நவீன தீர்வுகள்

Related image

ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.

முதலில்
அது
பிரச்சினையே இல்லை
என நம்ப வைக்க வேண்டும்

அதற்காக
அதைவிடப் பெரிய
பிரச்சினை ஒன்றை
உருவாக்க வேண்டும்.

அது
மெல்லும் வாய்களுக்கான
வசீகர
அவலாக இருக்க வேண்டும்.

ஊடகங்களின்
கவர்ச்சிப் பேச்சுக்கு
ஆவேச அனலாய்
கொதிக்க வேண்டும்.

அதற்காக
எளிய வழியாக
ஒரு
நடிகையின்
அந்தரங்கத்தை சபையேற்றலாம்.

ஒரு
சாதீய ஏழையைத்
துகிலுரியலாம்.

ஒரு
மத வன்முறையை
கலாச்சாரக் குடைபிடித்து
அரங்கேற்றம் செய்யலாம்.

ஒன்றும் இல்லையேல்
வெறுமையிலிருந்து
ஒரு
ஊகத்தை உருவியெடுக்கலாம்.

போதும்,
இனிமேல்
இந்தப் பிரச்சினை
எல்லா ஊடகங்களிலும்
தீக்குளிக்கும்.

எல்லா நரம்புகளிலும்
வெறியினை
இறக்குமதி செய்யும்.

பழைய
பிரச்சினை மறந்து போகும்.
அதை
பரணில் போட்டு மூடிவிடலாம்.

அப்போ,
புதிய பிரச்சினையை
தீர்க்கும் வழி ?

ஒரு
பிரச்சினையைத் தீர்ப்பது
மிகவும் எளிது.

முதலில்…

*

சேவியர்

 

வெள்ளையடிக்கப்பட்ட

art, beautiful, bloom

வேஷதாரிகளே
உங்கள் அங்கிகளை எப்போதுதான்
அகற்றப் போகிறீர்களோ ?

பொதுவிடங்களில்
உங்கள் உதடுகளுக்கு
மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள்
உள்ளுக்குள்
கசாப்புக் கடை நடத்துகிறீர்கள்.

புண்ணியங்கள்
விற்பனை செய்து
புண்ணிய பூமி வாங்குகிறீர்கள்
அங்கே
மனிதாபிமானத்தைப் புதைக்கிறீர்கள்.

தெருச்சந்திப்புகளில்
தகரத்தட்டுகளுக்குச்
சில சில்லறைகள்,
சில
சம்பிரதாயச் சமாதானங்கள்.
உள்ளுக்குள் உங்களுக்கே
பிணவாடை அடிக்கவில்லையா ?

விளம்பரம் செய்து செய்தே
நீங்கள்
புனிதனாகப் பார்க்கிறீர்கள்.

எப்போதேனும்
இடக்கைக்குத் தெரியாமல்
தானம் தந்திருக்கிறீர்களா ?

தோப்புக்கு
விளம்பரம் செய்யாமல்
குருவிகளுக்கு
கூடு கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா ?

போதுமே.

எட்டாத உயரத்தில்
சிம்மாசனம் செய்தாகிவிட்டது.
புதைந்துபோன
மனிதாபிமானத்தைக்
கொஞ்சம்
தோண்டி எடுக்கத் துவங்குங்களேன்.

வெள்ளைக் காகிதம்

 

Buildings Surrounded by Treesஒவ்வொரு காலையும்
உன்னிடம்
ஓர்
வெள்ளைத் தாளை
கிள்ளித் தருகிறது.

சில நாட்கள் அதை
நீ
கண்­ணீர் விட்டு
ஈரமாக்குகிறாய்.

சில தினம்
குருதி தொட்டு
கோரமாக்குகிறாய்.

என்ன செய்வதென்னும்
யோசனையில்
வெள்ளையாகவே
பலநாள்
ஒதுக்கி வைக்கிறாய்.

அன்பு பூசி
அழகாக்குவதும்,
வம்பு பேசி
அழுக்காக்குவதும் உண்டு.

கோபத்தின்
குப்பைக் கூடையில்
அதை நீ
கசக்கியும் எறிவதுண்டு.

அந்தக் காகிதம்
சிறுகதைக்குத் தேறாதென்று
நீ
அதில்
கட்டுரை கூட எழுதாமல்
கிழித்தெறியும் தருணங்களும்,

ஹைக்கூ எழுத
கோரப்பாய் எதற்கென்று
மூலையில் கிறுக்கி விட்டு
சுருண்டு படுத்து
சேதமாக்கும் தருணங்களும்,

எழுதத் தெரியாதவன்
கைகளுக்கு
காகிதம் எதற்கென்னும்
கேள்வித் தருணங்களும்
தவறாமல் விளைவதுண்டு.

வெள்ளையாய் இருப்பது
மட்டுமே
அதன் கைகளில்.

ஓவியம் வரைந்து
அதை பத்திரப் படுத்துவதும்,
கொல்லையில் அதை
கொன்று புதைப்பதும்
உன் கைகளில் தான் !

எது எப்படியானாலும்,
நாளையும்
ஓர் வெள்ளைக் காகிதம்
உனக்காகக்
காத்திருக்கும்.

வழியோரம் நதியூறும்

Image result for apj abdul kalam

 

சோகங்களின் பொதிமூட்டை
சுமந்து சுமந்து
கழுதையாகிக் கொண்டிருக்கின்றன
கணக்கில்லா
கம்பீரக் குதிரைகள்.

இவர்களின் இதயங்கள்
கவலை முதலீட்டின்
சோக வங்கிகளாய்
சோர்ந்து கிடக்கின்றன

பார்வை பாணங்களிலேயே
குனிந்து விழும்
பனித்துளி மனிதர்கள்,

மின்னலை கண்களில் வாங்கி
இதயத்தில்
பள்ளம் பறிக்க
இலவசமாய் இடியிறக்கும்
கைத்தடி மனிதர்கள் இவர்கள்.

ரோஜாவைக் கொடுத்தாலும்
பூர்வீகம் பார்த்து
விரல் குத்திக் கொண்டும்,
பல் குத்தும் சோகங்களுக்காய்
கண்குத்திக் கொண்டும்
கவிழ்ந்து கிடக்கும்
கவலையின் கைக்குழந்தைகள்.

வருமென்ற கவலையில்
வரமென்ற நாட்களை
வீணே புதைக்கும்
வீணர்கள்.

தினசரி வாழ்க்கையை
நிர்ணயிப்பது
தினசரி நாள்காட்டியல்ல.
சின்னச் சின்னதான
சந்தோஷ நிகழ்வுகளே.

ஒரு முறை
சிரித்து முடிக்கும் போது
அடுத்த சிரிப்பு
காத்திருக்க வேண்டும்.

எதிர்பார்ப்புகளின் எல்லையை
சிறிதாக்கி,
நிம்மதியின் நாற்காலிகளை
நிரப்பிவைத்தால்
வழியே செல்லும்
வசந்தமும் வந்து
கொஞ்சநேரம் அமர்ந்து செல்லும்.

இதெல்லாம்
முன் வினையின்
பின்விளைவுகளா ?
பின் விளைவுகளின்
முன்னெச்சரிக்கையா ?

எதற்கு இத்தனை கேள்விகள் ?
ஜென்மங்களின் கவலையும்
விதியின் கவலையும்
இன்னொரு ஜென்மத்துக்காய்
ஒத்தி வைத்தாலென்ன ?

0

ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றக் கவிதை.

வாழ்க்கை

 

Image result for man sculpting himself gif

வாழ்க்கை
ஒரு
சோதனைக் கூடம்
இங்கே
விஞ்ஞானியும் நீயே
குரங்கும் நீயே.

கவனமாய்
சோதனை நடத்து.

0

வாழ்க்கை
ஒரு
சிற்பக் கூடம்.
இங்கே
சிற்பியும் நீயே.
சிற்பமும் நீயே.

சிதைக்காமல் உன்னை
செதுக்கு.

0

வாழ்க்கை
ஒரு கப்பல்.
இங்கே
பயணியும் நீயே
மாலுமியும் நீயே.

பாதை தவறாமல்
பயணம் செய்.

0

வாழ்க்கை
ஒரு தவம்.
வரம் கொடுப்பவனும் நீயே
பெறுபவனும் நீயே.

தரமான வரங்களை
தா.

0

வாழ்க்கை ஓர்
வித்தியாசக் காலநிலை.
மேகமும் நீயே
தாகமும் நீயே.

தேவையான போது
மழையை வருவி.

0

ஓவியன் நீ,
உன்னைச் சுற்றித் தூரிகைகள்.
நீ
ஒவியத்துக்காய்
காத்திருத்தலாகாது.

பொறுப்புகளோடு பொருந்து
மறுப்புகளோடு வருந்தாதே.

0

வருந்துவோரை விட்டு
வலி அகலுவதில்லை.
மருந்து
அருந்துவோரை விட்டே
அது
அகன்று விடுகிறது !

0

புரிந்து கொள்.
முல்லைக்குத் தேர் தந்தான்
பாரி.
பெருமை
முல்லைக்கா தேருக்கா எனும்
விவாதம் எதற்கு.

பாரிக்கு எப்போதோ
பரிசளிப்பு விழாவே முடிந்தது.

புள்ளியில் துவங்கு

Image result for inner revelation gif

உன்னோடு
இன்னும் கொஞ்சம்
உறவாடு.

வாசலில் கோலமும்
உள்ளுக்குள்
அலங்கோலமும்
அனுமதிக்கத் தக்கதா ?

நுரையீரல் பைகளில்
நிகோடின் கைகள்.

வயிற்றுப் பாதையில்
அமிலப் பாசனம்.

சிந்தனை முழுவதும்
விகாரச் சிலந்திகளின்
விடாத வலை.

வெள்ளைத் தோடு போர்த்திய
கெட்டுப் போன
முட்டை வாழ்க்கை எதுக்கு ?

வெள்ளையடித்த
கல்லறை வாழ்க்கை எதுக்கு?

உடைகளை
துவைத்துக் காயப் போட்டு
உள்ளத்தை ஏன்
அழுக்கில்
ஊறப் போடுகிறாய் ?

உள்ளிருந்து வருவதே
உன்னை
மாசுபடுத்தும்.

உள்ளுக்குள் கசாப்புக் கடை
வெளியே
சரணாலயம்.
உள்ளே கருவாடு வாசம்
வெளியே மீன்களோடு நேசம்.

பூ வியாபாரி நீ.
சாக்கடைச் சாகுபடி
எதற்கு இனி ?

மெல்ல மெல்ல
சிந்தனைகளை
சொடுக்கெடு.

காற்றில் வந்தாலும்
தீயவற்றை
காதின் வாசலோடு
கத்தரித்து அனுப்பு.

தீய வார்த்தைகள்
தெரியாமல் எழுந்தாலும்
தொண்டைக்குள்
பள்ளம் வெட்டி நிரப்பு.

கோபத்தின் சூரிய கிரணத்தை
புன்னைகைப்
பனிக்கட்டியாய் விரட்டு.

தராசுகள்
நிறையவே கிடைக்கும்.
தரமானதாக்கு.

வேர்களைப் பகைத்த முளை,
வாழ்தல் இயலாது.
மனதைப் பகைத்த மனிதன்
வீழ்தல் தவறாது.

விரல்களே விளக்குகள்

Image result for nail in wall
எதிர்பாராத
நிகழ்வுகளின் குவியல்,
ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே
முளைத்து வளரும் எதிர்ப்புகள்,
நெருங்க நெருங்க
விலகிச் செல்லும்
தொடு வான இலட்சியங்கள்.
இவற்றின் கலவை தான் வாழ்க்கை !

ரோஜா மேல் பனித்துளி அழகுதான்
ஆனால்
வரப்புகளின் தண்ணீ­ர்தானே வாழ்க்கை.
கனவுகளை
இரவுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு
நிஜங்களுக்கு முதுகெலும்பு முடைவோம்.

காதல் அழகுதான்,
கவிதை அழகுதான்.
ஆனால்
வறுமையின் அமிலக்குழிக்குள்
வயிற்றுத் தாகம் தானே
அருவியாகிறது ?

மீன்கள் பிடித்துப் பிடித்து
மீந்துபோன வாழ்வில்
மிச்சத்தின் செதில்கள் மட்டுமே.
போதும்.
மீன்கள் சேகரிப்பது தேவை தான்
ஆனாலும்
தூண்டில்கள் தயாராக்குவோம்.

எத்தனை நாள் தான்
ஒற்றைத் தெரசாவும்,
ஒரு காந்தியும் கொண்டே
வரலாறு நகர்த்துவது ?
நூறு கோடி மக்களில்
பெரும்பாலானோர்க்கு
இன்னும் பெயரிடப்படவில்லையே !!!

வெற்றிகளின் பாதையில்
தோல்விகளும் படிக்கட்டுகளே.
தோல்வியின் பாதையில்
வெற்றிகள் கூட படுகுழிகளே…
நமக்குத் தேவையான
முதல் வெற்றி
எங்கே தோல்வியடைகிறோமெனும்
தேடலில் தான்.

கதவுகள், ஜன்னல்கள் எல்லாம்
திறந்துதான் கிடக்கின்றன.
நாம் தான்
சுவரில் அறையப்பட்ட
ஆணிகளாய் இருக்கிறோம்.
*

இன்று போய், நாளை வா !

 

Related image‘நாளை என்பது
நம்பிக்கையின் ஆணிவேர்.
உழைப்புக்கும் உயர்வுக்கும்
அடிப்படை
நாளை எனும் நம்பிக்கை தான்.

நாளை என்பது இல்லையென்றால்
உலகம்
வியர்வையை வெறுக்கும்.

நாளையில் கொண்ட
நம்பிக்கையில் தான்
சிட்டுக் குருவியும் ஆலமரத்தின்
விழமறுக்கும் விழுதுகளுக்கிடையில்
கூடு கட்டுகிறது.

மேகவானத்தின் மேற்குப் பக்கம்
இருளுக்குள் விழுந்து விட்டாலும்
நாளை யை நம்புகிறது
அந்த
கீழ் வானத்தின் கிழக்கும் பக்கம்

நாளையின்
நம்பிக்கை வற்றி விட்டால்
அறுவடை என்பதன் அர்த்தம் மறந்து
விதைகளின் வினியோகத்தை
வயல்களே வெறுக்கும்.

கல்விக் கூடங்களில்
பல்கலைக் கழகங்களில்
நாளைய கனவுகளில் தானே
நிகழ்காலம் நகர்கிறது.

நாளை என்பதன்
நம்பிக்கை தொலைத்தால்
மானிட வர்க்கத்தின் பக்கத்தில்
சோம்பல் மட்டுமே மிச்சமாகும்.

நீலக் கடலின் நிறம் பிரித்து
அருவியில் கலக்கும் கனவல்ல.
நாளை என்பது
அடுத்த அடி எடுத்து வைக்க
பாதம் தேடும் பயிர்ச்சிக் களம்.

இதயக் காயம் வலிக்கும் போதும்
தோல்விக் கணைகள் தைக்கும் போதும்
வானம் பார்க்கும் வயல் காடாய்
மனம் தேடுவதும் நாளைகளைத் தான்.

அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டு
அங்கிகள் கூட அவிழ்க்கப் பட்டு
அங்கலாய்ப்புக்களில் முடியப்படும்
நிராயுதபாணிகள் நம்புவதும்
நாளைகளைத் தான்.

இன்றைய சோகங்களின்
ஈரம் துடைப்பது
நாளை எனும்
நம்பிக்கைக் கைக்குட்டை தான்.

நம்பிக்கை மேகத்தைக் கலைக்கவேண்டாம்
அது குளிர் உறிஞ்சிப் பறக்கட்டும்
நட்டு வைத்த நம்பிக்கை நாற்றுக்கள்
நாளை ஈரம் பெறும்.

நம்புங்கள்.
நாளை என்பது நிஜம்
நீயும் நானும்
காலூன்றி நிற்கும் இன்று கூட
நேற்றைய நாளை தான் !!!

குறைகளல்ல அவை

 

Image result for smile pencil artநீ
அழகாக இல்லையென்று
யாரேனும் சொன்னால்
அழ ஆரம்பிக்காதே
பிறர் மனதில்
பொறாமை விளைவிக்க மாட்டேன்
என்று
பெருமிதம் கொள்

0

நீ
உயரமாய் இல்லை என்று
இகழ்ந்து பேசினால்
உடைந்து போகாதே.
உயர்வுக்கும் உயரத்துக்கும்
இம்மியளவும் சம்மந்தமில்லை
என்று
இன்னொருவருக்கு உணர்த்த
உனக்கொரு வாய்ப்பென்று உணர்ந்து கொள்.

0

நீ
கருப்பு என்று யாராவது
கிண்டலாய் சொன்னால் கலங்காதே !
அழகு நிலைய அறைகளுக்குள்
அடைபட்டும் விடாதே.
நிறத்தை மூலதனமாக்கி
நிலத்தை வென்றவர் யாருமில்லை
என்பதை நினைவில் கொள்.

0

நீ
முட்டாளென்று யாரேனும் சொன்னால்
உதடு வெடிக்க கோபப் படாதே
மெதுவாய் ஒரு
புன்னகை சிந்து…
பிரபஞ்சத்தின் பெருமை
பொறுமை என்பதைப் புரியவை !!!

0

உன்
உண்மை அன்பை யாரேனும்
உதாசீனம் செய்தால்
உருகி உருகி தொலைந்து போகாதே
உள்ளம் கற்க
உனக்கொரு வாய்ப்புக் கிடைத்ததாய்
உவகை கொள்.

*

தொலைந்து போன ஒருவன்..

Image result for mask manஉங்களால்
புறக்கணிக்கப் படுவேனோ
எனும்
பயம் எனக்கு.

அதனால் தான்
என்
வெள்ளைச்சிறகுகளுக்கு
உள்ளே இருக்கும்
கழுகுக் கால்களை
காட்ட மறுக்கிறேன்.

எனக்குள் வலி வருமோ
எனும் கிலியில் தான்,
என்
நிஜத்தின் நிழலைக் கூட
உங்கள்
விழி விழா தேசத்தில் தான்
விழ வைத்துக்
கொண்டிருக்கிறேன்.

புன்னகைப் பனிக்கட்டிகளை
என்னிரு உதடுகள்
ஏந்திப் பிடித்திருந்தாலும்,
சில
எரிமலைச் சிந்தனைகள்
உள்ளே எரிந்துகொண்டு தான்
இருக்கின்றன !

எப்போதேனும் காட்டவேண்டும்
என்
உண்மை முகத்தை,
போலித்தனமில்லா
ஓர்
நண்பனிடமாவது !.

அதற்கு முன்
தேட வேண்டும் !
எத்தனை முகமூடிகளுக்குப் பின்
என் முகம்
முடங்கிக் கிடக்கிறதென்று !.