ஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை நம்புவதற்கு சில அறிகுறிகள் உண்டு. அதில் ஒன்று, வர்த்தக நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன என்பது. ஒரு தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது எனும் உத்தரவாதம் இருந்தால் தான் பண வரிவர்த்தனை சார் நிறுவனங்கள் அதை அங்கீகரிக்கும்.
அப்படி பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் தொழில்நுட்பங்களே காலம் செல்லச் செல்ல பலவீனமடைந்து விடுவது தனிக்கதை. காரணம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அடுத்த நாள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படு வேகமாக இருப்பது தான்.
இன்றைய பிளாக் செயின் தொழில்நுட்பத்திலும் அத்தகைய ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. வழக்கமான வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கின்றனவா ? வெறும் வாயளவிலோ, காகித அளவிலோ இல்லாமல் பரீட்சை பார்த்து வெற்றியடைந்திருக்கின்றனவா ? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறது “வேர்ல்ட் வயர்” எனும் பிளாக் செயின் கட்டமைப்பு. இது பிரபல ஐபிஎம் நிறுவனக் கட்டமைப்பில் உருவாகியிருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ தங்களுக்கிடையேயான பண பரிவர்த்தனையை நிறைவேற்றிக் கொள்ள இது வழி வகை செய்திருக்கிறது. பொதுவாக நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைகள் உடனடி நடப்பதில்லை. காரணம் ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையேயான எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் எந்த கரன்சியில் செட்டில்மென்ட் செய்யவேண்டும் எனும் பிஸினஸ் முடிவுகள்.
பயனர்களுக்கு ஆன்லைனில் உடனுக்குடன் பரிவர்த்தனை நடப்பது போலத் தோன்றினாலும், வங்கிகளுக்கு இடையே அப்படி நடப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியின் அட்டையை வைத்துக் கொண்டு இன்னொரு வங்கியின் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம். உங்களுக்கு பணம் உடனே கிடைக்கும். ஆனால் அந்த இரண்டு வங்கிகளும் தங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனையை, கணக்கு வழக்குகளை உடனே தீர்ப்பதில்லை. அதை மறு நாளோ, அதற்கு அடுத்த நாளோ தான் தீர்த்து வைக்கின்றன. இதை செட்டில்மென்ட் என்பார்கள்.
டிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ? வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன ? எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது ? என்பதெல்லாம் இந்த செட்டில்மென்ட் பிரிவின் அம்சங்கள்.
உதாரணமாக கடையில் நடக்கும் ஒரு பி.ஓ.எஸ் மெஷின் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றன என பார்ப்போம். இதன் முதல் கட்டம் பி.ஓ.எஸ் மெஷினுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கும் இடையே நடக்கும். இதை ரீகன்சிலியேஷன் அதாவது சரிபார்த்துக் கொள்தல் என்பார்கள். ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பமாகும் அத்தனை பரிவர்த்தனைகளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்தாக வேண்டும். அது அடிப்படை விதி ! இதைத் தான் முதலில் வங்கிகளும், பி.ஓ.எஸ் மெஷின் வைத்திருக்கும் கடைகளும் செய்யும்.
ஒருவேளை இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். வேறுபாடு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலோ, பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றின் மதிப்பிலோ இருக்கலாம்.
இப்போது அக்யூரர் ( வாங்கும் வங்கி ) வங்கிக்கும், இஷ்யூயர் (வழங்கும் வங்கி ) வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இது எப்படி நடக்கிறது ?
வங்கிகளில் ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிவர்த்தனை வாங்குபவர் வங்கியிலிருந்து பேய்மென்ட் சிஸ்டம் வழியாக இஸ்யூயர் வங்கிக்குச் செல்கிறது. அங்கிருந்து “அங்கீகரிக்கலாம்” எனும் பதிலோடு திரும்பி வருகிறது. அப்போது அந்த பரிவர்த்தனையில் ‘செட்டில்மென்ட்க்கு எடுக்கலாம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்படும்.
இப்படி சரி செய்யப்பட்ட தகவல்கள் தினம் தோறும் செட்டில்மென்ட் நிலைக்குள் வரும். செட்டில்மென்ட் மென்பொருள் வங்கி வாரியாக கணக்கை பிரித்து தெளிவான அறிக்கைகளாய் மாற்றும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன என்பது முடிவு செய்யப்பட்டபின் அவை வங்கிகளுக்கும், வங்கிகளின் மேலாண்மை அமைப்புக்கும் ஃபைல்களை அனுப்பும்.
வங்கிகள் அந்த ஃபைலை எடுத்து தங்களுடைய மர்ச்சன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (எம்.எம்.எஸ்) எனும் மென்பொருளுக்குக் கொடுக்கும். அது ஒவ்வொரு பி.ஓ.எஸ் கணக்குக்கும் உரிய பணத்தை அவரவர்க்கு அனுப்பும்.
வெளிநாடுகளில் இதே கார்ட் பரிவர்த்தனையைச் செய்யும் போது அந்தந்த நாட்டு பணத்துக்கு ஏற்ப ‘கன்வர்ஷன் ரேட்’ பயன்படுத்தப்பட்டு செட்டில்மென்ட் நடக்கும். உதாரணமாக அமெரிக்காவில் நாம் நூறு டாலருக்கு ஒரு பொருளை வாங்கினால் அது நமது அக்கவுண்டில் வரும்போது அதற்குரிய கன்வர்ஷன் முடிந்த இந்திய ரூபாயாக வரும். அதே நேரத்தில் வழங்குநர் வங்கியும் பேய்மென்ட் சிஸ்டமும் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒரு கரன்சியை முடிவு செய்து கொள்ளும். அது டாலராகக் கூட இருக்கலாம்.
இந்த பரிவர்த்தனைகளை செய்கின்ற பேய்மென்ட் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கும். உதாரணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நாள் ஐந்து கோடி பரிவர்த்தனைகள் நடந்தால், நிறுவனம் தினமும் ஐந்து கோடி ரூபாய்களை சம்பாதிக்கும்.
வங்கிகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய செட்டில்மென்ட் விஷயங்கள் தினம் ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தான் நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அந்த செட்டில்மென்ட் சைக்கிள் எனப்படும் கால அளவு குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, மூன்று முறை என்றெல்லாம் வங்கிகள் தங்கள் மென்பொருட்களை வடிவமைக்கின்றன.
ஆனால் பரிவர்த்தனை நடக்கும் போதே அது செட்டில்மென்ட் வட்டத்துக்குள் நுழைகின்ற “ரியல் டைம் செட்டில்மென்ட்” இன்னும் வரவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அந்த மென்பொருள் மிகவும் வரவேற்பைப் பெறும். இத்தகைய சூழலில் தான், “நான் வந்துட்டேன்னு சொல்லு” என குதூகலமாய்க் குதித்திருக்கிறது ஐபிஎம் நிறுவனத்தின் வேர்ல்ட் வயர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்கின்ற பிளாக் செயின் வலையாக இது களம் கண்டிருக்கிறது. இதன் பரிவர்த்தனை கிரிப்டோகரன்சி ( குறியீட்டு நாணயம் ) மூலமாகத் தான் இப்போதைக்கு நடக்கிறது. ஸ்டெல்லர் எனப்படும் அந்த கரன்சி அமெரிக்க டாலருடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி உலகம் முழுதும் பரிவர்த்தனைகளை ரியல் டைமில் செய்கிறது இந்த உலக வயர் எனும் புதிய பிளாக்செயின் கட்டமைப்பு. அக்டோபர் 2007ல் சிந்தனையாக உருவான இந்த கட்டமைப்பு இப்போது பயன்பாட்டில் நுழைந்திருக்கிறது.
சரியாகச் சொல்லவேண்டுமெனில் 72 நாடுகளில், 48 கரன்சி வகைகளில், 44 வங்கிகளில் இந்த வேர்ல்ட் வயர் கட்டமைப்பு கண நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகிற பணம் மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் என்கிறது உலக வங்கி அறிக்கை. அப்படி அனுப்பும் பணம் சென்று சேர்வதும், பயன்பாட்டுக்கு வருவதும், அதை அனுப்பும் நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் எல்லாமே கணிசமான கால இடைவெளியில்தான் நடந்து வருகின்றன.
அந்த கால இடைவெளியைக் குறைக்கவும், அழிக்கவும் செய்கின்ற முயற்சியாகத் தான் வேர்ல்ட் வயர் நுழைந்திருக்கிறது. இது ஒரு துவக்கம் மட்டுமே, சர்வதேச பண பரிவர்த்தனை முதல் பக்கத்து வீட்டுப் பரிவர்த்தனைகள் வரை எல்லாமே பிளாக்செயின் நுட்பத்துக்குள் நிச்சயம் நுழைந்து விடும் என அடித்துச் சொல்கிறது ஐபிஎம் நிறுவனம்.
இதே காலகட்டத்தில் இப்போது பரிசீலனையில் இருக்கின்ற மிகப்பெரிய விஷயம், ஃபேஸ் புக் கொண்டு வரப் போகின்ற ” ஃபேஸ்காயின்”. கிரிப்டோகரன்சியாக வரப்போகின்ற இந்த பணம் அமெரிக்க டாலருக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாய் வரும் என வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து எங்கும் வியாபிக்க ஃபேஸ்காயின் முயலும் என அவர்கள் கணிக்கின்றனர்.
இப்படி, பிளாக் செயின் குறித்து வருகின்ற புதிய தகவல்கள் எல்லாமே மிகப்பெரிய புரட்சிகளாகவே இருப்பது பிளாக் செயினின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் கட்டியம் கூறுகிறது.
( அடுத்த வாரம் முடிப்போம் )
*
You must be logged in to post a comment.