மீம்ஸ்

மீம்ஸ்

Image result for memes tamil

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

காரணத்தோடும்
காரணமின்றியும்
மீம்ஸ்கள்
பிறந்து கொண்டே இருக்கின்றன

ஒரு
மழை இரவின்
புற்றீசல் போலவோ,
கவனமாய் செதுக்கப்பட்ட
பட்டாம்பூச்சி போலவோ
அவை
டிஜிடல் சிறகுகளால்
பறந்து திரிகின்றன

ஒரு கோபத்தில்
முளையை
அவை
நகைச்சுவைக் கால்களால்
நசுக்கி நகர்கின்றன

ஒரு துயரத்தின்
விதையை
அவை
குரூரச் சிரிப்பால்
குதறிக் கடக்கின்றன

ஒரு தோல்வியின்
கதையை
அவை
கிண்டலின் தூண்டிலில்
தூக்கிலிட்டுச் சிரிக்கின்றன.

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

அது
ஒரு நியாயத்தின் குரலையும்
நடுவீதியில்
நிர்வாணமாக்குகிறது

ஒரு
தார்மீகக் கோபத்தை
வன்மக் கரங்களால்
வலுவிழக்கச் செய்கிறது.

ஒரு
புரட்சியின் பாதச்சுவடை
புயல்ப்பாதங்களால்
புரட்டித் தள்ளுகிறது.

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

அங்கே
நிஜங்கள் மட்டுமல்ல
நிஜங்களின் நிழல்களும்
நிராயுதபாணியாகின்றன

*

சேவியர்

*

குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை

Image result for beautiful kids

குழந்தைகள்

*

இதோ,
மீண்டும் மலர்ந்து விட்டது
ஒரு
குழந்தைகள் தினம்.

இது
உங்களுக்கான தினம்.

மலர்களே
தங்களுக்கு
மாலை சூடிக் கொள்ளும் தினம்

குயில்களே
தங்களுக்காய்
இசைவிழா நடத்தும் தினம்

இந்த
மயில்களுக்காய்
மழையொன்றைப் பொழிகிறேன்
கவிச்
சாரலை தெளிக்கிறேன்.

குழந்தைகளே
குழந்தைகளே
இன்றைய நாட்டின்
இளவரசர்களே

நாளைய
சிம்மாசனங்களின்
சொந்தக்காரர்கள் நீங்கள்,
நாளைய
சிகரங்களின்
கிரீடங்கள் நீங்கள்.

நீங்கள்
நாளைய வனத்துக்கான
இன்றைய விதைகள்.

நாளைய கடலுக்கான
இன்றைய துளிகள்

செதுக்குவதைப்
பொறுத்து தான்
சிலைகள் வடிவாகும்.

உங்களைக்
கவனமாய்ச் செதுக்கும்
கல்வி உளி
எங்களிடம் இருக்கிறது.

பொறுமையாய் காத்திருங்கள்
காத்திருக்கும்
பாறைகளே சிலைகளாகும்.
முரண்டு பிடிப்பவையோ
உடைந்து தெறிக்கும்.

நீங்கள்
மலர்கள்.

எந்த வாசனையை
உங்களில் ஊற்றுகிறோமோ
அதுவே
உங்கள்
சொந்த வாசனையாகப் போகிறது.

நேசத்தின்
வாசனையை
உள்ளத்தில் நிறையுங்கள்.

நீங்கள்
புல்லாங்குழல் போன்றவர்கள்
நாங்கள்
உங்கள் குணாதிசயங்களில்
இசை மீட்டும்
இடுபவர்கள்.

உங்களை
ஒப்படையுங்கள்,
வாழ்க்கை சுரம் விடுக்கும்.

மேகத்தை அரைத்தால்
மழை பொழியாது
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது !
கற்பதை மனதில்
கல்வெட்டாய் கல்லுங்கள்.

நீங்கள்
சூரியனையும் முளைப்பிக்கும்
சக்தி படைத்தவர்கள்

பாதாளத்தையும் புதைத்து வைக்கும்
வலிமை படைத்தவர்கள்.
சோம்பலில் படுக்கையில்
சுருண்டு விடாதீர்கள்.

வெளியாறாத சூரியன்
ஒளிதருவதில்லை.
ஓடாத நதியில்
இசை இருப்பதில்லை.
இயங்கிக் கொண்டே இருங்கள்

நீங்கள்
வானத்தையும் வனையும்
வல்லமை படைத்தவர்கள்
விரல்களை
டிஜிடல் கருவிகளில்
ஒட்டி வைக்க வேண்டாம்.

கீழ்ப்படி இல்லாமல்
மேல்படி இல்லை
கீழ்ப்படிதல் இல்லாமல்
முன்னேற்றம் இல்லை.
கீழ்ப்படியுங்கள்.

பொய்யின் பிள்ளைகள்
வெற்றிகளின்
கிளைகளில் கூடுகட்டுவதில்லை.
வாய்மையை
வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.

கர்வத்தின் கரங்களில்
நெரிபடாதீர்கள்
தாழ்மையின்
தாழ்வாரங்களில் மட்டுமே
நடை போடுங்கள்.

மன்னிப்பின்
மகரந்தங்களைச்
சுமந்து செல்லும்
பட்டாம்பூச்சியாகுங்கள்.

ஒரு சிறு துளியே
பெருமழையின்
துவக்கம்.
ஒரு சிறு தவறே
பெருங்குற்றத்தின்
துவக்கம்
தவறுகளின் முளைகளை
துவக்கத்திலேயே
தறித்தெறியுங்கள்.

வாழ்க்கை
ஸ்மார்ட்போன்களில் இல்லை
அவை
உங்கள்
வலிமையை அழிக்கும்
மௌனச் சாத்தான்கள்.
வளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.

விரைவில் தூங்கி
விரைவில் எழுங்கள்,
உடலை மதித்து
பயிற்சி எடுங்கள்,
நல்ல உணவால்
நலத்தைப் பெறுங்கள்

ஒரு துளி
விஷம் போதும்
உயிரை எடுக்க,
ஆரோக்கிய வாழ்வை
விலக்காமல் இருங்கள்.

நீங்கள்
குயவன் கை களிமண்.
வனையும் பொறுப்பு
எங்களிடம் இருக்கிறது.

எங்கள்
கரங்களை விட்டு
நழுவாமல் இருங்கள்
வழிகளை விட்டு
வழுவாமல் இருங்கள்

நீங்கள்
பாத்திரங்கள்,
உச்சமானதை மட்டுமே
உள்ளத்தில்
மிச்சமின்றி நிறையுங்கள்.

பிரபஞ்சத்தின்
பரவசமாம் புன்னகையை
உயிருக்குள்
நிரப்பியே வைத்திருங்கள்

இனிய
குழந்தைகள் தின
வாழ்த்துகள்

*

ஐந்தாம் வகுப்பு நண்பன்.

 

Image result for two friends

ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.

ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.

வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.

‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.

பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.

பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன் நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.

அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.

நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.

ஆயிற்று
இருபத்து நான்கு வருடங்கள்.

இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.

நண்பன்

Image result for man sitting sad

ஒரு காலத்தில்
அவன் என்
பிரியத்தின் பிரதிநிதி
நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்
திணிக்க முடியாத தோழன்.

என் பள்ளிக்கூட நாட்களின்
பல்லாங்குழிச் சினேகிதன்.

தவளைக் குளத்தில் நீச்சலடித்து,
தூண்டில் நுனியில் மண்புழு சொருகி
ஓடைக்கரையில் மீன் பிடித்து,
அணில் மேல் கோடு வரைந்தது யாரென்று
விவாதம் செய்யும் பொழுதுகள் வரை
என் விரல் தொட்டே நடந்தவன்.

ஒரு
விடலைப்பருவத்தின் விளங்காப் பொழுதில்
காரணமே இல்லாமல் சண்டையிட்டோம்.

முகம் இறுக்கி கரம் முறுக்கி
முடிச்சிட்டு முடிச்சிட்டு
இருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்
நட்பு நுனி தொலைந்தே போயிற்று.

கோபத்தின் கொடுக்குப்பிடிக்குள்
எங்கள் நெருங்கிய நேசத்தின்
தண்டுவடங்கள் உடைபட்டுத் தொங்கின.

ஒரு படி கீழே இறங்கி
நான் பேசியிருந்தால்
ஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.
அந்த பச்சைமர ஆணித்தடம்
வெட்டுத்தோற்றத்தில் கட்டாயம்
வெளிப்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் பேசவில்லை.

வாலிபத்தின் சாலை முடிந்து
நடுவயதின் சந்தும் முடிவுற்று
முதுமையின் ஒற்றையடிப்பாதை வரை,
அவனோடு பேச விடவில்லை
பாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.

யுகத்தைக் கிழித்துக் கொட்டிய
என் குப்பைக்கூடையில்
என் ஆணவத்தின் அணிகலன்கள்
இன்று அறுந்து கிடக்கின்றன

என் நினைவுகளிடையே பீறிட்டுக் கிளம்பும்
இன்றைய நேசத்தின் ஓரிழை
நேற்று மாலையேனும் கசிந்திருந்தால்,
என்
பால்யகால பச்சைக்கிளைகளுக்கு
அவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.

நேற்றிரவு
மரணம் அவனைச் சந்திக்கும் முன்
ஒருமுறையேனும் அவனோடு அழுதிருக்கக்கூடும்.

 

என் சாலையோர நிழல்கள்

Image result for friends having fun

நட்பைப் பற்றி
எழுதும்போதெல்லாம்
என் விரல்களை விட வேகமாய்
மனம் எழுதுகிறது.

என்
சாலைகளின் இரு புறமும்
நண்பர்கள்
நிற்பதால் தான்
நிழல் பயணம் எனக்கு
நிஜமாகிறது.

துயரத்தின் தூண்கள்
என் இமை இடிக்கும் போது
நண்பர்களின் கரங்களே
காயம் விழு முன்
கண்களைக் காக்கின்றன.

கல்வியின் கரைகள்
பெற்றுத்தந்தவை எல்லாம்
சின்னச் சின்னச் சிப்பிகளே,
நட்பே
அதற்குள் முத்தை வைத்தது.

பணத்தின் கரங்கள்
பூக்களைப் பறித்தன
அதில்
மணத்தை வைத்தது
நண்பர்களே.

எத்தனை பழசானாலும்
முளைக்கும் விதை தானே
நட்பு ?

எத்தனை உரசினாலும்
சாம்பலாகாத வைரம் தானே
நட்பு.

மெதுவாய் முளைத்து
ஆழமாய் வேர்விட்டு
அகலமாய் படருவது தானே
நட்பு ?

நங்கூரமாய் சிலநேரம்
நிறுத்தி வைக்கும்,
சுக்கானாய் சில நேரம்
செலுத்தி வைக்கும் நட்பு,
ஓர்
ஓய்வெடுக்கும் தீவு.

நடப்பு வாழ்வின்
முதுகெலும்பு நட்பே.

நட்பை நேசியுங்கள்
நண்பர்களை சேமியுங்கள்
இன்றே..
இப்போதே.

ஏனென்றால்
தாமதமான துவக்கங்களை
முடிவுகள் வந்து
முந்திக்கொள்ளும்.

நீயும்…. நானும்…

Image result for lovers

உனக்கும் எனக்கும் ஒரே வயது
இருவருக்குமாய் சேர்ந்து
உள்ளுக்குள்
இருப்பது கூட ஒரே மனது தான்.

நான் எழுதி முடிக்கும் கவிதைகளை
நீ தான்
முதலில் படிக்க வேண்டுமென்று
முதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.

என் வீட்டுத் தொலைபேசி
ஊமையாய் இருக்கும் போது
உன்
தொலை பேசி பேசுவதில்லை.

ஒரே குடையில்
மழைக்கு ஒதுங்கியதுண்டு,
ஒரே ஓடையில்
நனைந்து கரைந்ததுமுண்டு.

உன்னோடு பேசியதில்
எனக்குள்
மறைக்கப்பட்ட பக்கங்கள்
குறைக்கப்பட்டிருக்கின்றன.

எப்போதுமே
நட்பு என்னும் விமானத்திலிருந்து
வெளியே குதித்ததில்லை நான்..
நீயும் தான்.

உங்களுக்குள்ளே என்ன என்று
எங்களுக்குத் தெரியுமென்று
தங்களுக்குள்ளே தர்க்கமிடும் மக்களிடம்
விளக்கவுரை சொன்னதில்லை
நீயும்.. நானும்.

காதலெனும் வலை கொண்டு
நம் கால்களை
நாமே கட்டிக் கொண்டதில்லை.
சிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத
கானகமாகவே இருக்கிறோம்.

இல்லை என்று நாம் சொன்னதற்கு
ஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.
மொழி பெயர்ப்பிலோ
பேசும் விழி பெயர்ப்பிலோ
பொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.

பனிக்கட்டிகளைத்
தின்னத்தந்தாலும்
தீக்கோழிகளாகவே திரிகிறோம்,
தீ மிதிக்கச் சொன்னவர்களுக்கெல்லாம்
சின்னச் சிரிப்பொன்றையே
சலுகையாய் சரித்திருக்கிறோம்.

எந்தப் பருவங்களிலும் நமக்குள்
நட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.
எந்த பருவ மழையும்
நம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.

காலை வணக்கம் சொல்லித் துவங்கும்
என் பொழுது,
இரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்
மெல்ல மெல்ல மறையத் துவங்கும்.

காதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.
நட்போ
நிழலைக் கூட
வலி கொள்ள விடுவதில்லை.

நட்பின் கடைசி நிலை காதல் தானாம்.
அப்படியென்றால்,
கடைசி நிலையே வேண்டாமென்று தான்
கைகோர்த்து வேண்டிக் கொள்வோம்.
நீயும்… நானும்.

பிரியாதிருக்க ஓர் பிரியாவிடை

Image result for wedding bride

பிரியத்துக்குரிய தோழி,

வரவேற்புக்கு இருக்கும்
வாசனை மனம்
வழியனுப்புதலில் இருப்பதில்லை.
இலையுதிர் காலத்தில்
பூக்களுக்கேது பூபாளம்.

நினைவுகளின் பெட்டகங்கள்
நிரம்பி வழியும் போது
சாவியோடு
நீ
விலகிச் செல்கிறாய்.

நீ,
பறந்து செல்கிறாய் என்பதன்
சோகம்,
வேடந்தாங்கல் நோக்கித் தான்
நீ
ஓடுகிறாய் என்பதால்
ஓடு பாதை விட்டுக் கொஞ்சம்
விலகிச் செல்கிறது.

இது வரை
நீ
கிளைகள் தேடினாய்,
இப்போது
மரம் ஒன்று உன்னிடம்
வரம் கேட்டு வருகிறது.

உனக்கென்று
யுகங்களுக்கு முன்னால் எழுதிவைத்த
சுகங்களெல்லாம்,
இனிமேல் தான் ஆரம்பம்.

இது,
அருவிகளின் ஆரவாரக் காலம்,
நான்
நதிகளைப் பற்றி மட்டுமே
கவி எழுதல் தகாது.

சென்று வா,
சென்று வாழ்,
அலுவலகம்
உனக்கு இன்னொரு தாய்வீடு.

கண்ணீ­­ர்த் துளிகள்
விலகலால் பெருகினாலும்,
மகிழ்வின் துவலைகள்
அதை துவட்டிவிடுகின்றன.

நடந்து முடிந்த நிமிடம் வேறு,
ஆழத்தில் விழுந்தாலும்
அருவிக்கு
காலுடைவதில்லை,
அவை தொடர்ந்து எழுகின்றன.

எங்கள்
இதயத்தின் ஆழத்திலும் விழுகின்றன
இதமாய் சில
ஆனந்த அருவிகள்.

நீ,
வருகையால் மகிழ்வூட்டினாய்,
சிந்தனைகளில் வலுவூட்டினாய்,
இனி வருவது
மாங்கல்ய மாதம்
மகிழ்வால் எங்களில் மழையூற்று.

சிறகுகள் இருந்திருந்தால்
பறந்து வந்திருப்போம்,
தோள்களில் தொங்காத சிறகுகள்
மனசில் மட்டுமே
முளைத்திருக்கின்றன.

வாழ்த்துகிறோம்,
இணைந்த இதயமும்,
பிணைந்த கரங்களும்,
அடுத்தடுத்து தொடரும் சுவடுகளும்
ஆயுள் நீளம் வரை அகலாதிருக்கட்டும்.

இப்போதும் எங்கள்
கண்களில் கண்ணீ­ர்,
இதற்கு
உப்புச் சுவை இருக்கிறதா?
இப்போது எதையும்
உணரமுடியவில்லை.

புரிந்தாலும் புதிர் தான்

 

Image result for Love fantasy

காதல் ஓர் காட்டு மலர்
அதைக்
கால்கள் கட்டி
வீட்டுத் தொட்டியில்
பூக்க வைத்தல் இயலாது.

பூக்குமிடத்தில் தங்கி
உங்கள்
இதய வங்கிகளில்
வாசனை முதலீடுகளை
ஆரம்பியுங்கள்.

0

காதல்
ஓர் சுதந்திரப் பறவை.
கானகத்தைச் சுற்றிக்
கூண்டு கட்டுவதால்
காதலைப் பிடித்தல் சாத்தியமில்லை.

அதன்
சிறகுச் சாலைகளில்
உங்கள் கூடுகளை
திறந்தே வையுங்கள்.

தங்கிச் சென்றால்
வாங்கிக் கொள்ளுங்கள்,
இல்லையேல்
வழக்கிடாதீர்கள்.

0

குகைகளுக்குள்
காதல் குடியிருப்பதில்லை.

காதலுக்காய்
அத்தனை கதவுகளையும்
திறந்தே வையுங்கள்,
வருகைக்கும்
விலகலுக்கும் !.

நுழைந்ததும் மூடி விட்டால்
மூச்சுத் திணறலே மிஞ்சும்.

0

காதல் ஒரு
ஆச்சரியம்,
வேண்டாத இடத்தில் காய்க்கும்
வேண்டும் இடத்தில்
யாகம் நடத்தினாலும்
தியாகம் நடத்தினாலும்
முளைகூட விடுவதில்லை.

சமையல் சட்டியில்
சிப்பிகள்
முத்துத் தயாரிப்பதில்லையே !.

0

காதல் பதக்கமல்ல,
கைக்கு வந்ததும்
பெட்டியில் வைத்துப் பாதுகாக்க !

அது
புத்தகத்துள் பதுக்கி வைக்கும்
மயில் பீலியுமல்ல.

தினமும் தீண்டு.
செதுக்காமல் ஒதுக்கும்
பாறைகள்
சிற்பமாவதில்லை.

தண்­ர் செல்லா
தானியங்கள்
அறுவடைக்கு தயாராவதில்லை.

0

விலகிவிடுமோ எனும் பயம்
விலக்கப் பட வேண்டிய
இலக்கு.

சந்தேக விலங்கு களுக்குள்
புனித உணர்வுகளைப்
பூட்டி வைக்க முடியாது.

0

காதலியுங்கள்,
இலையில் அமரும் பனித்துளியை
புல் நேசிப்பது போல,

செடியில் அமரும்
வண்ணத்துப் பூச்சியை
இலைகள் நேசிப்பது போல,
நேசியுங்கள்.

கூடுகட்டச் சொல்லி
கட்டாயப் படுத்தி,
சமாதி கட்டி முடிக்காதீர்கள்

வெள்ளை தேசம் வேண்டும்.

Image result for cute girl fantasy
மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,

உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.

உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.

அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.

குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.

பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.

ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,

கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.

பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.

கடல் தாண்டிய காதல்.

Image result for Love fantasy

நீண்ட நாட்களாகிறது.
அவள் முகம் பார்த்து.

அவள் பற்றிய நினைவுகளை
மனதிற்குள்
ஓடவிடும்போதெல்லாம்
மனக்கிண்ணத்தில்
மெல்லியதாய்
ஒரு இசை உருவாகும்
ஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.

அவள் சிரிப்பு,
ஹைக்கூக் கண்கள்,
இதயத்துக்குள் ஈட்டி இறக்கும்
அவள் வெட்கம்,

சொர்க்கம் என்பது
மண்ணில் என்பதை
அந்த
தேவதை தரிசனம் தான்
கொளுத்திவிட்டுப் போனது.

அவள் விரல் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாலை
அகலமாயில்லை என்பதை
அறிந்துகொள்வேன்.

உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே
அவளோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்

பகல்
விரைவாய் விழித்தெழுமென்று
விளக்கம் சொன்னதே
தொலைபேசிக்குள்
தொழுகை நடத்திய இரவுகள்தான்.

இப்போது வாழ்க்கை என்னை
கடல்களைத்தாண்டிக் கடத்திவிட்டது
ஆனாலும்
நினைவுகளின் தள்ளுவண்டி
அவள் நடக்கும்
வீதிகளில் தான் நகர்கிறது.

கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி மட்டுமல்ல
காதலும் தான்
என்கிறதே என் காதல்.

உண்மைதான்.
என்றோ விலகிப் போன
அவள் மேல்
எனக்கு
இன்றும் வளர்கிறதே காதல்.