கி.மு :: நெற்றிப் பொட்டில் ஆணி !!!

தெபோராளும், பாராக்கும்

debora

ஏகூர் என்பவர் இஸ்ரயேலர்களின் வழிகாட்டியாக இருந்து வந்தார். அவர் வழிகாட்டியாக இருந்தவரைக்கும் இஸ்ரயேலர்கள் கடவுளின் வழியில் நடந்து வந்தார்கள். ஏகூர் இறந்தார். இஸ்ரயேலர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடவும், சிற்றின்பம், வன்முறை போன்றவற்றில் நாட்டம் கொள்ளவும் ஆரம்பித்தனர். கடவுள் அவர்களை மீண்டும் தண்டித்தார்.

அப்போது கானானியரின் மன்னனாக யாபீன் என்பவர் ஆட்சிசெய்து வந்தார். அவர் பலத்த படையினரோடு வந்து இஸ்ரயேல் மக்களைத் தாக்கி மீண்டும் அவர்களை அடிமை நிலைக்குக் கொண்டு வந்தார். இஸ்ரயேலர்கள் மக்கள் கடவுளை மறந்து சிதறிக் கிடந்ததால் அவர்களால் போரில் வெற்றி பெற இயலவில்லை.

யாபீன் மன்னனின் படைத்தளபதி பெயர் சிசெரா. அவன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அவனுடைய படைபலம் மிகப் பெரிது. அவனிடம் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட இரும்பு ரதங்கள் இருந்தன. எத்தனை பெரிய படையாய் இருந்தாலும் அவனுடைய ரதங்கள் அவற்றை நிர்மூலமாக்கி வந்தன. அவன் கடுமையான சட்டங்கள் பலவற்றைப் போட்டு இஸ்ரயேல் மக்களை கடுமையாகப் பழிவாங்கினார். இஸ்ரயேலர்கள் உழைப்பின் பயன்களை எல்லாம் அரசனுக்கே கொடுக்க வேண்டிவந்தது. அவர்களால் எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. இஸ்ரயேல் குல பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இஸ்ரயேல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

நிலமை கட்டுக்குள் அடங்காமல் போவதைக் கண்ட மக்கள் ஒன்றுகூடினார்கள்.

‘நம்முடைய இந்த நிலமைக்குக் காரணம் நம்முடைய பாவங்கள் தான். நம்மில் பலர் பாகாலை வணங்குகிறோம். இனிமேல் நாம் மனம் திரும்பி கடவுளின் வழிக்கு வரவேண்டும். இனிமேல் நமக்கு நம்முடைய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வங்களே இருக்கக் கூடாது. அப்போது தான் நம்முடைய கஷ்டகாலத்துக்கு ஒரு விடிவு கிடைக்கும்.’ ஒருவர் பேசினார்.

‘ஆம் உண்மை தான். அனைத்துக்கும் காரணம் நம்முடைய கீழ்ப்படியாமை தான். இனிமேல் நம்முடைய கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கையில் கூட இதே போல பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எல்லாமே கடவுளை விட்டு விலகிப்போனபோது நடந்தவை தான்’

‘நாம் கண்டிப்பாக நம்முடைய நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகியாக வேண்டும்’

‘கடவுளை வழிபடுவது, அவரை நாவால் துதிப்பதும், பலி செலுத்துவதும் மட்டுமல்ல. அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவும் வேண்டும். எனவே இனிமேல் யாரும் கானானியரோடு கலக்கக் கூடாது. சிற்றின்பச் சுழலில் சிக்கவும் கூடாது’

மக்கள் அனைவரும் நீண்டநேரம் விவாதித்தார்கள். கடைசியில் எல்லோரும் ஒரே குரலாக கடவுளை நோக்கி மன்றாட ஆரம்பித்தார்கள். இஸ்ரயேல் மக்கள் மனம் திரும்பி தன்னுடைய வழியில் வந்ததைக் கண்ட கடவுள் மகிழ்ந்தார். அவர்களை மீட்பதென்று முடிவெடுத்தார்.

தெபோராள் இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாகத் தெரிந்தெடுக்கப் பட்டாள்.

தெபோராள் மன உறுதியும், சிந்தனைத் தெளிவும், இறை பக்தியும் நிறைந்தவள். அவள் ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் வசித்துவந்தாள். கடவுளை மனதில் நினைத்தவர்களுக்கு அதை விட மனநிறைவு அளிக்கக் கூடிய வேறு சொத்துக்கள் ஏது ? தெபோராவும் உலக சொத்து சுகங்கள் மீதெல்லாம் அக்கறைப்படாமல் கடவுளையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

ஒருநாள் அவர் பாராக் என்னும் இஸ்ரயேல் வீரர் ஒருவரை அழைத்தாள். பாராக் நல்ல பலசாலி. பல போர்களை முன்னின்று நடத்திய அனுபவம் மிக்கவன்.

‘பாராக். சிசெராவின் கொடுமைகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய நேரம் வந்து விட்டது’ தெபோராள் சொன்னாள்.

‘இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’ பாராக் ஆனந்தமாய்ச் சொன்னான்.

‘இந்த வெற்றி உன் மூலமாய் தான் வரும்’

‘என் மூலமாகவா ? புரியவில்லையே ?’

‘நீதான் படையைத் திரட்டிக் கொண்டு போய் சிசெராவைத் தோற்கடிக்க வேண்டும். கடவுள் உன்னுடன் இருப்பார்.’

‘ஐயோ.. சிசெராவை எதிர்க்க என்னால் முடியாது. அவரை எதிர்க்குமளவுக்கு நம்மிடம் படை வலிமையும் இல்லை’

‘கடவுள் தான் அனைவரையும் படைத்தவர். அவரால் தோற்கடிக்கப் பட முடியாத மனிதர் இல்லை. அவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாகச் செல்’

‘இல்லை… எனக்குப் பயமாக இருக்கிறது. என்னால் முடியாது’ பாராக் மீண்டும் மறுத்தார்.

‘கடவுள் உன்னோடு வந்தால் கூட பயமா உனக்கு ?’ தெபோராள் கேட்டாள்.

‘கடவுள் வருவது இருக்கட்டும். நீங்கள் என்னோடு வந்தால் நான் நம்பிக்கையுடன் போரிடச் செல்கிறேன். முடியுமா உங்களால்’ பாராக் கேட்டார்.

‘சரி… நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால், நீ கடவுளை முழுவதும் நம்பாததால் செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ தெபோராள் சொன்னாள்.

‘ஒரு பெண்ணினால் சிசெரா என்னும் மாபெரும் வீரன் கொல்லப்படுவானா ? வேடிக்கைக் கதையாக இருக்கிறதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட பாராக் அதை வெளிக்காட்டாமல் தெபோராவிடமிருந்து விடைபெற்று இஸ்ரயேல் படையைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். பெரும் இஸ்ரயேலர் படை ஒன்று தயாரானது.

சில நாட்கள் சென்றபின் தெபோராள் பாராக்கை மீண்டும் அழைத்து,’ போருக்கான தருணம் வந்து விட்டது. சிசெராவிற்கு எதிராகப் போரிடப் புறப்படுவோம்’ என்றாள். படை கடவுளின் ஆதரவுடன் சிசெராவை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டது.

போர் துவங்கியது.

இஸ்ரயேலரின் படைக்கு முன்னால் சிசெராவின் இரும்பு ரதங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிசெரா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். போரில் இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. சிசெரா ரதத்தை விட்டுத் தப்பியோடினார். தப்பியோடிய சிசெரா யாகேல் என்பவளுடைய கூடாரத்தில் தஞ்சம் புகுந்தார். யாகேலின் கணவனும், யாபீன் அரசனும் நண்பர்களாக இருந்தார்கள்.

‘வாருங்கள். நீங்கள் சிசெரா தானே ? ‘ யாகேல் வரவேற்றாள்.

‘ஆம்.. இஸ்ரயேலர் படை நம்முடைய படையைச் சிதறடித்து விட்டது. நான் தப்பியோடி இங்கே வந்தேன். நல்லவேளை இது உன் கூடாரம். இங்கே எனக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ சிசெரா சொன்னான்.

‘கண்டிப்பாக … உங்களைப் போன்ற ஒரு வீரரைப் பாதுகாப்பது எனக்கு மகிழ்ச்சியல்லவா ? மிகவும் களைப்பாய் இருக்கிறீர்கள். ஏதேனும் குடிக்கத் தரவா ?’ யாகேல் கேட்டாள்.

‘கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்’

யாகேல் உள்ளே சென்று சிசெராவிற்குக் குடிப்பதற்காக பால் கொண்டு வந்தாள். சிசெரா அதைக் குடித்துச் சோர்வகற்றினார்.

‘மிக்க நன்றி யாகேல். நான் உள் அறைக்குச் சென்று கொஞ்சம் இளைப்பாறுகிறேன். யாரேனும் என்னைத் தேடி வந்தால் நான் இங்கே வரவேயில்லை என்று சொல்’ சிசெரா சொல்லிவிட்டு உள் அறைக்குச் சென்று படுத்தார். கடுமையான போரும், தப்பியோடிய களைப்பும் அவரை தூக்கத்துக்குள் இழுத்துச் சென்றன.

யாகேலின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சிசெரா அயர்ந்து உறங்கினான். ஆனால் யாகேலோ மன்னன் யாபீனையும், தளபதி சிசெராவையும் மிகவும் வெறுத்தாள். அது சிசெராவிற்குத் தெரியவில்லை.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிசெராவைப் பார்க்கப் பார்க்க யாகேலுக்குள் இருந்த வன்மம் வெளிவந்தது. சிசெராவைக் கொல்வதற்குச் சரியான சந்தர்ப்பத்தைக் கடவுளே தனக்கு அளித்திருப்பதாய் நினைத்தாள். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இவனைப் பழிவாங்க வேறு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். சிசெராவைக் கொல்வதென்று முடிவெடுத்தாள்.

வீட்டிலிருந்த பெரிய சுத்தியல் ஒன்றைக் கைகளில் எடுத்தாள். கூடாரத்தில் இருந்த நீளமான ஆணி ஒன்றையும் எடுத்தாள்.

நேராக தூங்கிக் கொண்டிருந்த சிசெராவின் அருகில் சென்று அவனுடைய நெற்றிப் பொட்டில் ஆணியை வைத்தாள். கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் அவளுடைய கண்களில் கொப்பளித்துப் பாய, கையிலிருந்த சுத்தியலால் ஆணியை ஓங்கி அடித்தாள். என்ன நடக்கிறது என்பதைப் சிசெரா புரிந்து கொள்ளும் முன் யாகேல் அடித்த ஆணி அவனுடைய நெற்றிப் பொட்டைப் துளைத்து மறுமுனை வழியாக வெளியே வந்து தரையில் புதைந்தது.

சிசெரா துடிதுடித்து இறந்தான். தெபோராளின் வாக்குப் படி அவனை ஒரு பெண்ணே கொன்று விட்டாள்.

தப்பியோடிய சிசெராவைத் தேடிக் கொண்டு பாராக் அந்தப் பக்கமாக வந்தான். வாசலிலே பாராக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த யாகேல் அவனுக்கு எதிரே வந்து நின்றாள்.

‘வாருங்கள் … நீங்கள் பாராக் தானே’

‘ஆம் பெண்ணே… நீ யார் ?’

‘உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி’ யாகேல் புன்னகைத்தாள்.

‘இன்னும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை பெண்ணே. சிசெரா தப்பியோடிவிட்டான். சிசெராவைக் கொன்றபின் தான் முழுவெற்றி கிடைக்கும். அவனைத் தான் தேடி அலைகிறேன்’ பாராக் சொன்னார்.

‘சிசெராவா ? அவன் இதோ என்னுடைய வீட்டின் உள் அறையில் படுத்திருக்கிறார்’ யாகேல் சொன்னதும், பாராக் தன்னுடைய உடைவாளை உருவிக் கொண்டு அவளுடைய கூடாரத்துக்குள் பாய்ந்தார். உள்ளே சிசெரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.

‘செசரா உன் கையால் சாகமாட்டான். அவனுடைய சாவு ஒரு பெண்ணினால் தான் வரும்’ என்று தெபோராள் சொன்ன வார்த்தைகள் அவனுடைய மனதில் எதிரொலித்தன. கடவுளின் செயலை எண்ணி வியந்தான்.

சிசெரா கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும் யாபீன் மன்னன் நடுங்கினார். இஸ்ரயேலர்களுக்கு அஞ்சி ஒடுங்கினான். இஸ்ரயேலர்களின் கை எங்கும் ஓங்கியது. அவர்களுக்கு எதிராக இறுக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுகளும் அறுந்தன.

இவ்வாறு இஸ்ரயேல் மக்களைக் கடவுள் ஒரு கொடுமையான மன்னனிடமிருந்து பாதுகாத்தார்.

கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை

 haman_mordechai

இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை ஏற்படுத்தவும், கானானியரின் தெய்வமான பாகாலை வணங்கவும் துவங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தில் தான் பெண்கொள்ளவேண்டும் என்பதே அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த கட்டளை. அதை இஸ்ரயேலர்கள் மீறத் துவங்கினார்கள். தன்னைப் புறக்கணித்த இஸ்ரயேலர் மீது கடவுள் கோபம் கொண்டார். அவர்களைக் கைவிட்டார். கானானியரின் கை ஓங்கியது. அவர்கள் இஸ்ரயேலரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து கொடுமைப்படுத்தத் துவங்கினார்கள்.

அந்நாட்களில் மோவாப் நாட்டை எக்லோன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மிகச் சிறந்த போர்வீரன். அவனுடைய ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கடுமையான வரிகளைச் சுமத்திக் கொடுமைப்படுத்தினான். இஸ்ரயேல் மக்கள் நிம்மதியின்றித் தவித்தார்கள்.

இஸ்ரயேலர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்வதும், மீண்டும் மனம் மாறிக் கடவுளை நம்புவதும் அடிக்கடி நடந்தது. இந்த முறையும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கினார். அவர்களுக்கு வழிகாட்ட நியாயாதிபதி ஒருவரை நியமித்தார். அவர் தான் ஏகூத்.

ஏகூத் இஸ்ரயேல் மக்கள் தலைவர்களை ஒன்றுகூட்டினார்.

‘நாம் இந்த மன்னனின் கீழ் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் பெரும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டோ ம். இனிமேலும் நாம் சும்மா இருந்தால் நம்முடைய மூதாதையர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டது போல நாமும், நம்முடைய வருங்காலத் தலைமுறையினரும் கஷ்டப்படுவார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ ஏகூத் சொன்னார்.

‘நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ மக்கள் பிரதிநிதிகள் கேட்டார்கள்.

‘முதலாவதாக நீங்கள் யாரும் இனிமேல் பாகாலை வழிபடக் கூடாது. நம்முடைய கடவுளைத் தான் வழிபட வேண்டும். நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’

‘இரண்டாவதாக, நமக்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை. எனவே என்னுடைய தலைமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். நான் உங்களுக்காக கடவுளின் அருளோடு போராடுவேன்’ ஏகூத் சொல்ல அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

‘இப்போது மன்னனுக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள். இந்தமுறை நான் அதை மன்னனிடம் கொடுக்கிறேன்’ ஏகூத் சொன்னார். மக்கள் அவ்வாறே செய்தனர்.

‘நீங்கள் எல்லோரும் ஒரு போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் போரிட வேண்டி வரலாம்’ ஏகூத் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

ஏகூத் இடதுகைப் பழக்கம் கொண்டவர். எனவே எப்போதும் தன்னுடைய கத்தியை இடுப்பின் வலது பக்கத்தில் சொருகி வைப்பது அவருடைய வழக்கம். இந்தமுறையும் அவர் ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அதை தன் இடையின் வலது பக்கத்தில் மறைத்து வைத்தார். பின் மன்னனுக்குரிய வரிப்பணத்தையும் எடுத்துக் கொண்டு மன்னனின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்.

வரிப்பணத்தோடு ஏகூத் வருவதைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான்.

‘அரசே…. எங்கள் தலைவரே.. இதோ உமக்கான வரிப்பணம்’ ஏகூத் போலி பவ்யம் காண்பித்தார்.

‘நல்லது. உங்களை நான் பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் வரிப்பணத்தைச் செலுத்துவதில் நீங்கள் கெட்டிக் காரர்கள்’ மன்னன் சிரித்தான். அரசவை மொத்தமும் சிரித்தது.

‘மன்னனே… உங்கள் அரசாட்சியில் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே வரிப்பணம் செலுத்துவதில் எங்களுக்கு எப்போதும் தாமதம் ஏற்படுவதில்லை’ ஏகூத் வஞ்சகமாய் புகழ்ந்தான். வரிப்பணத்தையெல்லாம் மன்னனிடம் ஒப்படைத்த ஏகூத் மன்னனை நோக்கி,

‘அரசே ஒரு விண்ணப்பம்’ என்றார்.

‘சொல்… என்ன விண்ணப்பம் ? வரியைக் குறைக்கவேண்டுமா ?’ மன்னன் நகைத்தான்.

‘இல்லை அரசே. இது மிக மிக ரகசியமானது. உம்மிடம் மட்டுமே சொல்லவேண்டும். இந்த அரசவைப் பணியாளர்கள் கூட கேட்கக் கூடாது’ ஏகூத் சொன்னார்.

‘ சரி என்னுடன் வா…’ மன்னர் ஏகூரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே குளிர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டிருந்தது.

‘சொல்.. என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் ?’ மன்னன் கேட்டான்.

ஏகூத் தாமதிக்கவில்லை, கணநேரத்தில் தன்னுடைய வலது இடையில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் உருவி எடுத்து மன்னன் சுதாரிக்கும் முன் அவனுடைய வயிற்றில் குத்தினார். கத்தி மன்னனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபுறம் வந்தது. மன்னன் கத்தாமலிருக்க தன்னுடைய வலது கையினால் மன்னனுடைய வாயைப் பொத்திய ஏகூத்,’ அரசே… இதுதான் நான் சொல்ல வந்த ரகசியம்’ என்று ஆத்திரக் கண்களோடு உறுமினார். மன்னனின் கண்கள் மரணபயத்தில் தத்தளித்து அடங்கியது. மன்னன் இறந்தான்.

ஏகூத் எதுவுமே நடவாதவர் போல மெதுவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். சற்றும் தாமதியாமல் உடனே சென்று தயாராய் இருந்த இஸ்ரயேல் மக்களை ஒன்று சேர்த்து மன்னனுக்கு எதிராகப் போரிடவும் தயாரானார்.

அறைக்குள் சென்ற மன்னன் நீண்டநேரமாக வெளியே வராததால் அரச அலுவலர்கள் அரசர் சென்ற அறைக்குள் நுழைந்தனர். அங்கே அரசன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு ஒட்டுமொத்தமாக அதிர்ந்தார்கள்.

‘ஐயோ… நமது மன்னனை அந்த இஸ்ரயேலன் கொன்று விட்டான்’

‘உடனே படைத்தளபதியை வரவழையுங்கள்… இஸ்ரயேலர்களை அழித்தொழிக்க வேண்டும்…’

‘என்ன ஆயிற்று.. ஏன் பதட்டப்படுகிறீர்கள் ?’

அரண்மனை சடுதியில் பரபரப்புக்குத் தாவியது. ஆனால் அதற்குள் ஏகூத் இஸ்ரயேலர் படையோடு அரண்மனையைத்தாக்கினார். போருக்குத் தயார் நிலையில் இல்லாத அரண்மனை வீரர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. மோவாபியர் படை படுதோல்வி கண்டது. இஸ்ரயேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

நீண்ட நாளைய அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட ஏகூரையும், ஏகூத் வழியாகச் செயலாற்றியக் கடவுளையும் இஸ்ரயேலர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

 

பிடித்திருந்தால்…… வாக்களியுங்கள்… நன்றி

கி.மு கதைகள் : ஆயி நகரமும், நின்று போன சூரியனும்

jozua

எரிகோ நகரத்தைப் பிடித்தபின் இஸ்ரயேலரின் பார்வை ஆயி என்னும் நகரின் மீது விழுந்தது.

ஆயி பட்டணத்தையும் கைப்பற்றவேண்டும் என்று யோசுவா திட்டமிட்டார். அதுவும் இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாகும் என்று கடவுள் வாக்களித்திருந்தார்.

வழக்கம் போல உளவாளிகள் இருவர் ஆயி பட்டணத்துக்குள் அனுப்பப்பட்டனர். உளவாளிகள் ஆயி நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு யோசுவாவிடம் தாங்கள் பார்த்தவற்றைத் தெரியப்படுத்தினர்.

‘தலைவரே…. ஆயி பட்டணத்தைப் பிடிப்பது கடினமான பணி அல்ல. அதை மிக விரைவாக நாம் கைப்பற்றிவிட முடியும்’ உளவாளிகள் சொன்னார்கள்.

யோசுவா ஆனந்தமடைந்தார். இஸ்ரயேல் மக்களிடையே இருந்த வலிமையானவர்களை எல்லாம் ஒன்று திரட்டி போருக்குத் தயாரானார். மக்கள் ஆயி நகரத்தையும் பிடித்து விடும் நோக்கில் அந்த நகரத்தின் மீது போர் தொடுத்தார்கள்.

ஏமாற்றம் ! ஆயி நகர வீரர்கள் இஸ்ரயேலர்களைத் துரத்தியடித்தனர்.

இஸ்ரயேலர்களால் இதை நம்பவே முடியவில்லை. கடினமான எரிகோ நகரத்தைத் தங்களுக்கு வெற்றி இலக்காக்கிய கடவுள், ஆயி பட்டணத்தை மட்டும் ஏன் ஒப்படைக்கவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.

யோசுவா மனம் தளர்ந்தவராக கடவுளிடம் முறையிட்டார்.

‘கடவுளே… உமது கட்டளைப்படி தானே போரிட்டோ ம். ஆனாலும் தோல்வி கிடைத்ததே…. ‘ என்று கலங்கி மன்றாடினார்.

கடவுள் யோசுவாவின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார். ‘ என்னுடைய கட்டளையை ஒரு இஸ்ரயேலன் மீறிவிட்டான். நான் எடுக்கக் கூடாது என்று சொல்லியும் எரிகோ நகரத்திலிருந்து அவன் பொருட்களைத் திருடி வைத்திருக்கிறான். அது தீட்டானது. அது தான் உங்கள் தோல்விக்குக் காரணம்’

கடவுள் சொன்னதைக் கேட்ட யோசுவா மிகவும் கோபமடைந்தார்.

‘மூடர்களே… இன்னும் கடவுளுக்கு எதிராய் நடக்கிறீர்களே. உங்களை எப்படித் தான் திருத்துவது. எரிகோ நகரத்திலிருந்து பொருளை கொள்ளையடித்து வைத்திருக்கும் அந்த பேராசைக்காரன் யார் ?’ என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

‘அது யார் என்பதைக் கண்டுபிடித்து உடனே அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’ யோசுவா மக்களிடம் சொன்னார்.

மக்கள் தங்களுக்குள்ளேயே தேடி ஆகார் என்பவன் எரிகோவின் சாபத்தீடான பொருட்களை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அவன் யோசுவாவின் முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டான்.

‘ஆகார்… ஏன் கடவுளின் கட்டளையை மீறினாய் ?’ யோசுவா கோபத்தில் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை.

‘பார்.. உன்னால் தான் நாம் தோல்வியடைந்தோம். நம் வீரர்கள் பலர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பேராசை தான். பேராசைக்காரனுடைய முடிவு அழிவு மட்டுமே’ யோசுவா சொன்னார். ஆகார் தலைகுனிந்து நின்றான்.

‘கல்லால் எறிந்து இவனைக் கொன்றுவிடுங்கள்’ யோசுவா ஆணையிட்டார்.

மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த கற்களை ஆகாரின் மீது வீசினர். ஆகார் இரத்தவெள்ளத்தில் மிதந்தான். பேராசை பிடித்த அவன் அந்த மண்ணிலேயே சமாதியானான்.

யோசுவா வீரர்களை மீண்டும் ஒன்று சேர்த்தார்.

‘இப்போது நான் புதிய ஒரு அணுகுமுறையை வைத்திருக்கிறேன்… கவனமாய்க் கேளுங்கள்’ யோசுவா சொல்ல மக்கள் கவனமானார்கள்.

‘முப்பதினாயிரம் வீரர்கள் நகருக்கு வெளியே சற்றுத் தொலைவில் மறைந்திருக்கவேண்டும். இந்த முப்பதாயிரம் வீரர்களும் நம்மிடமுள்ளவர்களில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். மற்ற மக்கள் ஆயி நகரத்தைப் பிடிப்பதற்குப் போவது போல உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆயி நகர வீரர்கள் நமக்கு எதிராய் போரிடுவார்கள். நாம் பயந்து பின் வாங்குவது போல பின்வாங்கி ஓடவேண்டும். அவர்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருவார்கள். நாம் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்…. இந்த நேரத்தில் நகருக்கு அருகில் ஒளிந்திருக்கும் நம் முதல்தர வீரர்கள் முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகருக்குத் தீயிடவேண்டும்…’

யோசுவா சொன்ன யோசனையை மக்கள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இது மிகவும் சிறப்பான யோசனை. நமக்கு இதில் வெற்றி நிச்சயம்…’ மக்கள் சொன்னார்கள்.

‘நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லாதீர்கள். கடவுள் நமக்கு வெற்றி தருவார் என்று சொல்லுங்கள்’ யோசுவா திருத்தினார்.

போருக்கான நாளும் வந்தது. யோசுவாவின் திட்டம் கனகட்சிதமாக நிறைவேறியது. முப்பதாயிரம் பேர் ஒளிந்துகொள்ள, மற்றவர்கள் நகருக்குள் நுழைந்தபோது துரத்தப்பட்டனர். உடனே அந்த முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகரைத் தீயிட்டு அழித்தனர். நகர் எரியும் சத்தத்தைக் கேட்ட ஆயி நகர வீரர்கள் துரத்துவதை விட்டுவிட்டு நகரைக் காப்பாற்றுவதற்காக திரும்பி வந்தார்கள். அதுவரைக்கும் புறமுதுகிட்டு ஓடுவதாய் நடித்துக்கொண்டிருந்த இஸ்ரயேலர்கள் ஆயி வீரர்களைத் துரத்தினார்கள். இருபுறமும் இஸ்ரயேல் வீரர்களால் தாக்கப்பட்ட ஆயி நகர வீரர்கள் போரிட்டு மடிந்தார்கள்.

அவ்வாறு ஆயி நகரமும் இஸ்ரயேலர்களின் வசமாயிற்று

எரிகோவையும், ஆயி நகரத்தையும் இஸ்ரயேலர்கள் கைப்பற்றியதை அறிந்த கிபியோனியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இஸ்ரயேலர்களிடம் வந்து சமாதானம் செய்து கொண்டனர். எமோரியர்களின் அரசர்கள் ஐந்து பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டனர். கிபியோன் மிகவும் செல்வச் செழிப்பான ஊர். எனவே அதை இஸ்ரயேலர்களிடம் கொடுக்காமல் கைப்பற்றவேண்டும் என்று அந்த ஐந்து அரசர்களும் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு போய் கிபியோன் நகரை முற்றுகையிடத் தீர்மானித்தார்கள். செய்தி கிபியோனியர்களின் காதுக்குப் போயிற்று. கிபியோன் மன்னன் யோசுவாவிடம் ஓடிவந்தான்.

‘இஸ்ரயேல் தலைவரே… நீர் தான் எங்களுக்கு உதவ வேண்டும்’

‘என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள். பதட்டப்படாதீர்கள்’ யோசுவா சொன்னார்.

‘ஐந்து மன்னர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவவேண்டும்’ மன்னன் கேட்டான்.

யோசுவா உடனே தன்னுடைய வீரர்களை அழைத்தார்.

‘எல்லோரும் போருக்குத் தயாராகுங்கள். அவர்கள் நம்மைத் தாக்கும் முன் நாம் அவர்களைத் தாக்க வேண்டும். எனவே அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்கே சென்று அவர்களைத் தாக்குவோம்’ என்றார்.

பெரிய படை ஒன்று புறப்பட்டு அந்த ஐந்து அரசர்களும் பரிவாரங்களோடு தங்கியிருந்த பகுதிக்குச் சென்றது. அவர்கள் அனைவரும் இரவில் ஓய்வெடுத்துக்க் கொண்டிருக்கையில் இஸ்ரயேலர்கள் தாக்கினார்கள்.

திடீர்த்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத எதிரி அரசர்களின் படைவீரர்கள் நிலைகுலைந்தார்கள்

யோசுவா வானத்தை அண்ணாந்து பார்த்து ‘ சூரிய சந்திரர்களே நீங்கள் இந்த போர் முடியும் மட்டும் வானத்திலேயே இருக்கவேண்டும். ‘ என்று கடவுளின் பெயரால் கட்டளையிட்டார். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களாக சூரியன் மறையவேயில்லை.

இதைக்கண்ட எதிரி மன்னர்கள் பயந்து நடுங்கி கிடைத்த திசைகளில் தப்பியோடினார்கள்.

‘கடவுளே எதிரிகளை ஒழிக்க எங்களுக்கு உதவும்’ யோசுவா வேண்டினார். உடனே வானத்திலிருந்து கல்மழை எதிரிகளின் மேல் பொழிந்தது. எதிரிகள் எல்லோரும் கல்மழைக்குப் பலியானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இஸ்ரயேலர்களை கல்மழை ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு கடவுள் எமோரியருக்கு எதிரான போரிலும் இஸ்ரயேலருக்கே வெற்றியளித்தார்.

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்… நன்றி !

எனது நூலுக்கு விருது

xavier11

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது “இயேசு என்றொரு மனிதர் இருந்தார் “ எனும் நூலை கடந்த ஆண்டின் சிறந்த நூலாக “தென்னிந்தியத் திருச்சபையின் கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் தமிழிசைப்பள்ளி அமைப்பினர் “ தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அன்றைய சமூக அரசியல் கலாச்சாரப் பின்னணியில் விவிலிய மொழிக்கு வெளியே விரிவாய் சொன்ன நூல் இது என பல்வேறு தரப்பினரும் மனம் திறந்து பாராட்டியது மனதுக்கு நிறைவளித்தது.

இந்த நூலை எழுதுவதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. பைபிளில் இயேசுவின் வாழ்க்கையை நான்கு நற்செய்தியாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் வெளிப்படையான ஆண்டுக் குறிப்புகள் ஏதும் இல்லை.

இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றைத் தவிர்த்து நற்செய்தியாளர்கள் பல்வேறு செய்திகளை அவர்களுடைய விருப்பப்படி சொல்கின்றனர்.  இந்த செய்திகளின் தொகுப்பில் எந்த வரிசைப்படி எவை வருகிறது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாலான நேரம் செலவானது. பல்வேறு இறையியல் நண்பர்கள், நூல்கள், ஆன்மீக வழிகாட்டிகள் என பலருடைய உதவியே இந்த நூலின் செய்திகளை கால வரிசைப்படி தொகுக்க பெரிதும் உதவியது.

இந்த நூல், இயேசுவின் வாழ்க்கையைத் தெரிந்த பலருக்கும் கூட சில புதிய தகவல்களைச் சொன்னது எனுமளவில் நிறைவு தந்தது.

நூலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மனதுக்கு ஆனந்தமளிக்கிறது. இந்த நேரத்தில் நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்துக்கும், நண்பர்கள் பா.ரா, பத்ரி, சொக்கன் ஆகியோருக்கும், உதவிய மற்ற அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்வது அதை விட அதிகமாய் ஆனந்தமளிக்கிறது.

பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது

டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துதலும், மன உளைச்சலும் மனசு முழுக்க நிரம்பி
இருந்தது. இரயில்வே கேட்டைக் கடக்கும்போது ரயிலுக்கு இடையே குதிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிற்கும் போது சட்டென காருக்கு இடையே குதித்து விட வேண்டுமென்றும் மனம் நினைக்கிறது. இன்று அப்படி எந்த எண்ணமும் வரவில்லை. இப்படி அடிக்கடி மனம் அழுத்தமடைகிறது என கண்ணீரோடு தன்னைப் பார்க்க வந்த ஒரு பதின் வயதுப் பெண் சொன்னதாகச் சொல்கிறார் “TeTeenager’s Guide to the Real World” எனும் நூலின் ஆசிரியர் பிரைன் மார்ஷல்.

teen என்னை எப்போதும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு மட்டுமே பார்க்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கிறேன். கெட்ட பழக்கங்கள் எதுவுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர்கள் நம்புவதில்லை. எந்த ஒரு சுதந்திரமும் எனக்குத் தராமல் ஒரு ஒன்பது வயதுக் குழந்தையைப் போல நடத்துகிறார்கள். எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், பெற்றோரின் மீதும் மிகப்பெரிய வெறுப்பு வந்துவிட்டது. என்ன செய்யவேண்டும் என தன்னிடம் பல பதின் வயதுப் பெண்கள் வந்து அழுவதாகக் கூறுகிறார் மருத்துவர் டாக்
ஜெர்ரி.

பதின் வயதுப் பருவம் கலவை உணர்ச்சிகளால் வனையப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றது. இந்த பருவத்தில் தான் கிளர்ச்சி, வளர்ச்சி, பயம், தைரியம், ஆர்வம் என என்னென்ன உடலியல், உளவியல் மாற்றங்கள் உண்டோ அவை அனைத்துமே வந்து பற்றிக் கொள்கின்றன எனலாம்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பதின் வயது என்பது கண்ணாடிக் குடுவை போன்றது. கர்வமும், அதீத துணிச்சலும் அவர்களை ஆட்கொள்ளும் அதே வேளையில் சமூகத்தின் வல்லூறுக் கண்களுக்கும் அவள் தப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறாள்.

பதின் வயதுப் பருவத்தில் தான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தம் கொள்வதும், தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனும் எண்ணம் அடிக்கடி தலை தூக்குவதும் அதிகம் என்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார்.

இந்த எண்ணங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு நாள் தற்கொலை செய்ய வேண்டும் என மன அழுத்தம் அலைக்கழிக்கும், ஆனால் மறு நாள் தெளிந்த வானம் போல எல்லாம் மறைந்து விட்டிருக்கும். இவையெல்லாம் இந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றங்கள் என்பதை பெண்களும், பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த பருவத்தைக் கையாள என்பது இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் லாவகம் தேவை.  ஏனெனில் இந்த பருவம் தான் பாதையைத் தேர்வு செய்யும் பருவம். போதைக்கு அடிமையாகும் மக்கள் தங்களுடைய முதல் சுவடை பதின் வயதில் தான் பதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. சரியான வழிகாட்டுதலும், பெற்றோரின் கண்காணிப்பும் பதின் வயதினருக்கு மிக முக்கியமாகிப் போனதன் காரணம் இது தான்.

வாழ்க்கையில் பல விஷயங்களின் “முதல் சுவடு” இங்கே தான் வைக்கப்படுகிறது.  அந்த முதல் சுவடை லாவகமாய் வகைப்படுத்துவது தான் பெற்றோரின் கவலைக்குரிய பணியாக இருக்கிறது.

பெண்களின் உடல் ரீதியான வளர்ச்சியும் அவர்களை பல வேளைகளில் மன அழுத்தத்துக்கும், பயத்துக்கும், குழப்பத்துக்கும் இட்டுச் செல்கிறது. காரணம் பாலியல் ஹார்மோன்கள் உடலுக்குள் பாய்வது அந்தப் பருவத்தில் தான். இயற்கையின் இந்த மாற்றம் உடலுக்கும் மூளைக்குமிடையேயான தகவல் பரிமாற்றங்களை இன்னோர் தளத்துக்கு மாற்றி வைக்கிறது.

இரவில் தூக்கமில்லாமல் புரள்வதோ, அல்லது விடிந்தபின்னும் எழும்பாமல் தூங்குவதோ என இவர்களுக்குள் இனம் புரியாத மாற்றங்களை இந்த மாற்றங்கள் விதைத்து விடுகின்றன.
அதீத கோபம் சிலரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. யார் என்ன செய்தாலும், பேசினாலும் கோபமடைவது இந்த பருவத்தில் பலருக்கும் வரக்கூடிய நிலை மாற்றம். தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்கலாம். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்களுடைய கோபத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

புதியதை அறியும் ஆர்வம் சிலருக்கும், புதியதால் விளையும் பயம் மற்றவர்களுக்கும் என இந்த வளர்ச்சி மாற்றங்கள் பதின் வயதுப் பெண்களை அலைக்கழிக்கின்றன.

பன்னிரண்டு வயதுக்குப் பிறகு தான் மூளை முதன் முதலாக ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுகிறது என்கின்றனர் உளவியலார்கள். இந்த காலகட்டத்தில் தான் இவர்கள் சமூகத்தின் தவறான கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர். ஊடகங்கள், திரைப்படங்கள், இணையம் என இவர்களுக்காய் தூண்டிலுடன் காத்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

அதுவரை மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என அலையும் களங்கமற்ற ஒரு சிறுமி, சட்டென்று அழகு குறித்த கவலையும், அடுத்தவர்களின் அபிப்பிராயங்களின் மீதான கவலையையும் கொள்கிறாள்.

எனவே பதின் வயதுப் பெண்ணை எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் தரக் குறைவாகப் பேசவே பேசாதீர்கள். அவர்களுடைய நடவடிக்கை, தோற்றம், திறமை எதைக் குறித்தும் இருக்கலாம் இந்த உரையாடல்.

தன் எடை மீதான கவலை பெண்களை பற்றிக் கொள்ளும் காலமும் இது தான். ஆரோக்கியமான வழிகளை யோசிப்பதை விட, தனது எடை அதிகரித்து விட்டதே அல்லது குறைந்து விட்டதே என பெண்கள் வருந்துவது பதின் வயதின் படிகளில் தான்.

கண்ணாடிகளில் அதிக நேரம் செலவிடும் இந்த பதின் வயதினர் தாங்கள் அழகாய், அங்கீகரிக்கப்படும் விதமாய் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென எப்போதும் நினைப்பார்கள். எனவே இவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவர்களுடைய தோற்றத்தைக் குறித்து கிண்டலடிப்பதே கூடாது! அது அவர்களுடைய தன்னம்பிக்கையையும், நிம்மதியையும் குலைத்து வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடக் கூடும்.

பல பதின் வயதினர் தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்வதில்லை. தேர்விலானாலும் சரி, காதலில் ஆனாலும் சரி, போட்டிகளில் ஆனாலும் சரி தோல்வி வந்தால் துவண்டு சட்டென உடைந்து போகும் மனம் பதின் வயதுக்கு உரியது. இதைப் பெற்றோர் உணர்ந்து செயல்படுதல் அவசியம். தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் நீங்கள் குழந்தையை முழுமையாய் அங்கீகரித்துக் கொள்கிறீர்கள் எனும் நம்பிக்கையை அவர்களிடம் ஊட்ட மறவாதீர்கள்.

குறிப்பாக மகளிடம் அவளுடைய பள்ளிக் கூட நிகழ்வுகளையும், அன்றைய தினம் நடந்தவற்றையும் பகிரச் சொல்லிக் கேளுங்கள். அவர்கள் பேசினால் முழுமையாய் ஈடுபாட்டுடன் கேளுங்கள். பெற்றோர் மகளுக்கிடையேயான உறவு வளர்ச்சிக்கும், மகளுக்கு எங்கேனும் ஏதேனும் உதவி தேவையா என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளவும் இந்த வெளிப்படையான உரையாடல் வழிவகுக்கும்.

வீடுகளில் ஏதேனும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியிருந்தால் உங்கள் பதின் வயது மகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். தன்னை பெரியவளாய் கவனிக்கிறார்கள், தனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதே உங்கள் பதின் வயது மகளை உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கையான மனநிலைக்கும் இட்டுச் செல்லும்.

பதின் வயதுப் பருவம் பக்குவம் வந்த தங்களைப் போல எதையும் ஒழுங்குடனும், திட்டமிட்டும் செய்யும் வயதல்ல என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். சீப்பை இடம் மாற்றி வைப்பதற்கெல்லாம் சத்தமிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, சில குறைகளை ஏற்றுக் கொண்டு பக்குவமாய் அவர்களைப் பழக்கவேண்டும்.

அதை விடுத்து குழந்தைகள் தங்களிடம் குறைகள் இருப்பதாகப் பேசினால், அவற்றுக்கு மாறாக மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவே பேசவேண்டும். சலிப்பு ஏற்படும் வரை குழந்தைகள் கேட்டால், சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே சூட்சுமம்.

இந்த மாற்றமும், இது தரும் கவலையும் இலட்சியங்களின் மீதான பார்வையை விலக்கி விடும் அபாயமும் உண்டு. எதிர்காலத்தைக் குறித்த பயமற்றுத் திரிவது, எதிர்காலத்தைக் குறித்து பயந்து நடுங்குவது என இருவேறு மனநிலை இவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அதீத ஈகோ இந்த வயதில் இந்த வயதினரை ஆக்கிரமித்திருக்கும். சிலருக்கு தான் எதற்கும் பயனற்றவள் எனும் சிந்தனை மேலோங்கியிருக்கும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் பதின் வயதினரை எள்ளி நகைக்காமல் இருப்பதே நல்லது.

அடிக்கடி பதின் வயதினரை பாராட்டுவதும், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்துப் பாராட்டுவதும் என தன்னம்பிக்கையை பெற்றோர் ஊட்ட வேண்டும். அவர்கள் ஏதேனும் நல்ல செயல் செய்யும் போதெல்லாம் வெகுவாய் ஊக்கப்படுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தக் காலகட்டம் அதீத தன்னம்பிக்கையையும், உயர்வு உணர்வையும் பெரும்பாலும் பதின் வயதுக்குள் புகுத்தி விடுகின்றன. இன்னும் குறிப்பாக பதின் வயதின் கடைசிக் கட்டத்தில் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் முடிவெடுப்பதெல்லாம் வெகு சரியான முடிவுகள் எனவும் அசைக்க முடியாத ஒரு உறுதி இவர்களுக்குள் முளைவிடும்.

தன்னோடு அன்பாகப் பழகிய மழலை சட்டென தன்னை வெறுக்கிறாளோ எனும் நினைப்பே பெற்றோரின் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பெற்றோரின் கவனமான அணுகுமுறை அவசியப்படுகிறது.

உண்மையில் தன் மகள் தன்னை வெறுக்கவில்லை. அவள் தனது வாழ்வில் பதட்டமான ஒரு பாதையைக் கடந்து கொண்டிருக்கிறாள் என உணர்ந்து கொள்ளவேண்டும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய காலம் இது என்பதைப் புரிந்து கொள்ளல் வெகு அவசியம் என்கிறார் அட்லாண்டா மன நல மருத்துவர் நாடின் காஸ்லோ. ஆற்றோடு நீந்தி ஆற்றின் போக்கை மாற்ற வேண்டுமே தவிர ஆற்றுக்குக் குறுக்கே வலுக்கட்டாயமாய் அணைகள் கட்டுதல் கூடாது. அவை  இழப்புகளைச் சம்பாதித்து விடக் கூடும்.

குறிப்பாக பல்வேறு விதமான தகவல்களைக் கேட்கிறது பதின் வயது. ஆனால் கடைசியில் எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் குழம்புகிறது. நண்பர்கள் செய்கிறார்கள் என்பதனாலேயே பல பழக்கங்களுக்கு அடிமையாவது இந்த இடத்தில் தான். உதாரணமாக 80 விழுக்காடு மக்கள் புகைப் பழக்கத்தை ஆரம்பிப்பது பதின் வயதில் தான் !

அமெரிக்காவில் உடலுறவு கொள்ளாமல் பள்ளி இறுதியாண்டை முடிப்பது என்பது அவமானச் செயலாக பள்ளி மாணவர்களால் பேசப்படுகிறது. இந்தத் தவறான பழக்கம் பெண்களை பெரிதும் பாதித்து பலரை ஏதும் அறியாப் பருவத்திலேயே தாய்மையடையவும் வைக்கிறது.

இன்றைய நவீன உலகம் நமது படுக்கையறைகளில் கூட கணினியை கொண்டு வைத்திருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் கைகளில் ஒரு ஆறாவது விரலாய் கைப்பேசியும் தொங்கிக் கொண்டிருக்கிறது. பதின் வயதுப் பருவம் இந்த நவீனத்தின் மூலம் தவறான வழிகளுக்குள் வழுக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது.

கணினி பயன்படுத்தும் நேரத்துக்கு வரையறைகள் விதிப்பதும், கணினியை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் என பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதேபோலதான் தனது பதின்வயதுக் குழந்தையின் நண்பர்கள் குறித்த விழிப்புணர்வும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளையின் நண்பர்கள் மோசமானவர்களாக இருப்பதாக கவலைப்படுகின்றனர். பதின் வயதுப் பிள்ளைகள் தங்கள் நண்பர்களை பெற்றோரே கூட திட்டுவதை விரும்புவதில்லை என்கிறார் உளவியல் நிபுணர் பார்டெல். தன் குழந்தையின் நலனில் அக்கறை கொள்கிறோம் என்பதையே முதன்மைப் படுத்தி குழந்தைகளிடம் பேசவேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

பதின் வயதுப் பருவம் குழப்பங்களும், பதட்டங்களும் நிறைந்த பருவம். இந்த பருவத்தினர் கவனிக்க வேண்டியவை.

பதின் வயதினர் தங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழப்பங்கள் அலைக்கழித்தால் நம்பிக்கைக்குரிய, பக்குவம் வாய்ந்த ஒரு நபரிடமோ, மருத்துவரிடமோ தனது குழப்பங்களைப் பேசலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் தெளிவைத் தர முடியும்.

மனம் குழப்பத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒரு டைரியை எடுத்து நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, எந்தெந்த அழுத்தங்களில் இருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் எழுதுங்கள். எழுதும் போது மூளை தெளிவடையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

நடங்கள். ஒன்றோ இரண்டோ கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்துவிட்டு திரும்பி வாருங்கள். உங்கள் மனம் தெளிவடைந்திருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏதாவது வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடினமாய் உழையுங்கள். அல்லது நீண்ட நேரம் உழையுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலையாய் இருந்தால் மிகவும் நல்லது. இது உங்கள் கவனத்தை முழுக்க முழுக்க மாற்றிவிடும்.

பிறருக்கு உதவுங்கள். அடுத்தவர்களுடைய குறைகளைக் கேட்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும் உங்கள் பிரச்சினையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

சுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும்.

அறிவியல் புனை கதையா – அதை எப்படி எழுதறது ? என யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 2001 ல் அம்பலம் இதழில் “இன்னொரு வகை இரத்தம்” எனும் எனது அறிவியல் புனைக் கதை ஒன்று பிரசுரமானது. அறிவியல் புனைக் கதை சுஜாதா அவர்களின் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தது ஆனந்தம் அளித்தது.
.
எனினும், அறிவியல் புனைக் கதைக்கு இலக்கணங்கள் ஏதும் உண்டா என இப்போது நான் குழம்புவது போலவே அப்போதும் குழம்பினேன். எனது குரு தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தார்.
.
எனக்கு கவிதைகள் தான் செல்லக் குழந்தைகள். சிறுகதையெல்லாம் எழுதத் தெரியாது என்பதே இன்றைக்கும் என்னைப் பற்றிய எனது நிலைப்பாடு. கல்கியிலெல்லாம் நிறைய பல கதைகள் வெளிவந்த பின்னும் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரலியா என என்னை உரிமையுடன் கடிந்து கொள்ளும் எனது குருவினால் தான் சிறுகதைகள் அவ்வப்போது எழுதுகிறேன்.
.
இருக்கட்டும், 2005ம் ஆண்டு மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனைக் கதைப் போட்டியில் சுஜாதா நடுவராகக் கலந்து கொண்டார். நானும் ஏலி ஏலி லாமா சபக்தானி என்று ஒரு கதையை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கதைக்கு முதல் பரிசு தருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
.
அதற்குப் பிறகும் அறிவியல் புனைக்கதைகளெல்லாம் நிறைய எழுதவில்லை. ஒன்றோ இரண்டோ அங்கும் இங்கும் எழுதியதோடு சரி. நண்பர் சிரில் அலெக்ஸ் நடத்திய போட்டியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனது நவீனன் சிறுகதைக்கு மூன்றாவது பரிசு அளித்திருப்பதைப் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது.
.
ஒருவேளை எனக்கு அறிவியல் புனைக்கதை எழுத வருகிறதோ ? பாவம் வாசக நண்பர்கள் !!!

“பெண்ணே நீ” கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு

“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம். இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ? எத்தனை மருந்துகள் போலியானவை ? எனும் கேள்வியை எப்போதாவது நாம் எழுப்பியதுண்டா ?

மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லையெனில் மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தரமாட்டார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை எந்த நோயாய் இருந்தாலும் மருந்தகங்களில் இருப்பவர்களே மருத்துவர்களாகி ஏதேனும் நான்கைந்து பெயர் தெரியாத மாத்திரைகளைத் தந்து விடுகின்றனர். இவை உண்மையிலேயே பயனுள்ளவை தானா ? உடலுக்கு நலமளிப்பவை தானா ?

இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனம் சொல்லும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதாவது உலக அளவில் புழக்கத்தில் உள்ள மருந்துகளில் சுமார் பதினைந்து முதல் இருபது விழுக்காடு மருந்துகள் போலியானவையே என அது அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே போலி மருந்துகள் கலந்துள்ளன. ஆனால் வளரும் நாடுகளிலோ சுமார் இருபத்தைந்து முதல் முப்பது விழுக்காடு என இந்த புள்ளி விவரங்கள் மூர்ச்சையடைய வைக்கின்றன.

வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே போலி மருந்துகளும், தரமற்ற தயாரிப்புகளும் அதிகமாய் தயாராவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. அதன் கூற்றை நிரூபிக்க புள்ளி விவரக் கணக்குகளையும் சமர்ப்பிக்கின்றது.

உலக அளவில் பின் தங்கிய நாடுகளில் தயாராகும் மருந்துகளில் 25 விழுக்காடு மருந்துகள் போலியானவையாம்.

நைஜீரியாவிலும், பாகிஸ்தானிலும் தயாராகும் மருந்துகளில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மருந்துகள் தரமற்ற மாற்று மருந்துகள் எனவும், சீனாவில் சில மருந்துகள் சுமார் 85 விழுக்காடு போலியாய் இருப்பதாகவும், நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சுமார் 37 விழுக்காடு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் போலியே என்றும், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் உலவும் மலேரியா தடுப்பு மருந்துகளில் 90 விழுக்காடு போலியே என்றும் இந்த அதிர்ச்சிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உலகெங்கும் ஒவ்வோர் வினாடியும் சுமார் 35 இலட்ச ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வினாடிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கான போலி மருந்துகள் விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் போதும் இந்தக் கள்ளச் சந்தையின் பலத்தைக் காட்ட !

இந்தியாவிலும் சுமார் 10 விழுக்காடு மருந்துகள் போலியானவையே என்பதே உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை சொல்லும் செய்தி. ஆனால் உண்மையில் இது இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

போலி மருந்துகள் என்பவை உண்மையான மருந்துகளைப் போல தயாராக்கப்பட்டு, தரம் குறைந்ததாகவோ, தரமற்றதாகவோ, ஊறு விளைவிப்பதாகவோ இருக்கின்றன என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

போலி மருந்துகளால் என்ன தான் பிரச்சனை ?

முதலாவதாக இந்த போலி மருந்துகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்த மருந்துகளால் நோய் குணமாகும் வாய்ப்பு மிகவும் குறைவு

இரண்டாவதாக இந்த போலி மருந்துகளில் மருத்துவ மூலக்கூறுகள் தேவையான அளவில் இல்லாமல் இருப்பதால் குறைவாகவோ, அதிகமாகவோ உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நோயின் வீரியம் அதிகரிக்கவோ, நோயாளிக்கு வேறு பக்க விளைவுகள் வரவோ வழி வகுக்கிறது.

மூன்றாவதாக இந்த மருந்துகளில் நிறைய விஷத் தன்மையுடைய பொருட்கள் கலந்திருப்பதால் இவை நோயாளியின் உயிருக்கே ஆபத்தாய் முடிகின்றன.

உதாரணமாக ஹெய்தியில் ஒருமுறை இருமல் மருந்து எண்பத்தொன்பது பேரைப் பலிவாங்கியது, சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தில் இருந்த டைஎத்தலின் கிளைகோல் எனும் வேதியல் பொருளே இதன் காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
நைஜீரியாவில் ஒருமுறை 2500 பேர் மரணம், வங்கதேசத்தில் 109 பேர் மரணம், சமீபத்தில் இந்தியாவில் பல குழந்தைகள் மரணம் என இந்த துயரக் கணக்கு உலகெங்கும் விரிவடைகிறது.

சீனாவில் ஆண்டுதோறும் சுமார் மூன்று இலட்சம் பேர் தரம் குறைந்த போலி மாற்று மருந்துகளினால் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த போலி மருந்துகளால் சமூகத்திற்கு நேரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தின் சிறு சிறு துணிக்கைகள் எனக் கொள்ளலாம்.

பாலியல் சார்ந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் புழக்கத்தில் உள்ளவற்றில் பெரும்பாலானவை போலி மருந்துகளே. ரகசியமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் எனும் மக்களின் எண்ணமும், பாலியல் கல்வி இல்லாத சூழலும், பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய தரமற்ற பாலியல் சார்ந்த மருந்துகளின் அசுர வளர்ச்சிக்கு வழிகோல்கின்றன. இத்தகைய மருந்துகளுக்கான விளம்பரங்களையும், உரையாடல்களையும் ஊடகங்கள் மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

இன்னொன்று எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இல்லாத இத்தகைய பெரிய நோய்கள் போலி மருந்து தயாரிப்போருக்கு ஒரு வரமாய் மாறியிருக்கிறது. உலகமே மூளையைக் கசக்கும் எயிட்ஸ் நோய்க்கான மருந்தை நமது தெருக்கள் கூவிக் கூவி விற்கின்றன !

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என எல்லா கண்டங்களிலும் போலிகள் புகுந்திருந்தாலும், ஆசியக் கண்டம் தான் இந்த போலி மருந்துகளின் ஊற்றாய் இருக்கிறது என மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் மட்டும் சுமார் 500 அனுமதியற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியிருந்தது.

தென்மேற்கு ஆசியாவிலுள்ள கம்போடியாவில் சுமார் 2800 போலி மருந்து விற்பனை நிலையங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற மருந்துகளும் உலவுகின்றனவாம். தாய்லாந்தில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 8.5 விழுக்காடு போலி தானாம்.

ஈராக்கின் மீது அமெரிக்கா போர்தொடுக்க ஆரம்பித்த பின் அங்கே சுமார் 70 விழுக்காடு மருந்துகள் காலாவதியானதாகவோ, தரமற்ற தயாரிப்பாகவோ, போலியானதாகவோ தான் கிடைப்பதாக ஈராக்கின் அமைச்சர் அதில் முஸின் தெரிவிக்கிறார்.

போலி மருந்துகள் இப்படி உலக நாடுகளையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கையில் இன்னொரு அச்சுறுத்தலாய் உலவுகின்றன தடை செய்யப்பட்ட மருந்துகள்.

இதிலுள்ள துயரம் என்னவென்றால் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் ஏராளமாய், வெகு சகஜமாய் இந்தியாவில் கிடைக்கின்றன என்பது தான். இந்தியா தான் போலிகளின் புகலிடமாயிற்றே எங்கும் போலி எதிலும் போலி என்பது மருத்துவத்திலும் இரண்டறக் கலந்து விட்டது.

ஆடைகளிலோ அல்லது பிற பொருட்களிலோ போலிகள் இருந்தால் பண விரயம் எனுமளவில் அது நின்று விடுகிறது. ஆனால் மருந்துப் பொருட்களில் போலித்தனம் நுழையும்போதோ அது உயிரையே அழித்து விடுகிறது. எனவே தான் பிற போலித்தனங்களைப் போல இலகுவாக மருத்துகளிலுள்ள போலித்தனங்களை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இந்தியாவில் சுமார் 515 மருந்துகள் 3000 வேறு வேறு பெயர்களில் உலவுவதாகவும் இவை உலக நாடுகள் பலவற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும் இந்திய மருந்து கடைகளில் எந்த விதமான தடையுமின்றி கிடைப்பதாகவும் மருத்துவம் சார்ந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள் புற்று நோய், பக்கவாதம், பார்வையிழப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களை வரவழைக்கும் வலிமை கொண்டவையாம்.

பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜோர்டன், மலேஷியா, நார்வே, ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளைக் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி இந்திய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதன் மூலம் பல இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு அடைகின்றனர் என்பதும் அதிர்ச்சியூட்டும் செய்திகளாகும்.

உதாரணமாக ஜப்பானில் சுமார் பத்தாயிரம் பேரை பார்வையிழக்கவும், உடலுறுப்புகள் செயலிழக்கவும் வைத்த மருந்துகளும், உலக அளவில் சுமார் 15 ஆயிரம் பேரை உயிரிழக்கவும் வைத்த மருந்துகளும் இன்றும் இந்தியச் சந்தையில் அச்சமின்றி உலவுகின்றன. இவை சர்வதேச அரங்கில் நிராகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

நவால்ஜின், டி கோல்ட், விக்ஸ் ஆக்சன் 500, நிம்சுலைட், அனால்ஜின் போன்ற சர்வ சாதாரணமாய் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்துகள் எல்லாம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் தடை செய்யப்பட்ட மருந்துகளே என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? இதில் இன்னொரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் பல இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என்பதே !

ஒரு மருந்தைத் தடை செய்யும் அதிகாரம் மருத்துவத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வுக்கு உண்டு. ஒரு மருந்தை தடை செய்யும் முன் ஒரு மருத்துவக் குழு அந்த மருந்தை முழுமையாக ஆராய்கிறது. அந்த மருந்தில் உள்ள வேதியல் பொருட்கள், அவை உடலுக்கு ஏற்படுத்தக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றை முழுமையாக ஆராய்ந்தபின் அந்த மருந்தைத் தடை செய்வதா, வேண்டாமா எனும் அறிக்கையை ஆலோசனைக் குழுவுக்கு அளிக்கிறது. ஆலோசனைக் குழு அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது.

அப்படித் தடை செய்தாலும் அவை விற்பனைக் கூடங்களுக்கு திருட்டுத் தனமாக வந்து சேர்ந்து விடுகின்றன. கடந்த மாதம் பஞ்சாபில் ஒரு மருந்து கடையிலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன. ஒரு கடையில் நிலமையே இப்படியெனில் இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மருந்து கடைகளில் எத்தனை கோடி ரூபாய்களுக்கான தடை செய்யப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவோ எனும் பதட்டம் இயல்பாகவே எழுகிறது.

மருந்தை வாங்க வரும் நோயாளிகள் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை, எவை அங்கீகரிக்கப்பட்டவை என்பதை அறிந்திருக்க முடியாது. அந்தத் தார்மீகக் கடமை மருந்தைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கும், மருந்தை வினியோகிக்கும் மருந்து கடைகளுக்கும் உண்டு. தடை செய்யப்பட்ட மருந்துகளை பரிந்துரை செய்யாமலும், அவற்றை விற்பனை செய்யாமலும் இருக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருக்கிறதா எப்பதைக் கவனித்தால் ஆபத்திலிருந்து தப்பலாம். தனிநபர்களைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான வழிமுறை அல்ல. ஆனால் இந்த சோதனையை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் செய்ய முடியும்.

தடை செய்யப்பட்டவை எவை என்பன போன்ற தகவல்களை பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் எளிதில் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் பல எல்லைகளிலும் இருக்கும் சிறு சிறு மருத்துவமனை மருத்துவர்களை இந்தத் தகவல் சென்றடைவதில்லை. எனவே அவர்களுக்கு எந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதில் தெளிவில்லை. பெரும்பாலும் இவையெல்லாம் மருத்துவ இதழ்கள், அறிக்கைகள் மூலம் மட்டுமே மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவை எல்லோரையும் சென்றடையாமல் இருப்பதில் வியப்பில்லை.

நேரடியாக வாங்கும் கடைகளிலேயே இத்தகைய போலிகளின் புழக்கம் இருக்கும் போது இணையம் மூலமாக வாங்கும் மருந்துகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இணையத்தில் மருந்துகள் வாங்கும்போது தரமற்ற மருந்துகளே ஐம்பது விழுக்காடு நேரங்களில் வழங்கப்படுகின்றனவாம். முடிந்தவரை இணையம் மூலம் மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இணையம் மூலமாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட விலையைப் பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த போலி மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அங்கீகாரமற்ற மருந்துகள் போன்றவை சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்பு மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதல் போன்றது என்பதை உணர்தல் அவசியம். இதைத் தடுக்க அரசு ரீதியான திட்டமிட்ட செயல்பாடு மிக அவசியம்.

அனைத்து மருத்துவ மனைகளும் தரக்கட்டுப்பாடுக்குள் வரவேண்டும். டிரேட்மார்க் இல்லாத மருத்துவமனைகள் இயங்க அரசு அனுமதி மறுக்க வேண்டும். இந்த மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தரமான நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறவேண்டும். அந்த நிறுவனங்களின் தயாரிப்புத் தரத்தையும் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.

போலி மருந்துகள், அனுமதியற்ற மருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஒரு பயங்கரவாத, கொலைக் குற்றத்துக்குரிய அல்லது அதற்கும் மேற்பட்ட வீரியத்துடன் இந்த குற்றங்கள் அணுகப்பட வேண்டும். போலி மருந்துகளுக்கு எதிரான விசாரணைகள் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது என்பதால் விரைந்து முடிக்கப்படவும் வேண்டும்.

போலி மருந்துகள், தரமற்ற தயாரிப்புகள் இவற்றுக்கான அனுமதிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சுயநல நோக்கங்களுடன் அனுமதி வழங்கியவர்கள் இவர்களுக்கு எதிராய் சட்டம் கடுமையாய் பாய வேண்டும்.

கடுமையான தரக்கட்டுப்பாடு அமைப்பும், அதில் தனிநபர் நலம் கலக்காத அணுகு முறையும் வேண்டும்.

போலி மருந்து குறித்த புகார்கள் எளிமையாக்கப்படவேண்டும். போலியா ? அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் இருந்தால் சந்தையிலும், தயாரிப்பு நிலையங்களிலும், இறக்குமதிகளிலும் இந்த போலி மருந்துகளை ஒழித்தல் சாத்தியமே.
நைஜீரியா இத்தகைய போலி மருந்துகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாடு. 2001 ல் சுமார் 41 விழுக்காடு மருந்துகள் அங்கே போலியாகவே உலவி வந்தன. நைஜீரிய அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அந்த விகிதம் கணிசமாய் குறைந்து 15 விழுக்காடு எனுமளவுக்குக் குறைந்திருக்கிறது. பதிவு செய்யப்படாத மருந்துகள் 68 விழுக்காடிலிருந்து 19 விழுக்காடாக வீழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் மற்ற வளரும் நாடுகளுக்கான ஒரு முன்னுதாரணம் எனலாம்.

சரி இந்த போலி மருந்து விஷயத்தில் நமது பங்கு என்ன ?

முதலில் விளம்பரங்களின் வசீகரத்தைக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து என்றால் கண்டிப்பாக உயர் தரம் என முடிவு கட்டாமல் இருப்பது. இரவு நேரங்களில் தொலைக்காட்சியில் பேசும் “வாலிப வயோதிக அன்பர்களே” அழைப்புகள் உண்மை என நம்பி ஏமாறாமல் இருப்பது. போலிகளை எந்த விதத்திலும் ஊக்குவிக்காமல் இருப்பது என பல வழிகளில் நமது பங்காற்றல் இருக்க முடியும்.

போலி மருந்துகளை தெரிந்தே வாங்கும் போது நாம் அந்த குற்றத்தின் பங்கு தாரர்கள் ஆகின்றோம் என்பதையும், நாமும் பணத்தைக் கொடுத்து அந்த குற்றத்தையும் அது தொடர்பாய் எழக்கூடிய தொடர் குற்றங்களையும் ஊக்குவிக்கிறோம் என்பதையும் உணரவேண்டும்.

போலி மருந்துகளை விற்கும் மருந்தகங்கள், தங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதால் இந்த பிழையைச் செய்கின்றனர். இத்தகையோர் சமூகத்தைச் சிதைக்கும் கொடும் செயலைச் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும்.

வளரும் நாடுகளிலுள்ள மக்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் தொடர் நோய்களுக்கு இலக்கானவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். தினசரி வாழ்க்கையை இழுக்கவே திராணியற்ற மக்கள் லாபமானதை வாங்கவே விரும்புவர். அவர்களுடைய பொருளாதார இயலாமையை மூலதனமாக்கி ஆபத்தான போலிகளை அவர்கள் தலையில் கட்டாமல், மருந்தகங்கள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

போலி மருந்துகளைக் கண்டறிவது கடினம். எனிலும் நம்மால் முடிந்த அளவுக்கு போலியில்லாத மருந்து தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்பே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கும்போது அளவிலோ, வடிவத்திலோ, நிறத்திலோ, எழுத்துகளிலோ ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால் வாங்காதீர்கள். வேறொரு மருந்து கடையை நாடுங்கள். வாங்கிவிட்டால் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்கலாம்.

பெரும்பாலும் போலிகள் மாத்திரைகளில் தான் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. எனவே மாத்திரைகள் வாங்கும் போது அதிக கவனம் செலுத்துங்கள்.

மருந்துகளின் ஆயுளைக் கண்டிப்பாகப் பாருங்கள். அதன் கடைசி நாள் தாண்டியிருந்தாலோ, அதன் மீது புதிதாக ஸ்டிக்கர் ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தாலோ, நாள் திருத்தப்பட்டிருந்தாலோ அதை வாங்காதீர்கள்.
மருந்துகள் “காலாவதி” நாள் இல்லாமல் இருந்தால் அது நிச்சயம் போலி மருந்து என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
மருந்துகளில் தயாரிப்பு நிறுவனத்தைக் குறித்த விவரம் இல்லாமல் இருந்தாலும் அது போலியே.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த போலி மருந்துகள் ஆயிரம் சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலி மருந்துகள் பிரச்சினை சமூகத்தைக் கரையானாக அரித்து, சமூகத்தின் நலனையே கெடுக்கும் பிரச்சனையாகும்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அரசு தீவிர நடவடிக்கைகள் எடுப்பது, ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் தார்மீகக் கடமையை உணர்ந்து செயல்படுவது என கூட்டு முயற்சி கைகூடினால் சுகாதாரமான சமூகம் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை.

நாட்டாமைக்கும் அடி சறுக்கும்

சாயவே சாயாது என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் இன்றைக்கு ஒட்டு மொத்த உலகமே உன்னிப்பாகவும், வியப்பாகவும் பார்க்கக் கூடிய செய்தியாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிமிர்ந்து நின்ற, பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டி வந்த பிரபல நிறுவனங்கள் பல தலையில் துண்டைப் போட்டு எங்களிடம் பணமில்லை, திவாலாகிவிட்டோம் என அறிவித்து வீதிக்கு வந்திருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களை யாரேனும் வாங்கி புதிதாய் நிர்வாகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு நூறு டாலர்கள் என இருந்த லேமேன் பிரதர்ஸ் நிறுவன பங்குகள் இருபது பைசா எனுமளவுக்கு பங்குகளில் வீழ்ச்சியைச் சந்தித்து திவால் ஆகிவிட்டேன் என அறிவித்திருக்கிறது. இப்படி திவாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பத்து !

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் மட்டுமே சுமார் ஐம்பதாயிரம் வேலையில்லாப் பட்டதாரிகளால் நிரம்பி விட்டதாம். காரணம் பொருளாதார வீழ்ச்சி, பங்கு வர்த்தகத்தின் பாதாளத்தை நோக்கிய பாய்ச்சல். எப்போதும் பாரி வள்ளலாய் தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தனது இன்னொரு முகத்தை இப்போது தான் வெளிக்காட்டியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்குவதில் ஆரம்பித்தது இந்தப் பிரச்சனையின் மையம். பொதுவாக அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமெனில் உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கவேண்டும், கூடவே கிரெடிட் கிஸ்டரி (கடன் வரலாறு) எனப்படும் உங்களுடைய பணம் கட்டும் திறன், நேர்மை இவையெல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லையேல் வங்கி கடன் வழங்காது.

அப்படியெனில் புதிதாய் அமெரிக்காவில் குடியேறும் மக்கள் வீட்டுக் கடன் வாங்குவது குதிரைக் கொம்பு. கூடவே கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்களுக்கும் கடன் கிடைக்கவே கிடைக்காது. இந்த நிலையில் சரியான கடன் வரலாறு மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு உதவியது “சப்பிரைம்” எனப்படும் மூன்றாம் நிறுவனத்தின் / நபரின் பரிந்துரை வழக்கம்.

இந்த சப் பிரைம் நிறுவனம் எப்படியாவது தனது வாடிக்கையாளருக்குக் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும், கடன் வரலாறு சரியாய் அமையாதவர்களுக்கும் வீட்டுக் கடனை பரிந்துரை செய்து வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொடுத்தது.

இந்த முறையில் வங்கிக்கு அதிக வட்டி வரும் வாய்ப்பு இருப்பதனால் வங்கிகள் இதை ஊக்கப்படுத்தின. இதன் மூலம் புதிதாய் புலம் பெயர்ந்தவர்கள், பணத்தைத் திரும்பக் கட்ட வழியில்லாதவர்கள், சரியான வேலை இல்லாதவர்கள், கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்கள் என பலரும் வீடுகளை வாங்கிக் கொண்டனர்.

இந்தியாவின் வீட்டுக் கடன் வட்டி வழங்கும் முறைக்கும், அமெரிக்காவின் வீட்டுக் கடன் வழங்கும் முறைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இங்கே பெரும்பாலும் 100 விழுக்காடு பணத்தை வீட்டுக் கடனாய் பெறமுடியாது. கூடவே வட்டி விகிதமும் வங்கியை முடக்காத அளவுக்கு 13 விழுக்காடு வரை இருக்கும்.

நம்முடைய வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம் என ஏதோ ஒன்று வங்கியிடம் ஒப்படைக்கப்படும். எனவே எப்படியேனும் வீட்டுக் கடனை முடிக்க வேண்டும், பத்திரத்தை மீட்கவேண்டும் என்றெல்லாம் நமது மனம் படபடக்கும். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் வீடு வாங்கிக் கொள்ளலாம்.

வீடு வாங்கிக் குடியேறியபின் மாதந்தோறும் வாடகை கட்டுவது போல தவணையைச் செலுத்திக் கொண்டிருக்கலாம். அல்லது வெறுமனே வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம். இது ஏழு ஆண்டுகளுக்குத் தான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி இந்தக் கடனை அடைக்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில் வீடுகளை மக்கள் இஷ்டம் போல வாங்க ஆரம்பித்தனர். வங்கிகள் லாபம் பார்த்தன. காலம் மாறியது. அமெரிக்காவிலும் பொருளாதாரச் சிக்கல்கள் தலை தூக்கின. மக்கள் வேலை இழந்தனர். வேலை இழந்த மக்களால் வீட்டுக் கடனை திரும்பக் கட்ட முடியவில்லை. இங்குள்ளது போல அமெரிக்காவில் மக்களை மிரட்டியெல்லாம் பணம் வாங்க முடியாது.

இந்த முதலீட்டு நிறுவனங்களின் பெரும்பகுதிப் பணம் வீட்டுக் கடனாக மக்களிடம் சென்று சேர்ந்தது. ஆனால் வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. பணம் கட்ட முடியாத மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பவற்றை எல்லாம் அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறத் துவங்கினர். அல்லது எங்களால் முடியாது என வங்கிக்கு கடிதம் அனுப்பி விட்டு காணாமல் போயினர்.

வங்கிகள் திகைத்தன. பரவாயில்லை. இருக்கும் பணத்தைக் கட்டுங்கள், அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுங்கள் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தன. முடியவில்லை.

அரசு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துப் பார்த்தது, அதுவும் பெருமளவில் பயனளிக்கவில்லை.

சிறு சிறு மீன்களின் கூட்டம் பெரும் கப்பலையே சாய்ப்பது போல அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் முதுகெலும்பை, இந்த சப் பிரைம் கடன் வழங்குதல் உடைத்தே விட்டது.

இப்போது சில மாகாணங்களில் வீடுகள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒரு டாலர் மட்டும் தந்து விட்டு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் வீட்டின் மீதிருக்கும் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்துங்கள் என வங்கிகள் பொதுமக்களிடம் கெஞ்சத் துவங்கியுள்ளன.

நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்ததும் பங்குச் சந்தை படு வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் பலர் பங்குச் சந்தையின் படு பயங்கர வீழ்ச்சியினால் தற்கொலை செய்து கொண்டு மடிந்தும் போனார்கள்

கடந்த சூலை மாதத்தில் முதலீட்டு வங்கிகள் ஐயோ எங்களுக்கு சுமார் 435 பில்லியன் அளவுக்கு நஷ்டமாகிவிட்டதே என புலம்பி அறிக்கை சமர்ப்பித்தன. சுமார் எழுநூறு பில்லியன் எனுமளவில் பணத்தை அமெரிக்க அரசு முதலீடு செய்தால் தான் முதலீட்டு வங்கிகளின் தலை தப்பும் எனும் நிலமை.

இந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு வழி தெரியாமல் விழிக்கிறது. ஒரு நிறுவனத்தைக் காப்பாற்ற 80 பில்லியன் டாலர் பணத்தை அரசு செலவழித்தது. அதே நிலமையில் இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன. அவையெல்லாம் அரசின் பண முதலீட்டை அல்லது கடனுதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

ஆனால் மக்களின் பணத்தை எடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றுவது என்பது அமெரிக்க மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி என அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க வர்த்தகத்துக்குள் நுழைந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேட்டு வைத்து விடக் கூடும் எனும் அச்சமும் அமெரிக்க அரசிடம் நிலவுகிறது.

இந்த நெருக்கடியினால் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் இதில் சில நன்மைகளும் விளைய வாய்ப்பு உண்டு.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவை அவுட்சோர்சிங் எனப்படும் வேலையை பிற நாடுகளுக்கு மாற்றும் நிலைக்கு தள்ளும். அப்படிப்பட்ட சூழலில் இந்தியா நிறைய வேலை வாய்ப்பைப் பெறும். அதே நேரம், நிறுவனங்கள் மூடப்பட்டாலோ, தங்கள் எல்லைகளைக் குறைத்துக் கொண்டாலோ இந்திய கணினி நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

இன்றைய நிலையில் இந்தியாவின் முன்னணி கணினி நிறுவனங்கள் அனைத்துமே இந்த அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலை இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

வெறும் வீட்டுக் கடன் பிரச்சனை எனும் அளவைத் தாண்டி அமெரிக்க அரசின் பலவீனமான பல முடிவுகளும் இந்த சிக்கலுக்கு ஒரு காரணம் என்கின்றனர். குறிப்பாக ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா செலவிடும் பணம் மாதம் ஒன்றுக்கு 16 பில்லியன் டாலர்கள் ! (1 பில்லியன் = 100 கோடி )

பதினாறு பில்லியன் என்பது ஐ.நா வின் ஓராண்டு பட்ஜெட் ! இந்தப் பணத்தை போருக்கு செலவழிக்காமல் இருந்திருந்தால் அமெரிக்காவின் இன்றைய பொருளாதாரத் தேவையை எளிதில் தீர்த்திருக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. கூடவே, கச்சா எண்ணையின் விலை அதிகமாகவும் இந்த போர் ஒரு காரணியாய் இருந்திருக்கிறது.

எப்படியோ உலகுக்கெல்லாம் அறிவுரைகள் வாரி வழங்கிக் கொண்டிருந்த நாட்டாமை அமெரிக்கா இப்போது தீர்ப்புச் சொல்லத் தெரியாமல் திகைக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகியிருக்கிறது !

தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை

அப்பாவின் நினைவாக…

வெறும் நான்கு வருடங்கள் தானா ? ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் என்றல்லாவா நினைத்தேன் என்கிறது மனது. ஒரு வழிகாட்டியாய், தோழனாய், தியாகியாய், கடமை தவறாத அப்பாவாய் என எத்தனையோ பரிமாணங்களைக் காட்டிய தந்தை மறைந்தபின் நாட்கள் சுமை இழுக்கும் கழுதையைப் போல பெருமூச்சு விட்டுத் தான் நகர்கிறது.
.
வரப்புகளில் எனை நடக்கப் பழக்கியதும், சர்ப்பக் குளத்தில் நீச்சல் பழக்கியதும், சமூகத்தில் வாழப் பழக்கியதும், சபைகளிலே பேசப்பழக்கியதும் எல்லாம் எல்லாம் என் தந்தை தான். கிராமத்து மண்ணில் கால் மிதிக்கும் போதெல்லாம் என் அப்பா நடந்து திரிந்த சாலை இது என மனது ஈரமாய் அழுகிறது.
.
இப்படி ஒரு வழிகாட்டியே ஒவ்வோர் குழந்தைக்கும் தேவை எனுமளவுக்கு அப்பாவின் வழிகாட்டுதல் இருந்தது. அதிர்ந்து பேசியதில்லை, ஆனால் அவருடைய பேச்சைத் தட்டவேண்டுமென தோன்றியதில்லை. எப்போதேனும் வயதுக் கோளாறினால் தந்தை சொல் தட்டியபின்னும், பொய் சொல்லிப் பணம் வாங்கிய பின்னும் குற்ற உணர்வு தாங்காமல் அழுதிருக்கிறேன். அப்படிப்பட்ட நேசமே எனக்கும் அப்பாவுக்குமான நேசம்.
.
மங்கலாகவும், எல்லாம் மறந்தது போலவும் தோன்றுகிறது. என்னையே நான் அலசி ஆராயும்போதெல்லாம் எனக்கு இருக்கும் இன்றைய சிந்தனைக்கும், மனதுக்கும் காரணம் என் பெற்றோரே என்பதை துளியளவும் மறுக்க முடியாது.
.
சிறுவயதில் ஒருமுறை நாலணா திருடிக் கொண்டு அதைப் பெருமையாக அப்பாவிடமே கொண்டு காட்டினேன். “எங்கிருந்து எடுத்தே” என்று ஒரே ஒரு கேள்வி தான். பக்கத்து வீட்டிலிருந்து என உண்மையைச் சொன்னேன். அடுத்த வினாடியே கையோடு அழைத்துச் சென்று எடுத்த அதே இடத்தில் வைக்கச் செய்து மன்னிப்பு கேட்க வைத்தார். அப்போது நான் ஒன்றாம் வகுப்பா, இரண்டாம் வகுப்பா தெரியவில்லை. ஆனால் அது தான் கடைசியாய் நான் திருடியது என்பது மட்டும் தெரியும்.
.
அப்போது நான் பதின் வயதுகளில். இரண்டு வீட்டாருக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்பா அங்கே விரைந்தார், கூடவே நானும். அடுத்தவர் மனைவியை தரக்குறைவாய் பேசிவிட்டார் ஒருவர் என்பது தான் பிரச்சனை. அப்பா கொஞ்சம் சாந்தமாய் பேசி பிரச்சினையை முடிக்கப் பார்த்தார். அப்பா ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், ஆலயத்தில் மிக முக்கிய நபராகவும் இருந்ததால் அவருடைய பேச்சுக்கு ஊரில் மரியாதை இருந்தது. ஆனால் அன்றைக்கு இருக்கவில்லை. பிரச்சினையை விடுமாறு அப்பா அறிவுறுத்தினார். “ஒன் பொண்டாட்டி எவன் கூடவோ போனா.. என்று ஒருத்தன் சொன்னா நீ சும்மா இருப்பியா “ என அப்பாவை நோக்கி கோபமாய் கத்தினார் அவர். என் பதின் வயது சுருக்கென சிவந்தது. அப்பாவோ அமைதியாக, “நான் சும்மா தான் இருப்பேன். ஏன்னா நான் மத்தவங்களை விட என் பொண்டாட்டியை நம்புபவன்” என்றார். நான் அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். வியப்பாய் இருந்தது. அந்த சண்டையும் அங்கே நிறைவுற்றது.
.
ஆலயத்தில் சமாதானக் குழு என ஒரு குழு உண்டு. கிராமத்து மக்கள் எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொள்வதனால் உருவான குழு அது. வீடுகளுக்கு இடையே நேரிடும் உறவு விரிசல்களைச் சரி செய்யவும், அனைவரையும் ஒற்றுமைப்படுத்தவும் ஒரு பாலமாக இந்த சமாதானக் குழு செயல்படும். அந்தக் குழுவின் தலைவராக அப்போது இருந்தவர் அப்பா. அது எனது கல்லூரி காலம். ஒருமுறை ஏதோ ஒரு குடும்பச் சிக்கலைச் சரி செய்தது அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்குப் பிடிக்கவில்லை. அவர் சாலையில் நின்று கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் அப்பாவை தரக்குறையாய் பேசத் துவங்கினார். கடைகளில் இருந்தவர்களும், சாலையில் பேருந்துக்காய் காத்திருந்தவர்களும் எல்லோரும் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு பொறுக்கவில்லை. ஆனால் எனது கையை அப்பா அழுத்தமாய் பிடித்திருந்தார், எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல. சுமார் அரை மணி நேரம் அவர் தனி ஒருவராக கத்திக் கொண்டே இருந்தார். பின் அவருக்கே போரடித்திருக்க வேண்டும் பேச்சின் சுருதியைக் குறைத்து விட்டு அப்பா நின்றிருந்த கடைக்கு அருகில் வந்தார். உடனே அப்பா கடைக்காரரிடம் “ஒரு சர்பத் குடுங்க. “ என்று ஒரு சர்பத் வாங்கி கத்திய நபரிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு “ மனசுல என்ன இருந்தாலும் கொட்டிடணும். அப்போ தான் மனசு லேசாகும்.. “ என்றார். அந்த நபர் அதன் பின் பேசவேயில்லை.
.
பெரியவர்களை மரியாதையாய் தான் அழைக்கவேண்டும், ஏழை பணக்காரர் வித்தியாசம் பார்க்கக் கூடாது, பொறுமையே தேவை, உடனடி மன்னிக்கும் மனம் என்றெல்லாம் அவர் கட்டிய மதிப்பீடுகளின் செங்கற்களில் தான் நின்று கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை எனும் கட்டிடம்.
.
அமெரிக்காவுக்குக் கடைசியாய் அப்பா அனுப்பிய கவிதை இது ( கடிதம் தொலைந்து விட்டது. வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன். எனவே எழுத்துப் பிழைகள் இருக்கலாம் ). எத்தனை தொலைவில் நீ இருந்தாலும் என் நேசத்தில் தான் இருக்கிறார் என அவர் அனுப்பிய மடல். இன்னும் என் நினைவுகளில் ஒலிக்கிறது அப்பாவின் குரல் கவிதையாய்.

ദൂര ദേശ അഭിവാശം എങ്കിലും
സ്നേങമെന്നത് അനര്ധമാകുമോ
സുര്യനേരെ തിക്കിലുതിക്കിലും
സാരസങ്ങള് വിടരുന്നതില്ലയോ

2003ம் வருடம் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை எனும் தகவல் வந்ததும் இந்தியா வந்தேன். நல்லவேளை அப்போது அப்பா பிழைத்துக் கொண்டார். அந்த நிம்மதி மூச்சுக்கு ஓராண்டு நீளமே இருந்தது துயரம் ! 2003ல் எழுதிய கவிதை இது. நினைவுகளின் பரணைத் துடைக்கையில் அகப்பட்டது.
.

படுக்கையில் என் பிரபஞ்சம்

அந்த அழைப்பு
இல்லாதிருந்திருக்க வேண்டும்.

என்னை
கிராமத்தின் வரப்புகளுக்கும்,
அமெரிக்காவின்
வியப்புகளுக்கும்
அனுப்பிய தந்தை பற்றிய செய்தி.

மருத்துவப் படுக்கையில்,
வெளிவராத வார்த்தைகளோடும்
எனைக் காணும்
கனவுகளோடும் அப்பா.

அதுவரை
ஒற்றைப் புள்ளிக்குள்
உறங்கிக் கிடப்பதாய்
தோன்றிய உலகம்,
ஏழு கடல்களை
இடையே இணைத்ததாய்
திடீரென விஸ்வரூபம் கொண்டது.

கடுகு வெடித்து
சஞ்சீவி சரிந்ததாய்,
ஒற்றை வரிச் செய்தி எனக்குள்
சில கிரகங்களை
இறக்கி வைத்தது.

நான்
முதல் முறை இறக்கிறேன்.

சிறு வயது முதலே
செலவழிக்காத
என் கண்ணீர்க் கடல்,
இதயத்துக்குள் உடைந்தது.

வினாடிக்குக் கூட
நீளம் உண்டு என்பதை
விஞ்ஞானிகள் சொல்லி
விளங்கிக் கொள்ளாத நான்,
அப்பாவால்
அறிந்து கொண்டேன்.

இரவுகளில் சோகம்
இரட்டிப்பாகும் என்பதும்,
உண்ணாமல் சிலநாட்கள்
உயிர்வாழ முடியும் என்பதும்,
நான்
பகிர வேண்டிய பாசம்
ஏராளம் என்பதும்,
ஆறாவது அறிவுக்கு
அறிவிக்கப்பட்டது அப்போது தான்.

இறக்கை உதிர்க்கா
உலோகப் பறவை,
மீனம்பாக்கம் சரணாலயத்தில்
சரணடையும் வரை
நரம்புகளெங்கும்
நடுங்கும் நயாகரா
நகர்ந்து கொண்டே இருந்தது.

பேரம் பேசாமல்
வாகனம் அமர்த்தியதும்,
சில்லறை வாங்காமல்
சிதறி ஓடியதும் அப்போது தான்.

வயல்களில்
தானியம் தின்னும் பறவையாய்
தாவித்திரிந்த தந்தையை,
கசக்கிப் போட்ட வேட்டியாய்
கட்டிலில் பார்க்கையில்
நசுங்கியது மனசு.

அவர் அருகே
என் புதிய புத்தகம்.
அதை
விரல்களால் மட்டுமே அவர்
வாசித்துப் பார்த்திருந்தார்.

என்னைக் கண்டதும்
கண்களில் பொங்கும்
ஆனந்த அலைகளை
கரைகளுக்கு அனுப்பவே
இயலாத நிலை.

நல்லவேளை,
அப்பா வீடு திரும்பினார்.

பிரார்த்தனைகள்
அப்பாவை
கட்டிலை விட்டுக் கீழிறக்கி
இருக்கையில்
இருக்க வைத்தது.

பிறிதொரு பொழுதில் கேட்டேன்,
மருத்துவமனைக் கட்டிலில்
என்ன பிரார்த்தித்தீர்கள்.

அப்பா சொன்னார்,

அந்த மரண வேதனையை
சகித்துக் கொள்ள இயலவில்லை,
இறைவன்
நெஞ்சு வலிதந்து என்னை
கொன்று விடட்டும்.
என பிரார்த்தித்தேன்.

நான்
இரண்டாம் முறையாய்
இறந்தேன்.

கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்

இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபின் வழிமரபினர் எகிப்திற்குக் குடியேறினார்கள். அங்கு வாழ்ந்து வந்த அவர்கள் எகிப்து அரசர்களினால் அடிமைகளாக்கப் பட்டார்கள். மோசே என்பவரால் அவர்கள் எகிப்தியரின் நானூறு ஆண்டைய அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு, கடவுள் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த கானான் நாட்டை நோக்கி பயணித்தார்கள்.

வழியில் சீனாய் மலையிலிருந்து கடவுளின் பத்துக்கட்டளைகளையும், மற்றும் பல்வேறு ஒழுக்கம் சார்ந்த கட்டளைகளையும் பெற்றபின் மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் கானானை அடைய நாற்பது ஆண்டுகள் ஆயின. அதுவரைக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான, சோகமான பயண அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டை மோசே ஒரு பேழையில் வைத்து மூடினார். அது உடன்படிக்கைப் பேழை என்று அழைக்கப்பட்டது. அந்தப் பேழை இருக்குமிடமெல்லாம் கடவுளின் பிரசன்னம் அவர்களோடு இருந்தது. அவர்கள் போகும் வழியில் அவர்கள் மேலே ஒரு பெரிய நிழல் மேகமானது போய்க் கொண்டே இருந்தது. அந்த பெரிய நிழல்மேகம் எங்கெல்லாம் நின்றதோ, அங்கெல்லாம் இஸ்ரயேல் மக்கள் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். மேகம் மீண்டும் பயணப்படும் வரை கூடாரங்களிலேயே தங்கினர். இவ்வாறு அவர்களுடைய பயணம் நடந்து கொண்டிருந்தது.

இஸ்ரயேல் மக்கள் பன்னிரண்டு குழுக்களாக இருந்தார்கள். மோசே இஸ்ரயேல் மக்களில் போருக்குத் தகுதியுடைய மக்கள் அனைவரையும் கணக்கெடுக்க கடவுளால் அறிவுறுத்தப் பட்டார். அதன்படி மோசேவும், அவரோடிருந்த ஆரோன் என்பவரும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குலத்தில் இருபது வயதுக்கு மேற்பட்ட, போருக்குத் தகுதியான அனைவரையும் கணக்கெடுத்தார்கள். அவர்கள் மொத்தம் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐநூற்று ஐம்பது பேர் இருந்தார்கள். கானான் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நிறைய யுத்தம் தேவைப்படும் என்பதை மோசே தெரிந்திருந்தார்.

போருக்குரிய மக்களைக் கணக்கெடுத்தபின் மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒவ்வொருவரை அழைத்து அவர்களை நோக்கி,

‘நீங்கள் கானான் நாட்டுக்குச் சென்று நாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நாட்டு மக்கள் எப்படியிருக்கிறார்கள் ? வலிமையானவர்களா ? வலிமையற்றவர்களா ? அங்கு வளங்கள் அதிகம் இருக்கிறதா ? நாட்டில் ஏராளம் செல்வம் இருக்கிறதா ? மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன ? அவர்கள் கோட்டைகள் கட்டியிருக்கிறார்களா ? இவற்றையெல்லாம் அறிந்து வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அவர்களில் யோசுவா, காலேப் என்னும் இரண்டு பேரும் இருந்தார்கள். உளவாளிகள் அனைவரும் கானான் நாட்டிற்குள் சென்று நாற்பது நாட்கள் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். கானான் நாடு செல்வச் செழிப்பானதாய் இருந்தது. ஏராளமான கனி வகைகள் அங்கே விளைந்திருந்தன. அங்குள்ள திராட்சைக் குலைகள் ஒருவர் தூக்க இயலாத அளவுக்குப் பெரிதாக இருந்தன. நோட்டமிடும் பணி முடிந்ததும், உளவாளிகளில் இருவர் அங்கிருந்த ஒரு பெரிய திராட்சைக் குலையை ஒரு மரக்கொம்பில் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

யோசுவாவும், காலேப்பும் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து ‘ கடவுள் உண்மையிலேயே நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். கானான் நாடு மிகவும் வளமானதாக இருக்கிறது. அங்கு பாலும், தேனும் ஓடுகிறது. அங்கே இல்லாத செல்வங்களே இல்லை. எல்லாவிதமான பழவகைகளும், தாவரங்களும் நன்றாக செழித்து வளர்கின்றன. ஆனால் அங்கே மக்கள் நம்மை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள்’ என்றார்கள். மோசேயும், ஆரோனும் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

ஆனால் யோசேப்பையும், காலேப்பையும் தவிர மற்ற அனைவரும் இஸ்ரயேல் மக்களிடம் வந்து இல்லாததும் பொல்லாததும் சொன்னார்கள்.

‘ஐயோ.. கானான் நாடு நன்றாகவே இல்லை… ‘

‘அங்குள்ள மக்கள் இராட்சஸர்களைப் போல இருக்கிறார்கள், அவர்கள் முன்னிலையில் நாம் வெறும் வெட்டுக் கிளிகளைப்போல இருக்கிறோம்’

‘அங்கே போனால் நாம் அழிவது உறுதி. கடவுள் நம்மை கொல்வதற்காகத் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்’

அவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் மிரண்டு போன விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வர்ணனைகளில் பயந்து போன மக்கள் கூட்டம் கூட்டமாக முணுமுணுக்கத் துவங்கினார்கள்.

‘நாம் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாக இருந்தோம், ஆனாலும் இத்தனைக் கஷ்டம் இல்லை…’

‘எகிப்தில் இருந்தபோது உயிரோடு இருந்தோமே… இப்போது மடியப் போகிறோம் அல்லவா ?’

‘எல்லா விதத்திலும் எகிப்தில் அடிமைகளாய் இருப்பது இதைவிட உயர்ந்தது தான்’

‘நாம் ஒன்று செய்வோம். நாம் மோசேயை விட்டுவிட்டு வேறொரு தலைவரை ஏற்படுத்தி எகிப்திற்கே திரும்பிப் போவோம்’ மக்கள் அனைவரும் முடிவெடுத்தனர்.

இதையறிந்த யோசுவாமும், கலேபும் அதிர்ச்சியடைந்தார்கள்.
‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்து தான் பேசுகிறீர்களா ? நமது அடிமை நிலையை மாற்றிய கடவுளை நம்பாமல் மீண்டும் அடிமை நிலைக்கே போகப் போகிறீர்களா ? உங்களுக்கென்ன புத்தி பேதலித்து விட்டதா ?’

‘எங்களுக்கு உயிர்மேல் ஆசையிருக்கிறது. நாங்கள் சாகவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?’

‘கடவுளை நம்பினால் நீங்கள் அழிய மாட்டீர்கள். கடவுளை நம்பவில்லையேல் எங்கு சென்றாலும் அழிவு உங்களை விட்டு அகலாது’

‘இங்கே கானானில் இராட்சஸர்கள் எங்களைக் கொன்று விடுவார்களே. அதற்காகத் தான் கடவுள் இங்கே கூட்டி வந்தாரா ?’

‘கானானில் இராட்சசர்கள் யாரும் இல்லை. அங்கே இருப்பவர்களும் மனிதர்கள் தான். அங்கே எவ்வளவு வளம் இருக்கிறது தெரியுமா ? அங்கே சென்றால் நமக்கு எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் தாராளமாக வாழமுடியும்’

‘நீ எங்களை ஏமாற்றுகிறாய்… அங்கே போனால் நாம் அழிவது உறுதியென்று தான் உன்நனையும், காலேபையும் தவிர அனைவரும் சொல்கிறார்கள்’ மக்கள் சொன்னார்கள்.

யோசுவா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் அவரை நம்பவில்லை. மோசே இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் மிகவும் கவலைப்பட்டார்.

‘கடவுளே.. நான் இப்போது என்ன செய்வது ? இந்த மக்களை நான் எப்படிச் சமாதானப் படுத்துவது ?’ என்று கடவுளை நோக்கி முறையிட்டார்.

கடவுள் மோசேக்குப் பதிலளித்தார்.
‘மோசே… என்னுடைய வழிகளில் நடக்கும் உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்த மக்கள் என்னுடைய வழிகளை விட்டு விலகிப் போகிறார்கள். யாரும் என்னை நம்பவில்லை. எனவே நான் இந்த மக்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்’

‘ஐயோ… கடவுளே… நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோ மே. எல்லாம் வீணாய்ப் போய்விடும் அல்லவா ? எனவே தயவு செய்து யாரையும் அழிவுக்குட்படுத்த வேண்டாம்’

‘இல்லை.. இந்த மக்களைத் திருத்தவே முடியாது. இவர்கள் அழியட்டும்’ கடவுளின் கோபம் குறையவில்லை.

‘கடவுளே… நீர் இவர்களைக் கொன்றால் அந்த செய்தியை எகிப்தியர்களும் அறிவார்கள். பின் அவர்கள் உம்மைப் பழிப்பார்களே. இஸ்ரயேலரின் கடவுள் இஸ்ரயேலர்களைக் கொல்வதற்காக எகிப்திலிருந்து கூட்டிப் போனார் என்பார்களே’ மோசே சொன்னார்.

மோசேயின் தொடர் வேண்டுதல்களால் கடவுளின் கோபம் குறைந்தது.

‘சரி.. ஆனாலும் இந்த மக்கள் என்னைப் பழித்ததால் , என்னைப் பழித்த, என்னை நம்பாத யாருமே கானான் நாட்டில் நுழையமாட்டார்கள். பன்னிரு தலைவர்களில் யோசுவா, காலேப் இருவரைத் தவிர வேறு தலைவர்கள் யாரும் கானானைக் காணமாட்டார்கள்’ கடவுள் சொல்ல மோசே அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘அதுமட்டுமல்ல. இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கானான் நாட்டிற்கு இந்த மக்கள் நேரடியாகப் போகமாட்டார்கள். இன்னும் நாற்பது ஆண்டுகள் இந்தப் பாலை நிலத்தில் சுற்றித் திரிந்தபிறகு தான் இவர்களை நான் கானான் நாட்டுக்குள் அனுப்புவேன்’ கடவுள் சொன்னார். மோசே அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளின் வாக்கு பலித்தது. கானானை அடையும் முன் இஸ்ரயேலர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தார்கள்.

*

எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து