உண்மையைத் தான் சொல்கிறேன்

கேளுங்கள் தரப்படும்
தவறாகிறது.
ஆலய முற்றங்கள் கேட்கின்றன
ஆண்டவனுக்குத் தரப்படுகிறது.

எல்லா
அரசு அலுவலகங்களிலும்
லஞ்சம் இருப்பது போலவே,
அலுவலகங்களின் பின்னால்
இருக்கிறது
சிறுநீர் வாசனையுடன் ஒரு சுவர்

கவிதை ஒன்றும்
பரம்பரை வியாதியில்லை
பயம் வேண்டாம்.
குழந்தையைக் கொஞ்சிய
மனைவியிடம் சொன்னேன்.

திரைப்படங்களில்
பாலியல் பலாத்காரம்
செய்யப்படுவோரெல்லாம்
கர்ப்பம் தரிக்கும் வித்தை புரியாமல்
மருத்துவமனை
பெஞ்சில் காத்திருக்கும் தம்பதியர்

பெயரிடுமுன் இறந்து விடும்
குழந்தைகள்
இறக்கும் போதும்
பெயரில்லாதிருக்கும் பெரியவர்களைவிட
அதிர்ஷ்டசாலிகளே.

எல்லா வீடுகளிலும்
வளர்கின்றன
விளம்பரம் பார்த்தோ
சினிமா நடனம் பார்த்தோ
சோறுண்ணும் மழலைகள்.

பிடிக்காதவர்கள்
படியேறி வருகையிலும்
மிதியடிகள் சொல்கிறன
நல்வரவு.

சிரிக்கையில் கண்கள்
மீனென்றவன்
அழுகையில்
மீனைக் குளமென்கிறான்.

சேவியர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.