விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்

விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்

Image result for tamil nadu paddy field

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

கருவறை தாண்டிய பாதங்கள்
மண்ணின் முதுகு மிதித்து
புழுதி பிடித்து
உரண்டு புரண்டு உறவாடுகின்றன !

கல்லறை நோக்கிய பயணங்கள்
மண்ணின் அறை திறந்து
நிரந்தர நித்திரையில்
சலனம் தொலைத்து துயில்கின்றன !

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

*

கடவுள்
மண்ணின் முதல் விவசாயி !

மனிதன்
கடவுள் படைத்த முதல் விவசாயி !

கடவுள்
மண்ணில் கைதொட்டு
உயிரை உருவாக்கினார் !
மனிதன்
மண்ணில் கைதொட்டு
பயிரை உருவாக்கினான் !

கடவுளே
உலகின் முதல் விவசாயி !
மனிதன்
உலகின் இரண்டாம் விவசாயி.

*

மனிதனுக்கு
கடவுள் தந்த முதல் வேலை
விவசாயம் !

நிலத்தைப் பண்படுத்து !
என்பதே இறைவன் கொடுத்த வேலை
அவனோ
படைப்பைப் பண்படுத்தாமல்
படைத்தவனைப் புண்படுத்தினான்.

ஏதேன் எனும்
மண்ணக சொர்க்கம் விடைபெற்றது
இனி
மண்ணை சொர்க்கமாக்கு
வியர்வையை விலையாக்கு
என
அனுப்பி வைத்தார் ஆண்டவர் !

முதல் விவசாயி
களமிறங்கினான் !
நிலமிறங்கினான்

*

விவசாயி
இறைவன் எனும் முதலாளியின்
முதல் ஊழியன் !

விவசாயம்
மனிதன் எனும் படைப்பாளியின்
முதல் ஊழியம்!

விவசாயம்
ஆதி மனிதனின்
நீதித் தொழில் !

மண்ணின் மைந்தனின்
வியர்வைத் தொழில் !

விழுந்த மனிதன்
உழுத தொழில் !

விவசாயம்
இறைவனால் எழுதப்பட்ட பணி !

விவசாயம்
மனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் !

இன்று ??

*

இன்று
விவசாயம்,

தற்கொலையின் திறவுகோல் !
பட்டினியில் படுக்கை !
துயரத்தின் இருக்கை !
கண்ணீரின் அருவி !

பயிர்களின் வேர்களில்
புதைபடுகிறான் விவசாயி !

நீரற்ற பூமியில்
வேரற்ற நிலங்களில்
சோறற்ற வயிறுடன்
வதைபடுகிறான் விவசாயி !

வெடித்த வயலின்
வறண்ட நாக்குகளில்
அவனது
உயிரின் கடைசிச் சொட்டும்
உலரத் துவங்குகிறது !

நீர் வற்றிய
ஆறுகளில் அவனது கனவின்
முதல் சுவடும்
களவாடப்பட்டு விட்டது !

ஆறுகள்
நீரைத் தொலைத்தன !
நீரற்ற ஆறுகள்
தம்மையே தொலைத்து விட்டன.

சுயநலச் சுருக்குப் பைகள்
மணலை அகழ்ந்தன !
தன்னல மனங்கள்
ஆக்கிரமித்து நகைத்தன !
விழுகின்ற மழையும்
தங்க இடமின்றி
அழுதழுது அலைந்து திரிகிறது !

இன்று விவசாயம்
நிச்சயத் தோல்வியின்
நிதர்சன வெற்றி !

*

இறைவன்
நீரையும் நிலத்தையும் பிரித்தார் !
மனிதன்
நீரை நிலத்தினில் ஒளித்தான் !

கர்நாடக எல்லையில்
தண்ணீருக்குக் காவல்
தமிழக எல்லையில்
கண்ணீருடன் காவல் !

இறைவன் மழையை
பொதுவாய்ப் பொழிந்தார் !
மனிதன்
பொதுவை தனியே பிரித்தான்

இறைவன் வளங்களை
பொதுவாய் வைத்தார்
மனிதன்
வளங்களை களவில் வைத்தான்.

கடலுக்கு அனுப்ப
அனுமதிக்கும் நீர் கூட
தமிழனின்
உடலுக்கு அனுப்ப
அனுமதிக்கவில்லை மனிதன் !

அணைகளில் துயிலும் நீரை,
மனிதனின்
துணைக்கு அனுப்ப
துளியும் விரும்பவில்லை
சுயநல மனிதன் !

பலருக்கு
தண்ணீர் என்பது
அரசியல் சதுரங்கம் !

விவசாயிக்கோ
தண்ணீர் என்பது
இசையின் மிருதங்கம் !

நீரற்ற நிலம்
இசையற்ற கருவியாய்
சலனமற்றுக் கிடக்கிறது !

இறைவன்
படைத்தான் !
மனிதன்
உடைத்தான் !

*

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

புலம் பெயர்ந்தவன் கூட
புலன் பெயரவில்லை

நீ
நிலம் பெயராமல் இருக்கிறாய்
ஆனால்
நிஜம் உணராமல் இருக்கிறாயே !

வரப்புயர நீருயரும்
பொய்யாகிறதே !
இங்கே வரப்புகள் மட்டும் தானே
உயர்கின்றன !

வளங்கள் அழிகையில்
தலைமுறை அழியும்!
நிலங்கள் அழிகையில்
நிலவாழ்வு அழியும் !

முகசாயம் அழிகையில்
நாடகம் முடியும் !
விவசாயம் அழிகையில்
தேசம் அழியும் !

நிலத்தில் காங்கிரீட் நட்டோம்
மழை விடைபெற்றது !

நிலத்தில் முட்களை நட்டோம்
வளம் விடைபெற்றது !

நிலத்தை கவனிக்காமல் விட்டோம்
உறவு விடைபெற்றது !

இன்று
நிலங்கள் அனாதைகளாகிவிட்டன.
அதன் தொப்புள் கொடிகளுக்கு
நீரில்லை !

ஒளிச்சேர்க்கைக்கு
வழியில்லாமல்
இலைகளெல்லாம் தலையிழந்தன.
மரங்களெல்லாம் களையிழந்தன.

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

*

ஒன்று படுவோம் !

பூமி என்பது
தன்னலத் தாழ்பாழ்களில்
சிரச்சேதம்
செய்யபடுவதற்கானதல்ல !

பூமி என்பது
வெறுப்புகளின் விதைகளினால்
உயிர்சேதம்
செய்வதற்கானதல்ல !

நீரின்றி அமையாது
நிலம் !
பயிரின்றி அமையாது
உயிர் !

இணையம்
தகவலைத் தரலாம்
வலைத்தளம்
கலைகளைத் தரலாம் !
அரிசியை எங்கே
டவுன்லோட் செய்வது ?
தண்ணீரை எங்கே
தரவிறக்கம் செய்வது ?

ஒன்றுபடுவோம் !

வேர்கள்
நீரில் வித்தியாசம் பார்ப்பதில்லை !
மனிதர்கள் ஏன் பார்க்கவேண்டும் ?

தமிழகப் பசிக்கும்
கர்நாடகப் பட்டினிக்கும்
வித்தியாசம் இல்லை
பகிர்தலில் எதற்கு பதட்டம் ?

ஒன்றுபடுவோம் !

எங்கே விழுந்தாலும்
மழை ஈரமாகவே விழுகிறது !
எங்கே இருந்தாலும்
மனம் ஈரமாகவே இருக்கட்டும் !

நிலம் உலர்வது
மனிதம் உலர்வதின் அடையாளம் !
நிலம் செழிப்பது
மனிதம் செழிப்பதன் உத்தரவாதம் !

ஒன்றுபடுவோம்
உணர்வுகளால் ஒன்றுபடுவோம் !
அரசியல்
நில
இன எல்லைகள் களைவோம் !

மனிதம் என்பது
நமக்குள் இருப்பது
பிறரின் வார்த்தைகளால்
அதை கொல்லாமல் இருப்போம் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

வரப்புயர

Image result for agriculture tamil nadu village

வரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க
வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல
புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க
வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல

மனிதனோட முதல் தோழன் மண்தானே
மண்ணோட மடிமீதே வீழ்ந்தோமே

*

மும்மாரி மழை பொழிந்த
நிலம் அழித்தோம்
ஈரத்தை தரை இறக்கும்
மரம் அழித்தோம்
நீருக்காய் யார் காரோ
கரம் பிடித்தோம்
காவிரியும் கை விரிக்க
தினம் அழிந்தோம்

ஊருக்கே சோறு போட கை நீட்டினோம்
சாவுக்கு வழிசொல்லி கதவடைத்தான்
கடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்
உடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்

அணைக்கு நீருண்டு
துணைக்கு நீரில்லை !
இறைவன் கொடுத்தானே
மனிதன் கெடுத்தானே.

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த
இனம் யாமோ
புலன் தனையும் கூடவே யாம்
இழந்தோமோ
வளம் அழிந்தால் தலைமுறையும்
அழியாதோ
நிலம் அழிந்தால் நிலவாழ்வும்
அழியாதோ !

நீரின்றி அமையாது நிலம் என்றேன்
பயிரின்றி அமையாது உயிர் என்றேன்
வேருக்கு நீரினிலே பேதம் இல்லை
வயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை

மனிதம் உலர்ந்தால்
நிலமும் உலரும்
மழைக்கென்றும் ஈரமுண்டு
மனதிலும் அதுவருமா ?

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

TOP 10 : சிறை எழுத்துகள்

Image result for The Consolation of Philosophy

எழுத்துகள் வலிமையானவை. அவற்றுக்கு சமூகத்தை மாற்றியமைக்கின்ற வலிமை உண்டு.  மனிதனை நல்வழிப்படுத்துகின்ற பணியை நூல்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. மனிதனுடைய சிந்தனை அழுத்தமான சூழல்களில் மிக அழகாக வெளிப்படுகிறது.  சிறையில் வாடும் சூழல்களில் திறமையும், தத்துவ சிந்தனைகளும் எழுத்தாளர்களுக்கு கிளர்ந்து எழுகின்றன. அப்படி சிறையில் அடைபட்ட சூழலில் எழுதப்பட்ட நூல்களில் ஒரு டாப் 10 பட்டியல் இதோ.

  1. கான்சொலேஷன் ஆஃப் பிலாஸஃபி  (The Consolation of Philosophy )

ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி போயித்யஸ். இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். மரண தண்டனையும் விதித்தார்கள். சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கும் தனது கற்பனைப் பெண்ணான தத்துவ மங்கைக்கும் நிகழ்கின்ற உரையாடலாக இந்த நூலை எழுதினார்.

கிபி 523ல் சிறைவாசம் அனுபவித்த அவர், ஒரே ஆண்டில் இந்த நூலை எழுதினார். அது தத்துவ உலகையே புரட்டிப் போடக்கூடிய நூலாக மாறியது. எல்லா நல்லவைகளுக்கும் காரணம் கடவுளே எனும் தொனி இந்த நூல் முழுவதும் ஒலிக்கிறது.

தனக்கு இருக்கின்ற கேள்விகளை அந்த தத்துவ மங்கையிடம் அவர் கேட்பது போலவும், அதற்கு அந்த தத்துவ மங்கை தனது பதில்களை அளிப்பது போலவும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. “ஏன் நல்லவங்களை ஆண்டவன் சோதிக்கிறான் ? கெட்டவங்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறான்போன்ற கேள்விகள் அப்போதே எழுந்திருக்கின்றன என்பது வியப்பு.

2.பவுல் எழுதிய கடிதங்கள்.

கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தவர் ச்வுல். பின்னர் இறை தரிசனத்தால் மனம் மாறி நூற்று எண்பது டிகிரி டர்ன் அடித்து கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக பவுல் என மாறினார். ஆதரவாக மாறியது மட்டுமல்லாமல் கிறிஸ்தவம் ஆழமாய் வேரூன்றவும் வளரவும் மிக முக்கியமான காரணியாகவும் இருந்தார். இவரது பயணங்களும் பேச்சுகளும் மக்களை மிக வேகமாக கிறிஸ்தவத்தை நோக்கி திருப்பின‌.

கடுப்பாகிப் போனவர்கள் இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். சிறையில் இருந்தபடியே இவர் பல இடங்களிலும் உள்ள கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு கடிதங்கள் எழுதினார். அந்த கடிதங்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளன. இறை ஏவுதலால் இவர் எழுதிய கடிதங்களில் கோலோசேயர், எபேசியர், பிலமோன் மற்றும்  பிலிப்பியர் போன்றவை சிறையிலிருந்து எழுதப்பட்டவை.

  1. டி ப்ரோஃபண்டிஸ்  ( De Profundis )

ஆழங்களிலிருந்து என இதை மொழிபெயர்க்கலாம். எழுதியவர் சர்வ தேச இலக்கியவாதிகளும், விமர்சகர்களும்  கொண்டாடுகின்ற எழுத்தாளர் ஆஸ்கார் வைல்ட். இந்த நூலின் முதல் பாதியில் தனது கடந்த காலத்தையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் எழுதியிருக்கிறார்  ஆஸ்கர் வைல்ட். அந்த செயல்கள் தான் அவரைக் கொண்டு சிறையிலும் தள்ளி விட்டிருந்தன.

இரண்டாம் பாதி காதலாகிக் கசிந்துருகும் எழுத்துகளால் ஆனது. அது கடவுளுக்கும் அவருக்குமான ஒரு ஆன்மீக காதல் என விளக்கம் கொள்பவர்கள் அநேகர். இதை அவர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் எழுதினார். 1987ம் ஆண்டின் முதல் பகுதியில் அவர் எழுதிய இந்த நூல் இன்றும் இலக்கிய உலகின் ஒரு மகுடம்.

  1. டு அத்தீனா, ஃப்ரம் பிரிசன்  (To Althea, from prison )

1642ம் ஆண்டு ரிச்சர்ட் லவ்லேஸ் இந்த நூலை எழுதியபோது சிறைக் கைதியாக இருந்தார். சிறையின் கதவுகள் என்னை அடைக்க முடியாது. என் மனமெனும் பறவை சிறகுகள் முளைத்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கிறது. அதை யாரும் அடக்க முடியாது என்றெல்லாம் அவரது கவிதைகள் சிறையின் தளத்திலிருந்து, வானத்தின் எல்லையை நோக்கிப் பறக்கின்றன.

அல்தேயா எனும் அந்தப் பெண், கவிஞருடைய கற்பனையில் உதித்த பெண்ணாக இருக்கலாம். அல்லது அவருடைய காதலியின் கற்பனைப் பெயராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நீதி மறுக்கப்படும் சூழலையும், நாட்டில் நிலவிய அப்போதைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் கவிதைகள் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றன. ரிச்சர்ட் லவ்லேஸ் எழுதிய படைப்புகளில் மாஸ்டர் பீஸ் இது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. டிஸ்கவரி ஆஃப் இந்தியா ( Discovery Of India )

ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்த காலகட்டமான 1942 ..1946 ல் எழுதப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்த நூல். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தினால் அவர் சிறைபிடிக்கப் பட்டிருந்தார். இந்திய வரலாறு குறித்த ஒரு தெளிவான நூல் இது எனும் பொதுவான விமர்சனம் இந்த நூலுக்கு உண்டு. இதில் துல்லியமான வரலாற்று நிகழ்வுகளோ, கால பதிவுகளோ இல்லை. ஆனால் கலாச்சாரம், பண்பாடு, மக்கள், உணர்வுகள் போன்றவை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர கால இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் பெருமளவு உதவுகிறது. கட்டுரைகள், சிந்தனைகள், தத்துவ வெளிப்பாடுகள் போன்ற பல விஷயங்களின் கூட்டுத் தொகுப்பாக இந்த நூலைக் கருதிக் கொள்ளலாம். இந்த நூல் தொலைக்காட்சி தொடராகவும் வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

  1. இன்ட்ரடக்ஷன் டு மேதமெடிகல் பிலாஸஃபி  ( Introduction To Mathematical Philosophy )

ரஸல் 1872ம் ஆண்டு பிறந்து 1970 வரை வாழ்ந்த ஒரு தத்துவ ஞானி. இவருக்கு கணிதவியல் நிபுணர், வரலாற்று ஆய்வாளர், படைப்பாளர், விமர்சகர், அரசியல் வாதி உட்பட பல்வேறு முகங்கள் உண்டு.

இவருடைய படைப்புகளில் முக்கியமான ஒன்று கணிதவியல் தத்துவம் பற்றியது. கணிதத்துக்கும் தர்க்கவியல் (லாஜிக்) சித்தாந்தங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பும் உண்டு. தர்க்கவியலில் இளையவன் தான் கணிதம், கணிதத்தின் முதிர்ச்சி தான் தர்க்கவியல் என கணிதத்தை தத்துவ சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். இந்த நூலை எழுதிய போது சிறையில் இருந்தார்.

ஜெயில் தான் சூப்பர். யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. வேற அப்பாயின்ட்மென்ட் ஏதும் கிடையாது. எங்கேயும் போக வேண்டிய தேவையில்லை. எழுதறதுக்கு பெஸ்ட் பிளேஸ்என்கிறார் அவர். 1950ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

  1. லாங் வாக் டு ஃபீரீடம்  (The Long Walk To Freedom )

நெல்சன் மண்டேலாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. கருப்பின விடுதலை என்றாலே நமது மனதில் நிழலாடும் பெயர் நெல்சன் மண்டேலா தான். 27 ஆண்டு காலம் சிறையில் கடுமையான அவதிகள் பட்டவர் அவர். சிறையில் வசதிகள் இல்லாமலும், கடுமையான உடலுழைப்பினாலும் கலங்கியவர். இவர் சிறையில் இருந்த இந்த காலகட்டத்தில் தனது வாழ்க்கை வரலாற்றின் பெரும்பகுதியை எழுதி முடித்தார்.

1990ம் ஆண்டு சிறைவாசம் முடித்து வெளியே வந்த மண்டேலா அடுத்த சில ஆண்டுகளில் 1995ம் ஆண்டு இந்த நூலை வெளியிட்டார். வாசகர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தரவல்லன இவருடைய எழுத்துகள். 2013ம் ஆண்டு அவருடைய இந்த நூல் சினிமாவாகவும் முகம் காட்டியது.  

  1. 120 டேஸ் ஆஃப் சோதோம்  (The 120 Days Of Sodom )

மார்கஸ் டி சேடு இந்த நூலை எழுத எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் முப்பத்தேழு தான் ! 1785களில் சிறைவாசம் அனுபவித்த நாட்களில் அவர் இதை எழுதினார். எழுதுவதற்குப் பேப்பர் கிடைக்காத சிறைச்சாலை சூழலில் கிடைத்த சின்னச் சின்ன துண்டு காகிதங்களில் எழுதி அதை ஒட்டி ஒட்டி ஒரு பெரிய பேப்பர் சுருளாக வைத்திருந்தார் அவர்.

ஒருநாள் அவர் விடுதலையான போது தனது படைப்பைத் தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்து போனார் அவர். இரத்தத்தால் எழுதிய எழுத்துகள் என்னை விட்டுப் போய்விட்டதே என புலம்பினார். அவரது துரதிர்ஷ்டம், அவர் சாகும்வரை அந்த படைப்பு கண்டுபிடிக்கப்படவேயில்லை.

பின்பு அது எப்படியோ கண்டெடுக்கப்பட்டு 1904ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பாலியல் நெடி தூக்கலாக உள்ள இந்த நூலை, “உலகம் தோன்றியது முதல் எழுதப்பட்ட நூல்களில் தூய்மையற்ற நூல் இதுஎன ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மிகவும் பிரபலமான படைப்பு இது.

  1. பில்கிரிம்ஸ் பிராஸஸ்  (The Pilgrim’s Progress )

ஒரு நூல் 1300 பதிப்புகளைக் காண முடியுமா ? இந்த நூல் கண்டிருக்கிறது. 1678ம் ஆண்டு வெளியான இந்த நூலை எழுதியவர் ஜாண் புனியன் என்பவர். கிறிஸ்தவம் சார்ந்த பின்னணியில் எழுதப்பட்டுள்ள ஆங்கில இலக்கியம் இந்த நூல். இருநூறுக்கும் மேற்பட்ட மொழியில் இது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நெடிய பன்னிரண்டு ஆண்டு காலம் இவர் சிறையில் வாடினார். அப்போது தான் இந்த ஆன்மீகச் செறிவும், இலக்கியச் செறிவும் கொண்ட நூலை எழுதினார். இந்த நூல் தான் அவருடைய 60க்கும் மேற்பட்ட படைப்புகளில் முதன்மையானது. இவர் 1688ல் இறந்தார், ஆனால் இவரது நூல் பிரிண்ட் செய்யப்படுவது மட்டும் நிற்கவேயில்லை.

  1. ஹிம் டு பிலோரி  (A Hymn to the Pillory)

டேனியல் டிஃபோ 1660ம் ஆண்டு பிறந்த ஒரு பிரபல எழுத்தாளர். மிகவும் பிரபலமான லைஃப் அன்ட் அட்வன்சர்ஸ் ஆஃப் ராபின்சன் குரூசோ நாவல் இவர் எழுதியது தான். இவருடைய இந்த ஹிம் டு பிலாரி சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. இது கவிதை வடிவிலானது.

இந்த நூல் பிரின்ட் செய்யப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட போது எழுத்தாளருக்கு மிகப்பெரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது. அவரை சிறை கைதியாகப் பார்க்காமல் மக்கள் அவரை பிரபலமான மனிதராகப் பார்த்தார்கள். அவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்த சிறைப் பதிவு பிடித்திருக்கிறது.

TOP 10 : காஸ்ட்லி விபத்துகள்.

Image result for space shuttle columbia accident

  1. செர்னோபில் விபத்து ( Chernobyl  )

1986 ஏப்பிரல் 26  ம் தியதி யுக்ரைனிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தது. அந்த நிலையத்தின் நான்காம் எண் ரியாக்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. யுக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகே நடந்தது இந்த விபத்து. இந்த விபத்து தான் உலகிலேயே அதிக காஸ்ட்லி விபத்து. யுக்ரைனிலுள்ள பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு வகையில் இதனால் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 இலட்சம் பேர் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1.7 மில்லியன் மக்கள் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டன. இந்த விபத்தினாலும், இதன் பின்விளைவுகள் தோற்றுவித்த கேன்சர் போன்ற நோய்களினாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றே கால் இலட்சம்.

சரியான பாதுகாப்பு விதிகளைப் பயன்படுத்தாததால் ஏற்பட்ட இந்த விபத்தினால் செலவான பணம் 200 பில்லியன் டாலர்கள் !

  1. கொலம்பியா விண்கல விபத்து

கல்பனா சாவ்லா வை பலி கொண்ட விபத்து என்றால் சட்டென நினைவுக்கு வரும். 2003ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தியதி கொலம்பியா விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியது. விண்கலத்தில் ஏற்பட்ட சின்ன பழுது இந்த விண்கலத்தையே பல உயிர்களுடன் சாம்பலாக்கியது. இந்த விண்கல விபத்தினால் ஏற்பட்ட இழப்பு சுமார் 16 பில்லியன் டாலர்கள். விண்வெளி விபத்துகளில் அதிக காஸ்ட்லி விபத்து இது தான்.

இந்த விபத்து குறித்த விசாரணை ஆய்வுகளுக்காக செலவான தொகை 500 மில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக காஸ்ட்லியான விபத்து விசாரணையும் இது தான்.

  1. பிடிஸ்டீஜ் எண்ணை விபத்து

77000 டன் எடையுள்ள எரிபொருளுடன் கடலில் சென்றது பிரஸ்டிஜ் ஆயில் டேங்கர் கப்பல். ஸ்பெயினிலுள்ள கலீசியா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தபோது பெரும் புயலில் சிக்கியது. பன்னிரண்டு எண்ணை டேங்க்கள் இதனால் வெடித்துச் சிதறின. உப்புக் கடல் எண்ணைக் கடலானது. உதவிக்காக மாலுமி அருகிலுள்ள நாடுகளைக் கெஞ்சினார். யாராவது உதவுவார்கள் என்பது அவருடைய எண்ணம் ஆனால் நடந்தது வேறு. கரைக்கே வராமல் ஆழ்கடலுக்குப் போ என எல்லா நாடுகளும் மாலுமியை வற்புறுத்தினர். நிராயுதபாணியான கேட்பன் கொஞ்சம் கொஞ்சமாய் கப்பலுடன் கடலில் மூழ்கினார்.

2002ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நடந்த இந்த விபத்து உலகிலேயே அதிக காஸ்ட்லியான விபத்துகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 20 மில்லியன் காலன் எண்ணை கடலில் சிந்தியது. இந்த் விபத்தில் விரையமான தொகை 12 பில்லியன் டாலர்கள்.

  1. டைட்டானிக்

டைட்டானிக் கப்பல் உருவாக்க அன்றைக்கு செலவிடப்பட்ட தொகை 7.5 மில்லியன் டாலர்கள். இன்றைக்கு உத்தேசமாக 180 மில்லியன் டாலர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். பணத்தைத் தாண்டி டைட்டானிக் விபத்து பல்வேறு கனவுகளையும், உயிர்களையும் சிதைத்து விட்டது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். 1500 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இந்த விபத்து நடந்தது 1912ம் ஆண்டு ஏப்பிரல் 15ம் தியதி.

2007ம் ஆண்டு டைட்டானிக் கதையை படமாக எடுக்க ஜேம்ஸ் கேமரூன் செலவிட்ட தொகை 200 மில்லியன் டாலர்கள். உலகெங்கும் இந்தப் படம் வாரிக் குவித்த வசூல் 2.18 பில்லியன் டாலர்கள்.

  1. சேலஞ்சர் விபத்து

1986ம் ஆண்டு சனவரி 28ம் நாள். சேலஞ்சர் எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக 73 வினாடிகள் பறந்த விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியது. இந்த விண்கலத்தின் இணைப்புகள் ஒன்று சரியாக இணையாததால் கசிவு ஏற்பட்டு அது ஒரு மிகப்பெரிய விபத்தாக மாறி விட்டது.

அந்த விபத்தினால் நாசமான ஸ்பேஷ் ஷட்டில் இன்றைய கணக்குபடி 4.5 பில்லியன் டாலர்கள். அன்று அது 2 பில்லியன் டாலர்கள். இது ஏன் வெடிச்சுது ? எதுக்காக வெடிச்சுது ? இந்த தப்பை யார் தலையில அடிச்சு வைக்கலாம் என நடத்திய விசாரணைகளுக்கு மட்டும் 450 மில்லியன் டாலர்கள் செலவானது !

  1. பைப்பர் ஆல்ஃபா ஆயில்  ரிக்

ஒரு ஊழியர் ஒரு பாதுகாப்பு வால்வை உருவி எடுத்து செக் பண்ணிவிட்டு திரும்ப மாட்டவில்லை. கவனக் குறைவாக செயல்பட்ட ஒரு குட்டி விஷயம், அது தான் உலகின் மிகப்பெரிய ஆயில் விபத்துக்குக் காரணமாகிவிட்டது. நாளொன்றுக்கு 3.2 இலட்சம் பேரல் அளவுக்கு ஆயில் உற்பத்தி செய்யக்கூடிய தளம் அது.

இரவு பத்து மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்த அந்த எண்ணை தளம் யாராலும் அணைக்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. 167 பேர் வேலைசெய்து கொண்டிருந்தனர். ஒருவரும் தப்பவில்லை. செலவுக் கணக்கு 1988 கணக்குபடி 3.5 பில்லியன் டாலர்கள்.

  1. எக்ஸான் வெல்டிஸ்

கொஞ்சம் எண்ணை கொட்டிடுச்சு, அதை கிளீன் பன்றதுக்கு ஆன செலவு “உலகிலேயே அதிகமாக” என மாறிப் போனது. 1989ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தியதி 10.8 மில்லியன் காலன்கள் அளவுள்ள எண்ணை தண்ணீரில் கொட்டி விட்டது. அதை சுத்தம் பண்ணுவதற்கு ஆன செலவு 2.5 பில்லியன் டாலர்கள் !!!

கடல்ல எண்ணை கொட்டினா அவ்ளோ செலவாகுமா என வியக்க வேண்டாம். இது கொட்டிய இடம் அப்படி, அந்த இடத்துக்குப் போவதும், அதை சுத்தம் செய்வதும் ரொம்ப சிக்கலாக மாறிப் போனதால் செலவும் தலை சுற்ற வைத்து விட்டது.

  1. பி 2 பாம்பர் விபத்து

2008ம் ஆண்டு பி2 ஸ்டெல்த் பாமர் எனும் ராணுவ விமானம் கிளம்பிய அடுத்த வினாடியே மூக்கு இடிக்க கீழே விழுந்து பஸ்மமானது. ஏதோ ஒரு விபத்தென்று இதை ஒதுக்கி விட முடியாது. காரணம், இந்த விமானத்தின் விலை அப்படி . மேற்கு பசிபிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குவாம் என்னுமிடத்தில் இந்த விபத்து நடந்தது. இது அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடம்.

இந்த விமான விபத்தினால் அழிந்த தொகை 1.4 பில்லியன் டாலர்கள் என்றால் உறைக்காது, 93 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் மிரட்டும்.

  1. ஃபுகுச்ஜிமா டாய்ச்சி அணு விபத்து

வெகு சமீபத்தில், 2011ம் ஆண்டு நடந்த ஒரு மாபெரும் விபத்து இது. தொடர்ச்சியான அணு உலைக் கருவிகளின் செயலிழப்பினால் இந்த விபத்து ஏற்பட்டது. உலகெங்கும் அணு உலைகளுக்கு எதிரான குரல்கள் வலுவடைய இந்த விபத்தும் ஒரு காரணமாக இருந்தது. சுனாமி அதன் பின் நடந்த நில நடுக்கம் போன்றவை இந்த விபத்துக்குக் காரணமாகிவிட்டது.

இந்த விபத்து கொண்டு வரப்போகும் ஆபத்துகளும், உயிரிழப்புகளும் எத்தனை என்பது இனி வரும் ஆண்டுகளில் தான் தெரியும். இந்த விபத்து தொடர்பாக கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகை மட்டுமே சுமார் 60 பில்லியன் என்கிறது ஒரு புள்ளி விவரம். அணு உலை மிகவும் பாதுகாப்பானது எனும் கூற்றை பொய்யாக்கிய ஒரு விபத்து இது எனலாம்.

  1. வாங்கோன்சாங் விபத்து

1616ம் ஆண்டு மேய் மாதம் 30ம் தியதி நடந்த விபத்து இது. இந்த விபத்தினால் கொல்லப்பட்ட மக்கள் தொகை சுமார் 20,000 என்பது அதிர்ச்சித் தகவல். வாங்கோன்சாங் எனுமிடத்துக்கு அருகே இருந்த வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்து இது.

சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சத்தம் எதிரொலித்தது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப் போனார்கள். வெடித்த இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பொருட்கள் முப்பது கிலோமீட்ட்டர் தொலைவைத் தாண்டி போய் விழுந்தன. இது கடவுள் கொடுத்த தண்டனை என்று அந்த காலத்தில் மக்கள் சொல்லிக் கொண்டனர்.

TOP 10 : உலகுக்கு அல்வா கொடுத்தவர்கள்

Image result for sea monster fake

சிலர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அல்வா கொடுப்பார்கள். சிலர் தான் சர்வதேச அளவில் அல்வா கொடுத்து அப்பாவியாய் நடமாடுவார்கள். அப்படி உலகத்தையே முட்டாளாக்கிய சிலருடைய திறமையைப் பார்ப்போம்.

  • ஹிட்லரின் டைரி

கோன்ராட் ஹூஜா என்பவரிடம் இருந்தது குட்டிக் குட்டியாய் 60 புத்தகங்கள். இந்தப் புத்தகங்களை தன் கைப்பட எழுதியது சாட்சாத் அந்த ஹிட்லரே தான் ! என்றார் கோன்ராட். ஆஹா வந்தாள் மகாலக்ஷ்மி என, இந்த புத்தகங்களை 6 மில்லியன் டாலர்கள் அள்ளிக் கொடுத்து வாங்கியது  “டெர் ஸ்டெயின்” எனும் ஜென்மன் பத்திரிகை.

“இந்த நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு” இது என 1983 ஏப்ரல் 22ம் நாள், அந்த நாளிதழ் குதூகலத்துடன் செய்தியையும் வெளியிட்டது.

இரண்டே வாரங்கள் தான் ! மேட்டரைப் படித்தவர்களுக்கு சந்தேகம் வர, நூல்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது தான் தெரிந்தது கோன்ராட் கொடுத்த ஆறு மில்லியன் டாலர் அல்வா ! நவீன காகிதத்தில், லேட்டஸ்ட் பேனா கொண்டு, தப்புத் தப்பாக எழுதிய புத்தகத்தை உண்மையென்று நம்பிய “ரொம்ப நல்லவரான” டெர் ஸ்டெயின் பத்திரிகை டெரர் ஆனது. அப்புறம் என்ன ? கில்லாடி கோன்ராட் 42 மாதம் ஜெயிலுக்குப் போகவேண்டியதாயிற்று !

  • கடலில் ஒரு பிரம்மாண்டம்

1934ம் ஆண்டு ஸ்காட்லாந்து பகுதியிலுள்ள லாச் நிஸ் எனும் ஏரியில் ஒரு மாபெரும் உருவம் தலையை நீட்டிக் கொண்டு நீந்தியது. ராபர்ட் வில்சன் எனும் மரியாதைக்குரிய ராணுவ வீரர் அதைக் கிளிக்கினார்.  அந்தப் படத்தின் உபயத்தில் ராபர்ட் ஒரே நாளில் உலக நாயகன் ஆனார். இந்த உருவத்துக்கு என்ன பெயர் கொடுப்பது என்று குழம்பியவர்கள் கடைசியில் “சார்ஜன்ஸ் போட்டோ” என்றே பெயரிட்டார்கள்.

உலகெங்கும் பரபரப்பைப் பற்ற வைத்த இந்த போட்டோவை நம்பி பலர் ஆராய்ச்சியில் குதித்தனர். திரைப்படங்கள் எடுத்தனர், நூல்கள் எழுதித் தள்ளினர். இது ராபர்ட் வில்சன் உலகுக்குக் கொடுத்த ஒரு ராட்சத அல்வா என்பது 60 வருடங்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.

1994ல் மரணப் படுக்கையில் முனகிக் கொண்டிருந்த 90 வயதான கிறிஸ்டியன் ஸ்பர்லிங் என்பவர் தான் இது ஒரு டுபாக்கூர் போட்டோ என்பதைப் போட்டு உடைத்தார். தானும் வில்சனும் சேர்ந்து இந்த தில்லாலங்கடி வேலையைச் செய்ததாக மரண வாக்கு மூலம் கொடுத்தார் அவர்.

வில்சனுக்கு “பிரம்மாண்டங்களின் மீது பிரியம் அதிகம். ஒரு முறை ஒரு ராட்சத மனிதனின் காலடித் தடத்தைக் கண்டு பிடித்தேன் என உற்சாகமாய் குதித்திருக்கிறார்.  வந்து பார்த்தவர்கள், தூ… இது நீர்யானையோட காலடிப்பா என நக்கலடித்தார்களாம். அந்த கடுப்பில் எல்லாரையும் முட்டாளாக்க நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இந்த வில்சன் !.

  • ஏலியன் போஸ்ட்மார்ட்டம்

1947ல் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோவில், ரோஸ்வெல் என்னுமிடத்தில் உடைந்து விழுந்தது ஒரு பறக்கும் தட்டு. அங்கே பல வித்தியாசமான பொருட்கள் கிடைத்தன,  வேற்றுக்கிரக வாசிகளின் உடல்கள் கிடைத்தன என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1995ல் ரே சாண்டிலி என்பவர் ஒரு டாக்குமெண்டரியை வெளியிட்டார். 1947ல் கிடைத்த ஒரு ஏலியனின் போஸ்ட்மார்ட்டம் இது என ஒரு ஏலியனைக் காட்டினார்.

உலகெங்கும் சரசரவென தகவல் பரவ “ரே” ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். ஆனால் பாவம் அது நீடிக்கவில்லை. 1947ல் எடுத்த படம் என அவர் காட்டிய வீடியோவின் பின்னணியில் 1967க்குப் பிறகு வந்த சில விஷயங்கள் தெரிய ரே மாட்டிக் கொண்டார். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை கணக்கா, இது ஒரிஜினலோட டூப்ளிகேட். ஆனா ஒரிஜினலை நான் பாத்திருக்கேன் என இன்னொரு அல்வாவுக்குத் தயாராக, உஷாரானவர்கள் “சரி..சரி… கிளம்புங்க காற்று வரட்டும்” என்று சொல்லிவிட்டார்கள்.

  • பில்ட்டவும் மண்டை ஓடு !

1912ல் கண்டு பிடிக்கப்பட்ட பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு உலகப் புகழ் பெற்றது. இங்கிலாந்திலுள்ள பில்ட்டவும் எனுமிடத்தில் கிடைத்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது. இது ஆதி மனிதனுடைய எலும்புக் கூடு என சிலாகித்தனர் பலர் . குரங்கிலிருந்து மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்தான் என்பதை அறிய உலகிற்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு என கொண்டாடினார்கள்.

நாற்பது வருடங்கள் வரை இது ஒரு அல்வா ஓடு என்பது யாருக்கும் தெரியவில்லை. 1953ல் விஷயம் வெளியே வர அப்செட் ஆகிப் போனது கூட்டம். இந்த மண்டையோட்டின் மேல் பாகம் சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய மனிதனுடையது. கீழ்த் தாடை ஒராங்குட்டான் எனும் மனிதக்குரங்கினுடையது. இரண்டையும் சாமர்த்தியமாக இணைத்து ஒரு மண்டை ஓடை உண்டாக்கியிருக்கிறார்கள். இப்படி செம பிரில்லியண்டாக உலகுக்கே அல்வா கொடுத்தவன் யார் என்பது மட்டும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை !  

  • பீஜீ கடல்கன்னி  

பி.டி பர்னம் என்பவருடைய சர்க்கஸ் சட்டென உலகப் புகழ் பெற்றது. காரணம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீஜீ கடல்கன்னியின் உடல். வால்ப்பாகம் மீன், தலைப்பாகம் மனிதனைப் போன்ற உடல் என திகிலாய் இருந்தது உருவம். மோசஸ் கிம்பல் என்பவரிடம் அகப்பட்ட இந்த கடல்கன்னியை வாரம் 12.5 டாலர்கள் எனும் கணக்கில் வாடகைக்கு வாங்கியிருந்தார்  பி.டி.பர்னம்.

ரொம்ப காலத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது இது ஒரு பலே மோசடி என்பது !. உண்மையில் இதன் வால்ப்பகுதி ஒரு பெரிய மீனுடையது. கழுத்து மற்றும் உடல் ஒரங்கொட்டான் எனும் மனிதக் குரங்கிற்குச் சொந்தமானது. தலை ஒரு குரங்கினுடையது. இப்படி மூன்றையும் சேர்த்துக் கட்டி காசு பார்த்திருக்கிறார் கில்லாடி கிம்பல் ! அப்புறமென்ன அல்வா சாப்பிட்டவர்கள் வாயைத் துடைத்துக் கொண்டார்கள். !   

  • த டுர்க்

ஆஸ்திரியாவிலுள்ள ஷோன்பர்ன் அரண்மனையில் 1970ல் “த டுர்க்” காட்சிக்கு வந்தபோது எல்லோரும் வியந்து போனார்கள். உலகின் முதல் “செஸ் விளையாடும் மெஷின்” இது. “தைரியம் இருந்தால் எனது மெஷினுடன் விளையாடி ஜெயிக்கலாம்” என சாவால் விட்டார் இதை உருவாக்கிய கெம்ப்லீனின். பலர் விளையாட வந்தார்கள். தோற்றுப் போனார்கள். இந்த தோற்றுப் போனவர்கள் பட்டியலில் ஆளானப்பட்ட நெப்போலியன், பெஞ்சமின் பிராங்கிளின் எல்லாம் அடக்கம்.

ஒரு மேஜை போன்ற இந்த மிஷினின் ஒரு பொம்மை உட்கார்ந்திருக்கும். அது தான் காய்களை நகர்த்தும். விளையாட ஆரம்பிக்கும் முன் மேஜையின் கதவுகளையெல்லாம் பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டுவார் கெம்ப்லீன். உள்ளே யாரும் இல்லை என உறுதிப்படுத்த ! ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது உள்ளே ஒரு செஸ் கில்லாடி உட்கார்ந்து “விளையாடிய” சமாச்சாரம். பலர் சந்தேகப்பட்டாலும் சுமார் 84 ஆண்டு காலம் உலகை முட்டாளாக்கியது இந்த டுர்க்.

1854ல் தீப்பிடித்ததில் டுர்க்கும் சமாதியாகிவிட்டது. இதைக் கடைசியாக வைத்திருந்த டாக்டர் சிலாஸ் மிச்செல் தான் இதன் நுட்பங்களை விளக்கி உலகை வியக்க வைத்தார் ! நெப்போலியனுக்கே அல்வா கொடுத்த கெம்பலீனை  பாராட்டமல் இருக்க முடியுமா ?

  • கோ ஆஸ்க் அலீஸ்

இந்தப் புத்தகம் வெளியானபோது மிகப்பெரிய பரபரப்பு எல்லோரையும் தொற்றிக் கொண்டது. விழுந்தடித்துக் கொண்டு மக்கள் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்தார்கள். வாசித்தவர்களெல்லாம் உச்சு கொட்டினார்கள். காரணம் இல்லாமல் இல்லை.

இந்த நூல் போதைக்கும், பாலியலுக்கும், மன அழுத்தத்துக்கும் அடிமையான ஒரு பதின் வயதுப் பெண்ணின் கதை. வாழ்க்கையின் வலிகளைச் சுமந்த அந்த பெண் கடைசியில் அளவுக்கு அதிகமான போதையைச் சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு இறந்து போனாள் என்பதே கதை.

உண்மைக் கதை எனும் பெயரில் வெளியானதால் இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 1971ம் ஆண்டு வெளியான இந்த நூல் உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் இது ஒரு டுபாக்கூர் நாவல் என்பதும், இதை எழுதியவரின் கற்பனையில் உதித்தது என்பதும் பல ஆண்டுகளுக்குப் பின்பு தான் தெரிய வந்தது.

ஸ்பார்க்ஸ் என்பவர் தொகுத்ததாகச் சொல்லப்பட்ட இந்த நூல், பின்னர் அவரே எழுதியதாக மாறிப் போனது. பள்ளிக்கூடங்களிலெல்லாம் இந்த நூல் தடை விதிக்கப்பட்டது. இப்போது, “இது ஒரு கற்பனைக் கதை” எனும் அடைமொழியுடன் தான் வெளியாகிறது இந்த உலகை ஏமாற்றிய நூல்.

  • உலகப் போர் 1, புகைப்படங்கள்

“நான் ராணுவத்தில் பணிபுரிந்த போது எடுத்த புகைப்படங்கள் இவை. என்னுடைய பெயரை வெளியிட முடியாது. காரணம் இந்த புகைப்படங்களை எடுக்க ஏராளமான ராணுவ விதிமுறைகளை மீறியிருக்கிறேன். ஆள் அடையாளம் தெரிஞ்சா தூக்குல போட்டுடுவாங்க. இந்த புகைப்படங்களை உயிரைப் பணயம் வெச்சு எடுத்திருக்கேன்.” இப்படி ஒரு அடைமொழியோடு பல புகைப்படங்கள் 1933ம் ஆண்டு பிரசுரமானது.

பார்த்தவர்களெல்லாம் மிரண்டு போனார்கள். இவ்வளவு தத்ரூபமாக, இவ்வளவு தெளிவாக, இவ்வளவு அபூர்வமான புகைப்பாங்களை யாருமே எடுத்ததில்லை. அதுவும் வானத்தில் நடக்கும் விமானச் சண்டை மிரட்டல் ரகம் என விமர்சித்துத் தள்ளினார்கள். இதை எடுத்தவர் பெயர் ஆர்ச்சர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகைப்படங்களை கிளாடிஸ் எனும் பெண் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்றார். போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்கினாகள். அது இதழ்கள், பாட நூல்கள் என பல இடங்களில் இடம்பெற்று ஒட்டு மொத்த மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த போட்டோ எல்லாம் டுபாக்கூர் என்பதை 50 வருடங்களுக்குப் பிறகு தான் கண்டு பிடித்தார்கள். கொஞ்ச நாள் ராணுவத்தில் பணி புரிந்த ஆர்ச்சர் பின்னர் சினிமா பக்கம் போனார். சினிமாவுக்கு செட் அமைக்கும் வேலை அவருக்கு. இப்போது புரிந்திருக்குமே இந்த புகைப்படங்கள் எப்படி உருவாயின என்பது ?! அந்த புகைப்படங்களை விற்ற கிளாடிஸ் வேறு யாருமல்ல, இவருடைய மனைவி தான் !

  • கிரைனி பறக்கும் தட்டு

வானத்தில் ஒரு பறக்கும் ஏலியன் தட்டு. அதை பட்டென புகைப்படம் எடுத்தார் ரஸல் என்பவர். ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். எடுத்த படங்களிலேயே மிக நேர்த்தியாக வந்த பறக்கும் தட்டு இது தான். ஏலியன் கைக்கெட்டும் தூரத்தில் வந்திருப்பது இது தான் முதல்முறை என கொண்டாடினார்கள்.

தங்களிடமிருந்த கேமராக்களை எல்லாம் தூசுதட்டிக் கொண்டு மக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடக்கத் துவங்கினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தான் அது ஒரு போலியான புகைப்படம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரஸலின் நண்பர் ஒருவர் தொப்பியை எடுத்து வானத்தில் வீச, அதை இவர் கிளிக்க, ஏலியன் கதை உருவானதாம்.

  • இறந்து வாழ்ந்தவர்

ஆர்தர் பென்னட் என்பவர் கடற்படையில் இருந்தவர். பாலியல் தவறுகளில் ஈடுபட்டார் எனும் காரணம் காட்டி வேலையை விட்டு கழற்றி விட்டார்கள். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஒரு நாள் அவருடைய வீடு தீப்பிடித்து எரிய உடல் கருகி அவர் இறந்து போனார்.

உண்மையில் அவர் இறக்கவில்லை, தனது மரணத்தை தானே போலியாக உருவாக்கினார். குடும்பத்தினருக்கும் தெரியும் ஆனாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டு அவருடைய இறுதிச் சடங்கை நடத்தி முடித்தார்கள். அவர் தனது அடையாளத்தை மாற்றி, கான்டாக்ட் லென்ஸ் போட்டு, முடியை மாற்றி புது மனுஷனாக மாறினார்.

வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவருக்கு உள்ளே இருந்த மிருகம் வெளியே வந்தது. மீண்டும் ஒரு பாலியல் புகாரில் சிக்கினார். அவரது கைரேகை எடுத்தவர்கள் மிரண்டு போனார்கள். அப்படியே ஆர்தர் பென்னட்டோடு ஒத்துப் போனது. பிறகு தான் அவருடைய அல்வாக் கதைகள் வெட்ட வெளிச்சமானது.

TOP 10 : வரலாற்றுச் சதிகள்.

 

Image result for john wilkes booth

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பது சதி வேலைக்கு கன கட்சிதம். கூட இருப்பவர்களே குழி பறித்த கதைகள் வரலாற்றையே புரட்டிப் போடும் வலிமை படைத்தவை. நண்பனாய் இருந்து துரோகியானவர்கள், நம்பிக்கையானவர்களாய் நடமாடி நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், நாட்டையே சுருட்டி உலையில் போட்டவர்கள் என இவர்களுடைய கதைகள் மிரட்டலானவை. அப்படி நடந்த சதி வேலைகளில் ஒரு டாப் 10 லிஸ்ட்.  

  1. புரூட்டஸ்

யாராவது நம்பிக்கைத் துரோகம் செய்தால் “யூ டூ புரூட்டஸ்” என்று சொல்வோம். இந்த உலகப் புகழ் பெற்ற வாக்கியத்தைச் சொன்னவர் த கிரேட் ஜூலியஸ் சீசர். சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் புரூட்டஸைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் இவை.

ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பர் இந்த புரூட்டஸ். கி.மு 44ல் அவரும் அவருடன் சுமார் ஐம்பது பேருமாகச் சேர்ந்து ஜூலியஸ் சீசரைத் தாக்கிக் கொன்றார்கள். ரோம அரசில் ஜூலியஸ் சீசருக்கு எழுந்த அபரிபிதமான புகழ் தன்னை வளர விடாதோ எனும் பொறாமை தான் இந்த சதியின் ஆதாரம்.

யார் என்னை தாக்கினாலும் புரூட்டஸ் என்னோடு இருப்பான் எனும் ஜூலியஸ் சீசரின் நம்பிக்கைக்கு விழுந்த சாவுமணி அது. அந்த அதிர்ச்சி தான் அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது.

  1. லீ ஹார்வி ஆஸ்வால்ட்  

யாருப்பா இவன் என பெயரைக் கேட்டால் குழம்புவோம். இவன் தான் அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியைக் கொன்றவன். 1963 நவம்பர் 22ல் இந்த கொலையை இவன் நிகழ்த்தினான்.

உலகிலேயே ஒரு கொலை அதிக சர்ச்சைகளுடன் ஓடுகிறதென்றால் அது கென்னடியின் மரணம் தான். இன்னும் அவருடைய கொலை குறித்த விவாதங்களும், சர்ச்சைகளும், சந்தேகங்களும் ஓயவில்லை. எட்டாவது மாடியில் இருந்து கொண்டு ஜஸ்ட் லைக் தேட் கென்னடியைச் சுட்டேன் என்றான் இவன். இன்னும் இவன் சொல்வது உண்மை என ஏற்றுக்கொள்ளாத மக்கள் எக்கச்சக்கம். எப்படியோ, கென்னடி கொல்லப்பட்டார் என்பது மட்டும் கசப்பான நிஜமாகிப் போனது.

  1. அந்திரே லுகோவாய்

ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரி அலெக்சாண்டர் வால்டரோவிட்ச் ( Alexander Valterovich ) ஐக் கொலை செய்தவர் இவர் தான். சரி, அதில் என்ன ஸ்பெஷல். ஒரு கொலை தானே என நினைக்கலாம். விஷயம் இருக்கிறது. அவர் கொல்லப்பட்டது போலோனியம் 210 எனும் விஷத்தினால். இது அணு விஷம் !

உலகிலேயே நியூக்ளியர் விஷத்தினால் ஒருவர் கொல்லப்படுவது இதுவே முறை. 2006 நவம்பர் 1ம் தியதி இவர் இறந்து போனார். அந்திரே இவருடன் அமர்ந்து குடித்த தேனீரில் இந்த விஷம் கலக்கப்பட்டிருந்ததாம். மூன்று முறை அலெக்ஸாண்டரைச் சந்தித்து, மூன்று முறையும் தந்திரமாய் விஷம் கொடுத்திருக்கிறார். அந்திரேவும்  சாதாரண ஆளில்லை. ரஷ்யாவின் முக்கிய அரசியல் புள்ளிகளில் ஒருவர் ! அரசியல்வாதியல்லவா “எல்லாம் வெளிநாட்டுச் சதி..”  என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

  1. பெலிக்ஸ் யுசோபோவ்  

ராஸ்புடின்( Grigori Rasputin) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1869 ஜனவரி 22ல் ரஷ்யாவில் பிறந்தவர். இவரை மக்கள் கடவுளாகக் கொண்டாடினார்கள். இவரிடம் ஏதோ ஆன்மீக சக்தி இருப்பதாகவும், குணமளிக்கும் மேஜிகல் பவர் இருப்பதாகவும் பம்மினார்கள். இது போதாதா, உருவாகி விட்டது இவருக்கென்று ரசிகர் படையும், சீடர் படையும்.

ஆனால் ராஸ்புடின் ஒரு சின்ன தப்பு பண்ணி விட்டார். மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் மனைவியுடன் ரகசிய ஸ்னேகிதனாய் இருந்திருக்கிறார். விடுவார்களா ? இளவரசர் பெலிக்ஸ் யுசோபோவ் தன் சகாக்களுடன் வந்து ராஸ்புடினைத் தீர்த்துக் கட்டினார்.

இவர் கொல்லப்பட்ட விதம் தான் இதில் ஹைலைட். முதலில் அவருக்கு விஷம் வைத்திருக்கிறார்கள். ஆள் சாகவில்லை, பின் தலையில் சுட்டிருக்கிறார்கள் அப்படியும் சாகவில்லை. எஸ்கேப் ஆக முயன்றவரை மீண்டும் மூன்று முறை சுட்டிருக்கிறார்கள். ஊஹூம். அப்புறம் மீண்டும் அடித்து சட்னியாக்கிப் பார்த்திருக்கிறார்கள். ஆள் கண் விழித்து “நீங்க ரொம்ப மோசம்” என்றிருக்கிறார்.

நடுநடுங்கிப் போனவர்கள் அவரை மீண்டும் பின்னோ பின்னென்று பின்னி, கோணியில் கட்டி உறைந்த ஐஸ் நதியில் போட்டு விட்டார்கள். மூன்று நாளுக்குப் பின் பாடி மேலே வந்தது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தவர்கள் பதறினார்கள். காரணம் அவர் ஐஸ் நதியிலிருந்து வெளியே வர ரொம்பவே முயற்சி செய்தார் என்று கூறப்பட்டிருந்தது !

  1. ஜாண் வைக்ஸ் பூத்

ஒரு அரசியல் கொலை மூலம் உலகப் புகழ் பெற்றவர் இந்த ஜாண் வைக்ஸ் பூத். இவர் கொன்ற நபர் ஆபிரகாம் லிங்கன்.

ஏப்பிரல் 14 ம் நாள் 1865ம் ஆண்டு இந்தச் சதி நடந்தது. வாஷிங்டனிலுள்ள ஃபோர்ட் திரையரங்கில் வைத்து பின்னந்தலைக்கு மிக அருகே துப்பாக்கியை வைத்து சுட்டார். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம். இந்தச் சதியில் லிங்கனின் அரசவை உயரதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது. ஒருவகையில் “எதிர்கட்சிகளின் சதி” என்பது இவர் விஷயத்தில் பொருந்தும்.

அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் படுகொலை செய்யப்பட்ட முதல் மனிதர் ஆபிரகாம் லிங்கன் தான்.

  1. பல்தாசர் ஹ்ஜெரால்ட்

உலக வரலாற்றில் முதன் முறையாக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி ஒரு தலைவரை போட்டுத் தள்ளிய நிகழ்வு இது தான். அமைதியான வில்லியஸ் என அறியப்படும் முதலாம் வில்லியம் தெற்கு பிரான்சில் டச் போராளிகளின் தலைவராக 1544ல் பொறுப்பேற்றவர். இவருடைய செயல்பாடுகள் நெதர்லாந்து ஸ்பெயின் நாடுகளை ஆண்ட மன்னன் இரண்டாம் பிலிப்புக்கு மிகப்பெரிய குடைச்சல். எப்படியாவது இவனை ஒழித்துக் கட்டவேண்டும் என முடிவெடுத்தார்.

என்னன்னவோ வேலைகள் செய்தும் எதுவும் வெற்றியடையவில்லை. அவனைக் கொல்பவருக்கு இருபத்தாயிரம் ரூபாய் தருவேன் என பரிசு அறிவித்தான். அந்தப் பரிசுப்பணத்துக்காக பலர் முயன்றார்கள். அப்போது அது மிகப்பெரிய பணம். வெற்றியடைந்தது ஜெரால்ட் தான். ரகசியமாக அவருடைய வீட்டு மாடிக்குச் சென்று, திடீரென அவருக்கு முன்னால் தோன்றி மூன்று முறை சுட்டு அவரை வீழ்த்தினான்.

  1. ஆல்பிரட் ரெட்

ஆல்பிரட் ரெட் ! முதலாம் உலகப் போர் காலத்தில் வாழ்ந்தவர். ஆஸ்திரிய நாட்டு உயரதிகாரியான இவர் ஒரு ரஷ்ய உளவாளி. யாருக்குமே கொஞ்சமும் சந்தேகம் வராதபடி இவருடைய வாழ்க்கை இருந்தது அதிசயம் தான். கூடவே பிரான்சுக்கும், இத்தாலிக்கும் கூட இரட்டை உளவாளியாய் வாழ்ந்தார் எனும் குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

ஆஸ்திரியாவின் போர் யுத்திகளையும், திட்டங்களையும் ரஷ்யாவுக்குக் கொடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கு மிகப்பெரிய சதி வலையாக இருந்தவர் இவர். பல நாடுகளுக்கு எதிரான ரகசியங்களை ரஷ்யாவுக்குக் கொடுத்து அந்த ரகசியங்களை விற்றதன் மூலம் ரஷ்யாவின் வலிமையை உணர்த்தியவர்.

ரஷ்யாவின் படை பலத்தைப் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்து ஆஸ்திரியப் படையை எதிரிகளின் கையில் சிக்க வைத்தது இவர் செய்த கொடுமைகளில் முதன்மையானது. இதன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆஸ்திரிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வரலாற்றின் மிகப்பெரிய சதிகளில் இவரது சதி மிக முக்கியமானது. இவரது குட்டு வெளிப்பட்டபோது சட்டென தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார்.

  1. ஜான் வால்கர்

அமெரிக்காவின் கடற்படை உயரதிகாரியாக பணியாற்றியவர் ஜான் வால்கர். அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்பது யாருக்குமே தெரியவில்லை. எல்லோருடைய கண்களிலும் மண்ணைத் தூவி மிக வெற்றிகரமான தலைவராக பிலிம் காட்டி வந்தார் இவர். 1968 முதல் 1985 வரையிலான காலத்தில் தான் இவருடைய உளவு வேலைகள் படு தீவிரமாய் இருந்தன. சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய தகவல்களை இவர் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து அமெரிக்காவை பலவீனப்படுத்தினார்.

1976ம் ஆண்டு வேலையிலிருந்து அவர் ரிட்டயர்ட் ஆகும்வரை யாருக்குமே அவருடைய விஷயம் தெரியவில்லை. அவரை போட்டுக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டது வேறு யாருமல்ல, அவருடைய சொந்த மனைவி. ரிட்டயர் ஆன கையோடு டைவர்ஸும் வாங்கிக் கொண்டார் வால்கர். கடுப்பாகிப் போன மனைவி இவரைப் பற்றிய விஷயங்களையெல்லாம் உளவுத் துறைக்குத் தெரிவித்தார்.

“டைவர்ஸ் ஆன டென்ஷன்ல அந்தம்மா உளறுது” என்று தான் முதலில் நினைத்தார்கள். இவர் மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஆனால் தோண்டத் தோண்ட விஷயங்கள் விஸ்வரூபமாய் வெளியே வந்தன. அமெரிக்க வரலாற்றிலேயே கிடுகிடுக்க வைத்த நிகழ்வாய் மாறிப் போனது !

  1. ஜேம்ஸ் அமிஸ்டாட் லஃபயேட்டே

கருப்பினத்தைச் சேர்ந்த இவர் ஒரு அமெரிக்க உளவாளி ! பிரிட்டனுக்கு எதிராக சதுரங்கக் காய்களை நகர்த்த இவர் சொன்ன தகவல்கள் தான் உதவின. அமெரிக்காவின் மிகப்பெரிய பலமாக 1780களில் இவர் இருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரை ஒரு பிரிட்டிஷ் உளவாளியாக அமெரிக்கா சித்தரித்தது தான். அதை உண்மையென்று நம்பிய பிரிட்டிஷ் படைகள் இவரை தங்கள் வியூக உரையாடல்களில் கலந்து கொள்ள வைத்தன. தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்தன.

எல்லாவற்றையும் கேட்டு, குறிப்பெடுத்து அப்படியே அமெரிக்க உளவாளிகளிடம் கொடுத்து கன கட்சிதமாய்  நம்பிக்கை துரோகம் செய்தார். அது தானே உளவாளிகளின் வேலை ! அமெரிக்காவுக்கு பல வெற்றிகள் இதன் மூலம் கிடைத்தன.

உளவு வேலைகளெல்லாம் முடிந்தபின் போதுமடா சாமி என  விவசாயத்துக்குத் திரும்பி மிகப்பெரிய விவசாயி ஆனார். அரசு இவருக்கு வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தது !

  1. தியோடர் ஹால்

அமெரிக்காவின் முதலாவது மற்றும் இரண்டாவது அணு ஆயுதத்தைத் தயாரித்ததில் இவன் கை உண்டு. அதற்காக அமெரிக்கா இவனைக் கொண்டாடியது. யாருக்கும் தெரியாத ஒரு ரகசியப் பக்கம் இவனிடம் இருந்தது. இவன் ரஷ்ய அணு உளவாளி எனும் ரகசியம் தான் அது. ஜப்பானை நாசக் கோட்டையாக்கிய அணு ஆயுதத்தின் ரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாய் சோவியத் உளவுத் துறைக்கு கொடுத்தான் இவன்.

தனது எழுபத்து நான்காவது வயதில் கேன்சர் நோயினால் இறந்து போனார். அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து. உலகின் பல நாடுகளும் அதை வைத்திருக்க வேண்டும். அல்லது யாருமே வைத்திருக்கக் கூடாது. அந்த சிந்தனையில் தான் நான் அணு ஆயுத ரகசியத்தை ரஷ்யாவுக்குக் கொடுத்தேன் என்றார் இவர்.

TOP 10 : தொலைக்காட்சித் தொடர்கள்

Image result for the moment of truth series

உலக அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் எப்படி இருக்கின்றன ? நம்ம ஊர் டிவி போல அழுகாச்சி தொடர்களாலும், இளமை ஆட்டங்களாலும் நிரம்பியிருக்கிறதா ? இல்லை ஏதேனும் புதுமை இருக்கிறதா ? சர்வதேச சானல்களை புரட்டி எடுத்ததில் சுவாரஸ்யமாய்க் கிடைத்த பத்து நிகழ்ச்சிகள் இவை.

  1. ஹாண்டிங்  

காஞ்ஜுரிங் போல சினிமா விஷயமல்ல இது. உண்மையிலேயே பேய்களைப் பார்த்தவர்களின் பதறடிக்கும் வாக்குமூலம். ” இரத்தத்தை உறைய வைக்கும், மயிற்கூச்செரிய வைக்கும்”  என்றெல்லாம் அடைமொழி கொடுக்கலாம் இந்த சீரியலுக்கு. பேய்களின் அட்டகாசம், பேய் ஓட்டுவது, பேயை வரவழைப்பது, காட்சி தெரிவது என திடுக் திடுக் நிமிடங்களைப் பதிவு செய்வது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். கற்பனை கலக்காத அக்மார்க் உண்மைகளுக்கு மட்டுமே இதில் அனுமதி என்கின்றனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள்.

பேய்களை நேரில் பார்த்தவர்கள் அந்த நிகழ்ச்சியை விளக்கும் போது அவர்களுடைய கண்களின் மின்னும் பேய் பயமே நிகழ்ச்சியின் ஹைலைட். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, தைவான் என உலகின் பல இடங்களிலும் பறந்து பறந்து நிகழ்ச்சி தயாராக்குவது இன்னொரு ஸ்பெஷல். நிஜமாய் பேய்களைப் பார்த்தவர்களின் காட்சி விவரணைகள் நமது முதுகெலும்பில் ஐஸ் நதியை ஓட வைக்கிறது !

  1. டெஸ்ட்ராய்ட் இன் செகண்ட்ஸ்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல, சட்டுன்னு நடந்து போச்சுஎன சொல்கிறோமல்லவா ? அந்த ஒன்லைன் தான் இந்த நிகழ்ச்சியின் மையம். ரன்வேயில் சாதாரணமாய் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் சட்டென தீப்பிடிக்கும். வேகமாய் போய்க்கொண்டிருக்கும் படகுகள் எதிர்பாராமல் மோதிச் சிதறும். ரேஸ் கார்கள் இரண்டு மோதி வெடிக்கும். அமைதியாக இருக்கும் இடத்தில் திடீரென வெடி குண்டு வெடிக்கும். இவையெல்லாம் இந்த நிகழ்ச்சியின் சில சாம்பிள்கள்.   

பார்வையாளனின் மனதில் அதிர்ச்சிக் கண்ணிவெடியை வெடிக்க வைத்து, நிகழ்ச்சியின் பின்னணியை விரிவாக அலசுவது இந்த நிகழ்ச்சி. கற்பனை, கிராபிக்ஸ் கலக்காத உண்மை சம்பவங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். இதன் குறையாத திரில்லுக்கு எக்கச்சக்கமாய் ரசிகர்கள். செம ஹிட் நிகழ்ச்சியாய் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் துவங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.  

  1. டர்ட்டி ஜாப்

தலைப்பை மறுபடியும் வாசிக்க வேண்டாம். உண்மை தான். இப்படியும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இருக்குமா ? என வியக்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி. யாருமே செய்ய வெறுக்கும், கூச்சப்படும், முகம் சுழிக்கும் வேலைகள் தான் இந்த நிகழ்ச்சியின் கதா நாயகர்கள். நம்ம ஊர் உதாரணம் வேணும்னா சாக்கடை சுத்தம் செய்யறது என்று வெச்சுக்கலாம். வெறுமனே அந்த நிகழ்ச்சியைப் பற்றிமூக்கையும், கேமராவையும்பிடித்துக் கொண்டு பேசுவதல்ல இந்த ஷோ.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் மைக் ரோவே அந்த கடினமான வேலையில் குதித்து ஒரு நாள் வேலை செய்து அதன் சிரமங்களை சுவாரஸ்யமாய் விளக்குவதால் இந்த நிகழ்ச்சி படு பயங்கர ஹிட். பெரும்பாலும் இப்படிப்பட்ட அழுக்கான வேலை செய்பவர்கள் உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அழுக்கில்லாத வேலை செய்பவர்கள் தான் அழுது வடிகிறார்கள் என்பது இவர் தரும் தத்துவ பளிச் ! சுமார் ஏழு ஆண்டுகள் பட்டையைக் கிளப்பிய இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சின்ன பிரேக் விட்டிருக்கிறார்கள்.

  1. பிளைண்ட் டேட்

மேலை நாடுகளில் ஏறக்குறைய எல்லா சானல்களிலும் அரைக்கப்படும் ஒரு நிகழ்ச்சி டேட்டிங் ஷோ. நம்ம ஊர்ஜோடி நம்பர் 1” போல இத்தகைய டேட்டிங் ஷோக்களிலும் ஒரு ஜோடி வெற்றி பெறும் ! யூகேவிலுள்ள பிளைண்ட் டேட் ஷோ இதில் முக்கியமானது.  இந்த ஷோவின் சாராம்சம் இது தான். மூன்று பெண்கள் வருவார்கள். அவர்கள் டேட்டிங் செல்ல ஒரு  ஆணை தேர்வு செய்யவேண்டும். ஆளை நேரில் பார்க்க முடியாது, போனில் பேசி தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்தபின் நேரில் தரிசனம் தருவார் காதலன். “அடடாஇவனையா செலக்ட் பண்ணினேன்…” எனும் பெருமூச்சுகள் ஆரம்ப சுவாரஸ்யம். அப்புறமென்ன ஜோடிகள் டேட்டிங் செல்ல வேண்டும். அதைவெட்கம் கெட்டகேமரா விடாமல் பின் தொடர்ந்து படம் பிடிக்கும். இதன் ஆஸ்திரேலிய உதாரணம் பெர்பக்ட் மேட்ச் ஷோ. எப்படிப் பட்ட பெயரில் வந்தாலும் இதற்கென குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். உலகெங்கும் பல்வேறு பெயர்களில் வலம் வரும் இந்த நிகழ்ச்சி இளசுகளை வசீகரிக்கும் புதுமையும், காமெடியும் கலந்த நிகழ்ச்சி.

  1. இண்டிப்பெண்டண்ட் லென்ஸ்

வாங்க பழகலாம்என பார்வையாளர்களை வசீகரிக்கும் நிகழ்ச்சி இது. திறமையானவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கலாம். சொல்லப்போனால் இதில் நிகழ்ச்சியை  நடத்துவதே பார்வையாளர்கள் தான்.

அதாவது, பார்வையாளர்கள் எடுக்கும் சிறு சிறு வீடியோ பதிவுகளைக் கொண்டு தான் இந்த நிகழ்ச்சியே அமைக்கப்படுகிறது. கிளிப்பிங்ஸ் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில நிமிடங்கள் ஓடும் உங்கள் குழந்தையின் நகைச்சுவை சேட்டையாய் இருக்கலாம். உங்கள் செல்ல நாய்க்குட்டி செய்யும் அறிவு ஜீவித் தனங்களாக இருக்கலாம். எதேர்ச்சையாய் படம் பிடித்த எதிர்பாராத சில சுவாரஸ்ய வீடியோக்களாய் இருக்கலாம், அல்லது திட்டமிட்டே எடுத்த குறு நாடகங்களாகவும் இருக்கலாம்.   சிறந்த படங்களுக்குப் பரிசுகளும் உண்டு என்பது இதன் ஹிட் அம்சம்.

பார்வையாளர்களே இதில் ஹீரோக்கள் என்பதால் மக்களோடு எளிதில் இந்த நிகழ்ச்சி கலந்து விடுகிறது.

  1. ஜஸ்ட் மினிட்

ஒரு நிமிட நேரம் பேசவேண்டும். சொன்ன வார்த்தையைத் திரும்ப சொல்லக் கூடாது, தொடர்ச்சியாகப் பேச வேண்டும், சொல்ல வேண்டிய கருத்தை ஒட்டியே பேசவேண்டும். அட.. இது தான் தெரியுமே ! நம்ம ஊர் ரேடியோக்களில் வரும் நிகழ்ச்சி என சிலாகிக்கிறீர்களா ?. இந்த நிகழ்ச்சியின் முதல் சுவடு 1951ல் யூகேவில் ஆரம்பித்த ஒன் மினிட் பிளீஸ் எனும் நிகழ்ச்சி தான்.

அது பல்வேறு மாறுதல்களைக் கடந்து 1967ல்ஜஸ்ட் மினிட்என்றானது. கிட்டத்தட்ட இப்போதைய வெர்ஷன் அது ! இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் பின்னர் காப்பியடிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?. ஸ்வீடன் நாட்டில் இந்த நிகழ்ச்சியின் பெயர்பா மினூடென் ! “. இந்த நிகழ்ச்சி மக்களுக்குப் பழகப் பழக, சின்னச் சின்னதாய் ஒவ்வொரு நிபந்தனைகளை அதிகரித்து நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகின்றனர்.

  1. மே டே

மேடே மேடே மேடேஎன்று மூன்று தடவை சொன்னால் ஏதோ பெரிய ஆபத்து என்று அர்த்தம். பெரும்பாலும் கப்பல், விமான தகவல் தொடர்பில் இந்த குறியீடு நடத்தப்படும். அந்த பெயரையே இந்த நிகழ்ச்சிக்கு சூட்டிவிட்டார்கள். காரணம், இந்த நிகழ்ச்சி அலசப் போவது அத்தகைய விஷயங்களைத் தான்.

குற்றம்….. !  நடந்தது என்ன?” ரேஞ்சுக்கு நடத்தப்படும் இன்வெஸ்டிகேஷன் ஷோ இது. சுமார் 60 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வடிவில் ஒளிபரப்பாகிறது.

விமான விபத்துகள் குறித்த இன்வெஸ்டிகேஷன் தான் இதன் மையம். விபத்துக்கு முன், விபத்தின் போது, விபத்துக்குப் பின், என பல கட்டங்களாக நிகழ்ச்சி விரியும். பிளாக்பாக்ஸ் தேடுதல் போன்றவற்றை மிக விரிவாக சுவாரஸ்யங்களுடன் விளக்குவது இதன் ஹைலைட். உண்மை சம்பவங்களின் மர்மங்கள் அவிழ்வதில் இருக்கும் சுவாரஸ்யம் வலி மிகுந்தது. அது தான் இந்த நிகழ்ச்சியின் பலம்.

  1. ஒன் வே அவுட்

ஒன் வே அவுட் என்பது சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் அடங்கிய நிகழ்ச்சி. “ஐயோ….” என பயத்தில் பார்வையாளர்களைக் கண் மூட வைப்பதே இதன் நோக்கம் !  இந்த நிகழ்ச்சியை நடத்திய ஜோனதன் குட்வின்ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரிஎன்கிறார். உடல் முழுதும் இரண்டு இலட்சம் தேனீக்களுடன், ஒரு சிறு பெட்டியில் அடைந்து கிடப்பார். கொஞ்சம் அசைந்தாலும் தேனீக்கள் ஜோனதனின் தேனை எடுத்துவிடும். அந்த பெட்டியை ஆடிக்கொண்டிருக்கும் வாஷின் மிஷினின் மேல் வைக்கச் சொல்வார். பார்வையாளர்களோ பதட்டத்தில் மிதப்பார்கள்.

ஒரு ஷோவில் ஒரு பெட்டிக்குள் அடைபட்டு, அந்த பெட்டியை மலை உச்சியிலிருந்து உருட்டி விடச் சொல்வார். நிமிடத்துக்கு 126 முறை உருண்டு வரும் பெட்டியிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவார்.  உடைந்து கிடக்கும் கண்ணாடிச் சில் குவியலில் செருப்பில்லாமல் நடப்பார், ஆழமில்லாத ஆற்றில் உயரத்திலிருந்து குதிப்பார் !  இந்த ஷோ நடக்கும் போதெல்லாம் விளம்பரதாரர்களுக்கு வேட்டை தான் ! இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறது.

  1. மித் பஸ்டர்ஸ்

இதைத் தான் நாங்க காலங் காலமா கடைபிடிக்கிறோம்என பல விஷயங்கள் நம்மிடையே உண்டு.  அதில் பல விஷயங்கள் மூட நம்பிக்கைகள் தான் என்பது பகுத்தறிவாளர்களின் வாதம். இதைத் தான் மித் என்கிறோம். அந்த மித்தை உடைப்பது தான் இந்த நிகழ்ச்சி.

உலகெங்கும் படு வரவேற்பு பெற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சி இந்த மித் பஸ்டர்ஸ். அமெரிக்கா துவங்கி மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மூட நம்பிக்கைகள், இண்டர்நெட்டில் உலவும் தில்லாலங்கடி கதைகள், போன்றவற்றின் உண்மைத் தன்மைகளை புரட்டிப் போடும் நிகழ்ச்சி இது. “அடஅப்படியா ?” என வியக்கவும், “அட.. இதையா நான் நம்பிட்டிருந்தேன்என வெட்கப்படவும் வைக்கும் ஷோ இது. மிகுந்த சுவாரஸ்யமான ஒரு மர்ம நாவல் போன்ற இந்த ஷோவுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு.  

  1. மொமண்ட் ஆஃப் ட்ரூத்

மொமண்ட் ஆஃப் ட்ரூத்ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. உலகெங்கும் பல விதங்களில் நடத்தப்படும் செம ஹிட் ஷோ இது! இருபத்து ஒரு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு கொஞ்சம் கூட கலப்படமில்லாத  “உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் கருவி காட்டிக் கொடுத்துவிடும். “கோடீஸ்வரன்நிகழ்ச்சி போல கடினமான கேள்விகள் ஏதும் இல்லை.  உங்களுக்கு சர்வ நிச்சயமாய் விடை தெரிந்த சிம்பிள் கேள்விகள் தான்.  !

ஆனால் அதைச் சொல்லி ஜாக்பாட் பரிசுத் தொகையான 5 இலட்சம் டாலர்களை வாங்க ஆளில்லை. காரணம் கேள்விகள் அத்தனை பர்சனல் ! “நேற்று நைட் விமலாவை தள்ளிட்டு கமலா தியேட்டருக்குப் போனியாஎனும் கேள்வி போல சிக்கலில் மாட்டி விடும் கேள்விகளும், “உங்க ஜட்டி கிழிஞ்சிருக்காஎன்பது போன்ற அவமானகரமான கேள்விகளும் இதில் அடக்கம் ! அடக்கடவுளே…  யாருக்கு வேணும் பரிசு ?

TOP 10 : திகில் நகரங்கள்

Image result for abandoned cities

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே திகில் பிய்த்துத் தின்னும். ஒரு ஊரே மர்மமாய், பாழடைந்து போய்க் கிடந்தால் எப்படி இருக்கும் ? ஏதோ ஹாலிவுட் பட பேய்க்கதை போல தோன்றும் இத்தகைய திகில் நகரங்கள் உலகெங்கும் நிறைய இருக்கின்றன. இதை பொத்தாம் பொதுவாக பேய் நகரங்கள் என்று அழைக்கிறார்கள். நோய்கள், பேய்கள், போர்கள், இயற்கைச் சீற்றங்கள் என இந்த பாழடைந்த நகரங்களின் பின்னணியில் ஏதோ ஒரு திகில் பறக்கும் மர்மம் நிச்சயம் உண்டு. அப்படி நமது சுவாரஸ்யத்தையும், அச்சத்தையும் கிளறும் பத்து நகரங்கள் இந்த வாரம்.

  1. கோல்மான்ஸ்கோப்

தெற்கு நமீபியாவில் அமைந்துள்ள நகரம் கோல்மான்ஸ்கோப். முழுவதும் மணலினால் புதைத்து போன இந்த நகரத்தின் அமானுஷ்ய நிசப்தம் பீதியைக் கிளப்புகிறது. வைர வேட்டைக்காரர்களின் நகரமாக 1900களின் ஆரம்ப காலத்தில் உருவான நகரம் இது.

பள்ளிக்கூடம், மருத்துவமனை, தியேட்டர் என சகல வசதிகளுடனும் உற்சாகமாய் இருந்தது. அதன் பின் என்ன ஆனது என்பது மணலில் புதைந்து போன மர்மம். வைரத்தின் தேவை குறைந்ததால் இந்த நகரம் கைவிடப்பட்டிருக்கலாம் என்பது சிலருடைய கணிப்பு. வைரம் கிடைக்காததால் இந்த நகரம் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்பது வேறு சிலருடைய அனுமானம்.

உண்மையில் மணலினால் மூடிக் கிடக்கும் இந்த நகரத்தில் விடுபடாத பல திகில் கதைகள் மணலுக்குள் புதைந்து கிடக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு மர்மக் காலத்தைக் கடந்த அமானுஷ்யப் பார்வையுடன் கிடக்கின்றன சிதிலமடையாத சில வீடுகள்.

  1. பிரைபியாட்

 

வடக்கு உக்ரைனில் இருக்கிறது பிரைபியாட் எனும் நகரம். 1986க்கு முன் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்த இடம் இது. பெரும்பாலானவர்கள் அணு கூடங்களில் வேலை செய்தவர்கள். நீச்சல் குளம், மருத்துவமனை, வீடுகள், விளையாட்டு பூங்காங்கள் என சர்வ வசதிகளுடன் இருந்த நகரம் இது.

திடீரென கொள்ளை நோய் மக்களைத் தாக்கியது. நோயுடன் பல விபரீத சம்பவங்களும் சேர்ந்து கொள்ள மக்கள் திகிலடைந்தனர். நகருக்கு ஏதோ சாபம் இருக்கிறது என நகரையே காலி செய்து விட்டு ஓடினர். விலையுயர்ந்த பொருட்கள் உட்பட எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. உயிரை மட்டுமே எடுத்துக் கொண்டு ஓடினர். ஏதோ ஓர் மயான அமைதியும், திகிலும் இன்னும் அந்த வீதிகளில் உறைந்து தான் கிடக்கிறது.

அது என்ன நோய் ? அது அணுவோடு தொடர்புடையதா ? அல்லது அமானுஷ்ய துரத்தலா ? கேள்விகள் மட்டுமே இந்த நகரைச் சுற்றி முளைத்து வளர்கின்றன.

  1. சான் சி

பணக்காரர்களுக்கான உல்லாச ஆரம்பித்தது தான் தைவானிலுள்ள இந்த சான் சி நகரம். இந்த இடத்தில் உண்மையிலேயே மர்ம தேசம் தான். இந்த கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்ததில் இருந்தே மரணங்கள் தொடர்கதையாகிவிட்டன. செத்துப் போனவர்கள் பேயாய் மாறி வேலையைத் தொடரவிடாமல் செய்தார்கள். எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை.  

இத்துடன் பணப் பிரச்சினையும் சேர்ந்து கொள்ள நகரைக் கட்டும் பணி பாதியிலேயே நின்று போனது. அரசும் மர்மங்கள் நிறைந்த இடத்தை அப்படியே கைவிடச் சொல்லி விட இன்று ஓர் ஏகாந்தத்தின் சின்னமாய் நிற்கிறது சிதிலமடைந்த கட்டிடம். அவ்வப்போது அங்கே எழும் அமானுஷ்ய சத்தங்கள் திகிலை அதிகரிக்கச் செய்கின்றன.

  1. ஒரடோர் சர் கிளேன்

பிரான்சிலுள்ள ஒரடோர் சர் கிளேன் எனும் கிராமம் துயரத்தின் சின்னம். இரண்டாவது உலகப் போர் காலத்தில் ஜெர்மானியர்களால் சூழப்பட்டு 1944ல் நிர்மூலமாக்கப்பட்டது. கிராமத்துலுள்ள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆண்கள் வேகமாய் செத்துவிடக் கூடாது என்பதற்காக கைகால்களையெல்லாம் வெட்டி ஊனமாக்கினர். பெண்கள் குழந்தைகளெல்லாம் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் என திடுக்கிட வைக்கிறது வரலாறு.

இந்த கிராமம் இன்று ஒரு மௌனச் சின்னமாய் நிற்கிறது. இந்த கிராமத்துக்குள் நுழைய இன்றும் பலருக்கு பயம். உலகப் போரின் திகில் நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு மௌனமாய்க் கிடக்கிறது இந்தக் கிராமம். படுகொலை செய்யப்பட்ட ஆன்மாக்கள் கோபத்தில் பல் கடித்துக் காத்திருபதாய் நம்புவோர் உண்டு.

  1. கிராகோ

இத்தாலியிலுள்ள ஒரு மலை நாடு இந்த கிராகோ.  கி.பி 500 களில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது வரலாறு சொல்லும் கணக்கு. கொள்ளை நோய் தான் இந்த நகர் பாழடைந்து போக முக்கியக் காரணம்.

சுற்றிலும் பயமுறுத்தும் நிசப்தமும், உதவி கிடைக்காத தனிமையும் எல்லாமாய் சேர்ந்து மக்களை அச்சுறுத்தின. 1891 களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்த பூமி இது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் விலகிச் செல்ல 1960 களில் முழுமையுமாக கைவிடப்பட்டது இந்த இடம். இன்றும் தனியே சென்றால் நரம்புகளில் திகில் பரவும்.

  1. லாகோ எபிகன்

அர்ஜெண்டீனாவிலுள்ள லாகோ எபிகன் ஒரு காலத்தில் மக்களின் ஆரவாரங்களால் நிரம்பியிருந்த பகுதி. பின்னர் இந்த இடம் ஏரித் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாய் அழிந்து போனது. மக்களில் பலர் உயிரை விட்டார்கள், மற்றவர்கள் ஊரை விட்டார்கள்.

ஊரை விழுங்கிய மரணத் தண்ணீர் காலப்போக்கில் வடிந்து விட்டது. ஆனாலும் அந்த சுவடுகளில் உறைந்திருக்கிறது அருவி அழுத்தமாய் எழுதிச் சென்ற கொடூரத் தீர்ப்பு. அந்த காய்ந்து போன நீரின் வடுக்களில் காலத்தின் ஆன்மாக்கள் காத்திருப்பதாய் மக்களிடம் ஒரு பீதி !

  1. ஜப்பானின் ஹசீமா தீவு

இன்றைக்கு ஹசீமா தீவு காங்கிரீட் மிச்சங்களாலும், உடைபட்ட சுவர்களாலும், உறைந்து கிடக்கும் மௌனத்தாலும் நிரம்பி வழிகிறது. இந்த தீவைச்சுற்றி மிக நேர்த்தியான காங்கிரீட் மதிலும் உண்டு. இன்று மயான அமைதியாய் இருக்கும் இந்த தீவு முன்பு அப்படி இருக்கவில்லை. இந்த பூமியிலேயே மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாக இருந்தது இது.

1887லேயே ஒரு காலனியாக உருப்பெற்ற இந்த இடம் நாகசாகி கடற்கரையோரம் அமைந்திருக்கிறது. இந்த இடத்தை புகழ்பெற்ற மிட்சுபிஸி நிறுவனம் வாங்கி அங்கே அட்டகாசமான வீடுகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தது.

அந்த தீவின் முக்கியமான பணி நிலக்கரிச் சுரங்கப் பணி. திடீரென அந்த நிலக்கரி சுரங்கக் கையிருப்பு தீர்ந்து போனது. அந்தத் தீவே மக்கள் வாழ்வதற்கு இயலாததாய் மாறிவிட்டது. மக்கள் தீவை விட்டு வெளியேறத் தொடங்கினர். இப்போது அமானுஷ்யத்தை உள்ளடக்கி கிடக்கும் அந்த தீவு 2009ம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளுக்காய் திறந்து விடப்பட்டுள்ளது.

உடைந்த வீடுகளில் இன்றும் காண முடிகிறது கற்காலத் தொலைக்காட்சிகளும், கடந்த கால சாட்சிகளான பொருட்களும்.

  1. வரோஷா, சைப்ரஸ்

1970 களில் துவக்கத்தில் இந்த கடற்கரை நகரம் பணக்காரத் தனம் உலவும் இடம். பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் ஓய்வெடுக்கும் ஒய்யார இடம். எலிசபெத் டெய்லர் இங்குள்ள கடற்கரை ஹோட்டலில் தான் வெப்பக் குளியல் நடத்துவார்.

1974 ஆகஸ்டில் துருக்கி படையினர் இங்கே நுழைந்தபின் நிலமை சட்டென தலைகீழானது. போரின் அச்சத்தினால் அங்கே வாழ்ந்து வந்த 15,000 மக்களும் தலைதெறிக்க நாட்டை விட்டு ஓடினர். எல்லா ஆடம்பரப் பொருட்களும், செல்வங்களும் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் நிரம்பி வழிந்தன.

பின்பு மக்கள் அந்த நகருக்குத் திரும்பும் சூழலே உருவாகாமல் நகரம் நரக‌மானது. பேய்களின் நடமாட்டம் அதிகம் என அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள் அடித்துச் சொல்கின்றனர். 1970 களில் வெளி வந்த கார்கள் இன்னும் ஷோரூம்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன, யாருக்கும் பயன்பட முடியாமல்.

நகரை தூசுதட்டி பயன்படுத்தும் விதத்தில் மாற்ற வேண்டுமெனில் 12 பில்லியன் டாலர் செலவாகுமாம். சரி பார்க்கலாம் என விட்டு வைத்திருக்கிறார்கள்.

  1. போடி, கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பேய் நகரம் இருக்கிறது என்று சொன்னால் நம்பக் கடினமாகத் தான் இருக்கும். தங்கம் கிடைக்கிறது என நம்பி, தங்க வேட்டைக்காக உருவான நகரம் இது. அப்படியே அங்கே வேட்டை நடத்தியவர்களுக்கு தங்கம் கிடைக்கவும் செய்தது. அது அப்படியே நகரை களியாட்டம், வன்முறை, பாலியல் தொழில் என திசைமாற வைத்தது.

கொண்டாட்டங்கள் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. தங்கம் கிடைப்பதெல்லாம் நின்று விட்டது. இனி இங்கே என்ன வேலை என, மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். தாக்குப் பிடிக்க முடியாத குளிர் மக்களை விரட்டியது. இனிமேல் இங்கே வாழவே முடியாது எனும் நிலை ஏற்பட்டது. பலர் இறந்தனர். 1940ல் அங்கே யாருமே இல்லை எனும் நிலை உருவானது.

1962 ல் இது போடி வரலாற்றுப் பூங்கா என மாறி சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. அந்த நகரின் அமானுஷ்யத் தன்மையும், எதையோ ஒளித்து வைத்திருக்கும் அதன் மர்மமும் நகரைப் பார்க்கும் போது மனதுக்குள் திகில் தீயைப் பற்ற வைக்கிறது.

  1. ஆக்தம், ஆஸீர்பெய்கான்

ஆஸீர்பெய்கான் நகரின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஆக்தம் எனும் ஊர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான இந்த நகரம் ஒரு காலத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஆனந்தமாய் வாழ்ந்த பூமியாய் இருந்தது. இன்று யாருமே இல்லாத பாழடைந்த பேய் நகரமாய் இருக்கிறது.

இந்த நகருக்கு சாபம் போர்வடிவில் வந்தது. 1918 ..1920களில் நடந்த நகோர்னோ கராபாக் போர் இந்த ஊர் மக்களை கலங்கடித்தது. என்ன நடந்தது ? இங்கிருந்த மக்கள் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த சரியான தகவல்கள் ஏதும் இல்லை.

இப்போது வரலாற்றின் மிச்சமாய் சில கட்டிடங்களும், இரவில் சென்றால் சிரித்து வரவேற்கும் பேய்களும் மட்டுமே இங்கே மிச்சமிருக்கின்றன.

TOP 12 : வரலாற்று வில்லன்கள்.

Image result for Rajapaksa

வரலாற்றில் சில தலைவர்களும், சில மனிதர்களும் மாபெரும் வில்லன்களாக உருவெடுப்பதுண்டு. ஒரு குழுவுக்கு ஹீரோவாக இருப்பவர்கள், இன்னொரு குழுவுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் எல்லோருக்குமே வில்லன்கள் தான். இப்படிப்பட்ட வில்லன்களில் ஒரு டாப் 10 பார்வை இந்த வாரம்.

  1. இடி அமீன்

ரொம்பவே அராஜகம் செய்பவர்களுக்கு நாம் இடும் பட்டப் பெயர் இடி அமீன்!   1951ம் ஆண்டு உகாண்டாவின் குத்துச் சண்டைச் சாம்பியனானவர், 1960 வரை தொடர்ந்து சாம்பியனாகவே இருந்தார்.

1925ல் பிறந்த இவர், 1971 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் உகாண்டா பிரதமராக இருந்தார். அடக்குமுறை, சர்வாதிகாரம், மனித உரிமை மீறல் என நீங்கள் அதை நினைக்கிறீர்களோ எதையும் விட்டு வைக்காமல் செய்தவர் இவர்.

இவர் குறைந்த பட்சம் ஒரு  5 இலட்சம் பேரையாவது கொன்றிருப்பார் என்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவர் மனிதர்களைத் தின்னும் அகோரி டைப் ஆசாமி. இவருடைய ஒரு மனைவியை இவரே தின்று விட்டார் என்றெல்லாம் திடுக் கதைகள் உலவுகின்றன.

வெகு சமீபத்தில் 2003ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வைத்து இவர் மரணமடைந்தார்,.  இடி அமீன் ஹிட்லரின் தீவிர ரசிகராம் !. ஜாடிக்கேத்த மூடி !

  1. இரண்டாம் லியோபோல்ட்

இருபதாம் நூற்றாண்டின் கொடுமையான கொலையாளிகளில் ஒருவர் இவர். தனது ஆட்சிக் காலத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட காங்கோலியன் இன மக்களைக் கொன்று குவித்தவர் இவர்.

அவருடைய தந்தை முதலாம் லியோபோல்ட் மண்டையைப் போட்டபின் 1865ல்  பெல்ஜியம் மன்னராகி தனது கடைசி காலம் வரை அதே நிலையில் வாழ்ந்தார். இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் சொந்தக்காரன் என்பது கொசுறு செய்தி.

மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் சற்றும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் இவருக்கு. மக்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டுவதை ஏதோ நகம் வெட்டுவது போலச் செய்தார். 1885க்கும் 1908 க்கும் இடையேயான இவரது காலத்தில் கொல்லப்பட்டவர்கள் சுமார் 10 இலட்சம் காங்கோலியன்கள் .

ஒருவழியாக, 1909 டிசம்பர் 17ம் தியதி இறந்து போனார். அப்பாடா !

  1. மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர்

நாட்டுக்காக படுகொலை செய்வதெல்லாம் புண்ணியம் எனும் கொள்கையுடையவர். பல்லாயிரம் பேருடைய சாவுக்குக் காரணமாகி மனுக்குலத்தின் வில்லன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

1978 மேய் மாதம் 6ம் தியதி பிறந்தவர் மேக்ஸ்மில்லன் ராபெச்பியர்.  மன்னன் பதினாறாம் லூயியைக் கொல்லவேண்டும் எனும் கடுமையான பிரச்சாரத்தினால் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. தப்பி ஓட முயன்ற மன்னன் பிடிபட்டு பின்னர் சாவுக்கும் கையளிக்கப்பட்டான்.

அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த இவருடைய உண்மைக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது பிரஞ்சுப் புரட்சி. புரட்சி முடிவுக்கு வந்த பத்து மாதங்களில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என்கிறது வரலாறு. இவருடைய தலைமையில் அமைந்த புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் இவர்கள்.

மன்னிப்பைத் தூக்கி தூர எறி, ஆயுதத்தை கைகளில் ஏந்து என்பது இவருடைய மாபெரும் முழக்கம். 1794ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி கொல்லப்பட்டார்.

  1. மூன்றாம் விலாட்  

குரூரத்தின் உச்சமாய் விளங்கிய ரொமானியாவின் மூன்றாம் விலாட் டுக்கு டிராகுலா என்று பெயர் உண்டு. ரொமானியாவின் வாலாசியாவிலுள்ள மன்னர் இவர். 1431ல் பிறந்து எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு 1476ல் உயிரையும் விட்டார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்கள் நாற்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் பேர் வரை. எதிரிகளை சித்திரவதை செய்து ரசிக்கும் குரூரமான சைக்கோ மனம் இவருக்கு. கைகளையும் கால்களையும் கூர்மையில்லாத ஆயுதங்களால் வெட்டுவது, உயிருடன் தோலை உரித்து எறிவது, எரியும் நெருப்பில் எறிவது, தலையில் நீளமான ஆணிகளை அடிப்பது, இரண்டு கால்களையும் இரண்டு குதிரைகளில் கட்டி எதிரியைப் பிய்ப்பது, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொரிப்பது, கண்களை நோண்டி எடுப்பது என அத்தனை கொடுமைகளையும் செய்தார் இவர்.

கொல்வதற்காகவே ஏதேனும் புதுப் புது ஆயுதங்களையும், வழிமுறைகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார் இவர். பத்தாயிரம், முப்பதாயிரம் என இவன் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த வரலாறு குருதி வாசம் வீசுகிறது

ஒரு வழியாக 1976ல் துருக்கியருக்கு எதிரான போரில் இவர் கொல்லப்பட்டார்.

 

  1. அடால்ஃப் ஹிட்லர்

உலக வில்லன்களில் எல்லோருக்கும் தெரிந்தவர் ஹிட்லர். இவரைப் பற்றிச் சொல்ல எதுவுமே இல்லை எனுமளவுக்கு வரலாறு இவரை அலசிக் காயப் போட்டு விட்டது.

ஏறக்குறைய ஒன்றே முக்கால் கோடி பேருடைய சாவுக்குக் காரணமாய் இருக்கிறது ஹிட்லரின் பெயர். அதிலும் யூதர்களுக்குப் பிடிக்காத பெயர்களின் முதலிடம் ஹிட்லருக்குத் தான். ஹிட்லருடைய “ஹிட்” லிஸ்டில் எப்போதுமே யூதர்கள் உண்டு. இவர் கொன்ற யூதர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் அறுபது இலட்சம்.  

1889ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ஆஸ்திரியாவில் பிறந்த ஜெர்மன் அரசியல்வாதி ஹிட்லர்.. 1920ல் நாசி படையில் சேர்ந்து 1921ல் அதன் தலைவரானான். 1933 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆண்டார்.  

1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தியதி ஹிட்லர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார். துப்பாக்கியால் சுட்டால் எங்கே செத்துப் போகமாட்டோமோ எனும் பயத்தில் வாயில் சயனைடைப் போட்டு, கூடவே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் செத்துப் போனார் என்கிறது இவருடைய வரலாறு.

  1. ஜோசப் ஸ்டாலின்

சிலருக்கு ஸ்டாலின் ஒரு ஹீரோ. பலருக்கு ஸ்டாலின் ஒரு வில்லன். இவர் ஹீரோ ஆகக் காரணம் உலகின் பின்னணியில் இருந்த ரஷ்யாவை முன்னணி நாடாகக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் அதற்கு அவர் அளித்த விலை பல இலட்சம் அப்பாவிகளின் உயிர் என்பது தான் அவரை வில்லனாகவும் பார்க்க வைக்கிறது.  

ஸ்டாலினின் இளம்  வயது விருப்பம் சாமியாராய் போவது என்பது சுவாரஸ்யமான தகவல். 1922 முதல் 1953 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் ஜெனரல் செக்கரட்டரி அவர் தான். 1924ம் ஆண்டு லெனின் மறைந்ததும் சோவியத் யூனியனின் தலைவரானார்.

இவருடைய காலத்தில் எதிரிகள் எனும் பெயரில் கொல்லப்பட்டவர்கள் பல இலட்சம் பேர். போலந்து மக்களை மட்டும் கணக்கில் கொண்டாலே சுமார் இரண்டரை இலட்சம் வரும் என்கிறது போலந்து நாட்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று.

கொள்கைக்காகக் கொலை செய்வது தவறில்லை எனும் கொள்கை கொண்டவர் என ஸ்டாலினைக் குறித்த தகவல்கள் பன்முகம் கொண்டவை. 1953ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தனது 74வது வயதில் இறந்தார்.

  1. ஹிரோகிடோ  

ஜப்பானின் மன்னனாக 1926ல் முடிசூட்டப்பட்ட இவருடைய பல முடிவுகள் உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாதவை. சீனாவுடனான போரைத் தீவிரமாக ஆதரித்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு தீ மூட்டி விட்ட பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு அனுமதி வழங்கியவரும் இவர் தான். ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட உலகத் துயரத்துக்கு ஒருவகையில் இவரும் பொறுப்பாளி ! என இவரைக் குறித்த தகவல்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

1937ம் ஆண்டு ஜப்பான் ராணுவ வீரர்கள் நடத்திய அட்டகாசம் இவரை வில்லாதி வில்லனாக்கியது. ஆறு வார காலங்கள் நீடித்த இந்த ராணுவக் கொடுமை  “ரேப் ஆஃப் நான்கிங்” என்று அழைக்கப்படுகிறது.

இராணுவ வீரர்கள் எல்லோரும் சாவி கொடுத்த வில்லன் ரோபோக்களாகிப் போனார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லா அட்டகாசங்களையும் ராணுவம் செய்தது. குழந்தைகள், பெண்கள் என குவியல் குவியலாக மக்கள் கொல்லப்பட்டனர். எப்படியும் ஒன்றரை இலட்சம் முதல் 3 இலட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

  1. போல் போட்

1928 ஆண்டு மேய் மாதம் கம்போடியத் தலைநகர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.

போல் போட் 1953ல் கம்பூச்சியன் மக்கள் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். 1975ல் கம்போடியா போல் போட்டின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அப்போது ஆரம்பித்தது கம்போடியர்களின் கஷ்ட காலம். . முந்தைய அரசு தொடர்பான பணியில் இருந்த அனைவருமே ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் பசியினாலும், நோயினாலும் செத்துப் போனார்கள்.

இவர் ஆரம்பித்த S- 21 எனும் சித்திரவதைக் கூடம் பஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி சுமார் 20000 பேரை சித்திரவதை செய்து கொலை செய்தது  

இப்படி கொடுமையின் உச்சமாய் இருந்த போல் போட் 1998ல் உயிரிழந்தார்.

9 ராஜபக்ஷே

தீவிரவாத ஒழிப்பு என ராஜபக்ஷே பெயரிட்டழைக்கும் போரை, இன அழிப்பு என தமிழினம் அழைக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்களை ரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்ததாகவும், வெள்ளைக் கொடி காட்டி வந்தவர்களை போர் விதிகளை மீறி கொன்று குவித்ததாகவும், சின்னக் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததாகவும் இவர் மீது சர்வதேச மன்றத்தில் குற்றச்சாட்டுகள் ஏராளம்.

இவருடைய போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வீடியோக்கள் சர்வதேச அரங்கிலும், உலகத் தொலைக்காட்சிகளிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. இன்றும் தமிழர்கள் மீது விஷ ஊசி உட்பட பல்வேறு வன்முறைகள் நிகழ்வதாய் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சமீபகாலத்தில் உலக அரங்கில் நிகழ்ந்த மாபெரும் படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. டோஜோ ஹிடேகி

கொடுங்கோலன் எனும் பட்டியலில் இவரது பெயருக்கு எப்போதுமே டாப் லிஸ்டில் இடம் உண்டு. 1884ல் பிறந்தவர் இவர். ஜப்பானில் ராணுவ ஜெனரலாக பதவயேற்றபின் இவர் சொல்வதெல்லாம் தான் சட்டமானது. பெயரளவுக்கு ராணுவ ஜெனரல் என்றாலும் ஒட்டு மொத்த நாட்டின் கட்டுப்பாடே இவரிடம் தான் இருந்தது.

பிரதமர், அத்தனை அமைச்சரவைகள் எல்லாமே இவருடைய சொற்படி ஆடும் இடங்களாயின. நாஸிகளோடு தொடர்பு வைத்திருந்தவர். ஹிட்லரின் கீழ் உலகமே அடிபணியும் எனும் கனவு அவருக்கு இருந்தது. ஜப்பானுக்கு வெளியே இருந்த ஆசிய நாடுகளோடு இவர் செய்த தேவையற்ற யுத்தங்களில் இறந்து போனவர்கள் சுமார் 50 இலட்சம் !

  1. இரண்டாம் நிக்கோலஸ்

ரஷ்யாவின் கடைசி மன்னர் இவர் தான். 1868ம் ஆண்டு பிறந்த இவர், 1894 முதல் 1917 வரை மன்னராக இருந்தார். இவருடைய செல்லப்பெயரே “பிளடி நிக்கோலஸ்” என்பதை வைத்து இவருடைய குணத்தைப் புரிந்து கொள்ளலாம். வன்முறையின் உச்சகட்டமானவர். உயிர்கள் இவருக்கு கிள்ளுக் கீரைகள் போல.

அரசியலில் தனக்கு எதிராய் முளைப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை கிள்ளி எறிவதில் இவருடைய கொடூரமும் ராஜ தந்திரமும் வெளிப்படும். சுமார் 33 இலட்சம் ரஷ்யர்களுடைய மரணத்துக்கு இவருடைய தவறான அணுகுமுறைகளே காரணம் என வரலாறு இவரை குற்றம்சாட்டுகிறது.

  1. ஹோ சி மின்.

வடக்கு வியட்னாமின் ஜனாதிபதியாக இருந்தவர். வன்முறையினாலும், மக்களிடையே அச்சத்தை உருவாக்கியதாலும் அவர் அந்த பதவியை அடைந்தார் என்கிறது வரலாறு. நாட்டை சரிசெய்கிறேன் என இவர் செய்த வேலைகளில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேல். இதன் விளைவாக பட்டினியினால் வாடி வதங்கியவர்கள் பத்து இலட்சத்துக்கும் மேல்.

1965ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பதவியிலிருந்து இறங்கினார். 1969ம் ஆண்டு மரணமடைந்தார். அரசியல்வாதி என்பது இவருடைய ஒரு முகம் தான். எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் என இவருக்கு பல முகம் உண்டு.

TOP 10 : ஹைடெக் உளவு கருவிகள்

Image result for dragon fly spy machine

உடும்போட இடுப்புல கயிறு கட்டி, கோட்டையின் உச்சியில் ஏறி குனிந்து பார்த்து ரகசியம் கண்டுபிடித்தது மன்னர் காலம். இப்போ எல்லாமே ஹைடெக் கோட்டைகள். எதிரி கோட்டைக்குள் எறும்பு போனாலே இண்டர்நெட் குரைக்கும். இன்றைய நவீன உலகில் யாருமே பாதுகாப்பானவர்கள் இல்லை என்பதே பயப்பட வைக்கும் யதார்த்தம். இந்த ஹைடெக் காலத்தில் நூற்றுக்கணக்கான ஸ்பை கருவிகள் உள்ளன. அவற்றில் சுவாரஸ்யமான ஒரு பத்து கருவிகள் இவை.

  1. டிராகன் பிளை

ஜெய்கிந்த் படத்தைப் போல மலைகளுக்கு இடையே வில்லன் கூடு கட்டிக் குடியிருந்தால் உளவு பார்ப்பது சிக்கல். துப்பாக்கியோடு வில்லன்கள் பாறை மேல் நின்று சுற்றிச் சுற்றிப் பார்ப்பார்கள். பார்த்தால் பட்டென போட்டுத் தள்ளி விடுவார்கள்.

அதற்காகத் தான் இருக்கிறது இந்த தும்பி உளவாளி. பக்கா துல்லிய ரேடியோ, மைக், எந்த சூழலிலும் நாசமாகாத கேமரா இத்தனையும் இந்த தும்பியில் உண்டு. இந்தத் தும்பி இருளில் நடப்பதைக் கூட படம்பிடிக்கக் கூடிய சக்தி உண்டு. சுமார் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பல்டி அடித்து படம் பிடிக்கும். இதை எதிரியின் கோட்டைப் பகுதியில் விட்டு, கம்ப்யூட்டர் மூலம் இயக்கலாம். எதிரி கோட்டையில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கேட்கவும், பார்க்கவும் வைப்பான் இந்த உளவாளி.

  1. ஹைடெக் ஹெலிகாப்டர்.

சும்மா உக்கார்ந்திருக்கிற சேர் எழும்பிப் பறந்தா எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது இந்த ஜென் கார்ப்பரேஷனின் ஹெலிகாப்டர். பெல்ட் அறுந்து கீழே விழுந்தா விழுந்த வேகத்தில் மேலே போய் சேர வேண்டியது தான். கூட்டமா இருக்கிற இடத்தில என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அழகாகக் கண்காணிக்கலாம்.

திருவிழா போல கூட்டம் கூடுகின்ற இடங்கள், பேரணிகள், மாநாடுகள் போன்ற இடங்களுக்கு இது கனகட்சிதம். நம்ம சிட்டியைக் கண்காணிக்க போலீஸ்காரங்களுக்கும் இப்படி ஒண்ணு வாங்கிக் கொடுக்கலாம்.  

  1. ரகசிய துப்பாக்கி.

இப்போது துப்பாக்கிகளை எதில் வடிவமைக்கிறார்கள், எங்கே ஒளித்து வைக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். கிளவுஸுக்குள் ஒளித்து வைக்கும் ஒரு குட்டி துப்பாக்கி ரகசிய உளவாளிகளிடம் பிரபலம். குளிருக்கு கிளவுஸ் போட்டது போல தோன்றும் அமுக்கினால் தோட்டா பாயும்.

பெண்களுக்கெனில் ஸ்பெஷல் லிப்ஸ்டிக் துப்பாக்கி உண்டு. லிப்ஸ்டிக் தானே என அசால்டாக விடுவார்கள். ஆனால் அது ஒரு துப்பாக்கி. இதை விட ஸ்பெஷல் விஷ பேனா. எந்த வித்தியாசமும் கண்டு பிடிக்க முடியாத பேனா. மெல்ல அமுக்கினால் ஒரு துளி விஷம் மெல்லிய தோட்டா மூலம் எதிராளியின் உடலைத் தைக்கும்.

ஏதோ கொசு கடி…ச்…சு…து…. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆயுள் தீர்ந்து விடும்.

4.ரேய்த்தியான் கில்லர் பீ

எதிரிகளின் கோட்டைக்குள்ளேயே புகுந்து எதிரியைப் பொசுக்கி வர இந்த கில்லர் சமாச்சாரம். ஒரு பறவை போல பறக்கும். சத்தம் வராது. மென்மையாய் மிதந்தது போல் பறக்கும். இதன் பல் இருக்கும் இடம் குண்டுகளை சகட்டுமேனிக்கு வாரி இறைக்கும்.

எதிரி நாட்டு எல்லைக்குள் ரேடாரை ஏமாற்றி நுழையும். ஏதோ பறவை வருதுடா பிரியாணி வைப்போம் என்று எதிரிகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சோலியை முடித்து வேலியைத் தாண்டும் இது.

  1. கார்னர் ஷாட்

ஏதோ ஒரு அறியாத வீட்டுக்குள் நுழைகிறீர்கள். எதிரி எந்த மூலையில் இருக்கிறான் என்றே தெரியாது. அடுத்த அறையில் ஏதேனும் மூலையில் இருக்கலாம். உள்ளே நுழையும் அதே வினாடியில் நம்மைச் சுட்டும் தள்ளலாம். என்ன செய்வது ? அதற்குத் தான் இருக்கிறது கார்னர் ஷாட் துப்பாக்கி.

இதன் முனையை இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளலாம். ரூமுக்குள் நைசாக துப்பாக்கியின் மூக்கைக் காட்டினால் போதும். அதிலிருக்கும் கேமரா ரூமை அழகாக மானிட்டரில் காட்டும். இந்த மானிட்டரும் துப்பாக்கியிலேயே இருக்கும். ஒளிந்திருக்கும் கில்லாடியை அவன் நினைக்காத நேரத்தில் போட்டுத் தள்ளும் இந்த கார்னர் உளவாளி.

  1. ஸ்பை போன்

உளவாளிகள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். எனவே உடனுக்குடன் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். காடுகள், பள்ளத்தாக்குகள், குகைகள், போன்ற பல இடங்களில் உளவாளி போக வேண்டியிருக்கும். அவசரமான தகவலைச் சொல்ல செல்போன் எடுத்தால் “நோ சிக்னல்” என பல்லிளிக்கும்.

எங்கே போனாலும், எப்போ போனாலும் சிக்னல் சிக்கல் இல்லாத ஒரு போன் தான் ஸ்பை போன். நேரடியாக செயற்கைக் கோளுடன் தொடர்பில் இருக்கும். மற்ற நெட்வர்க், மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரமும் தகவல்களை ஏற்றுமதி செய்து கொண்டே இருக்கும். எங்கேயிருந்தும் யாருமே டிராக் பண்ண முடியாத போன் இது.

  1. செல் துப்பாக்கி

உளவாளி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். கையிலிருந்த துப்பாக்கியை எல்லாம் பிடித்துக் கொண்டார்கள். என்ன செய்வது. தப்பிக்க வழியே இல்லை. ஜேம்ஸ்பாண்ட் என்றால் தன் வாச்சிலிருந்தே தோட்டாவை துப்புவார். அதே போல ஒரு சமாச்சாரம் தான் இந்த செல் துப்பாக்கி.

சாதாரண மொபைப் போன் போல ரொம்ப சைலன்டாக இருக்கும். பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாது. கையில்  இருப்பது செல் தானே என அசால்டாக யாராச்சும் அருகே வந்தால் சுட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம்.

  1. பென் ஸ்கேனர்

உளவாளி எதிரியின் கோட்டையில் ரகசியமா நுழைந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ரகசிய அறையில் எக்கச் சக்க டாக்குமெண்ட்ஸ், படங்கள். சில டாக்குமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம். உளவாளி வந்ததே தெரியாமல் வெளியேற வேண்டியது அதை விட முக்கியம்.

அந்த சிக்கலான நேரத்தில் ஐயா டாக்குமெண்ட் களை எடுத்துக் கொண்டு ஸ்கேன் பண்ண ஸ்டுடன்ஸ் ஜெராக்ஸ் க்கு ஓட முடியாது. அதுக்குத் தான் இருக்கிறது இந்த பேனா. மெதுவாக டாக்குமெண்ட் மேல் ஒரு உருட்டு உருட்டி விட்டால் ரகசியங்கள் கப்பலேறிவிடும்.

  1. துப்பறியும் கொசு.

ரங்குஸ்கி மாதிரி ஒரு கொசு. அதி நவீன ரோபோ. யார் கண்ணிலும் படாமல் எங்கே வேண்டுமானாலும் நுழையும். இதன் கால்களில் கேமராவும், சென்சாரும் இருக்கும். அது தேவையான தகவல்களை லைவ் ஆக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஏதேனும் அதி பயங்கரமான வைரஸை வில்லனின் உடலில் நறுக் என செலுத்த வேண்டுமானாலும் இந்த கொசு பயன்படும். மிகவும் ரகசியமான ராணுவ, உளவு வேலைகளில் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டு கமுக்கமாய் இருக்கிறது இந்தக் கொசு.

  1. அதி நவீன மென்பொருட்கள்.

ஒரு நூலிழை இடைவெளி இருந்தால் போதும் அதற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் கேமராக்கள் உளவு வேலையில் பயன்படுகின்றன. அவை அப்படியே “ஃபேஷியல் ரிகக்னிஷன்” தொழில் நுட்பத்தின் மூலமாக முக ஒற்றுமை கண்டறியப்படுகிறது.

ஒரு விமான நிலையத்திலிருந்தோ, ரெயில்வே ஸ்டேஷனிலிருந்தோ வெளிவரும் பல்லாயிரக் கணக்கான மக்களை சில நிமிடங்களில் ஸ்கேன் செய்து முடிக்கும். ஒரு தலைவரின் கூட்டத்துக்கு வரும் இலட்சக்கணக்கான மக்களை ஒரு சில போட்டோக்கள் மூலமாக கவர் செய்து, அதை அப்படியே மென்பொருளில் ஸ்கேன் செய்து வினாடிக்கு சுமார் 70 இலட்சம் எனுமளவில் முக ஒப்பீடு செய்யும்.

எந்த ஒரு தீவிரவாதியோ தப்பி விட முடியாத அளவுக்கு சுற்றி வளைக்கும் தொழில்நுட்பம் இது. எந்த மாறுவேடத்தில் இருந்தாலும் காட்டிக் கொடுக்கும் என்பது இதன் ஹைலைட்.