அவன்

 
கடிகாரம் சத்தமிட்டு அழைத்தது. நல்ல தூக்கம், போர்வையை விலக்கப் பிடிக்கவில்லை விக்னேஷிற்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். கால்வாசி கூட விரியாத இமைகளின் வழியே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான் விக்னேஷ். ஆறு மணி. இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம், யோசனையோடு  போர்வையை நன்றாகப் போர்த்தி கைகளைக் கட்டிக் கொண்டி பக்கவாட்டில் சுருண்டு படுத்தவனை தட்டி எழுப்பினான் அவன்.

எரிச்சலோடே கண் விழித்தான் விக்னேஷ். அவனே தான். கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி வந்து தொந்தரவு செய்து விட்டு, காணாமல் போய்விடுகிறான். யாராய் இருப்பான் ? திடுப் பிடுப் என வருகிறான், ஏதேனும் குளறுபடி செய்கிறான், பிறகு சமாதானம் சொல்லிவிட்டு போயே போய்விடுகிறான். யோசித்துக் கொண்டே மீண்டும் கண்களை மூடியவனின் போர்வையை இழுத்தெறிந்துவிட்டுச் சிரித்தான் அவன். காலையிலேயே குளித்துவிட்டான் போல, தூய்மையான ஆடை உடுத்திருந்தான். ஆடைகளில் ஏதோ ஒரு மெல்லிய நறுமணம்.

“எழுந்திரு… எட்டுமணிக்கு உனக்கு அலுவலகத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது.. மறந்து விட்டாயா ? ” . ஒரு கையில் காபியை உறிஞ்சிக் கொண்டே கேட்டான் அவன்.
” அதெல்லாம் எனக்குத் தெரியும், ஏழரைக்கு வண்டியை உதைத்தால் அது எட்டுமணிக்கு என்னை அலுவலகத்தில் விட்டு விடும்.. நீ என்னை விட்டு விடு பிளீஸ்… இன்னும் ஒரு அரை மணி நேரம் மட்டும் தூங்குகிறேன்”… கெஞ்சல் குரலில் கேட்டான் விக்னேஷ்.

” அதெல்லாம் முடியாது விக்னேஷ்… எட்டுமணிக்கு மீட்டிங் என்றால், நீ ஏழரைக்காவது அங்கே இருக்க வேண்டும். இன்னிக்கு டிராபிக் எப்படி இருக்குமோ ? வழியிலே என்னென்ன பிரச்சனை இருக்குமோ ? ஒண்ணும் தெரியாது.. எழும்பு எழும்பு…” கையில் மிச்சமிருந்த சில தண்ணீர் துளிகளை விக்னேஷின் முகத்தில் உதறிக் கொண்டே சொன்னான் அவன்.

விக்னேஷ் எழுந்தான். ஒருகையில் பிரஷோடும், இன்னொரு கையில் டவலோடும் குளியலறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டே யோசித்தான். யார் இவன் ? என் மனசாட்சியா ? இல்லையே அவன் பார்ப்பதற்கு என்னைப் போல இல்லையே ? அழகாக இருக்கிறானே ? மனசாட்சியாய் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒருவேளை பேயோ ? ம்ஹூம்…. பேய்க்கு கால் இருக்குமா என்ன ?. யோசித்துக் கொண்டே குளித்து முடித்து வெளியே வந்தான் விக்னேஷ்.

அவன் இன்னும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். ” அதான் நான் ரெடியாகி வந்துட்டேன்ல.. நீ கிளம்பு” விக்னேஷ் தான் சொன்னான் குரலில் இருந்தது என்ன உணர்ச்சி என்று அவனுக்கே புரியவில்லை.

” அதெல்லாம் இல்லை… நீ ஏதாவது சாப்பிட்டுட்டு விட்டுக் கிளம்பு.. அதுக்கப்புறம் நான் போறேன்..” பிடிவாதமாய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
” இவ்வளவு அக்கறையா பேசறியே… நீ எனக்கு ஒரு டீ போட்டு தந்திருக்கலாமே ? ” விக்னேஷின் கேள்விக்கு ஒரு சின்ன சிரிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு தொலைக்காட்சியில் சானலை மாற்றினான் அவன்.

“யாரோ கதவை தட்டறாங்க பாரேன்” சொன்னான் அவன். அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடி கதவு தட்டப்பட்டது. விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான். மாமா ! கோயமுத்தூரிலிருந்து மாமா வந்திருக்கிறார். கூடவே மாமா பெண் வித்யாவும்.

” வாங்க மாமா… வா… வாங்க வித்யா…” உள்ளே அழைத்தான். உக்காருங்க. என்ன ஆச்சரியம் ? சென்னைல ஏதாவது விசேஷமா மாமா ? காரணம் இல்லாம சென்னைக்கு வர மாட்டீங்களே ? சிரித்துக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

விசேஷம் என்ன பெரிய விசேஷம் விக்னேஷ் ? . வித்யாவுக்கு இன்னிக்கு இங்க ஒரு கல்லூரில நேர்முகத் தேர்வு. அதுக்குத் தான் வந்தேன். காலேஜுக்கு பக்கத்துல தானே உன் வீடு..அப்படியே உன்னையும் ஒரு பார்வை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.
மாமா ஸ்நேகத்தோடு சொல்லி நிமிர்ந்ததும், முந்திரிக் கொட்டை மாதிரி அவன் பேசினான்…
” ஓ… இண்டர்வியூ டைம் வர்ற வரைக்கும் போரடிக்குமேன்னு இங்கே வந்தீங்களா ? “.
மாமா வுக்கு திக் என்றது.
” என்ன விக்னேஷ் இப்படி சொல்லிட்டே ? ஏன் எங்களுக்கு வெளியே இருந்தா  நேரம் போகாதா ? ” மாமா குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

” நான் என்ன சொல்லிட்டேன் மாமா ? அவன் தானே சொன்னான்… அதுக்காக ஏன் என்னைத் திட்டறீங்க ? ” விக்னேஷ் மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான்.
” அவனா ? யாரு விக்னேஷ் ? நீ தனியா தானே இருக்கே இங்கே ? வேற யாராவது இருக்காங்களா என்ன ? ” சொல்லி விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் மாமா.

” அதோ டி.வி பார்த்துட்டு இருக்கானே அவன் தான் சொன்னான் மாமா ..” விக்னேஷ் காட்டிய திசையில் அவன் இன்னும் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
” என்ன விக்னேஷ்.. விளையாடறியா ? அங்கே யாருமே இல்லையே ? .. ” மாமாவின் குரலில் கொஞ்சம் ஆச்சரியமும், கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது. விக்னேஷின் கண்களைப் பார்த்தார்.
” என்ன ராத்திரி சரியா தூங்கலயா ?…” சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை சிரித்தார்.

” அதை விடுங்க மாமா… நின்னுட்டே இருக்கீங்களே.. வாங்க உட்காருங்க.. என்ன சாப்பிடறீங்க ? ” இயல்புக்கு வந்த விக்னேஷ் கேட்டான்.
” எங்களுக்கு எதுவும் வேண்டாம் விக்னேஷ்.. காலைல தான் சென்னை வந்தோம். வந்த உடனே முதல் வேலையா ஹோட்டல்ல போய் ஒரு கட்டு கட்டிட்டோ ம்ல” சொல்லி விட்டுச் சிரித்தார் மாமா.

விக்னேஷுக்கு குழப்பமாய் இருந்தது. இன்னும் அவன் அங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டும், டி. வி சானலை மாற்றிக் கொண்டும், ஓரக் கண்ணால் வித்யாவை அளந்து கொண்டும் இருந்தான். மாமாவோ யாருமே இல்லை என்கிறார். அப்படியானால் அவன் யார் ? என் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறானா ? எனக்கு ஏதேனும் வியாதியா ? மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேனா ? நினைக்க நினைக்க குழப்பமாக இருந்தது விக்னேஷிற்கு.

“என்ன விக்னேஷ்.. ஏதோ யோசனை போல இருக்கு ?.. ஏதாவது சொல்லேன் ” மாமா தான் சிந்தனைகளைக் கலைத்தார்.
” ஒண்ணுமில்லே மாமா… சொல்றதுக்கு .. அதான் யோசித்திட்டு இருந்தேன்… நீங்க சொல்லுங்க மாமா … என்ன விசேஷம்  ஊர்ல ? ” கேள்வியை மாமா பக்கமாய் திருப்பி வைத்தான் விக்னேஷ்.
” ஒண்ணுமில்லை விக்னேஷ்… எல்லாருமே நல்லா இருக்காங்க. நினைச்சது எதுவும் நடக்கமாட்டேங்குது… இவளுக்கு இந்த ஒரு சீட் மட்டும் கிடைச்சா நல்லா இருக்கும்… ” சொன்னார் மாமா. கண்களில் ஏதோ ஏமாற்றம்.

” நினைக்காததைப் பற்றி ஏன் மாமா பேசறீங்க நாம மரணத்தைப் பற்றி பேசலாமா ? அது தான் கண்டிப்பா நடக்கப் போற விஷயமாச்சே ” – ஐயோ… அவன் தான் குறுக்கிட்டு கேட்டான் கேட்டுவிட்டு சிரித்தும் விட்டான்.
மாமா திரும்பினார்.. கண்களில் வண்டி வண்டியாய் கோபம்.
” என்ன விக்னேஷ்.. உனக்கு என்ன ஆச்சு ? உன் பேச்சே சரியில்லை இன்னிக்கு. உனக்கு  பிடிக்கலேன்னா சொல்லிடு நாங்க போயிடறோம்…” மாமா சொல்லிவிட்டு வித்யாவைப் பார்த்தார். விக்னேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு குனிந்தான்.
மனதுக்குள் கோபமும், அவமானமும் பீறிட்டுக் கிளம்பியது.

“வாங்க உட்காருங்க…. சாப்பிட்டுக் கொண்டே சாவைப் பற்றி பேசலாம் ” அப்படின்னு சொன்னா ஏன் ஆச்சரியப் படறீங்க ? சாவு ஒரு நிகழ்வு தானே அதைப் பற்றி பேசறதுக்கு ஏன் பயப்படறீங்க ? ” அவன் தான் மறுபடியும் கேட்டான். விக்னேஷ் இன்னும் குனிந்து தான் இருந்தான். நிமிரப் பிடிக்கவில்லை அவனுக்கு.

” நல்ல ஒரு விஷயத்துக்கு வந்திருக்கும்போ ஏன் அபசகுனமா பேசறே ? வயசுக் கோளாறா விக்னேஷ் ? ” மாமா கேட்பது மெலிதாக காதில் விழுந்தது. அதற்கு அவன் ஏதோ பதில் பேச ஆரம்பித்தான். விக்னேஷ் நிமிரவேவேயில்லை.

” இல்லே மாமா… மரணம் என்பதைத் தவிர வேற எதையும் நீங்க உறுதியா சொல்ல முடியாது இல்லையா ?.. வித்யாவுக்கு இடம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்… ஆனா ஒவ்வொருவருக்கும் சாவு என்பது கண்டிப்பா நடக்கும்.. கேள்வி ஒண்ணே ஒண்ணு தான்… எப்போ ? எப்போ ? எப்போ ? . அதனால நடக்காததைப் பற்றியே பேசிப் பேசி நடக்கலயேன்னு வருத்தப் படறதை விட நடக்கப் போறதைப் பற்றிப் பேசலாமேன்னு தான் அப்படி ஆரம்பிச்சேன்… ”

” உனக்கு ஏதோ மனக் கோளாறு விக்னேஷ்.. நீ இனிமே தனியா தங்கறது நல்லதில்லை. உன் வீட்ல சொல்றேன்.. ஏதாவது பசங்க கூட சேர்ந்து தங்கு.. அது தான் நல்லது… வண்டி ஓட்டும்போ பார்த்து ஓட்டு” மாமாவின் குரலில் கோபத்தோடு கொஞ்சம் கிண்டலும் கலந்திருந்தது.

” எனக்கு பைத்தியம் ந்னு நேரடியா சொல்லுங்களேன். ஏன் கவலைப் படறீங்க ? மாமா ? ” சிரித்தான் அவன்.

” நான் அப்படியெல்லாம் சொல்லலை விக்னேஷ். நீ ரொம்ப நெகட்டிங் ஆவே யோசிக்கறே.. இது நல்லதில்லை. மனசைப் பாதிக்கும் ” மாமா சொன்னார்.

” நான் மட்டும் தான் மாமா… பாசிட்டிவ் ஆ திங்க் பண்றேன். சாவு வராதுண்ணு யோசிக்கிறது தான் நெகட்டிங் திங்கிங். நான் பாசிட்டிங் ஆ தான் பேசறேன். அது மட்டுமில்லை மாமா… வண்டி ஓட்டும்போ இடிச்சுடுவோமோங்கற பயம் கலந்த நெகட்டிங் திங்கிங் தான் நம்மை கவனமா வண்டி ஓட்டச் செய்யும் இல்லையா ? ” அவன் சொல்லிவிட்டு சிரித்தான்.

மாமா விருட் என்று எழுந்தார். அவனுடைய பதிலை விட அந்த சிரிப்பு தான் மாமாவைக் காயப் படுத்தியிருக்க வேண்டும்.
“வர்றேன் விக்னேஷ் நேரமாச்சு”  ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். விக்னேஷ் இன்னும் தலையை நிமிர்க்கவில்லை. வித்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனோ இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தான்.

மாமா கதவை அடைத்த சத்தத்தில் உறவு கொஞ்சம் பலவீனப் பட்டிருப்பது போல் தெரிந்தது விக்னேஷிற்கு. விக்னேஷ் நிமிர்ந்தான். கண்கள் இரத்தச் சிவப்பாகி இருந்தன. கோபத்தின் அத்தனை சக்திகளையும் திரட்டி அவனை நோக்கிக் கத்தினான்…
” உனக்கென்ன பைத்தியமா ? ஏன் இப்படி என் மாமாவை விரட்டினாய் “. விக்னேஷின் விரல்களெல்லாம் நடுங்கின, உதடுகள் துடித்தன, மூச்சுக் காற்று ஒழுங்கில்லாமல் அலைந்தது.

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். ” அடே மடையா…. தன்னோட பொண்ணை உனக்கு கட்டி வைக்கணும்ங்கிறது மாமா வோட எண்ணம்.
அவ வேற இங்கே தங்கி படிக்க போறாளாம். வருசக் கணக்கா… புரியுதா ? நான் அவங்களை துரத்தாம இருந்தா அவ உங்கூடவே சுத்திட்டு இருந்திருப்பா… மனசுல ஆசையும் வளத்திருப்பா…  அப்புறம் நீ காதலிச்சிட்டு இருக்கிற ஜோதியோட கதி என்ன ஆவறது ? ”

” இல்லை …. அது உண்மையா இருக்காது. அப்படியே அது உண்மையா இருந்தாலும் இது தான் வழியா அதுக்கு ? என்ன தான் இருந்தாலும்… வீட்டுக்கு வந்தவங்களை இப்படி பேசி துரத்தினது  தப்பு தப்பு தப்பு…. நீ முதல்ல வெளியே போ.. இனிமேலும் உன் முகத்துல முழிக்க நான் விரும்பல… சும்மா நீயா எதையெதையோ கற்பனை பண்ணிட்டு உன் வாய்க்கு வந்ததைப் பேசிட்டே… இனிமே இதை நான் எப்படி சரிபண்ணப் போறேனோ ? ” விக்னேஷ் கோபம் குறையாமல் கையில் இருந்த புத்தகத்தைத் தூக்கி அவன் மேல் வீசினான்.

சிரித்துக் கொண்டிருந்த அவன் எழும்பினான். சிரிப்பை நிறுத்தினான். கண்களில் கொஞ்சமாய் கோபம். நேரடியாக விக்னேஷின் முகத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

” வாயை மூடுடா.. நான் செய்ததெல்லாம் சரி தான். எந்த தப்பும் கிடையாது… பாரு நேரம் ஏழரை… இப்போ வண்டியை கிளப்பினால் தான் எட்டுமணிக்கு நீ ஆபீஸ் போக முடியும். சும்மா என்னை கத்தற வேலையெல்லாம் வெச்சுக்காதே கொன்னுடுவேன்… நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைச்சுக்கோ…. எது வந்தாலும் பார்த்துக்கலாம் கிளம்பு..”
சொல்லிவிட்டு டி.வி ரிமோட்டை சோபாவில் விட்டெறிந்துவிட்டு காற்றில் கரைந்து காணாமல் போனான் அவன்

4 comments on “அவன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.