Kavithai : பொய்கள்

பொய்கள்

Image result for lies

அப்போதெல்லாம்
பொய் சொல்வது
கடினமாய் இருந்தது.

சொல்வது
பொய் என்பது
தெரியக்கூடாதெனும்
கட்டாயம் இருந்தது.

சொல்லும் பொய்
உண்மைக்கு
மிக நெருக்கமாய்
இருக்க வேண்டிய
அவசியம் இருந்தது.

தங்கத்தில்
செம்பு கலப்பது போல
பொய்களைக்
கலக்க வேண்டிய
நிலை இருந்தது.

வீட்டுப் பாடம்
செய்யாத பொழுதுகளில்
பிரம்புகளின்
காதுகளில் ஊற்ற
பரிசுத்த பொய்கள்
தேவைப்பட்டன.

மாலைநேரத் தாமதங்களில்
அப்பாவின்
பார்வைகளுக்குத் திரையிட
பதட்டமற்ற பொய்கள்
தேவைப்பட்டன.

இப்போது
பொய்கள் சொல்வது
எளிதாகிவிட்டது.

அது நானல்ல
கிராபிக்ஸ்
என சொல்லலாம்.

அது நானல்ல
ஏதோ ஹேக்கர்
என பகிரலாம்.

அது என்குரலல்ல
டெக்னாலஜி
என்று சொல்லலாம்.

இப்போது
பொய்கள்
உண்மைகளைப் போல
இருக்க வேண்டியதில்லை.

ஏனெனில்
உண்மைகளே பொய்களென
மக்கள்
நம்பத் துவங்கி விட்டனர்.

*

சேவியர்

நீ

5f2e1-man_sitting_and_watching_sunset-other
நீ
யார் என்பதை
நீயறிவாய்.

பிறருடைய
அடைமொழிகளுக்கெல்லாம்
அடம்பிடிக்க வேண்டிய
அவசியமில்லை.

பிறருடைய
துருவேறிய தூற்றல்களுக்காய்
துயரப்படவும்
தேவையில்லை.

சூரியனை
நிலாவென
பெயர்மாற்றம் செய்யலாம்
அதன்
கதிர்களை எங்கே
கடத்திச் செல்வாய் ?

கடலை
வெறும் மண்மேடென்று
சட்டமும் இயற்றலாம்
உப்பு நீரை
எங்கே கொண்டு
ஒளித்து வைப்பாய் ?

நிலத்தின்
நிறம் கண்டு
விதைகள்
முளை விடுவதில்லை

நிலம் மாறி
நட்டதால்
ரோஜா
கருப்பாவதும் இல்லை.

நீ
என்பது
உனது இயல்பு.

பிறருடைய
மோதிரங்களுக்காய்
உன்
விரல்களை
வெட்டிக் கொள்ள வேண்டாம்.

மழை இல்லையென
தோகை
கத்தரிப்பதில்லை
மயில்.

வெயில் இல்லையென
தற்கொலை
செய்து கொள்வதில்லை
நிலா.

இயல்புகள்
இறக்காதவரை
மின்மினிகளும்
இரவைக் கிழிக்கும்.

இயல்புகள்
தொலைந்து போனால்
கூண்டில் சிங்கமும்
தூண்டிலில் உயிர்விடும்.

ஒன்றை மட்டும்
புரிந்து கொள்.

நீ யார்
என்பது
அடுத்தவனின்
கேள்விகளுக்கான விடையல்ல.

உனது
விடைகளுக்கான கேள்வி.

*

சேவியர்

நவீன தீர்வுகள்

Related image

ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.

முதலில்
அது
பிரச்சினையே இல்லை
என நம்ப வைக்க வேண்டும்

அதற்காக
அதைவிடப் பெரிய
பிரச்சினை ஒன்றை
உருவாக்க வேண்டும்.

அது
மெல்லும் வாய்களுக்கான
வசீகர
அவலாக இருக்க வேண்டும்.

ஊடகங்களின்
கவர்ச்சிப் பேச்சுக்கு
ஆவேச அனலாய்
கொதிக்க வேண்டும்.

அதற்காக
எளிய வழியாக
ஒரு
நடிகையின்
அந்தரங்கத்தை சபையேற்றலாம்.

ஒரு
சாதீய ஏழையைத்
துகிலுரியலாம்.

ஒரு
மத வன்முறையை
கலாச்சாரக் குடைபிடித்து
அரங்கேற்றம் செய்யலாம்.

ஒன்றும் இல்லையேல்
வெறுமையிலிருந்து
ஒரு
ஊகத்தை உருவியெடுக்கலாம்.

போதும்,
இனிமேல்
இந்தப் பிரச்சினை
எல்லா ஊடகங்களிலும்
தீக்குளிக்கும்.

எல்லா நரம்புகளிலும்
வெறியினை
இறக்குமதி செய்யும்.

பழைய
பிரச்சினை மறந்து போகும்.
அதை
பரணில் போட்டு மூடிவிடலாம்.

அப்போ,
புதிய பிரச்சினையை
தீர்க்கும் வழி ?

ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.

முதலில்…

*

சேவியர்

 

நீ யார்

Image result for who am I

நீ
யார் என்பதை
நீயறிவாய்.

பிறருடைய
அடைமொழிகளுக்கெல்லாம்
அடம்பிடிக்க வேண்டிய
அவசியமில்லை.

பிறருடைய
துருவேறிய தூற்றல்களுக்காய்
துயரப்படவும்
தேவையில்லை.

சூரியனை
நிலாவென
பெயர்மாற்றம் செய்யலாம்
அதன்
கதிர்களை எங்கே
கடத்திச் செல்வாய் ?

கடலை
வெறும் மண்மேடென்று
சட்டமும் இயற்றலாம்
உப்பு நீரை
எங்கே கொண்டு
ஒளித்து வைப்பாய் ?

நிலத்தின்
நிறம் கண்டு
விதைகள்
முளை விடுவதில்லை

நிலம் மாறி
நட்டதால்
ரோஜா
கருப்பாவதும் இல்லை.

நீ
என்பது
உனது இயல்பு.

பிறருடைய
மோதிரங்களுக்காய்
உன்
விரல்களை
வெட்டிக் கொள்ள வேண்டாம்.

மழை இல்லையென
தோகை
கத்தரிப்பதில்லை
மயில்.

வெயில் இல்லையென
தற்கொலை
செய்து கொள்வதில்லை
நிலா.

இயல்புகள்
இறக்காதவரை
மின்மினிகளும்
இரவைக் கிழிக்கும்.

இயல்புகள்
தொலைந்து போனால்
கூண்டில் சிங்கமும்
தூண்டிலில் உயிர்விடும்.

ஒன்றை மட்டும்
புரிந்து கொள்.

நீ யார்
என்பது
அடுத்தவனின்
கேள்விகளுக்கான விடையல்ல.

உனது
விடைகளுக்கான கேள்வி.

*

சேவியர்

வெள்ளைக் காகிதம்

 

Buildings Surrounded by Treesஒவ்வொரு காலையும்
உன்னிடம்
ஓர்
வெள்ளைத் தாளை
கிள்ளித் தருகிறது.

சில நாட்கள் அதை
நீ
கண்­ணீர் விட்டு
ஈரமாக்குகிறாய்.

சில தினம்
குருதி தொட்டு
கோரமாக்குகிறாய்.

என்ன செய்வதென்னும்
யோசனையில்
வெள்ளையாகவே
பலநாள்
ஒதுக்கி வைக்கிறாய்.

அன்பு பூசி
அழகாக்குவதும்,
வம்பு பேசி
அழுக்காக்குவதும் உண்டு.

கோபத்தின்
குப்பைக் கூடையில்
அதை நீ
கசக்கியும் எறிவதுண்டு.

அந்தக் காகிதம்
சிறுகதைக்குத் தேறாதென்று
நீ
அதில்
கட்டுரை கூட எழுதாமல்
கிழித்தெறியும் தருணங்களும்,

ஹைக்கூ எழுத
கோரப்பாய் எதற்கென்று
மூலையில் கிறுக்கி விட்டு
சுருண்டு படுத்து
சேதமாக்கும் தருணங்களும்,

எழுதத் தெரியாதவன்
கைகளுக்கு
காகிதம் எதற்கென்னும்
கேள்வித் தருணங்களும்
தவறாமல் விளைவதுண்டு.

வெள்ளையாய் இருப்பது
மட்டுமே
அதன் கைகளில்.

ஓவியம் வரைந்து
அதை பத்திரப் படுத்துவதும்,
கொல்லையில் அதை
கொன்று புதைப்பதும்
உன் கைகளில் தான் !

எது எப்படியானாலும்,
நாளையும்
ஓர் வெள்ளைக் காகிதம்
உனக்காகக்
காத்திருக்கும்.

வழியோரம் நதியூறும்

Image result for apj abdul kalam

 

சோகங்களின் பொதிமூட்டை
சுமந்து சுமந்து
கழுதையாகிக் கொண்டிருக்கின்றன
கணக்கில்லா
கம்பீரக் குதிரைகள்.

இவர்களின் இதயங்கள்
கவலை முதலீட்டின்
சோக வங்கிகளாய்
சோர்ந்து கிடக்கின்றன

பார்வை பாணங்களிலேயே
குனிந்து விழும்
பனித்துளி மனிதர்கள்,

மின்னலை கண்களில் வாங்கி
இதயத்தில்
பள்ளம் பறிக்க
இலவசமாய் இடியிறக்கும்
கைத்தடி மனிதர்கள் இவர்கள்.

ரோஜாவைக் கொடுத்தாலும்
பூர்வீகம் பார்த்து
விரல் குத்திக் கொண்டும்,
பல் குத்தும் சோகங்களுக்காய்
கண்குத்திக் கொண்டும்
கவிழ்ந்து கிடக்கும்
கவலையின் கைக்குழந்தைகள்.

வருமென்ற கவலையில்
வரமென்ற நாட்களை
வீணே புதைக்கும்
வீணர்கள்.

தினசரி வாழ்க்கையை
நிர்ணயிப்பது
தினசரி நாள்காட்டியல்ல.
சின்னச் சின்னதான
சந்தோஷ நிகழ்வுகளே.

ஒரு முறை
சிரித்து முடிக்கும் போது
அடுத்த சிரிப்பு
காத்திருக்க வேண்டும்.

எதிர்பார்ப்புகளின் எல்லையை
சிறிதாக்கி,
நிம்மதியின் நாற்காலிகளை
நிரப்பிவைத்தால்
வழியே செல்லும்
வசந்தமும் வந்து
கொஞ்சநேரம் அமர்ந்து செல்லும்.

இதெல்லாம்
முன் வினையின்
பின்விளைவுகளா ?
பின் விளைவுகளின்
முன்னெச்சரிக்கையா ?

எதற்கு இத்தனை கேள்விகள் ?
ஜென்மங்களின் கவலையும்
விதியின் கவலையும்
இன்னொரு ஜென்மத்துக்காய்
ஒத்தி வைத்தாலென்ன ?

0

ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றக் கவிதை.

வாழ்க்கை

 

Image result for man sculpting himself gif

வாழ்க்கை
ஒரு
சோதனைக் கூடம்
இங்கே
விஞ்ஞானியும் நீயே
குரங்கும் நீயே.

கவனமாய்
சோதனை நடத்து.

0

வாழ்க்கை
ஒரு
சிற்பக் கூடம்.
இங்கே
சிற்பியும் நீயே.
சிற்பமும் நீயே.

சிதைக்காமல் உன்னை
செதுக்கு.

0

வாழ்க்கை
ஒரு கப்பல்.
இங்கே
பயணியும் நீயே
மாலுமியும் நீயே.

பாதை தவறாமல்
பயணம் செய்.

0

வாழ்க்கை
ஒரு தவம்.
வரம் கொடுப்பவனும் நீயே
பெறுபவனும் நீயே.

தரமான வரங்களை
தா.

0

வாழ்க்கை ஓர்
வித்தியாசக் காலநிலை.
மேகமும் நீயே
தாகமும் நீயே.

தேவையான போது
மழையை வருவி.

0

ஓவியன் நீ,
உன்னைச் சுற்றித் தூரிகைகள்.
நீ
ஒவியத்துக்காய்
காத்திருத்தலாகாது.

பொறுப்புகளோடு பொருந்து
மறுப்புகளோடு வருந்தாதே.

0

வருந்துவோரை விட்டு
வலி அகலுவதில்லை.
மருந்து
அருந்துவோரை விட்டே
அது
அகன்று விடுகிறது !

0

புரிந்து கொள்.
முல்லைக்குத் தேர் தந்தான்
பாரி.
பெருமை
முல்லைக்கா தேருக்கா எனும்
விவாதம் எதற்கு.

பாரிக்கு எப்போதோ
பரிசளிப்பு விழாவே முடிந்தது.

புள்ளியில் துவங்கு

Image result for inner revelation gif

உன்னோடு
இன்னும் கொஞ்சம்
உறவாடு.

வாசலில் கோலமும்
உள்ளுக்குள்
அலங்கோலமும்
அனுமதிக்கத் தக்கதா ?

நுரையீரல் பைகளில்
நிகோடின் கைகள்.

வயிற்றுப் பாதையில்
அமிலப் பாசனம்.

சிந்தனை முழுவதும்
விகாரச் சிலந்திகளின்
விடாத வலை.

வெள்ளைத் தோடு போர்த்திய
கெட்டுப் போன
முட்டை வாழ்க்கை எதுக்கு ?

வெள்ளையடித்த
கல்லறை வாழ்க்கை எதுக்கு?

உடைகளை
துவைத்துக் காயப் போட்டு
உள்ளத்தை ஏன்
அழுக்கில்
ஊறப் போடுகிறாய் ?

உள்ளிருந்து வருவதே
உன்னை
மாசுபடுத்தும்.

உள்ளுக்குள் கசாப்புக் கடை
வெளியே
சரணாலயம்.
உள்ளே கருவாடு வாசம்
வெளியே மீன்களோடு நேசம்.

பூ வியாபாரி நீ.
சாக்கடைச் சாகுபடி
எதற்கு இனி ?

மெல்ல மெல்ல
சிந்தனைகளை
சொடுக்கெடு.

காற்றில் வந்தாலும்
தீயவற்றை
காதின் வாசலோடு
கத்தரித்து அனுப்பு.

தீய வார்த்தைகள்
தெரியாமல் எழுந்தாலும்
தொண்டைக்குள்
பள்ளம் வெட்டி நிரப்பு.

கோபத்தின் சூரிய கிரணத்தை
புன்னைகைப்
பனிக்கட்டியாய் விரட்டு.

தராசுகள்
நிறையவே கிடைக்கும்.
தரமானதாக்கு.

வேர்களைப் பகைத்த முளை,
வாழ்தல் இயலாது.
மனதைப் பகைத்த மனிதன்
வீழ்தல் தவறாது.

நீயும், உன் கவிதைகளும்

 

Image result for self

உன்னையும் உன் கவிதைகளையும்
ஒரே தட்டில்
உட்கார வைப்பதில்லை
நான்.

உன்னைப் பிடிக்கும்
என்பதற்காய்
உன் கவிதைகளைப் படிப்பதில்லை.

உன்
கவிதைகள் பிடிக்கும்
என்பதற்காய்
உன்னைப் பிடிக்குமென்பதுமில்லை.

உன்னைப்
பிடிக்கவில்லையென்பதால்
உன் கவிதைகளை
பிரேதப் பரிசோதனை செய்வதும்
பழக்கமில்லை எனக்கு.

உன்னைப்
பிடிக்குமென்பதால்
உன் காலிழந்த கவிதைகளை
கண்களுக்குள்
குடியிருத்துவதும் இல்லை.

நீ வேறு
உன் கவிதைகள் வேறு.

என்னைத் தெரிகிறது அல்லவா ?
நான்
உன் மனசாட்சி.

விரல்களே விளக்குகள்

Image result for nail in wall
எதிர்பாராத
நிகழ்வுகளின் குவியல்,
ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே
முளைத்து வளரும் எதிர்ப்புகள்,
நெருங்க நெருங்க
விலகிச் செல்லும்
தொடு வான இலட்சியங்கள்.
இவற்றின் கலவை தான் வாழ்க்கை !

ரோஜா மேல் பனித்துளி அழகுதான்
ஆனால்
வரப்புகளின் தண்ணீ­ர்தானே வாழ்க்கை.
கனவுகளை
இரவுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு
நிஜங்களுக்கு முதுகெலும்பு முடைவோம்.

காதல் அழகுதான்,
கவிதை அழகுதான்.
ஆனால்
வறுமையின் அமிலக்குழிக்குள்
வயிற்றுத் தாகம் தானே
அருவியாகிறது ?

மீன்கள் பிடித்துப் பிடித்து
மீந்துபோன வாழ்வில்
மிச்சத்தின் செதில்கள் மட்டுமே.
போதும்.
மீன்கள் சேகரிப்பது தேவை தான்
ஆனாலும்
தூண்டில்கள் தயாராக்குவோம்.

எத்தனை நாள் தான்
ஒற்றைத் தெரசாவும்,
ஒரு காந்தியும் கொண்டே
வரலாறு நகர்த்துவது ?
நூறு கோடி மக்களில்
பெரும்பாலானோர்க்கு
இன்னும் பெயரிடப்படவில்லையே !!!

வெற்றிகளின் பாதையில்
தோல்விகளும் படிக்கட்டுகளே.
தோல்வியின் பாதையில்
வெற்றிகள் கூட படுகுழிகளே…
நமக்குத் தேவையான
முதல் வெற்றி
எங்கே தோல்வியடைகிறோமெனும்
தேடலில் தான்.

கதவுகள், ஜன்னல்கள் எல்லாம்
திறந்துதான் கிடக்கின்றன.
நாம் தான்
சுவரில் அறையப்பட்ட
ஆணிகளாய் இருக்கிறோம்.
*