பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 10

சிந்தாநதி’யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2
CVR’ன் ஞாபகம் 3
ஜி’யின் ஞாபகம் – 4
இம்சை அரசியின் ஞாபகம் – 5
வைகை ராமின் ஞாபகம் – 6
தேவின் ஞாபகம் – 7
ஜி. ராவின் ஞாபகம் – 8

சிரில் அலெக்ஸின் ஞாபகம் – 9 

 முன் கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற…நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

கதை மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. தன்னை நோக்கி வரும் வினோதைப் பார்த்து அதிர்கிறாள் காவேரி. எதிர்பாராத விதமாய் அப்போது நிகழும் விபத்தில் காவேரிக்கு செலக்டிவ் அமினீஷியா !

வினோத் மட்டுமே காவேரியின் நினைவில் !!!

தொடர்ச்சி ….

————

வினோத் உள்ளுக்குள் நடுங்கினான். அவனுக்குக் கீழே இருந்த பூமி மெல்ல அரையடி தள்ளிச் சென்றது போல சில வினாடிகள் தடுமாறினான். தன்னுடைய கனவுகளின் கடைசிப் படியையும் ஆக்கிரமித்திருந்த காவேரி இதோ தனக்கு முன்னால் கிடக்கிறாள்.

பள்ளிக்கூட இறுதி நாள் விழாவில் அவள் மறுத்ததும் அதன் பின்னர் அவளுடைய நினைவாகவே இவன் தவித்ததும் மனசுக்குள் முள்ளாய் நெருடியது. வேண்டாம் என்று அவள் சொன்னபின் அவளை சந்திக்காமலேயே போனது தவறோ என்று அவனுடைய உள்ளம் தவித்தது.

ஆனாலும் இந்த கணத்தில் அவன் காவேரியை விட உமாவை அதிகம் நேசித்தான். தன் முதல் காதலின் வலிகளை நட்பின் வரிகளால் நிரப்பியவள் உமா. பார்க்காமல் இருக்கும் பொழுதுகளை சாபத்தின் சிசுக்கள் என்று வர்ணிப்பவள்.

அவனுக்கு உமாவோடு நடக்கும் பொழுதுகளெல்லாம் நிம்மதியின் தேவதையோடு நடப்பதாகவே தோன்றும். தன்னுடைய வாழ்வில் நுழைந்த கருப்புக் குதிரையை வெளிச்சச் சிறகு கொண்டு விரட்டியவளல்லவா அவள் ?

வினோதின் மனதில் கேள்விகள் புரண்டு கொண்டிருந்தபோது வசந்தின் கண்களில் அவை நீராக வழிந்து கொண்டிருந்தன. துளித்துளியாய் காவேரியைப் பற்றிய கனவுகளை வளர்த்ததும். இவளுடைய சிறுவயது வாழ்க்கையைக் குறித்து அறிவதற்காக காவேரியின் ஊருக்கே சென்று தகவல் திரட்டியதும், காவேரி கேட்டபோது உமா சொன்னதாய் சமாளித்ததும் அவள் மனசுக்குள் எழுந்தன.

காவேரி என்று பெயர் இருந்தாலே வசந்தத்தோடு இணைய முடியாதோ என அவன் மனம் நினைத்தது. உமாவோடு பழகியதும் பேசியதும் காவேரியோடு கலக்க என்பதை அவன் மட்டும் தானே அறிவான்.

ஆனந்தமான ஒரு நாள் இப்படி துக்கத்தை தோளில் சுமக்குமென்று வசந்த் நினைத்திருக்கவேயில்லை. அவனுடைய கண்களில் கவலை கூடாரமடித்தது. காவேரியின் கட்டிலருகே கண்ணீரோடு அமர்ந்தான்.

இவர்கள் இருவரை விட அதிக துயரத்தில் இருந்தாள் உமா. என்ன செய்ய முடியும் அவளால் ? தனக்கு முன்னால் அடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் காவேரிக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கவா ? இல்லை காதலே பெரிதென்று மனிதாபிமானத்தை மரணிக்க விடுவதா ? என்ன செய்வது ?

இந்த ஒரு நாள் இல்லாமல் போயிருக்கலாம் என்று நினைத்தாள் அவள். அவளுடைய மனம் துயரத்தின் உருக்காலையாய் வெந்து கொண்டிருந்தது.

அப்போது காவேரி மெல்ல மெல்ல கண் விழித்தாள்.

தனக்கு முன்னால் மங்கலாய் அசையும் உருவங்களிடையே அவள் சட்டென்று ஒரு உருவத்தை மட்டும் அடையாளம் கண்டு கொண்டாள்.

வினோத் !.. அவள் குரல் ஆனந்தம் குழைத்து வெளிவந்தது.

வினோத்.. எப்படிடா இருக்கே ? உன்னைப் பார்த்து எவ்ளோ நாளாச்சுடா ? என்று பேசிக்கொண்டே கை நீட்டி காவேரி வசந்தின் கைகளைப் பற்றினாள்.

வினோத் என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கைகளைப் பற்றும் காவேரியை அதிர்ச்சியுடன் பார்த்தான் வசந்த்.

வசந்த் வாய் திறக்கவில்லை. அதற்குள் அவளுடைய கண்கள் உமாவையும், வினோதையும் பார்த்து குழம்பின.

‘யார் வினோத் இவங்க ?’ நான் எங்கே இருக்கேன் ? என்ன ஆச்சு ? அடுக்கடுக்கான காவேரியின் கேள்விகளால் குழம்பினார்கள் மூவரும்.

(தொடரும் )

——————————–

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக பதினோராவது பகுதியை எழுத மாசிலா மணி அவர்களை அழைக்கிறேன்.

7 comments on “பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 10

  1. ஆஹா பெருசா பிளான் பண்ணி கிளம்பிட்டாய்ங்கய்யா….. அண்ணன் அழைக்கிறார்னு மாநாடு கணக்கா ஆரம்பிச்சுட்டாய்ங்களே… நானும் சும்மாயிருந்த சுண்டி மோதிரம் ஆக்கிடுவாய்ங்க… நானும் அழைக்கிறேன் ஜூப்பரா………….

    Like

  2. என்னங்க இது..இவ்வளவு வேகமா இருக்கீங்க. நேத்து இரவுதான் சிறில் பதிவு போட்டாரு. இன்னைக்கு நீங்க. இதுல பாருங்க…ஒங்களுக்குப் பின்னூட்டம் போட்டுட்டுத்தான் சிறிலுக்குப் பின்னூட்டம் போடப் போறேன் 🙂

    ரொம்பக் கஷ்டப்பட்டு வண்டியத் திருப்புனேன். நீங்க பழைய குருடி கதவத் திறடீன்னு மாத்தீட்டீங்க. :)))))))))))))) சரி நடக்கட்டும். இன்னம் இருக்குறது ரெண்டு அத்தியாயங்கள்தான். அதையும் மாசிலா மணிகிட்ட சொல்லீருங்க. அவரு கூப்புடுற ஆளுதான் கடைசி. மொத்தம் 12 அத்தியாயங்கள்.

    Like

  3. அட்டகாசம்… கலக்கிட்டீங்க.. ஒவ்வொரு பகுதிலையும் திடீர் திடீர் திருப்பங்கள்… :))

    Like

  4. உங்க நடை அழ்காக இருக்கிறது அண்ணா
    வாழ்த்துக்கள்!!

    ஒரு சின்ன சந்தேகம்.
    டாக்டர் காவேரிக்கு அம்னீஷியா என்றும்,இப்போதுல்ல மன நிலையில் அவள் வினோத்தை ரிஜெக்ட் செய்வதற்கு முன் இருந்த ஞாபகம் தான் இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.
    பின் எப்படி???
    //வினோத்.. எப்படிடா இருக்கே ? உன்னைப் பார்த்து எவ்ளோ நாளாச்சுடா ? என்று பேசிக்கொண்டே கை நீட்டி காவேரி வசந்தின் கைகளைப் பற்றினாள்.//

    வஸந்தை பார்த்து ஏன் வினோத் என்று குழம்பினாள் என்பது இன்னொரு கேள்வி.
    ஆனால் அதற்கு மாசிலா மணி பதில் சொல்வார் என நம்புகிறேன்!! 🙂

    Like

  5. Mundhina episode padichu ennada 3 perayum ippadi kashtathula maati vittutaarae.. umavum vinothum pirinjiduvaangalonnu oru varuthathoda inga vandhen.. unga twist supera irundhudhu. Sandhoshama ungal pakkathai vittu selgiren :-))

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.