் நபர்களிடம் மன அழுத்தம் வந்து குடியேறுவதில்லை. மன அழுத்தமில்லாத உடல் ஆரோக்கியமானது என்பது மருத்துவம் அடித்துச் சொல்லும் உண்மையாகும்,

உறவுகள் வளர்ந்திட விட்டுக் கொடு

பிறர்க்கும் அதையேக் கற்றுக் கொடு.

தன்னம்பிக்கை : கர்வம் தவிர்

கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தனக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்என்கிறார் கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய ஐரிஸ் நாட்டு எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை !  மனிதனுடைய வளர்ச்சியின் படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இது தான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும் போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும். கர்வம் மனிதனின் வேகக் கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.

கொஞ்சம் நடுநிலமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால் கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.

எனக்கு எல்லாம் தெரியும்என்பது கர்வக் கிரீடத்தின் குரல். ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும். எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும். பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கி விடும். மரியாதையை எதிர்பார்க்கும் மனம் பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும் என்பது தான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

நான் எல்லோரையும் விட பெரியவன்என கர்வம் தனது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும். தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும். அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டு மொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.

இதோ என் சாதனைகளின் பட்டியல்என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும். தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடி துடிக்கும்.

நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லைஎன்னைத் தவிர ! என்று கர்வம் கொக்கரித்துத் திரியும். 

என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனேஎன கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால் தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

என்னைப் பாராட்டுங்கள் ! நான் அதற்குத் தகுதியானவன்என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத் திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்து விட்டால், அது நல்லபடியாய் முடிந்து விட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனித நேயத்தின் இயல்பே அரவணைத்தலில் தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது !

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வது தான். தன்னம்பிக்கை வேறு கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக் கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும் தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்குமான ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும் !

கர்வத்தைக் கழற்றி வைத்து விட்டு சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனுக்குலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார் ? எனது மனம் மனித நேயத்தின் தாழ்வாரங்களில் தான் நடக்கிறதா ? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன ? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப் பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையை கூர் தீட்டும். 

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல ! அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே ! அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஒரு ஏழை மனிதர் வந்தார். நெடு நேரக் காத்திருப்புக்குப் பின் அவருக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள். “அவன் ஒரு ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே ?”

மன்னன் சொன்னான், “வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்து விட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது”.

தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவது தான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல. 

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம்  இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.

விலக்கி விட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம் தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும் போது கூட, ‘நான் தாழ்மையின் சின்னம்என கர்வம் கொள்ள முயல்கிறது மனது !” என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்கிளின்.

கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. “நான் நல்லவன்”, “நான் பிறரை மதிப்பவன்”, ‘நான் எளிமையானவன்”, “நான் கடவுள் பக்தி நிறைந்தவன்”, “நான் ஏழைகளுக்கு உதவுபவன்என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அது தான்.

தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பது தான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் தான் ஆழமான ஆன்மீகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது !

சின்னச் சின்ன விஷயங்களிலிருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.

பிறர் மீதான உண்மையான கரிசனை அவனையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது,

கர்வப் பிழைகள் அழியட்டும்

தாழ்மை மழையாய் பொழியட்டும்.

தன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்

மரியாதைப் பூக்கள் மலரட்டும்

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் ஆயுள் காலத் தயக்கம் காட்டுவார்கள். அப்பாவைஐயாஎன பணிந்து கைகட்டி மதிக்கும் பழக்கம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணம்.

இப்போதைய ஹைடெக் யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும் தலை முறை தலைமுறையாக தரப்பட்டுக் கொண்டிருந்த மரியாதையிலும் விரிசல் விழுந்திருக்கிறது. அவர்கள் வேண்டாத சுமைகளாகப் பார்க்கப்படும் துயரமான நிலையும் உருவாகிவிட்டது.

மீண்டும் ஒரு களங்கமற்ற, அன்பிலும் மரியாதையிலும் பிணைக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனும் ஆதங்கம் நமக்குள் எழாமலில்லை.  

பிறருக்கான மரியாதை நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து துவங்க வேண்டும். வெற்று வார்த்தைகளால் வரும் மரியாதைப் பூக்கள், தொட்டால் சிணுங்கியைப் போன்றவை. சட்டென வாடி விடும். உள்ளத்தில் வேர்விடும் மரியாதையின் வாடாமல்லிகள் விழிகளில் பூக்கும் போது இதயத்தையே வசீகரிக்கும். ஒரு புன்னகையில் முதல் சுவடில் இருந்தும் துவங்கலாம் பிறருக்கான நமது மரியாதை.

யாருக்கு மரியாதை செலுத்த வேண்டும் ? எனும் கேள்விக்கு, “எல்லோருக்கும்என பதில் சொன்னால் முறைப்பீர்கள். உண்மையில் அது தான் சரியானது. நம்மை விட உயர்ந்தவர்களை மதிக்க வேண்டும் என்பது சமூகம் கற்பித்த தவறான பாடம். குறைந்தவர்களாய் கருதப்படும் நபர்களுக்கும் அதே மரியாதையை வழங்க வேண்டும். வயதிலோ, பெருமையிலோ, பொருளாதாரத்திலோ, எதில் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்திருக்கலாம். ஒரு இரவலரோ, மனநோயாளியோ, சிறுவனோ எல்லோருமே மரியாதைக்குரியவர்களே !  

தனது குழந்தை சமூகத்தில் மரியாதை கொடுப்பவனாகவும், மரியாதை பெறுபவனாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமான கனவு. ஆனால் உண்மை என்ன தெரியுமா ? மரியாதை செலுத்தத் தெரிந்த பெற்றோருடன் வளரும் குழந்தைகள் மட்டுமே மரியாதையைக் கற்றுக் கொள்ளும்.  

வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, வீட்டு வேலைக்கு வரும் நபருக்கோ பெற்றோர் எப்படி மரியாதை செலுத்துகிறார்கள் என்பதைக் குழந்தை பார்த்துப் படிக்கும். குழந்தைகள் வார்த்தைகளிலிருந்தல்ல, வாழ்க்கையிலிருந்தே பாடங்களைப் பெற்றுக் கொள்ளும். 

உங்களிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து, உங்கள் வீட்டுக்கு தினமும் கீரை கொண்டு வரும் பாட்டியின் பெயரையோ, அல்லது அலுவலகத்தில் கழிவறை சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயரையோ எழுதச் சொன்னால் எத்தனை பேர் சரியான விடை எழுதுவீர்கள். மிக எளிய கேள்வி. ஆனால் நாம் மனிதனை, மனித நேயத்தை எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதற்கான விடை அந்தக் கேள்வியில் இருக்கிறது !.

ஒருவரைத் தூக்கி விடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அந்த நபரைக் குனிந்து பார்க்கக் கூடாதுஎன்றார் ஜெஸி ஜேக்ஸன். மரியாதைக்கு உரியவர்கள் யார் யார் என்பதை இந்த வாசகம் நமக்கு விளக்குகிறது.

குழந்தைகளுக்கான கல்வி எப்போதுமே வழிகாட்டுதல், பாராட்டுதல் எனும் தொடர்ந்த இரண்டு செயல்களின் மூலமாகவே நடக்கும். சரியானதைச் செய்ய வழிகாட்டுவதும், சரியானதைச் செய்யும் போது பாராட்டுவதும் அவர்களை மரியாதைக் காரர்களாக வளர உதவும். 

பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனும் அடிப்படை இயல்பை அவர்களுக்குப் போதியுங்கள், மரியாதை செயல்கள் என்பவை அன்பின் மையத்திலிருந்து வெளிவரும் கிளைகளே. மரியாதை என்பது சின்னச் சின்ன செயல்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக பிறருடைய பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அனுமதி கேட்பது கூட மரியாதையின் ஒரு வடிவமே.

ஒருவேளை நீங்கள் மரியாதைக் குறைவாக நடப்பதைக் குழந்தை உங்களிடம் சுட்டிக் காட்டினால் எந்தக் காரணம் கொண்டும் சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். “சாரி.. தப்பு தான்என ஒத்துக் கொண்டு அதை விலக்கி விடுங்கள்.  

மரியாதை என்பது கைகட்டிஏனுங்க ? வெட்டணுமுங்களா ?” எனக் கேட்கும் சினிமா டயலாக் அல்ல. அதற்குப் பல்வேறு முகங்களும், அகங்களும் உண்டு. 

பிறர் சொல்லும் விஷயங்களைக் கவனமுடன் கேட்பது அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதைகளில் ஒன்று. நாம் பேசுவதைப் அடுத்தவர் கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம் இல்லையா ? அதே போலதான் பிறருடைய மனநிலையும் இருக்கும். அவர்களுடைய பேச்சை ஈடுபாட்டுடன் கேட்கும் போது அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துபவர்கள் ஆகிறோம்.

எனக்கு நாக்கு ஒண்ணு தேன், வாக்கும் ஒண்ணுதேன்என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அடுத்த நபருக்கு நீங்கள் கொடுக்கும் உயரிய மரியாதை இது. உதாரணமாக, நீங்கள் குறைந்த விலைக்கு ஒரு பொருளை விற்க வாக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது அதிக விலைக்கு ஒரு பொருளை வாங்குவதாய் வாக்குக் கொடுத்தாலும் சரி. அதைக் காப்பாற்றுங்கள். நீங்கள் அடுத்த நபரை மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளமே இது !

உங்கள் மரியாதையை அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதிலும் வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதானாலும் சரி, குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடித்துக் கொள்வதானாலும் சரி. அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதன் மூலம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள். !

சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுடைய கரிசனையைக் காட்டுங்கள். “நன்றி”, “ சாரி.. மன்னியுங்கள்எனும் ஆத்மார்த்த வார்த்தைகள் மரியாதை கலந்த அன்பின் வெளிப்பாடுகளே.  

உரையாடல்களில் அடுத்த நபரைப் பேச விடாமல் இடைமறிப்பது அவரை அவமானப் படுத்துவது போன்றது. பிறருடைய கருத்தை மதிப்பதும், அவர்களுடைய ஐடியாக்களை வரவேற்பதும், அதுகுறித்து விவாதிப்பதெல்லாம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளங்கள். 

சின்னச் சின்ன விஷயங்களை வைத்து விமர்சிப்பது, பொதுவில் தவறைச் சுட்டிக் காட்டி அவமானப் படுத்துவது, அடுத்தவர்களைக் குறித்து கிசு கிசுக்கள் பரப்புவது போன்றவையெல்லாம் மரியாதையைத் தூக்கி ஓடையில் போடுவதைப் போன்ற விஷயங்கள். நிறம், குணம், உடல் எடை, மதம் என எதை வைத்தும் பிறரைக் கிண்டலடிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். பிறரை அவருடைய இயல்போடே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது நாம் அவருக்கு வழங்கும் மரியாதை.

பிறருடைய தோற்றத்தைக் கண்டு கிண்டலடிக்கும் கொடூர மனப்பான்மையை பல திரைப்படங்கள் தங்களையறியாமலேயே செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பலவீனமான மனநிலையிலிருந்து நமது சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியதும் நமது கடமையாகும்.

வயதில் பெரியவர்கள் நம்மிடம் எதையாவது சொல்லும் போது மரியாதையுடன் அவர்களை அணுக வேண்டும். உங்கள் அறிவையெல்லாம் கழற்றி வைத்து விட்டு,  ஒரு சின்ன மழலையாய் மாறி அவர்களுடைய அறிவுரைகளைக் கேளுங்கள். அவர்களுடைய வாழ்த்து உங்களை வளர்த்தும்.

உங்களைப் போல பெரியவர்கள் எல்லோருமே ஷார்ப் ஆக இருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். மழலையாய் இருந்தபோது நீங்கள் உங்கள் தந்தையிடம் ஒரே கேள்வியை ஆயிரம் முறை கேட்டிருப்பீர்கள். இப்போது அவர்களுடைய முதுமையில் அவர்கள் ஒரே கேள்வியைப் பலமுறை கேட்டால் எரிச்சல் படாதீர்கள். அவர்கள் உங்களை எப்படி அணுகினார்களோ அதே ஆனந்தத்தோடும், விருப்பத்தோடும் அணுகுங்கள். 

ஒவ்வொருவருடைய விருப்பமும், வெறுப்பும் தனித்தனியானவை. அவைகளைக் குறித்த விமர்சனங்களைத் தவிருங்கள். புறணி பேசுவது பிறரை மரியாதைக் குறைவாய் நடத்துவதன் அப்பட்டமான வெளிப்பாடு. அவரவர் எல்லைக்குள் அவரவர் மரங்கள் பூக்கள் பூக்கட்டும். எங்கும் உங்கள் பூக்களே விளைய வேண்டுமென பிரியப்படுவதே தவறு தான்.

பிறருக்காக கொஞ்சம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அன்பினால் நிறைந்தவர் என்று பொருள். நடுவழியில் லிப்ட் கேட்கும் நபரை ஏற்றிக் கொள்வது கூட அவரை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள், அவர்களுக்காக கரிசனை காட்டுகிறீர்கள் என்பதையே காட்டும். 

போகும் வழியில் அவர்களை இறக்கி விடுவதற்குப் பதில் இன்னும் கொஞ்சம் சிரமம் தாங்கி, அவருக்கு வசதியான ஒரு இடத்தில் இறக்கி விட்டால் நீங்கள் உங்கள் மரியாதைத் தன்மையில் இரண்டு படி மேலேறிவிட்டீர்கள் என்று பொருள். அன்பு சின்னச் சின்ன விஷயங்களில் வெளிப்படட்டும் என்கிறார் அன்னை தெரேசா.

இரண்டு நபர்களுக்கிடையேயான இடைவெளியை இறுக்கிக் கட்டும் ஒரு அழகிய மந்திரம் மரியாதை. இந்த மரியாதை என்பது வீட்டுக்கு வெளியே மட்டும் செலுத்த வேண்டிய சமாச்சாரமல்ல வீட்டுக்கு உள்ளேயும் பரிமாறப்பட வேண்டிய விஷயம் என்பதை மறக்காதீர்கள்.

பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களை நடத்துங்கள் !” இந்த வாக்கியம் எப்போதும் மனதில் இருந்தால் உங்கள் செயல்கள் வாசம் வீசும்.

மதியாப் பிழைகள் அழியட்டும்

மரியாதை மழையாய்ப் பொழியட்டும்