வரப்புயர

Image result for agriculture tamil nadu village

வரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க
வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல
புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க
வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல

மனிதனோட முதல் தோழன் மண்தானே
மண்ணோட மடிமீதே வீழ்ந்தோமே

*

மும்மாரி மழை பொழிந்த
நிலம் அழித்தோம்
ஈரத்தை தரை இறக்கும்
மரம் அழித்தோம்
நீருக்காய் யார் காரோ
கரம் பிடித்தோம்
காவிரியும் கை விரிக்க
தினம் அழிந்தோம்

ஊருக்கே சோறு போட கை நீட்டினோம்
சாவுக்கு வழிசொல்லி கதவடைத்தான்
கடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்
உடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்

அணைக்கு நீருண்டு
துணைக்கு நீரில்லை !
இறைவன் கொடுத்தானே
மனிதன் கெடுத்தானே.

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த
இனம் யாமோ
புலன் தனையும் கூடவே யாம்
இழந்தோமோ
வளம் அழிந்தால் தலைமுறையும்
அழியாதோ
நிலம் அழிந்தால் நிலவாழ்வும்
அழியாதோ !

நீரின்றி அமையாது நிலம் என்றேன்
பயிரின்றி அமையாது உயிர் என்றேன்
வேருக்கு நீரினிலே பேதம் இல்லை
வயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை

மனிதம் உலர்ந்தால்
நிலமும் உலரும்
மழைக்கென்றும் ஈரமுண்டு
மனதிலும் அதுவருமா ?

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

முகிலே முகிலே

பாடல்   : முகிலே முகிலே
இசை   : சஞ்சே
பாடல் வரிகள்  : சேவியர்
குரல்கள்   : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் : பைரவன்  http://www.tamilbadboy.com/bhairavan.zip
தயாரிப்பு : TBB Entertainment, London.

Bhairavan

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா

You can download the song for Free @ http://www.tamilbadboy.com/bhairavan.zip

 

 

பைரவன் – கனவே, மனமே, அழகே

ஆல்பம் : பைரவன்
இசை : சஞ்சே
பாடல் : சேவியர்
குரல் : சதீஷ் & நான்சி
தயாரிப்பு : TBB Entertaninment, London

————————————————————–
ஆண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?
 
பெண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

பெண்

ஏ நெஞ்சே
நான் சொட்டுச் சொட்டாய் நனைந்தேனே
ஏ கண்ணே
ஏன் தொடு வானமாகிறாய்

ஆண்

ஓர் ஆசைக் கடலின் அலையாய் அலைந்தேன்
பேராசைக் கரையில் நுரையாய்க் கிடந்தேன்
தேசத்தின் திசைகள் முழுதும் அளந்தேன்
காதலில் விழுந்தேன்

பெண்

நீருக்குள் மழையாய் காதல் பொழிந்தேன்
வேருக்கும் தெரியா பூக்கள் வளர்த்தேன்
காற்றோடு காற்றாய் நானும் நடந்தேன்
காதலில் எழுந்தேன்

ஆண்

காதல் என்பது முழுநிலவு

பெண்

அதை மறைத்தல் என்பது பகல்கனவு
அது இரவல் ஒளியில் வாழுவது

ஆண்

காதல் என்பது கடலன்பே…..

ஆண்

நீரில் பிம்பம் அலைந்தாலும் – அதைக்
கையால் பிடிக்க முடியாது

பெண்

கனவில் அடைமழை பொழிந்தாலும்
நிலம் நினையாது

ஆண்

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?

பெண்

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

*

பாடல் : வெட்கம் வழியும் இரவில்

பீலிபெய் சாகாடும்
                 மெல்லமே மெல்லமே 
தேனும் திகட்டிவிடும்
                  செல்லமே செல்லமே

உன்னழகு மட்டுமேனோ திகட்ட மறுக்குதடி
தின்னத் தின்னத் தீராம பசியைப் பெருக்குதடி.

உறுமீனைக் காத்திருந்த
                       ஒத்தக்காலு கொக்குநான்
கண்டபின்னே சுத்திச் சுத்தி
                      சொக்குகிற செக்குநான்.

1

ஆண்:

ஆறு மீட்டர் அருவி இழுத்து
போர்த்திக் கிட்டுப் படுப்பமா ?

பெண்

நூறு மீட்டர் காற்றை இறுக்கி
தலையணையாக் கொடுப்பமா ?

ஆண்

மின்மினிகள் கூட்டி வந்து
ஓரமாய் நிறுத்தவா
மின்னுமந்த சின்ன ஒளி
பாரமாய் இருக்குமா ?

பெண்

நான்கு கண்கள் சிந்தும் ஒளி
காமனுக்குப் போதுமே
மின்மினிகள் கூட்டி வந்தால்
வெட்க ஒளி கூடுமே.

2

 

ஆண்

நட்ட நடு ராத்திரியில்
அச்சப் புயல் அடிக்குமே,

பெண்

விட்டு விட நினைக்குமுன்னே
மோக மழை நனைக்குமே.

ஆண்

எட்டிப் பார்க்கும் வட்ட நிலா
வெட்கம் கொண்டு சிரிக்குமே
ஓடுகின்ற முகிலுக்குள்ளே
வட்ட முகம் மறைக்குமே.

பெண்

வானநிலா நாணம் கண்டு
மாடிநிலா நாணுமே
மூட ஆடை இல்லையென
ஆளை மூடிக் கொள்ளுமே.

0

யுத்தக் களமும், முத்தக் குளமும்


யுத்தக் களத்தில்
முத்தக் குளத்தில்
கவசம் கழற்றிக் குதிப்போமா ?
பித்தக் கடலில்
மொத்த உடலில்
அச்சம் அவிழ்த்துக் குளிப்போமா ?

இப்படித் தானே செப்படிக் காதல்
பொற்படி தேடி ஓடிவரும்,
எப்படியேனும் ஒப்படை என்று
கைப்பிடிக்குள்ளே ஊறிவரும்.

0

காதல் என்னும் அற்புதம் கொண்டு
பாற்கடல் ஒன்றைக் கடைவோமா ?
காதல் கொண்டு காதல் கடைந்து
அமிர்தம் கையில் அடைவோமா

0

வள்ளுவர் கோட்டச் சக்கரம் பின்னே
சாய்ந்து கிடப்பது காதலா
அலையின் முன்னால் படகின் பின்னால்
சில்மிஷம் செய்தல் காதலா
பூக்கள் இல்லாப் பூங்காப் புதரில்
வெட்கம் பூப்பது காதலா
யாரும் இல்லாத் தனிமைச் சந்தில்
அவசர முத்தம் காதலா

காதல் என்பது தாய்மை போல
விலகிய பின்னும் நினைவிருக்கும்
காதல் என்பது செடியைப் போல
பூக்கா விடினும் வேர் வளரும்

0

மோகம் வந்து விரலில் தங்கி
தேகம் வழிதல் காதலா
நரம்புகள் வழியே நதியாய் பாயும்
சிற்றின்பம் தான் காதலா
எங்கும் பொங்கி அங்கம் தங்கி
நுரையாய்க் கரைதல் காதலா
தொடுதல் படுதல் படர்தல் விடுதல்
இதுதான் மொத்தக் காதலா ?

காதல் என்பது வாய்மை போல
சொல்லும் போதே உயிர்மலரும்,
காதல் என்பது காற்றைப் போல
தானாய் உயிரில் தினமுலவும்.

பின்னல் போட்ட மின்னல்

pinnal-small.jpg

பின்னல் போட்ட மின்னல் காரி
காதில் காதல் சொல்வாளா
கன்னம் கோர்த்த கன்னம் கொண்டு
கவிதை எழுதிச் செல்வாளா ?

0

மேற்கு வானம் மஞ்சள் பூசி
நீலக் கடலில் குளிக்க,
வெப்பம் போன காற்றுக் கூட்டம்
தெப்பத்துக்குள் கிடக்க,
வெள்ளிப் பாத வெள்ளை வாத்து
அல்லி விலக்கி மிதக்க,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உந்தன் பின்னே நடக்குதடி.

0

தாழக்கரையின் தாழம் பூவும்
வாசனை வீசிச் சிரிக்க – அது
பட்டுப் பூச்சியின் வண்ண இறகில்
மெல்ல மோதிக் களிக்க
பச்சை கொட்டிய வயலின் நண்டுகள்
வளைகளை உடம்பில் உடுத்த,

காதல் கொண்ட என்மனம் மட்டும்
உனக்குள்ளேயே கிடக்குதடி.

0

பாத்தியோரம் பளபளப்பாக
பாசிப்  பூக்கள் கிடக்க
கன்னிப்பெண்ணின் உடையும் வளையாய்
சின்ன அருவி சிலிர்க்க
வாழை மரத்து இலை மேடையிலே
பொன்வண்டுகள் களிக்க,

காதல் குயிலே என் மனம் மட்டும்
உனக்குள்ளேயே வழுக்குதடி.

நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்

sad.jpg

 .

பூவைத் தீண்டும் தென்றல் போலே
 என்னைத் தீண்டினாய் – நான்
தீயைத் தீண்டும் காலம் வேண்டும்
 என்றா வேண்டினாய் ?

காதல் என்னும் சுவாசக் காற்றை
 நீதான் ஊற்றினாய் – பின்
மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை
 ஏனோ மாற்றினாய்

.
சரணம் 1

முத்தம் மட்டும் கன்னம் தொட்டால்
 காதல் வாழுமா – நான்
நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்
 போதல் நியாயமா ?

சித்தம் கொண்டு என்னைத் தீண்டு
 பாவம் நானம்மா – ஓர்
யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல்
 சாபம் ஏனம்மா ?
 
சரணம் 2

வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
 உன்னைக் காண்கிறேன் – நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
 பூக்கக் காண்கிறேன்.

சொட்டுச் சொட்டாய் எந்தன் ரத்தம்
 கொட்டக் காண்கிறேன் – நீ
விட்டுச் செல்லச் செல்லக் காதல்
 வற்றக் காண்கிறேன்

.
சரணம் 3

உதயம் வானில் சிரிக்கும் முன்னே
 உன்னைத் தேடுவேன் – பின்
இரவுப் பொழுது முடிந்த பின்னும்
 உன்னால் வாடுவேன்.

இதயம் துவைத்து காதல் இருத்தி
 தினமும் நாடினேன் – நீ
புதையல் கிடந்த இடத்தை நோக்கி
 பாதை மாற்றினாய்

சரணம் 4.

உள்ளம் முழுதும் வெள்ளம் போலே
 காதல் வந்ததடி – பின்
கள்ளம் எல்லாம் உள்ளம் விட்டு
 எங்கோ சென்றதடி.

வெள்ளை மனதில் உன்னை வைத்தேன்
 முள்ளாய்க் கொல்லுதடி – உன்
பிள்ளைப் பாதம் தீண்டா நெஞ்சம்
 உள்ளே வேகுதடி.

சரணம் 5

தீயாய் எரிந்த என்னை நீராய்
 நீதான் மாற்றினாய் – பின்
நீயாய் ஏனோ என்னை விட்டு
 பாதை மாற்றினாய்.

தேயா நிலவாய் நீயே வந்தாய்
 வானாய் மாறினேன் – எனை
தேயச் சொல்லி வானம் விட்டு
 மாயம் ஆகிறாய்.