மீம்ஸ்

மீம்ஸ்

Image result for memes tamil

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

காரணத்தோடும்
காரணமின்றியும்
மீம்ஸ்கள்
பிறந்து கொண்டே இருக்கின்றன

ஒரு
மழை இரவின்
புற்றீசல் போலவோ,
கவனமாய் செதுக்கப்பட்ட
பட்டாம்பூச்சி போலவோ
அவை
டிஜிடல் சிறகுகளால்
பறந்து திரிகின்றன

ஒரு கோபத்தில்
முளையை
அவை
நகைச்சுவைக் கால்களால்
நசுக்கி நகர்கின்றன

ஒரு துயரத்தின்
விதையை
அவை
குரூரச் சிரிப்பால்
குதறிக் கடக்கின்றன

ஒரு தோல்வியின்
கதையை
அவை
கிண்டலின் தூண்டிலில்
தூக்கிலிட்டுச் சிரிக்கின்றன.

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

அது
ஒரு நியாயத்தின் குரலையும்
நடுவீதியில்
நிர்வாணமாக்குகிறது

ஒரு
தார்மீகக் கோபத்தை
வன்மக் கரங்களால்
வலுவிழக்கச் செய்கிறது.

ஒரு
புரட்சியின் பாதச்சுவடை
புயல்ப்பாதங்களால்
புரட்டித் தள்ளுகிறது.

மீம்ஸ்களால்
கட்டமைக்கப்படுகிறது
வாழ்க்கை.

அங்கே
நிஜங்கள் மட்டுமல்ல
நிஜங்களின் நிழல்களும்
நிராயுதபாணியாகின்றன

*

சேவியர்

*

காளான் கவிதை !

mushrooms

மழைத் துளி விதைகளில்
விழித்தெழும் காளான்கள்
மர அடிவாரங்களில்
மழை விட்டபின் குடைவிரிக்கும்

எந்த காளான் நல்லதென்று
தொட்டுப் பார்த்தும்,
கிள்ளிப் பார்த்தும்
வடிவம் பார்த்தும்
அடிப்பாகத்தின் நிறத்தைப் பார்த்தும்
பட்டென சொல்வார்
ஞானம்மா பாட்டி.

எந்த மரத்தடியில்
நல்ல காளான் முளைக்குமெனும்
காளான் வரலாறு
பாட்டிக்கு அத்துப்படி.

தாவர ஈசலாய்
தலைநிமிரும் காளான்கள்
பசிக்கும் கிராமத்துக்கு
இலவச உணவாகும்.

ரப்பர் பால் கசியும்
கிராமத்து மண் வெளிகளில்
இப்போதெல்லாம்
காளான்கள் முளைப்பதில்லை.

நகரத்திலோ,
பூவா, இலையா, செடியா
இதுவென
யோசித்துக் குழம்பும்
தற்காலத் தலைமுறைக்கு
காளான் என்பதே
காதால் கேளாத பெயர்ச்சொல்.
 
அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம்
ஃபுட் வேல்ட்களின்
பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
பாவப்பட்ட
“மஷ்ரூம்”கள் மட்டுமே.

கவிதை : திருமணங்கள் நடந்தன !

வீட்டுக்கு முன்னே
தோரணம் கட்ட
செவ்வாழை தேடியலைந்து,

அலங்காரச் சள ஓலைக்காய்
காடெல்லாம்
ஓடியலைந்து,

பந்தலில் வந்திறங்கும்
சந்தை மூட்டை பிரித்து,
விடிய விடிய
கதைகளைக் கூர்தீட்டி
காய்கறி நறுக்கி,

காக்கோட்டையில்
தண்ணீர் எடுத்து
கொல்லப்புறக்
குட்டுவங்கள் நிரப்பி,

மணமக்கள் உட்கார
சேலைகளால்
மணப் பந்தல் அமைத்து,

தூங்கியும் தூங்காமலும்
அதி காலையில்
தாலி கட்டிக் கொண்ட
திருமண விழாவின் சுகம்,

மண்டபத்தில்
எட்டுமணிக்குப் போய்
எட்டரைக்கு முடியும்
தற்காலத்
திருமணங்களில் இல்லை.

கவிதை : பெண்

கள்ளிப்பாலை
கவனமாய்
ஊற்று.
தொண்டைக் குழிக்குள்.

வேகமாய் சுற்றும்
மின் விசிறி இருந்தால்
சுவிட்சைப் போட்டு
கதவைப் பூட்டு.

இல்லையேல்
தண்ணீர் தொட்டிக்குள்
தூக்கிப் போடு.

அல்லது
கொஞ்சம் நெல்லையாவது
வாய்க்குள் போடு.

அப்படியே
வீட்டுக்கும் தீ வை.

இருபது வருடம் கழிந்து
இடிவிழவும்
சாத்தியமுண்டு.

மன்னிப்பே தண்டனை

 

மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்.

தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு
தண்டனையின் கோடரி வீச்சு
தற்காலிகத் தீர்வுகளையே
தந்து செல்லும்.

மாற்றங்களின்
மெழுகுவர்த்திகளை,
மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும்.

பயத்தின் மூக்கணாங்கயிறுகளில்
மனக்காளைகள்
பாதி நேரம் மண்டியிட மறுக்கும்.
தப்பிக்கும் சுரங்கம் தோண்ட
மீதி நேரம் தப்புக்கள் செய்யும்.

தூண்டிலில் மாட்டுவதே
மீனுக்குத் தண்டனை.
தொடர்ந்து தூண்டில் தாண்டும்
மீன்களுக்கோ
நெருங்கி வரும் வலை
தெரிய வருவதில்லை.

தண்டனையின் காயம்
இன்னொரு பிழைக்கு
பிள்ளையார் சுழியாவதுண்டு.
மன்னிப்பின் மடியிலோ
மரணம் கூட மகத்துவமானது.

மன்னிப்பு,
குற்ற உணர்வுகளை
வெற்றி கொள்ளும்.
மற்ற உணர்வுகளை கொஞ்சம்
மாற்றியே வைக்கும்.

தண்டனை
அணைகளைக் கட்டும் முயற்சி.
மன்னிப்போ
வாய்க்கால் வெட்டும் முயற்சி.

தண்டனை,
உடல் சார்ந்த உபாதை,
மன்னிப்போ
மனம் சார்ந்த பாதை.

தண்டனை,
ஒற்றை முகத்தோடு
உலகம் பார்க்கும்.
மன்னிப்போ,
இன்னோர் முகத்தோடு
இதயம் பார்க்கும்.

தண்டனை,
உலகம் பேச
உள்ளத்தை ஊமையாக்கி வைக்கும்.
மன்னிப்போ
மனசை மனசோடு
மதிப்பீட்டு மாநாடு நடத்த வைக்கும்.

தண்டனை,
உயிருக்குள்
கூர்க் கத்திகள் கோத்து வைக்கும்.
மன்னிப்போ
உணர்வுகளின்
துருக் கறைகளை துலக்கி வைக்கும்.

தண்டனை,
அழுத்தமாய் எழுதமுயலும்
சுதந்திரம்,
மன்னிப்பு,
சுதந்திரமாய் எழுதும் அழுத்தம்.

மன்னியுங்கள்.
மன்னிக்கப்படுவீர்கள்.

சின்னச் சின்ன…

 

நிலைகள்

0

பைக் ஓட்டிய போது
நான் செய்த
தவறுகள்
புரியத் துவங்கின
கார் ஓட்டத் துவங்கிய போது. 

தோல்வி.

0

தோல்வி
தோல்வியடைந்தது
நீ
தோல்வி குறித்து எழுதிய
கவிதையோடு.


.
வேர்

0

இத்தனை
வருடங்களுக்குப் பிறகும்
நான்
பேசினால்
கண்டு பிடித்து விடுகிறார்கள்
என் ஊரை.

.

பழக்கதோஷம்

0

நெருக்கியடிக்காமல்
ஏறுவதில்லை
எந்தப் பேருந்திலும்.
வெறும்
பத்து பேர் நின்றால் கூட.

வினோதம்

0

மூன்று மைல் தூர
அலுவலகத்துக்கு
காரில் வருபவர்,

உடற்பயிற்சி அறையில்
ஓடுகிறார்
ஆறு மைல் தூரம்

உனது பெயர், எனது கவிதை.

கண்மணி,

நீ இல்லாத தேசத்தில்,
என்னை நோக்கி
ஓராயிரம்
கண்கொத்திப் பாம்புகள்,
எனக்குத் தான் இதயத்தில்
உன் நினைவுகள்
காதல் கொத்தும் ஓசை.

விரிந்திருக்கும் விழிபரப்பில்
பூமியின்
பார்வைப் பச்சிலைகள்
பறிக்கப்பட மறுக்கின்றன,
இமைகளின் இடையிலும்
உன் நினைவுகளின்
தண்டவாளங்கள்
மட்டுமே தடதடக்கின்றன.

ஜன்னல் தாண்டி
என்னைப் பொத்தும் வெயில்,
மின்னல் போல நீ
உள்ளிருப்பதாய்
ஊடுருவிப் பார்த்துச் சொன்னது எனக்கு.

ஆனாலும்,
திரைச்சீலை திறக்காமல்
வெறித்துப் பார்க்கும் வித்தை
நீ
விலகும் போது தானே வாய்க்கிறது.

இணையத்தின் இருக்கைகளில்
ஒரே பக்கத்தில்
ஒரு வார்த்தையும் படிக்காமல்
இமைகளை விலக்கி வைத்து
விழித்திருக்கிறேன்.

ஆனாலும்
உள்ளுக்குள் எதிரொலிக்கிறது
நீ கிசுகிசுத்துப் போன
காதோரக் கதைகள்.

என் படுக்கையைச் சுற்றிலும்
என்
கனவு சுவாசித்துக் கிடக்கிறது
நிறம் மாறிய காற்று,

கொடியது என்பது
இளமையில் வறுமையா ?
இல்லை
இளமையில் வெறுமையா?

காணா கவலை நெருக்கினால்
கவிதை எழுதுங்கள்
என்றாய்,
வினாடிக்கொரு தரம்
உள்ளுக்குள் உச்சரிக்கிறேன்,
உனக்குச் சொந்தமான
என் கவிதையை.

விடு…


தியானம் என்பது
தற்காலிக மரணம்
மரணம் என்பது
நிரந்தர தியானம்.

வாழ்வின் அடிக்கோடிட வேண்டிய வார்த்தைகளில் ஒன்று விடுதலை எனக் கொளல் நலம். விடுதலை தேவை என்னும் உணர்வே நாம் அடிமையாய் இருக்கிறோம் என்னும் புரிதலில் தான் துவங்குகிறது. எனில் புரிதல் என்ற ஒன்று விரியாமலேயே சென்று விடுமெனில் நாம் விடுதலை என்பதை விளங்கிக் கொள்ளாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. கூண்டில் பிறக்கும் சிங்கக் குட்டிக்கு கூடே உலகமாகி விடுவதும், கூடுகள் கட்டாத குயிலுக்கு உலகமே கூடாகி விடுவதும் நாம் சராசரியாய் சந்திக்கும் நிகழ்வுகள் தானே. எது உலகம் என்பதை அறிந்து கொள்தலில் இருக்கிறது சிங்கத்தின் விடுதலை தேடலில் முதல் சுவடு. எனினும் விடுதலை தேடாத மனங்கள் கூட்டிலிருந்து திறந்து விடப்பட்ட புறாக்களைப் போல கூடுகளைச் சுற்றியே அலைந்து திரியும்.

வாழ்வின் சராசரி சோகங்கள் தற்காலிக விடுதலையைத் தேடுகின்றன. ஒதுக்கி வைக்கப் படும் தற்காலிக சோகங்கள் வட்டிகளுடன் வாசலுக்கு வெளியே மறு நாள் காத்திருக்கும். தொடர் காத்திருப்பின் பின் தப்பிக்க இயலா சோகங்களின் அரணுக்குள் சிக்கிக் கொள்கையில் தற்கொலை தேவை என்னும் அவசர முடிவு நிதானமாய் மனதை நிறைக்கிறது.

விடுதலை என்பது வெளியேறுதலில் மட்டுமல்ல. கொசுக்களிலிருந்து தப்பிக்க கொசுவலைக்கு உள்ளே மனிதன் அடைபட்டுக் கொள்வது போல, சில வருத்தங்களின் வழிகளை நிராகரிக்க சில சந்தோசங்களுக்குள் அடிமையாகி விடுதல் ஆறுதலளிக்கிறது. அடிமையாய் இருப்பதே சில வேளைகளில் விடுதலை என்னும் சிந்தனையை இவை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துகின்றன. நிச்சயமற்ற நிறக்கலவையாக வாழ்க்கை முன்னால் விரியும்போது அதை நவீன ஓவியமாய்ப் பார்த்து அங்கீகாரம் வழங்குதல் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை. சில வேளைகளில் விடுதலை தேவை என்ற நினைப்பே நம்மை அடிமையாக்கி விடுகிறது.

ஆயுள் கைதி கூண்டுக் கிளியிடம் சென்று விடுதலைக்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேட்பது போலத் தான் இன்றைய விடுதலை விரும்பிகளின் அணுகுமுறை இருக்கிறது. தெளிவும், தெரிவும் வாழ்வின் மிக முக்கியமான சங்கதிகள் என்பதை உணர்தலில் இருக்கிறது நடை முறை வாழ்வின் வெற்றிகள்.

முதலில் விடுதலை என்ற ஒன்று எதனிடமிருந்து தேவை என்பதைப் புரிந்து கொள்ளல். சோர்வில் தூங்கும் கணவனின் குறட்டைச் சத்தத்திலிருந்து விடுதலை பெற விவாகரத்தே ஒரே வழி என்று நினைப்பதையும், காலம் காலமாக அடிமைத் தனத்தில் உழலும் அழுத்தப்பட்ட மக்கள் விடுதலை வேண்டும் என நினைப்பதையும் ஒரே தராசில் நிறுத்து விட முடியாது. எதிலிருந்து விடுதலை வேண்டும் ? மனதின் அழுக்குகள் அலைக்கழிக்கும் போது மனதைச் சலவை செய்ய வேண்டும் என்று நினைப்பதில் இருக்கும் நியாயமான உணர்வையும், சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வாக குடிசைக்குத் தீயிடுவதையும் விரிவான அலசலுக்குள் உட்படுத்தினால் புரியும்.

நம்மீது திணிக்கப்பட்ட போலித்தனமான மதிப்பீடுகள், அல்லது நாம் யார் என்று பிறர் நம்மை நிர்ணயம் செய்திருக்கும் முகமூடி அடுக்குகள் இவற்றிலிருந்து தேடும் விடுதலையே முதல் தேவை எனக் கொள்ளலாம். நம்மிடமிருந்து நமக்கு விடுதலை. நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக ! நாம் யார் என்பதை அறிந்து கொள்கையில் நாம் பல வேளைகளில் தேடும் விடுதலைகள் அடிமைத்தனங்களை நோக்கிய அடியே என்பது விளங்கும்.

நாம் நம்மை அறிந்து கொள்கையில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை, அல்லது நம்முடைய இருப்பின் தேவையை விளங்கிக் கொள்கிறோம். அப்போது தான் அடுத்த மனிதனின் விடுதலைக்காக போராடுதலே நம் உண்மையான விடுதலை. நம் சுய நல எண்ணங்களிலிருந்து விடுபடும் விடுதலை எனவும் சொல்லிக் கொள்ளலாம். மனித நேய எண்ணங்களை மூடி வைத்திருக்கும் நம் கர்வத்தின், அல்லது இருப்பதாய் நாம் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்தின் திரைச்சீலையை கழற்றி எறிவதிலும் இருக்கிறது விடுதலை. விடுதலை என்பது பெறுதலில் மட்டுமல்ல விடுதலிலும் தான்.

விடுதலை என்னும் தலைப்பிலிருந்து இப்போதைக்கு விடுதலை பெறுகிறேன்.

விட்டு விடுதலையாகி…

 

விடுதலை தேடியே
வினாடிகள் ஓடுகின்றன.

அலுவலக மேலதிகாரியின்
மின்னஞ்சல் போர்களில்
குற்றுயிராகி
போர்க்களம் சாய்கையிலும்,

நம்பிக்கை நங்கூரங்கள்
சங்கிலி அறுத்து
தனியே பாய்கையிலும்,

ஏமாற்றத்தின் விலாசங்களுடன்
அலையும்
சுருக்குக் கயிறுகளில்
எச்சரிக்கைக் கழுத்துகள்
எதேச்சையாய் விழுகையிலும்,

விடுதலைச் சன்னல்களைத்
தேடி அலையும்
தவறி வந்த பட்டாம்பூச்சியாய்
மனம் அலையும்.

குடும்ப உறவுகளின்
குத்தல் பேச்சுகளிலும்,
நெடுநாள் நட்புகளின்
திடுக்கிடும் திருப்பங்களிலும்
அவை தொடரும்.

அங்கீகார மேடைகள்
புறக்கணிப்புப் பத்திரத்தை
விவரமாய் வாசிக்கையிலும்

சங்கீதக் காதலி
மறுப்புக் கடிதமெழுதி
வேறெவரையோ நேசிக்கையிலும்

அங்கிங்கெனாதபடி
பீலி பெய் சாகாடும் நிலையில்
எப்போதும்
விடுதலையைத் தேடியே
அலைகிறது மனம்

துயரச் செருப்புகளைத்
தூர உதறி
மாலையில் வீடு நுழைகையில்
தாவியணைக்கும் மகளின் கரங்களில்
வினாடியில்
அடிமையாகும் மனம்,
அப்போது மட்டும்
விடுதலையை வெறுக்கும்.

விடுதலை

 

பாவத்தின் பதுங்கு குழிகளில்
படுத்துக் கிடக்கையில்
புலப்படும்
விடுதலையின் மகத்துவம்.

சில்மிச சிந்தனையின்
சன்னலைச் சாத்துகையில்
காமத்தின்
கதவு திறந்து கொள்தலும்

வெட்கத்தின் திரைச்சீலையை
சரிசெய்து திரும்புகையில்
மோகத்தின்
முந்தானை சரிந்து விழுதலும்

விருப்பத்தின்
திரிகளில் எரிவதில்ல
பெரும்பாலும்.

விரல்களிடையே
புகையும் பகைவனையும்
மௌன மரணத்தின்
மதுப் பந்திகளையும்
தொடங்கி வைத்த
பிள்ளையார் சுழி நினைவிலில்லை.

பிறந்த நாள்
புத்தாண்டு என
தற்காலிக தீர்மானங்களுக்காய்
சில மைல்கற்கள்
வருடம் தோறும் புதுப்பிக்கப்படும்.

குற்ற உணர்வு
நெற்றியில் சுட,

இப்படம் இன்றே கடைசி
போல
படுக்கையில் பிரசவிக்கும்
இரவு நேர தீர்மானங்களை

விடியல் சூரியன்
மாற்றி எழுதும்
‘நாளை முதல்’ !

விடுதலையாய் சுற்றும்
மனம்
அடிமையாய் திரும்புதலும்,

அடிமையாய் உழலும்
மனம்
விடுதலையை வேண்டுதலும்

என
விடுகதை
வாழ்க்கை வியப்பளிக்கும்.
விடுதலை நோக்கி
மீண்டும் நடக்கும்.