பெண்ணின்றி அமையாது உலகு !

Image result for mother and child

பெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று ! அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.

பெண்களின் உலகம் அழகானது ! அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது ! பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது ! பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.

எந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ! ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் !

விழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை !

தொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை ! முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் ! மறக்க முடியா மகத்துவம்.

அன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல !
ஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.

நம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.

தவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ?’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ! தங்கை என்பவள் மூத்த மகள் ! சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.

வண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது !

இந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி ! இறைவன் இணையாய் கொடுக்கும் துணை ! நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் ! தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் !

இரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி ! பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் ! உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது !

மனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.

பெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் !

என் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.

எரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.

சகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.

பெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.

அன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது ! அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் !பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது ! மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ! ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.

அன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை !

பெண்மையை நேசிப்போம் !
நமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் !

பெண்மையை மதிப்போம் !
நம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் !!

பெண்மையை போற்றுவோம் !
எந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு !

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

பெண்கள் : வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

 Image result for Working from home Women

  1. சமையல் திறமை இருந்தால் வீடுகளில் இருந்தபடியே ஊறுகாய், வடகம், அப்பளம் என போட்டுத் தாக்கலாம். காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பெண்களுக்கான நவேலை இது.
  2. டே கேர் செண்டர் ஆரம்பிக்கலாம். கணவனும் மனைவியும் அலுவலகம் ஓட, குழந்தைகளை எப்படி கவனிப்பதென கைகளைப் பிசையும் தம்பதியர் தான் உங்கள் கஸ்டமர். பொழுது சிறப்பாகப் போகும், வருமானம் வஞ்சகமில்லாமல் வந்து சேரும் !
  3. நல்ல டைப்பிங் தெரிந்தால் டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே தரும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து ஏற்றவேண்டும். பெரும்பாலும் அது தான் வேலை !
  4. “ஆன்லைன்” கால் செண்டர் வேலைகள் வீட்டிலிருந்தபடியே கூட செய்ய முடியும். அதற்கான இடங்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து முயன்றால் பலன் கிடைக்கும்.
  5. டிரான்ஸ்கிரிப்ஷன் ஒரு நல்ல வேலை. ஒலிவடிவில் வரும் பைல்களைக் கேட்டு அதை வார்த்தைகளாக டைப் செய்ய வேண்டும். அது தான் வேலை. ஆனால் என்ன, குரல் சொல்வதைப் என்பதைப் புரிந்து கொள்ள சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒரு வார்த்தைக்கு இத்தனை காசு என நல்ல லாபம் தரக்கூடிய வேலை.
  6. கைவினைப் பொருட்கள் செய்வதும் நீண்டகாலமாக பெண்கள் வெற்றிகரமாகச் செய்து வரும் ஒரு வேலையே.
  7. வெட்டிங் பிளானர் – என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. கார்ட் எங்கே அச்சடிக்கலாம் முதல் சாம்பார் எங்கே சமைக்கலாம் என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.
  8. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது ஒரு நல்ல சுவாரஸ்யமான வேலை. கேக் டெக்கரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.
  9. கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா ? பத்திரிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கார்ட்டூனிஸ்டாகக் களமிறங்கலாம்.
  10. நல்ல டிரெய்னிங் திறமை இருந்தால் நிறுவனங்களுக்கு டிரெயினராகப் போகலாம். பல நிறுவனங்கள் தேவைக்கேற்ப நிறுவனங்களுக்குச் சென்று டிரெயினிங் எடுக்கின்றன.
  11. ஃபாஷன் டிசைனிங் – வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம்.
  12. செல்லப்பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. செல்லப்பிராணிகளுக்குப் பயிற்சி கொடுப்பது ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 200 ரூபாய் பெற்றுத் தரும். இதற்கு அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் கேனல்களில் தொடர்பு கொள்வது மிகவும் முக்கியமானது.
  13. டெய்லரிங் பெண்களுக்குப் பொருத்தமான வேலை. நன்றாகக் கற்றுக் கொண்டால் வீட்டில் இருந்தபடியே நன்றாகச் சம்பாதிக்கலாம்.
  14. டெய்லரிங் போலவே எம்பிராய்டரி போடுவதும் ஒரு நல்ல வேலை. சரியான பயிற்சி இருக்க வேண்டியது முக்கியம்.
  15. “கிளாஸ் பெயிண்டிங்” இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும். கண்ணாடி பெயிண்டிங்கில் கலக்கலாம்.
  16. ஃபாஷன் ஜூவல்லரி உருவாக்குவது இப்போதைய சூப்பர் பிஸினஸ். வேலையில் இருக்கும் பெண்கள் கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி நல்ல காசு பார்க்கிறார்கள். இதற்கும் பயிற்சி நிலையங்கள் எக்கச் சக்கமாக உள்ளன.
  17. வீட்டைச் சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால், நல்ல செடிகளுடன் கூடிய நர்சரி வைக்கலாம்.
  18. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைத்தளங்கள் உருவாக்குவது தான் இந்த வேலையே. ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.
  19. யோகா நன்றாகத் தெரியுமெனில், ஒரு யோகா டீச்சர் ஆகிவிடுங்கள். உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி. நல்ல வருமானமும் வரும்.
  20. “புரூஃப் ரீடிங்” , எடிட்டிங் போன்ற வேலைகள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். பதிப்பகங்கள், நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். இன்றைய இண்டர்நெட் வாழ்க்கை ஆன்லைன் புரூஃப் ரீடிங்கை வளமாக்கியிருக்கிறது.
  21. பல மொழிகளில் உங்களுக்குப் புலமை இருக்கிறதா ? நீங்கள் லக்கி தான். இன்றைக்கு டிரான்ஸ்லேஷன் வேலைக்கு நிறைய தேவை இருக்கிறது ! வீட்டில் இருந்தபடியே செய்யலாம் இதை.
  22. முன்பணம் அனுப்புங்கள், வேலை உங்கள் வீடு தேடி வரும் என வரும் அழைப்புகளை நிராகரியுங்கள். எந்த தொழிலில் இறங்கும் முன்னரும் முழுமையான புரிதலுடன் இறங்குங்கள்.
  23. கிராமப்புறப் பெண்களுக்கு கயிறு திரித்தல், பாய் முடைதல், பனை ஓலையில் கலைப் பொருட்கள் செய்தல் என வாய்ப்புகள் பல.
  24. ஊதுபத்திகள் செய்வது மத நம்பிக்கை இருக்கும் வரை லாபமான பிசினஸ் தான். அதற்குரிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் எளிதில் செய்ய முடிகின்ற வேலை தான்.
  25. மிதியடிகள் செய்வது ஒரு நம்பிக்கை தரும் வேலை. துணி, கயிறு, நைலான், என பல்வேறு பொருட்களைக் கொண்டு மிதியடிகள் செய்யலாம். விற்பனைக்கான வழியை முடிவு செய்த பிறகே இதில் இறங்குங்கள்.
  26. இ-பே போன்ற நம்பிக்கையான வலைத்தளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த இ-பே செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.
  27. நீங்களே ஒரு வலைத்தளம் உருவாக்கலாம், அது பிரபலமாகிவிட்டால் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம். அதிலேயே ஆன்லைன் ரேடியோ ஆரம்பிக்கலாம். இவற்றுக்கெல்லாம் விளம்பரங்கள் மட்டுமே வருமானம். எனவே முன் அனுபவம் உடையவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
  28. வீட்டுத் தயாரிப்பாக அழகுப் பொருட்கள், பாட்டி வைத்திய மருந்துகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
  29. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும் அதற்குரிய விற்பனை வழிகள் உண்டா என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தப் பொருள் அந்த சூழலுக்குத் தேவையானது தானா ? அதை மக்கள் வாங்குவார்களா எனும் ஒரு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.
  30. எவ்வளவு பணம் தேவைப்படும் என கணக்கிடுங்கள். அதைப் போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணம் செலவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  31. தோல்வி குறித்த பயமின்மையும், சரியான தெளிவும், போதிய பண வசதியும் சிறு தொழில்கள் துவங்க முக்கியமான மூன்று தேவைகள்.
  32. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது திறமையானவர்களுக்கு ஒரு நல்ல பிசினஸ்.
  33. கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் தெரிந்தால் வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். இது கம்யூட்டருக்கு என்றல்ல, எந்தெந்த ஏரியாவில் ரிப்பேர் பார்க்கும் திறமை உண்டோ அதிலெல்லாம் நுழையலாம்.
  34. விளம்பர நிறுவனங்களுக்கு டிசைன் செய்து கொடுப்பது, வாசகங்கள் வடிவமைத்துக் கொடுப்பது போன்ற விளம்பர நிறுவனம் சார்ந்த பல வேலைகள்.
  35. பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு நல்ல இடத்தில் இருந்தால் ஆரம்பிக்கலாம். அதற்குரிய பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம்.
  36. அனிமேஷன் வேலைகள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து செய்யக்கூடிய வகையில் வந்து விட்டன. முன் அனுபவம் உடைய யாரையாவது அணுகினால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  37. குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுப்பது ஒரு நல்ல வேலை. அளவான வருமானத்துக்கும், பொழுது போக்குக்கும் உத்தரவாதம்.
  38. நல்ல சமையல் கில்லாடியெனில் சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்துப் பாருங்களேன். புதுமையாகவும் இருக்கும், சமைக்கத் தெரியாதவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும் !
  39. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மை தயாரிக்கலாம்.
  40. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் – இளம் பெண்கள் திறமையாய் செய்யக் கூடிய ஒரு வேலை. பெரிய நிறுவனங்களுடன் கை கோர்த்துக் கொண்டால் இலட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம் !
  41. பறவைக் கூடுகள், மீன் தொட்டிகள் போன்றவற்றை அழகாக வடிவமைத்து விற்கலாம்.
  42. பொக்கே, பலூன் பொம்மை போன்றவை தயாரிக்கலாம்.
  43. போட்டோ பிரிண்டிங், பிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். கொஞ்சம் முதலீடு இதற்கு அவசியம்.
  44. வீடு, அலுவலகங்கள் போன்றவற்றின் – இண்டீரியர் டிசைனர் வேலை, இதற்கு அனுபவமும், விருப்பமும், பொறுமையும் தேவை.
  45. செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது, பெட் ஷாப் வைப்பது, டிரெயிங் கொடுப்பது என செல்லப்பிராணிகளைச் சுற்றி நிறைய வேலைகள் செய்யலாம்.
  46. வேலைக்கான வழிகாட்டுதல், ரெஸ்யூம் தயாராக்குதல், கன்சல்டன்சி வைத்தல் என புதியவர்களுக்கு வழிகாட்ட நிறைய வேலைகள்.
  47. போட்டோக்களை வீடியோக்களாக்குவது, வீடியோவில் எடிட்டிங் செய்வது என கம்ப்யூட்டர் சார்ந்த சில வேலைகளைத் திட்டமிடலாம்.

Thanks : Devathai, Monthly

பெண்கள்  : பாதுகாப்பு டிப்ஸ் !

Image result for women safety

ஒரு பெண் என்றைக்கு நடு ரோட்டில் தைரியமாக நடந்து போகிறாரோ அன்றைக்கு தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. அந்த சுதந்திரம் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டும் என தெரியவில்லை. சொந்த அப்பார்ட்மென்டுக்குள்ளேயே, எந்த பாவமும் செய்யாத‌ ஏழு வயது சிறுமி ஹாசினியின் உயிர் பறிக்கப்படுகிறது. ரெயில்வே நிலையத்திலேயே ஒரு படுகொலை அரங்கேறுகிறது. தலித் எனும் காரணத்தால் நந்தினி எனும் பதினாறு வயதுப் பெண் அதிர்ச்சி மரணத்தை சந்திக்கிறார். அச்சம் எங்கும் நிலவுகின்ற காலகட்டம் இது.

“திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது உண்மை தான். அதற்காக, திருடன் திருந்தும் வரை காத்திருக்கவும் முடியாது. “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” என வியக்குமளவுக்கு இன்றைக்கு திருடர்களின் புத்தி வேலை செய்கிறது. இந்த மூளையை அப்படியே அலேக்காய் தூக்கிக் கொண்டு போய் ஒரு நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தினால் நோபல் பரிசே கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

நமது சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டும் அதே வேளையில் நாமும் எந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர், வல்லுநர்கள், பாதுகாப்பு குழுக்கள் போன்றவர்கள் தொடர்ந்து இத்தகைய அறிவுறுத்தல்களைத் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

  1. அலட்சியம் அகற்றுவோம்

நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. “எங்க ஏரியா ரொம்ப சாதுவான, சமர்த்தான, அமைதியான, புனிதமான ஏரியா. இங்கேயெல்லாம் திருடங்க யாரும் வரமாட்டாங்க” என ஓவரா நம்பி விடுவோம். எல்லா பயணத்துக்கும் ஒரு முதல் சுவடு உண்டு. எல்லா திருட்டுக்கும் ஒரு பலியாடு உண்டு. எனவே ‘இதுவரை நடக்கலை, அதனால இனியும் நடக்காது’ எனும் அசட்டு நம்பிக்கைகள் வேண்டவே வேண்டாம்.

அதிலும் குறிப்பாக, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் திருடர்களின் கழுகுக் கண்களில் முதலில் விழுந்து விடுவார்கள். எப்படியாவது இவர்களுடைய கவனத்தைத் திசை திருப்பியோ, வலுக்கட்டாயமாய் நுழைந்தோ தாக்குதல் நடத்த வியூகம் வகுப்பார்கள் திருடர்கள்.

எப்போதும் கதவையும், கிரில் கேட்டுகளையும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பது பால பாடம். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் கதவிலுள்ள எல்லா பூட்டுகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர். பால்கனி, மாடி கதவுகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள்.

ஒரே கதவில் நாலு தாழ்ப்பாள் இருந்தால் நாலையும் போடுங்கள் ! திருடன் உள்ளே நுழைய எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பாதுகாப்பாய் இருக்கலாம். எனவே அடிப்படை விஷயமான பூட்டு விஷயத்தை மறக்க வேண்டாம்.

  1. வீட்டை பலப்படுத்துவோம்

ஒரு டிவி வாங்க வேண்டுமென்றால் அத்தனை கடைகள் ஏறி, எல்லாவற்றையும் அலசிக் காயப்போட்டு தான் வாங்குவோம். அதே போல தான் ஒரு வாஷிங் மிஷின், ஒரு பிரிட்ஜ் என எல்லா விஷயத்திலும் மண்டையைப் போட்டுக் குடைவோம். ஆனால் பூட்டு விஷயம் வரும்போது மட்டும், பக்கத்தில் இருக்கும் ஹார்ட்வேர்ஸ் கடைக்குப் போய் கம்மி விலையில் ஒரு பூட்டு வாங்கி மாட்டுவோம்.

அந்தப் பூட்டுகளெல்லாம் திருடன் வந்து சத்தமாய் இருமினாலே திறந்து போய்விடும். முதலில் பூட்டுகளில் கவனம் செலுத்துங்கள். நல்ல தரமான பூட்டுகளை வாங்குங்கள். விலை அதிகமாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பூட்டு சரியில்லையேல் வீட்டுக்குள் என்ன சமாச்சாரம் இருந்தாலும் அது பாதுகாப்பாய் இருக்காது !

அதே போல ஒருவேளை ஒரு புது வீட்டுக்கு வாடகைக்குப் போனாலோ, குடியேறப் போனாலோ முதல் வேலையாக சகல பூட்டுகளையும் மாற்றுங்கள். பழைய பூட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். அதன் சாவிகள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம் எனும் எச்சரிக்கை உணர்வு உள்ளுக்குள் இருக்கட்டும்

முன் பக்கக் கதவில் ஒரு லென்ஸ் பொருத்தி வெளியே நடப்பவற்றைப் பார்ப்பது போல அமைப்பது தனிமையாய் இருக்கும் போது ரொம்பவே பாதுகாப்பானது. ரொம்ப சிம்பிள், ஆனா ரொம்பவே பயனுள்ள விஷயம் இது ! அதுவும், அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தங்குபவர்களுக்கு இது ரொம்பவே அவசியம். வீட்டின் வெளியே நிற்பவர் பக்கத்து வீட்டு நபரா இல்லை, தெரியாத நபரா என்பதைக் கண்டு கொள்ள வசதியாக இருக்கும்.

கதவில் ஒரு சங்கிலி மாட்டி வைப்பது கூடுதல் பயனளிக்கும் !

  1. நள்ளிரவு தந்திரங்கள்.

திருடர்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட புத்தம் புதிய தந்திரங்களோடு களமிறங்குகிறார்கள். அதிலும் பெண்கள் தனியாக இருக்கும் விஷயம் தெரிந்தால் எப்படியாவது அவர்களை ஏமாற்றி கிடைப்பதை லபக்கிக் கொண்டு போக எல்லா வழிகளிலும் முயல்வார்கள்.

நள்ளிரவில் திடீரென உங்கள் வீட்டுக் கொல்லையிலோ, அல்லது வேறு ஏதோ ஒரு பக்கத்திலோ இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும். இரவு ஆனதால் அந்த சத்தம் உங்களை எழுப்பியும் விடும்.

“அடடா…. டேப்பை மூட மறந்துட்டேன் போலிருக்கு” என அரக்கப் பரக்க பாதி தூக்கத்தில் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகாதீர்கள். இதற்காகவே காத்திருக்கும் திருடர்களுக்கு வேலை படு சுலபமாகிவிடும்.

அதே போல இரவில் வெளியே சத்தம் கேட்கிறது, குழந்தை அழுகிறது, லைட் எரிகிறது, பூனை கத்துகிறது என எதுவாய் இருந்தாலும் தனியே வெளியே போகாதீர்கள்.

அதே போல, அதிகாலை வேளைகளில் இரட்டைக் கவனம் அவசியம். திருட்டுகள் அதிகம் நடப்பது அதிகாலை வேளையில் தான். காலையில் நாலுமணிக்கு எழும்பி கொல்லைப் பக்கம் போவது, கதவைத் திறந்து வெளியே வருவது போன்ற நேரங்களில் அலர்ட் அவசியம் . பெரும்பாலும் அந்த நேரங்களில் நமது மூளை ரொம்ப அலர்ட்டாய் இருக்காது !

திருடர்கள் உள்ளே நுழையவோ, கத்தி முனையில் மிரட்டவோ அந்த சில நிமிட அசதியும், கவனமின்மையுமே போதும் ! எனவே அதிகாலை வேளையில் வெளியே வரவேண்டியிருந்தால், முழு பாதுகாப்பு உணர்வுடனும், அளவுக்கு மீறி லைட்களை எரியவிட்டும் வருவதே நல்லது !

கையில் செல்போனை எப்போதுமே வைத்திருப்பது கூடுதல் பிளஸ் !

  1. கர்ட்டன் போடுங்க !

உங்க வீடு, பெரிய பெரிய சன்னல்களுடைய வீடா ? சன்னல்களுக்கு நல்ல கடினமான திரைச்சீலை வாங்கிப் போடுங்கள் ! திரைச்சீலைகளால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு.

முதலாவது, உங்கள் வீட்டில் யார் இருக்கிறீர்கள் ? என்னென்ன விலையுயர்ந்த பொருட்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களெல்லாம் வெளியே இருந்து நோட்டமிடும் நபர்களுக்குத் தெரிய வராது !

இரண்டாவது, சூரிய வெப்பம், தூசு போன்ற விஷயங்களிலிருந்தும் உங்களுக்குப் பாதுகாப்பு. மூன்றாவது, உள்ளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் வெளியே இருப்பவர்களுக்கு வேடிக்கப் பொருள் ஆகாது. இதுவும் ஒரு பாதுகாப்பு அம்சம் தான், எளிமையான பாதுகாப்பு வழி.

ஒருவேளை உங்கள் வீட்டில் எல்லா பாதுகாப்பையும் மீறி திருடன் நுழைந்து விட்டான் என வைத்துக் கொள்ளுங்கள். சத்தம் போடுங்கள். ! சத்தம் திருடர்களுக்கு அலர்ஜி.

சத்தம் போடும்போது கூட திருடன் திருடன் என கத்தாதீர்கள் என்பது பெரியவர்கள் காட்டும் வழி ! அப்புறம் எப்படிக் கத்துவது ? தீ…தீ என கத்த வேண்டுமாம். திருடன் திருடன் என கத்தினால் உதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். ஆனால் தீ தீ என கத்தினால் எல்லோரும் தயங்காமல் ஓடி வருவார்கள். திருடனிடமிருந்தும் தப்பி விடலாம் !

  1. அடுத்த வீட்டு நட்பு

கிராமத்துக்கும் நகரத்தும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடு கூடி வாழ்தல் தான். ஒரு கிராமத்திலுள்ள மொத்த நபர்களும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. எல்லாருமே சொந்தக்காரங்களாகவோ, நண்பர்களாகவோ இருப்பாங்க. நகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கிறது, எத்தனை பேர் இருக்கிறாங்க, அவங்க பேர் என்ன போன்ற பல விஷயங்கள் தெரியவே தெரியாது.

பக்கத்து வீட்டு நபர் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனா கூட நாலு மாசம் கழிச்சு தான் தெரியவரும். இது பாதுகாப்புக்கு கொஞ்சம் இடைஞ்சலான விஷயம். அடுத்த வீட்டு மனிதர்களோடு நல்ல ஆரோக்கியமான நட்பும், அன்பும் கொண்டிருப்பது சிக்கல்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.

ஒருவருக்கொருவர் உதவுவதும், பாதுகாத்துக் கொள்வதும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே அற்புதமான விஷயங்கள்.

  1. கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்.

ஒரு காலத்தில் ரொம்ப கஷ்டமாய் இருந்து, இப்போது மிக சகஜமாய் மாறியிருக்கும் ஒரு விஷயம் இந்த சி.சி.டி.வி காமெராக்கள். ஐயாயிரம் ரூபாய் முதலே இந்த வசதி இப்போது வந்திருக்கிறது. உங்கள் வசதிக்கு ஏற்ப எத்தனை கேமராக்கள் வேண்டுமோ அதைப் பொருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் உங்களுடைய மொபைலின் மூலமாக உங்கள் வீட்டைக் கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.

ஒருவேளை அதற்கும் உங்களுக்கு வசதியில்லாத சூழலெனில், போலி கேமரக்களை வாங்கி பொருத்துங்கள். அதாவது பார்வைக்கு கேமரா போல இருக்கும், ஆனால் உண்மையில் கேமரா அல்ல. சில நூறு ரூபாய்களுக்கே இந்த கேமராக்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு வேளை உங்கள் வீட்டில் கார் இருக்கிறதெனில் அதன் ரிமோட் கன்ட்ரோலரை உங்கள் படுக்கையிலேயே வைத்திருங்கள். இரவில் யாரேனும் அத்து மீறி நுழைவதைப் போலத் தோன்றினால் அதிலுள்ள அலாரம் பட்டனை அமுக்குங்கள். உங்கள் கார் கத்தும்.

திருடர்களுக்கு அலர்ஜியான இரண்டு விஷயங்கள் வெளிச்சமும், சத்தமும். அது உங்களைப் பாதுகாப்பாய் வைக்கும் !

கார் இல்லாதவர்களுக்கு, வீட்டுப் பாதுகாப்புக்கான அலாரம் சிஸ்டம்கள் கடைகளிலேயே விற்பனைக்கு வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி !

  1. வழக்கத்தை விலக்குங்கள்

ஏதோ ரொம்ப பத்திரமா இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறும் விஷயங்களில் நாமெல்லாம் கில்லாடிகள். வீட்டை விட்டு வெளியே போகும் போது செருப்புக்கு உள்ளேயோ, மிதியடிக்குக் கீழேயோ, தொட்டிச் செடியிலோ எங்கேயாவது சாவியை வைத்து விட்டு உலக மகா பாதுகாப்பாய் இருப்பது போல கற்பனை செய்து கொள்வோம். திருடர்கள் முதலில் சாவியைத் தேடும் இடங்களே இவை தான்.

அப்படியே சாவி இல்லாவிட்டால் திருடன் திரும்பிப் போவான் என்று நினைக்க வேண்டாம், எனவே அடுத்தடுத்த பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.

சாவியை யாரும் கணிக்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கலாம். அல்லது ரொம்பவே நம்பிக்கைக்குரிய நபரிடம் கொடுத்து வைக்கலாம்.

ஒருவேளை அலுவலகத்துக்கு சாவியை எடுத்துப் போனால், கார்சாவி, அலமாரா சாவி, வீட்டுச் சாவி என எல்லா சாவியையும் ஒரே கொத்தில் போட்டு வைக்காதீர்கள். வாலெட் பார்க்கிங் போன்ற இடங்களில் இந்த விஷயத்தில் இரட்டைக் கவனம் அவசியம்.

நகையையும் பணத்தையும் பீரோவிலோ, தலையணைக்கடியிலோ வைத்துக் கொள்வது ஹைதர் கால பழக்கம். இந்த காலத்தில் வங்கி லாக்கர் தான் ஒரே சிறந்த வழி. மாத தவணை கட்ட வேண்டுமே, ஆண்டுக் கட்டணம் உண்டே என்றெல்லாம் முரண்டு பிடிக்காமல் ஒரு லாக்கர் வாங்கிவிடுவது உசிதம் !

வீட்டில் இருக்கும் அலமாராக்களைக் கூட சன்னலோரத்திலோ, வெளிப்பக்கச் சுவரின் அருகிலோ வைக்காதீர்கள். கொஞ்சம் பாதுகாப்பான உள் அறைகளில் வைத்து விடுவது நல்லது !

  1. பக்கமோ, தூரமோ…

பலரும் செய்யும் ஒரு மாபெரும் தவறு “பக்கத்துல தானே போறேன்.. இப்போ வந்துடுவேன்ல..” என வெகு அலட்சியமாய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு போவது. பொதுவாக எதிர் தெருவில் இருக்கும் மீன் கடையோ, அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக்கடையோ போகும் போது இது நடக்கும் !

கதவைச் சும்மா சாத்திவிட்டுப் போவது, கொல்லைப் பக்கக் கதவைக் கவனிக்காமல் போவது போன்ற பல தவறுகள் நடக்கும். புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா ? பெரும்பாலான விபத்துகள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் நடக்கிறதாம். காரணம் அப்போது தான் ஹெல்மெட் ஏதும் போடாமல் அலட்சியமாக மக்கள் வண்டியை எடுத்துக் கொண்டு போவார்கள்.

அதே போல் தான் திருட்டும். “டெய்லி போறது தானே…” என போகாதீர்கள். தினமும் உங்களைக் கவனிக்கும் ஒருவனுக்கு அந்த ஐந்து நிமிட இடைவெளியே போதுமானது !

கையில் ஒரு செல் போன் இருக்க வேண்டியது இப்போதெல்லாம் தவிர்க்கக் கூடாததாகி விட்டது. கையில் இருக்கும் செல்போனில் உங்கள் ஏரியா காவல் நிலைய எண்கள், ஆம்புலன்ஸ் நம்பர், மருத்துவமனை எண்கள் என எல்லாம் இருக்க வேண்டியது கட்டாயம்.

நம்பிக்கையான நபர்களுடைய எண்கள் “ஸ்பீட் டயல்” செய்ய வசதியாய் இருந்தால் ரொம்ப நல்லது. எமர்ஜன்சி எண், போன் லாக்காகி இருந்தால் கூட தெரிவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.

 

  1. சந்தேகம் நல்லது.

தெரியாத நபர் விற்பனைக்காகவோ, வேறு ஏதாவது விஷயம் சொல்லிக் கொண்டோ வந்தால் கதவைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித் தனம். “அம்மா, வாட்டர் ஃபில்டர் சரி பண்ண ஆபீஸ்ல இருந்து வந்திருக்கேன்” என வருவது ஒரு திருட்டு ஐடியா. அந்த நபரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு அந்த அலுவலகத்துக்குப் போன் பண்ணி விஷயம் உண்மை தானா என தெரிந்து கொள்ளுங்கள்.

ஏசி சர்வீஸ், வாஷிங் மெஷின் சர்வீஸ் என்பதெல்லாம் கப்சாவாகக் கூட இருக்கலாம். அலுவலக எண்களையெல்லாம் ஒரு இடத்தில் பத்திரமாய் எழுதி வையுங்கள்.

எக்காரணமும் கொண்டும் வருபவனிடமே “உன் ஆபீஸ் நம்மர் என்னப்பா ?” என அப்பாவியாய்க் கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.

இப்போது புதிது புதிதாக போலியோ ஊசி போடணும், கணக்கெடுக்கணும், ஈபி வேலை செய்யுதா, வாட்டர் டேங்க்ல குளோரின் போடணும் இப்படி என்ன ஐடியாவோடு வந்தாலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பட்டியலில் இருக்கலாம் !

அதே போல, உங்கள் வாழ்க்கையையும் ஒரு அட்டவணைக்குள் அடக்காதீர்கள்.  “ஷார்ப்பா 8 மணிக்கு கோயில் போவாங்க,, 9.45 க்கு வருவாங்க” என்பது போல ஒரு பக்கா பிளான் போட்டு வாழும் பார்ட்டிகள் எதிராளிக்கு எளிதானவர்கள். எப்போ எங்கே போவாங்க, எப்போ வருவாங்க என்பதே தெரியாதபடி இருப்பது ஒரு வகையில் எதிராளியைக் குழப்பும். ஒரே வழியில் போவது, ஒரே மாதிரி செயல்படுவது இதையெல்லாம் தவிர்த்தல் நலம்.

  1. குரல்கள் ஏமாற்றும்.

வீட்டுக்கு யாராச்சும் தொலைபேசினால் உங்கள் ஜாதகத்தையெல்லாம் அங்கே கூறிக்கொண்டிருக்காதீர்கள். வங்கியிருந்து பேசுகிறேன், இன்சூரன்ஸ் நிலையத்திலிருந்து பேசுகிறேன், டெலபோன் ஆபீஸ்ல இருந்து பேசுகிறேன் என்றெல்லாம் கால்கள் வரக் கூடும். என்ன விஷயம் என்பதை முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் போனில் உங்களுடைய கார்ட் நம்பர், பாஸ்வேர்ட், பிறந்த நாள், பின் நம்பர் போன்றவற்றையெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். முடிந்தால் போனை கட் பண்ணி நீங்களே மீண்டும் வங்கிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். பேசுங்கள்.

நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா ? தனியாக இருக்கிறீர்களா ? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நோக்கில் போன் கால்கள் வரக் கூடும் !

மொபைலிலோ, வீட்டு போனிலோ மிஸ்ட் கால் வந்திருப்பதைப் பார்த்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வோம் இல்லையா ? அதில் கூட எச்சரிக்கை தேவை. எதிர் நபர் நமக்குத் தெரியாத நபர் எனில் துவக்கத்திலேயே ‘சாரி.. ராங் நம்பர்” என்று சொல்லி வைத்து விடுங்கள். “நீங்கள் யார், எங்கே இருக்கிறீர்கள்” என மறு முனை விசாரித்தால் பதிலளிக்க மறுத்து விடுங்கள்.

மிஸ்ட் கால்கள் உங்களை தவறை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். அல்லது உங்கள் வீட்டு ரகசியங்களை அறிந்து திருடத் திட்டமிடும் தில்லாலங்கடி யுத்திகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*

நன்றி : பெண்மணி மாத இதழ்

மேக்கப் விபரீதம் : அகத்தின் அழகை, முகத்தில் அணிவோம்

Image result for makeup

ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும் விழுந்து தத்தளிப்பவர்கள் ஏராளமானோர். ஒரு விதத்தில் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் சின்ன ஈயாய் அவர்களுடைய வாழ்க்கை பிடிக்கப்பட்டு விடுகிறது.

அழகின் இலக்கணம் பெண்கள் தான். அவர்களுடைய அழகு அவர்களுடைய செயல்களில், அவர்களுடைய அன்பின், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது. அதனால் தான் உலக அளவில் பெண்மையைப் போற்றுவது போல யாரும் ஆண்மையைப் போற்றுவதில்லை !

இயல்பிலேயே அழகாய் இருப்பதால் அவர்களுக்கு அழகுணர்ச்சியும் ரொம்ப அதிகம். எதையும் அழகாய்ச் செய்ய ஆசைப்படுவார்கள். ஒரு மொபைல் கவர் வாங்கினால் கூட ஓரத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டைலாக்க முயல்வார்கள். இது பெண்கள் சிறுமியராய் இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது.

ஒரு இளம்பெண்ணின் பையை திறந்து பார்த்தால் அதில் ஒரு மினி அழகுசாதன நிலையமே இருக்கும். ஐபுரோ, ஐ ஷேடோ, ஐ லேஷல், ஐ லைனிங் இப்படி கண்ணுக்கு மட்டுமே ஏகப்பட்ட பொருட்களை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் விளம்பர உலகின் மாயாஜால பேச்சுகளிலோ, உடன் பழகும் மற்ற பெண்களின் தாக்கத்திலோ விளைந்தவையாய் இருக்கும்.

உளவியல் சொல்லும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு” என்கிறது அது ! தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வர பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் ஒன்றே மேக்கப் என்கின்றது உளவியல். சரி, உளவியல் எதையோ சொல்கிறது என விட்டு விடலாம், ஆனால் உடலியல் என்ன சொல்கிறது தெரியுமா ? அழகுப் பொருட்கள் ஆபத்தானவை !! மிக மிக ஆபத்தானவை !!

இந்த மேக்கப் பொருட்களில் இருக்கும் வேதியல் பொருட்களையும் அமிலப் பொருட்களையும் பட்டியலிட்டுப் பார்த்தால் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி லேபில் நுழைந்த‌ ஒரு உணர்வு வருகிறது. அந்த அளவுக்கு எதிலும் அமிலங்கள், அமிலங்கள். இந்த அமிலங்கள் அலர்ஜி முதல் கேன்சர் வரை உருவாக்கும் என்பது தான் பலருக்கும் தெரியாத அதிர்ச்சிச் செய்தி. எல்லாவற்றுக்கும் மேலே, மேக்கப் பொருட்களில் இருக்கும் சில கெமிக்கல்ஸ் பெண்களோட பெண்மைத் தன்மைக்கே கேடு விளைவிக்கும் என்கின்றன ஆய்வுகள்.

இத்தனை ஆபத்தான பொருட்கள் எப்படி சந்தைக்கு வருகின்றன ? எப்படி மக்களை ஏமாற்றுகின்றன ? அரசியல் ரீதியாகச் சொல்லவேண்டுமெனில் ஊழல் எனலாம். சட்ட ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் மேக்கப் பொருட்களுக்கு கடுமையான தரக் கட்டுப்பாடு விதிகள், அமைப்புகள் ஏதும் இல்லை என சொல்லலாம்.

உணவுப் பொருளுக்கு இருப்பது போல சரியான தர நிர்ணய அமைப்பு இருந்தால் நிறைய சிக்கல்கள் தீர்ந்து போய் விடும். ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்,” ஐரோப்பிய யூனியன்ஸ் காஸ்மெடிக் டைரக்டிவ்” அமைப்பு ஆரம்பித்த பின், யூ.கே யில் தரமான மேக்கப் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன என்பதைச் சொல்லலாம்! விஷத் தன்மை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகே அங்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் லிப்ஸ்டிக்கை சோதனை செய்து பார்த்தார்கள். சொன்னா; நம்ப மாட்டீர்கள் 61 சதவீதம் லிப்ஸ்டிக் விஷத்தன்மையோடு இருந்தது. அதிலும் 30 சதவீதம் உதட்டுச் சாயங்களில் மிக அதிக அளவு விஷத்தன்மை இருந்தது. அவையெல்லாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டன.

தினமும் லிப்ஸ்டிக் போடும் பழக்கமுடைய ஒரு பெண் தன்னோட வாழ்நாளில் தன்னை அறியாமலேயே சுமார் நாலரை கிலோ அளவுக்கு லிப்ஸ்டிக்கை சாப்பிடுகிறாராம். இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கலாம் என்று எச்சரிக்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில்.

மேலை நாடுகளில் இப்படி. நம்ம ஊரில் ? திருவிழா பொட்டிக் கடை முதல், ரங்கநாதன் தட்டு கடை வரை எங்கும் மலிவு விலை பொருட்கள். பவுடர், பாடி ஸ்ப்ரே, லிப்ஸ்டிக், ஐ புரோ, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எல்லாமே ரொம்ப மலிவான விலைல கிடைக்கும். அந்த மலிவு விலைக்குக் காரணம் அதில் இருக்கும் பொருட்கள் தரமற்ற ஆபத்தான பொருட்கள் என்பது தான். ! இங்கேயெல்லாம் ரொம்ப கட்டுப்பாடான தர நிர்ணயத்தை எதிர்பாக்க முடியாது. சோ, நாம தான் விழிப்பா இருக்கணும்.

மேலை நாடுகளிலெல்லாம் நிராகரிக்கப்படும் விஷத்தன்மையுடைய அழகுசாதனப் பொருட்கள் குறிவைப்பது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற பெரிய வர்த்தகத் தளங்களைத் தான். சட்டத்தை வளைப்பதோ, புழக்கடை வழியாக வியாபார ஒப்பந்தங்கள் நடப்பதோ இத்தகைய வளரும் அல்லது பிந்தந்திங்கிய நாடுகளில் மிக எளிது. உதாரணமாக, ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் நம்ம ஊர் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் எல்லாவற்றிலும் சர்வ சுதந்திரமாய் உலவுவதைச் சொல்லலாம். இது தலைவலிக்கும், அலர்ஜிக்கும் கேரண்டி தரக் கூடிய பொருள்.

பாரபீன்ஸ் மற்றும் பாத்தலேட்ஸ் என்பவை விஷத்தன்மையுடைய இரண்டு பொருட்கள். இவை நமது வாசனைப் பொருட்கள், டியூட்ரன்ட் போன்றவற்றில் அதிகம் உண்டு. இதைத் தொடர்ந்து சுவாசிப்பது உயிருக்கே ஆபத்தானது. இந்தப் பொருட்களை பயன்படுத்தும் மக்களுடைய உடலில் இந்த விஷத் தன்மை இருக்கும். 20 க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களின் உடலில் பாரபீன்ஸ் நிறைய இருக்குமாம். இவை ஹார்மோன்களையே சேதப்படுத்திவிடும். அப்படியே மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பது திகில் செய்தி.

இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் அனைத்து பிரபல டியோடரண்ட்களிலும் புரோப்பலீன் கிளைகோள் எனும் கெமிகல் உண்டு. இது தோலை நாசமாக்கி, இரத்ததில விஷத் தன்மையைக் கலக்கும். கூடவே மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றுக்கெல்லாம் பாதிப்புகளை உருவாக்கும்.இது மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட உண்டு என்பது பயமுறுத்தும் உண்மை.

சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரத் சல்பேட் இப்படி இரண்டு கெமிகல்ஸ் நுரை தரும் பல மேக்கப் பொருட்கள்ல உண்டு. உதாரணமா ஷாம்பூ, சோப்பு, ஷவர் ஜெல். இது கண்பார்வைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ! இதே மாதிரி எத்தனோலமின் எனும் வேதியல் பொருளும் இந்த மாதிரி பொருட்களில் உண்டு. இது கிட்னி, லிவர் இரண்டுக்கும் எதிரி. ஐசோபுரோபைல் ஆல்கஹால் ங்கர ஒரு கெமிகல் மன அழுத்தத்தைக் கூட கொண்டு வரும்.

இப்போது ஆயுர்வேதிக், இயற்கை மூலிகைத் தயாரிப்பு, ஆர்கானிக் என்றெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு வருகின்ற பொருட்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். எல்லாவற்றிலும் விஷத்தன்மை உண்டு.

வெயில் காலம் வந்தால் உடனே மாயிஸ்ட்ரைஸர் வாங்கிக் கொள்கிறோம். உடலில் அதைத் தேய்த்தால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம் என்றும், உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் வறட்சியடையாமல் இளமையாய் இருக்கும் எனவும் நம்புகிறோம். உண்மை என்னவெனில் இத்தகைய மாயிஸ்ட்ரைசர்களில் பாரஃபீன்ஸ், மினரல் ஆயில், டிட்டர்ஜன்ட் போன்றவை உண்டு. இவை தோலுக்குள் சென்று தோலை சேதப்படுத்தும் அபாயம் உண்டு. சும்மா வெயிலில் போனால் வைட்டமின் டி ஆவது கிடைக்கும். அது உடலுக்கு ரொம்ப நல்லதும் கூட !

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு தான். ரோஜாவுக்கு ஒரு அழகு என்றால், முல்லைக்கு இன்னொரு அழகு, சாமந்திக்கு வேறொரு அழகு. ஒவ்வொரு அழகுமே இறைவனின் படைப்பின் மகத்துவம் தான். இறைவன் தருகின்ற உடலை அப்படியே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது பெண்மையின் பலமும், பெண்மையின் தன்னம்பிக்கையும். அப்படி ஏற்றுக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு செயலுமே ஆபத்து தான். முடியை நேராக்குவோம் என‌ ஹெயர் ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணுவது கூட பார்மால்டிஹைட் உடலில் நுழையக் காரணமாகி கேன்சரைக் கூட கொண்டு வரும்.

இத்தகைய ஆபத்துகள் குழந்தைப் பொருட்களைக் கூட விட்டு வைப்பதில்லை. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது. முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பதின் வயதுப் பிள்ளைகள், பள்ளிப் பிள்ளைகளுக்கு நகங்களில் கலர் கலராக டிசைன் வரைவது ஃபேஷன். முன்பெல்லாம் ஒரே நிறத்தைப் பூசுவார்கள். இப்போது ஒரே நகத்தில் நான்கைந்து நிறங்களைப் பூசிக் கொள்வது வழக்கம். இந்த நகப்பூச்சுகளில் அசிடோன் இருந்தால் நகத்தை வலுவிழக்கச் செய்யும். தொடர்ந்து அடிக்கும் நிறத்தில் நகப்பூச்சுகள் பூசுவது நகத்தின் வசீகரத்தையும், வலிமையையும் அழித்து விடும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

விளம்பரம் சொல்கின்ற வரையறைகள் தான் அழகு என நம்பும் போது நாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏன் அவர்கள் நிர்ணயிக்க வேண்டும் ? நாம் கருப்பாய் இருப்பது அழகல்ல என ஏன் அவர்கள் நம்மை கிண்டலடிக்க வேண்டும் ? அதை ஏன் பெண்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கல்லாவில் பணத்தைக் கொண்டு கொட்ட வேண்டும் ? சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா ?

இப்படி அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது ஒரு வித அடிமை மனநிலைக்குள் நம்மைத் தள்ளி விடுகிறது. பின்னர் அந்த அழகு சாதனப் பொருள் இல்லாமல் ஒரு முழுமை தோன்றுவதேயில்லை. எந்த அழகு சாதன ஷாம்பூக்களும் இல்லாத காலத்தில் நமது பாட்டிமார் நூறு வயதிலும் கருகரு கூந்தலோடு வலம் வந்தனர். இன்றைக்கு பதின் வயது தாண்டியதும் வெண்நரையுடன் தானே உலவுகின்றனர் ? அப்புறம் அதை மாற்ற கூந்தலுக்கு கலர் அடிக்கிறோம். அந்த டையில் பி‍‍.பெனிலைன்டையாமின் இருக்கிறது. அது எக்கச்சக்க பிரச்சினைகளை உடலுக்குக் கொண்டு வருகிறது.

அழகு என்பது என்பது வெளியில் இல்லை ! மனதில் இருக்கிறது. என்னைக் கேட்டால் உலகிலேயே அழகான பெண் அன்னை தெரசா என்பேன். சுருக்கம் நிறைந்த உடல். கூனல் விழுந்த தோற்றம். ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பில் வார்த்தெடுத்தவை. அவருடைய செயல்கள் ஒவ்வொன்றும் கருணையில் குளிப்பாட்டியவை. அவை அன்னையை அழகாக்கிக் காட்டுகின்றன.

“என் அம்மா அழகாயில்லை” என சொல்கின்ற ஏதேனும் ஒரு குழந்தையைக் காட்ட முடியுமா ? அம்மா காட்டுகின்ற அன்பில் தான் குழந்தை அழகின் அர்த்தத்தை அறிந்து கொள்கிறது. அம்மா பூசும் முகப்பூச்சில் அல்ல‌. அதனால் தான் உலகிலேயே ரொம்ப அழகு என் அம்மா தான் என குழந்தைகள் குதூகலித்துச் சொல்லும்.

தாய்மைக்காலத்தில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். டாக்டர் என்ஜெல்மேன் எழுதிய கட்டுரையொன்றில் ஏகப்பட்ட அழகுசாதனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றைத் தவிர்க்க வேண்டுமென தாய்மை நிலையிலுள்ள பெண்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது கடந்த ஆண்டு உலகின் பிரபல பத்திரிகையான வோக் இதழில் வந்து பரபரப்பைக் கிளப்பியது.

நாம் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், எந்த எடையில் இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்பதை அடுத்த வீட்டு நபர் சொன்னால் எரிச்சலடைகிறோம். அதே விஷயத்தை வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சி சொன்னால் ஒத்துக் கொள்கிறோம். அதுவும், பிடித்த நடிகரோ நடிகையோ சொன்னால் அவ்வளவு தான். அமெரிக்காவில், லண்டனில் என்று பீலா விட்டால் போயே போச்சு. இதெல்லாம் தேவையா என ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

அமெரிக்காவில் பெண்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்களை செலவிட்டு உடலைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். கடைசியில் பலர் அனரோக்ஸா எனும் நோய்க்குள் விழுந்து உயிரையும் இழக்கின்றனர். நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிறகு எப்படி அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ?

பெண்கள் வெறும் போகப் பொருட்கள். அவர்கள் பிறருடைய கண்களுக்கு வனப்பான உடலோடு வலம் வரவேண்டும் எனும் மனநிலையை விளம்பர உலகம் வலிந்து திணிக்கிறது. அதை பெண்கள் நிராகரிக்க வேண்டும். பெண்கள் இன்று சமூகத்தின் அத்தனை உயரிய இருக்கைகளிலும் கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றனர். தொழில் நுட்ப உலகம் பெண்களை வியந்து பார்க்கிறது. அழகைக் காட்டி வசீகரிக்க வேண்டிய அவசியம் இன்று இல்லை, அறிவை நீட்டி உலகை வியக்க வைக்கலாம்.

எனவே புற அழகை புறந்தள்ளி, அக அழகை அணிந்து கொள்வோம். அந்த அகத்தின் அழகு முகத்தை அழகாக்கும். அகத்தின் அன்பு முகத்தை எழிலாக்கும். அகத்தின் குணம் முகத்தை வசீகரமாக்கும். அந்த அழகே நிரந்தரம். அதுவே உயர் தரம்.

*

விழிப்பாய் இருப்போம், விழாமல் நடப்போம்.

விழவைக்கும் வலைத்தளங்கள்

Image result for Internet and females

உலகம் அழகானது. இறைவன் நமக்கு இயற்கை அனைத்தையும் இலவசமாகவே தந்திருக்கிறார். நாம் சுவாசிக்கும் காற்றுக்கு யாரும் கணக்கு கேட்பதில்லை. அடிக்கின்ற வெயிலை அள்ளிக் கொள்ள உத்தரவு தேவையில்லை. நதிகளில் நீந்தவும், நீர்தனை அருந்தவும் அனுமதி அவசியமில்லை. பரந்து விரிந்த வானமும், பாதம் தீண்டும் பூமியும் நமக்கு இலவசமாகவே தரப்பட்டன. எல்லாவற்றையும் சுயநலம் கலந்த பொருளாதார அளவீட்டினால் மனிதன் அளக்கத் தொடங்கிய போது தான் பிரிவினைகள் பிரசவமாயின.

இறைவன் நமக்கு வளங்கள் தந்தது போல, நல்ல குணங்களையும் தந்திருக்கிறார். ஒரு மழலையின் புன்னகை தான் நமக்கு இறைவன் தந்தது. அந்த புன்னகைக்கு முலாம் பூசி செயற்கையாக்கியது நாம் தான். பணத்தை இடது கையால் ஒதுக்கும் மழலை போன்றது தான் நமது ஆதி குணாதிசயம். பணத்தை அள்ளி, மனிதனைத் தள்ளி வைக்கச் சொன்னது நாம் தான்.

இன்று நமது இயல்புகள் எல்லாம் மறந்து போய், மரத்துப் போய் ஒரு ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கசப்பான உண்மை. இங்கே மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆபத்தில் சிக்கிய மனிதனுக்கு கைகளைக் கொடுப்பதை விட அவன் அருகே சென்று செல்பி எடுப்பவர்கள் தான் அதிகம். எனவே தான் இந்தக் காலகட்டத்தில் நமது எச்சரிக்கை பல மடங்கு அதிகமாய் தேவைப்படுகிறது.

இவ்வளவு நாள் இப்படித் தானே பண்றேன் ? எனும் அலட்சியம் ஆபத்தானது. “நமக்கெல்லாம் இப்படி நடக்காது, இது எங்கேயோ யாருக்கோ நடக்கும் விஷயம்” எனும் அதீத நம்பிக்கை கூடவே கூடாது. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நமக்கு நடக்கலாம் எனும் விழிப்புணர்வு அவசியம். விழிப்பாய் இருந்தால், விழாமல் நடப்பது சாத்தியமே.

சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக் களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.

பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.

ஜியோ டேக் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க காவல்துறை இது பற்றி ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. நீங்கள் ஏதேனும் புகைப்படம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த புகைப்படத்தில் அந்த லொக்கேஷன், அதாவது புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தின் விலாசம் ரகசியக் குறியீடாகப் பதியும். இன்றைக்கு ஸ்மார்ட் போன்களில் லோக்கேஷன், ஜிபிஎஸ் போன்றவை சாதாரணமாகவே இருப்பதால் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட விலாசத்தைக் கண்டுபிடிக்க பல வலைத்தளங்களும், மென்பொருட்களும் உள்ளன. நீங்கள் ஒரு வீட்டுக்குள் தனியறையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தால் கூட அந்த வீட்டின் விலாசத்தைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்து விட்டன. எனவே எந்த ஒரு புகைப்படமும் நமக்கு எதிராளி ஆகக் கூடும் எனும் நினைப்பு இருப்பது அவசியம். போனில் டேட்டா எல்லாம் அணைத்து வைத்து விட்டு புகைப்படம் எடுப்பது ஓரளவு பாதுகாப்பானது என்றாலும், புகைப்படங்கள் விஷயத்தில் அதீத கவனம் அவசியம்.

இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.

தகவல்கள் தான் இன்றைக்கு உலகை இயக்குகின்றன. வலைத்தளத்தில் ஒரு நாள் போய் நீங்கள் ஜீன்ஸ் வாங்கினால், அடுத்த நாள் சும்மா அந்த தளத்துக்குப் போனால் கூட ஜீன்ஸ் வேண்டுமா என அந்த தளம் கேட்கும். காரணம் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் எனும் தொழில்நுட்பம். வர்த்தகத்தை மையமாகக் கொண்ட நுட்பம். அதற்கு அடிப்படைத் தேவை தகவல்கள் தான். அதனால் தான் நீங்கள் வலைத்தளங்களில் கொடுக்கின்ற எல்லா தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன. தேவையான வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சூழலில் நீங்கள் ரொம்ப பர்சனலான ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வெளியே சொல்ல முடியாத ஒரு செயலை செய்தாலோ அது விஷமிகளுக்கு பொன் முட்டையிடும் வாத்தாய் மாறிவிடும். அது பல ஆபத்துகளைக் கொண்டு வரலாம்.

ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் நீங்கள் டவுன்லோட் செய்திருக்கும் ஆப்ஸ் கூட உங்களுடைய மொபைலில் இருக்கும் தகவல்களை திருடும் ஆபத்து உண்டு. அந்த ஆப்ஸ்களை நீங்கள் இயக்காமல் இருந்தால் கூட அது உங்கள் தகவல்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆப்பை நிறுவும் போதும் அது கேட்கும் கேள்விக்கு “ஓகே” என கிளிக்குகிறோம். அது நாம் அந்த ஆப்ஸ்க்கு கொடுக்கும் அனுமதி என்பதை மறந்து விடுகிறோம்.

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.

நமது  பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.

உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் மாற்றங்கள் செய்ய உங்களுடைய பிறந்த நாள், உங்கள் வங்கி எண், உங்களுடைய பெயர் போன்ற விபரங்களே போதுமானது.  சமூக வலைத்தளம் என்பது பொதுச் சுவர் மாதிரி, பொதுச் சுவரில் என்னென்ன விஷயங்களை எழுதி வைப்பீர்களோ அதை மட்டும் வலைத்தளங்களிலும் போட்டு வையுங்கள்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வலிமையான கடவுச் சொல் அதாவது பாஸ்வேர்ட் மிக அவசியம். வீட்டைப் பூட்டும் போது நாம் கதவுகளை சும்மா சாத்தி வைத்து விட்டுப் போவதில்லை. எத்தனை இழுத்தாலும் உடைந்து விடாத பூட்டைத் தான் போடுகிறோம். எளிதில் யாரும் திறந்து விடக் கூடாது எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு உண்டு. அதே விஷயத்தை டிஜிடல் வீடுகளிலும் காட்ட வேண்டும். நமது சமூக வலைத்தளங்கள் ஒரு வீடு போல இருக்கின்றன. அதைப் பாதுகாக்க வலிமையான கடவுச் சொல் பயன்படுத்த வேண்டும் என்பது பாலபாடம். அதில் அலட்சியம் வேண்டாம்.

சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.

லிங்க் களை கிளிக் செய்யும் முன் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள். நூறு சதவீதம் சந்தேகம் விலகினாலொழிய நீங்கள் லிங்க் களை கிளிக் செய்யாதீர்கள். இத்தகைய லிங்க்கள் ஒருவேளை உங்களுடைய நெருங்கிய நண்பரிடமிருந்தோ, குடும்ப உறவினர்களிடமிருந்தோ கூட வரலாம். அவர்களுக்கே தெரியாமல் ! எனவே அவர் தானே அனுப்பியிருக்கிறார் என நினைத்து அலட்சியமாய் இருக்க வேண்டாம். தகவல்கள் திருடு போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகம். சந்தேகம் இருந்தால் அந்த நபருக்கு போன் செய்து விளக்கம் கேட்டபின் லிங்கை இயக்கலாமா வேண்டாமா என முடிவெடுங்கள்.

உங்களுடைய வலைத்தளத்தை எங்கேனும் லாகின் செய்தால் பயன்படுத்தி முடிந்தபின் “லாகாஃப்” செய்ய அதாவது அதை விட்டு வெளியே வர மறக்காதீர்கள். பாஸ்வேர்ட்களை சேமித்து வைக்க எந்த பிரவுசருக்கும் அனுமதி வழங்கதீர்கள். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்.

நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரட்டைக் கவனம் தேவை. நிறுவனங்கள், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு சில வரைமுறைகளை வைத்திருக்கும். அதனை மீறாமல் இருப்பது முதல் தேவை. நிறுவனத்தின் தகவல்களை வெளியே பரப்புவது இன்னொரு மீறல். இந்த விஷயங்களில் கவனம் தேவை.

உங்களுடைய போட்டோவை யாரேனும் “அருமை” என பாராட்டியிருக்கலாம். அடிக்கடி உங்களுடைய ஸ்டேட்டஸுக்கு வந்து “சூப்பர்” என கமென்ட் போட்டிருக்கலாம். மயங்கி விடாதீர்கள். உங்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய செயல்களை தொடர்ந்து சிலர் செய்து கொண்டே இருப்பதுண்டு. சில மாதங்களில் உங்களுக்கு அவர்கள் பரிச்சயமானவர் போன்ற தோற்றம் உருவாகிவிடும். இது ஆபத்தில் முடியக் கூடும்.

முகம் தெரியாத நபர்கள் விடுகின்ற நட்பு அழைப்புகளை, அதாவது பிரண்ட் ரிக்வஸ்ட்களை அனுமதிக்காமல் இருப்பதே உசிதம். அனுமதிக்க வேண்டுமென தோன்றினால் அந்த நபருடைய முழு விவரங்களையும் கேட்டறிந்த பின் அது பற்றி பரிசீலியுங்கள்.

சிலர் தொடர்ந்து ஐந்தாறு மாதங்கள் உங்களை இணையத்தில் பின் தொடர்வார்கள். பின்னர் நட்பு அழைப்பு விடுவார்கள். உங்களுடைய முழு நம்பிக்கையைப் பெறும் வரை உங்களோடு நல்லவிதமாய்ப் பேசிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களை நம்பிய கணத்தில் உங்களை ஏமாற்றும் வழிகளில் இறங்குவார்கள். கவனம் தேவை.

சமூக வலைத்தளங்களில் பல டிஜிடல் போராளிகள் உலவுவதுண்டு. தங்களுடைய தீவிரமான அரசியல், சினிமா, மத சிந்தனைகளை அதில் வலுவாக பதிவு செய்வதுண்டு. தவறில்லை. ஆனால் அடுத்தவரை காயப்படுத்தாத, அடுத்தவர்களை எரிச்சல் மூட்டாத வகையில் அவை இருக்க வேண்டும் என்பது அவசியம். யாரையும் தவறாக விமர்சிக்க வேண்டாம். இவையெல்லாம் நம்மை அறியாமலேயே நமக்கு நிழல் எதிரிகளை உருவாக்கும் வல்லமை படைத்தவை என்பதை மறக்க வேண்டாம்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே உங்களுடைய “பிரைவசி” செட்டிங்கை கொஞ்சம் வலிமையாக்கி வையுங்கள். அது ஓரளவுக்கு உங்களை பாதுகாக்கும். அது முழுமையாக உங்களைப் பாதுகாக்கும் என சொல்ல முடியாது. ஆனால் “டிஃபால்ட்” எனும் வழக்கமான செட்டப்பை விட இது ‍பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விளையாட்டாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இப்போது தனிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி விட்டன‌. மேலை நாடுகளில் சமூக வலைத்தளப் பதிவுகள் ஏராளமான மண முறிவுகளுக்குக் காரணியாகியிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வலைத்தளப் பதிவுகள் காரணமாகியிருக்கின்றன. பலருடைய உயர்வுகளுக்கு வேட்டு வைப்பதும், பலருடைய எதிர்காலத்தைப் பாழாக்குவதும், பலரை தற்கொலைக்குள் தள்ளுவதும் என இந்த சமூக வலைத்தளங்கள் செய்கின்ற வேலைகள் நிச்சயம் கவலைக்குரியவை.

சமூக வலைத்தளங்களை பாசிடிவ் ஆகவும் பயன்படுத்த முடியும். எப்படி ? இப்போதெல்லாம் நிறுவனங்கள் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் தேவையெனில் வேறெங்கும் செல்வதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே இணையத்தில் உலவி தகவல்களைத் திரட்டுகின்றன. அப்படி திரட்டப்படும் தகவல்கள் ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக இருந்தால் அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகலாம்.

சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இவை உங்களை அச்சுறுத்துவதற்காக‌ அல்ல. விழிப்புணர்வாய் இருப்பதற்காக மட்டுமே. சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். அதே நேரத்தில் வலிமையான சிந்தனைகளை, நல்ல கருத்துகளை, தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து வந்தால் உங்களுக்கு நேர்மறை வரவேற்பு கிடைக்கவும் செய்யும்.

அலுவலகத்தில் பாலியல் தொல்லை; சமாளிப்பது எப்படி ?

அலுவலகத்தில் பாலியல் தொல்லை

சமாளிப்பது எப்படி ?

Image result for office gender issues

கல்பனா நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு முன்னால் வசீகரக் கண்ணாடிகளுடன் கம்பீரமாய் நின்றிருந்தது அந்த மல்டி நேஷனல் மென்பொருள் நிறுவனம். அவளுடைய கண்களில் கர்வமும், பிரமிப்பும் ஒரு சேர வந்து நிரம்பின. கல்பனாவுக்கு வயது வெறும் இருபத்து ஒன்று தான். இந்த வயதிலேயே ஒரு நல்ல ஐந்திலக்க சம்பளத்தில் அவளுக்கு வேலை.

கம்பெனியில் ஒரு நல்ல புராஜக்டில் அவளுக்கு வேலை ஒதுக்கப்பட்டது.  விரும்பியதை எல்லாம் அடைந்து விட்டது போல கல்பனாவுக்குள் ஒரு பெருமிதம். உற்சாகப் பறவையாய் வலம் வந்தாள் கல்பனா. அவளுடைய டீமில் மொத்தம் பன்னிரண்டு பேர். இவளைத் தவிர இன்னும் இரண்டு பெண்கள். மற்ற ஒன்பது பேரும் ஆண்கள்.

“ஹேய்… ஹவ் ஆர் யூ” போகும் போக்கில் சொல்லிக் கொண்டே போனார் ஜெயராஜ். ஜெயராஜ் தான் அந்த புராஜக்ட் மேனேஜர்.

“ஃபைன் சார்…. “ கல்பனா பதில் சொல்லும் முன் ஜெயராஜ் கொஞ்ச தூரம் முன்னாடியே போய்விட்டான்.

ஜெயராஜ் ஜாலி பேர்வழி. எப்போதும் ஏதாவது பேசி டீம் மெம்பர்களை ரொம்ப உற்சாகத்தில் வைத்திருப்பான். நல்ல ஒரு மேனேஜரிடம் சேர்ந்த நிம்மதியும் அவளுக்கு வந்திருந்தது. டீமில் எல்லோருமே அவளிடம் ரொம்ப அன்பாகப் பழகினார்கள்.

மாதங்கள் இரண்டு உருண்டோடின.

கல்பனா கேண்டினில் தனியாக அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சிந்தனையெல்லாம் எங்கோ வட்டமடித்துக் கொண்டிருந்தது.

“ஹே கல்பனா ? எப்படி இருக்கே ? … ஹவ்ஸ் வர்க் கோயிங் ? ” கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தாள் ரூபிகா. ரூபிகா அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை பார்க்கிறாள். இரண்டு பேரும் திக் பிரண்ட்ஸ்.

“யா.. இட்ஸ் கோயிங்… நீ எப்படி இருக்கே ?” கல்பனா விசாரித்தாள்.

“ஐம் ஃபைன். என்ன ஆச்சுடி உனக்கு ? ரொம்ப டல்லா இருக்கே ?”

“ஹே..நத்திங்….” கல்பனா செயற்கையாய்ப் புன்னகைத்தாள்.

“உன்னை எனக்குத் தெரியாதா ? என்னாச்சு ? வேலை ரொம்ப டைட்டா ? டைட் டெட்லைன்ஸா ? லேட் ஆகுதா ? இல்லே வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா ?” ரூபிகா கேட்டாள்.

“எப்படி சொல்றதுன்னு தெரியல ரூபி… பட்… “ கல்பனா தலையைக் கவிழ்ந்தாள்.

“என்னடி ? லவ்வா ? “ ரூபி சீண்டினாள்.

“சேச்சே…. லவ்ன்னா நான் கவலைப்படணும்… “ கல்பனா சிரித்தாள்.

“சரி போதும் உன் பில்ட் அப் எல்லாம். விஷயத்தைச் சொல்லு என்ன பிரச்சினை ?” ரூபிகா சட்டென சீரியஸானாள்.

“வெளியே யார் கிட்டேயும் சொல்லாதே ரூபி. இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல. அதான் உன் கிட்டே சொல்றேன். கொஞ்ச நாளாவே என்னை ஒருத்தன் டீஸ் பண்ணிட்டே இருக்கான். ஐ…மீன்… யு னோ..…” கல்பனா இழுத்தாள்.

“என்னடி சொல்றே… யூ..மீன் … செக்ஸுயலி ?” ரூபி கேட்க கல்பனா சட்டென நிமிர்ந்தாள். “எப்படிடி நீ கரெக்டா சொல்றே ?”

“நான் இங்கே வந்து நாலு வருஷம் ஆச்சு. நானும் இந்தப் பிரச்சினையை எல்லாம் கடந்து தானே வந்திருக்கேன்…” ரூபி சொல்ல, கல்பனா கையிலிருந்த ஜூஸ் டம்ளரை விரல்களால் சுரண்டிக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.

“முதல்ல சாதாரணமா தான் பேசினான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா செல்லப் பேரு போட்டு கூப்பிட்டான். நான் கண்டுக்கல. அப்புறம் ஒரு ஜோக் அனுப்பினான், லைட்டா செக்ஸ் ஜோக்… அதுக்கும் நான் ஒண்ணும் சொல்லல, இப்ப என்னடான்னா ரொம்ப ஆபாசமா ஒரு ஜோக் அனுப்பியிருக்கான். “ கல்பனா சொல்லச் சொல்ல அவள் கண்களில் கண்ணீர்.

“ம்…. இது எல்லா பசங்களும் பாலோ பண்ற ஒரு டெக்னிக்… இன்னிக்கும் நீ ஒண்ணும் சொல்லலேன்னு வெச்சுக்கோ, நாளைக்கு வந்து ஒரு ஜோக் அனுப்பினேன் படிச்சியா ன்னு கேப்பான் பாரேன்…” ரூபா சொல்ல கல்பனாவுக்கு கண்களில் மிரட்சி.

“இப்ப என்னடி பண்றது ?”

“ஐ டோண்ட் லைக் யுவர் ஆக்டிவிடீஸ்… டிஸ்டர்ப் பண்ணினீங்கன்னா மேனேஜர் கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்னு சொல்லு” ரூபா சொல்ல கல்பனா நீண்ட ஒரு பெருமூச்சை விட்டாள்.

“இப்படி ஜோக் அனுப்பினதே என் மேனேஜர் தாண்டி…” கல்பனா சொல்ல ரூபா தலையைச் சொறிந்தாள். “ஓ… அப்போ .. இது கொஞ்சம் சிக்கல் தான். ஆனா சமாளிச்சுடலாம் கவலைப்படாதே ” ரூபா சொன்னாள்.

“இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை ரூபா. எவ்ளோ பெரிய கம்பெனி ! எவ்ளோ பேர் வேலை பாக்கறாங்க, எல்லாரும் நல்லா படிச்சவங்க ! இப்படியும் சிலரு இருக்காங்களே ?”  கல்பனா சலித்துக் கொண்டாள்.

“இப்படியும் சிலர் இல்ல கல்பனா, சிலரைத் தவிர எல்லாருமே இப்படித் தான். முதல்ல நல்லா பேசுவாங்க. அப்புறம் ஆளுக்குத் தக்கபடி ஒரு திட்டம் வைச்சிருப்பாங்க… “ ரூபா சொல்ல கல்பனா கூர்மையானாள்.

“உன்னை மாதிரி சின்னப் பொண்ணுங்கன்னு வெச்சுக்கோ, ஜோக், கதை, படம்ன்னு நைசா கிளர்ச்சியைத் தூண்டி விட்டு தப்பு பண்ண வெச்சிடுவாங்க. நீ மட்டும் நல்ல ஜோக் ன்னு ஒரு வரி ரிப்ளை பண்ணியிருந்தே , நாளைக்கே உன் பக்கத்துல வந்து உக்காந்து ஜோக் சொல்லுவான். அப்புறம் படம் அனுப்புவான். அப்புறம் தனியே கூட்டிட்டு போய் செக்ஸ் கதை பேசுவான்.. அப்புறம் என்ன உன்னை ஒரேயடியா அமுக்கி எல்லாத்தையும் பண்ணிட்டு போயிடுவான்” கல்பனாவுக்கு பயம் பல மடங்கு அதிகரித்தது.

“ஒருவேளை கல்யாணம் ஆன பொண்ணுன்னு வெச்சுக்கோ, அவங்களையும் விட மாட்டாங்க. முதல்ல கொஞ்ச நாள் ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு, குழந்தைங்க எப்படி ன்னு பேசுவாங்க. கொஞ்சம் போகப் போக இவ்ளோ லேட்டா போறீங்க அவர் எவ்ளோ நேரம் தான் உங்களுக்காக தூங்காம முழிச்சிட்டிருக்கிறதுன்னு கேப்பாங்க. அதுல என்ன பதில் வருதுங்கறது தான் துருப்புச் சீட்டு அவனுக்கு. அவரு என்ன டெய்லி டயர்டா வந்து தூங்குவாருன்னு சொன்னா, அங்கே அந்த இடத்தை நிரப்பப் பாப்பாங்க” ரூபா சொன்னாள்.

“கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்குக் கூடவா இப்படி சிக்கல் இருக்கு ?” கல்பனாவின் கேள்வியில் வியப்பு தெரிந்தது.

“அவங்களுக்குத் தான் பிரச்சினை ரொம்பப் பெருசு. ஆண்கள் ரொம்ப திட்டம் போட்டு காய் நகர்த்தற பேர்வழிங்க. பெண்களோட வீக்னெஸ், அவங்க ஹஸ்பண்டோட வீன்கெஸ் இதையெல்லாம் நல்லா அனலைஸ் பண்ணி உங்களை அந்த ஏரியால இம்ப்ரஸ் பண்ண பாப்பாங்க. அதுக்கு ஒரே வழி, இப்படி பேச்சு ஆரம்பிக்கும்போதே என் ஹஸ்பண்ட் எனக்கு கிடைச்சது மிகப் பெரிய கிஃப்ட். அவரை மாதிரி ரொம்ப அன்பா இருக்கிற ஒரு ஆளை நான் பாத்ததே இல்லைன்னு ஒரேயடியா சொல்றது தான். அதையே கடைசி வரைக்கும் மெயிண்டெய்ன் பண்ணணும். நான் அதைத் தானே சொல்லிட்டிருக்கேன் !” ரூபா சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள்.

“சரி… என்னோட பிரச்சினையை எப்படி ஹேண்டில் பண்றது சொல்லு” கல்பனா அவசரப்பட்டாள்.

“சிம்பிள். நம்ம கம்பெனியோட ஹைச்.ஆர் பாலிஸி பாரு. செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் அதாவது பாலியல் தொந்தரவு மிகப்பெரிய குற்றம். நீ முதல்ல போய் அவரோட மெயிலுக்கு ஒரு ரிப்ளை பண்ணு. “

“என்னன்னு ? ”

“சார்… ஐ ரெஸ்பக்ட் யு. ஆனா என்னால இதை என்கரேஜ் பண்ண முடியாது. பிளீஸ் டோண்ட் செண்ட் மி சச் மெயில்ஸ்” ன்னு ஒரு மெயில் போடு. அவ்ளோ தான். விஷயம் சிம்பிள்.

“அதுக்கு அப்புறமும் சிக்கல் வந்தா ?”

“வந்தா நம்ம பாலிஸில செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் ஒரு குற்றம்ன்னு போட்டிருக்கிற இடத்தை அவருக்கு மெயில்ல அனுப்பி விடு. அதுக்கும் அவர் மசியலேன்னா நேரா போய் ஹைச். ஆர் கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணலாம். அவன் வேலை போயிடும். எல்லா கம்பெனியிலயும் இந்த சட்டம் இருக்கு. எந்த ஒரு ஊழியரையும் நிறம், மதம், பாலியல், ஜாதி என எதை வெச்சும் தொந்தரவு செய்யக் கூடாது ! கோர்ட்ல போனா கூட நமக்கு வெற்றி தான்” ரூபா சொல்ல கல்பனா கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சில விஷயங்களைக் கவனமா தெரிஞ்சுக்கோ கல்பனா. முதல்ல உன் கிட்டே எவிடன்ஸ் இருக்கணும். அந்த மெயில்களையெல்லாம் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து பைல் பண்ணி வை. சாட்சி ரொம்ப முக்கியம். ஏன்னா, குற்றம் சாட்டினா உடனே எப்படியாவது அதுல இருந்து தப்பிக்க உன் மேலயே குற்றத்தை திருப்பி விடுவாங்க” ரூபா சொல்ல கல்பனா கலவரமானாள்.

“என் மேலயா ? எப்படி ? நான் தான் ஒன்னுமே சொல்லலையே ?”

“புரமோஷனுக்காக நீ மேனேஜர் கிட்டே ஆபாசமா பேசறேன்னு கூட அவரு தோசையைத் திருப்பிப் போடலாம். பட் கவலைப்படாதே. இந்த எவிடன்ஸ் அப்போ நமக்குக் கை கொடுக்கும்” ரூபா சொன்னாள். கல்பனா அமைதியாய் இருந்தாள்.

“கவலைப்படாதே. இதை முளையிலேயே கிள்ளி எறியறது சுலபம். மேனேஜர் நிறைய வேலை கொடுப்பாரு, புரமோஷன் தரமாட்டாரு, திட்டுவாருன்னெல்லாம் நினைச்சு குழம்பாதே. அதையெல்லாம் அப்புறம் டீல் பண்ணிக்கலாம். இது உன் ஒருத்தியோட பிரச்சினை இல்லை. ஆண்டுக்கு 2 இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் இந்த பணி இட பாலியல் தொந்தரவுகளினால கடுமையா பாதிக்கப்படறாங்களாம் ! “ ரூபா சொன்னாள்.

“ஓ… மை காட் ! ஐயோ.. கம்பெனிகள் ஏதும் கண்டுக்கறதில்லையா ?” கல்பனா கவலையாய் கேட்டாள்.

“நோ…நோ.. நிர்வாகம் இதுல படு ஸ்டிரிக்ட். நாம வேலைக்கு ஜாயின் பண்ணும்போ ஹராஸ்மெண்ட் அக்ரீமெண்ட்லயும் சைன் பண்றோம், அடிக்கடி நிர்வாகம் நமக்கு சர்குலேஷன் அனுப்புது, என்ன கம்ப்ளெயிண்ட்ன்னாலும் உடனே ஆக்ஷன் எடுக்கறாங்க… ஒரே ஒரு விஷயம், பெண்கள் பலரும் கம்ப்ளெயிண்ட் பண்றதில்லை.. அதான்” ரூபா சொன்னாள்.

“ஏன் கம்ப்ளெயிண்ட் பண்றதில்லை. இதையெல்லாம் வளர விடக் கூடாதில்லையா “ கல்பனா கேட்க ரூபா மெலிதாய் சலித்துக் கொண்டாள்.

“பிரச்சினை நம்ம பெண்கள் கிட்டேயும் இருக்கு. சில பெண்கள் இதை ரொம்ப என்கரேஜ் பண்றாங்க. சிலருடைய குடும்பச் சிக்கல்களுக்கு இது ஒரு வடிகாலா நினைக்கிறாங்க. ஆனா உண்மையில் இது பெரிய சிக்கல்களைத் தான் குடும்ப வாழ்க்கைல உருவாக்கும். இன்னும் சிலர் புரமோஷன், சம்பள உயர்வு, அப்ரைஸல் அது இதுன்னு பயப்பட்டு அமைதியா இருக்காங்க. பட். என்னைப் பொறுத்தவரைக்கும் பிரச்சினை நம்மை டிஸ்டர்ப் பண்ணினா, நேரடியா சொல்லிடணும். கேக்கலேன்னா கம்ப்ளைண்ட் தான்… நோ காம்ப்ரமைஸ்” ரூபா அழுத்தமாய்ச் சொன்னாள்.

“கம்பெனியை விட்டு வெளியே அனுப்பிடுவாங்களா ? எனக்குப் பயமா இருக்கு. நான் வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள வெளியே அனுபினாங்கன்னா என் வாழ்க்கையே பாழாயிடும்” கல்பனா கவலையாய்ச் சொன்னாள்.

“அப்படியெல்லாம் நடக்காது. வெளியே அனுப்பமாட்டாங்க. ஏன்னா சுப்ரீம் கோர்ட்ல போனா கூட நீ தான் ஜெயிப்பே. இந்திய சட்டம் 354ல ஹராஸ்மெண்ட் பத்தி தெளிவாவே சொல்லப்பட்டிருக்கு. உடம்பைத் தொடறது, அல்லது தொடறதுக்கு முயற்சி பண்றது, செக்ஸ் வெச்சுக்கோ புரமோஷன் தரேன்னு சொல்றது, செக்ஸ் படங்களைக் காட்டறது, செக்ஸியா பேசறது , ஏதாச்சும் சைகை காட்டறது.. இதெல்லாமே தப்புன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு. மட்டுமல்ல, லேபர் லா, இண்டஸ்ட்ரியல் ஆக்ட் 1946 ன்னு நிறைய சட்ட திட்டங்கள் இதுக்கு எதிரா இருக்கு. இந்த விஷயமெல்லாம் உனக்குத் தெரிஞ்சாலே போதும் உனக்கு தானா தைரியம் வரும். எந்தக் கம்பெனியும் இந்த விஷயத்தை என்கரேஜ் பண்றதில்லை. சோ, இதைப் பற்றி ரொம்பக் கவலைப்படாதே” ரூபா சொன்னாள்.

“உன் கூட பேசினதுல எனக்கு ஒரு புது தெம்பு கிடைச்சிருக்கு. என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிட்டிருந்தேன். பேசாம, கம்பெனி மாத்திட்டு போயிடலாமான்னு கூட யோசிச்சேன்…” கல்பனா சொல்ல ரூபா சிரித்தாள்.

“இதுக்கெல்லாம் கம்பெனி மாத்திட்டு போனா மாசத்துக்கு ஒரு கம்பெனி மாற வேண்டியதுதான். இதையெல்லாம் எதிர்க்கிறதில நாம நம்ம வலிமையைக் காட்டணும். தப்பு செய்ய ஆணுக்கு தைரியம் இருக்கும் போது எதிர்க்க ஏன் பெண்ணுக்கு தைரியம் வர மாட்டேங்குது ?. சின்னச் சின்ன சிக்கல்களுக்கெல்லாம் உடைஞ்சு போயிட்டா அப்புறம் நாம படிச்சதுக்கே அர்த்தமில்லை. விழுந்த இடத்துல தான் அருவியோட ஆக்ரோஷம் ஆரம்பமாகும். ஐயோ விழுந்திட்டோமேன்னு அங்கேயே கிடந்து அழறதில்லை. வாழ்க்கையும் அப்படித் தான். முள் இருக்குங்கிறதுக்காக ரோஜாவை யாரும் பறிக்காம இருக்கிறதில்லை. முள்ளே இல்லாத செடியில தான் பூ பறிப்பேன்னு அடம் புடிச்சா ரோஜாவை பறிக்கவே முடியாம போயிடலாம். சோ… ” ரூபா சொல்ல கல்பனா இடைமறித்தாள்.

“போதும் ரூபா… ரொம்ப தேக்ங்ஸ். இப்பவே நாலு பூஸ்ட் குடிச்சா மாதிரி சட்டுன்னு ஒரு தெம்பு வந்திருக்கு எனக்கு. இதை தைரியமா ஹேண்டில் பண்ணனும்ங்கற ஒரு உத்வேகமும் வந்திருக்கு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சரியான நேரத்துல நீ இங்கே வந்தே” கல்பனா முக மலர்ச்சியுடன் சொன்னாள்.

“மங்கையராய்ப் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” ரூபா கைகளை விரித்து கண்களை உருட்டி நாடகம் போலப் பேச, கல்பனா சத்தமாய்ச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கவலைகளின் கடைசிச் சொட்டும் காணாமல் போயிருந்தது.

*

சேவியர்

கவிதை : அதிகாலை எழில் தேவதை

அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.

வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.

இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.

உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது

டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துதலும், மன உளைச்சலும் மனசு முழுக்க நிரம்பி
இருந்தது. இரயில்வே கேட்டைக் கடக்கும்போது ரயிலுக்கு இடையே குதிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிற்கும் போது சட்டென காருக்கு இடையே குதித்து விட வேண்டுமென்றும் மனம் நினைக்கிறது. இன்று அப்படி எந்த எண்ணமும் வரவில்லை. இப்படி அடிக்கடி மனம் அழுத்தமடைகிறது என கண்ணீரோடு தன்னைப் பார்க்க வந்த ஒரு பதின் வயதுப் பெண் சொன்னதாகச் சொல்கிறார் “TeTeenager’s Guide to the Real World” எனும் நூலின் ஆசிரியர் பிரைன் மார்ஷல்.

teen என்னை எப்போதும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு மட்டுமே பார்க்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கிறேன். கெட்ட பழக்கங்கள் எதுவுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர்கள் நம்புவதில்லை. எந்த ஒரு சுதந்திரமும் எனக்குத் தராமல் ஒரு ஒன்பது வயதுக் குழந்தையைப் போல நடத்துகிறார்கள். எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், பெற்றோரின் மீதும் மிகப்பெரிய வெறுப்பு வந்துவிட்டது. என்ன செய்யவேண்டும் என தன்னிடம் பல பதின் வயதுப் பெண்கள் வந்து அழுவதாகக் கூறுகிறார் மருத்துவர் டாக்
ஜெர்ரி.

பதின் வயதுப் பருவம் கலவை உணர்ச்சிகளால் வனையப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றது. இந்த பருவத்தில் தான் கிளர்ச்சி, வளர்ச்சி, பயம், தைரியம், ஆர்வம் என என்னென்ன உடலியல், உளவியல் மாற்றங்கள் உண்டோ அவை அனைத்துமே வந்து பற்றிக் கொள்கின்றன எனலாம்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பதின் வயது என்பது கண்ணாடிக் குடுவை போன்றது. கர்வமும், அதீத துணிச்சலும் அவர்களை ஆட்கொள்ளும் அதே வேளையில் சமூகத்தின் வல்லூறுக் கண்களுக்கும் அவள் தப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறாள்.

பதின் வயதுப் பருவத்தில் தான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தம் கொள்வதும், தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனும் எண்ணம் அடிக்கடி தலை தூக்குவதும் அதிகம் என்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார்.

இந்த எண்ணங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு நாள் தற்கொலை செய்ய வேண்டும் என மன அழுத்தம் அலைக்கழிக்கும், ஆனால் மறு நாள் தெளிந்த வானம் போல எல்லாம் மறைந்து விட்டிருக்கும். இவையெல்லாம் இந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றங்கள் என்பதை பெண்களும், பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த பருவத்தைக் கையாள என்பது இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் லாவகம் தேவை.  ஏனெனில் இந்த பருவம் தான் பாதையைத் தேர்வு செய்யும் பருவம். போதைக்கு அடிமையாகும் மக்கள் தங்களுடைய முதல் சுவடை பதின் வயதில் தான் பதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. சரியான வழிகாட்டுதலும், பெற்றோரின் கண்காணிப்பும் பதின் வயதினருக்கு மிக முக்கியமாகிப் போனதன் காரணம் இது தான்.

வாழ்க்கையில் பல விஷயங்களின் “முதல் சுவடு” இங்கே தான் வைக்கப்படுகிறது.  அந்த முதல் சுவடை லாவகமாய் வகைப்படுத்துவது தான் பெற்றோரின் கவலைக்குரிய பணியாக இருக்கிறது.

பெண்களின் உடல் ரீதியான வளர்ச்சியும் அவர்களை பல வேளைகளில் மன அழுத்தத்துக்கும், பயத்துக்கும், குழப்பத்துக்கும் இட்டுச் செல்கிறது. காரணம் பாலியல் ஹார்மோன்கள் உடலுக்குள் பாய்வது அந்தப் பருவத்தில் தான். இயற்கையின் இந்த மாற்றம் உடலுக்கும் மூளைக்குமிடையேயான தகவல் பரிமாற்றங்களை இன்னோர் தளத்துக்கு மாற்றி வைக்கிறது.

இரவில் தூக்கமில்லாமல் புரள்வதோ, அல்லது விடிந்தபின்னும் எழும்பாமல் தூங்குவதோ என இவர்களுக்குள் இனம் புரியாத மாற்றங்களை இந்த மாற்றங்கள் விதைத்து விடுகின்றன.
அதீத கோபம் சிலரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. யார் என்ன செய்தாலும், பேசினாலும் கோபமடைவது இந்த பருவத்தில் பலருக்கும் வரக்கூடிய நிலை மாற்றம். தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்கலாம். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்களுடைய கோபத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

புதியதை அறியும் ஆர்வம் சிலருக்கும், புதியதால் விளையும் பயம் மற்றவர்களுக்கும் என இந்த வளர்ச்சி மாற்றங்கள் பதின் வயதுப் பெண்களை அலைக்கழிக்கின்றன.

பன்னிரண்டு வயதுக்குப் பிறகு தான் மூளை முதன் முதலாக ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுகிறது என்கின்றனர் உளவியலார்கள். இந்த காலகட்டத்தில் தான் இவர்கள் சமூகத்தின் தவறான கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர். ஊடகங்கள், திரைப்படங்கள், இணையம் என இவர்களுக்காய் தூண்டிலுடன் காத்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

அதுவரை மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என அலையும் களங்கமற்ற ஒரு சிறுமி, சட்டென்று அழகு குறித்த கவலையும், அடுத்தவர்களின் அபிப்பிராயங்களின் மீதான கவலையையும் கொள்கிறாள்.

எனவே பதின் வயதுப் பெண்ணை எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் தரக் குறைவாகப் பேசவே பேசாதீர்கள். அவர்களுடைய நடவடிக்கை, தோற்றம், திறமை எதைக் குறித்தும் இருக்கலாம் இந்த உரையாடல்.

தன் எடை மீதான கவலை பெண்களை பற்றிக் கொள்ளும் காலமும் இது தான். ஆரோக்கியமான வழிகளை யோசிப்பதை விட, தனது எடை அதிகரித்து விட்டதே அல்லது குறைந்து விட்டதே என பெண்கள் வருந்துவது பதின் வயதின் படிகளில் தான்.

கண்ணாடிகளில் அதிக நேரம் செலவிடும் இந்த பதின் வயதினர் தாங்கள் அழகாய், அங்கீகரிக்கப்படும் விதமாய் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென எப்போதும் நினைப்பார்கள். எனவே இவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவர்களுடைய தோற்றத்தைக் குறித்து கிண்டலடிப்பதே கூடாது! அது அவர்களுடைய தன்னம்பிக்கையையும், நிம்மதியையும் குலைத்து வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடக் கூடும்.

பல பதின் வயதினர் தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்வதில்லை. தேர்விலானாலும் சரி, காதலில் ஆனாலும் சரி, போட்டிகளில் ஆனாலும் சரி தோல்வி வந்தால் துவண்டு சட்டென உடைந்து போகும் மனம் பதின் வயதுக்கு உரியது. இதைப் பெற்றோர் உணர்ந்து செயல்படுதல் அவசியம். தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் நீங்கள் குழந்தையை முழுமையாய் அங்கீகரித்துக் கொள்கிறீர்கள் எனும் நம்பிக்கையை அவர்களிடம் ஊட்ட மறவாதீர்கள்.

குறிப்பாக மகளிடம் அவளுடைய பள்ளிக் கூட நிகழ்வுகளையும், அன்றைய தினம் நடந்தவற்றையும் பகிரச் சொல்லிக் கேளுங்கள். அவர்கள் பேசினால் முழுமையாய் ஈடுபாட்டுடன் கேளுங்கள். பெற்றோர் மகளுக்கிடையேயான உறவு வளர்ச்சிக்கும், மகளுக்கு எங்கேனும் ஏதேனும் உதவி தேவையா என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளவும் இந்த வெளிப்படையான உரையாடல் வழிவகுக்கும்.

வீடுகளில் ஏதேனும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியிருந்தால் உங்கள் பதின் வயது மகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். தன்னை பெரியவளாய் கவனிக்கிறார்கள், தனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதே உங்கள் பதின் வயது மகளை உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கையான மனநிலைக்கும் இட்டுச் செல்லும்.

பதின் வயதுப் பருவம் பக்குவம் வந்த தங்களைப் போல எதையும் ஒழுங்குடனும், திட்டமிட்டும் செய்யும் வயதல்ல என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். சீப்பை இடம் மாற்றி வைப்பதற்கெல்லாம் சத்தமிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, சில குறைகளை ஏற்றுக் கொண்டு பக்குவமாய் அவர்களைப் பழக்கவேண்டும்.

அதை விடுத்து குழந்தைகள் தங்களிடம் குறைகள் இருப்பதாகப் பேசினால், அவற்றுக்கு மாறாக மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவே பேசவேண்டும். சலிப்பு ஏற்படும் வரை குழந்தைகள் கேட்டால், சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே சூட்சுமம்.

இந்த மாற்றமும், இது தரும் கவலையும் இலட்சியங்களின் மீதான பார்வையை விலக்கி விடும் அபாயமும் உண்டு. எதிர்காலத்தைக் குறித்த பயமற்றுத் திரிவது, எதிர்காலத்தைக் குறித்து பயந்து நடுங்குவது என இருவேறு மனநிலை இவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அதீத ஈகோ இந்த வயதில் இந்த வயதினரை ஆக்கிரமித்திருக்கும். சிலருக்கு தான் எதற்கும் பயனற்றவள் எனும் சிந்தனை மேலோங்கியிருக்கும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் பதின் வயதினரை எள்ளி நகைக்காமல் இருப்பதே நல்லது.

அடிக்கடி பதின் வயதினரை பாராட்டுவதும், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்துப் பாராட்டுவதும் என தன்னம்பிக்கையை பெற்றோர் ஊட்ட வேண்டும். அவர்கள் ஏதேனும் நல்ல செயல் செய்யும் போதெல்லாம் வெகுவாய் ஊக்கப்படுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தக் காலகட்டம் அதீத தன்னம்பிக்கையையும், உயர்வு உணர்வையும் பெரும்பாலும் பதின் வயதுக்குள் புகுத்தி விடுகின்றன. இன்னும் குறிப்பாக பதின் வயதின் கடைசிக் கட்டத்தில் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் முடிவெடுப்பதெல்லாம் வெகு சரியான முடிவுகள் எனவும் அசைக்க முடியாத ஒரு உறுதி இவர்களுக்குள் முளைவிடும்.

தன்னோடு அன்பாகப் பழகிய மழலை சட்டென தன்னை வெறுக்கிறாளோ எனும் நினைப்பே பெற்றோரின் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பெற்றோரின் கவனமான அணுகுமுறை அவசியப்படுகிறது.

உண்மையில் தன் மகள் தன்னை வெறுக்கவில்லை. அவள் தனது வாழ்வில் பதட்டமான ஒரு பாதையைக் கடந்து கொண்டிருக்கிறாள் என உணர்ந்து கொள்ளவேண்டும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய காலம் இது என்பதைப் புரிந்து கொள்ளல் வெகு அவசியம் என்கிறார் அட்லாண்டா மன நல மருத்துவர் நாடின் காஸ்லோ. ஆற்றோடு நீந்தி ஆற்றின் போக்கை மாற்ற வேண்டுமே தவிர ஆற்றுக்குக் குறுக்கே வலுக்கட்டாயமாய் அணைகள் கட்டுதல் கூடாது. அவை  இழப்புகளைச் சம்பாதித்து விடக் கூடும்.

குறிப்பாக பல்வேறு விதமான தகவல்களைக் கேட்கிறது பதின் வயது. ஆனால் கடைசியில் எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் குழம்புகிறது. நண்பர்கள் செய்கிறார்கள் என்பதனாலேயே பல பழக்கங்களுக்கு அடிமையாவது இந்த இடத்தில் தான். உதாரணமாக 80 விழுக்காடு மக்கள் புகைப் பழக்கத்தை ஆரம்பிப்பது பதின் வயதில் தான் !

அமெரிக்காவில் உடலுறவு கொள்ளாமல் பள்ளி இறுதியாண்டை முடிப்பது என்பது அவமானச் செயலாக பள்ளி மாணவர்களால் பேசப்படுகிறது. இந்தத் தவறான பழக்கம் பெண்களை பெரிதும் பாதித்து பலரை ஏதும் அறியாப் பருவத்திலேயே தாய்மையடையவும் வைக்கிறது.

இன்றைய நவீன உலகம் நமது படுக்கையறைகளில் கூட கணினியை கொண்டு வைத்திருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் கைகளில் ஒரு ஆறாவது விரலாய் கைப்பேசியும் தொங்கிக் கொண்டிருக்கிறது. பதின் வயதுப் பருவம் இந்த நவீனத்தின் மூலம் தவறான வழிகளுக்குள் வழுக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது.

கணினி பயன்படுத்தும் நேரத்துக்கு வரையறைகள் விதிப்பதும், கணினியை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் என பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதேபோலதான் தனது பதின்வயதுக் குழந்தையின் நண்பர்கள் குறித்த விழிப்புணர்வும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளையின் நண்பர்கள் மோசமானவர்களாக இருப்பதாக கவலைப்படுகின்றனர். பதின் வயதுப் பிள்ளைகள் தங்கள் நண்பர்களை பெற்றோரே கூட திட்டுவதை விரும்புவதில்லை என்கிறார் உளவியல் நிபுணர் பார்டெல். தன் குழந்தையின் நலனில் அக்கறை கொள்கிறோம் என்பதையே முதன்மைப் படுத்தி குழந்தைகளிடம் பேசவேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

பதின் வயதுப் பருவம் குழப்பங்களும், பதட்டங்களும் நிறைந்த பருவம். இந்த பருவத்தினர் கவனிக்க வேண்டியவை.

பதின் வயதினர் தங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழப்பங்கள் அலைக்கழித்தால் நம்பிக்கைக்குரிய, பக்குவம் வாய்ந்த ஒரு நபரிடமோ, மருத்துவரிடமோ தனது குழப்பங்களைப் பேசலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் தெளிவைத் தர முடியும்.

மனம் குழப்பத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒரு டைரியை எடுத்து நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, எந்தெந்த அழுத்தங்களில் இருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் எழுதுங்கள். எழுதும் போது மூளை தெளிவடையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

நடங்கள். ஒன்றோ இரண்டோ கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்துவிட்டு திரும்பி வாருங்கள். உங்கள் மனம் தெளிவடைந்திருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏதாவது வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடினமாய் உழையுங்கள். அல்லது நீண்ட நேரம் உழையுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலையாய் இருந்தால் மிகவும் நல்லது. இது உங்கள் கவனத்தை முழுக்க முழுக்க மாற்றிவிடும்.

பிறருக்கு உதவுங்கள். அடுத்தவர்களுடைய குறைகளைக் கேட்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும் உங்கள் பிரச்சினையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை )

அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம்.

ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் அறிவினாலும், ஆற்றலினாலும் பெண்கள் இன்று சமூகத்தில் அங்கீகாரங்களையும், புகழையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர். ஆணும் பெண்ணும் சமமெனும் சொல்லே பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் இல்லை என பறைசாற்றுவதற்காகத் தானோ என எழுச்சியுடன் பெண்கள் கேட்கும் காலம் இது.

ஆனால், பழைய மரபின் தொடர்ச்சியாக இன்றும் பெண்கள் அழகான உடல் வேண்டும், வசீகரிக்கும் முகம் வேண்டும் என அதீத கவலை கொண்டு திரிவது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது. செயற்கை முகப்பூச்சுகளையும், பல்வேறு அழகு சாதனப் பொருட்களையும் கைகளிலும், பைகளிலும் அடக்கி இன்றைய பெண்கள் அலுவலகங்களுக்கு விரைவது தனது இயல்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது எனலாம்.

உளவியல் ரீதியாக இது பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும், தாழ்வு மனப்பான்மையின் தாழ் திறக்கும் சங்கதியாகவும் தெரியும் அதே வேளையில் இது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் இருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.

உலகிலேயே அதிக அளவு அழகுசாதனப் பொருட்களை உபயோகிப்பது பெண்கள் தான் என்பதை பிரிட்டனின் ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அந்த அழகு சாதனப் பொருட்கள் உண்மையிலேயே அழகைக் கூட்டுகின்றனவா, அவை தேவையானவை தானா என ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

இளமையாகவும், அழகாகவும், வனப்பாகவும் காட்டுவேன் என விளம்பரங்களில் வாக்குறுதி அளிக்கும் அழகு சாதனங்கள் உண்மையில் அழகையும், வனப்பையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்த அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்களைப் பார்த்தால் ஆய்வுக் கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு அமிலப் பட்டியலாய் அவை அச்சமூட்டுகின்றன.

பெண்களின் அழகுசாதனப் பொருட்கள் பலவற்றிலும் விஷத் தன்மையுள்ள பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதும், இந்த விஷத் தன்மைகள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கக் கூடியவை என்பதும், இவை பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை என்பதுமே இந்த அழகுசாதனப் பொருட்கள் குறித்த உண்மையாகும்.

உணவுப் பொருட்களுக்கு இருக்கக் கூடிய தர நிர்ணய அமைப்புகள் போல அழகு சாதனப் பொருட்கள் விஷயத்தில் அமைப்புகள் முழுமையாக இல்லை. பல மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்த தர நிர்ணய சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்தகைய அமைப்புகள் உள்ள நாடுகளில் அழகுப் பொருட்கள் குறைந்த பட்ச உத்தரவாதத்தைத் தர முடியும். உதாரணமாக, யூரோப்பியன் யூனியன் காஸ்மெடிக் டைரக்டிவ் ( European Union’s cosmetics directive ) எனும் அமைப்பு 2006ல் ஆரம்பிக்கப்பட்ட பின் யூ.கே வில் அழகு சாதனப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களோ, அமிலங்களோ கலப்பது பெருமளவில் குறைந்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்காவில் உதட்டுச் சாயங்களில் காணப்படும் விஷத் தன்மையைக் கண்டறிவதற்கான சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிரபலமான உதட்டுச் சாயங்களில் 61 விழுக்காடு விஷத் தன்மை உடையதாக காணப்பட்டன. முப்பது விழுக்காடு உதட்டுச் சாயங்களில் இந்த விஷத் தன்மை அளவுக்கு மிக மிக அதிக அளவில் இருந்ததால் அவற்றைத் தடை செய்திருக்கிறது அமெரிக்க அரசு.

தொடர்ந்து உதட்டுச் சாயம் போடும் பழக்கம் உடைய ஒரு பெண் சுமார் நான்கரை கிலோ எடையளவுக்கு லிப்ஸ்டிக்கை தன்னன அறியாமலே உட்கொள்கிறார் எனவும், இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு உட்பட பல்வேறு சிக்கல்களை உருவாக்கக் கூடும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார்.

மலிவு விலை உதட்டுச் சாயம், கண்களை அழகுபடுத்தும் மை, முகத்தில் பூசப்படும் ரோஸ் பவுடர், நகப் பூச்சு, பாடி ஸ்பிரே, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், வாசனைத் திரவியம், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எங்கும் அழகுசாதனப் பொருட்களின் சந்தை பரவலாய் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய கட்டுக்கோப்பான தர நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியாது. கூடவே, தரக் கட்டுப்பாட்டைப் பார்த்து அழகுப் பொருட்களை வாங்க வேண்டும் எனும் விழிப்புணர்வே பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை.

பாரபீன்ஸ் ( parabens )  மற்றும் பாத்தலேட்ஸ் ( phthalates) போன்ற அமிலங்கள் வாசனைத் திரவியங்களிலும், பாடி ஸ்பிரேக்களிலும் உள்ளன. இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. அழகுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் 20 வயதுமுதல் 40 வயதுக்குள்ளான இன்றைய பெண்களிடம் இந்த பாரபீன்ஸ் மிக அதிக அளவில் இருக்கின்றன. இவை ஹார்மோன்களைச் சேதப்படுத்தும் அச்சுறுத்தலையும் தருகின்றன. இந்த பாரபீன்ஸ் விஷத் தன்மை வாய்ந்தவை என்பதும், மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதும் ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புரோப்பலீன் கிளைகோள் எனப்படும் தோலை சேதப்படுத்தி குருதிக் குழாய்களில் அமிலத்தன்மை கரைக்கும் வேதியல் பொருள் இன்றைய மிகப்பிரபலமான டியோடரண்ட் களில் காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இது மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இந்த விஷத் தன்மை மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட காணப்படுகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் எனப்படும் பொருள் நமக்குக் கிடைக்கும் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் போன்ற பொருட்களில் இருக்கின்றது. இவை தலைவலி, அலர்ஜி போன்ற பல உபாதைகளைத் தந்து செல்கிறது. ஷாம்பூ, மற்றும் நுரை தரக்கூடிய பல அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட், மற்றும் சோடியம் லாரத் சல்பேட் எனும் இரண்டு வேதியல் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மிக மிக ஆபத்தானவை. குழந்தைகளின் கண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி இவற்றுக்கு உண்டு. இவை தோலினூடாக எளிதில் உடலுக்குள் கடந்து உடலுக்குள் விஷத்தன்மையை இறக்குமதி செய்துவிடுகிறது.

அழகுப் பொருட்களில் எத்தனோலமின் எனும் பொருள் நானோ, டை மற்றும் டிரை  எனும் மூன்று வகையாகக் காணக்கிடைக்கிறது. இவை ஷாம்பூ, ஷவர் ஜெல், சோப், ஃபேஷியல் கிளீனர்ஸ் உட்பட பல்வேறு அழகுப் பொருட்களில் உள்ளன. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சிறுநீரகப் புற்றுநோய், லிவர் புற்று நோய் உட்பட பல கொடிய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என விளம்பரப்படுத்தப்படும் அழகுப் பொருட்கள் பெரும்பாலானவற்றில் இந்த விஷத்தன்மை உண்டு. அமிலங்களுடன் ஒரு சில இயற்கைப் பொருட்களையும் கலந்து அவற்றை இயற்கைப் பொருள் என விளம்பரப் படுத்துவது விளம்பர உத்தி தவிர வேறில்லை என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியம்.

ஐசோபுரோபைல் ஆல்கஹால் (Isopropyl Alcohol)  எனும் விஷத்தன்மையுள்ள பொருள் அன்றாடம் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோஷன்(after-shave lotions), ஹெயர் கலர் ரின்சஸ்(hair color rinses), ஹேண்ட் லோஷன்(hand lotions)  உட்பட பல்வேறு அழகு பொருட்களில் கலந்துள்ளது. தலைவலி, வாந்தி, மன அழுத்தம் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இந்தப் பொருள் காரணமாகிறதாம்.

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது.

முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அழகின் மீது அதீத மோகம் ஏற்படும் போது உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனும் தீவிர உந்துதலும் பெண்களிடம் எழுகிறது. ஊடகங்கள் மிகைப்படுத்தும் அழகும், இளமையுமே உண்மை என நம்பி அதே போல நகலெடுக்க தனது உடலைக் கொடுமைப்படுத்தும் டயட் முறைகள் இன்று உலகெங்கும் பரவியிருக்கின்றன. அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்கள் இத்தகைய உடல் குறைப்பு பொருட்களுக்காகச் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இத்தகைய மோகம் அதிகரிக்கும் போது உயிரிழப்புகள் கூட நேரிடுகின்றன. சமீபத்தில் மாஸ்கோவில் 35 வயதான பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரணமடைந்திருக்கிறார். உலகெங்கும் அவ்வப்போது நிகழும் இத்தகைய நிகழ்வுகள் மாத்திரைகளினால் அழகைத் தேடுவோருக்கான எச்சரிக்கை மணி எனக் கொள்ளலாம்.

இன்னும் சிலருக்கு ஆடையின் வண்ணத்துக்கு ஏற்ப அழகிய காண்டாக்ட் லென்ஸ் அணிவது ஒரு பிரியமாக இருக்கிறது. இது கண்ணுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் கண் மருத்துவர்கள்.

இன்றைய இளம் பெண்களிடையே தங்கள் கூந்தலை நேராக்க வேண்டும் எனும் மோகமும் மிகுந்து வருகிறது, அந்த முறைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பார்மால்டிஹைட் எனப்படும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வோர் செயலும் உடலின் இயல்புக்கு ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க ஒரே வழி அழகுப் பொருட்களின் மீதான அதீத நாட்டத்தைக் குறைப்பதே. ஊடகங்களும், திரைப்படங்களும் மிகைப்படுத்துபவையே அழகெனும் மாயையிலிருந்து இளம் பெண்கள் வெளிவரும்போது தான் ஆரோக்கியமான சூழல் நிலவும் என்பது திண்ணம்.

கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்

கருக் கலைப்பு

மனிதாபிமானச் சிதைவுகளில்
நடந்தேறும் படு கொலை.

குற்றமில்லாத ஓர்
வெள்ளைப்புறாவை
வேங்கை வேட்டையாடும் வலி.

முளை விடும் வரை
விதைகளைத் தூவிவிட்டு
தலை கொய்வது
தகாத அறுவடையில்லையா ?

தொப்புள் கொடியில்
மழலைக்கு
தூக்குத் தண்டனையா ?

பன்னீர்க் கடலில்
பச்சிளம் பாலகர்க்கு
கருணைக்கொலையா ?

எந்தத் தராசுத் தட்டில்
இதை
நியாயப் படுத்துகிறீர்கள் ?

அனாதைக் குழந்தைகளோடா ?
வறுமையின் விண்ணப்பங்களோடா ?
இல்லை
அந்தஸ்தின் அலங்காரங்களோடா ?
சொல்லுங்கள்.

உங்களுக்குள் இறங்கி
வலைவீசித் தேடுங்களேன்.

விகாரத்தின்
விரல்ப்பதிவுகள்,

மோகத்தின்
அவசரப் பகிர்வுகள்,

இவைதானே
மிஞ்சிக் கிடக்கின்றன?
உங்கள் தவறுக்கு
பிஞ்சுக்குத் தண்டனையா ?

இளமையின் பலிபீடத்தில்
பிறப்புக்குச் சிரச்சேதமா ?

பதினெட்டு நாட்களில்
இதயம் துடிக்கத் துவங்கி,
ஆறு வாரப் பயணத்தில்
மூளையோடு முதல் பரிமாற்றம் செய்து,
எட்டு வாரத்தில்
ஓரிடம் எட்டிப்பிடித்து,
ஒன்பது வாரத்தில்
வலி உணருமாம் சிறு உயிர்.
இதை உணர்.

கருச்சிதைவு
மானிட வளர்ச்சியின்
படிக்கட்டல்ல.
கூண்டுக்குள் வேட்டையாடுதல்
வீரத்தின் விளையாட்டுமல்ல.

நீயும் நானும்
நிலவிலிருந்து நழுவி விழுந்தோமா.
கருவறையின் குருகுலத்தில் தானே
வளர்க்கப்பட்டோம் ?

வருமுன் காப்பது விவேகம்
வந்தபின் தீய்ப்பதோ துரோகம்.

சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து