அப்பாவின் தாடி

அப்பாவின் தாடி

Image result for beard painting

சிலருடைய
தாடிகள்
அப்பாவை
ஞாபகப்படுத்துகின்றன.

கருப்பும் வெள்ளையுமாய்
அவை
நினைவுகளின் மீது
வண்ணமடிக்கின்றன.

அப்பாவின்
விரல் கோதிய தாடி
விசேஷமானது.

மழலை வயதில்
எங்களை
கிச்சு கிச்சு மூட்டி
சிரிப்பவை அவை.

கோபித்துக் கொள்ளும்
உயிர் நண்பனைப் போல
தற்காலிகமாய்
காணாமலும் போகும்.

காலங்களின்
பழுப்பேறிப்போன நினைவுகளில்
இன்னமும்
அப்பாவின் தாடி
வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.

எங்கோ
ஒட்டப்படும் ஒரு போஸ்டரில்

சட்டென
கடந்து செல்லும் ஒருவரில்

நகரும் பேருந்தின்
சன்னலோர மனிதரில்

என
பலரும்
அப்பாவின் தாடியை
நினைவுபடுத்திக் கொண்டே
இருக்கின்றனர்.

எனினும்
அப்பாவின் தாடி
விசேஷமானது.

காரணம்
அது அப்பாவிடம் இருந்தது.

*

சேவியர்

விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்

விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்

Image result for tamil nadu paddy field

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

கருவறை தாண்டிய பாதங்கள்
மண்ணின் முதுகு மிதித்து
புழுதி பிடித்து
உரண்டு புரண்டு உறவாடுகின்றன !

கல்லறை நோக்கிய பயணங்கள்
மண்ணின் அறை திறந்து
நிரந்தர நித்திரையில்
சலனம் தொலைத்து துயில்கின்றன !

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

*

கடவுள்
மண்ணின் முதல் விவசாயி !

மனிதன்
கடவுள் படைத்த முதல் விவசாயி !

கடவுள்
மண்ணில் கைதொட்டு
உயிரை உருவாக்கினார் !
மனிதன்
மண்ணில் கைதொட்டு
பயிரை உருவாக்கினான் !

கடவுளே
உலகின் முதல் விவசாயி !
மனிதன்
உலகின் இரண்டாம் விவசாயி.

*

மனிதனுக்கு
கடவுள் தந்த முதல் வேலை
விவசாயம் !

நிலத்தைப் பண்படுத்து !
என்பதே இறைவன் கொடுத்த வேலை
அவனோ
படைப்பைப் பண்படுத்தாமல்
படைத்தவனைப் புண்படுத்தினான்.

ஏதேன் எனும்
மண்ணக சொர்க்கம் விடைபெற்றது
இனி
மண்ணை சொர்க்கமாக்கு
வியர்வையை விலையாக்கு
என
அனுப்பி வைத்தார் ஆண்டவர் !

முதல் விவசாயி
களமிறங்கினான் !
நிலமிறங்கினான்

*

விவசாயி
இறைவன் எனும் முதலாளியின்
முதல் ஊழியன் !

விவசாயம்
மனிதன் எனும் படைப்பாளியின்
முதல் ஊழியம்!

விவசாயம்
ஆதி மனிதனின்
நீதித் தொழில் !

மண்ணின் மைந்தனின்
வியர்வைத் தொழில் !

விழுந்த மனிதன்
உழுத தொழில் !

விவசாயம்
இறைவனால் எழுதப்பட்ட பணி !

விவசாயம்
மனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் !

இன்று ??

*

இன்று
விவசாயம்,

தற்கொலையின் திறவுகோல் !
பட்டினியில் படுக்கை !
துயரத்தின் இருக்கை !
கண்ணீரின் அருவி !

பயிர்களின் வேர்களில்
புதைபடுகிறான் விவசாயி !

நீரற்ற பூமியில்
வேரற்ற நிலங்களில்
சோறற்ற வயிறுடன்
வதைபடுகிறான் விவசாயி !

வெடித்த வயலின்
வறண்ட நாக்குகளில்
அவனது
உயிரின் கடைசிச் சொட்டும்
உலரத் துவங்குகிறது !

நீர் வற்றிய
ஆறுகளில் அவனது கனவின்
முதல் சுவடும்
களவாடப்பட்டு விட்டது !

ஆறுகள்
நீரைத் தொலைத்தன !
நீரற்ற ஆறுகள்
தம்மையே தொலைத்து விட்டன.

சுயநலச் சுருக்குப் பைகள்
மணலை அகழ்ந்தன !
தன்னல மனங்கள்
ஆக்கிரமித்து நகைத்தன !
விழுகின்ற மழையும்
தங்க இடமின்றி
அழுதழுது அலைந்து திரிகிறது !

இன்று விவசாயம்
நிச்சயத் தோல்வியின்
நிதர்சன வெற்றி !

*

இறைவன்
நீரையும் நிலத்தையும் பிரித்தார் !
மனிதன்
நீரை நிலத்தினில் ஒளித்தான் !

கர்நாடக எல்லையில்
தண்ணீருக்குக் காவல்
தமிழக எல்லையில்
கண்ணீருடன் காவல் !

இறைவன் மழையை
பொதுவாய்ப் பொழிந்தார் !
மனிதன்
பொதுவை தனியே பிரித்தான்

இறைவன் வளங்களை
பொதுவாய் வைத்தார்
மனிதன்
வளங்களை களவில் வைத்தான்.

கடலுக்கு அனுப்ப
அனுமதிக்கும் நீர் கூட
தமிழனின்
உடலுக்கு அனுப்ப
அனுமதிக்கவில்லை மனிதன் !

அணைகளில் துயிலும் நீரை,
மனிதனின்
துணைக்கு அனுப்ப
துளியும் விரும்பவில்லை
சுயநல மனிதன் !

பலருக்கு
தண்ணீர் என்பது
அரசியல் சதுரங்கம் !

விவசாயிக்கோ
தண்ணீர் என்பது
இசையின் மிருதங்கம் !

நீரற்ற நிலம்
இசையற்ற கருவியாய்
சலனமற்றுக் கிடக்கிறது !

இறைவன்
படைத்தான் !
மனிதன்
உடைத்தான் !

*

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

புலம் பெயர்ந்தவன் கூட
புலன் பெயரவில்லை

நீ
நிலம் பெயராமல் இருக்கிறாய்
ஆனால்
நிஜம் உணராமல் இருக்கிறாயே !

வரப்புயர நீருயரும்
பொய்யாகிறதே !
இங்கே வரப்புகள் மட்டும் தானே
உயர்கின்றன !

வளங்கள் அழிகையில்
தலைமுறை அழியும்!
நிலங்கள் அழிகையில்
நிலவாழ்வு அழியும் !

முகசாயம் அழிகையில்
நாடகம் முடியும் !
விவசாயம் அழிகையில்
தேசம் அழியும் !

நிலத்தில் காங்கிரீட் நட்டோம்
மழை விடைபெற்றது !

நிலத்தில் முட்களை நட்டோம்
வளம் விடைபெற்றது !

நிலத்தை கவனிக்காமல் விட்டோம்
உறவு விடைபெற்றது !

இன்று
நிலங்கள் அனாதைகளாகிவிட்டன.
அதன் தொப்புள் கொடிகளுக்கு
நீரில்லை !

ஒளிச்சேர்க்கைக்கு
வழியில்லாமல்
இலைகளெல்லாம் தலையிழந்தன.
மரங்களெல்லாம் களையிழந்தன.

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

*

ஒன்று படுவோம் !

பூமி என்பது
தன்னலத் தாழ்பாழ்களில்
சிரச்சேதம்
செய்யபடுவதற்கானதல்ல !

பூமி என்பது
வெறுப்புகளின் விதைகளினால்
உயிர்சேதம்
செய்வதற்கானதல்ல !

நீரின்றி அமையாது
நிலம் !
பயிரின்றி அமையாது
உயிர் !

இணையம்
தகவலைத் தரலாம்
வலைத்தளம்
கலைகளைத் தரலாம் !
அரிசியை எங்கே
டவுன்லோட் செய்வது ?
தண்ணீரை எங்கே
தரவிறக்கம் செய்வது ?

ஒன்றுபடுவோம் !

வேர்கள்
நீரில் வித்தியாசம் பார்ப்பதில்லை !
மனிதர்கள் ஏன் பார்க்கவேண்டும் ?

தமிழகப் பசிக்கும்
கர்நாடகப் பட்டினிக்கும்
வித்தியாசம் இல்லை
பகிர்தலில் எதற்கு பதட்டம் ?

ஒன்றுபடுவோம் !

எங்கே விழுந்தாலும்
மழை ஈரமாகவே விழுகிறது !
எங்கே இருந்தாலும்
மனம் ஈரமாகவே இருக்கட்டும் !

நிலம் உலர்வது
மனிதம் உலர்வதின் அடையாளம் !
நிலம் செழிப்பது
மனிதம் செழிப்பதன் உத்தரவாதம் !

ஒன்றுபடுவோம்
உணர்வுகளால் ஒன்றுபடுவோம் !
அரசியல்
நில
இன எல்லைகள் களைவோம் !

மனிதம் என்பது
நமக்குள் இருப்பது
பிறரின் வார்த்தைகளால்
அதை கொல்லாமல் இருப்போம் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

வரப்புயர

Image result for agriculture tamil nadu village

வரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க
வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல
புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க
வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல

மனிதனோட முதல் தோழன் மண்தானே
மண்ணோட மடிமீதே வீழ்ந்தோமே

*

மும்மாரி மழை பொழிந்த
நிலம் அழித்தோம்
ஈரத்தை தரை இறக்கும்
மரம் அழித்தோம்
நீருக்காய் யார் காரோ
கரம் பிடித்தோம்
காவிரியும் கை விரிக்க
தினம் அழிந்தோம்

ஊருக்கே சோறு போட கை நீட்டினோம்
சாவுக்கு வழிசொல்லி கதவடைத்தான்
கடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்
உடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்

அணைக்கு நீருண்டு
துணைக்கு நீரில்லை !
இறைவன் கொடுத்தானே
மனிதன் கெடுத்தானே.

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த
இனம் யாமோ
புலன் தனையும் கூடவே யாம்
இழந்தோமோ
வளம் அழிந்தால் தலைமுறையும்
அழியாதோ
நிலம் அழிந்தால் நிலவாழ்வும்
அழியாதோ !

நீரின்றி அமையாது நிலம் என்றேன்
பயிரின்றி அமையாது உயிர் என்றேன்
வேருக்கு நீரினிலே பேதம் இல்லை
வயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை

மனிதம் உலர்ந்தால்
நிலமும் உலரும்
மழைக்கென்றும் ஈரமுண்டு
மனதிலும் அதுவருமா ?

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

நீ.. நான்… அவன்…

Brown Wooden Armchair on Brown Wooden Floor

 

நின்று தொலையாத
துன்ப அலையிலும்,
ஆலயம் பற்றிக் கிடப்பவனே
ஆத்திகன்.

நாளை செத்துப் போவேனென்று
சேதி வந்தபின்னும்
நாத்திகனாகவே
இருப்பவன் தான்
நாத்திகன்.

எந்த நிலை நாளையானாலும்
இன்றின் பகுதியில்
மனிதாபிமானக் கரங்களை
உலரவிடாதவனே
முழு மனிதன்.

வாய்ப்பில்லா இடத்தில்
வாய்மூடிக் கிடப்பதல்ல தூய்மை.

தப்பிக்கும் வாய்ப்புகள்
சுற்றிலும் கிடந்தாலும்,
தப்பு செய்யாததே
ஒப்பில்லா உயர்ந்தது.

நேர்மையின் நிலத்தில் வேர்விடு,
இல்லையேல்
இருக்கும் வேர்களுக்கு
நீர் விடு.

தோற்றுப்போகாதே.

stock photo, daytime, outdoors, view-from-above, urban-scene, city, architecture, building, building-exterior, part-of, people, men, one-person, aerial-view, cropped, adult, male, street, love, glass, low-section, modern, height, chicago, shoes, legs, feet, fall, above, man, stand, suicide, skydeck

தற்கொலை.
இது
கோழைகளால் எழுதப்பட்டு
கோழைகளால்
வாசிக்கப்படும் வாக்கியம்.

சுண்டெலித் தொல்லைக்குத்
தீர்வு
குடிசைக்குத் தீயிடுவதா?
விட்டில்களோடு பயமென்றால்
விளக்குகளைப் பலியிடுவதா ?

தோல்விகள் வந்து
தோல் கிழித்தால்
பாம்புகளாய் மாறி
தோலுரிக்கக் கற்றுக் கொள்வது தான்
வீரம்.

ஏமாற்றத்தின்
சந்தை தான்
கலாச்சாரத்தின் கடைசித் தெரு.
சூழ்நிலைகள் உன்னை
சுற்றிக் கிழித்தால்
சுருக்கு மாட்டுவதா வீரம் ?

ஒவ்வோர் மனசுக்குள்ளும்
ஓராயிரம் ஆசைகள்
நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால்
ஆவியால் அலைவோமாம்!
அது சரி,
எவனிங்கே நிறைவேறிய ஆசையோடு
மரித்துப்போனது ?

ஒவ்வோர்
கனவுக்கும் முற்றுப்புள்ளி
இன்னோர் கனவு,
ஒவ்வோர்
ஆசைக்கதவுக்கும் அப்பால்
இன்னுமோர் வாசல்.
யாரிங்கே
திருவோடுகளோடு திருப்திப்படுவது ?

பட்டுப்பூச்சி
தேடிப்போனவன் கைகளுக்குள்
பட்டுப்போன பூச்சிகள்,
அர்ச்சுனர் மார்பில்
அல்லியரின் அம்புக்காயங்கள்,
யாரிங்கே
வெற்றிகளோடு மட்டும் சுற்றித்திரிவது ?

தற்கொலை
இன்னொரு தோல்வி.

தோல்விக்குப் பயந்து
தோல்விக்கு வெற்றிகொடுக்கும்
இன்னொரு தோல்வி.

உனக்குத் தேவை
தோல்விகளோடுள்ள
தொடர் ஒப்பந்தமல்ல.

துடுப்புகள் தொலைந்துபோனால்
உள்ளங்கையை விரித்துக் கொள்,
இலக்குகளை
இறுக்கமாய் பற்றிக்கொண்டால்
பனிப்பாறை ஓரத்திலும்
பாதைகள் புலப்படும்.

இல்லையேல்,
காலில் சிக்கும் பாசிகள் கூட
சவக்குழிகள் செய்து குவிக்கும்.

மானிடச் சட்டங்கள்

Man Walking Near Aligned Lamp Post

 

உன்னைச் சுற்றிய
சட்டங்கள்
உன்னை ஒருவேளை
இமைக்க விடாமல் இறுக்கலாம்.
உனக்காய் நீயே
சட்டங்களைத் தயாரி.

உனக்கான ஆடைகளை
நீயே
தேர்ந்தெடுக்கும் போது,
உனக்கான செருப்புகளை
நீயே
சரிபார்த்து எடுக்கும்போது
உனக்காய் சில
சட்டங்களையும் செய்யலாமே ?

வெளியே பார்.
குருவிகள்,
பல நூறு தலைமுறையாய்
கூடுகளின் வடிவத்தைக்
கூட
மாற்றிக் கட்டவில்லை.

சிங்கங்களும்
சைவமாய்
மாறிக் கொள்ளவில்லை.

நீ மனிதன்,
உன் வாசல்
குகைகளிலிருந்து
பிடுங்கப்பட்டு
நகரத்தில் நடப்பட்டிருக்கிறது.

இது தான் நேரம்,
உனக்கு நீயே சில
சட்டங்களைச் செய்.
அவை
உரிமை மீறாது என
உத்தரவாதம் செய்.

மீறல்களை மட்டுமே
அரசியல் சட்டங்கள் பேசும்.
நீ
மனதின் நீறல்களைப் பேசு.

விலகலைப் பற்றிப் பேசிப் பேசி
விலங்குகளாய்
ஆனது போதும்.
அகலாதிரு என்னும் சட்டமே
அவசியம் இப்போது.

செய்யாதே எனும்
சட்டங்களை விட,
செய்
எனும் சட்டங்களே
மானிட வளர்ச்சிக்குத் தேவை
இப்போது.

இமைதிறந்தால் மட்டுமே
தெரியும்,
உன்னைச் சுற்றிலும்
நீளும் பட்டினிக் கரங்கள்.

புள்ளியில் துவங்கு

Image result for inner revelation gif

உன்னோடு
இன்னும் கொஞ்சம்
உறவாடு.

வாசலில் கோலமும்
உள்ளுக்குள்
அலங்கோலமும்
அனுமதிக்கத் தக்கதா ?

நுரையீரல் பைகளில்
நிகோடின் கைகள்.

வயிற்றுப் பாதையில்
அமிலப் பாசனம்.

சிந்தனை முழுவதும்
விகாரச் சிலந்திகளின்
விடாத வலை.

வெள்ளைத் தோடு போர்த்திய
கெட்டுப் போன
முட்டை வாழ்க்கை எதுக்கு ?

வெள்ளையடித்த
கல்லறை வாழ்க்கை எதுக்கு?

உடைகளை
துவைத்துக் காயப் போட்டு
உள்ளத்தை ஏன்
அழுக்கில்
ஊறப் போடுகிறாய் ?

உள்ளிருந்து வருவதே
உன்னை
மாசுபடுத்தும்.

உள்ளுக்குள் கசாப்புக் கடை
வெளியே
சரணாலயம்.
உள்ளே கருவாடு வாசம்
வெளியே மீன்களோடு நேசம்.

பூ வியாபாரி நீ.
சாக்கடைச் சாகுபடி
எதற்கு இனி ?

மெல்ல மெல்ல
சிந்தனைகளை
சொடுக்கெடு.

காற்றில் வந்தாலும்
தீயவற்றை
காதின் வாசலோடு
கத்தரித்து அனுப்பு.

தீய வார்த்தைகள்
தெரியாமல் எழுந்தாலும்
தொண்டைக்குள்
பள்ளம் வெட்டி நிரப்பு.

கோபத்தின் சூரிய கிரணத்தை
புன்னைகைப்
பனிக்கட்டியாய் விரட்டு.

தராசுகள்
நிறையவே கிடைக்கும்.
தரமானதாக்கு.

வேர்களைப் பகைத்த முளை,
வாழ்தல் இயலாது.
மனதைப் பகைத்த மனிதன்
வீழ்தல் தவறாது.

விரல்களே விளக்குகள்

Image result for nail in wall
எதிர்பாராத
நிகழ்வுகளின் குவியல்,
ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே
முளைத்து வளரும் எதிர்ப்புகள்,
நெருங்க நெருங்க
விலகிச் செல்லும்
தொடு வான இலட்சியங்கள்.
இவற்றின் கலவை தான் வாழ்க்கை !

ரோஜா மேல் பனித்துளி அழகுதான்
ஆனால்
வரப்புகளின் தண்ணீ­ர்தானே வாழ்க்கை.
கனவுகளை
இரவுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு
நிஜங்களுக்கு முதுகெலும்பு முடைவோம்.

காதல் அழகுதான்,
கவிதை அழகுதான்.
ஆனால்
வறுமையின் அமிலக்குழிக்குள்
வயிற்றுத் தாகம் தானே
அருவியாகிறது ?

மீன்கள் பிடித்துப் பிடித்து
மீந்துபோன வாழ்வில்
மிச்சத்தின் செதில்கள் மட்டுமே.
போதும்.
மீன்கள் சேகரிப்பது தேவை தான்
ஆனாலும்
தூண்டில்கள் தயாராக்குவோம்.

எத்தனை நாள் தான்
ஒற்றைத் தெரசாவும்,
ஒரு காந்தியும் கொண்டே
வரலாறு நகர்த்துவது ?
நூறு கோடி மக்களில்
பெரும்பாலானோர்க்கு
இன்னும் பெயரிடப்படவில்லையே !!!

வெற்றிகளின் பாதையில்
தோல்விகளும் படிக்கட்டுகளே.
தோல்வியின் பாதையில்
வெற்றிகள் கூட படுகுழிகளே…
நமக்குத் தேவையான
முதல் வெற்றி
எங்கே தோல்வியடைகிறோமெனும்
தேடலில் தான்.

கதவுகள், ஜன்னல்கள் எல்லாம்
திறந்துதான் கிடக்கின்றன.
நாம் தான்
சுவரில் அறையப்பட்ட
ஆணிகளாய் இருக்கிறோம்.
*

குறைகளல்ல அவை

 

Image result for smile pencil artநீ
அழகாக இல்லையென்று
யாரேனும் சொன்னால்
அழ ஆரம்பிக்காதே
பிறர் மனதில்
பொறாமை விளைவிக்க மாட்டேன்
என்று
பெருமிதம் கொள்

0

நீ
உயரமாய் இல்லை என்று
இகழ்ந்து பேசினால்
உடைந்து போகாதே.
உயர்வுக்கும் உயரத்துக்கும்
இம்மியளவும் சம்மந்தமில்லை
என்று
இன்னொருவருக்கு உணர்த்த
உனக்கொரு வாய்ப்பென்று உணர்ந்து கொள்.

0

நீ
கருப்பு என்று யாராவது
கிண்டலாய் சொன்னால் கலங்காதே !
அழகு நிலைய அறைகளுக்குள்
அடைபட்டும் விடாதே.
நிறத்தை மூலதனமாக்கி
நிலத்தை வென்றவர் யாருமில்லை
என்பதை நினைவில் கொள்.

0

நீ
முட்டாளென்று யாரேனும் சொன்னால்
உதடு வெடிக்க கோபப் படாதே
மெதுவாய் ஒரு
புன்னகை சிந்து…
பிரபஞ்சத்தின் பெருமை
பொறுமை என்பதைப் புரியவை !!!

0

உன்
உண்மை அன்பை யாரேனும்
உதாசீனம் செய்தால்
உருகி உருகி தொலைந்து போகாதே
உள்ளம் கற்க
உனக்கொரு வாய்ப்புக் கிடைத்ததாய்
உவகை கொள்.

*

தொலைந்து போன ஒருவன்..

Image result for mask manஉங்களால்
புறக்கணிக்கப் படுவேனோ
எனும்
பயம் எனக்கு.

அதனால் தான்
என்
வெள்ளைச்சிறகுகளுக்கு
உள்ளே இருக்கும்
கழுகுக் கால்களை
காட்ட மறுக்கிறேன்.

எனக்குள் வலி வருமோ
எனும் கிலியில் தான்,
என்
நிஜத்தின் நிழலைக் கூட
உங்கள்
விழி விழா தேசத்தில் தான்
விழ வைத்துக்
கொண்டிருக்கிறேன்.

புன்னகைப் பனிக்கட்டிகளை
என்னிரு உதடுகள்
ஏந்திப் பிடித்திருந்தாலும்,
சில
எரிமலைச் சிந்தனைகள்
உள்ளே எரிந்துகொண்டு தான்
இருக்கின்றன !

எப்போதேனும் காட்டவேண்டும்
என்
உண்மை முகத்தை,
போலித்தனமில்லா
ஓர்
நண்பனிடமாவது !.

அதற்கு முன்
தேட வேண்டும் !
எத்தனை முகமூடிகளுக்குப் பின்
என் முகம்
முடங்கிக் கிடக்கிறதென்று !.