அவமானத்துடன் ஒரு அரிவாள்

arivaal.jpg

மனிதர்களே.

உங்கள் மனங்களைக்
கூர்தீட்டி
தயவு செய்து எங்களை
துருப்பிடிக்க விடுங்கள்.

மொழிக்குள் மட்டும் இருக்கட்டும்
ஆயுத எழுத்து
அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று
அடம் பிடிக்காதீர்கள்.

உங்களைப் புரிந்து கொள்ள
முடியவில்லை.
என் முகத்துக்குக்
குருதித் திலகமிடுவதை
ஏன் வெற்றி என்கிறீர்கள் என்பது புரியவில்லை.

அறுவடைக்காய்
அரிவாள் எடுக்கச் சொன்னால்
தலைகள் தான் வேண்டுமென்று
தகராறு செய்கிறீர்கள்.

“வெட்டரிவா மீசை”
என்று சொல்லி
வீணான வீரத்தை
வளர்த்துக் கொள்கிறீர்கள்

மதத்துக்கும் ஜாதிக்கும்
சண்டையிட்டு சண்டையிட்டே
என் முதுகு மொத்தமும்
சர்வ மத சிவப்புத் துளிகள்.

உங்கள்
முதுகுக்குப் பின்னால்
சொருகப் பட்டு சொருகப் பட்டே
உங்கள் முதுகெலும்பாகிப் போனேன்
எனக்கு முதலுதவி செய்யுங்கள்.

ஆயுத பூஜைக்குத் தான்
என்னை தரையிறக்குகிறீர்கள்
பூஜை முடிந்ததும்
மீண்டும் என்னைப் பூசி மெழுகுகிறீர்கள்.

என்னை சகதியில் பூசுங்கள்
விறகுப் பொடிகளுக்குள் வீசுங்கள்
வேண்டுமானால்
கசாப்புக் கடைக்கு விற்றுவிடுங்கள்
இந்த மனித அறுவடைக்கு மட்டும்
அனுப்புவதை நிறுத்துங்கள்.

ஆயுதமாய் இருந்தால்
விவசாயிடம் இருக்கவே விருப்பப்படுவேன்.
ஜாதிப் பலகைகளில்
மதக் கோபுரங்களில்
அவசர இரத்தம் பூசும்
அதிகாரத் தூரிகையாவதில்
எனக்கு உள்ளத்தால் உடன்பாடில்லை.

சிரச்சேதங்களில் சேதப்பட்டு,
பாமரர்களை பாடைக்கு அனுப்பி,
இரத்தப் பொட்டுக்களால்
பல
சுமங்கலிப் பொட்டுக்கள் அழித்து
என் தேகமெங்கும்
சிதைந்து போன போன மனிதாபிமானத் துளிகள்.

போதும்.
இந்த அரிவாள் கலாச்சாரம்
நரைத்துப் போன
இந்த தலைமுறையோடு
மரித்துப் போகட்டும்.

மரணக் குரல் மட்டுமே கேட்டு
ரணமாகிப் போன என் மனதுக்கு
வயல் காட்டின் சலசலப்பை
அறிமுகப்படுத்துங்கள்

இல்லையேல்
சூரியன் தற்காலிகமாய்ச் செத்துப்போயிருக்கும்
இந்த இரவில்
தெற்குமூலையில் என்னைப் புதைத்து
ஓர்
தென்னங்கன்று நடுங்கள்.

அதுவும் இல்லையேல்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
எனக்கொரு
தூக்குக் கயிறு தயாராக்குங்கள்.

14 comments on “அவமானத்துடன் ஒரு அரிவாள்

  1. இன்னும் நாம் மனிதன் நிலைக்கு உயர, அன்பு, அறவழி, மனிதநேயம் என்ற பாதைகளில் நிறைய பயணப்படவேண்டும் போல் இருக்கின்றது?!…

    வாழ்த்துக்கள் சேவியர்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.