10ம் வகுப்பு, சி பிரிவு

10ம் வகுப்பு, சி பிரிவு

Image result for very old school tamil nadu
என்
பால்யத்தின் பரவசத்தை
அந்த
வகுப்பறை
சன்னல்கள் தான்
திறந்து வைத்தன.

பாடங்களைக்
கேட்டுக் கேட்டு
உறைந்து போயிருந்த
சன்னல்களுக்கு
அந்த தேவதை விரல்களே
ஆறுதல் அளித்தன.

அவள்
நகக் கீறல்களில்
சன்னல்கள்
சன்னமாய்ச் சிலிர்த்தன

அவளது
மூச்சுக் காற்றின்
வெப்பத்தை
பத்திரமாய்ப் பொத்தி வைத்தன

அவளது
சிரிப்பொலிகளை
அந்தக்
கம்பிகள் கொஞ்சம்
களவாடிக் கொண்டன.

அவள்
பார்வைகள்
வருடும் போதெல்லாம்
சன்னல் ஒரங்களில்
சொல்லாமல் குளிரடித்தது.

மூடப்படாத
அந்த
சன்னல்களின் உள்ளே
திறக்கப்படாத
கனவுகள்
விளையாடித் திரிந்தன.

பால்யம்
பள்ளி தாண்டியது.
காலங்கள்
கதவடைத்தன.

கால்முளைக்காத
கனவுகள்
நிஜத்தின் வீதிகளில்
வருடங்களை விதைத்து
மறைந்தன.

இப்போதும்
கிராமத்துச்
சாலையைக் கடக்கையில்
அனிச்சைச் செயலாய்
திரும்பிப் பார்க்கிறேன்

இடிபாடுகளில்
இடையே
காணாமல் போயிருந்தது
அந்த சன்னல்.

சேமித்து வைத்தவற்றை
எங்கே
ஒளித்து வைத்ததென
அது
யாருக்கும் சொல்லவில்லை.

*

சேவியர்

அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டை

Image result for Shirt drawing

அப்பாவின் சட்டை
ரொம்பவே
அழகானது !

சற்றே
தொளதொளவென இருக்கும்
அந்த
அரைக்கை சட்டை
அப்பாவின் பிரிய தோழன்.

அப்பாவின்
கரங்கள் நுழைந்ததும்
அதற்கொரு
கம்பீரம் வந்து விடும்.

சிவன் கழுத்துக்
கருடனைப் போல
விறைப்புடன் நின்று
முறைத்துப் பார்க்கும்.

அது தரும் வாசனை
என்
நாசிகளில்
நங்கூரமிட்டு நிற்கிறது.

நேர்த்தியாய் மடித்தே
எப்போதும்
அலமாரியில் வைப்பார்
அப்பா.

அப்பாவின்
உழைப்பை
நெருக்கமாய் அறிய
அந்த
சட்டையால் மட்டுமே
முடிந்திருக்கிறது.

அவரது
வலிகளின் முனகல்களை
அது மட்டுமே
பதிவு செய்து வைத்திருக்கிறது.

அவரது
பதட்டத்தின் தருணங்களை
காலியான
பாக்கெட்களே
கண்ணீரோடு அறிந்திருக்கின்றன.

அப்பாவின் சட்டை
அற்புதமானது.

வியர்வையின் விரல்களால்
கிழிந்து போன
காலர் பகுதியுடன்
அது
இப்போதும் காத்திருக்கிறது.

என்றேனும்
ஒரு நாள்
அப்பாவின் கைகள் தீண்டுமென
இருள் கொடியில்
இருந்து
அழுது கொண்டிருக்கிறது.

அந்த
தேக வாசனையின்
தேவ தருணங்களுக்காக
தவிப்புடன் அது
தவமிருக்கிறது.

அப்பா
மறைந்து போன
செய்தியை
நாங்கள் யாரும்
அதனிடம் சொல்லவில்லை.

*

சேவியர்

அப்பாவின் அலமாரி

அப்பாவின் அலமாரி

IMG_5201

 

அப்பாவின் அறையில்
ஒரு ஓரமாய்
அமைதியாய் இருந்தது
அந்த அலமாரி.

அதைத் திறக்கும்
அனுமதி
எங்களுக்கெல்லாம்
தரப்படவில்லை.

அதற்குள்
அலாவுதீன் பூதம்
அடைபட்டுக் கிடப்பதாய்
எங்கள்
கற்பனைகள் கண்ணடிக்கும்..

புதிர்களை அவிழ்க்கும்
கனவுச்
சாவிகளை
பயம் வந்து
முறித்துப் போடும்.

பக்தனுக்குக்
காட்சி தராத
கர்ப்பக் கிரகம் போல
அது
அடைபட்டே கிடந்தது.

அதை
நெருங்குவதெல்லாம்
முன்பக்கக் கண்ணாடியில்
முகம் பார்க்கவும்
தலைசீவவும்
மட்டுமே.

அந்த
மர்மப் பெட்டியில்
நோவாவின் பேழை போல்
வரலாற்றுச் துடிப்புகள்
ஒளிந்திருக்கலாம் என
கற்பனை செய்ததுண்டு.

புதையல்களின்
பதுங்குகுழியோ என
பரவசமடைந்ததும் உண்டு.

காலங்கள் கடந்துவிட்டன.
ஓர்
துயரத்தின்
நெருப்புத் துளியாய்
அப்பா விடைபெற்றார்.

சத்தத்தை விட
வலிமையான
மௌனத்தை அவர்
அலமாரியின் மீது
இறக்கி வைத்துப் போனார்.

தடுப்பதற்கு ஆளில்லாத
அலமாரியை
திறப்பதற்கு
யாருக்கும் மனம் வரவில்லை.

நடுங்கும் சாவியுடன்
அதை
திறந்த ஒருகணத்தில்
அப்பாவின் வாசனை
நேசமாய் நாசி தீண்டியது.

நேர்த்தியாய்
மடித்து வைத்த ஆடைகளும்
பழுப்பேறிய
பத்திரங்களும்,
துணிகளின் அடியில்
மறைந்திருந்த
சில ரூபாய் நோட்டுகளுமாய்
அலமாரி ரகசியம் அவிழ்த்தது.

எதுவும்
முக்கியமற்றுப் போன
அந்த கணத்தில்
அவசரமாய்
அலமாரியை மூடி வைத்தோம்

அப்பாவின்
வாசனை
வெளியேறாமல் இருக்க.

*

சேவியர்

திரும்பும் காலம்

திரும்பும் காலம்
Image result for beautiful female going

உமியைச் சேகரித்து
நெருப்பில் சுட்டு
உப்புடன் கலந்து
பல்தேய்த்த காலம்
பழசு.

வேப்பங்குச்சியை
பதமாய் ஒடித்து
பல்துலக்கிய
கசப்புப் பொழுதுகள்
பழசு.

கொட்டாங்குச்சியில்
குச்சி சொருகி
கரண்டியாய்ப்
பயன்படுத்திய
காலமும் பழசு.

இன்று

பூமராங் போல
திரும்பி வருகின்றன
புறக்கணிக்கப்பட்ட
பழக்கங்கள்.

இலவசமாய்க் கிடைத்தவை
கார்ப்பரேட் பாக்கெட்களில்
வர்த்தக வெப்பத்தில்
காசு
கரைக்கின்றன.

இயற்கையில்
கிடைத்தவை
வசீகரக் கவர்களில்
வியக்கும் விலைசொல்லி
பல்லிளிக்கின்றன.

பழைய கால
நிராகரிப்புகளெல்லாம்
மீண்டும்
திரும்ப வருகின்றன.

மாறிவிட்டேன்
எனும் ஒற்றைச் சொல்லில்
நிராகரித்துப் போன
காதலியைத் தவிர.

*

சேவியர்

யார் என் காதலி ?

Photo of Man Wearing Gray Sweater and Track Pants Leaning on Wall
காதலர் தினம்
எனக்கு இன்னொரு
காலண்டர் தினம் தான்.

பூப்பூக்காத செடிகளுக்கு
ஏது
பூக்காரன் கவலை?

பட்டாம்பூச்சி இல்லா தேசத்தில்
வண்ணங்களுக்குள் ஏது
வழக்காடுமன்றம்.

என் கானகத்தில் மட்டும்
கனிகள்
கிளி தேடிக் காத்திருக்கின்றன,
நதிகள்
துளிதேடித் தவமிருக்கின்றன.

அழகாய் வரும் அருவிகள் எல்லாம்
பாறையின் வெப்பத்தில்
ஆவியாகி விடுகின்றன.

எப்போதேனும் மனசுக்குள்
சாரலடிக்கும்
பார்வைக் கொம்புகள்
பதியனிடுமுன் பட்டுவிடுகின்றன,
முளை விடுமுன்
விதைகள் கெட்டுவிடுகின்றன.

காதல்,
எதையோ எடுக்கும்
புடவைக்கடை புரட்டலல்ல.
அது
தேவைகளின் திரட்டலுமல்ல.

காத்திருக்கிறேன்,
இந்த கால்நூற்றாண்டு வயதின்
காலடியில்,
வால் மிதிபட்ட நாகங்கள்
கால் கடிக்கும் கலியுகத்தில்,
ஓர்
கற்பனை நிஜத்துக்காய்
காத்திருக்கிறேன்.

ஒற்றைப் புள்ளியுடன்
காகிதம் ஒன்று என்னிடமிருக்கிறது
என் கவிதை வந்து
அமரும்போது மட்டுமே
முற்றுப் பெறும் மூச்சுடன்.

ஆசனம் ஒன்று இருக்கிறது,
காதல் பாசனம் தேடி.
காதலிக்கும் கிளிகள்
கடந்து வரலாம்.

உன் பார்வைகள்

 

Image result for negotiationபன் முனைத் தாக்குதல்
பரம நிச்சயம்,
ஆனாலும்
பயப்படாமல் அவிழ்த்து வை
உன் கருத்துக்களை.

ஒரே இடத்தில்
சுற்றிக் கொண்டிருக்க
நீயொன்றும்
ராட்டினமல்ல,
அச்சையும் கூடவே
அழைத்துச் செல்லும் சக்கரம்.

மூடி வைக்கும் கேள்விகள்
மூச்சிழந்த சடலங்கள்.
கேட்டு வைத்தால் மட்டுமே
அவற்றுக்கு
உயிர்வரும் சாத்தியமுண்டு.

நீயாகவே துவங்கு,
உனக்கான
கல்லறை தவிர
மற்ற அனைத்தையும்
நீயே
கட்டியெழுப்பத் துவங்கு.

பயம் என்னும் இருட்டை,
நீ
குகையைக்குள் இருந்து,
தயக்கத்தைத்
தின்று கொண்டே
துரத்த முடியாது.

குற்றம் சொல்லப்படாத
யாருமே
வரலாறுகளில்
குறித்து வைக்கப் பட்டதில்லை.

மலை இருக்கிறது
என்று நகர்பவர்களை விட
அதனடியில்
புதையல் இருக்கிறதா என
பரிசோதிப்பவர்களுக்கே
வாழ்க்கை
ஆச்சரியத்தை
அடுக்கி வைத்திருக்கிறது.

பன் முனைத் தாக்குதல்
பரம நிச்சயம் தான்.
ஆனாலும்
பயப்படாமல் அவிழ்த்து வை
உன் கருத்துக்களை.

*

உன் ஒரு பார்வைக்காய்…

Related image

உன்னைக் காத்து
கண்களுக்குள் நான்
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்திகள்
கண்ணீ­ராய் வழிகின்றன.

உன் குரலுக்காகவே
கைத்தடி ஊன்றிக்
காத்திருக்கின்றன
என் காதுகள்.

ஒரே ஒரு முறை
நீ
பார்வை பூசுவாய் என
பார்த்திருக்கிறது
மொட்டுக்குள்
பாறை இறக்கிய பாரமாய்
என் இதயம்.

நீ,
நிராகரிக்க மாட்டாய் எனும்
நம்பிக்கையில் தான்
விண்ணப்பங்களை அனுப்புகிறேன்.
அவை
சேர்ந்து விட்டதா எனும்
சேதியே எனைச் சேரவில்லை

இரவின் நீளலிலும்,
பகலின்
தொடர் பயணத்திலும்
என்
நம்பிக்கைப் பள்ளங்கள்
உலர மறுத்து ஊறுகின்றன.

எப்போதெனக்கு வரமருள்வாய்
பிரபஞ்சத்தின்
பரம் பொருளே…

அன்பு

Image result for caring hand

 

பிரதேசங்களின் தேகங்களில்
நேச நதியை நகரவும்
வாச மலரை நுகரவும் வைக்கும்
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம்
அன்பு.

இதயங்கள் இரண்டு
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
குடிபெயர்ந்துக் குடிவாழும்
ஓர்
குதூகலக் காடு
அன்பு.

அன்பு,
படிகம் பிரித்துத் தரும்
வண்ணங்களின் வரிசை
ஆனாலும்
காதலுக்கு மட்டுமே இதில்
வரிசை மீறிய வžகரம்.

அன்பு,
மனிதத்தின் மையம்,
மதங்களும், கடவுளும்
அன்பில் தான் மையம்

தராசுகளின் தட்டுகளில்
வெட்டி வைத்து,
முள்ளின் முனையோடு
முரண்டுபிடித்து,
கைகளில் அள்ளி
பைகளில் தள்ளும்
தானியமல்ல அன்பு,

அது தண்­ணீர் !
வறண்ட நிலத்தின் வேரிலோ,
குளிர்ந்த இடத்தில் நீரிலோ
சுட்டுக் கொண்டால் வானிலோ,
உருவம் மாறி உருவம் மாறி
உறங்காமல் உலாவும்.

அன்பு,
தானே பொழியும் மழை.
செயற்கைப் பிரசவங்களை,
கர்ப்பம் தரிக்காத
பணப் பசுக்கள்
நடத்த முடியாது.

அன்பு,
கட்டளைகளுக்குள் சிக்காது,
வான் மழைக்கு
விண் வெளியில்
அணைகட்டல் இயலாது.

அன்பு,
வலுக்கட்டாயத்தின் விளைவல்ல
பறக்கச் சொல்லி
மீன்குஞ்சை
பழக்கப் படுத்தல் இயலாது.

அன்பு,
அது அன்பாகவே உலவும்.
கால் கிலோ காற்று என்றும்
அரை லிட்டர் அன்பு என்றும்
யாரேனும்
அளந்து சொல்லல் இயலுமோ ?

அன்பை அளியுங்கள்,
அத்தனை சட்டமீறல்களும்
சட்டென்று அடைபட்டுப் போகும்.
அத்தனை
கண்­ர் விழிகளும்
கைக்குட்டை இல்லாமலேயே
ஈரம் வற்றிப் போகும்.

அன்பு
பண்டமாற்று முறையல்ல,
விற்றுத் தள்ளுவதற்கு.
வெற்றுக் கையோடு
விரோதியும் கொஞ்சம்
பெற்றுக் கொள்ளட்டுமே..

புல்லில் வீழும் பனித்துளிக்கும்
ரோஜாவில் வீழும் பனித்துளிக்கும்
ஈரமும் பாரமும்
வாழும் நேரமும்,
வித்தியாசப் படுவதில்லையே.

வெள்ளை தேசம் வேண்டும்.

Image result for cute girl fantasy
மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,

உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.

உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.

அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.

குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.

பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.

ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,

கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.

பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.

எல்லைக் கோடுகள்

Image result for Girl in dream

எல்லைக் கோடுகள்

அதிகாலை அமைதியில்
வரும்
உன் கனவு.

உயிருக்குள் நீரூற்றி
மனசுக்குள் தீமூட்டும்
உன் இளமை !

விழிகளில் நிறமூற்றி
இதயத்துள் ஓசையிறக்கும்
உன் அழகு !

நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல்.

நெஞ்சுக்குள்
சிலிர்ப்பு நதி சரிக்கும்
உன் சிணுங்கல் !
..
.
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லைக் கோடுகள் !!!