எதிர்த் துருவங்கள் ஈர்க்கின்றன

Image result for Love

வெயில் குறித்த
கவிதைகளை
குளிர் அறைகளில் அமர்ந்து
நிதானமாய்
எழுதுகிறேன்

என்
காதல் குறிப்பேடுகளில்
வெயில் சாமரம் வீசிய
கானல் காதலியின்
நினைவுகள் எழுகின்றன.

அவள்
ஸ்பரிசங்கள் அந்நியமாய் போன
கால இடைவெளிகளிலும்
மிதந்து வருகின்றன
கடந்த காலம் கவர்ந்து நடந்த
கைவிரல்கள்.

இன்னும்
காதலின் ஈரம் காயாமல்
அவள்
முத்தங்களின் முந்தானைகளை
முகர்ந்து சுகிக்கிறதென்
நாசி.

குளிர் குறித்த
கவிதைகளை
வெயில் அறைகளில் தான்
எழுத முடியும்
போலிருக்கிறது.

இயலாதவையே இயல்பு

ஏதேனும் வழியிருக்குமா ?

நம்
மாலை நேரப் பேச்சுகளை
இரவு வந்து
இழுத்து மூடக் கூடாது

நாம்
கைகோர்த்துக் கடக்கையில்
சாலையின் நீளம்
முடியவே கூடாது.

நாம்
பார்த்துக் கொள்ளும்
பொழுதுகள்
பிரியவே கூடாது.

உன் மீதான
என் பைத்தியம்
தெளியவே கூடாது.

ஏதேனும் வழியிருக்கிறதா ?
கேட்கிறேன்.

நடக்க இயலாததைச்
சொல்லத் தானே
நீ
கவிதை எழுதுகிறாய்.
இதையும் எழுதிக் கொள் என
கவிதையாய் சிரிக்கிறாய் !

இதுவும் முடியக் கூடாதே
என
எழுதிக் கொள்கிறேன் நான் !

*

மரணம்.

எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.

எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.

ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.

அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.

அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.

அல்லது
நிழலின் நிஜம் போல.

மங்கையர்

மடியில் நெருப்பைக் கட்டி
அலைவதாக
கிராமத்துத் தாய்
வலியுடன் சொன்னாள்
வயது வந்த மகளைப்பற்றி

விறகடுப்பில் ஊதி ஊதி
வியர்க்கும் முகத்தோடும்
எரியும் விழிகளோடும்
தங்கை சிரித்தாள்.

எங்கோ
ஸ்டவ் வெடித்து
ஏதோ ஓர் இளம் பெண்
இன்னும் இறந்து கொண்டிருக்கிறாள்.

நாங்கள் கனல்கள்
நீரையும் எரிக்கும் அனல்கள்
என்று
பெண்ணியக் கவிதைகள்
சுட்டுக் கொண்டிருக்கின்றன.

நங்கையர்
நெருப்பாக இருக்கிறார்கள்.
நெருப்புக்கு
நெருக்கமாகவும்.

தமிழ் என் காதலி.

மனதைப் பிசையும்
சீருடன் அசையும்
நடைகள் உனதடி
நயமும் உளதடி – அன்பே உனைநான்
தமிழெனச் சொல்லவோ ?

புரியும் புன்னகை
புதிதாய் தோன்றுது,
புரியா மெளனம்
மரபாய் தெரியுது – கவிதையே உனைநான்
தமிழெனக் கொள்ளவோ ?

நகைப்பில் நவீனம்
பார்வையில் படிமம்
விளக்கத் தெரியா
விளக்காய் தெரிகிறாய் – புதுமையே உனைநான்
தமிழெனில் தவறோ ?

உனையே உரைத்து
உயிரை நுரைத்து
மூச்சு நரைக்க
மனதில் கரைக்கிறேன் – வியப்பே உனை நான்
தமிழெனில் பிழையோ ?

விலக நினைத்தால்
அகல மறுத்தாய்
விலக்க முடியா
நிலையது தந்தாய்
தமிழே உனைநான் காதலாய் நினைப்பேன்
காதலி அவளைத் தமிழால் நனைப்பேன்

நாவல் : வடலி மரம்

நாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா
—————————————————————

vadali

ஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில் வெளிவரும் பெரும்பாலான இதழ்களில் இவருடைய பெயர் அடிக்கடி தென்படுவதுண்டு.

அவருடைய முதல் நாவலான ‘வடலிமரம்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமரி மாவட்டத்தையே கதைக் களமாக்கி, அந்த ஊர் மக்களையே கதாபாத்திரங்களாக்கி, அவர்களுடைய மொழியையே எழுத்தாக்கி, அவர்களுடைய உணர்வுகளையே நாவலாக்கியிருப்பதில் வடலிமரம் சட்டென அன்னியோன்யமாகிவிடுகிறது.

வடலி என்பது சின்னப் பனைமரம். பனையேறுதலை வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட குமரி  மாவட்டத்தின் கடந்த தலைமுறையினருக்கு வடலி என்று சொன்னாலே ஒரு புகைப்படம் நிச்சயம் மனதில் எழும். தலைமுறைகள் மாறிவிட்டன, இப்போது வடலிகளின் இடங்களெல்லாம் ரப்பர்களின் தேசமாகிவிட்டது. எனவே வடலியோடு கூட மரத்தையும் இணைத்தே அந்த காட்சிப்படுத்தலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

ஒரு காதல். மேல் சாதி என கருதிக்கொள்பவருக்கும், கீழ் சாதி என அழைக்கப்படுபவருக்கும் இடையே நிகழ்கின்ற ஒரு காதல். அது சாதியின் கவுரவத்துக்காக பாதி வழியில் அவசரமாய் அறுக்கப்படுகிறது. நூலை அறுத்து விட்டபின் பட்டம் எங்கோ கண்காணா தேசத்தில் முட்களிடையே சிக்கி அறுபடுகிறது. நூலோ நிலத்தில் விழுந்து மிதிபடுகிறது. ஒரு கனவு கலைக்கப்படுகிறது. இது தான் நாவலின் கதை.

ஒரு நாவலைப் படிக்கும் போது சில விஷயங்களை நாம் கவனிப்பதுண்டு. அது புதுமையான ஒரு செய்தியைத் தாங்கி வருகிறதெனில் அந்த நாவலுக்கான கதைக்களம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். கதைக்களனையும், மண்ணின் அடையாளங்களையும் பதிவு செய்கிறதெனில் அது புதுமையான செய்திகளைத் தாங்கி வரவேண்டுமென்பதில்லை. இரண்டும் ஒரு சேர அமையப்பெற்றால் இலக்கிய சுவைக்கு இரட்டை இன்பம் என்பதில் சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, வடலிமரம் இரண்டாவது வகையில் வந்து சேர்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் காதலும், அது சந்திக்கின்ற வலியும், அதை மிகவும் ஏளனமாய்ச் சித்தரிக்கின்ற மேல்சாதி சிந்தனை சித்தாந்தங்களுமே வடலி மரத்தில் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது ‘தொடுவெட்டி சந்தைல போயி நாலு ஏத்தன் கொல வேண்டியோண்டு வந்தது போல இருக்கு’.

கண்ணை மூடினால் எங்கள் ஓட்டு வீடு தெரிகிறது. வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கம்பீரமாய் நிற்கின்றன பனை மரங்கள். நிறுத்தி வைத்த பீரங்கிகளைப் போல அவை கர்வம் கொள்கின்றன. பூமியில் அழுத்தமாய் ஊன்றப்பட்ட வியப்புக் குறிகள் அவை. அவற்றில் மிருக்குத் தடி சாய்த்து ஏறுகிறார் தங்கப்பன். காலில் திளாப்பு மாட்டி, இடுப்பில் குடுவை கட்டி,   அதில் இடுக்கியைச் சொருகிக் கொண்டு சரசரவென ஏறுகிறார். லாவகமாய் மேலே ஏறி உட்கார்ந்து பாளை அருவாத்தியை எடுத்து பூ சீவி கலையத்தைக் கட்டுகிறார்.. சுண்ணாம்பு தேச்சா அது அக்கானி, இல்லேன்னா கள்ளு. அவர் கலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு குரல் என்னை எழுப்புகிறது.

“டாடி.. ஐபேட்ல அயர்ன் மேன் 3 இன்ஸ்டால் பண்ணலாமா பிளீஸ்…” மகன் கெஞ்சும் மழலைக் கண்களோடு நிற்கிறான். புன்னகைக்கிறேன். அவனுடைய அயர்ன்மேன் காலத்துக்கும், எனது அக்கானி காலத்துக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்பக் கூடியதா என்ன ?

கண்ணை மூடிக் காண்கின்ற கனவுகளை வடலி மரம் மூலம் மீண்டும் ஒரு முறை பால் ராசையா சாத்தியமாக்கியிருக்கிறார். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல குமரி மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பது வியப்பளிக்கிறது. எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், சகட்டு மேனிக்கு இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். ரஜினி கமல் சண்டையெல்லாம் அங்கே குறைவு. சுந்தர ராமசாமியா இல்லை குமார செல்வாவா ? என்பன போன்ற சண்டைகள் தான் அங்கே அதிகம். அவர்கள் சண்டையில் உதிர்பவை கூட இலக்கியமாகவே இருப்பது தான் ரொம்பவே ரசிக்க வைக்கும் விஷயம்.

அவருடைய நாவல் வெளியீட்டு விழாவும் அப்படியே தான் இருந்தது. சின்ன அரங்கம் தான். அந்த அரங்கத்தில் சுமார் ஐம்பது பேர். அதில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய இருவர். நாவலாசிரியர்கள் பத்து பேர். பேராசிரியர்கள் மூன்று பேர். பத்திரிகையாசிரியர்கள் ஒன்பது பேர். பத்திரிகை நடத்துபவர்கள் மூன்று பேர். என ஒரு இலக்கிய மாநாடு போலவே நடந்தது. குமரி மாவட்டத்தில் ரப்பர்ல பால் வெட்டும் வேலைக்கு ஆள் கிடைப்பது தான் கஷ்டம். இலக்கிய விழாவுக்கு ஆள் கிடைப்பதில் சிக்கலே இல்லை !

வடலி மரம் ஒரு சினிமாவுக்கான பரபரப்புடன் செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு திருப்பங்களை தன்னுள்ளே வைத்து ஒரு ஃபாஸ்ட் புட் போல பயணிக்கிறது. காரணம் பால் ராசையாவின் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் என நினைக்கிறேன். சட்டென தொடங்கி, சரேலென ஒரு திருப்பத்துடன் முடிக்கும் கதை பாணியை நாவலிலும் கையாண்டிருக்கிறார் போலும். அதே போல அவருடைய நாவல் ஒரு நாடகத்துக்கான காட்சிப் படுத்தலுடனும் கூட இருக்கிறது. அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.

கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே பயணிக்கும் வடலிமரம் நாவல் தனது காலத்தைப் பதிவு செய்திருக்கிறது, தனது அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது, காலம் காங்கிரீட் கலவையில் புதைத்துக் கொண்ட வார்த்தைகளை மீள் பதிவு செய்திருக்கிறது, டெக்னாலஜி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.

எழுத்தாளர் பால் ராசையா அவர்களை வாழ்த்துகிறேன்.

வேர்கள் இன்னும் ஆழமாகும்,
அப்போது விளைச்சல் இன்னும் அமோகமாகும்.

சேவியர்.

குடும்ப வெற்றியின் ரகசியங்கள் : நேரம் ஒதுக்குங்கள்

நேரம் ஒதுக்குங்கள்

couple talking
நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு” என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !

கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

 

முகிலே முகிலே

பாடல்   : முகிலே முகிலே
இசை   : சஞ்சே
பாடல் வரிகள்  : சேவியர்
குரல்கள்   : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் : பைரவன்  http://www.tamilbadboy.com/bhairavan.zip
தயாரிப்பு : TBB Entertainment, London.

Bhairavan

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா

You can download the song for Free @ http://www.tamilbadboy.com/bhairavan.zip

 

 

கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.

அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.

பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.

எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.

மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.

தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…