நிக் வாயிச்சஸ் – 2

2

இப்படி ஒரு குழந்தை பிறந்தால் யார் தான் மகிழக் கூடும். இந்த வீட்டிலும் இப்படியே நடந்தது. குழந்தை பிறந்ததை ஒரு துக்க தினமாகவே கொண்டாடினார்கள். தஷ்காவும், போரிஸும் இந்த தினத்தைக் கொண்டாடுவதா இல்லை துக்கம் அனுசரிப்பதா என்றே குழம்பிப் போனார்கள்.

ஒரு குழந்தை பிறந்தால் நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் வாழ்த்து அட்டைகள் கொடுப்பதும், பூக்கள் பரிசளிப்பதும் என மகிழ்ச்சியைப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே எதுவும் நடக்கவில்லை. சுற்றிலும் மவுனம்.

தேவாலயத்திலும் மகிழ்ச்சி மிஸ்ஸிங். கடவுள் இப்படி ஒரு குழந்தையை ஏன் இவர்களுக்குக் கொடுத்தார் என்பது சிலருடைய கேள்வி. ஐயோ பாவம் என்பது மற்றவர்களுடைய பதில். யாருமே குழந்தையை ஒரு மகிழ்வின் சின்னமாகப் பார்க்கவேயில்லை.

மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் இருந்தபின் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தபோது தான் அந்த மாற்றம் தாய்க்கு உறைத்தது.

“ஏங்க, ஒரு பூங்கொத்து கூட யாருமே நமக்கு கொடுக்கல. ஏன் ? நாம அப்படி என்ன தப்பு பண்ணினோம் ? ஒரு பூங்கொத்து வாங்கக் கூட அருகதை இல்லாதவங்க ஆயிடோமா ?”

அந்தக் கேள்வி போரிஸின் மனதில் தைத்தது. உடனே ஓடிச் சென்று ஒரு அழகான பூங்கொத்தை வாங்கினார். 

“நீ எல்லா வாழ்த்துக்கும் உரியவள். ஐ லவ் யூ” என மகிழ்வுடன் அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினார்.

நாட்கள் கடந்தன. குழந்தைக்கு நிக்கோலஸ் வாயிச்சஸ் ( நிக் ) என பெயரிட்டார்கள். ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் உன்னிப்பாகச் செய்தார்கள். நிக் வளர்ந்தான். பெற்றோரின் கவலைகளும் கூடவே வளர்ந்தன.

முதலாவதாக, இந்தக் குழந்தை தனது அன்றாடப் பணிகளை எப்படிச் செய்வான் ? ஒரு சட்டையைப் போடக் கூட இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது. இவன் எப்படிப் படிப்பான் ? பள்ளிக்கூடத்துல இவனை சேக்கலாமா ? சேர்க்கலாம்னு நாம நெனச்சாலும் பள்ளிக்கூடம் அனுமதிக்குமா ? இவன் கூட பசங்க நட்பா இருப்பாங்களா ? இவன் சாதாரண மனுஷனா வளருவானா ?

என கிலோ மீட்டர் கணக்கு நீளமான கேள்விகள் அவர்களுக்குள் எழுந்தன. என்ன செய்ய ? பதில்கள் தான் கைவசம் இல்லை.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் எழுந்த சிந்தனைகள் மிகவும் துயரத்தின் சிந்தனைகளாக இருந்தன. நிக்கைக் கொண்டு போய் விடுதியிலோ, காப்பகத்திலோ சேர்த்துப் பாதுகாக்கலாமா என்று கூட யோசித்தார்கள். 

அவனுடைய தாத்தா பாட்டி அவனை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் முன்வந்தார்கள். ஆனால் நிக்கின் தந்தை இறுதியில் எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்தார். அவர் ஒரு சர்ச்சில் போதகராகவும் இருந்தார். எனவே கடவுள் கொடுத்த குழந்தையை அப்படியே ஏற்றுக் கொண்டு பராமரிப்பதே தான் செய்ய வேண்டியது எனும் சிந்தனை அவருக்குள் வலுப்பெற்றது. 

கடவுளின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். அது மனிதனுக்கு எளிதில் புரிவதில்லை. அதே போல நிக்கின் பிறப்பிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அன்பே கடவுள். அந்த அன்பின் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என அவர் நம்பினார். துவக்கத்துக்கு  முன்பும், முடிவுக்குப் பின்பும் இருக்கப் போகும் கடவுள் ஒரு விஷயத்தைத் தருகிறார் எனில் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே நல்லது எனும் சிந்தனை அவருக்குள் வலுப்பெற்றது.

அதனாலேயே நிக்கை ஒரு மாற்றுத் திறனாளி எனும் சிந்தனை இல்லாமலேயே அவனை வளர்க்க முனைந்தார்கள். அவனுக்காய் தனி அறை. மற்ற பிள்ளைகளைப் போலவே நடத்துவது என தன்னம்பிக்கையையும் அதிகரிக்க முயன்றார்கள். 

நிக் தரையில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த பருவம் கடந்தது. அவன் எழும்பு உட்காருவானா ? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய் இருந்தது. கைகள் இல்லை. கால்கள் இல்லை. கால்கள் இருக்க வேண்டிய இடத்தின் இரு சின்ன வால் போன்ற சமாச்சாரம் இரண்டு விரல்களுடன் இருந்தது. அது மட்டுமே ஒரே சப்போர்ட் !

ஆனால் நிக் எழும்பி உட்கார புது ஐடியா கண்டுபிடித்தான். நெற்றியை தரையில் ஊன்றி புழுவைப் போல நெளிந்து உட்கார முயல்வது. நெற்றியை முதலில் தரையில் கொடுத்து கொஞ்சம் எழும்பி, பிறகு நெற்றியைச் சுவரில் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி உட்காருவது அவனுடைய விளையாட்டு போலவே ஆகிப் போனது !

விழுந்தால் எழலாம் ! எழ வேண்டும் எனும் உறுதி இருந்தால் வெற்றி தர நெற்றியே போதும் என்பது போல் இருந்தது அவருடைய செயல்கள் !

நிக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தான்.

அடுத்த கேள்வி வந்தது !

“இவனைப் பள்ளிக்கூடம் அனுப்பணுமே” ! 

தன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் !

Image result for love earth

ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது. 

அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. 

இரண்டாவது துறவி கேட்டார், “கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே

முதல் துறவி பதிலளித்தார், “கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா ?”

அழகான இந்தக் கதை இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன.

நாம் ! நமது இயல்பு ! நமது பணி ! எனுமளவில் ஆழமாகச் சிந்தித்தால் பல சிக்கல்களுக்கான தீர்வுகள் வெளிப்படும். 

அன்பைக் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், உறவுகளைக் குறித்தும் பேசும்போது இயற்கையைக் குறித்துப் பேசுவதும் அவசியமாகிறது. காரணம், இயற்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை. 

அடிக்கடி நாம் இயற்கையை நேசிப்பதைப் பற்றியும், ஓசோனில் விழும் ஓட்டையைப் பற்றியும், குளோபல் வார்மிங் எனும் புவி வெப்பமாதலைப் பற்றியும் படிக்கிறோம். படித்து விட்டு, அது ஏதோ உலகத் தலைவர்களுக்கான சமாச்சாரம் என அடுத்த செய்திக்குத் தாவி விடுகிறோம்.

உண்மையிலேயே அது நமக்குச் சம்பந்தமில்லாததா ? தேவையில்லாததா ? ஆம் என்று சொல்கிறீர்களெனில் ஒன்று உங்களுக்கு விஷயம் தெரியாது ! அல்லது அதன் வீரியம் தெரியாது !

குளோபல் வார்மிங் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் அலசப் பட்டதைப் போல எப்போதுமே அலசப் பட்டதில்லை. காரணம் அதன் அச்சுறுத்தல் அப்படி. 

புவி வெப்பமயமாதல் என்றால், “ஆமா அதான் இப்போ வெயில் ரொம்ப சூடா அடிக்குதுஎன சீரியஸாய்ச் சொல்லிவிட்டுக் கடந்து போகும் அறியாமை மனிதர்கள் உண்டு. அவ்ளோ தானா குளோபல் வார்மிங் ? 

விஞ்ஞானம் பயப்படுவதைப் போல குளோபல் வார்மிங் தனது வேலையைக் காண்பித்தால் என்ன நடக்கும் தெரியுமா ? கடல் மட்டம் உயரும். பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கிப் போகும். வெள்ளப்பெருக்கு, சுனாமி, சூறாவளி, வெப்ப அலைகள் என வரிசையாய் பல இயற்கைச் சீற்றங்கள் நிகழும். தொற்று நோய்கள் காட்டுத் தீயைப் போலப் பரவும் ! 

பூமியின் வெப்பம் அப்படியே கடலுக்கும் பரவும். கடலின் வெப்பம் பனியை உருக்கும், நீர்மட்டம் உயரும், வெப்பம் மீண்டும் அதிகரிக்கும். இது ஒரு சங்கிலித் தொடர்போல நடந்து ஒரு நாள் நமது பூமி தண்ணீருக்குள் மூழ்கிப் போய்விடும் எனும் அச்சம் விஞ்ஞானத்துக்கு உண்டு ! 

அவர்கள் எடுத்து நீட்டும் புள்ளி விவரம் படி, கடந்த 20 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்ஸைட் என ஏகப்பட்ட வேதியல் சமாச்சாரங்கள் பூமியில் சகட்டு மேனிக்கு அதிகரித்திருக்கின்றன. இது புவியை சூடேற்றும் சங்கதிகளில் ஒன்று !

மரம் நடுவோம்எனும் கோஷம் எப்போதாவது உங்களை உஷார் படுத்தியதுண்டா ? மரங்களின் குறைபாடு பூமியில் கரியமில வாயுவை நிரப்பி விடுகிறது. அது பூமியின் வெப்பத்தை சடசடவென உயர்த்தி விடுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களுக்கு மரம் நடுவதன் தேவை புரிந்திருந்தது. சாலையோரங்களில் மரங்களை நட்ட மன்னர்களின் வரலாறு நமக்குத் தெரியும். மரங்களை வெட்டிய குற்றத்துக்காய் ராஜஸ்தான் பஷானியர்களுக்கு மன்னர்கள் மரண தண்டனை விதித்த கதைகள் நானூறு ஆண்டு பழசு !

இளைஞர்கள் மனது வைத்தால் பூமி அழகாகும் என்பதில் சந்தேகமில்லை. “நான் மட்டும் நினைத்தால் என்ன நடக்கப் போவுதுஅல்லதுஎன்னைத் தவிர எல்லோரும் அப்படி நடக்கட்டும்என்பது இன்றைக்கு இளம் வயதினரிடையே பரவலாய்க் காணப்படும் சிந்தனை என்பது வருந்த வைக்கிறது.  

கடற்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் கொட்டிக் கிடந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் கடலில் எறிந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒருவர் கேட்டார்,

என்ன தம்பி, இங்கே ஆயிரக்கணக்கான மீன்கள் கிடக்குது.. நீ ஒண்ணோ ரெண்டோ எடுத்து தண்ணியில போடறதால என்ன ஆயிடப் போவுது

பையன் சொன்னான், “அந்த ரெண்டு மீனுக்கும் வாழ்வு கிடைக்கும். என்னால் காப்பாற்ற முடியாத ஆயிரம் மீன்களை விட காப்பாற்ற முடிந்த இரண்டு மீன்களே என் கவனத்தில் இருக்கும்

பெரியவர் அசந்து போனார். நம்மால் சரி செய்ய முடியாத ஆயிரம் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, நம்மால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதே சிறப்பானது !  

சின்னச் சின்ன வேலைகளின் சங்கமமே பெரிய பெரிய சாதனைகள் என்பது நமக்குப் பல நேரங்களில் புரிவதில்லை. சாலைகளில் கிடக்கும் குப்பைகளைப் பற்றி விமர்சித்துத் திரியும் நாம் வீட்டில் இருக்கும் குப்பையை சரியாய் கையாள்கிறோமா? நாடு சுத்தமாய் இருக்க வேண்டுமெனில், வீடு தூய்மையாய் இருக்க வேண்டும். சின்னச் சின்னப் பிழைகளின் தொகுப்பே அவலட்சணங்களின் பேரணி !  

பஞ்சபூதங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது மனிதன் நலமாக இருக்கிறான். நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களும் தனது தூய்மையை இழக்கும் போது மனிதனின் வாழ்க்கையும் பொலிவிழக்கிறது.

வாகனப் புகைகள், கரியமிலவாயு என பல விஷயங்கள் காற்றைக் கறையாக்குகின்றன. ஆலைக்கழிவுகள், குப்பைகள், மருத்துவக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எல்லாம் தண்ணீரை தரமிழக்க வைக்கின்றன. பிளாஸ்டிக், அமிலங்கள், ரசாயனங்கள் போன்றவை நிலத்தை அழிக்கின்றன. உலகில் மொத்தம் இரண்டு கோடி ரசாயனங்கள் இருக்கின்றன. இருபத்து ஏழு வினாடிகளுக்கு ஒரு புது ரசாயனம் கண்டு பிடிக்கப்படுகிறது. 

இவையெல்லாம் நேரடியாக நமது ஆரோக்கியத்தின் குரல்வளையைத் தான் இறுகப் பிடிக்கின்றன. நிலம் பாழ்பட்டுக் கொண்டே போகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பூமியைக் காப்பாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிப்பது தான். 

தள்ளுபடிக் கடைகளில் தள்ளு முள்ளுக்கிடையில் கையில் அள்ளி வரும் பிளாஸ்டிக் பைகள் தூக்கி வீசப்பட்டபின் என்னவாகும் ? குடியரசுத் தினத்துக்காய் கைகளில் அசையும் பிளாஸ்டிக் கொடி மாலையில் என்னவாகும் ? சகட்டுமேனிக்கு குடித்து வீசி எறியும் தண்ணீர் பாட்டில்களின் நிலை என்ன ? ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் மண்ணை மாசுபடுத்திக் கொண்டே இருக்கும் என்பது தான் பதில் !  பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இல்லையேல் மறு சுழற்சிக்கு உட்படுத்துவது மட்டுமே தீர்வு !

தூங்கும் போது புதிதாய் இருக்கும் தொழில் நுட்பம் காலையில் பழசாகி விடுகிறது. நான்கு மாதத்துக்கு முன் வாங்கிய செல்போன் ஓல்ட் ஃபேஷனாகி விடுகிறது. கடந்த வருட கணினி கயலான் கடைக்குப் போகிறது. சிடி, வயர்கள், பிளேயர்கள், என ஆண்டு தோறும் குவியும் எலட்ரானிக் குப்பைகள் சுமார் பத்து கோடி டன் ! ஆயிரக்கணக்கான நச்சுப் புகைகளுடன் இருக்கும் இந்த வேஸ்ட்களையும் மறு சுழற்சிக்குள் அனுப்புவது மட்டுமே சரியான தீர்வு !

தங்கத்தை விட அதிகமாய் நாம் பாதுகாக்க வேண்டிய பொருள் தண்ணீர். தங்கம் இல்லாமல் வாழலாம், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதே இதன் தீர்வு. இல்லையேல் இன்னும் சில பத்தாண்டுகளில் தண்ணீர் இல்லாமல் மானுடம் தவிக்க வேண்டியது தான் என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன். 

மின் தேவையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இருப்பதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா ? இல்லை என்பதே தீர்க்கமான பதில் ! ‘ஃபாந்தம் லோட்கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? மின் உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நேரத்தில் செலவாகும் மின்சாரத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக டிவி, செல்போன் சார்ஜர், ரேடியோ, டிவிடி பிளேயர் போன்றவை.

அமெரிக்காவின் கலிபோர்ணியப் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஒட்டு மொத்த மின் செலவில் 6% இப்படி வீணாகிறதாம். இதைத் தவிர்ப்பது எப்படி ? ரொம்ப சிம்பிள் ! தேவையில்லாத போது பிளக்கை உருவி வையுங்கள், சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்.  

தேவையில்லாமல் காரை எடுத்துக் கொண்டோ, பைக்கை எடுத்துக் கொண்டோ சுற்றாமல் முடிந்தவரை பயணத்துக்கு நடையையோ, சைக்கிளையோ, பஸ்ஸையோ, ரயிலையோ வழக்கமாக்கினால் காற்றில் மாசு குறையும் ! நடப்பதால் உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் ! 

நவீன உலகில் இணையம் நமக்கு ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இருந்தபடியே வங்கி, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றைக் கையாண்டால் பயணமும் மிச்சம், காற்றில் கலக்கும் மாசும் குறையும்.

பயன்பாட்டைக் குறை, மீண்டும் பயன்படுத்து, மறு சுழற்சிக்கு உட்படுத்து” ( Reduce, Reuse, Recycle ) எனும் இயக்கம் இன்று வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்கிச் சேகரிக்காமல் இருப்பது முதல் தேவை. பழைய பொருட்களை நீண்ட நாள் பயன்படுத்துவது, பின் அதை தேவையானவர்களுக்குக் கொடுப்பது அல்லது பழையவற்றை வாங்கிப் பயன்படுத்துவது இவை இரண்டாவது தேவை. குப்பையான பின் மறு சுழற்சிக்கு உட்படுத்தி மண்ணை மாசு படாமல் தடுப்பது மூன்றாவது !

இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொருவரும் சரியாகப் பயன்படுத்தினாலே பூமியின் மாசு பரவலை பெருமளவு தடுக்க முடியும்.

நேசிப்போம் நம் மண்ணை

அவளும் நமக்கோர் அன்னை !

நிக் வாயிச்சஸ் – 1

1

“என் குழந்தை எங்கே ?”

ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்போனில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் பிரசவ வார்டில் பிரசவித்த களைப்பில் இருந்த தஷ்கா வாயிச்சஸ் (Dushka Vujicic) அருகில் இருந்த நர்ஸிடம் கேட்டாள். பிரசவம் இப்போது தான் முடிந்திருந்தது !

….

“என்னோட குழந்தை எங்கே ? அழுதானா ?”

….

நர்ஸின் மவுனம் அந்தத் தாய்க்கு உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தையைப் பற்றிக் கேட்டால் அமைதியாய் இருந்தால் எந்தத் தாய்க்குத் தான் கிலி ஏற்படாது? 

இருபத்து ஐந்தே வயதான தாய் அவள். மருத்துவமனையில் ஒன்றில் இதே போன்ற ஒரு பிரசவ அறையில் பணி செய்து கொண்டிருந்த நர்ஸ் பெண் தான் அவர். அதனால் பிரசவத்தைப் பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் ரொம்ப நன்றாகத் தெரியும்.

தாய்மை அடைந்த கணத்திலிருந்து என்னென்ன சாப்பிடவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதில் கொஞ்சமும் பிசகாமல் தான் அவர் சாப்பிட்டு வந்தார். 

மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருந்ததால் எல்லா பரிசோதனைகளையும் சரியாகச் செய்தார். கடைசியாக எடுத்த இரண்டு அல்ட்ராசோனிக் ஸ்கேன் ரிப்போர்ட் கூட “பையன் பொறக்கப் போறான்” என்று மகிழ்ச்சியோடு சொன்னது. இப்போது நர்ஸின் மவுனம் அடி வயிற்றைக் கலக்குகிறது !

“பிளீஸ் சொல்லுங்க.. என்னோட குழந்தைக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?” பதட்டம் விழுங்க கேட்டாள் தாய்.

நர்ஸோ பதில் சொல்லாமல் அந்த அறையின் இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கே பல மருத்துவர்கள் ஒன்று கூடி குழந்தையை தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாய்க்கு பதட்டம் அதிகமானது !

திடீரென ஒரு அழுகுரல் !

குழந்தையின் அழுகுரல் !

தாய்க்குப் போன உயிர் திரும்ப வந்தது. முகத்தில் சட்டென ஒரு மிகப்பெரிய நிம்மதி வந்து அமர்ந்தது. அப்பாடா பையன் உயிரோட தான் இருக்கான்.

குழந்தையின் அழுகுரல் கேட்ட தந்தை போரிஸ் வாயிசஸ் ( Borris Vujicic ) ஆவலோடு குழந்தையை ஓடிச் சென்று பார்த்தார்.

சட்டென தலை சுற்ற அவருக்கு வாந்தி வருவதுபோல இருந்தது.

மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர அவசரமாய் அறைக்கு வெளியே கூட்டிக் கொண்டு போனார்கள்.

தாய்க்கு வந்த உயிர் மீண்டும் போனது போல இருந்தது. என்ன தான் நடக்கிறது. எல்லோரும் மவுனமாய் இருக்கிறார்கள். குழந்தை அழுதாகி விட்டது. ஆனால் கணவனோ குழந்தையைப் பார்த்து குமட்டுகிறாரே !

“குழந்தையைக் காட்டுங்க. பிளீஸ்ஸ்ஸ்……என் குழந்தைக்கு என்னாச்சு…” அவளுடைய குரலில் இப்போது அழுகை தொற்றிக் கொண்டது.

டாக்டர் திரும்பினார்.

“பிளீஸ் சொல்லுங்க, நான் ஒரு நர்ஸ். எனக்கு புரியும். சொல்லுங்க.. பிளீஸ் ” அவளது அழுகை கெஞ்சலோடு கலந்து வந்தது.

டாக்டர் திரும்பினார். சற்று நேர மவுனத்துக்குப் பிறகு சொன்னார்.

“ஃபோகாமீலியா( Phocamelia)” 

தாய் அதிர்ந்தாள். ஃபோகாமீலியா என்றால் குறைபாடுள்ள குழந்தை என்று அர்த்தம். கையோ காலோ இல்லாமல் பிறக்கும் குழந்தையை மருத்துவம் இந்தப் பெயரில் தான் அழைக்கிறது.

அவளால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம் ? எங்கே பிசகிற்று ? எந்த மருத்துவத் தவறும் செய்யவில்லையே ? அவளுடைய இதயம் உடைந்தது.

வெளியில் தந்தை நம்ப முடியாதவராக புலம்பிக் கொண்டிருந்தார். அருகில் வந்த நர்ஸிடம் கண்ணீருடன் சொன்னார்.

“என்..பையன்… என் பையனுக்கு ரெண்டு கையுமே இல்லை”

நர்ஸ் மிடறு விழுங்கினார். திக்கித் திணறிப் பேசினாள்.

“சார். ஆக்சுவலி.. உங்க பையனுக்கு இரண்டு கால்களும் கூட இல்லை சார்” சொல்லி விட்டு அவளாலேயே கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

தீப்பிடித்த கூரையில் இடியும் விழுந்தது போல, அப்படியே உறைந்து போய், நிலைகுலைந்து தரையில் உட்கார்ந்தார் தந்தை. 

தாய் உள்ளே டாக்டரிடம் கேட்டார்.

“பையனுக்கு.. பையனுக்கு என்ன குறை ? விரல்களா.. கையா ? காலா ?”

மருத்துவர் உதடு கடித்தார்.

“ஐ ஆம் சார்.. உங்க பையனுக்கு, கைகளும் இல்லை, கால்களும் இல்லை…”

அவளுக்குத் தலை சுற்றியது.

கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் ஒரு குழந்தையா ? எனக்கா ? மருத்துவம் தெரிந்த எனக்கா ? எல்லாவற்றையும் சரியாய் செய்த எனக்கா ? கடந்த பத்து மாதங்களாக நாம் சேமித்து வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம், கையும் காலும் இல்லாத ஒரு குழந்தையைப் பார்க்கவா ? அவளுடைய உயிரே போய்விடும் போல் இருந்தது.

குழந்தையை ஒரு துணியில் சுற்றி அவளுக்கு அருகே கொண்டு வந்து கிடத்தினார்கள்.

“நோ… நோ……கொண்டு போங்க.. என் பக்கத்துல கொண்டு வராதீங்க” அவளுடைய அழுகைக் குரல் ஆவேசமானது.

அவளால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அவள் மயக்கத்துக்குப் போனாள். 

நேரம் போய்க் கொண்டே இருந்தது.

தந்தை கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவராக இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார். குழந்தையைப் போய் பார்த்தார். கைகளில் ஏந்தினார். புன்னகைத்தார்.

படுக்கையில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல், கலங்கிய கண்களோடு படுத்திருந்த தாயிடம் வந்தார்.

அவளுடைய கரங்களைப் பற்றினார். 

“நான் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்”

“.ம்…”

“நம்ம பையன் ரொம்ப அழகா இருக்கான்”

தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் ! 

திடீர் பணக்காரன் ! 

Image result for bank theft

மனதில் கொஞ்சம் தில். கையில் ஒரு துப்பாக்கி. முகத்தை மறைக்க ஒரு கர்ச்சீப். இது போதும் இலட்சாதிபதியாக ! நல்ல மத்தியான நேரமாகப் பார்த்து ஒரு வங்கியில் புக வேண்டியது, வேலை செய்து கொண்டிருக்கும் அப்பாவிப் பணியாளனின் நெற்றியில் துப்பாக்கியை வைக்க வேண்டியது, பணத்தை அள்ளிக் கொண்டு அலேக்காகப் பறக்க வேண்டியது !

திடீர்ப் பணக்காரர் ஆக வேண்டும் எனும் ஆவல் உந்தித் தள்ளும் போது என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள் ! விளைவு என்ன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படி சுருட்டிய பணம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவியது என்பதும் நாம் அறிந்ததே !

படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேறும் வழிகளெல்லாம் பலருக்கும் அலர்ஜியாகிவிட்டது. “ஓவர் நைட் பணக்காரர் ஆக வேண்டும்என்பது அவர்களின் தாரக மந்திரம். அதற்கு கிடைக்கும் வழி லீகலோ, இல்லீகலோ பரவாயில்லை என்பது தான் பதறவைக்கும் உண்மை.

பல்லில்லாத பாட்டியின் காதில் கிடக்கும் பாம்படத்தை அறுப்பதுமுதல், கன கம்பீரமாக இருக்கும் ஏடிஎம் பெட்டியையே தூக்கிச் செல்வது வரை எல்லாமே ஒரே இலட்சியத்தை நோக்கியது தான். “விடிஞ்சா நான் பணக்காரனாகி இருக்கணும் !” !

ஒரு காலத்தில் திடீர்ப் பணக்கார மோகம் உடையவர்கள் லாட்டரிகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் லாட்டரியுடன் காத்திருந்து காத்திருந்து கடைசியில் சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் நிலைமைக்கு வந்தார்கள். அப்புறம் சுரண்டல் லாட்டரி வந்தது. சுரண்டிச் சுரண்டி சுண்டு விரல் துண்டானது தான் மிச்சம் ! 

வீட்டில் கொஞ்ச நேரம் டிவி பார்க்க உட்கார்ந்தால் என்ன கிடைக்கிறது மனைவியின் அர்ச்சனையைத் தவிர ? ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அதி பயங்கரமான மாயை ! ஒரு மாய உலகம். ஒரு வகையில் கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கிய சர்வ சக்தி பொருந்திய சுவர்க்கத்தின் மினியேச்சர்!

அங்கே அட்டகாசமான ஒரு கார் அப்பழுக்கற்ற சாலையில் ஓடுகிறது ! அரை இலட்சம் ரூபாயை எட்டிப் பிடிக்கும் மொபைலுடன் ஒய்யார அழகி தோள் சாய்கிறாள். அரைச் சுவர் அளவு தொலைக்காட்சியில் ஹாக்கி பார்க்கிறார் பாப் கான் கொறிக்கும் பணக்கார மனுஷன். விளம்பரங்களும், சினிமாக்களும் இளைஞர்களின் இளகிய மனதுக்குள் கண்ணி வெடியை வைக்கும் பணியை கட்சிதமாய் செய்து விடுகின்றன.

மாதச் சம்பளத்தில் வீட்டு வாடகை கட்டி, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, இல்லாத கரண்டுக்கு பில் கட்டி, போன் பில் கட்டி வாழும் வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை என நினைக்கிறார்கள் இளைஞர்கள். ஆசைக்கும், நேர்மைக்கும் இடையேயான போராட்டம் உக்கிரமடைகிறது.

பக்குவமான இளைஞர்கள் வெற்றிக்காக நேரான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த துறையில் கவனம் செலுத்துகிறார்கள். புதுமையாய் என்னென்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். வெற்றிகளை அடைகிறார்கள். அந்த வெற்றி ஒரு வருடத்தில் வந்தாலும் சரி, பத்து வருடங்களில் வந்தாலும் சரி. அது அவர்களிடம் தங்குகிறது. மனதை உற்சாகமூட்டுகிறது.

சிலரோ நேர்மையின் மதில் சுவரை எட்டித் தாவி விடுகிறார்கள். அவர்கள் மனித மதிப்பீடுகளை உடைத்து கொள்ளை, வழிப்பறி, ஏமாற்று என தவறான வழியில் செல்கிறார்கள். அதற்கு இடைஞ்சல்கள் வரும்போது கொலை வரைக்கும் போய் விடுகிறார்கள். தவறுகளை சிந்திக்கும் மனிதர்களிடமிருந்து தவறுகளே முளைக்கின்றன. அத்தி மரத்தில் அத்திப் பழங்களே விளையும் என்பதல்லவா விதி !

பணக்காரர்கள் ஆகவேண்டும் எனும் ஆசையை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு வலைகளில் விழுந்து விடுவது தான் ஆபத்தானது ! எப்படியாவது பணக்காரர்கள் ஆக வேண்டும் எனும் உங்களுடைய ஆசையே சிலருடைய முதலீடு தெரியுமா ?

இன்று ஆயிரம் ரூபாய் கட்டுங்கள் அடுத்த வருஷம் ஒரு இலட்சம் ரூபாய் உங்கள் கையில் இருக்கும்  எனும் கோஷங்களுக்கு இன்றைக்கும் வலிமை உண்டு ! அதுஆஸ்திரேலியாவில் திராட்சைத் தோட்டம், அன்டார்டிக்காவில் தேக்குத் தோட்டம்என்றெல்லாம் சர்வதேச முகம் காட்டுவதும் உண்டு. அதை நம்பி பணத்தைக் கட்டி விட்டு கையைப் பிசைந்து நிற்பவர்கள் எக்கச்சக்கம் !

நைஜீரியன் மெயில்ஏமாற்று வேலை இதில் உலகப் பிரசித்தம். மின்னஞ்சல் திறந்தால் உங்களுக்கு ஒரு மெயில் வந்திருக்கும். “அதிர்ஷ்டப் பிரபுவே, உங்களுக்காக நைஜீரியன் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய்கள் காத்திருக்கின்றன. அதை சொந்தமாக்கிக் கொள்ள வெறும் ஐந்து இலட்சம் ரூபாய்களை மட்டும் உடனே கட்டுங்கள்என கடிதம் விரியும். 

ஆயிரம் கோடியா என வாயைப் பிளந்து சைலன்டாகப் போய் பணத்தைக் கட்டி ஏமாந்து போகும் மக்கள் ஏராளம். சமீபத்தில் நமது நாட்டில் கூட ஒருவர் பணத்தைக் கட்டி கண்ணைக் கசக்கிய நிகழ்வு நடந்தது.

என்னோட அக்கவுண்டில் இருக்கும் பணத்தை நான் எடுக்க முடியாது, டிரான்ஸ்பர் தான் செய்ய முடியும். அதற்கு ஒரு நைஜீரியன் அக்கவுண்ட் வேணும்.” அல்லதுஎல்லாம் தங்கமாக இருக்கிறது அதை பணமா மாற்ற கொஞ்சம் முன்பணம் வேண்டும்”, “அல்லது உங்களுக்கு ஒரு கார் பரிசு விழுந்திருக்கிறது, இந்தியாவுக்கு அனுப்ப பேக்கிங் சார்ஜ் அனுப்புங்கோஇப்படி ஏதோ ஒரு விதத்தில் மெயில் வரும். 

சிரித்துக் கொண்டே டிலீட் பட்டனை அமுக்குவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. கொஞ்சம் ஏமாந்துமுயற்சி செய்து பார்ப்போமேஎன பணத்தைக் கட்டினால் உங்கள் பணம் காலி. அது உங்களுக்கு திரும்ப வரப் போவதில்லை என எல்லா சாமிகளையும் அடித்து சத்தியம் செய்து விடலாம். 

மத்திய ஐரோப்பாவிலுள்ள ஜெரி பெஸுவஸ்கி எனும் 72 வயது முதியவருக்கும் இப்படி அபத்தம் நேர்ந்தது. அவர் கட்டியது ஆறு இலட்சம் டாலர்கள் ! சுமார் மூன்று கோடி ரூபாய்கள். சம்பாதித்ததையெல்லாம் கட்டி விட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என காத்திருந்தார். ஒன்றும் கொட்டவில்லை. பதறி அடித்துக் கொண்டு பெருகுவேயில் இருந்த நைஜீரியன் தூதரகத்துக்கு ஓடினார். 

அவர்களிடம் பேசியபோது தான் இப்படி ஒரு ஏமாற்று வேலை நடந்திருப்பதை அவர் அறிந்தார். அதிர்ச்சியின் உச்சத்துக்கே போன அவர் கையிலிருந்த துப்பாக்கியால் சுட அருகிருந்த அதிகாரி மைக்கேல் அந்த இடத்திலேயே பலியானார் ! தடுக்க வந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது ! திடீர் பணக்காரர் ஆக வேண்டுமென விரும்பியவர் கடைசியில் குற்றவாளியானார் !

வெளிநாட்டிலிருந்து செக் வருகிறது, அப்படியே ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண்ட் பேப்பர் வருகிறது என்றெல்லாம் வரும் மோசடிகள் இந்த வகை தான். ரகசியக் குரலில் உங்களுடைய கதவைத் தட்டும் எதையுமே, “சாரிகெளம்புங்க காத்து வரட்டும்..” என விரட்டியடித்தால் நீங்கள் தப்புவீர்கள். 

என் கையில இரிடியம் இருக்கு. அதை வாங்க ஜெர்மனியிலிருந்து ஒருத்தன் வரான். அதோட மொத்த மதிப்பு இரண்டு இலட்சம் கோடி ரூபாய். அதை டெஸ்ட் பண்ண முதல்ல ஒருத்தன் வருவான். இரிடியத்தை நெல்லுக்கு பக்கத்துல வெச்சா நெல்லை அது இழுத்து எடுக்கும். தீக்கு பக்கத்துல வெச்சா தீ வளையும்இப்படியெல்லாம் கதை சொல்லிக் கொண்டு மோசடி நடத்தும் பலருடைய வழக்குகள் காவல் துறையிடம் உண்டு. 

மின்னல் தாக்கினால் செம்பு இரிடியம் ஆகிவிடும்என இவர்கள் ஷாக் சயின்ஸ் பேசுவார்கள் ! இதையெல்லாம் நம்பிக் கொண்டு மின்னல் தாக்கிய செம்பு குடத்துக்காக வெட்டிக் கொண்ட ஆட்களும் உண்டு. மின்னல் தாக்கட்டும் என வீட்டிலிருக்கும் செம்பு பாத்திரங்களையெல்லாம் மாடியில் விரித்து வைக்கும் அப்பாவிகளும் உண்டு. பணம் பிடுங்கும் ஏமாற்று வேலையன்றி இதில் வேறு ஒன்றும் கிடையாது !

கிரடிட் கார்ட்களை போலியாய் தயாரித்து .டி.எம் களில் பணம் திருடுவதாகட்டும், வங்கியின் பக்கத்தைப் போலியாய் தயாரித்து தகவல் திருடுவதாகட்டும் எல்லாமே திடீர் பணக்காரர்களாக விரும்புபவர்களின் தில்லு முல்லுகளே. 

உஷாராய் இருக்க வேண்டியதும், இத்தகைய வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியதும் அவசியம்.

முன்பணமாக நீங்கள் பணம் கட்டுங்கள். உங்களை மஹாலட்சுமி வந்து சந்திப்பாள் என சத்தியம் செய்யும் சர்வ சங்கதிகளும் ஏமாற்று வேலைகள் தான். எஸ்கேப் ஆகிவிடுங்கள். 

வழக்கத்துக்கு மீறிய சலுகைகள், பயன்கள், லாபம் இதெல்லாம் எச்சரிக்கை மணியை அடிக்கும் விஷயங்கள். உங்களை பணக்காரர் ஆக்குவதே இலட்சியம் என யாரும் நேர்ச்சை செய்திருக்க வாய்ப்பில்லை.  

இணையத்தில் பத்து மடங்கு கவனம் அவசியம். உங்கள் வங்கிக் கணக்கைப் பார்க்கும் போது கூட கவனம் வேண்டும். “உடனே பணம் கொடுஎன அவசரப் படுத்தும் எதையும் சீண்டவே சீண்டாதீர்கள். உதவிகள், நிவாரணங்கள் கொடுப்பதைக் கூட நேரில் கொடுக்கவே முயலுங்கள். நெட்டில் கெட்டவர்கள் உலவ வாய்ப்பு அதிகம் ! வெளிநாட்டில் வேலை எனும் அழைப்புகளை அதீத கவனத்துடன் அணுகுங்கள். தேவைப்பட்டால் அனுபவஸ்தர்கள், காவல்துறை போன்றவர்களின் உதவியை நாடத் தயங்காதீர்கள்.

உழைப்பை நம்புங்கள். திருட்டுத் தனமாய் முன்னேறியவர்களை எக்காரணம் கொண்டும் முன்னுதாரணமாய்க் கொள்ளாதீர்கள். அது உங்கள் தந்தையாகவே இருந்தாலும் தள்ளியே வையுங்கள்.  

வெற்றியை நோக்கி மனதில் நம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு ஓடுபவர்களை வெற்றி நிச்சயம் சந்திக்கும். பில்கேட்ஸ் கூட ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, முதல் வேலையான டிராஃப் டேட்டா வில் தோற்று பின்னர் தான் மைக்ரோசாஃட் மன்னனானார். அவர் வெற்றியை நோக்கி இலட்சியங்களுடன் ஓடியவர் !

நாலு வயசு வரை பேச்சு வராமல், ஏழு வயசு வரை எழுதத் தெரியாமல், ஆசிரியர்களும் பெற்றோரும் அரை லூசு என கருதியவர் தான் ஐன்ஸ்டீன். நேராக ஓடிய அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது !

குறுக்குப் பாதையில் ஓடுபவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி தளிர் இலைகளைப் போன்றது. விரைவிலேயே காய்ந்து விடும். நேரான பாதையில் ஓடுபவர்களுடைய வெற்றியோ உயர் மலைகளைப் போன்றது ! அது வரலாறுகளின் முகப்புப் பக்கத்தில் கர்வத்துடன் இடம் பெறும் !

குறுக்கு வழி விலக்கு

நேர்மையே நம் இலக்கு !

தன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை ! 

இளைஞனை இறுக்கும் இணைய வலை ! 

Image result for youth and internet

பிரான்டி வுல்ஃப் மூன்று வயதான அழகான பெண் குழந்தை. அவளுடைய தாய் இருபத்தெட்டு வயதான ரெபேக்கா காலீன் கிறிஸ்டி, விவாகரத்து ஆனவள். தாயுடைய பொழுது போக்கு இணையத்தில் கேம்ஸ் விளையாடுவது. சாதாரணமாக விளையாடத் துவங்கிய அவளை கொஞ்சம் கொஞ்சமாய் விளையாட்டு உள்ளிழுத்துக் கொண்டது. சாப்பாடு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து விளையாடத் தொடங்கினாள். அவள் மறப்பதோடு நின்று விடாமல் குழந்தைக்கும் சாப்பாடு போட மறந்து விடுவாள் என்பது தான் துயரம்.

தாய் விளையாடிக் கொண்டிருப்பாள், குழந்தை எதுவுமே இல்லாமல் பட்டினியில் வாடி வதங்கும். தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் இல்லாமல் கையில் என்ன கிடைக்கிறதோ அதை குழந்தை சாப்பிடும், நாய் உணவு உட்பட ! குழந்தை மெலிந்து மெலிந்து எடை குறைந்து எலும்பும் தோலுமாகி விட்டது.

ஒருநாள் விளையாட்டின் மும்முரத்தில் இருந்தாள் தாய். மதியம் ஆரம்பித்த விளையாட்டு மாலை, இரவு என தொடர்ந்தது. இடைவெளியில்லாமல் அதிகாலை மூன்று மணி வரைக்கும் விளையாடினாள். விளையாடிவிட்டு விருப்பமேயில்லாமல் எழுந்து வந்தவள் குழந்தை மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள் ! பசியினால் வாடி வதங்கிய அந்த மூன்று வயது தேவதை இறந்து போயிருந்தது !

அவளுக்கு 25 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  ஐயோ .. என்னுடைய குழந்தையை இழந்து விட்டேனே, பார்க்கணும் போல இருக்கே..”  என கோர்ட்டில் அழுது புலம்பினாள் ரெபேக்கா. இப்போது அழுது என்ன செய்ய ? போன உயிர் போனது தானே ! 

இன்டர்நெட்ல கொஞ்ச நேரம் விளையாடினா என்ன ஆவப் போகுது” ? என்று தான் இந்த இணைய மோகம் ஆரம்பிக்கும். அச்சு அசலாய் புகைப் பழக்கம் எப்படி ஆரம்பிக்குமோ அதே போல ! ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமே என ஆரம்பிக்கும் பழக்கம் இழுப்பவரை இழுத்துக் கொள்ளும். அதே போல தான் இதுவும்.

முதலில் கொஞ்ச நேரம், அப்புறம் நினைப்பதை விட அதிக நேரம். அப்புறம் நாள் முழுக்க. தூக்கம் இல்லாமல், வேலை செய்யாமல், சாப்பாடு இல்லாமல் என அது விரிவடையும். இந்த மோகம் எந்த நிலைக்கும் போகலாம் என்பதற்கு ரெபேக்கா ஒரு சின்ன உதாரணம்.

இணையம் ஒரு அற்புதமான சாதனம் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். குறிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுடையவர்கள், பிறரோடு தொடர்பில் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள், கலைஞர்கள், செய்தியாளர்கள் இவர்களுக்கெல்லாம் இணையம் வரப்பிரசாதம். இணைய நன்மைகளைப் பட்டியலிட்டால் தனியே நான்கு புத்தகம் எழுதவேண்டி வரும்.

பாலையும், நீரையும் கலந்து வைத்தால் பாலை  மட்டும் குடிக்கும் இலக்கிய அன்னப் பறவையாய் நாம் இருந்தால் அற்புதம் ! தவறுகளை நோக்கிப் போனாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பயன்படுத்தினாலோ ஆபத்து சர்வ நிச்சயம். 

இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஐந்து முதல் பத்து சதவீதம் வரையிலானவர்கள் தாங்கள் இணையத்துக்கு அடிமையானதை உணர்கிறார்கள்என்கிறார் ஜெர்மி லாரன்ஸ் எனும் உடல்நல எழுத்தாளர். !

இணயத்தில் மெதுவாக சேட் செய்ய ஆரம்பிப்போம். பிறகு எப்போதும் கணினியின் ஓரத்தில் ஒரு சேட் வின்டோ இருந்தால் தான் வேலை ஓடும் எனும் நிலை வரும். பெரும்பாலானவர்களுக்கு எதிர் பாலினருடன் செக்ஸ் உரையாடல் நடத்துவதில் நேரம் போவதே தெரியாது.  

கடந்த சில ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவை ஃபேஸ் புக், டுவிட்டர், ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்புகள்.  இதில் நண்பர்களை கண்டுபிடிப்பது, அவர்களோடு பேசுவது. புது நபர்களைத் தேடுவது, அவர்களுடன் கதைப்பது என நேரம் போவதே தெரியாமல் விளையாட்டு  களைகட்டும். வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் எல்லாமே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

பாலியல் கதைகள், படங்கள், வீடியோக்கள் என மாட்டிக் கொள்பவர்கள் கதி ரொம்பப் பரிதாபம். அது ஒரு பெர்முடா முக்கோணம் போல. எட்டிப் பார்த்தாலே இழுத்துக் கொள்ளும் சிக்கலான விஷயம். இணைய உலகின் இன்றைய கணக்குப் படி சுமார் இரண்டரை கோடி பாலியல் வலைத்தளங்கள் உள்ளன. ஒவ்வொரு வினாடியும் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள் இதற்காய் செலவிடப்படுகின்றன. தேடுதல் தளங்களில் 25 சதவீதம் பாலியல் தேடல்களே ! தரவிறக்குகளில் 35 சதவீதம் பாலியல் சார்ந்தவையே ! 

இந்தப் புள்ளிவிவரங்களே போதும் இணைய உலகை பாலியல் எவ்வளவு ஆழமாய்ப் பாதித்திருக்கிறது என்பதை உணர. இதில் மாட்டிக் கொள்பவர்கள் தங்கள் நேரம், வாழ்க்கை, குடும்ப உறவுகள் என எல்லாவற்றையுமே இழந்து விடும் அபாயம் உண்டு.

இன்டர்நெட்டுக்கு அடிமையாவதை யாரும் சீரியசாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியாது என எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. “இணையத்துக்கும், இணைய விளையாட்டுகளுக்கும் அடிமையாகும் மக்களுடைய மூளையில் கணிசமான மாற்றங்கள் ஏற்படுகின்றனஎன்று அதிர்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது. 

இந்த மாற்றம் கஞ்சா, கோகைன் போன்ற போதை அடிமைகளின் மூளையிலுள்ள மாற்றங்களை ஒத்திருக்கிறது. இணைய அடிமைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மூளையின் உணர்வுப் பகுதி, கவனப் பகுதி,  முடிவெடுக்கும் பகுதி, போன்ற பகுதிகளின் இணைப்பு வலுவிழந்து விடுகிறதாம். எனவே இந்த இணைய அடிமைத்தனத்தை மிக சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 இணையத்தை விட முடியாதவர்கள் பலர் திருமணத்தில் தோல்வி, கல்வியில் தோல்வி, வேலையில் தோல்வி என படிப்படியாய் தோல்வியடைகிறார்கள்என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியிலுள்ள பேராசிரியர் ஹென்ரீடா பவுடன் ஜோன்ஸ். இவர் அங்கு இணைய மற்றும் ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்.  

நாற்பத்து ஒன்று வயதான லூசியானா மெய்னி எனும் இங்கிலாந்துப் பெண்மணி, ஆன்லைன் விளையாட்டுக்குப் பணம் வேண்டும் என்பதற்காக அலுவலகத்தில் தில்லுமுல்லு விளையாட்டுகளை விளையாடியிருக்கிறார். அப்படி சுட்டுச் சுட்டுச் சேகரித்த பணம் சுமார் நாற்பது இலட்சம் ரூபாய்கள். இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் !

ஆன்லைனில் விளையாடும் அடிமைத்தனமும், மதுவுக்கு அடிமையாவதும் ஒரே போன்ற சங்கதிகளேஎன்கிறார் நாட்டிங்காம் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் கிரிஃபிட்ஸ்.

மருத்துவம் இப்போது இதை சிக்கலான ஒரு பிரச்சினை என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. இணையத்தை கட்டிக் கொண்டு தூக்கத்தைத் தொலைப்பவர்கள் மன அழுத்தம், எரிச்சல், கோபம், தலைவலி, பதட்டம், கவனமின்மை, சோர்வு, தனிமை, குற்ற உணர்வு போன்ற பலவீனங்களுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கிறது !   

குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் குறைந்து போய் உறவு வாழ்க்கை பலவீனமடைகிறது. சுமார் 6 சதவீதம் பயன்பாட்டாளர்கள் இதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள். யூகேவில் சுமார் 33 சதவீதம் விவாகரத்துகளுக்கு ஃபேஸ்புக் காரணமாய் இருக்கிறது !

சீனாவில் நிலமை இன்னும் மோசம். 42 சதவீதம் இளைஞர்கள் இதன் அடிமைகள். இரவு முழுவதும் இன்டர்நெட் கஃபேக்களில் இளைஞர்கள் விழித்துக் கிடப்பது சர்வ சாதாரண நிகழ்வு ! 7 விழுக்காடு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் இணைய வலையில் சிக்கிக் கிடப்பவர்கள் என்பது அதிர்ச்சித் தகவல் ! 

அதீத இன்டர்நெட் பயன்பாடு சமூக ஈடுபாட்டை குறைக்கிறது, அல்லது தடுக்கிறது. இதனால் இளைஞர்களுடைய தன்னம்பிக்கை முனை பழுதுபடுகிறது ! அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து தப்ப மீண்டும் மீண்டும் இணையத்தில் சரணடைந்து விடுகிறார்கள். பலர் தங்களுடைய தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றை வெற்றியாக மாற்ற முயலாமல் தீக்கோழி போல இணையத்தில் தலை புதைக்கிறார்கள். தண்ணியடித்து சோகம் மறக்க நினைக்கும் முட்டாள் தனத்தைப் போல !

இணையத்தினால் 40 சதவீதம் பணி தொய்வு ஏற்படுவதாய் ஒரு அமெரிக்க புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காரணம் 60 சதவீதம் ஆன்லைன் வர்த்தகமும், 70 சதவீத பாலியல் தகவல் மேய்தலும் அலுவல் நேரத்தில் தான் நடக்கிறதாம் ! 12 சதவீதம் அமெரிக்கர்களும், 30 சதவீதம் கொரிய மக்களும் இன்டர்நெட் தங்களுக்கு மாபெரும் போதையாய் இருப்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில் இது இன்னும் அதிகமாம்.

இணைய பலவீனத்திலிருந்து விடுபடவேண்டியதும், இணையத்தை ஆரோக்கியமான வழிகளில் செலவிட வேண்டியதும் இளைஞர்கள் செய்ய வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள்.

முதலில் ஓவராக இன்டர்நெட் பார்க்கிறீர்களெனில் அதை உணர வேண்டும். ஒரு நாள் எத்தனை தடவை இணையத்தில் நுழைகிறீர்கள், எவ்வளவு நேரம் சேட்டிங் செய்கிறீர்கள், அடிக்கடி ஒரு பக்கத்தை எட்டி எட்டிப் பார்க்கிறீர்களா, ஃபேஸ்புக், டுவிட்டர், மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என கணக்குப் போட்டுப் பாருங்கள் !

தேவையல்லாத இணைய வாசிப்பை நிறுத்துங்கள். அதற்கு மிகச் சிறந்த வழி, அதைத் தவிர வேறு ஒரு நல்ல பொழுது போக்கில் உங்கள் கவனத்தைச் செலுத்துவது தான் ! 

பொதுவாக ஆன்லைன் விளையாட்டு, சேட்டிங் போன்றவற்றை குறையுங்கள்.  போர்னோகிராபி எனப்படும் பாலியல் தேடுதலை அடியோடு நிறுத்துங்கள். கணினியை விட்டு விட்டு எழுந்து நடப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே எங்கேயாவது போய் வருவது என சிந்தனையை வேறு பக்கம் திருப்புங்கள்.

இணைய அடிமைத்தனத்தை இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர் (IAD) என மருத்துவம் அழைக்கிறது. இதை சிகிச்சை செய்ய உலகின் பல இடங்களிலும் இணைய அடிக்‌ஷன் சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இணைய அடிமைத்தனம் சீரியசான ஒன்று என்பதற்கு இவையே சாட்சி !

இணைய அடிமைத்தனத்தை எளிதாய் வெற்றி கொள்ள முடியும். வெற்றி கொள்ளுங்கள். தொழில் நுட்பத்தை ஆக்கபூர்வமாய் பயன்படுத்துங்கள் ! 

சரியாய் கையாளும் இணையம்

இமயம் ஏற்றும் உனையும்!

தன்னம்பிக்கை : நிபந்தனையற்ற அன்பு

நிபந்தனையற்ற அன்பு

Image result for love the handicapped

ரோஸ் பிறக்கும் போதே மாபெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப் படி இரண்டு கால்களையும் வெட்டியெடுத்தார்கள். அதன்பின் இடுப்பு வரை மட்டுமே உள்ள அரை மனுஷியானாள் ரோஸ்.

பட்ட காலிலே படும் என்பது போல பட்டுப் போன காலுடன் பிறந்தவளுடைய சகோதரன் மன நலம் பாதிக்கப் பட்டவன். தந்தை அல்சீமர் நோயாளி ! வாழ்க்கை தனக்கு முன்னால் வெறுமையின் சாலையாய் நீண்டிருப்பதைக் கண்டார் ரோஸ். எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லையே எனும் அழுத்தம் மனதை அழ வைத்தது. 

1997ம் ஆண்டு ரோஸ் ஆட்டோமொபைல் கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த டேவ் எனும் ஒரு இளைஞனைச் சந்தித்தாள். எல்லோரும் அவளை பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது டேவ் அவளை சாதாரணமான ஒரு பெண்ணாகப் பார்த்தான். அவளிடம் பரிதாபமாய்ப் பேசாமல் நகைச்சுவையாய்ப் பேசினான். அவளுடைய மனம் மயங்கியது ! ஆனால் கால்கள் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்வானா? எனும் கேள்வி அவளுடைய நாட்களை பதட்டத்துடன் நகர்த்தியது.

ஆனால் டேவ் அவள்மீது நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பை வைத்திருந்தார். எதையும் எதிர்பார்க்காத அன்பு அது. 1999ம் ஆண்டு டேவ் ரோசியைத் திருமணம் செய்தார். ரோசியின் மனம் நெகிழ்ந்தது. ரோசிக்கு ஒரு மனநலம் பாதித்த சகோதரன் உண்டு என்பதும், அவருடைய தந்தை நோயாளி என்பதும் டேவின் காதலைக் குறைக்கவில்லை.

கால்கள் இல்லாத ஒரு பெண் குழந்தை பெற முடியுமா எனும் மருத்துவ சிக்கல்களையும் மீறி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் ரோஸ். அவருடைய கணவர் இன்றும் அமெரிக்காவின் கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும் போது, தவறாமல் அவரை அழைத்துச் செல்கிறார். மனைவியை முதுகில் சுமந்து சுற்றி வருகிறார். பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடுகிறார். அந்தப் பூங்காவின் மரங்கள் கூட அந்த அன்பின் செயல்களில் புன்னகை பூக்கின்றன ! 

நிபந்தனைகளற்ற அன்பு மிகவும் கடினமானது. அது எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் முளைக்கும். அப்படிப்பட்ட அன்பு நிலவுகின்ற குடும்ப வாழ்க்கை மிகவும் அற்புதமானது.

அத்தகைய அன்பு மிகவும் அபூர்வமாகிவிட்டது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பெரும்பாலானவர்களின் அன்பு நிர்ணயிக்கப் படுகிறது. “பணம் கிடைத்தால் பாசம். பணம் இல்லாத இடத்தில் அன்பாவது, நட்பாவது” என்பதே பலருடைய சிந்தனையாக இருக்கிறது.

நிபந்தனையற்ற அன்பின் உதாரணமாய் தாயன்பைச் சொல்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க அப்படிச் சொல்லமுடியுமா என்பதை ‘உசிலம்பட்டி” நிகழ்வுகள் சந்தேகிக்க வைக்கின்றன. 

“ஆம்பள பிள்ளைன்னா வரவு, பொம்பள புள்ளைன்னா செலவு”  என கிராமத்தில் பேசுவதுண்டு. ஒரு குழந்தை பிறந்தால் ஆணா பொண்ணா என்று கேட்பதற்குப் பதிலாக “வரவா, செலவா ?” என்று கேட்பார்கள். ஆண் குழந்தையெனில் ரொம்ப சந்தோசம் என்பார்கள். பெண் குழந்தையெனில் “ஆணோ, பெண்ணோ ஆயுசோட இருக்கட்டும்” என ஒரு மழுப்பல் வாழ்த்துடன் நகர்ந்து விடுவார்கள்.

ஒரு தாய்க்கு தொடர்ந்து பெண்குழந்தைகள் பிறந்தால் அவளுக்கு அவமானப் பேச்சுகள் கணக்கில்லாமல் வரும். “நாலாவது பொம்பளைன்னா நடைக்கல்லையும் பேக்கும்” என்றெல்லாம் கிழவிகள் துக்கம் விசாரிப்பார்கள்.

“எதிர்காலத்தில் தங்களுக்குச் சாப்பாடு போட வேண்டும்” எனும் எதிர்பார்ப்புடன் குழந்தைகளைப் பெற்று வளர்த்துவது கூட ஒருவகையில் எதிர்பார்ப்புடைய அன்பே ! 

எந்தக் குழந்தையாய் இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி என அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பின் உதாரணங்கள்.

என்ன தான் தப்புகள் செய்தாலும் மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தும் கடவுள் நிபந்தனையற்ற அன்பின் நிரந்தர உதாரணம் !

“நீ இதைச் செய்தால், உன்னை அன்பு செய்வேன்” எனும் அன்பும் நட்பும் உண்மையில் எதிர்பார்ப்புகளின் பாதையில் தான் நடை போடுகின்றன.

தனது குழந்தை மனநலம் பாதித்தவனாய் பிறந்தான் என்பதற்காக நடு வீதியில் விட்டுச் சென்ற பெற்றோரின் கதைகள் உண்டு. அமெரிக்காவில் ஒரு தந்தை தனது குழந்தையை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று அங்கேயே விட்டு விட்டு வந்த நிகழ்வு பத்திரிகைகளில் அதிர்ச்சியாய் அலசப்பட்டன.

கேரளாவின் சமீபத்தில் ஒரு நிகழ்வு. மகன் வெளிநாட்டில் இருக்கிறான். அன்னை கேரளாவில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருவதாய் சொல்கிறான் மகன். அன்னையின் உள்ளம் குதிக்கிறது. ஆனந்தக் கூத்தாடினாள் தாய். ஊருக்கு வந்த மகன் அன்னையையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாய்க் கூற அவளுடைய ஆனந்தம் இரண்டு மடங்காகிவிட்டது.

மகன் வந்தான். மகிழ்வின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள் அன்னை. அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அன்னை எதையும் பாக்கி வைக்காமல் எல்லா சொத்துகளையும் விற்று மகனிடம் கொடுத்தாள். 

அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் சென்றான் மகன். அங்கே ஒரு இருக்கையில் அம்மாவை அமர வைத்து விட்டு எங்கோ சென்றான். பின் அவன் திரும்பி வரவேயில்லை.

விசாரித்தபோது தான் தெரிந்தது. அம்மாவின் சொத்துகளைப் பிடுங்க மகன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். தாயை அங்கேயே விட்டு விட்டு விமானம் ஏறி அவன் சென்றது பல மணி நேரங்களுக்குப் பின்பு தான் தெரியவந்தது. அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பது கூட அறியாத ஒரு அப்பாவி அம்மாவை விமான நிலையத்தில் குப்பையைப் போல வீசிவிட்டுச் சென்ற மகன் அன்பு வற்றிப் போன மனதின் உதாரணம்.

நிபந்தனையற்ற அன்பு நிலவும் இடங்கள், பூமியின் சுவர்க்கங்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்காக உங்கள் மனதையும், செயல்களையும் பக்குவப் படுத்தினால் விண்ணகம் மண்ணகத்தில் வந்தமரும்.

நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயல் உங்களை எப்படி பாதிக்கும் என்பதை மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். அந்தச் செயலில் ஏதோ எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறதா என்பதை அலசுங்கள். 

“அவனுக்கு நான் எவ்வளவோ செய்திருக்கேன், அவன் எனக்காக ஒரு நயா பைசா செலவு செஞ்சிருப்பானா ?” எனும் உள் மன புலம்பல்கள் இருந்தால் உங்கள் அன்பு எதிர்பார்ப்புடன் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதையும் பதிலுக்குத் தர இயலாத மனிதர்களிடம் அன்பு செலுத்தும் போது அந்த அன்பு வலிமையாகிறது. அப்போதும் “நான் ரொம்ப நல்லவாக்கும் எனும் சிந்தனையைத் தலையில் தூக்கி விடாதீர்கள் !”. 

நிபந்தனையற்ற அன்பு என்பது உங்கள் குழந்தைக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தருவதல்ல. அல்லது தோல்வி என்றால் என்ன என்பதையே அறியாதபடி அவனை வளர்த்துவதுமல்ல. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும், அரவணைப்பதும், தண்டிப்பதும் பெற்றோரின் கடமை. அதே நேரத்தில் “இப்படி இருந்தால் தான் நீ அன்பு செய்யப்படுவாய்” எனும் பிம்பத்தையும் உருவாக்காதீர்கள். அது ஒரு தப்பான முன்னுதாரணத்தைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும்.

 “இப்படித் தான் இருக்க வேண்டும்” எனும் எதிர்பார்ப்புடன் ஒரு நபரை அணுகும் போது நமது செயல்களும் ஒரு அட்டவணைக்குள் விழுந்து விடுகின்றன. ஒவ்வொருவரையும் அவருடைய இயல்போடே அணுகுவது தான் இயல்பான அன்புக்கு உத்தரவாதம் தரும். 

ஒவ்வொரு சூழலிலும் “இந்த நபருக்கு என்னால் செய்ய முடிந்த அதிக பட்ச அன்பான செயல் என்ன ?” என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் விளைவுகளோ, பலன்களோ உங்கள் மனதில் எழாமல் இருக்கட்டும். அப்போது உங்கள் அன்பு புனிதமடையும்.

நிபந்தனையற்ற அன்பு உங்களுக்குத் தெரிந்த நபர்கள் எனும் எல்லைக்கு வெளியே உங்களை அழைத்துச் செல்லும். ஏதோ ஒரு வழிப்போக்கருக்கோ, ஏதோ ஒரு ஆதரவு இல்லத்துக்கோ நீங்கள் கொடுக்கும் அன்பு பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். 

“உள்ளங்கையில் இருக்கும் தண்ணீரைப் போன்றது அன்பு. விரிந்த நிலையில் உங்கள் கை இருக்கும் வரை தண்ணீர் கையிலேயே தங்கும். அதைப் பொத்திக் கொள்ள ஆசைப்பட்டால், விரல்களுக்கிடையே வழிந்து வெளியேறும்.” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சட்டங்களுக்குள்ளும், விதிமுறைகளுக்குள்ளும் நிலவும் அன்பு நிச்சயமாக நிபந்தனையற்ற அன்பல்ல. அது ஒரு கணித சூத்திரம் போல. சரியான மதிப்புகளைப் போட்டால் விடை கிடைக்கும். நிபந்தனையற்ற அன்பு என்பது அப்படியல்ல. அது நல்லோர் மேலும் தீயோர் மேலும் பெய்யெனப் பெய்யும் மழையைப் போன்றது !  

நிபந்தனையற்ற அன்பு வழங்க மிக மிக முக்கியமான தேவை ஈகோவை விரட்டுதல். ஈகோ நிலவும் இடத்தில் அன்பின் காற்று மூச்சுத் திணறும். ஈகோவை விரட்டிப் பாருங்கள் இதமான அன்பு எதிர்பார்ப்பின்று உலவத் துவங்கும்.

ஈகோவுடன் சேர்ந்து கர்வத்தையும் கூட கழற்றி வைத்தீர்களெனில் எதிர்பார்ப்புகளற்ற அன்பு மிக எளிதாய் உங்களுக்குக் கைவரும்.

ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். மனைவிக்கு நோய். யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அல்சீமர் எனும் நோய். தாத்தா தினமும் காலையில் வருவார். மனைவியுடன் அமர்ந்து காலை உணவு அருந்துவார். நிறைய பேசுவார். மனைவியுடன் நிறைய நேரம் செலவிடுவார். ஆனால் அவர் யார் என்பதே மனைவிக்குத் தெரியாது. காரணம் அல்சீமர் நோய் !

எத்தனை மழையாய் இருந்தாலும், எத்தனை வெயிலாய் இருந்தாலும் என்ன பிரச்சினை வந்தாலும் மனைவியைப் பார்க்க அவர் வராமல் இருந்ததே இல்லை !

தினமும் இதைக் கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் கேட்டார். “இந்த தள்ளாத வயசுல நீங்க வரணுமா ? நீங்க யாருன்னே உங்க மனைவிக்குத் தெரியாதே ?”

அவர் சொன்னார் “அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவளைத் தெரியும். அவளை அன்பு செய்யாமல் என்னால் இருக்க முடியாது !”

டாக்டரின் கண்களின் கண்ணீர். நிபந்தனையற்ற அன்பு இப்படி இருக்க வேண்டும். எதையுமே எதிர்பார்க்காமல் உள்ளிருந்து ஊற்றாய் பெருகும் அன்பு. 

அன்பு கிடைக்குமிடத்தில் அன்பு செய்வது சாதாரண அன்பு ! அன்பு கிடைக்காத இடத்திலும் அன்பு செய்வது புனிதமான அன்பு !! வெறுப்பைத் தருபவர்களைக் கூட அன்பு செய்வது தெய்வீகமான அன்பு !

நிபந்தனையின்றி அன்பு செய்

அன்பினாலே அவனி செய் !

தன்னம்பிக்கை : இந்தத் தடைகளைத் தாண்டுங்கள் !

இந்தத் தடைகளைத் தாண்டுங்கள் !

Image result for internet addiction

நதியைக் கவனித்திருக்கிறீர்களா ? சமதளத்தில் மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும். பாறைகளின் இடையே ஓடும் போது சலசலவென தாவி ஓடும். அருவியில் வருகையில் உடைந்து வீழும். ஆனால் விழுந்த இடத்திலேயே காலொடிந்து கிடப்பதில்லை. ஆக்ரோஷம் கூட்டி இன்னும் அதிக வேகமாய் ஓடும் ! 

தடைகள் இல்லாத பயணமே கிடையாது. தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். ஐயையோ தடை வந்துவிட்டதே என உடைந்து போய் உட்கார்ந்தால் வெற்றி கிடைக்காது ! தடைகள் வரும்போது, வேகம் குறையலாம், அல்லது தாமதம் நேரலாம். ஆனால் முறியடித்து முன்னேறுவதில் தான் சாதனைகள் அடங்கியிருக்கின்றன !  

இன்றைய இளைஞர்களின் முன்னே நிற்கும் முக்கியமான சிக்கல்களாக இவற்றைச் சொல்லலாம். 

போதை ! இன்று, நேற்றல்ல, எப்போதுமே ஒரு இளைஞனின் வெற்றியை வெட்டிப் போட போதைப் பழக்கம் மட்டுமே போதும். நிகோடினை நுரையீரலுக்கு நேரடியாய் இறக்கி வைக்கும் புகை அதில் முக்கியமான ஒன்று ! பள்ளிக்கூடப் படி தாண்டும் முன்பே பலருக்கும் புகை பழகிவிடுகிறது !  

உலகில் எங்கே என்ன தடை செய்யப்பட்டாலும் அது நம்ம ஊரில் கிடைக்கிறது. இன்றைக்கு இளைஞர்களுக்கு போதை வஸ்துகள் எப்படி கிடைக்கின்றன என இங்கிலாட்ந்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். “நெட்ல எல்லா மேட்டரும் இருக்குஎன 64% இளைஞர்கள் பதில் சொன்னார்கள் !

தீபாவளி போன்ற விழா நாட்களில் டாஸ்மாக் விற்பனை மிரள வைக்கிறதா இல்லையா ?. போதைப் பொருட்களால் உடலுக்கு தீமை என 91% இளைஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் அதை விட்டு விலகுவதில்லை.

புற்று நோய், மன அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு என வரிசையாய் அத்தனை நோய்களையும் தந்து செல்லும் போதையைத் தாண்டுவது இளைஞர்கள் செய்ய வேண்டிய முதல் தடை தாண்டல் !

இணைய அடிமைத்தனம் ! உங்களுக்கு ஒரு அடிமை இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்வான். மாடியிலிருந்து குதிக்கச் சொன்னால் கூட குதிப்பான். எஜமானனை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான். அவனுக்கு எல்லாமே எஜமானன் தான்.

இப்போது இணைய அடிமைத்தனத்துக்கு வருவோம். சிலருக்கு எல்லாமே இணையம் தான். குறிப்பாக இணையத்தில் பாலியல் சார்ந்த கிளர்ச்சிகளைத் தேடி அலையும் இளைஞர்கள் அந்த வலைக்கு முழு அடிமையாகி விடுகிறார்கள். போதைக்கு அடிமையாவது போல இணையத்துக்கு அடிமையாவதும் ஒரு மிகப்பெரிய பலவீனமே !

இணைய அடிமைகள் அடிமையாகும் இடங்கள் என்னென்ன தெரியுமா ? பாலியல், விளையாட்டு, சமூக வலைத்தளம், வலைப்பூக்கள், மின்னஞ்சல், சேட்டிங், ஷாப்பிங் இவையெல்லாம் தான் !

மருத்துவம் இதை இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர் ( IAD ) என்கிறது. இணையம் எனும் அற்புதமான ஊடகம் சரியாகப் பயன்படுத்தினால் பாற்கடல். அதற்கு அடிமையாகிவிட்டாலோ அதுவே விஷமாகி மாறிவிடும் விஷயம் அது !

இளைஞர்கள் இன்றைக்குத் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இந்த இணைய அடிமைத்தனம்

வன்முறை சிந்தனை ! வீரத்தையும், சண்டித்தனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் இளைஞர்களிடம் தேவையற்ற வன்முறை சிந்தனை மேலோங்கி இருக்கிறது.  

ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மட்டும் தான் பள்ளி, கல்லூரிகளில் வன்முறை வெறியாட்டம் நடக்கும். இன்று நமது தெருக்களிலும் நடக்கின்றன. அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் மட்டும் 147. மொத்த எண்ணிக்கை 359 என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஆசிரியையை கத்தியால் குத்திக் கொல்கிறான் மாணவன், ஆசிரியர் அடித்ததால் மாணவனுடைய கை செயலிழந்து விட்டதாய் வேளச்சேரி வீதிப் போராட்டம் நடத்துகிறது. ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காது கேட்கவில்லை என இன்னோர் மாநிலத்தில் குரல் எழுகிறது.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் செய்த நிகழ்வு நெகிழ வைத்தது. 50 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் ஆசிரியர்களையெல்லாம் வரிசையாய் நிற்க வைத்து அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள். பழைய ஆசிரியர்மாணவர் உறவு இப்படி இருந்தது. ஆசிரியர்களிடம் மாணவர்களை பெற்றோர் முழுமையாய் ஒப்படைத்தார்கள். ஆசிரியர்களை தெய்வங்களாய் மதிக்குமளவுக்கு அவர்களுடைய வழிகாட்டல் இருந்தது.

இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆசிரியர்களை பாடங்கள் சொல்லித் தரும் பணியாளர்களாய் தான் பெற்றோர் பார்க்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்களும் இதை  மாத ஊதியம் தரும் ஒரு வேலையாகத் தான் பார்க்கிறார்கள். மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணங்கள் பெருக நல்வழிப்படுத்தாத ஆசிரியர்கள் ஒரு காரணம். ஆசிரியர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்காத பெற்றோர் இன்னொரு காரணம்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், போன்றவை வன்முறையையும், அதன் நுணுக்கங்களையும் சொல்லித் தந்து விடுகின்றன. தார்மீகக் கோபம் கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது இளைஞனின் பணி. மற்றபடி தேவையற்ற வன்முறை சிந்தனை இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை !

உடல் நலம் பேணாமை ! மேலைநாட்டு பிரச்சினையாய் இருந்தஒபிசிடிஎனும் அதிக உடல் பருமன் இன்றைக்கு வீட்டுக்கு வீடு ! காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை ! 

பழைய வாழ்க்கை இளைஞர்களை நடக்க வைத்தது. அவர்கள் உடல் உழைப்பை செலுத்தினார்கள். ஓய்வு நேரத்தில் நீச்சலடித்தார்கள், ஓடியாடி விளையாடினார்கள். உடல் கட்டுக் கோப்பாய் இருந்தது. 

இன்றைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கே காரோ, பைக்கோ தேவைப்படுகிறது. முதலாவது மாடிக்கு மூச்சிரைக்காமல் போக லிஃப்ட் தேவைப்படுகிறது. ஓய்வு நேரத்தில் ஆடாமல் அசையாமல் தொலைக்காட்சி ! இன்னும் நேரம் கிடைத்தால் வீடியோ கேம், அல்லது இன்டர்நெட்.

இப்படி, உடலானது பராமரிப்பில்லாத ஒரு கூடாரம் போல சிதிலமடைந்துக் கிடக்கிறது. பல இளைஞர்கள் பெயரளவில் இளைஞர்கள், உடலளவில் முதியவர்கள் என்பது தான் உண்மை ! இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இது !

நாகரீகமின்மை ! மருத்துவ மனை வாசலில் டாக்டருக்காய் கவலையுடன் காத்திருக்கும் இடைவெளியில் ஒலிக்கிறது ஒரு இளைஞனின் தொலைபேசி. “ஒய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி..”. மருத்துவமனையில் பல்வேறு கவலைகளுடனும், துயரங்களுடனும் காத்திருக்கும் மக்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது அது ! இளைஞனோ எதையும் கண்டு கொள்ளவில்லை, ஆமை வேகத்தில் தொலை பேசுகிறான் ! 

மருத்துவமனை, நூலகம், தொழுகை கூடங்கள் இவற்றிலெல்லாம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்பது அடிப்படை நாகரீகம் ! 

பொது இடத்தில் அமைதியைக் கடை பிடிப்பது. பண்புடன் நடந்து கொள்வது. பெரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது. சமூகக் கடமையோடு இருப்பது என இளைஞர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க….” எனும் குற்றச்சாட்டைத் தாண்ட ஒரு  கட்டாயத் தாவல் அவசியம். 

தவறான முன்னுதாரணங்கள் !ஒரு முன்னுதாரணத்தைப் போல நம்மைப் பாதிப்பது எதுவும் இல்லைஎன்கிறார் ஃபிரஞ்ச் மேதை பிரான்கோயிஸ்.  

பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருவை முன்னுதாரணமாய்க் கொண்டு அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார்கள் நமது தமிழ் இளைஞர்கள். இன்றைக்கு அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் திரை வசீகரங்களோ, விளையாட்டு வீரர்களோ, அல்லது பணக்கார தலைவர்களோ தான். 

அதிலென்ன தப்பு என்று கேட்பவர்கள் உண்டு. வெற்றியாளர்களின் வாழ்க்கையை அலசி, நல்ல அம்சங்களை எடுத்தால் பாராட்டலாம். ஆனால் பெரும்பாலும் நாம் அவர்களுடைய புகழ் பாடும் சுவரொட்டிகளாக மாறி விடுகிறோம்.

ஒரு நல்ல முன்னுதாரணத்தையும், ஒரு நல்ல வழிகாட்டியையும் கொண்டிருப்பது வெற்றிக் கதவை தொட்டுத் திறக்க அவசியத் தேவை !

தவறான முன்னுதாரணங்களைத் தாண்டி ஓட வேண்டியது இளைஞர்கள் செய்ய வேண்டிய அடுத்த தாவல் !

உறவுகளோடான சிக்கல்கள் :பிரண்ட் என் கூட பேச மாட்டேங்கறாநான் தற்கொலை செய்து கொள்கிறேன்என்று எழுதி வைத்து விட்டு பதின் வயது மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள். “விடுதியில் மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள்என்று சொல்லி விடுதி மாணவன் தூக்கில் தொங்குகிறான். காதலி மறுத்தாள் என அவள் வீட்டு முன்னால் உயிரை மாய்க்கிறான் காதலன்.

இளைஞர்கள் உறவு ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்களோ என அச்சமாக இருக்கிறது. தனது சாவின் மூலம் இன்னொருவருக்குப் பாடம் புகட்ட நினைக்கும் தவறான மனநிலை இது. நண்பனுக்கு இன்னோர் நண்பன் கிடைப்பான், தோழிக்கு இன்னோர் தோழி, காதலிக்கு இன்னோர் காதலன். இழப்பு என்னவோ இறந்தவனுக்கு மட்டுமே ! இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று விஷயங்கள் முக்கியத் தேவை. விமர்சனங்களில் உடைந்து போய்விடாத மனம். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு கொள்ளாத மனம். இணைந்து வாழும் ஆனந்த மனம். அவ்வளவு தான். இணைந்து வாழும் இளைஞர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறது உளவியல் ! 

உறவுச் சிக்கல்கள், இளைஞர்கள் தாண்டவேண்டிய இன்னொரு தடைக்கல்.

மனம் சார்ந்த சிக்கல்கள்:  இளைஞர்களுடைய மன அழுத்தம் பெரும்பாலும் அடுத்தவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மார்க் வாங்காவிட்டால் ஏதோ சாவான பாவம் செய்தது போல பிள்ளைகளைப் பார்க்கும் பெற்றோர் உண்டு. விருப்பமில்லாத படிப்புக்காய் தலையணை புத்தகங்களுடன் மன அழுத்தத்தைச் சுமக்கும் மாணவர்கள் உண்டு. 

போதாக்குறைக்கு சினிமா, விளம்பரங்கள், ஊடகங்கள் போன்றவை ஏகப்பட்ட நிர்ப்பந்தங்கள் இடுகின்றன. “உங்கள் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்”, “இந்த வீடு தான் வேண்டும், இந்தக் கார் தான் வேண்டும், இந்த சுற்றுலா வேண்டும்என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லும் விதிமுறைகள் இளைஞர்களை மன அழுத்தத்தில் தள்ளுவதுண்டு.

தன்னை அறிந்து, தன் ஆழ்மன விருப்பத்துக்கேற்ற ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொள்வதும், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என புரிந்து கொள்வதுமே இளைஞர்களின் தேவை.

மன அழுத்தத்தையும் இளைஞர்கள் தாண்டி விட்டால் அவர்கள் வெற்றியின் முற்றத்தை எட்டி விட்டார்கள் என்பதே பொருள்.

துருவான மனதைத் துலக்கு

வெற்றி மட்டுமே இலக்கு

தன்னம்பிக்கை : பொழுதுபோக்கும், பொழுதை ஆக்கும் !

பொழுதுபோக்கும், பொழுதை ஆக்கும் !

Image result for hobby

ப்படா ஸ்கூல் மணி அடிக்கும் ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா ?. அதன் பின் படிப்பு வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விஷயம் தான் பொழுது போக்கு. ஆங்கிலத்தில் சொன்னால் ஹாபி !

பொழுது போக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ, “அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்வேலையைப் பாக்கவே டைம் இல்லைஎன சலித்துக் கொள்வார்கள். ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம். 

ஹாபி என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே. நமது அலுவலக வேலை நமது பொருளாதாரத் தேவைக்கான ஓட்டம். பொழுது போக்கு, நாம் இழந்த விருப்பங்களுக்கான ஓட்டம். !

இதுல என்னய்யா இருக்கு..”  என சலிப்படைபவர்கள் ஒரு தனி ரகம். அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பொருளாதார ஸ்கேல் கொண்டு அளப்பவர்கள். வாழ்க்கை அதைத் தாண்டியும் உள்ளது. உற்சாகம், இனிமை, ஆனந்தம், நேர் சிந்தனை எல்லாவற்றின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை.

நமக்கு என்ன பிடிக்குமோ, அதுவே தான் வேலையாகவும் இருந்தால் ஹாபியே தேவையில்லை. ஆனால் நமக்கு அப்படியா அமைகிறது ? கவிதை எழுத ஆர்வம் உடையவர் வக்கீல் வேலையில் இருப்பார். அவருக்கு கேஸ் கட்டுகளுடன் குடும்பம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும். இதுல கவிதைக் கட்டுக்கு எங்கே போறது ?

நடனம் ஆட வேண்டும் எனும் ஆர்வமுடையவர் மென்பொருள் துறையில் இருப்பார். மேலதிகாரியின் கட்டளைகளுக்கு ஆட்டம் போட்டுப் போட்டே அவருடைய பொழுதுகளெல்லாம் அழிந்து போய்விடும். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர் பொட்டலம் கட்டிக் கொண்டு பொட்டிக் கடையில்  நிற்பார். இப்படி பெரும்பாலும் நமக்கு அமையும் வேலை நம் மனதுக்குப் பிடித்ததாக அமைவதில்லை.

வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு !. “ஊர்ல விவசாயம் பண்றது தான் எனக்கு புடிக்கும்என பிடிவாதமாய் வாழும் மனிதர்கள் உண்டு. ஹாரி பாட்டர் நாவல் புகழ் ஜே.கே ரௌலிங் எழுத்து மீது சின்ன வயதிலேயே அதீத காதல் உடையவர். அவருக்கு இப்போது எழுத்தே வாழ்க்கையாகி விட்டது. வெகு சிலருக்கே இப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறது !

சரி, வேலை தான் இப்படி ஆயிடுச்சு, அதுக்காக நம்மோட விருப்பங்களையெல்லாம் விட்டுடணுமா என்ன ? முழு நேரமும் அதையே செய்றதுக்குப் பதிலா, நமக்குக் கிடைக்கும் நேரத்துல அதைச் செய்யலாமே ! அதன் மூலம் நமது விருப்பமும் நிறைவேறும், நமது மனமும் ரிலாக்ஸ் ஆகும் ! அது தான் பொழுதுபோக்கின் அடிப்படை !

இன்றைக்கு வாழ்க்கையில் எல்லாமே அவசரம். இதனால் அலுவல் வேலை நேரமும் சகட்டு மேனிக்கு உயர்ந்து விட்டது. அதிலும் குறிப்பாக மென்பொருள் போன்ற துறையில் வேலை பார்ப்பவர்கள் இராத்திரி பகல் என உழைக்க வேண்டிய கட்டாயம். இதனால் பலரும் மன அழுத்தம் எனும் கொடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  

மன அழுத்தத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் ஏதேனும் ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். பட்டியல் போட்டு அதன் பிரச்சினைகளைச் சொல்வார்கள். மன அழுத்தம் மனதைப் பாதித்து, மனதின் நிம்மதியைக் குலைத்து, அமைதியைச் சிதைத்து ஏகப்பட்ட டென்ஷனைத் தரும். அந்த மன மாறுதல்கள் அப்படியே உடலுக்கும் பரவி ஏகப்பட்ட நோய்களையும் தந்து செல்லும்.  

மன அழுத்தத்தை விரட்ட ஒரு எளிய வழி நல்லதொரு ஹாபியை கொண்டிருப்பது தான் என்கின்றனர் மருத்துவர்கள். பொழுது போக்கிற்காய் செலவிடும் கொஞ்சம் நேரமே போதுமாம் வேலை அழுத்தத்தைக் குறைத்து, மனதைச் சமநிலைப்படுத்த !  

மடோனா தனது மன அழுத்தத்தைக் குறைக்க எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பிறகு அந்த ஹாபியில் அவருடைய ஈடுபாடு அதிகமாக்கிப் போய் விட்டது. குழந்தைகளுக்கான பல புத்தகங்களை அவர் பிற்காலத்தில் வெளியிட்டார் என்பது சுவாரஸ்யத் தகவல் !

பொழுது போக்கில் ரொம்ப ஆர்வமாய் ஈடுபடும் பலர் பிற்காலத்தில் அதையே முதன்மைத் தொழிலாக ஆக்கிக் கொள்வதுண்டு. இல்லாவிட்டால் அதன் மூலம் தங்கள் வேலையை வெற்றிகரமாய் மாற்றுவதும் உண்டு.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல் பெர்க் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜுராசிக் பார்க் இயக்குனர்.. அவருடைய ஹாபி ஏலியன்ஸ் அதாவது வேற்றுக்கிரக வாசிகளைப் பற்றி தேடித் தேடி வாசிப்பது. அந்தப் பொழுது போக்கு அவருக்கு ரொம்பவே கை கொடுத்தது. ஏலியன் படங்களை எடுத்து உலகப் புகழையும் பெற்றார். .டி எனும் மாபெரும் வெற்றிப் படத்தை மறக்க முடியுமா என்ன ?

பணிகள் பெரும்பாலும் நமக்கு வெளியேயான விஷயங்களைத் தேடி ஓடுவதில் தான் இருக்கும். படிப்பு, வேலை, குழந்தைகள், பெற்றோர் இப்படி ! பொழுது போக்கு நம்மையே நாம் தேடிக் கொள்ளும் விஷயம். நம்மைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி, நமது இயல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் இடம் இது.

எதையேனும் செய்து முடிக்கும் போது, “அட ! நானா இதைச் செஞ்சேன்என மனதை வருடும் இதமான ஒரு உணர்வு நமது உற்சாக நரம்புகளையெல்லாம் மீட்டி விடும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்பட அது ஊக்கம் தரும். நமக்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்காத வாழ்க்கை நமக்கான வாழ்க்கையா ? !  

பலருக்கும் ஹாபி என்பது வேலையாகிப் போய், பின்னர் வாழ்க்கையே அதுவாகிப் போவதுண்டு. குறிப்பாக சமையல் கலையில் ஆர்வம் உடைய பலர் பிற்காலத்தில் மிகப்பெரிய உணவகங்கள் அமைத்திருக்கிறார்கள். பொம்மைகள் செய்வதில் ஆர்வமுடையவர்கள் பெரிய பிஸினஸ் தலைகள் ஆகியிருக்கிறார்கள்.  

ஏன் ? ஃபேஸ் புக்கை வடிவமைத்த மார்க் ஷுக்கர்பெர்க் கூட அதை பொழுதுபோக்காகத் தான் ஆரம்பித்தார். மென்பொருள் புரோக்ராமிங் செய்வது அவருடைய பொழுது போக்கு. அவர் உருவாக்கியஷக்நெட்எனும்சேட்டிங்மென்பொருள் உண்மையில் இன்றைய பிரபல சேட்டிங் மென்பொருள்களின் முன்னோடி. கல்லூரிக்கான ஒரு சின்ன இணையதளமாக அவர் உருவாக்கிய ஃபேஸ் புக் இன்று 80 கோடி பேர் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ! உலகின் மிக இளம் வயதுக் கோடீஸ்வரரான இவருக்கு வயது வெறும் 27 தான் ! சொத்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்கள் ! இப்போது சொல்லுங்கள் ஹாபி நல்லதா கெட்டதா ?

பொழுது போக்கையெல்லாம் வயசானப்புறம் பாத்துக்கலாம்பா என பலர் நினைப்பதுண்டு. ஆனால் சிறு வயதிலேயே ஒரு நல்ல ஹாபியை உருவாக்கினால் தான் அது முதிய வயதில் கை கொடுக்கும். கதை எழுதுவது உங்கள் ஹாபி என வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வயதிலேயே அந்த கலையை ஆர்வமாய் தொடர்ந்தால் முதுமையில் அட்டகாசமாய் எழுதித் தள்ளலாம்.  

இன்னும் சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலேயே ஒரு பிடித்தமான ஹாபி கைவரப் பெற்றால் அந்த ஹாபி காலம் முழுதும் பயனளிக்கும். எனவே தான், ஒரு நல்ல பொழுது போக்கைப் பிடித்துக் கொள்ள குழந்தைகளை உற்சாகமூட்டுவது தேவையாகிறது.

உங்க பொழுது போக்கு என்ன ?” ன்னு கேட்டா நிறைய பேர், டிவி பாக்கறது, நண்பர்களோட சுத்தறதுஎன அடுக்குவார்கள். பொழுது போக்கு உங்களுடைய சொந்த திறமை விருப்பம் சார்ந்து இருப்பது தான் எப்போதுமே நல்லது. சினிமா தான் உங்க பொழுது போக்கு என்றால், அந்த பொழுதுபோக்குக்காய் சினிமா எனும் ஒரு விஷயத்தை நீங்கள் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது இல்லையா ?

பொழுது போக்கு நட்பையும், உறவையும் வளர்க்கும் ! . ஒரு பொழுது போக்கு இருந்தால், அதே போன்ற பொழுது போக்குடைய பலருடன் நட்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இணையம் அந்த வசதியை மிக எளிமையாக்கியிருக்கிறது. 

எழுதும் விருப்பம் உடையவர்களுக்கு இலவசமாய் கிடைக்கின்றன பிளாக் எனப்படும் வலைப்பூக்கள். பாட விருப்பம் உடையவர்களுக்கும், ஆல்பம் தயாரிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கும் யூடியூப் போன்ற வலைத்தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. ஓவியம், சமையல் போன்ற கலைகள் பிடித்திருந்தால் ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் குழுக்கள் வைத்து உங்களை ஊக்கமூட்டுகின்றன. இங்கெல்லாம் ஒத்த சிந்தனையுடைய நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வெளி நபர் அறிமுகம் கிடைப்பது இருக்கட்டும், பல வேளைகளில் நமது குடும்பத்திலுள்ள நபர்களோடு இணைந்து நேரம் செலவிடவும், இனிமையாய் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கவும் கூட நமது ஹாபி கைகொடுக்கும். உதாரணமாய் தோட்ட வேலை, சமையல் போன்றவை கூட்டாய் கும்மாளமடிக்க ஏற்ற பொழுது போக்குகள் இல்லையா ?

பொழுதுபோக்கு மூளைக்கு ரொம்ப நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். பொழுது போக்கு மூளையின் ஆனந்த அணுக்களைத் தூண்டி உற்சாகமூட்டுகிறது. அதனால் உடலும், உள்ளமும் உற்சாகமடைகிறது. வேலையின் சோர்வைக் கழுவிக் களையும் சக்தி பொழுது போக்கிற்கு உண்டு.

நல்ல பொழுதுபோக்கு உங்கள் பொழுதுகளை ஆக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஒரு சேர உற்சாகம் தரும். வாழ்வை அர்த்தப்படுத்தும், ஆனந்தப்படுத்தும் ! அப்புறமென்ன ? ஒரு நல்ல பொழுது போக்கைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனந்தமாய் வாழுங்கள்.

மனதில் நிலவும் ஏக்கம்அதை

நீக்கும் பொழுது போக்கும்

தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பயன் !

ஆண்டு இறுதித் தேர்வு வந்தாலே போதும் பள்ளி மாணவர்களெல்லாம் எதோ கொள்ளி வாய்ப் பிசாசு கொல்லையில் காத்திருப்பது போல வெலவெலக்கத் துவங்குவார்கள். அரக்கப் பரக்க ஓடுவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும். 

பையனுக்கு எக்ஸாம் இருக்குல்ல..” என்று தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருப்பார்கள். அந்த பரபரப்பை அப்படியே பிள்ளைகளுடைய தலையிலும் ஏற்றி விடுவார்கள். ஒரு துரும்பைத் தூக்கி தூரமாய்ப் போடும் வேலையைக் கூட பிள்ளைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். “படி.. படிஎன்று பிள்ளைகளுடைய காதைச் சுற்றி பெற்றோரின் குரல் ஸ்டீரியோ சரவுண்ட் சிஸ்டம் போல ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அத்துடன் விட்டாலாவது பரவாயில்லை. மாமா பையன் மகேஷை விட நீ ஒரு மார்க்காவது அதிகம் வாங்கணும்டா. அத்தை பொண்ணு இலக்கியாவைக் காட்டிலும் அரை மார்க்காவது அதிகம் வாங்கணும்டி என தங்கள் பழி தீர்க்கும் படலத்துக்கு பிள்ளைகளை வைத்துக் காய் நகர்த்துவார்கள். 

கிளாஸ்ல நீ தான் ஃபஸ்ட்டா வரணும், ஸ்டேட் ரேங்க் வரணும், கணக்குல நூத்துக்கு நூறு வாங்கணும்இப்படி இந்த தேர்வுக் காலம் முழுவதும் மாணவர்களைச் சுற்றி எப்போதும் இல்லாத அழுத்தமான சூழல் உருவாகிவிடும். பெரும்பாலும் இத்தகைய அழுத்தங்களில் விழுந்துவிடும் மாணவர்கள் தங்கள் திறமையை விடக் குறைவான மார்க்கையே வாங்குவார்கள் என்கிறது உளவியல்.

கல்வி ரொம்ப முக்கியமானது. ஆனால் கல்வி என்பதை மார்க் ஷீட் தீர்மானிப்பதில்லை. முன்பெல்லாம் மாணவர்கள் குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு குருவைக் கண்டு பிடித்தால் அந்த குருவுடனே பல ஆண்டுகாலம் தங்கினார்கள். அங்கேயே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கல்வி கற்றார்கள். அப்போது கல்வி என்பது நல்லொழுக்கம், பணிவு எனும் இரண்டு படிகளைத் தாண்டியபிறகே கலைகள் கற்கும் நிலைக்கு வரும் !

ஒரு வருடம் கல்வி. அதன்பின் தேர்வு. தேர்வு முடித்ததும் புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு மூளையைக் கழுவிக் காயப் போடும்இன்றைய கல்வி முறை அன்றைக்கு இல்லை. வாழ்க்கைக்குக் கல்வி எனும் அடிப்படை விஷயத்தையே அன்றைய பாடம் போதித்தது !

கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகவானாக மாற்ற வேண்டும். சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குரிய நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டும் என்பதே பால பாடம். அந்தக் கல்வி அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டப் பயன்படுவது அடுத்த கட்டம்.

இந்த வரிசை மாறும் போது தான் சிக்கல் உருவாகிறது. கல்வி என்பது வேலைக்கான சாவி என்று இன்றைய மாணவர்கள் நினைக்கிறார்கள். சுரண்டிப் பார்த்து நம்பர் வந்தால் வெற்றி என கொண்டாடும் லாட்டரிச் சீட்டு போல சிலர் பார்க்கிறார்கள். அதனால் தான் மதிப்பெண் குறைந்து விட்டால் கற்ற கல்வியே பயனில்லாதது என கருதி விடுகிறார்கள். 

இந்த மார்க் எடுக்கவா உன்னை விழுந்து விழுந்து கவனிச்சேன் வெளங்காதவனேஎன வசவுகள் வருவதன் காரணமும் இது தான்.

இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. காரணம் இன்றைய சமூகம் அதை எதிர்பார்க்கிறது. ஆனால் அதையே வெற்றியின் எல்லைக் கோடாகக் கருதிவிட வேண்டாம் என்பதே நான் சொல்ல வரும் விஷயம்.

மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டும் எனும் ஆர்வம் ஆயிரம் பேருக்கு இருக்கலாம். ஓரிருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக மிச்சம் தொள்ளாயிரத்துத் தொன்னூற்றுச் சொச்சம் பேரும் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லையே ! எனவே வெற்றி என்பதை மதிப்பெண் கொண்டு அளக்காதீர்கள். உங்கள் குணாதிசயங்கள், இயல்புகள், அறிவு, தன்னம்பிக்கை இவற்றைக் கொண்டு அளக்க வேண்டும்.

தன்னம்பிக்கை உடைய இளைஞன் பள்ளியில் தோற்றால் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுவான். அவன் தன்னுடைய கல்வியின் மூலமாக பெற்ற மூலதனம் அவனுடைய தன்னம்பிக்கை ! காகிதத்தில் எழுதி வைத்த மதிப்பெண் அல்ல.

அறிவியல் மேதை ஐன்ஸ்டீனை உலகமே கொண்டாடுகிறது. காரணம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகள். ஆனால் அவர் படிப்பில் சுமார் தான் தெரியுமா ? ஐன்ஸ்டீனை உலகுக்கே தெரியும். அவருடைய காலத்தில் ஸ்டேட் ஃபஸ்ட் வாங்கிய மாணவன் பெயர் உங்களுக்குத் தெரியுமா ?

ஐசக் நியூட்டனைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அவரொன்றும் வகுப்பில் முதல் மாணவனாக வந்தவரல்ல. அவருடைய பள்ளியில் முதல் மாணவன் யார் என்பது யாருக்காவது தெரியுமா ? 

தாமஸ் ஆல்வா எடிசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர்முட்டாள்என்று பள்ளிக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் காலத்தில் படித்து முதல் மாணவனாக வந்து பதக்கம் குத்திக் கொண்டவர்களில் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம் !

வாழ்க்கை தான் ஒரு மனிதனுடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையை அவன் எப்படி அணுகுகிறான் என்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியடைந்தவனிடம் யாரும் போய்உனக்கு ஸ்கூல்ல என்ன மார்க் ?” என கேட்பதில்லை. வாழ்க்கையில் தோல்வியடைந்தவன், “நான் ஸ்கூல்ல கோல்ட் மெடலிஸ்ட்டாக்கும்என்று சொல்லிக் கொள்வதிலும் பயனில்லை ! போன வருஷம்  பதக்கம் வாங்கியவனைக் கூட யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை.  

கல்வி நமக்கு அறிவைத் தரவேண்டும். வாழ்க்கையில் நிகழ்கின்ற சிக்கல்களைப் பக்குவத்துடன் கையாளும் மனநிலையைத் தரவேண்டும். உலகமும் அதைத் தான் எதிர்பார்க்க்கிறது. அதனால் தான் படித்தவன் ஒருவன் தப்பு செய்யும் போது, “படிச்சவன் மாதிரியாய்யா நடந்துக்கறேஎனும் கோப வாக்கியங்கள் எழுகின்றன. 

கல்வியில் தோற்றதற்காகவோ, மதிப்பெண் குறைந்ததற்காகவோ ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுடைய கல்வியால் என்ன பயன் ? அவனுடைய கல்வி அவனுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் தரவில்லை ! வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைத் தரவில்லை. மொத்தத்தில் அவனை ஒரு கோழையாய் உருவாக்கியிருக்கிறது. 

கல்வி எப்போதும் முடிவதில்லை. கடைசிப் பரீட்சையுடன் அது முடிகிறது என்று கருதுவோர் அறிவிலிகள். கல்வி வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தரும். அந்த அனுபவப் பாடத்துக்கு வலிமை அதிகம்.

நீதிக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும் நமக்கு ஏன் கற்பிக்கிறார்கள் ? நமது குணாதிசயம் மனித மதிப்பீடுகளின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்பப் பட வேண்டும் என்பதற்காகத் தான். வாழ்வின் ஒவ்வோர் தருணத்திலும் சரியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சக மனித கரிசனையில் வாழவேண்டும் என்பதற்காகத் தான்.

இந்த சிந்தனைகளை மாணவர்கள் முதலில் மனதில் இருத்த வேண்டும். பெற்றோர் அதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதை மாணவர்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அப்போது தான் கல்வி தன் முழு பயனை அடையும்.

வளமான தேசத்தை கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்டு தான் எடை போடுவார்கள். அதிகம் கல்வியறிவு பெற்ற மக்கள் இருக்கும் தேசம் வளர்ச்சியான பாதையை நோக்கிச் செல்கிறது. கல்வியறிவில் பின் தங்கும் தேசம் தனது தோல்விகளை நோக்கிய பயணத்தையே தொடர்கிறது !

கல்வி நமது மூடநம்பிக்கைகளை அகற்றி அனைத்தையும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் அணுகும் மனநிலையைத் தரவேண்டும். கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்றாமல் அனைத்தையும் தெளிவான மனநிலையில் கேள்வி கேட்கும் அறிவையும் அது தரவேண்டும். அது மாணவர்களிடையே பொறாமையையும்,  வெறுப்பையும் வளர்க்கக் கூடாது. ஒருவரை விட இன்னொருவர் சிறந்தவர், உயர்ந்தவர், வல்லவர் எனும் சிந்தனைகளை உருவாக்கும் பணியைச் செய்யவே கூடாது. 

அதே போல கல்வி என்பது வெறுமனே வாசித்து விட்டு, அதைப் பிரதியெடுக்கும் ஜெராக்ஸ் வேலையைச் செய்யக் கூடாது. புரிந்து படிக்கும் நிலை உருவாக வேண்டும். கல்வி முறையின் மாற்றம் மாணவர்களை, தலைமைப் பண்புகள், குழுவாய் இணைந்து செயல்படும் தன்மை, நிர்வாகத் திறமை போன்றவற்றிலும் சிறந்தவர்களாக்க வேண்டும். என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாடங்கள் வசீகரிக்காதபோது மாணவர்கள் அதை அரவணப்பதில்லை. மாணவர்களுடைய விருப்பம் பெரும்பாலும் பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை. “நாளைக்கு நாலு பேரு மதிக்கணும்என்பது தான் பெற்றோருடைய தாரக மந்திரம். அதனால் தான் குழந்தைகள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற துறைகளை விட்டு விட்டு வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தால் பெற்றோர் குதிக்கிறார்கள்.

சமூகம் தன் பங்குக்கு மன அழுத்தங்களை இளைஞர்களின் மனதில் திணிக்கிறது. மாய பிம்பங்களையே மாணவர்கள் பெரும்பாலும் பார்க்கின்றனர். வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்களுக்கு பெற்றோரும் சமூகமும் கற்றுக் கொடுக்க வேண்டும்.  

சில வேளைகளில் அந்த அழுத்தம் சக மாணவர்களிடமிருந்தும் வருவதுண்டு. அத்தகைய நண்பர்களைவிட்டு விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்களும் மாணவர்களை விமர்சிக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தும் செயலையே முக்கியமாய்ச் செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை இத்தகைய செயல்பாடுகள் கழுவிக் கரைத்து விடும்.

கல்வி நமக்கு அறிவைத் தருகிறது. அத்துடன் நமக்கு நல்ல சிந்தனைகளும், உணர்வுகளும் இருக்கும் போதுதான் கற்ற கல்வி முழுமையடைகிறது. வெறுமனே அடைத்து வைக்கும் அறிவு, மூளையை ஒரு லைப்ரரி ஆக்கலாம். ஆனால் ஒரு முழுமையான மனிதனாக்க முடியாது. படித்தவர்கள் சமூக விரோதிகளாகவும், வங்கிக் கொள்ளையர்களாகவும், மக்களை ஏமாற்றும் மனிதர்களாகவும் மாறும் போது கல்வி கேலிக் கூத்தாகி விடுகிறது இல்லையா ?

எனவே நல்ல குணாதிசயங்களையும், தன்னம்பிக்கையையும் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கி வையுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ஆனந்தமான சாலைகளை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது. நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

தோல்வி என்பது மரணமல்ல. 

மரணம் என்பது தான் தோல்வி

தன்னம்பிக்கை : நேர்மை பழகு

எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லைநூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது.

எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை. நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் நெட்டோட்டம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம். அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம்.

சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை.

நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட பையைத் திருப்பித் தரும் ஆட்டோக்காரர் நம் கண்ணுக்கு வியப்பின் சின்னமாகத் தெரிகிறார் !

நேர்மையை விதைப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும். ஆனால் நேர்மையாய் இருப்பதும், உண்மையாய் இருப்பதும் எளிதா ? கேட்பதற்கு எளிமையாய் தோன்றினாலும் நிஜமான வாழ்க்கையில் மிகவும் கடினமான விஷயம் இது ! இதைப் பின்பற்ற வேண்டுமானால் உறுதியான மனம் ரொம்ப அவசியம்.

அன்றாட வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த மன உறுதியைக் காற்றில் பறக்க விட்டு விடுகிறோம். நம்மிடம் ஏதும் தப்பு இல்லை என்று சாதிப்பதற்காக சில வேளைகளில் உண்மையை மறைக்கிறோம்.

அடுத்தவர்களுடைய தோள்களில் பழியைச் சுமத்த பல வேளைகளில் நேர்மையை கைவிடுகிறோம். தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் எளிய வழி நேர்மையைக் கைவிடுவது தான் என பலவேளைகளில் முடிவுகட்டி விடுகிறோம்.

பிறருக்கு முன்னால் அவமானப்படக் கூடாதே என்பதற்காக சில வேளைகளில் பொய் முகமூடி போடுகிறோம்.

வறட்டுக் கவுரவம் கூட பல வேளைகளில் நம்மைக் குறித்தும், நமது பின்புலத்தைக் குறித்தும் அடுக்குப் பொய்களை வாரி இறைக்க காரணமாகிவிடுகிறது.

சிலருடன் கருத்து வேற்றுமை வரக் கூடாதே என்பதற்காக பொய்க்கு வக்காலத்து வாங்கி மௌனமாய் இருக்கிறோம்.

சிலவேளைகளில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட உண்மையை மறைக்கவும், நேர்மையை விலக்கவும் செய்கிறோம்.

இப்படி பல வேளைகளில் நம்முடைய மனதின் உறுதி கொஞ்சம் ஒளிந்து கொள்ள நேர்மையும் கூடவே காணாமல் போய் விடுகிறது. மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை பொருளாதாரமல்ல, மதிப்பீடுகளே. நல்ல மதிப்பீடுகளின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரம்.

எந்த ஏரியாவில் நீங்கள் அதிகம் பொய் சொல்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கே உங்களுடைய தடுமாற்றத் தளம் புரிந்து விடும். அது ஒரு குறிப்பிட்ட சூழலாய் இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட நபரிடமாய் இருக்கலாம். எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டால் உங்கள் நேர்மையையும், உண்மையையும் அந்த இடத்தில் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

பண விஷயத்தில் தான் நேர்மையற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை விலக்க என்னென்ன செய்ய முடியும் என யோசியுங்கள். நேர்மையான மனம் கொள்ளும் நிம்மதி அளவிட முடியாதது. வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றுவது முதல் மனைவியிடம் பொய் சொல்வது வரை என்னென்ன என்பதை சிந்தியுங்கள். மன்னிப்புக் கேட்கவோ, உங்களுக்குச் சொந்தமில்லாததை திருப்பிக் கொடுக்கவோ தயங்கவே தயங்காதீர்கள்.

பொய் பயத்தின் பிள்ளை. மிகுந்த தைரியசாலிகளே நேர்மையாளர்களாய் இருக்க முடியும். உங்களுடைய பலவீனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியமானாலும் சரி, மேலதிகாரியிடம் உண்மையைச் சொல்லும் கம்பீரமானாலும் சரிநேர்மையின் பின்னால் தைரியம் இருக்கிறது. அச்சமற்ற மனதில் மட்டுமே நேர்மையும், உண்மையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். எனவே நேர்மையினால் எழும் விளைவுகளைச் சந்திக்கலாம் எனும் மனதிடம் கொள்ளுங்கள்.

நேர்மையாளர்களைபொழைக்கத் தெரியாதவன்என உலகம் வெளியில் பேசினாலும் அவர் மீது உயரிய மரியாதையை சமூகம் வைத்திருக்கும். அவருடைய வார்த்தைகளுக்கு அசையாத ஆணியின் நம்பிக்கையும் இருக்கும்.

உண்மையாய் இருக்க வேண்டுமெனில் உண்மையாய் சிந்திக்கவும் வேண்டும். கண்களால் காணாதவற்றை வாயால் அறிக்கையிடாமல் இருப்பது நல்லது. பலருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் பலவற்றைக் கற்பனை செய்து கொள்வதும், காதில் கேட்பவற்றுக்கு ஆடைகட்டி அலைய விடுவதும் தான். கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும்உண்மையின் மனம் கொண்டு வாசிக்கப் பழகினால் உங்கள் செயல்களிலும் அது வெளிப்படும்.

இப்படியாய் இருக்கலாம்”, “இதுவாக இருக்கலாம்”, “அப்படி நடந்திருக்கலாம்போன்ற கணிப்புகள் பெரும்பாலும் நேர்மையற்ற உரையாடல்களுக்கு முதல் சுவடு எடுத்து வைக்கும். அதைத் தவிர்ப்பது நேர்மையான பார்வையின் அடையாளம்.

சின்னச் சின்ன விஷயங்களில் பொய் சொல்வது தவறில்லை என்பது பலரும் நினைக்கும் ஒரு தப்பான விஷயம். ஒரு பொய் ஒரு பொய் தான், அது எப்போதுமே உண்மையாவதில்லை. அது பக்கத்து வீட்டு ரோஜாவில் பறித்த பூவுக்காகவும் இருக்கலாம், அலுவலகத்தில் திருடிய பென்சிலாகவும் இருக்கலாம். பொய் பொய் தான். சின்ன விஷயங்களில் நேர்மையாய் இருக்கப் பழகினால் பெரிய விஷயங்களிலும் அந்தப் பழக்கம் வந்து ஒட்டிக் கொள்ளும். எனவே சின்ன விஷயங்களிலிருந்தே உண்மை சொல்வதை ஆரம்பியுங்கள்.

பிறரைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்களைவெள்ளைப் பொய்கள்என்று சொல்வார்கள். பொய்மையும் வாய்மையிடத்து என வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்களையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. “இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்குஎன்பது போன்ற பொய்கள் யாரையும் காயப்படுத்தாது. ஆனாலும் அது உங்களுடைய உண்மைக் குணத்தை கறைப்படுத்தும். சொல்ல முடியாத மனநிலையெனில் அமைதி காப்பது நல்லது.

நேர்மையாய் இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல குணாதிசயத்தை உருவாக்கித் தரும். நீங்கள் தொடர்ந்து நேர்மையை நேசிக்கும்போது உங்கள் மீதான நம்பிக்கை பல மடங்கு வலுவாகும். உங்கள் வாழ்க்கையை பிறர் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கவனிக்கத் துவங்குவார்கள். நீங்கள் பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவே மாறிப் போவீர்கள்.

சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. அது நேர்மையாளராய்க் காட்டும் என்பது பொதுவான கருத்து. உண்மையில் அப்படியல்ல. பக்கத்து வீட்டுப் பையன் தம் அடிக்கும் விஷயத்தை மறைப்பதை விடச் சிறந்தது பெற்றோரிடம் உரைப்பதே !

ஒரு செயலைச் செய்கிறீர்களெனில் அது உங்களைப் பிறகு பொய் சொல்ல வைக்குமா என்பதை யோசியுங்கள். அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என்பது பெரியவர்கள் சொல்லும் வழி. திருட்டுத் தனமான செயல்கள் உங்களை நிச்சயம் பொய்சொல்ல வைக்கும். எனவே செயல்களில் நேர்மையைப் புகுத்துங்கள்.

பாதி உண்மை என்பது ஒரு முழு பொய் ! உண்மை என்பது முழுமையானது. கொஞ்சம் உண்மை சொல்லிவிட்டால் உங்கள் மனசாட்சியின் கேள்வியிலிருந்து தப்பிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். உண்மையை பேசுங்கள். உண்மை எந்தக் கேள்வியைக் கண்டும் அஞ்சுவதில்லை.

ஒரு விஷயம் சொல்றேன் யார் கிட்டேயும் சொல்லாதீங்கஎன பீடிகையோடு வரும் நபர்களிடம்அந்த விஷயத்தை என்கிட்டேயும் சொல்லாதீங்கஎன நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் நல்லது. வெளியே சொல்லாத உண்மையும், பொய்யின் இன்னொரு வடிவமே.

பொய் சொல்வது நமக்குள்ளே நம்மை அறியாமலேயே குற்ற உணர்வை உருவாக்கிவிடும். கூடவே குழப்பத்தையும் தன்னம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கும். மனசு ரொம்பக் கனமாய் இருக்கிறது என்பவர்கள் பல வேளைகளில் உண்மைகளை நேசிக்காதவர்களாய் இருப்பார்கள்.

நேர்மை முளைவிட வேண்டிய முதல் இடம் குடும்பம். குடும்ப உறவினர்களிடையே பொய்கலக்காத உண்மை உரையாடல்களும், நேசமும் இருக்கும்போது அந்த வாசம் சமூகத்திலும் வீசும். பிரச்சினைகள் வருமோ என நினைத்து போலித்தனமாய் வாழ்வதை விட நேர்மையாய் வாழ்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பதே சிறப்பானது.

ஆபிரகாம் லிங்கன் இளம் வயதில் ஒரு கடையில் வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களிடம், அன்பாகவும், பணிவாகவும், நேர்மையாகவும் இருப்பதில் அவர் வல்லவர். ஒருமுறை நள்ளிரவில் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கையில் கணக்கு இடித்தது ! ஒரு நபருக்கு சில காசுகள் கம்மியாகக் கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தார். தாமதிக்காமல் கடையைப் பூட்டிக் கொண்டு வெகு தொலைவில் இருந்த அந்த நபரைத் தேடிப் போய் மிச்ச காசை கொடுத்து விட்டு வந்தார். நேர்மை என்பது அவருக்குள் வேர்விட்டு வளர்ந்திருந்தது.

நாம் பல வேளைகளில் எது உண்மை என்பதை விட, எதைச் சொல்லலாம் என்பதிலேயே கவனத்தைச் செலுத்துகிறோம். பல மனிதர்களை விட ஓடாத வாட்ச் நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது மிகச் சரியான நேரத்தை அது காட்டும்.

 நேர்மை பழகு

அதுவே அழகு