ரஜினி

திரை நட்சத்திரங்கள்
மரபு அட்டவணைகளில்
நடிப்பைப் பிழிகையில்
புயலென புகுந்து
விதிகளை மீறிய புதுக்கவிதை
இவன்.
இவன்
அசைவுகளில் எழுந்த
விசைகளால்
திசைகள் அடங்கின.
இவன்
எதிரிகளை எச்சரித்த வார்த்தைகளே
இளைஞர்கள்
அதிகமாய் உச்சரித்த வார்த்தைகள்.
இவன் திரையின் கதவடைத்து
இமயம் நோக்கி
நடந்தபோதெல்லாம்
இமையின் கதவுடைத்து
இதயங்கள் அழுதன.
இவன் கடலாய் இருப்பதால்
இவன்
விரலசைவுகளே
சுனாமிகளாய் சுருண்டன.
இவன் புகழை
அண்ணாந்து பார்த்ததில்
எவரெஸ்ட்டுக்கும்
கழுத்து சுளுக்கிக் கொண்டதாம்.
இவன் படம் வெளியாகையில்
தேவலோகத்திலும்
கைத்தட்டல் கேட்டதாம்.
இவனோடு
உரசிக் கொண்டால்
அரசுகளும் தீப்பிடிக்கும்.
ஆனாலும்
இவனுக்கோ
ஆன்மீகப் பூ பிடிக்கும்
அரசியல் இருக்கை
தலைநகரத்தில்
இவனுக்காய்
தயாராகையில்
இமயமலை இடுக்குகளில்
கிழிந்த உடையில் நடந்தவன் இவன்.
கடவுளா? உலகமா ?
எனும் கேள்வி எழுகையில்
கடவுளே உலகமடா
என்றவன் இவன்.
இவன் ஆடைகள்
தற்செயலாய்க் கிழிகையிலெல்லாம்
தமிழக இளைஞர்கள்
தங்கள் ஆடைகளை
வலுக்கட்டாயமாய்க் கிழித்தனர்
இவன் தமிழனில்லை
என்று
தகராறுகள் எழுகையில்,
இனி நாங்கள்
இந்தியர்கள் என்றனர் தமிழர்கள்.
இவன்
ஓய்வெடுக்க உறங்கினால்
சாய்ந்து விட்டான் என்பார்கள்,
அமைதியாய் இருந்துவிட்டால்
பயந்து விட்டான் என்பார்கள்,
எப்படியோ
இவனைப் பற்றிப் பேசாமல்
இருந்ததில்லை தமிழ்நாடு.
கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.
இவன் பார்வைகளின்
கூர்மையில்
தங்கள்
வீர வாள்களை கூர் தீட்டினர்
இளைஞர்கள்.
இவன் வார்த்தைகளின்
வேகத்தில்
தங்கள்
ஊற்றுக் கண்களை
சட்டென்று திறந்தனர் சிறுவர்கள்.
திருவிழா காலங்களில்
இவன் படம் வெளியாவதில்லை
இவன்
படம் வெளியாகும் தினங்களில்
திருவிழாக்கள் தோன்றுகின்றன.
சுருங்கக் கூறின்,
இவன்
இனி இவனுக்கில்லை.
ஃ
Like this:
Like Loading...