அப்பாவின் தாடி

அப்பாவின் தாடி

Image result for beard painting

சிலருடைய
தாடிகள்
அப்பாவை
ஞாபகப்படுத்துகின்றன.

கருப்பும் வெள்ளையுமாய்
அவை
நினைவுகளின் மீது
வண்ணமடிக்கின்றன.

அப்பாவின்
விரல் கோதிய தாடி
விசேஷமானது.

மழலை வயதில்
எங்களை
கிச்சு கிச்சு மூட்டி
சிரிப்பவை அவை.

கோபித்துக் கொள்ளும்
உயிர் நண்பனைப் போல
தற்காலிகமாய்
காணாமலும் போகும்.

காலங்களின்
பழுப்பேறிப்போன நினைவுகளில்
இன்னமும்
அப்பாவின் தாடி
வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

எங்கோ
ஒட்டப்படும் ஒரு போஸ்டரில்

சட்டென
கடந்து செல்லும் ஒருவரில்

நகரும் பேருந்தின்
சன்னலோர மனிதரில்

என
பலரும்
அப்பாவின் தாடியை
நினைவுபடுத்திக் கொண்டே
இருக்கின்றனர்.

எனினும்
அப்பாவின் தாடி
விசேஷமானது.

காரணம்
அது அப்பாவிடம் இருந்தது.

*

சேவியர்

10ம் வகுப்பு, சி பிரிவு

10ம் வகுப்பு, சி பிரிவு

Image result for very old school tamil nadu
என்
பால்யத்தின் பரவசத்தை
அந்த
வகுப்பறை
சன்னல்கள் தான்
திறந்து வைத்தன.

பாடங்களைக்
கேட்டுக் கேட்டு
உறைந்து போயிருந்த
சன்னல்களுக்கு
அந்த தேவதை விரல்களே
ஆறுதல் அளித்தன.

அவள்
நகக் கீறல்களில்
சன்னல்கள்
சன்னமாய்ச் சிலிர்த்தன

அவளது
மூச்சுக் காற்றின்
வெப்பத்தை
பத்திரமாய்ப் பொத்தி வைத்தன

அவளது
சிரிப்பொலிகளை
அந்தக்
கம்பிகள் கொஞ்சம்
களவாடிக் கொண்டன.

அவள்
பார்வைகள்
வருடும் போதெல்லாம்
சன்னல் ஒரங்களில்
சொல்லாமல் குளிரடித்தது.

மூடப்படாத
அந்த
சன்னல்களின் உள்ளே
திறக்கப்படாத
கனவுகள்
விளையாடித் திரிந்தன.

பால்யம்
பள்ளி தாண்டியது.
காலங்கள்
கதவடைத்தன.

கால்முளைக்காத
கனவுகள்
நிஜத்தின் வீதிகளில்
வருடங்களை விதைத்து
மறைந்தன.

இப்போதும்
கிராமத்துச்
சாலையைக் கடக்கையில்
அனிச்சைச் செயலாய்
திரும்பிப் பார்க்கிறேன்

இடிபாடுகளில்
இடையே
காணாமல் போயிருந்தது
அந்த சன்னல்.

சேமித்து வைத்தவற்றை
எங்கே
ஒளித்து வைத்ததென
அது
யாருக்கும் சொல்லவில்லை.

*

சேவியர்

நீ

5f2e1-man_sitting_and_watching_sunset-other
நீ
யார் என்பதை
நீயறிவாய்.

பிறருடைய
அடைமொழிகளுக்கெல்லாம்
அடம்பிடிக்க வேண்டிய
அவசியமில்லை.

பிறருடைய
துருவேறிய தூற்றல்களுக்காய்
துயரப்படவும்
தேவையில்லை.

சூரியனை
நிலாவென
பெயர்மாற்றம் செய்யலாம்
அதன்
கதிர்களை எங்கே
கடத்திச் செல்வாய் ?

கடலை
வெறும் மண்மேடென்று
சட்டமும் இயற்றலாம்
உப்பு நீரை
எங்கே கொண்டு
ஒளித்து வைப்பாய் ?

நிலத்தின்
நிறம் கண்டு
விதைகள்
முளை விடுவதில்லை

நிலம் மாறி
நட்டதால்
ரோஜா
கருப்பாவதும் இல்லை.

நீ
என்பது
உனது இயல்பு.

பிறருடைய
மோதிரங்களுக்காய்
உன்
விரல்களை
வெட்டிக் கொள்ள வேண்டாம்.

மழை இல்லையென
தோகை
கத்தரிப்பதில்லை
மயில்.

வெயில் இல்லையென
தற்கொலை
செய்து கொள்வதில்லை
நிலா.

இயல்புகள்
இறக்காதவரை
மின்மினிகளும்
இரவைக் கிழிக்கும்.

இயல்புகள்
தொலைந்து போனால்
கூண்டில் சிங்கமும்
தூண்டிலில் உயிர்விடும்.

ஒன்றை மட்டும்
புரிந்து கொள்.

நீ யார்
என்பது
அடுத்தவனின்
கேள்விகளுக்கான விடையல்ல.

உனது
விடைகளுக்கான கேள்வி.

*

சேவியர்

அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டை

Image result for Shirt drawing

அப்பாவின் சட்டை
ரொம்பவே
அழகானது !

சற்றே
தொளதொளவென இருக்கும்
அந்த
அரைக்கை சட்டை
அப்பாவின் பிரிய தோழன்.

அப்பாவின்
கரங்கள் நுழைந்ததும்
அதற்கொரு
கம்பீரம் வந்து விடும்.

சிவன் கழுத்துக்
கருடனைப் போல
விறைப்புடன் நின்று
முறைத்துப் பார்க்கும்.

அது தரும் வாசனை
என்
நாசிகளில்
நங்கூரமிட்டு நிற்கிறது.

நேர்த்தியாய் மடித்தே
எப்போதும்
அலமாரியில் வைப்பார்
அப்பா.

அப்பாவின்
உழைப்பை
நெருக்கமாய் அறிய
அந்த
சட்டையால் மட்டுமே
முடிந்திருக்கிறது.

அவரது
வலிகளின் முனகல்களை
அது மட்டுமே
பதிவு செய்து வைத்திருக்கிறது.

அவரது
பதட்டத்தின் தருணங்களை
காலியான
பாக்கெட்களே
கண்ணீரோடு அறிந்திருக்கின்றன.

அப்பாவின் சட்டை
அற்புதமானது.

வியர்வையின் விரல்களால்
கிழிந்து போன
காலர் பகுதியுடன்
அது
இப்போதும் காத்திருக்கிறது.

என்றேனும்
ஒரு நாள்
அப்பாவின் கைகள் தீண்டுமென
இருள் கொடியில்
இருந்து
அழுது கொண்டிருக்கிறது.

அந்த
தேக வாசனையின்
தேவ தருணங்களுக்காக
தவிப்புடன் அது
தவமிருக்கிறது.

அப்பா
மறைந்து போன
செய்தியை
நாங்கள் யாரும்
அதனிடம் சொல்லவில்லை.

*

சேவியர்

அப்பாவின் அலமாரி

அப்பாவின் அலமாரி

IMG_5201

 

அப்பாவின் அறையில்
ஒரு ஓரமாய்
அமைதியாய் இருந்தது
அந்த அலமாரி.

அதைத் திறக்கும்
அனுமதி
எங்களுக்கெல்லாம்
தரப்படவில்லை.

அதற்குள்
அலாவுதீன் பூதம்
அடைபட்டுக் கிடப்பதாய்
எங்கள்
கற்பனைகள் கண்ணடிக்கும்..

புதிர்களை அவிழ்க்கும்
கனவுச்
சாவிகளை
பயம் வந்து
முறித்துப் போடும்.

பக்தனுக்குக்
காட்சி தராத
கர்ப்பக் கிரகம் போல
அது
அடைபட்டே கிடந்தது.

அதை
நெருங்குவதெல்லாம்
முன்பக்கக் கண்ணாடியில்
முகம் பார்க்கவும்
தலைசீவவும்
மட்டுமே.

அந்த
மர்மப் பெட்டியில்
நோவாவின் பேழை போல்
வரலாற்றுச் துடிப்புகள்
ஒளிந்திருக்கலாம் என
கற்பனை செய்ததுண்டு.

புதையல்களின்
பதுங்குகுழியோ என
பரவசமடைந்ததும் உண்டு.

காலங்கள் கடந்துவிட்டன.
ஓர்
துயரத்தின்
நெருப்புத் துளியாய்
அப்பா விடைபெற்றார்.

சத்தத்தை விட
வலிமையான
மௌனத்தை அவர்
அலமாரியின் மீது
இறக்கி வைத்துப் போனார்.

தடுப்பதற்கு ஆளில்லாத
அலமாரியை
திறப்பதற்கு
யாருக்கும் மனம் வரவில்லை.

நடுங்கும் சாவியுடன்
அதை
திறந்த ஒருகணத்தில்
அப்பாவின் வாசனை
நேசமாய் நாசி தீண்டியது.

நேர்த்தியாய்
மடித்து வைத்த ஆடைகளும்
பழுப்பேறிய
பத்திரங்களும்,
துணிகளின் அடியில்
மறைந்திருந்த
சில ரூபாய் நோட்டுகளுமாய்
அலமாரி ரகசியம் அவிழ்த்தது.

எதுவும்
முக்கியமற்றுப் போன
அந்த கணத்தில்
அவசரமாய்
அலமாரியை மூடி வைத்தோம்

அப்பாவின்
வாசனை
வெளியேறாமல் இருக்க.

*

சேவியர்

நினைவுகள் வாழும் வீடு

நினைவுகள் வாழும் வீடு

IMG_5201
மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு.

குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது.

பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்

சத்தங்களோடு
சல்லாபிக் கிடந்த காற்று
இப்போது
நிசப்தத்தோடு
முரண்டு பிடிக்கிறது.

ஓசை ஓயாத
சாம்பல் சமையலறையில்,
இப்போது
ஏகாந்தத்தின் எருதுகள்
அசைபோடுகின்றன.

சிரிப்புகள்
சிதறிக் கிடந்த
வரவேற்பறைத் தரையில்
காலொடிந்து கிடக்கிறது
கனத்த காற்று.

கனவுகள்
உலவிக் கிடந்த
படுக்கையறைகளில்
விழித்திருந்து அழுகின்றன
இரவுகள்.

காலத்தின் புழுதிகள்
கூரையின் முதுகில்
கூடாரமடித்துக்
குடியிருக்கின்றன.

என்றேனும்
அந்த தனிமை வீட்டின்
தாழ்வாரங்களில்
பழகிய பாதங்களை
பரிவுடன் பதிக்கையில்,

சத்தமிட்டு
விழித்தெழுகின்றன
உறைந்த மௌனத்தின்
உறங்காத குரல்கள்.

*

சேவியர்

மரங்களும், நாங்களும்

மரங்களும், நாங்களும்

Related image

மரங்களே
எங்கள் அடையாளங்களாய்
இருந்தன.

மரங்களை வைத்தே
எதையும்
அறிமுகம் செய்தோம்.

பெரிய புளியமரத்துக்கு
தெக்கே
இருந்தது
தண்ணீர்க் கிணறு.

விழுதிறக்கிய
ஆலமரம் தாண்டிப் போனால்
சர்ப்பக் குளம்.

வளைந்த
தென்னைமரத்துக்கு
பின்னால்
தங்கப்பனின் வீடு.

பெரிய
முந்திரி மரங்களின்
ஊடாகச் சென்றால்
ஊர் பள்ளிக்கூடம்

கமுகு மரங்களின்
எல்லையில் அமைந்திருந்தது
செல்லாயி பாட்டியின்
குடிசை.

எதையும்
மரங்களை வைத்தே
அடையாளம் கண்டோம்.

இன்று
எல்லாம்
தலைகீழாகிவிட்டது.

கோலப்பனின்
மாடி வீட்டுக்குப்
பின்னால் நிற்கிறது
மாமரம்

என அறிமுகம் செய்கின்றனர்
மரத்தை.

*

சேவியர்

திரும்பும் காலம்

திரும்பும் காலம்
Image result for beautiful female going

உமியைச் சேகரித்து
நெருப்பில் சுட்டு
உப்புடன் கலந்து
பல்தேய்த்த காலம்
பழசு.

வேப்பங்குச்சியை
பதமாய் ஒடித்து
பல்துலக்கிய
கசப்புப் பொழுதுகள்
பழசு.

கொட்டாங்குச்சியில்
குச்சி சொருகி
கரண்டியாய்ப்
பயன்படுத்திய
காலமும் பழசு.

இன்று

பூமராங் போல
திரும்பி வருகின்றன
புறக்கணிக்கப்பட்ட
பழக்கங்கள்.

இலவசமாய்க் கிடைத்தவை
கார்ப்பரேட் பாக்கெட்களில்
வர்த்தக வெப்பத்தில்
காசு
கரைக்கின்றன.

இயற்கையில்
கிடைத்தவை
வசீகரக் கவர்களில்
வியக்கும் விலைசொல்லி
பல்லிளிக்கின்றன.

பழைய கால
நிராகரிப்புகளெல்லாம்
மீண்டும்
திரும்ப வருகின்றன.

மாறிவிட்டேன்
எனும் ஒற்றைச் சொல்லில்
நிராகரித்துப் போன
காதலியைத் தவிர.

*

சேவியர்

Kavithai : அன்றைய பொழுதுகள்

அன்றைய பொழுதுகள்

Image result for village kids and pond

அரைடவுசர்
காலங்களில்
பல்டியடித்த குளங்களில்
முழங்காலளவு சகதி.

எருமை குளித்து
கரையேறிய
படிக்கரையில்
புரண்டு விளையாடிய
பொழுதுகள்.

சிப்பி பொறுக்கி
மீன் பிடித்து
கலங்கிய குளத்தில்
குளித்து கரையேறிய
நினைவுகள்.

பந்தடி களத்தில்
புழுதிக் கூடாரத்தில்
கபடி விளையாடி
மண்புழுவாய் ஊர்ந்த
தருணங்கள்

ஓடை நீரில்
இலை மடக்கி
நீர் குடித்த நிமிடங்கள்.

எல்லாம்
மனதின் முதலறையில்
நினைவு கீறி
விழித்துக் கிடக்கின்றன.

எப்போதும்
அலர்ஜி வந்து
அவஸ்தைப்பட்டதில்லை.

நோய்கள்
வந்து
நொடிந்து போனதில்லை.

இன்று
புழுதிகளை
கண்ணாடிகளால்
தடுத்து நிறுத்தி,

ஃபில்டரில்
வடிகட்டிய தண்ணீரில்
குளித்து முடித்து,

காங்கிரீட்
அறைகளுக்குள்
பாதுகாப்பாய் இருக்கையில்,

எங்கிருந்தோ
வந்து அமர்கின்றன
காலத்தின்
கொடுக்குகளுடன்
நோய்கள்.

*

சேவியர்

குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை

Image result for beautiful kids

குழந்தைகள்

*

இதோ,
மீண்டும் மலர்ந்து விட்டது
ஒரு
குழந்தைகள் தினம்.

இது
உங்களுக்கான தினம்.

மலர்களே
தங்களுக்கு
மாலை சூடிக் கொள்ளும் தினம்

குயில்களே
தங்களுக்காய்
இசைவிழா நடத்தும் தினம்

இந்த
மயில்களுக்காய்
மழையொன்றைப் பொழிகிறேன்
கவிச்
சாரலை தெளிக்கிறேன்.

குழந்தைகளே
குழந்தைகளே
இன்றைய நாட்டின்
இளவரசர்களே

நாளைய
சிம்மாசனங்களின்
சொந்தக்காரர்கள் நீங்கள்,
நாளைய
சிகரங்களின்
கிரீடங்கள் நீங்கள்.

நீங்கள்
நாளைய வனத்துக்கான
இன்றைய விதைகள்.

நாளைய கடலுக்கான
இன்றைய துளிகள்

செதுக்குவதைப்
பொறுத்து தான்
சிலைகள் வடிவாகும்.

உங்களைக்
கவனமாய்ச் செதுக்கும்
கல்வி உளி
எங்களிடம் இருக்கிறது.

பொறுமையாய் காத்திருங்கள்
காத்திருக்கும்
பாறைகளே சிலைகளாகும்.
முரண்டு பிடிப்பவையோ
உடைந்து தெறிக்கும்.

நீங்கள்
மலர்கள்.

எந்த வாசனையை
உங்களில் ஊற்றுகிறோமோ
அதுவே
உங்கள்
சொந்த வாசனையாகப் போகிறது.

நேசத்தின்
வாசனையை
உள்ளத்தில் நிறையுங்கள்.

நீங்கள்
புல்லாங்குழல் போன்றவர்கள்
நாங்கள்
உங்கள் குணாதிசயங்களில்
இசை மீட்டும்
இடுபவர்கள்.

உங்களை
ஒப்படையுங்கள்,
வாழ்க்கை சுரம் விடுக்கும்.

மேகத்தை அரைத்தால்
மழை பொழியாது
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது !
கற்பதை மனதில்
கல்வெட்டாய் கல்லுங்கள்.

நீங்கள்
சூரியனையும் முளைப்பிக்கும்
சக்தி படைத்தவர்கள்

பாதாளத்தையும் புதைத்து வைக்கும்
வலிமை படைத்தவர்கள்.
சோம்பலில் படுக்கையில்
சுருண்டு விடாதீர்கள்.

வெளியாறாத சூரியன்
ஒளிதருவதில்லை.
ஓடாத நதியில்
இசை இருப்பதில்லை.
இயங்கிக் கொண்டே இருங்கள்

நீங்கள்
வானத்தையும் வனையும்
வல்லமை படைத்தவர்கள்
விரல்களை
டிஜிடல் கருவிகளில்
ஒட்டி வைக்க வேண்டாம்.

கீழ்ப்படி இல்லாமல்
மேல்படி இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை.
கீழ்ப்படியுங்கள்.

பொய்யின் பிள்ளைகள்
வெற்றிகளின்
கிளைகளில் கூடுகட்டுவதில்லை.
வாய்மையை
வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.

கர்வத்தின் கரங்களில்
நெரிபடாதீர்கள்
தாழ்மையின்
தாழ்வாரங்களில் மட்டுமே
நடை போடுங்கள்.

மன்னிப்பின்
மகரந்தங்களைச்
சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியாகுங்கள்.

ஒரு சிறு துளியே
பெருமழையின்
துவக்கம்.
ஒரு சிறு தவறே
பெருங்குற்றத்தின்
துவக்கம்
தவறுகளின் முளைகளை
துவக்கத்திலேயே
தறித்தெறியுங்கள்.

வாழ்க்கை
ஸ்மார்ட்போன்களில் இல்லை
அவை
உங்கள்
வலிமையை அழிக்கும்
மௌனச் சாத்தான்கள்.
வளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.

விரைவில் தூங்கி
விரைவில் எழுங்கள்,
உடலை மதித்து
பயிற்சி எடுங்கள்,
நல்ல உணவால்
நலத்தைப் பெறுங்கள்

ஒரு துளி
விஷம் போதும்
உயிரை எடுக்க,
ஆரோக்கிய வாழ்வை
விலக்காமல் இருங்கள்.

நீங்கள்
குயவன் கை களிமண்.
வனையும் பொறுப்பு
எங்களிடம் இருக்கிறது.

எங்கள்
கரங்களை விட்டு
நழுவாமல் இருங்கள்
வழிகளை விட்டு
வழுவாமல் இருங்கள்

நீங்கள்
பாத்திரங்கள்,
உச்சமானதை மட்டுமே
உள்ளத்தில்
மிச்சமின்றி நிறையுங்கள்.

பிரபஞ்சத்தின்
பரவசமாம் புன்னகையை
உயிருக்குள்
நிரப்பியே வைத்திருங்கள்

இனிய
குழந்தைகள் தின
வாழ்த்துகள்

*