அப்பாவின் தாடி

அப்பாவின் தாடி

Image result for beard painting

சிலருடைய
தாடிகள்
அப்பாவை
ஞாபகப்படுத்துகின்றன.

கருப்பும் வெள்ளையுமாய்
அவை
நினைவுகளின் மீது
வண்ணமடிக்கின்றன.

அப்பாவின்
விரல் கோதிய தாடி
விசேஷமானது.

மழலை வயதில்
எங்களை
கிச்சு கிச்சு மூட்டி
சிரிப்பவை அவை.

கோபித்துக் கொள்ளும்
உயிர் நண்பனைப் போல
தற்காலிகமாய்
காணாமலும் போகும்.

காலங்களின்
பழுப்பேறிப்போன நினைவுகளில்
இன்னமும்
அப்பாவின் தாடி
வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

எங்கோ
ஒட்டப்படும் ஒரு போஸ்டரில்

சட்டென
கடந்து செல்லும் ஒருவரில்

நகரும் பேருந்தின்
சன்னலோர மனிதரில்

என
பலரும்
அப்பாவின் தாடியை
நினைவுபடுத்திக் கொண்டே
இருக்கின்றனர்.

எனினும்
அப்பாவின் தாடி
விசேஷமானது.

காரணம்
அது அப்பாவிடம் இருந்தது.

*

சேவியர்

10ம் வகுப்பு, சி பிரிவு

10ம் வகுப்பு, சி பிரிவு

Image result for very old school tamil nadu
என்
பால்யத்தின் பரவசத்தை
அந்த
வகுப்பறை
சன்னல்கள் தான்
திறந்து வைத்தன.

பாடங்களைக்
கேட்டுக் கேட்டு
உறைந்து போயிருந்த
சன்னல்களுக்கு
அந்த தேவதை விரல்களே
ஆறுதல் அளித்தன.

அவள்
நகக் கீறல்களில்
சன்னல்கள்
சன்னமாய்ச் சிலிர்த்தன

அவளது
மூச்சுக் காற்றின்
வெப்பத்தை
பத்திரமாய்ப் பொத்தி வைத்தன

அவளது
சிரிப்பொலிகளை
அந்தக்
கம்பிகள் கொஞ்சம்
களவாடிக் கொண்டன.

அவள்
பார்வைகள்
வருடும் போதெல்லாம்
சன்னல் ஒரங்களில்
சொல்லாமல் குளிரடித்தது.

மூடப்படாத
அந்த
சன்னல்களின் உள்ளே
திறக்கப்படாத
கனவுகள்
விளையாடித் திரிந்தன.

பால்யம்
பள்ளி தாண்டியது.
காலங்கள்
கதவடைத்தன.

கால்முளைக்காத
கனவுகள்
நிஜத்தின் வீதிகளில்
வருடங்களை விதைத்து
மறைந்தன.

இப்போதும்
கிராமத்துச்
சாலையைக் கடக்கையில்
அனிச்சைச் செயலாய்
திரும்பிப் பார்க்கிறேன்

இடிபாடுகளில்
இடையே
காணாமல் போயிருந்தது
அந்த சன்னல்.

சேமித்து வைத்தவற்றை
எங்கே
ஒளித்து வைத்ததென
அது
யாருக்கும் சொல்லவில்லை.

*

சேவியர்

அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டை

Image result for Shirt drawing

அப்பாவின் சட்டை
ரொம்பவே
அழகானது !

சற்றே
தொளதொளவென இருக்கும்
அந்த
அரைக்கை சட்டை
அப்பாவின் பிரிய தோழன்.

அப்பாவின்
கரங்கள் நுழைந்ததும்
அதற்கொரு
கம்பீரம் வந்து விடும்.

சிவன் கழுத்துக்
கருடனைப் போல
விறைப்புடன் நின்று
முறைத்துப் பார்க்கும்.

அது தரும் வாசனை
என்
நாசிகளில்
நங்கூரமிட்டு நிற்கிறது.

நேர்த்தியாய் மடித்தே
எப்போதும்
அலமாரியில் வைப்பார்
அப்பா.

அப்பாவின்
உழைப்பை
நெருக்கமாய் அறிய
அந்த
சட்டையால் மட்டுமே
முடிந்திருக்கிறது.

அவரது
வலிகளின் முனகல்களை
அது மட்டுமே
பதிவு செய்து வைத்திருக்கிறது.

அவரது
பதட்டத்தின் தருணங்களை
காலியான
பாக்கெட்களே
கண்ணீரோடு அறிந்திருக்கின்றன.

அப்பாவின் சட்டை
அற்புதமானது.

வியர்வையின் விரல்களால்
கிழிந்து போன
காலர் பகுதியுடன்
அது
இப்போதும் காத்திருக்கிறது.

என்றேனும்
ஒரு நாள்
அப்பாவின் கைகள் தீண்டுமென
இருள் கொடியில்
இருந்து
அழுது கொண்டிருக்கிறது.

அந்த
தேக வாசனையின்
தேவ தருணங்களுக்காக
தவிப்புடன் அது
தவமிருக்கிறது.

அப்பா
மறைந்து போன
செய்தியை
நாங்கள் யாரும்
அதனிடம் சொல்லவில்லை.

*

சேவியர்

அக்மார்க் போலிகள்

 

Image result for sharing in fb

நீ
பகிர்வது பொய் என்பது
உனக்கும் தெரியும்.
ஆனாலும் பகிர்கிறார்

உண்மையின்
அனலை விட
பொய்யின் குரூரமே
உனக்குப் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து
சொல்லப்படும் பொய்கள்
உண்மையின்
ஆடை போர்த்தும் என
அரசியல் பேசுகிறாய்.

நவீன யுகத்தில்
பொய்களின் முட்டைகளே
விரைவாய்
பொரிக்கும் என
மூட்டைகளை அவிழ்க்கிறாய்

நிழல் கூட
வண்ணமாய் விழுகிறதென
டிஜிடல் வெளியில்
தொடர்ந்து சாதிக்கிறாய்.

நிஜத்தின்
சித்திரங்களை
பனிக்கட்டியில் வரைந்து
வெயிலில் வைக்கிறாய்

பொய்யின் பிதற்றல்களை
கல்வெட்டில் எழுதி
கடற்கரையில்
வைக்கிறாய்.

இன்றைய சமூகத்துக்கு
வெளிச்சத் திரைகளிலிருந்து
விழிகளை விலக்கவே
நேரம் இல்லை.

துயரத்தின் உச்சத்தையும்
மீம்களில் வரைந்து
மீட்படைகின்றனர்.

குனிந்த
தலைகளை
நிமிர்த்த
மறுத்து விடுகின்றனர்.

நிஜமா பொய்யா
என
மூளையைக் கேட்பதை
மறந்து விட்டனர்.

என்ன செய்ய,

இவர்களின்
மனதை
மாற்றும்
போட்டோஷாப்களை
இன்னும் தொழில்நுட்பம்
இறக்குமதி செய்யவில்லை.

*

சேவியர்

கைது செய்

கைது செய்

Image result for man arrested shadow

 

பயத்தை விதைப்பது
மிக முக்கியம்.

உடைந்து சிதறி
பல இடங்களில்
முளைக்கும் முன்
கொளுத்த வேண்டியது
அவசியம்.

துணிச்சலின்
துகிலுரிந்து
நிர்வாணமாக்க வேண்டியது
மிகவும் அவசியம்.

அதுவும்
பொதுவெளியில் அவனை
அச்சுறுத்துவது
மிக மிக முக்கியம்.

நீட்டிய விரலை
நறுக்கி நகர்ந்தால்
மறு விரலை
நீட்டுவான்.
கழுத்தை உடை !

வாலை நறுக்கினால்
பல்லியாய்
மூண்டும் முளைத்தெழுவான்
தலையை நறுக்கு.

வாட்ஸப்பில் வதந்தி
பரப்பியதாய்
வன் சிறையிலடை.

ஃபேஸ்புக்கில்
புலம்பினானென
பட்டென
முதுகெலும்பு உடை.

தேச துரோகமென
ஊடகங்களில்
வசனம் பிறழாமல்
விவாதம் நடத்து

மொத்தமாய்ப் பிடுங்கு
அவன்
பட்டினியால்
கதறும் போது
கஞ்சி ஊற்று.

ஜனநாயகம்
ஆபத்தானது
பயநாயகமே வசதியானது.

ஒருவனுக்கு
நிம்மதி வழங்க
அவனுடைய
தேவைகளை நிறைவேற்ற
வேண்டியதில்லை.

இருப்பதைப்
பிடுங்கினாலே
போதுமானது.

*

சேவியர்

அப்பாவின் அலமாரி

அப்பாவின் அலமாரி

IMG_5201

 

அப்பாவின் அறையில்
ஒரு ஓரமாய்
அமைதியாய் இருந்தது
அந்த அலமாரி.

அதைத் திறக்கும்
அனுமதி
எங்களுக்கெல்லாம்
தரப்படவில்லை.

அதற்குள்
அலாவுதீன் பூதம்
அடைபட்டுக் கிடப்பதாய்
எங்கள்
கற்பனைகள் கண்ணடிக்கும்..

புதிர்களை அவிழ்க்கும்
கனவுச்
சாவிகளை
பயம் வந்து
முறித்துப் போடும்.

பக்தனுக்குக்
காட்சி தராத
கர்ப்பக் கிரகம் போல
அது
அடைபட்டே கிடந்தது.

அதை
நெருங்குவதெல்லாம்
முன்பக்கக் கண்ணாடியில்
முகம் பார்க்கவும்
தலைசீவவும்
மட்டுமே.

அந்த
மர்மப் பெட்டியில்
நோவாவின் பேழை போல்
வரலாற்றுச் துடிப்புகள்
ஒளிந்திருக்கலாம் என
கற்பனை செய்ததுண்டு.

புதையல்களின்
பதுங்குகுழியோ என
பரவசமடைந்ததும் உண்டு.

காலங்கள் கடந்துவிட்டன.
ஓர்
துயரத்தின்
நெருப்புத் துளியாய்
அப்பா விடைபெற்றார்.

சத்தத்தை விட
வலிமையான
மௌனத்தை அவர்
அலமாரியின் மீது
இறக்கி வைத்துப் போனார்.

தடுப்பதற்கு ஆளில்லாத
அலமாரியை
திறப்பதற்கு
யாருக்கும் மனம் வரவில்லை.

நடுங்கும் சாவியுடன்
அதை
திறந்த ஒருகணத்தில்
அப்பாவின் வாசனை
நேசமாய் நாசி தீண்டியது.

நேர்த்தியாய்
மடித்து வைத்த ஆடைகளும்
பழுப்பேறிய
பத்திரங்களும்,
துணிகளின் அடியில்
மறைந்திருந்த
சில ரூபாய் நோட்டுகளுமாய்
அலமாரி ரகசியம் அவிழ்த்தது.

எதுவும்
முக்கியமற்றுப் போன
அந்த கணத்தில்
அவசரமாய்
அலமாரியை மூடி வைத்தோம்

அப்பாவின்
வாசனை
வெளியேறாமல் இருக்க.

*

சேவியர்

அப்பாவின் டைரி

Image result for old diary

 

வருடங்களின்
வருடல்களை
சுருக்கைப் பையில்
சுருட்டி வைத்ததாய்,

காலங்களின்
கணங்களை
உறைய வைத்த
உறவு மூட்டையாய்

பொக்கிஷமாய்
மௌனித்திருக்கிறது
அப்பாவின் டைரி.

தந்தத்தால் இழைத்த
தங்க டைரி கிடைத்தாலும்
அப்பாவின்
அழுக்கேறிய டைரியின்
அழகுக்கு ஈடாகாது.

புரட்டிப் புரட்டி
புடைத்துப் போன
அதன்
வலது ஓரம்
வசீகரமாய் இருக்கிறது.

அப்பாவின்
கைரேகை
டைரியின் பக்கங்களில்
காட்சி தராமல் மறைந்திருக்கிறது
கடவுளைப் போல.

அப்பாவின்
எழுத்துகளின் வசீகரம்
என்
பால்யத்தின் பக்கங்களை
புதிதாய்க் கொளுத்துகின்றன.

அந்த டைரி
ஒரு
திறந்த ரகசியமாய்
தியானித்திருக்கிறது.

கவலையின்
கணக்கு வழக்குகளும்,
ஆன்மீக
மறை விளக்குகளும்
நேசத்தின் விரல்ப்பதிவுகளும்
அந்த டைரியெங்கும்
நிரம்பியிருக்கின்றன.

கிழித்து விடாத
கவனத்துடன்
கிழிந்த பக்கங்களைப்
புரட்டுகிறேன்.

ஒரு கடலைப் புதைத்த
கண்ணீர் துளியுடன்
அந்த
வாசனை வரிகளை
வாசிக்கிறேன்.

வாசித்து முடித்து
நெஞ்சோடு அணைக்கையில்
சட்டென
நிகழ்கிறது
சொர்க்கத்தின் சலுகையாய்
அப்பாவின் அரவணைப்பு.

*

சேவியர்

நினைவுகள் வாழும் வீடு

நினைவுகள் வாழும் வீடு

IMG_5201
மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு.

குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது.

பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்

சத்தங்களோடு
சல்லாபிக் கிடந்த காற்று
இப்போது
நிசப்தத்தோடு
முரண்டு பிடிக்கிறது.

ஓசை ஓயாத
சாம்பல் சமையலறையில்,
இப்போது
ஏகாந்தத்தின் எருதுகள்
அசைபோடுகின்றன.

சிரிப்புகள்
சிதறிக் கிடந்த
வரவேற்பறைத் தரையில்
காலொடிந்து கிடக்கிறது
கனத்த காற்று.

கனவுகள்
உலவிக் கிடந்த
படுக்கையறைகளில்
விழித்திருந்து அழுகின்றன
இரவுகள்.

காலத்தின் புழுதிகள்
கூரையின் முதுகில்
கூடாரமடித்துக்
குடியிருக்கின்றன.

என்றேனும்
அந்த தனிமை வீட்டின்
தாழ்வாரங்களில்
பழகிய பாதங்களை
பரிவுடன் பதிக்கையில்,

சத்தமிட்டு
விழித்தெழுகின்றன
உறைந்த மௌனத்தின்
உறங்காத குரல்கள்.

*

சேவியர்

குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை

Image result for beautiful kids

குழந்தைகள்

*

இதோ,
மீண்டும் மலர்ந்து விட்டது
ஒரு
குழந்தைகள் தினம்.

இது
உங்களுக்கான தினம்.

மலர்களே
தங்களுக்கு
மாலை சூடிக் கொள்ளும் தினம்

குயில்களே
தங்களுக்காய்
இசைவிழா நடத்தும் தினம்

இந்த
மயில்களுக்காய்
மழையொன்றைப் பொழிகிறேன்
கவிச்
சாரலை தெளிக்கிறேன்.

குழந்தைகளே
குழந்தைகளே
இன்றைய நாட்டின்
இளவரசர்களே

நாளைய
சிம்மாசனங்களின்
சொந்தக்காரர்கள் நீங்கள்,
நாளைய
சிகரங்களின்
கிரீடங்கள் நீங்கள்.

நீங்கள்
நாளைய வனத்துக்கான
இன்றைய விதைகள்.

நாளைய கடலுக்கான
இன்றைய துளிகள்

செதுக்குவதைப்
பொறுத்து தான்
சிலைகள் வடிவாகும்.

உங்களைக்
கவனமாய்ச் செதுக்கும்
கல்வி உளி
எங்களிடம் இருக்கிறது.

பொறுமையாய் காத்திருங்கள்
காத்திருக்கும்
பாறைகளே சிலைகளாகும்.
முரண்டு பிடிப்பவையோ
உடைந்து தெறிக்கும்.

நீங்கள்
மலர்கள்.

எந்த வாசனையை
உங்களில் ஊற்றுகிறோமோ
அதுவே
உங்கள்
சொந்த வாசனையாகப் போகிறது.

நேசத்தின்
வாசனையை
உள்ளத்தில் நிறையுங்கள்.

நீங்கள்
புல்லாங்குழல் போன்றவர்கள்
நாங்கள்
உங்கள் குணாதிசயங்களில்
இசை மீட்டும்
இடுபவர்கள்.

உங்களை
ஒப்படையுங்கள்,
வாழ்க்கை சுரம் விடுக்கும்.

மேகத்தை அரைத்தால்
மழை பொழியாது
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது !
கற்பதை மனதில்
கல்வெட்டாய் கல்லுங்கள்.

நீங்கள்
சூரியனையும் முளைப்பிக்கும்
சக்தி படைத்தவர்கள்

பாதாளத்தையும் புதைத்து வைக்கும்
வலிமை படைத்தவர்கள்.
சோம்பலில் படுக்கையில்
சுருண்டு விடாதீர்கள்.

வெளியாறாத சூரியன்
ஒளிதருவதில்லை.
ஓடாத நதியில்
இசை இருப்பதில்லை.
இயங்கிக் கொண்டே இருங்கள்

நீங்கள்
வானத்தையும் வனையும்
வல்லமை படைத்தவர்கள்
விரல்களை
டிஜிடல் கருவிகளில்
ஒட்டி வைக்க வேண்டாம்.

கீழ்ப்படி இல்லாமல்
மேல்படி இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை.
கீழ்ப்படியுங்கள்.

பொய்யின் பிள்ளைகள்
வெற்றிகளின்
கிளைகளில் கூடுகட்டுவதில்லை.
வாய்மையை
வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.

கர்வத்தின் கரங்களில்
நெரிபடாதீர்கள்
தாழ்மையின்
தாழ்வாரங்களில் மட்டுமே
நடை போடுங்கள்.

மன்னிப்பின்
மகரந்தங்களைச்
சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியாகுங்கள்.

ஒரு சிறு துளியே
பெருமழையின்
துவக்கம்.
ஒரு சிறு தவறே
பெருங்குற்றத்தின்
துவக்கம்
தவறுகளின் முளைகளை
துவக்கத்திலேயே
தறித்தெறியுங்கள்.

வாழ்க்கை
ஸ்மார்ட்போன்களில் இல்லை
அவை
உங்கள்
வலிமையை அழிக்கும்
மௌனச் சாத்தான்கள்.
வளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.

விரைவில் தூங்கி
விரைவில் எழுங்கள்,
உடலை மதித்து
பயிற்சி எடுங்கள்,
நல்ல உணவால்
நலத்தைப் பெறுங்கள்

ஒரு துளி
விஷம் போதும்
உயிரை எடுக்க,
ஆரோக்கிய வாழ்வை
விலக்காமல் இருங்கள்.

நீங்கள்
குயவன் கை களிமண்.
வனையும் பொறுப்பு
எங்களிடம் இருக்கிறது.

எங்கள்
கரங்களை விட்டு
நழுவாமல் இருங்கள்
வழிகளை விட்டு
வழுவாமல் இருங்கள்

நீங்கள்
பாத்திரங்கள்,
உச்சமானதை மட்டுமே
உள்ளத்தில்
மிச்சமின்றி நிறையுங்கள்.

பிரபஞ்சத்தின்
பரவசமாம் புன்னகையை
உயிருக்குள்
நிரப்பியே வைத்திருங்கள்

இனிய
குழந்தைகள் தின
வாழ்த்துகள்

*

தகவல் இல்லா தொடர்புகள்…

Image result for email

 

 

 

இணையத்தில்
ஏதோ இணைப்புப் பிழை,
உனக்கனுப்பிய
மின்னஞ்சல்
வழியில் எங்கோ விழுந்துவிட்டது.

உன்
வீட்டுத் தொலைபேசி
வேலை செய்யவில்லையா ?

மறந்து போன நண்பனை
வழியில் சந்திக்கும் போது
உதடுகள்
ஓயாமல் பொய்சொல்லும்.

‘கடுதாசி போட்டேனே’
என்று அப்பா யாரிடமோ
ஒரு நாள்
சொல்லிக் கொண்டிருந்தார்.

மறக்கத் துவங்கியிருக்கும்
பால்ய கால நண்பர்களுக்கு
டைரியைத் தொலைத்தேனெனும்
முன் ஜாமீன் பதில் தான்.

இந்த நட்பு
இறுதிவரை இருக்குமென்று நினைத்து
இறுக்கமற்றுப் போனவற்றின்
கணக்குகள்
ஐந்தாம் வகுப்பிலிருந்து
அமெரிக்கா வரை நீள்கிறது.

பாம்பின் மேல் பழி சுமத்திய
ஆதாம் காலத்தைய ஆரம்பம் தான்
இந்த
தப்பித்தல் உளறல்கள்.

கற்காலத்துக்கும்
தற்காலத்துக்கும்
அர்த்தங்களின் தூரம் அதிகமில்லை,
பெயர் சூட்டுதலில் தான்
பல நூற்றாண்டு நீளம்.

நேற்று,
சாலையோரம் மங்கலான வெளிச்சத்தில்
அவனைப் பார்த்தேன்,
ஒரு காலத்தில் என்னோடு
நெருக்கமாய் இருந்தவன்.

விசாரிப்புக்கிடையில்
வினவினான்
ஒரு கடிதம் அனுப்பினேனே,
கிடைத்ததா ?

சிரிப்புக்கிடையில் சொன்னேன்.
ஆம்,
பதில் கூட அனுப்பினேனே !