பருவத்தைக் கொண்டாடு !

இது
மரங்கள் உடைகளின்
நிறம்
மாற்றும் காலம்.
அவசர அவசரமாய்
உடை மாற்றும் காலம்.

பச்சைய நரம்புகளுக்குள்
வர்ணப் பாம்புகள்
நெளிய,
இலைகள் எல்லாம்
வானவில் போர்த்திச் சிரிக்கும்
வர்ணங்களின் மாதம்.

காற்றில் சூரியனின்
வெப்பம் நகர
ஓராயிரம் குளிர்வேகத் தடைகள்
உருவாகும்.

குளிரில் நடுங்கிக் கொண்டே,
வெப்பம் இழந்த வெயிலை
இழுத்துக் கொண்டே,
முகிலிடை ஓடுவான் ஆதவன்.
இலைகளுக்கு இது
குளிர் முத்தக் காலம்.

வெயில் காலம்
மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது,
இப்போது
மரங்கள் திருவிழா
கொண்டாடுகின்றன.

பிரகாசமாய் எரியும்
கடைசித்துளி மெழுகு தான் இது,

இன்னும் சில நாட்கள் தான்,
இலைகள்,
உறவுகளுக்கு விடைகொடுத்து
மர(ண)த்தின் காலடியில்
மண்டியிடும்.

இன்னும் சில நாட்கள் தான்,
இந்தக் குளிரும்
உறைந்து போய்,
மேகத்தை உருக விடாமல் உடைக்கும்.

உடைந்து வீழும்
மேகத் துண்டுகள்,
ஆடைகளைந்த
மரமேனியில் ஆனந்தமாய் கூடுகட்டும்,

வெப்பத்தின் கடைசித் துளிகள்
மரத்தின் மையத்திற்குள் ஓடி
மறைந்து கொள்ள,
பனிவீரர்கள் மட்டும்
ஆட்சியைப் பிடித்து விட்டதாய்
ஊரெங்கும் அறிவிப்பார்கள்.

வெப்பக் குளம் தேடி
தெப்பக் குளம் விட்டு
தவளை மனிதர்கள் தாவுவார்கள்.

தன்னை
அவரசமாய் மிதிக்கும் வாகனங்களைப்
புரட்டி,
தெரியாமல் தீண்டும்
வெற்றுக் கால்களை
விரட்டி,
எங்கும் சில மாதங்கள்
பகிரங்கத் தாக்குதல் நடக்கும்.

அதுவும் சில காலம் தான்,
பதுங்கிய சூரியப் புலி,
மீண்டும் தன்
குகைவிட்டுச் சீறும்
கதிர்களில் வெப்ப வரம்புகள் மீறும்.
அது
குளிர் யானைகளிள்
அகன்ற பாதங்களைக் கீறும்.

மெல்ல மெல்ல,
பனி வீரர் படை பின்வாங்கும்,
மீண்டும் வருவேன் என்னும்
சபதத் துளிகளை
நிற்குமிடத்தில் நிறுத்திவிட்டு.

கிளைகளில் இருக்கும்
பனிக் கூடுகளை
வெப்ப அரிவாள் அறுத்தெறியும்.
சாலைகளை அது
பனியின் கண்ணீர் மொண்டு
கழுவித் துடைக்கும்.

மரங்கள் எல்லாம்,
மீண்டும்
சூரியக் கட்டளைப்படி
சீருடை அணியத் தயாராகும்.
ஆதவன் வந்து
சிம்மாசனத்தில் அமருவான்.

எதுவும் நிரந்தரமாய்
வந்தமராது,
ஆனாலும்
மாற்றங்களை ஏற்கும் வரம் தரப்படும்,
மரங்களுக்கும்
மனிதர்களுக்கும்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

கவிதை : நாகத்தின் நகக் கீறல்கள்

என்னையே நான்
கேட்டுக் கொள்வதுண்டு.
என்
வாக்குவாதங்களின்
உண்மை விகிதங்கள் பற்றி.

முடிவுகளுக்குள்
வேர்விட்டு,
பின்
வாக்குவாதக் கிளைகளை
வெளியிடும் பலகீனம் பற்றி.

என்னை நோக்கி
கடந்துவரும்
கருத்துக் கால்வாய்களை
என்
கால ஆதிக்க அணைகள்
ஏற்றுக் கொள்ள மறுப்பதுண்டு.

என்
முகத்துக்கான
அறிவு ஜீவித் தோற்றம்
அவிழ்ந்து விடுமோ எனும்
அச்சமும்,

அவன் என்ன அறிவு ஜீவியா எனும்
துச்சமும்.
என் மேகங்களை எனக்காய்
தயாரித்துத் தருகின்றன.

தனிமையின் தலையணைகள்
தவறாமல் தகராறு செய்யும்
ஆனாலும்
என் தற்பெருமை பெய்யும்
இதயம் அதன்
தலைகளைக் கொய்யும்.

எல்லோரும்
விவாதிக்கிறார்கள்
என்னைப்போலவே,
அவரவர் வட்டத்துக்ளுள்
பாதுகாப்பாய் நின்றுகொண்டு.

கோடுகளைத் தாண்டினால்
கேடு வரும் எனும்
இதிகாசக் கதையின்
பாதிப்போ என்னவோ ?

அவரவர் நிலங்களில்
அவரவர் விதைகளில்
அவரவர் வேர் விட்டு
அடுத்தவர் தோட்டத்தில்
இலை உதிர்க்கிறார்கள்.

என் இலைகள் மட்டுமே
சரித்திரமாகும் என்று
நானும்
சவால் விட்டுக் கொண்டிருக்கிறேன்.
எல்லோரையும் போலவே.

வாக்களிக்க………………………………………………….

கிமு : சிம்சோன் – வியப்பூட்டும் கதை !

இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரிடம் அடிமைகளாக இருந்த காலம். அங்கு மனோவாகு என்றொருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகளே இல்லை.  தனக்கு ஒரு குழந்தைபாக்கியம் இல்லையே என மனோவாகுவின் மனைவி மிகவும் வருந்தினாள். அவள் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடிக் கொண்டே இருந்தார்.

கடவுளின் தூதர் ஒருநாள் அவளுக்கு முன்பாக வந்து நின்று, ‘ கடவுள் உனக்கு ஒரு குழந்தையைத் தரப் போகிறார். எனவே நீ இன்றுமுதல் திராட்சை ரசமோ, மதுவோ அருந்தக் கூடாது. தீட்டான எதையும் உண்ணக் கூடாது’ என்றார்.

‘எனக்கா ? குழந்தை பிறக்கப் போகிறதா ‘ அவள் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்து கேட்டாள்.

‘ஆம். கடவுள் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அவன் மூலம் பெலிஸ்தியர்களிடம் அடிமையாய் இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலையாக்கப் போகிறார்’ தூதர் சொன்னார்.

அவள் எதுவும் பேசாமல் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூதர் தொடர்ந்தார். ‘ உன் மகன் மிகப் பெரிய வீரனாக இருப்பான். அவன் கடவுளுக்கானவன், அவனுடைய தலையில் சவரக் கத்தி படவே கூடாது’.

அவள் இதையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போய் வீட்டை நோக்கி ஓடினாள். ஓடிச் சென்று தன் கணவனிடம் தான் கண்டதையெல்லாம் கூறினாள். அவனும் வியப்பும், சந்தேகமும் கலந்த மனநிலையில் இருந்தான்.

‘தூதர் என்ன சொன்னார் ?’ மனோவாகு கேட்டார்.

‘நமக்குப் பிறக்கும் மகன் பெரிய வீரனாக, பெலிஸ்தியரை வீழ்த்துபவனாக வருவானாம்’

‘வேறென்ன சொன்னார் ?’

‘ஏதோ சவரக் கத்தி அவன் தலையில் படக்கூடாது என்று சொன்னார்… என்று நினைக்கிறேன்’ அவள் பதில் சொன்னார்.

‘என்ன சொன்னார் என்பதே நினைவில்லையா ? கடவுள் சொன்ன எதையும் நாம் மீறிவிடக் கூடாது. அதற்காக கடவுள் என்ன சொன்னார் என்பதை மிகவும் தெளிவாய் அறிந்து கொள்வது அவசியம்’ என்ற மனோவாகு கடவுளை நோக்கி மன்றாடினார்.
‘கடவுளே இது உமது சித்தமென்றால் எங்களுக்கு இன்னொரு முறை காட்சி தந்து நாங்கள் மகனை எப்படி வளர்த்த வேண்டும் என்பதைச் சொல்லித் தாரும்’ என்று வேண்டினார்.

கடவுள் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தூதர் வழியாகக் காட்சிதந்தார். முதலில் சொன்ன அனைத்தையும் தூதர் அவர்கள் இருவரிடமும் சொன்னார். அவர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த மன நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின் மனோவாகு அங்கேயே கடவுளுக்கு ஒரு ஆட்டுக் குட்டியைப் பலியாகச் செலுத்தினார். அவர் பலி செலுத்திய நெருப்பு மேல்நோக்கி எரிந்தபோது கடவுளின் தூதனும் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் தரையில் வீழ்ந்து கடவுளை வனங்கினர்.

கடவுளின் தூதர் சொன்னபடியே மனோவாகுவின் மனைவி கர்ப்பமானாள். நீண்ட நாட்களுக்குப் பின் முதன் முதலாக கர்ப்பமான மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்தார்கள். மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

பேறுகாலம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். கடவுளின் தூதர் கட்டளையிட்டிருந்தபடி அவனுடைய தலை மயிரை அவர்கள் கத்தரிக்கவே இல்லை.

சிம்சோன் மிகவும் வலிமைசாலியாய் வளர்ந்தான். ஒருநாள் அவன் திமினா என்னும் ஊருக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்னைச் சந்தித்தான். அவளுடைய அழகில் சிம்சோன் தன்னை மறந்தான். மணந்தால் அவளைத் தான் மணக்கவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டார். நேராக பெற்றோரிடம் வந்தான்,
‘அப்பா… எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்’

‘கண்டிப்பாக… உனக்குப் பிடித்திருந்தால் போதும். யாரவள் ? யாருடைய மகள் ?’ தந்தை கேட்டார்.

‘அவள் ஒரு பெலிஸ்தியரின் மகள்’ சிம்சோன் சொன்னான்.

‘என்ன??  பெலிஸ்தியரின் மகளா ? நாம் அவர்களிடம் பெண் கொள்ளவோ, கொடுக்கவோ கூடாது என்பது கடவுளின் கட்டளை தெரியாதா ?’ தந்தை சினந்தார்.

‘எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்…. ‘ சிம்சோன் பிடிவாதமானார்.

‘மகனே… நீ கடவுளிடமிருந்து வந்தவன். பெலிஸ்தியர்களோ விருத்தசேதனம் கூட செய்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களோடு சம்பந்தம் வைப்பது நல்லதல்ல. அது கடவுளுக்கு விரோதமான செயல்’ தந்தை மீண்டும் மீண்டும் சொன்னார்.

சிம்சோனோ,’ நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பேசி முடித்து எனக்கு மனைவியாக்குங்கள். வேறு எதுவும் பேசவேண்டாம் ‘ என்றார். அதுதான் கடவுளின் சித்தம் என்பதை அறியாத பெற்றோர் வருந்தினர்.

சிம்சோன் தன்னுடைய மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணைக் காணச் சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு சிங்கம் ஆவேசமாக சிம்சோனின் மீது பாய்ந்தது. சிம்சோன் சிங்கத்தை தம்முடைய வெறும் கைகளினால் தூக்கி இரண்டாகக் கிழித்து எறிந்தார். அந்த முரட்டுச் சிங்கம் சிம்சோனின் கைகளில் சின்ன ஆட்டுக்குட்டியாகி துடிதுடித்து இறந்தது. சிம்சோன் இதை யாருக்கும் சொல்லவில்லை.

அவர் நேராகச் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் அவரை விரும்பினார். சிறிது நாட்கள் இன்பமான காதல் பேச்சுகளில் செலவிட்டபின், சிம்சோன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். வரும் வழியில் அவர் கொன்று போட்டிருந்த சிங்கத்தின் பிணத்தின் மேல் தேனீக்கள் கூடு கட்டித் தேனடை வைத்திருந்தன. அதை எடுத்துத் தின்றார்.

நேராகத் தந்தையிடம் சென்று,’ அப்பா எனக்கு அந்தப் பெண்னை மிகவும் பிடித்திருக்கிறது, அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நீங்கள் பெண்ணின் தந்தையிடம் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.

சிம்சோனின் தந்தை வேறு வழியில்லாமல் நேராக பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். மணவிழா ஏழு நாட்கள் நடப்பதாக ஏற்பாடு. சிம்சோனின் தோழர்களாக ஊரிலுள்ள முப்பது இளைஞர்களை பெண்ணின் தந்தை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அவனோடு உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.

சிம்சோன் அவர்களிடம்,’ நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். அதன் பதிலை நீங்கள் இந்த விருந்து முடியும் முன் கண்டு பிடித்துச் சொன்னால், உங்களுக்கு முப்பது நாற்பட்டாடைகளையும், முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். ஒருவேளை விடுகதைக்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்காவிடில் நீங்கள் எனக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டும்’. என்றார். அவர்கள் சம்மதித்தனர்.

சிம்சோன் அவர்களிடம்,’ உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது – இதுவே விடுகதை. இதன் பதிலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ என்றார்.

அவர்கள் விடுகதைக்கான விடை தேடி அலைந்தார்கள். மூன்று நாட்களாகியும் அவர்களால் அதன் விடையைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. அவர்கள் நேராக சிம்சோனின் மனைவியிடம்வந்தனர்.

‘உன் கணவன் எங்களுக்கு ஒரு விடுகதை சொன்னான். அதன் விடையைச் சொல்லாவிட்டால் நாங்கள் அவனுக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டுமாம்.’

‘சரி… விடையைக் கண்டு பிடித்தால் ?’

‘அவர் முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தருவாராம்’

‘அப்படியானால் நல்லது தானே ? விடையைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது தானே ?’

‘நாங்கள் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டோ ம், மூளையைக் கசக்கிப் பார்த்துவிட்டோ ம், நிறைய பேரிடம் பேசியும் பார்த்துவிட்டோ ம் யாருக்கும் விடை தெரியவில்லை’

‘அப்படியானால் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்’

‘தோல்வியா ? நீ இந்த மனிதனை வைத்து எங்கள் உடமைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறாயா ? இதற்கு நீ தான் ஒரு பதில் சொல்ல வேண்டும்’

‘நானா ? ‘

‘ஆம். நீ என்ன செய்வாவோ , ஏது செய்வாயோ எங்களுக்குக் கவலையில்லை , எங்களுக்கு அந்த விடுகதைக்கான விடை உடனே தெரியவேண்டும்’ அவர்கள் கோபத்தில் உறுமினார்கள்.

‘சரி கோபப்படாதீர்கள். நான் அவரிடம் கேட்டுச்  அந்த விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்துச் சொல்கிறேன். அவ்வளவு தானே ? இதற்குப் போய் ஏன் கத்துகிறீர்கள் ?’ என்றாள். அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இரவில் அவள் சிம்சோனுடன் தனித்திருக்கையில் சிம்சோனை மயக்கும் வார்த்தைகளால் மயக்கி விடுகதைக்கான விடையைக் கண்டுபிடித்தாள். சிம்சோன் நடந்த அனைத்தையும் விளக்கினார். தன்னை உண்ண வந்த சிங்கத்திடமிருந்தே தனக்கு உணவு கிடைத்ததைச் சொன்னார். அவள் அதை அந்த இளைஞர்களிடம் சொன்னாள்.

ஏழாவது நாள்.

‘எங்கே என்னுடைய விடுகதைக்கான விடை ?’ சிம்சோன் புன்னகையுடன் கேட்டார்.

‘விடைதானே… கண்டுபிடித்து விட்டோ ம்’ அவர்கள் சிரித்தனர் ?

‘அப்படியா ? உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது. இதன் பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதன் விடை எனக்கு மட்டும் தான் தெரியும்’ சிம்சோன் சிரித்தார்.

‘தேனினும் இனியது எது ? சிங்கத்தினும் வலியது எது ?’ நண்பர்கள் சொல்லிவிட்டுச் சிரித்தனர்.

‘நாங்கள் உன் விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்து விட்டோ மே !!! எங்கே எங்கள் பரிசு ? சீக்கிரம் கொடு…’ என்று கூறிச் சிரித்தனர்.

சிம்சோன் கோபமடைந்தான். எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் வெளியே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் என் மனைவிக்கும் இந்த இளைஞர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த ரகசியம் எப்படி வெளியே செல்லும் ? என்று உள்ளுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைமோத சிம்சோன் கடும் கோபமடைந்தார்.

‘உங்களுக்குப் பரிசு தானே வேண்டும். கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி அருகிலுருந்த அஸ்கலோனுக்குச் சென்று கண்ணில் பட்ட முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடையை எடுத்து வந்தார். அதை பந்தயத்தில் வென்ற இளைஞர்களிடம் கொடுத்து விட்டு அதே கோபத்துடன் தன் தந்தையின் இல்லம் நோக்கிச் சென்றார்.

சிம்சோன் கோபித்துக் கொண்டு போனதை அறிந்த பெண்ணின் தந்தை வருந்தினார். தன்னுடைய மகளின் வாழ்க்கை சடுதியில் முடிந்து விட்டதே என்று மனம் உடைந்தார். மகளை வேறு யாருக்காவது உடனே மணமுடித்து வைக்கவேண்டும் என்று நினைத்து மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்த முப்பது பேரில் அழகாய் இருந்த ஒருவனுக்கு அவளை இரண்டாவதாக மணமுடித்து வைத்தார்.

சில நாட்கள் கடந்தன. சிம்சோனால் தன்னுடைய மனைவியைக் காணாமல் இருக்கமுடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே மனம் மாறி தன் மனைவியைக் காணச் சென்றார். அவருக்கு தன்னுடைய மனைவி இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்ட செய்தி தெரியாது. நேராக பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். வாசலில் மாமனார் நின்றிருந்தார்.

‘நில்… எங்கே வந்தாய் ? ‘ பெண்ணின் தந்தை கேட்டார்.

‘என்னுடைய மனைவியைக் காண வந்தேன்…. ‘ சிம்சோன் பதில் சொன்னார்.

‘உன்னுடைய மனைவியா ? அது தான் வேண்டாமென்று உதறிவிட்டு ஓடி விட்டாயே ?’

‘என்னது ? வேண்டாமென்று உதறிவிட்டேனா ? யார் சொன்னது ? நான் அப்படிச் சொன்னேனா ? கணவன் மனைவிக்குள் கோபம் வருவது இயல்புதான்… வழி விடுங்கள் எனக்கு உடனே அவளைப் பார்க்க வேண்டும்’ சிம்சோன் அவசரப் பட்டார்.

‘அன்றைக்கு நீ கோபித்துக் கொண்டு ஓடி விட்டாயே ?’

‘கோபப்படுவது இயல்பு தான். அது எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த விஷயம். இப்போது நான் அவளைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் வந்திருக்கிறேன். இதோ பாருங்கள் பரிசுப் பொருட்கள்… ‘. சிம்சோன் தன்னிடமிருந்த பரிசுப் பொருட்களைக் காட்டியதும் பெண்ணின் தந்தை வருந்தினார். தான் அவசரப்பட்டுத் தவறிழைத்துவிட்டோ ம் என்று உணர்ந்து தலைகுனிந்தார்.

‘மன்னித்து விடு சிம்சோன்…. நீ திரும்பி வருவாய் என்று நினைக்கவேயில்லை’

‘பரவாயில்லை… வழி விடுங்கள். அவள் என் பிரியத்துக்குரியவள். அவளை நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்… அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’ சிம்சோன் சொன்னார்.

‘அவள்…அவள்… இப்போது இங்கே இல்லை…’ தந்தை மெதுவாகச் சொன்னார்.

‘ஓ… வெளியே போயிருக்கிறாளா ? எங்கே போயிருக்கிறாள்  ? எப்போது திரும்ப வருவாள் ?’ சிம்சோன் கேட்டார்.

‘அவள் திரும்ப வரமாட்டாள்….’

‘ஏன் ?….’ சிம்சோன் குழம்பினார்.

‘அவளை நான் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டேன்….’ பெண்ணின் தந்தை இதைச் சொன்னதும் சிம்சோன் மிகவும் ஆத்திரமடைந்தார்.

‘என்ன ? என் மனைவியை நீங்கள் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்தீர்களா ? நீங்கள் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படிச் செய்யலாம் ?’ சிம்சோன் கோபத்தில் கத்தினார்.

‘நீ திரும்பி வரமாட்டாய் என்று நினைத்து நான் இப்படிச் செய்து விட்டேன். உன்னிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்காதது தவறு தான் மன்னித்துவிடு. ஆனால் இதற்காகக் கவலைப்படாதே… அவளுடைய தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் அக்காவை விட மிகவும் அழகானவள். அவளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

அதைக்கேட்ட சிம்சோன் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டார். கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
‘பெலிஸ்தியர்களே… உங்கள் புத்தியைக் காட்டி விட்டீர்களே… உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்’ என்று தங்களுக்குள்ளே கருவிக் கொண்டான்.

அன்றைக்கே அவன் சென்று முந்நூறு நரிகளைத் துரத்திப் பிடித்தான். இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்து அதில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக் கட்டினார். பின் நரிகளை பெலிஸ்தியர்களின் வயல்களுக்குள் ஓடவிட்டார். நரிகள் தீப்பந்தத்தியும் கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டே ஓடியதில் பெலிஸ்தியர்களில் வயல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. மிகப் பெரிய அழிவு அன்று ஏற்பட்டது.

பெலிஸ்தியர்கள் ஆத்திரமடைந்தார்கள். நேராக சிம்சோனின் மாமனார் வீட்டுக்குச் சென்று,’ உங்களால் தான் அந்த இஸ்ரயேலன் எங்கள் தானியங்களை எல்லாம் அழித்தான். எனவே நீங்களும் செத்துத் தொலையுங்கள் என்று சொல்லி சிம்சோனின் மனைவியையும், அவள் தகப்பனையும் வீட்டோ டு தீயிட்டுக் கொன்றார்கள்.

தன் அருமை மனைவி கொல்லப்பட்டதை அறிந்த சிம்சோனின் கோபம் தலைக்கேறியது. ‘பெலிஸ்திய நாய்களே… என்னோடா விளையாடுகிறீர்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்காமல் ஓயமாட்டேன்’ என்று பகிரங்கமாய்க் கூவினார். சிம்சோனின் வலிமையை எல்லோரும் அறிந்திருந்ததனால் யாரும் அவரை நெருங்கவில்லை.

சிம்சோன் பெலிஸ்தியர்களின் கூட்டத்துக்குள் புகுந்தார். சிங்கம் புகுந்த ஆட்டு மந்தையைப் போல அவர்கள் சிதறி ஓடினார்கள். சீறும் சிங்கத்தையே இரண்டாய்க் கிழித்த வலிமையான கைகளினால் அவர் நூற்றுக் கணக்கானோரைக் அடித்தே கொன்றார் சிம்சோன். பின் அங்கிருந்து ஏற்றாம் என்னுமிடத்திற்குச் சென்று அங்குள்ள பாறைப் பிளவு ஒன்றில் தங்கியிருந்தார்.

பெலிஸ்தியர்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் ஒரு நாட்டைப் பிடிக்கப் போவது போல சிம்சோனைப் பிடிக்கப் போனார்கள். நேராக இஸ்ரயேலர்கள் அதிகமாக இருக்கும் நகருக்குப் போய் கூடாரமடித்தார்கள்.

‘ஐயோ… என்னவாயிற்று ? ஏன் போர்வீரர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ இஸ்ரயேலர்கள் பயத்தில் அலறினார்கள்.

‘உங்கள் சிம்சோனை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் பெலிஸ்தியர்களை அழித்தது போல இஸ்ரயேலர்களை எல்லோரையும் நாங்கள் அழிப்போம்’ என்று கர்ஜித்தார்கள்.

‘எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நாங்கள் போய் சிம்சோனைக் கட்டி உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம்’ இஸ்ரேலிய மக்கள் வாக்களித்தார்கள்.

‘சரி உடனே போய் சிம்சோனைக் கட்டி இழுத்து வாருங்கள்’ பெலிஸ்தியர்கள் ஆணையிட்டார்கள்.

இஸ்ரயேலர்களில் மூவாயிரம் பேர் ஒன்று கூடி சிம்சோன் இருக்கும் பாறைப்பிளவுக்குச் சென்றார்கள்.

‘சிம்சோன்… பெலிஸ்தியர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் என்பதை மறந்து விட்டாயா ? அவர்களுக்கு எதிராகவே நடக்கிறாயே ? இதனால் நாம் எல்லோருமே மிகப் பெரிய இக்கட்டில் மாட்டியிருக்கிறோம்.’ மக்கள் சொன்னார்கள்.

‘அவர்கள் எனக்குச் செய்தது உங்களுக்குத் தெரியாதா என்ன ? நான் அவர்களைப் பழி வாங்கியே தீருவேன். ‘ சிம்சோன் சினம் குறையாமல் பேசினார்.

‘சிம்சோன்… தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேள்.. உன்னை நாங்கள் பெலிஸ்தியரிடம் ஒப்படைக்காவிடில் நாங்கள் எல்லோரும் சாவது உறுதி. இப்போது உன் இன மக்களான எங்கள் உயிர் உன்னிடம் தான் இருக்கிறது. தயவு செய்து எங்களைக் காப்பாற்று’ என்றார்கள்.

சிம்சோன் யோசித்தார். ‘சரி.. என்னால் உங்கள் உயிர் போகவேண்டாம். என்னை நீங்கள் கயிற்றினால் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படையுங்கள். ஆனால் நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது ‘

‘சிம்சோன்… ஆண்டவர் மீது ஆணை. உன்னை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோ ம். உன்னைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைப்போம். அவ்வளவே… ‘ என்றனர்.

சிம்சோன் ஒத்துக் கொண்டார். அவர்கள் சிம்சோனைக் கயிறுகளினால் பிணைத்துக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கூட்டிக் கொண்டுபோனார்கள். உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் பெலிஸ்தியர்களின் முன்னால் நிறுத்தப்பட்டார் சிம்சோன். பெலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

சிம்சோன் சிரித்தார்.’ ஏன் ஆரவாரம் செய்கிறீர்கள் மூடர்களே.. என்னையா கட்டிப் போடுகிறீர்கள்’ என்று சொல்லி உடலை முறுக்கினான். உடனே கட்டப்பட்டிருந்த கயிறுகளெல்லாம் அறுபட்டுத் தெறித்தன. அங்கே கிடந்த ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கையிலெடுத்து கூடிநின்ற பெலிஸ்தியர்களை மூர்க்கமாகத் தாக்கினார். அங்கேயே அவர் கையில் சிக்கி ஆயிரம் பேர் இறந்தார்கள். சிம்சோன் பெலிஸ்தியர்களின் கையில் சிக்காமல் தப்பினார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார்கள். அவர் காசா நகரிலுள்ள ஒரு விலைமாதுவின் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் நகரின் மிகப் பிரம்மாண்டமான வாசல் கதவை அடைத்து அதனருகே காவல் இருந்தார்கள். எப்படியும் சிம்சோன் இந்தக் கதவைத் தாண்டாமல் வெளியே போக முடியாது. இங்கே வைத்து அவனைக் கொன்று விடவேண்டும் என்று சத்தமில்லாமல் பதுங்கி இருந்தார்கள்.

சிம்சோன் நள்ளிரவில் விலைமாதின் வீட்டை விட்டு வெளியே வந்தார். நகரின் வாசலருகே வரும்போது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் மீது ஏறிக் குதிக்கவும் முடியாது ! அந்த அளவுக்கு  உயரமானது. சிம்சோன் அந்த வாசலருகே வந்ததும் பதுங்கியிருந்தவர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். சிம்சோன் அசரவில்லை, இரண்டு கைகளாலும் நகரின் கதவைப் பெயர்த்து எடுத்தார். தாக்க வந்த கூட்டம் நடுநடுங்கி பின்வாங்கியது. சிம்சோன் அந்த பிரம்மாண்டக் கதவைத் தலையில் சுமந்து கொண்டே நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்குப் போனார்.

பெலிஸ்தியர்களால் சிம்சோனை நெருங்கவே முடியவில்லை. சிம்சோன் சோரேக்கு ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் தெலீலா என்னும் பெண்ணைக் காதலிக்கிறார் என்னும் செய்தி பெலிஸ்தியர்களுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணை வைத்து சிம்சோனின் வீரத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

பெலிஸ்திய சிற்றரசன் தெலீசாவை அணுகி அவளுக்கு ஆசை காட்டினர்.

‘நீதான் சிம்சோனைக் காதலிக்கும் தெலீசாவா ?’

‘ஆம் …. அது நான் தான்…’

‘உன்னைப் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கிறாய்… ஆனால் உன்னிடம் வசதி இருப்பது போலத் தெரியவில்லையே … உனக்கு ஏராளமான வெள்ளிக்காசு தந்தால் வேண்டாம் என்று சொல்வாயா என்ன ?’

தெலீசா பிரகாசமானாள்,’ எதற்காக நீங்கள் எனக்கு வெள்ளிக்காசு தருகிறீர்கள் ?’

‘சிம்சோன் மிகவும் வலிமையானவன் என்று தெரியும். அவனுடைய பலவீனம் என்ன என்பதும், எதில் அவனுடைய சக்தி அடங்கியிருக்கிறது என்பதையும் நீ கண்டறிந்து சொல்ல வேண்டும்… அவ்வளவு தான்’

‘இது மிகப் பெரிய பணியாயிற்றே… சிம்சோனிடம் உண்மையை அறிந்து கொள்வது மிகவும் கஷ்டம்….’ தெலீசா முரண்டு பிடித்தாள்.

‘ஐநூறு வெள்ளிக்காசு தந்தால் ?….’ சிற்றரசன் ஆசை காட்டினான்.

‘ஐநூறு போதாதே…. அதிகம் தந்தால் முயன்று பார்க்கலாம்’ தெலீசா சொன்னாள்.

‘சரி ஆயிரம் வெள்ளிக்காசு தருகிறேன்….’ சிற்றரசன் சொன்னான்.

‘ஆயிரம் போதாது…. ஆயிரத்து இருநூறு வெள்ளிக்காசு தந்தால் அவனுடைய பலம் எங்கே இருக்கிறது ? அவனுடைய பலவீனம் என்ன என்பதையெல்லாம் நான் கண்டறிந்து சொல்வேன்’ தெலீசா சொன்னாள்.

சிற்றரசன் ஒத்துக் கொண்டான்.

அன்று இரவு தெலீசா சிம்சோனுடன் மஞ்சத்தில் கொஞ்சுகையில் மெல்லக் கேட்டாள்.
‘சிம்சோன்… உன்னுடைய வலிமை கண்டு நான் பிரமிக்கிறேன்…உங்கள் வலிமை எதில் இருக்கிறது ? உங்களை அடக்கவே முடியாதா ?’

சிம்சோன் சிரித்தார்,’ ஏன் கேட்கிறாய் ?’

‘இல்லை … நான் உன்னுடைய ஆசை நாயகியல்லவா ? எனக்குத் தெரியாத ஒரு ரகசியம் உம்மிடம் இருக்கிறதே என்று தான்….’ தெலீசா இழுத்தாள்.

‘அதெல்லாம் பெரிய விஷயமில்லை … உலராத ஏழு நார்க்கயிறுகளால் என்னைக் கட்டினால் அவ்வளவு தான் நான் எழும்பவே முடியாது’ என்று சொன்னார்.

தெலீசா அன்று இரவே ஏழு நார்க்கயிறுகளால் அவனை இறுக்கிக் கட்டினாள். பின்
‘சிம்சோன்…சிம்சோன்… எழுந்திரு இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ என்று கத்தினாள்.

சிம்சோன் எழுந்து கைகளை விரித்தான். கட்டப்பட்டிருந்த கயிறுகள் எல்லாம் நூல் போல உடைந்து தெறித்தன.

‘எங்கே பெலிஸ்தியர்கள்’ சிம்சோன் பதட்டமாய்க் கேட்டான்.

‘நான் சும்மா தான் சொன்னேன்… நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். பச்சை நார்க்கயிறுகள் உம்மைக் கட்டிப் போடவில்லையே…’ தெலீசா சிணுங்கினாள்.

‘உண்மையில் நீ… புதிய இரண்டு நார்க்கயிறுகளால் என்னைக் கட்ட வேண்டும்…. உலராத ஏழு நார்க்கயிறுகள் என்பது நான் சொன்ன பொய்’ சிம்சோன் சிரித்தார்.

தெலீசா கொஞ்சினாள். அன்று இரவு சிம்சோன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவள் புதிய இரண்டு கயிறுகளால் அவனைக் கட்டினாள். கட்டிவிட்டு முதல் நாள் கத்தியது போலவே கத்தினாள். சிம்சோன் எழுந்து உடம்பை முறுக்கியதும் கட்டுகள் எல்லாம் அறுந்து தெறித்தன.

தெலீசா மீண்டும் சிணுங்கினாள்,’ எப்போதும் என்னிடம் பொய்தான் சொல்கிறீர்கள். புதிய கயிறுகள் கூட உம்மைக் கட்டிப் போடவில்லையே.. உண்மையைச் சொல்லுங்கள் ‘

‘உண்மையைச் சொல்வதானால் என்னுடைய தலையில் இருக்கும் ஏழு ஜடைகளையும் நெசவு நூல் பாவுடன் பின்னிவிட்டால் போதும். என்னுடைய வலிமைகள் எல்லாம் போய்விடும்’ சிம்சோன் சொன்னார்.

தெலீசா அவ்வாறே செய்துபார்க்க அதுவும் பொய் என்று அறிந்து கொண்டாள்.
அதன் பின் தினமும் அவரை நச்சரித்து வந்தாள். இரவில் மஞ்சத்தில் சிம்சோனிடம் வழக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.

‘என்னை நீங்கள் அற்பமாய் நினைத்து விட்டீர்கள்.. நான் உங்களுக்கு இவ்வளவு உண்மையாய் இருக்கிறேன். நீங்கள் என்னை மதிக்கவேயில்லை’

‘நீ என்னுடைய காதலி. நான் உன்னை என் உயிராய் நினைக்கிறேன்.. நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் ?’

‘நான் உங்கள் உயிரென்பது உண்மையென்றால் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டும்’

‘அது எதற்கு தெலீசா ?’ சிம்சோன் தயங்கினார்.

‘நான் என்ன உங்களைக் கொல்லவா போகிறேன். உங்கள் ரகசியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டீர்கள் என்று மகிழ்வேன்.. அவ்வளவு தான்… ‘சிம்சோனின் மார்பில் அவளுடைய விரல்கள் கோலம் போட்டன.

அவளுடைய கொஞ்சல்களில் மயங்கியும், அவளுடைய திட்டுகளில் வருத்தமுற்றும் சிம்சோன் உண்மையைச் சொல்வதென்று முடிவெடுத்தார்.

‘நான் உண்மையை உனக்குச் சொல்கிறேன்.. ஆனால் நீ யாரிடமும் அந்த ரகசியத்தைச் சொல்லக் கூடாது. அது என்னுடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ சிம்சோன் சொன்னான்

‘நீங்கள் என்னை நம்பலாம். என் உயிரே போனாலும் நான் இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லமாட்டேன்; தெலீசா அவனை மடியில் கிடத்திக் கொஞ்சினாள்.

‘நான் கடவுளால் பிறந்தவன். கடவுளுடைய நசரேயன்… அவருடைய பணியாளன். என்னுடைய தலைமுடியில் தான் என்னுடைய பலமே அடங்கியிருக்கிறது. முடி போனால் என் வலிமையும் என்னைவிட்டுப் போய்விடும்’ சிம்சோன் சொன்னார். தெலீசா அவனை மோகத்தில் குளிப்பாட்டினாள். இரவில் சிம்சோன் அசந்து தூங்கியபோது அவனுடைய தலையை மொட்டையடித்தாள். பின் பெலிஸ்தியர்களுக்கு ஆளனுப்பினாள்.

‘சிம்சோன் எழுந்திரு… இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ தெலீசா கத்தினாள்.

சிம்சோன் எழுந்தார்,’ யார் வந்தால் என்ன எல்லோரையும் அழிப்பேன்’

‘அதற்கு உன்னுடைய தலைமயிர் உன்னிடம் இல்லையே…’ தெலீசா நகைத்தாள்.

சிம்சோன் தன்னுடைய தலையைத் தடவிப்பார்த்து அதிர்ந்தார். ‘ ஐயோ… உன்னை நால் மலை போல நம்பினேனே… இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாயே…’ சிம்சோன் ஏமாற்றப்பட்டதை நினைத்து  அழுதார்.

‘எனக்கு வரப்போகும் வசதிக்காக உன்னுடைய மயிரை மழித்துவிட்டேன் சிம்சோன்… இன்னும் சிறிது நேரத்தில் பெலிஸ்தியர்கள் இங்கே வருவார்கள் தயாராய் இரு…’ தெலீசா சிரித்தாள்.

அதற்குள் பெலிஸ்தியர்கள் படையுடன் வந்து அவரைச் சூழ்ந்தனர். சிம்சோன் பழைய நினைப்பில் ஒருவனை அடித்தார், ஆனால் அந்த அடிக்கு வலு இருக்கவில்லை. அவர்கள் சிம்சோனை ஒரு ஆட்டுக் குட்டியைப் பிடிப்பதுபோல எளிதாகப் பிடித்தார்கள்.

‘நீதான் வீரனா ? பெலிஸ்தியர்களை அழிக்கப் பிறந்தவனா ?’ என்று சொல்லி அவனை அடித்துக் குற்றுயிராக்கினார்கள். சிம்சோன் வலியால் துடித்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடித்து நிறுத்தி அவனுடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். சிம்சோன்  கதறினார். அவரை அவர்கள் சிறையில் அடைத்து சங்கிலிகளால் பிணைத்தனர். அவரைக் கேலிப்பொருளாக்கி மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் அழுதுகொண்டே மாவரைத்துக்கொண்டிருந்தார். அவரை பெலிஸ்தியர்கள் அவ்வப்போது அழைத்து சபையில் நிற்கவைத்து அவமானப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிம்சோன் நிராயுதபாணியாய் நின்றார்.

மொட்டையடிக்கப் பட்டிருந்த அவருடைய தலைமுடி வளரத் துவங்கியது ! பெலிஸ்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை. தலைமுடி வளர வளர சிம்சோன் தான் இழந்த வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனைத் தங்கள்வசம் ஒப்படைத்த அவர்களின் கடவுளுக்கு மிகப் பெரிய விழா எடுப்பதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் ஒன்றுகூடினார்கள்.

‘சிம்சோனை அழைத்து வாருங்கள். வீராதி வீரனை நாம் அவமானப் படுத்துவோம்’ பெலிஸ்தியர்கள் சொல்லிச் சிரித்தார்கள்.

சிம்சோன் அழைத்துவரப்பட்டார். மக்களெல்லாம் குழுமியிருந்த மிகப்பெரிய மண்டபத்தின் நடுவே நிற்கவைக்கப் பட்டார்.

‘வீராதி வீரனே…. எங்கே உன் வீரம் ?’ பெலிஸ்தியர்கள் சொல்லிக் கொண்டே அவரை அடித்தார்கள். சிம்சோன் தடுமாறி விழுந்தார்.

‘என்னால் நிற்க முடியவில்லை… தயவு செய்து என்னை ஒரு தூணில் என்னை சாய்த்து நிறுத்துங்கள்…’ சிம்சோன் பரிதாபமாகக் கேட்டார்.

‘பெலிஸ்தியர்களைச் சாய்க்கும் வீரனைத் தூணில் சாய்த்து வையுங்கள்…. ‘ என்று சொல்லி எல்லோரும் பலமாகச் சிரித்தார்கள்.

அவர்கள் சிம்சோனை இழுத்து, ‘இதோ இந்த இரண்டு தூண்களையும் பிடித்துக் கொள்’ என்று சொல்லி அவருடைய வலது கையை ஒரு தூணிலும், இடது கையை இன்னொரு தூணிலுமாக இரண்டு பெரிய தூண்களில் பிடித்து வைத்தார்கள். வைத்துவிட்டு அவரை எள்ளி நகையாடினார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் ஆண்டவரை நோக்கி உருக்கமாய் மன்றாடினார்.
‘ஆண்டவரே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பழைய பலத்தைத் தாரும். இந்த பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்க எனக்கு உதவிசெய்தருளும்’ என்று வேண்டினார்.

கடவுளின் அருள் அவர்மீது வந்திறங்கியது. அவருடைய முழு வலிமையும் அவருக்குள் திரும்ப வந்தது.
‘பெலிஸ்தியர்களைக் கொல்வதற்காக என் உயிரைக் கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் தன் முழுபலத்தையும் இறக்கி இரண்டு தூண்களையும் பலமாய்ச் சாய்த்தார்.

தூண்கள் இரண்டும் சாயத் துவங்கின. மண்டபத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திகிலடைந்தார்கள். அதற்குள் மண்டபத்தின் கூரை மொத்தமாய் அவர்கள் மேல் விழுந்து நசுக்கியது. மண்டபம் தரைமட்டமானது. அனைவரும் அதே இடத்தில் இறந்தார்கள்.

சிம்சோனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

சிம்சோனின் வழியாக கடவுள் தங்களை பெலிஸ்தியரிடமிருந்து மீட்டார் என்று இஸ்ரயேலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழிஷில் வாக்களிக்க….

கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.

மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.

மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.

முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.

நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.

பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

கி.மு : இப்தா, A Shocking Story !

 

இப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான்.

‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி தோபு என்னும் நாட்டில் குடியேறினார்

சிறிது காலம் சென்றபின் அம்மோனியர்கள் இஸ்ரயேலரின் மீது படையெடுத்தார்கள். அந்நாட்களில் நகரில் மக்களை ஒருங்கிணைத்து அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு வலிமையான தலைவன் இல்லை. அம்மோனியர்களை எப்படி எதிர்ப்பது ? யாரைக் கொண்டு அவர்களோடு போரிடுவது என்று பெரியவர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் இப்தாவைக் கூட்டி வருவது என்று முடிவெடுத்து இப்தாவைத் தேடிச் சென்றனர்.

‘இப்தா… இஸ்ரயேல் மக்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது. அம்மோனியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அம்மோனியரோடு போரிட எங்களுக்கு ஒரு தலைவன் வேண்டும். அதற்கு நீ மட்டும் தான் தகுதியானவன். எங்களுடன் வந்துவிடு’ பெரியவர்கள் சொன்னார்கள்.

‘நன்றாக வாழ்ந்தபோது என்னை ஒரு நாயைப் போல அடித்துத் துரத்தினீர்கள். இப்போது கஷ்டம் என்றவுடன் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களா ? என்னால் முடியாது’ இப்தா மறுத்தார்.

‘நாங்கள் என்ன செய்வது உன்னுடைய சகோதரர்கள் தான் உன்னை எதிர்த்தார்கள். நாங்கள் யாரும் உன்னை எதிர்க்கவில்லையே  ‘

‘ எதிர்க்கவில்லை தான். ஆனால் என் சகோதரர்கள் என்னை அவமானப் படுத்தி அடித்து விரட்டியபோது நீங்கள் யாரும் சமாதானம் செய்து வைக்க முன்வரவில்லையே ?’

‘இப்தா… பழைய கதைகள் இப்போது எதற்கு ? இப்போது நீ வந்தால் உன்னை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. உன்னையே நாங்கள் எங்கள் தலைவனாகவும் அமர்த்துவோம். நீ வந்து எங்களை வழிநடத்து’ பெரியவர்கள் மீண்டும் கேட்டனர்.

‘இல்லை. எனக்குத் தலைவனாகும் விருப்பம் இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போதும். உங்கள் தயவு வேண்டாம்’

‘இப்தா மறுக்காதே. இது நம்முடைய இஸ்ரயேல் குலத்துக்கே வந்த சவால். இதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நீ வரவில்லையென்றால் நம்முடைய குலமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. தயவு செய்து பழைய வருத்தங்களை மனதில் வைத்திருக்காமல் எங்களுக்கு உதவு’ வந்தவர்கள் தொடர்ந்து இப்தாவை வற்புறுத்தினார்கள்.

இப்தா யோசித்தார். ‘ சரி… நான் வருகிறேன். கடவுள் என்னோடு இருந்தால் நான் அவர்களை வெல்வேன். அவர்களை நான் வெற்றிகொண்டால் உங்கள் தலைவனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். சம்மதம் தானே ?’

அனைவரும் ஒத்துக் கொண்டனர்
‘நீ வரவேண்டும். அவ்வளவு தான். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்து தரத் தயாராக இருக்கிறோம். நீ சொல்வதையெல்லாம் கேட்கவும் உடன்படுகிறோம் ‘ அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.

இப்தா பெரியவர்களுடன் ஊருக்குள் வந்தார். வந்தவுடன் அவர் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. முதலில் ஒரு தூதரைக் கொண்டு சமாதானப் பேச்சுகளைத் துவங்கினார்.

‘உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இருந்ததில்லையே… ஏன் நீங்கள் எங்களோடு போரிடத் துடிக்கிறீர்கள்’ இப்தா அம்மோனியருக்கு சமாதானத் தூது அனுப்பினார்.

‘இது எங்கள் நிலம்.. முன்பு எங்களிடமிருந்து தான் இஸ்ரேலர்கள் இந்த நிலத்தை அபகரித்தார்கள். எனவே நாங்கள் இதைப் போரிட்டு மீட்போம். மீண்டும் நாங்களே இங்கு வாழ்வோம்’

‘இல்லை.. நீங்கள் நினைப்பது தவறு. இந்த நிலத்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலிருந்து மோசேயினால் மீட்டு வரப்பட்ட மக்களுக்குக் கடவுளே கொடுத்தார். இதை நீங்கள் அபகரிக்க நினைக்காதீர்கள். அது கடவுளுக்கு எதிரான செயல். போர் வேண்டாம் சென்று விடுங்கள்’

‘ஓகோ… கடவுள் கொடுத்தாரா ? நீங்கள் எங்கள் முன்னோர்களை வீழ்த்தி எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை நாங்கள் உங்களை வீழ்த்துவதன் மூலம் மீட்போம். போர் நடைபெறப் போவது உறுதி. உங்கள் கடவுள் உங்களுக்குத் தந்ததை எங்கள் கடவுள் இப்போது எங்களுக்குத் தரப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ அம்மோனியர் தலைவன் ஏளனமாய் பதில் சொன்னான்.

‘கடைசியாக என்ன சொல்கிறீர்கள் ? போரா சமாதானமா ?’ இப்தாவின் தூதர் கேட்க. போரைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மோனியர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

இப்தாவும் போருக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.
போருக்குச் செல்லும் முன் இப்தா கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்தார்.

‘கடவுளே… இதோ நீர் என்னோடு இருக்கிறீர் என்னும் தைரியத்தில் தான் நான் போருக்குச் செல்கிறேன். இந்தப் போரில் நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால் வெற்றிபெற்றுத் திரும்பும் போது முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை நான் உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்’ என்று நேர்ந்தார்.

போர் ஆரம்பமானது. இப்தா தன்னுடைய வீரர்களோடு அம்மோனியரை எதிர்த்துக் கடுமையான போரில் ஈடுபட்டார். கடவுள் இப்தாவோடு இருந்தார். அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அம்மோனியர் பின்னிட்டு ஓடினார்கள்.

இப்தா மகிழ்ந்தார். வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினார். முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை ஆண்டவருக்குப் பலியாக செலுத்தவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மறையாமல் இருந்தது.

அவர் ஊருக்குள் நுழைந்ததும் மேளதாளத்துடன், ஆடிப் பாடிக் கொண்டே மிகவும் சந்தோசமாக அவரை எதிர்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் இப்தா அதிர்ந்தார். அது அவருடைய ஒரே மகள். செல்ல மகள்.

இப்தாவின் மகள் நேர்ச்சையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவள் தந்தை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே தந்தைக்கு எதிரே மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள்.

‘அப்பா….. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். எனக்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்திருக்கிறது’ ஆசை மகள் தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

இப்தா அழுதார். தன்னுடைய ஆடைகளைக் கிழித்துவிட்டுக் கதறி அழுதார்.
‘என் ஆசை மகளே… நீ எனக்கு உயிருக்கு உயிரானவள்….’ என்று அவளை அணைத்துக் கொண்டார்.

‘ஏன் அப்பா அழுகிறீர்கள். நீங்கள் மாபெரும் வெற்றியல்லவா பெற்றிருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடலாம் என்று வந்தால் அழுகிறீர்களே ? என்னவாயிற்று’ மகள் கேட்டாள்.

‘மகளே… அதை நான் எப்படிச் சொல்வேன்… நான் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்து விட்டேன்.. அதை திரும்பப் பெறவும் முடியாது, நிறைவேற்றவும் முடியாது. என்ன செய்வேன்’ என்று கூறி மீண்டும் அழுதார்.

‘நேர்ச்சை தானே… இப்போது நீங்கள் தலைவர். எந்த நேர்ச்சையை வேண்டுமானாலும் நீங்கள் நிறைவேற்றலாம். அதற்குரிய வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்’ மகள் சொன்னாள்.

‘மகளே…  நீ புரியாமல் பேசுகிறாய். நான் வெற்றியுடன் திரும்பும்போது என் எதிரில் முதலில் வரும் உயிரினத்தைக் கடவுளுக்குப் பலிசெலுத்துவதாக நேர்ந்திருந்தேன். நீ என் எதிரே வந்து விட்டாய். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ இப்தா தளர்ந்து போன குரலில் சொன்னார்.

தந்தை சொல்லச் சொல்ல மகளின் கண்களில் திகில் படர்ந்தது. ‘அப்பா…… ‘ அவளுடைய வாய் குழறியது.
தந்தை ஒன்றும் பேசாமல் தரையில் மண்டியிட்டார்.

‘அப்பா… நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் நேர்ந்து கொண்டதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மகள் சொன்னாள்.

‘அதெப்படி….. உ..ன்னை…. நான்…?  முடியாது….முடியவே முடியாது ‘ இப்தா தடுமாறினார்.

‘இல்லை அப்பா… உங்கள் வெற்றியில் நானும் கலந்து கொள்வதாய் நினைத்துக் கொள்கிறேன்… ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும்’ மகள் கலங்கிய விழிகளோடு சொன்னாள்.

இப்தா மகளை ஏறிட்டுப் பார்த்தார்.

‘எனக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள். நான் என் தோழியரோடு மலைகளில் சுற்றித் திரிந்து என்னுடைய கன்னித் தன்மைக்காக நான் துக்கம் கொண்டாடப் போகிறேன்’ என்றாள்

‘மகளே… ஆனால்….’ இப்தா இழுத்தார்.

‘பயப்படாதீர்கள் .. நான் என்னுடைய கன்னித் தன்மையை இழக்கமாட்டேன். எந்த ஆணுடனும் உறவு கொள்ளவும். என் தோழியரோடு நான் செல்கிறேன். இரண்டு மாதம் கழித்து வருவேன். அனுமதியுங்கள்’ என்றாள்.

இப்தா அனுமதித்தார்.

மாதங்கள் இரண்டு சட்டென்று ஓடி மறைய. மகள் எரிபலிக்குத் தயாராக தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.
‘அப்பா… இதோ பலிப்பொருள்… என்னைப் பலியிட்டு உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ மகள் சொன்னாள்.

இப்தா அழுதார். இப்தாவின் மகள் அவரைத் தேற்றினாள். ‘ இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தானே. இப்படி ஒரு மரணம் வருவது எனக்குப் பெருமை தான்.’.

இப்தா கலங்கிய விழிகளோடும், அழுகின்ற இதயத்தோடும் அவளை பலிபீடத்தில் கிடத்தி இரண்டு துண்டுகளாக வெட்டி கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்…

ஐ.டி பொங்கல்…

கலர் கலராய்
வர்ணம் உடுத்திய
மண் பாண்டத்தில்
நுரையாய்ப் பொங்கியது
இலவம் பஞ்சு.

தெர்மோக்கோல் வனப்பில்
மஞ்சள் நிற மினுக்கில்
ஹேப்பி பொங்கல்
சொன்ன
ஹைடெக் கதவின் முன்
சில
ஹேப்பி பெண்கள்.

“வாட்ஸ் போன்கல்”
கடித்துத் துப்பிய
கிளையண்டுக்கு
மாட்டைப் பற்றியும்
மாட்டுச் சாணத்தைப் பற்றியும்
சிரிக்கச் சிரிக்க கான்பரன்ஸினர்
ஆஃப்ஷோர் மேனேஜர்கள்.

தலைப் பொங்கல்
நாலு நாள் லீவ் வேணும்
தலையைச் சொறிந்தவர்களுக்கு
மாட்டுப் பார்வையே
மிஞ்சியது.

ஹேப்பி பொங்கல் guys
டவர்ல தண்ணி ஊத்தி
கொண்டாடுவோம்
மின்னஞ்சல்கள் பறந்தன.

நாளைக்கு நைஸ் பிலிம்யா…
ஈவ்னிங் சன் டீவில
கிளிகள் கிசுகிசுத்துப் பறந்தன.

டவுன்லோட் படம் ஒன்று
டெஸ்க் டாப்பில்
பொங்கல் வாழ்த்து சொன்னது.
மின்னஞ்சல்கள்
டிஜிடல் கரும்பை வினியோகம் செய்தன.

எத்தனை பேருக்குத் தெரியுமோ
பச்சரிசி வாங்க
காசில்லையே என
மடி தடவிக் கவலைப்படும்
கிராமத்து ஜீவனின் பொங்கல் கவலை !

 பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

கி.மு கதை : அபிமெலக்கும், அம்மிக்கல் பெண்ணும்…

இஸ்ரயேல் மக்களை மிதியானியர்களின் அடக்குமுறையிலிருந்து மீட்ட எருபாகால் என்னும் கிதியோனுக்கு, எழுபது மகன்களும் ஏராளமான மனைவியர்களும் இருந்தார்கள். எருபாகாலுக்கும் அவருடைய வேலைக்காரிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அபிமெலக்கு. அவன் தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் சகோதரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான்.

அவன் தன்னுடைய தாயின் சகோதரர்களிடம் போய்,
‘ பாருங்கள்… எருபாகாலின் எழுபது மகன்களுக்கே எங்கும் செல்வாக்கு. அவர்கள் தான் இனிமேல் இஸ்ரயேலர்களை ஆளப் போகிறார்களாம். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. எழுபதுபேர் ஆட்சியமைக்கவேண்டுமா ? உங்களின் இரத்த பந்தமான நான் ஆட்சி அமைக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்றான்

‘யார் ஆட்சியமைத்தால் எங்களுக்கு என்ன ?’ தாயின் சகோதரர்கள் கேட்டார்கள்.

‘அவர்களுடைய ஆட்சியில் உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?’

‘நீ ஆட்சியமைத்தால் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவாயா ?’

‘கண்டிப்பாக. நான் ஆட்சியமைத்தால் அது உங்கள் ஆட்சியாகத் தான் இருக்கும். உங்கள் சார்பாக நான் அரசனாக இருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நிறைவேற்றுவேன். நிறைவேற்றப்படாதது என உங்கள் தேவைகள் ஒன்று கூட இருக்காது’ அபிமெலக்கு வாக்குறுதி கொடுத்தான்.

அபிமெலெக்கின் ஆசைவார்த்தைகளில் மயங்கிய அவர்கள் போய் நகரெங்கும் அபிமெலக்குக்கு ஆதரவாக மக்களைத் திரட்டினார்கள். அவர்கள் நகரின் மையத்தில் நின்று கொண்டு,

‘அபிமெலக்கு நல்ல திறமையானவன். அவன் அரசனானால் நன்றாக இருக்கும்’

‘எருபாகாலின் திறமை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால் அபிமெலெக்கு திறமையானவன்’

‘அபிமெலெக்கு நிறைய வாக்குறுதிகள் தந்திருக்கிறான்’

என்றெல்லாம் பேசி, அபிமெலக்கு தான் அரசராகும் திறமை வாய்ந்தவன், ஒரு நல்ல தலைவன் என்னும் எண்ணத்தை நாட்டு மக்களிடையே பரப்பினார்கள்.

ஒருபுறம் அபிமெலெக்கின் ஆதரவாளர்கள் நகரில் அபிமெலெக்கைப் பற்றிப் புகழ் பரப்ப, மறுபுறம் அபிமெலக்கு தன்னுடன் முரடர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு நேராக எருபாகலின் மகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அவர்கள் எழுபதுபேரில் இளையவனான யோத்தாமைத் தவிர அனைவரையும் சிறைபிடித்தான். யோத்தாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பாறை இடுக்கு ஒன்றில் ஒளிந்திருந்தான்.

அபிமெலக்கு சிறைபிடித்த அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்தான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அபிமெலெக்கு தான் சிறைபிடித்திருந்த அத்தனை பேரையும் ஒவ்வொருவராய் ஒரே கல்லின் மீது வைத்து வெட்டிக் கொன்றான். அவர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. மக்கள் அபிமெலெக்குவிற்குப் பயந்து அமைதிகாத்தார்கள். ஒளிந்திருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த யோத்தாம் உள்ளுக்குள் கதறி அழுதான்.
தன்னுடைய சகோதரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டும் தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என புலம்பினான்.

இந்தப் படுகொலை நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் யாரும் அபிமெலெக்கை எதிர்க்கவில்லை. அவர்கள் அனைவரும் அபிமெலக்கிற்கு அஞ்சி அவனையே அரசனாக ஏற்றுக் கொண்டனர்.

அபிமெலக்கும் அவனுடைய முரட்டுப் படையினரும் அந்த இடத்தை விட்டுப் போனதும் யோத்தாம் பாறையிடுக்கிலிருந்து வெளியே வந்து பாறையின் உச்சியில் ஏறி நின்றான்.

‘மக்களே… நீங்கள் ஏன் இத்தனை கோழைகளாகிப் போனீர்கள் ? நீங்கள் அரசனாக்கி இருப்பது யாரைத் தெரியுமா ? தன் சகோதரர்கள் அனைவரையும் ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக் கொன்ற ஒரு மனிதனை !… நான் சொல்வதைக் கேளுங்கள்’ யோத்தாம் உரத்த குரலில் சொன்னான்.

மக்கள் அனைவரும் அவன் சொல்வதைக் கேட்க பாறை அடியில் கூட்டமாகக் கூடினார்கள். யோத்தாம் தொடர்ந்தான். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

மரங்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாக ஒரு மரம் வேண்டும் என்று தேடத் துவங்கின. அவை முதலில் ஒலிவ மரத்திடம் போய் ,’ நீ தான் எங்களுக்கு அரசனாக வேண்டும். மரங்களின் அரசன் ஒலிவ மரம் என்று நாளை எல்லோரும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டன.
ஒலிவமரமோ, ‘ அதெல்லாம் என்னால் முடியாது. என் பணி எண்ணை தயாரிப்பில் உதவுவது. என் எண்ணையால் எல்லோரும் பயனடைகிறார்கள். எனவே நான் என்னுடைய பணியை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக முடியாது’ என்றது.

பின் மரங்கள் எல்லாம் அத்தி மரத்திடம் வந்தன.’ அத்தி மரமே அத்தி மரமே… நீ தான் மரங்களில் சிறப்பானவன். நீ எங்களின் அரசனாக சம்மதிக்கிறாயா ? ‘ என்று கேட்டன. அத்திமரமோ,’ எனக்கு பழங்களை விளைவிக்கும் வேலை இருக்கிறது. என்னால் உங்களுக்கு அரசனாக முடியாது. மன்னித்துவிடு’ என்று சொல்லி விண்ணப்பத்தை நிராகரித்தது.

மரங்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. அழகாய் கொத்துக் கொத்தாய்ப் பழங்களோடு திராட்சைக் கொடி ஒன்று அசைந்து கொண்டிருந்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன,’ திராட்சைக் கொடியே… நீ தான் எங்களுக்கு அரசனாகத் தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். நீயே எங்களுக்கு அரசனாக இருந்து எங்களை வழிநடத்து’ என்றன.
திராட்சைக் கொடியோ,’ அடடா… மனிதர்களையும், தெய்வங்களையும் மகிழ்விக்கும் திராட்சை இரசத்தை நான் தராமல் வேறு யார் தரமுடியும். எனக்கு அந்த வேலையே போதும். அதை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக உல்லாசமாய் உலவ என்னால் முடியாது’ என்றது.

இப்படியே மரங்கள் எல்லா இடத்திலும் தங்களுக்கு அரசனைத் தேடித் தேடி அலுத்துப் போய் கடைசியில் முட்செடியிடம் வந்தன.
‘நீ எங்களுக்கு அரசனாகிறாயா ?’ என்று மரங்கள் கேட்கும் முன்னரே முட்செடி.
‘வாருங்கள். நான் தான் உங்களுக்கு அரசன். என்னை விடத் தகுதியானவன் ஒருவனை நீங்கள் பார்க்கவே முடியாது. எனவே நீங்கள் என்னை அரசனாக்க வேண்டும். என்னை நீங்கள் அரசனாக்காவிடில் உங்களைக் குத்துவேன், எரிந்து உங்களையும் எரிப்பேன்’ என்று மிரட்டியது. மரங்கள் முட்செடியை தங்கள் அரசனாக்கின.

யோத்தாம் கதை சொல்லி முடித்தான். மக்கள் புரியாமல் விழித்தார்கள்.

‘புரியவில்லையா ? நீங்கள் என் தந்தை உட்பட பலரிடம் அரசராகும் படி கேட்டீர்கள். அவர்களோ கடவுளே அரசர் என்று சொல்லி தங்கள் கடமைகளைச் செய்யப் போய் விட்டார்கள். இப்போது நீங்கள் அபிமெலக்கு என்னும் முட்புதரை அரசனாக்கி இருக்கிறீர்கள். இது அழிவுக்கான ஆரம்பம்’ என்றான்.

மக்கள் பேசாமல் இருந்தார்கள்.

‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் ? உங்களுக்காக மிதியானியரிடம் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போரிட்ட என் தந்தைக்கு நீங்கள் காட்டிய நன்றி மிகப் பெரிது. அவருடைய மகன்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டபோது அதை வெறுமனே வேடிக்கை பார்த்து நீங்கள் என் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி விட்டீர்கள்.’ யோத்தாம் கோபத்துடன் சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தலைமறைவானான்.

மக்கள் வருந்திய மனதோடு சென்றார்கள். அபிமெலக்கு அரசனாக ஆட்சி செய்யத் துவங்கினான். மூன்று வருடங்களுக்குப் பிறகு அபிமெலக்கின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தார்கள். மக்களில் பலர் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினார்கள். நாட்டில் அமைதியும், ஒழுக்கமும் சீர்கேடானது.

அப்போது கலால் என்பவன் அந்த ஊர் மக்களின் நம்பிக்கைக்குரியவனாக விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினான்.
அவன் மக்களை நோக்கி,’ அபிமெலக்கு என்பவன் யார் ? ஏன் அவனைக் கண்டு பயப்படுகிறீர்கள் ? எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அபிமெலக்கை அழிப்பேன்..’  என்று மக்களுக்கு தைரியம் ஊட்டிக்கொண்டே இருந்தான்.

நகரின் அதிகாரியாய் இருந்த செபூலின் காதுகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவன் அரசன் அபிமெலக்குவிற்குத் தகவல் அனுப்பினான்.

தனக்கு எதிராய் ஒரு அலை ஆரம்பமாவதை அறிந்த அபிமெலக்கு, எப்படியாவது எதிரிகளை அழிக்க வேண்டும்  இல்லையேல் தன் ஆட்சி நிலைக்காது என்று முடிவெடுத்தான். உடனே அவன் தன் வீரர்களோடு சென்று இரவில் இருளோடு இருளாக விளை நிலங்களில் பதுங்கி கலால் இருக்கும் நகரை நோக்கி முன்னேறினான்.

செபூல் நகரைக் காவல் செய்து கொண்டிருக்க, கலால் தன்னுடைய ஆதரவாளர்களோடு நள்ளிரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது மலைச்சரிவுகளில் அபிமெலெக்கு படைவீரர்களோடு வந்துகொண்டிருந்தான். படைவீரர்கள் மலைச்சரிவுகளில் இறங்கியபோது மரங்கள் அசைந்தன.  மலைச் சரிவுகளில் இருந்த விளைநிலங்களிலிருந்து ஆட்கள் இறங்கி வருவது கலாலுக்குத் தெரிந்ததும் பதட்டமானான்.

‘செபூல்… செபூல்… அதோ மலைகளிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள். ‘ கலால் பதட்டமாய் சொன்னான்.

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கலால். அது மலையின் நிழல். உனக்கு மனிதர்கள் போல தெரிகிறது’ செபூல் உள்ளுக்குள் வஞ்சமாய் சிரித்தான்.

‘இல்லை செபூல், நீ நகர காவலன் தானே.. நிழலுக்கும், நிஜத்துக்குமான வித்தியாசம் கூடவா உனக்குத் தெரியவில்லை ? இது மனிதர்கள் தான்’ என்று மீண்டும் சொன்னான். செபூல் மறுத்தான். ஆனால் கலாலோ மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தைக் செபூலிடம் சொல்லிக் கொண்டே இருக்க,

செபூல் கலாலை நோக்கித் திரும்பினான், ‘ ஆம்.. மனிதர்கள் தான்.. எனக்குத் தெரியும்’ செபூலின் முகத்தில் ஒரு வஞ்சகப் புன்னகை விரிந்தது.

‘உனக்குத் தெரியுமா ? அப்படியென்றால்…..’ கலாலின் முகத்தில் திகில் படர்ந்தது.

‘எனக்குத் தெரியும். நான் தான் வரச் சொன்னேன். அது அபிமெலக்கின் படை ! உன்னைத் தேடித் தான் அவர்கள் வருகிறார்கள்’ செபூல் சொன்னான்

‘என்னைத் தேடியா ? ஏ..ஏன் ?’ கலாலின் வார்த்தைகள் நடுங்கின.

‘நீதான் வாய்ப்புக் கிடைத்தால் அபிமெலக்கை கொன்று விடுவேன் என்றாயே… இது தான் அந்த வாய்ப்பு.. எங்கே அவனைக் கொல் பார்க்கலாம் ?’ செபூல் நகைத்தான்.

‘ஐயோ… உண்மையாகவா சொல்கிறீர்கள் ?’ கலால் பதறி எழுந்தான்.

‘ஆம்.. உன்னையும், உன் ஆதரவாளர்களால் நிறைந்திருக்கும் இந்த நகரையும், அழித்து ஒழிப்பதற்காகத் தான் அபிமெலக்கு படையுடன் வருகிறார்’ செபூல் சிரித்தான்.

கலால் சற்றும் தாமதிக்கவில்லை. சட்டென்று எழுந்து ஓட ஆரம்பித்தான். செபூல் சுதாரிக்கும் முன் கால்போன போக்கில் பின்னங்கால் பிடறியில் பட வேகமாய் ஓடி மறைந்தான். அப்போது அபிமெலக்கு நகருக்குள் நுழைந்தான். அங்கே கண்களுக்குத் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தான். அத்துடன் நின்றுவிடாமல் நகரிலேயே தங்கி, மறுநாள் காலையில் விளைநிலங்களுக்கு மக்கள் வந்தபோது சுற்றி வளைத்து அவர்களையும் கொன்றான்.

பயந்து போன மக்கள் கூட்டம் ஏல்பெரித்துக் கோயிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டது. கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் மன்னன் தங்களைக் கொல்லமாட்டான் என்று மக்கள் நினைத்தார்கள். அபிமெலெக்கு தான் எதற்கும் அஞ்சாதவன் ஆயிற்றே ! அவன் தன் படையினரைக் கொண்டு கோயிலை முழுவதுமாய் மரக் கிளைகளினால் மூடி மொத்தமாய் எரித்தான். கோயிலோடு சேர்ந்து மக்கள் மொத்தமும் அழிந்தார்கள்.

அன்று முழுவதும் அபிமெலெக்கின் வீரர்களுக்கு வேட்டை நாள். மனித வேட்டை நாள். அவர்கள் நகரின் மூலை முடுக்கு எங்கும் சென்று உயிரோடிருந்த அனைவரையும்  கொன்று குவித்தனர். பின் நகர் முழுவதும் உப்பைத் தூவினர்.

அங்கிருந்து அருகிலிருந்த தெபேசு நகருக்குச் சென்றான் அபிமெலக்கு. தெபேசு நகர மக்கள் அனைவரும் பயந்து போய் நகரின் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். பலர் கோட்டையின் உச்சிக்குச் சென்றனர்.

‘வாருங்கள். கோயிலுக்குத் தீயிட்டது போல இந்தக் கோட்டைக்கும் தீயிடுவோம். மக்கள் அனைவரும் வெந்து மடியட்டும்’ அபிமெலக்கு கர்ஜித்தான்.

வீரர்கள் பின் தொடர அவன் கோட்டையை நோக்கி முன்னேறினான். அங்கே கோட்டையின் மேல் ஒரு பெண் ஒரு அம்மிக் கல்லை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அபிமெலக்கு தனக்கு நேராக கீழே வந்தால் அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். எப்படியாவது அபிமெலெக்கு தான் இருக்கும் இடத்துக்குக் கீழே வரட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அபிமெலக்கு கோட்டையை நெருங்கினான். மேலே பெண் காத்திருந்தாள். அவன் நேராக அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்துக்குக் கீழாக வந்தான். அவள் உள்ளுக்குள் புன்னகைத்தாள். அவன் நெருங்கி வரக் காத்திருந்தாள்.

இதோ….

இதோ….

அபிமெலெக்கு கோட்டைக்கு மிக அருகே வந்தான். அவள் சற்றும் தாமதிக்கவில்லை, குறி பார்த்து அம்மிக் கல்லை மிகச் சரியாக அபிமெலக்கின் தலையில் போட்டாள்.

அபிமெலக்கின் தலை பிளந்தது ! கீழே விழுந்த அவன் கோட்டைக்கு மேலே பார்த்த போது வெற்றிச் சிரிப்புடன் தெரிந்தாள் அந்தப் பெண்.

‘அவமானம் ஒரு பெண் என்னைக் கொல்கிறாளா ? ஒரு பெண்ணை விட நான் வீரமில்லாதவன் ஆகிவிட்டேனா ? ‘ அபிமெலெக்கு உள்ளுக்குள் அவமானமாய் உணர்ந்தான். உடனே அவன் தன்னுடைய படைக்கலன் தாங்கும் பணியாளனை அழைத்தான்,

‘வா… என் அருகே விரைந்து வா… உன் வாளை எடுத்து என்னைக் குத்திக் கொல்’

‘தலைவரே… உம்மைக் கொல்வதா ? அது என்னால் முடியாது. முடியவே முடியாது’ பணியாளன் மறுத்தான்.

‘இல்லை… இது அரச ஆணை. அபிமெலக்கு ஒரு பெண்ணால் இறந்துபோனான் என்று நாளை உலகம் பேசக் கூடாது. என்னைக் கொன்றுவிடு…. ‘ அபிமெலக்கு சொன்னான். பணியாளனின் மறுமொழி பேசவில்லை.

அவன் அபிமெலெக்கை நெருங்கினான். அவனுடைய கைகளிலிருந்த வாளை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டான். வாளை அபிமெலெக்குவிற்கு நேராக உயர்த்திப் பிடித்து, அவனுடைய நெஞ்சில் வேகமாக இறக்கினான்.

வாள் அபிமெலெக்கை துளைத்து வெளியேற, அவன் இறந்தான்.

தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொன்று, நகரின் ஆயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்த கொடுங்கோல் மன்னன் அபிமெலக்கு இறந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதற்கெல்லாம் காரணமான அந்தப் பெண் மட்டும் கவனிக்கப்படவேயில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…

கி.மு கதை : கிதியோன், The 300 !!!

இஸ்ரயேலர்கள் சிறிதுகாலம் தங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு வந்த கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவர்களின் குணம் மாறத் துவங்கியது. அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபடவும், இஸ்ரயேலர்களின் கடவுளை நிராகரிக்கவும் துவங்கினர். தன்னை மதிக்காத இஸ்ரயேலர்களைக் கடவுளும் கைவிட்டார். அவர்கள் மிதியானியரால் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானியரின் கொடுமைக்குப் பயந்து மலைக்குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் ஒளிந்து வாழ்ந்தார்கள். மிதியானியரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்கள் இஸ்ரயேலரின் கால்நடைகள் , விளைபொருட்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர், அல்லது அழித்தனர். ஏழு ஆண்டுகள் மிதியோனியரின் அடக்குமுறைக்குள் கொடுமை அனுபவித்த இஸ்ரயேலர்கள் மனம் திருந்தி கடவுளை நாடினார்கள். கடவுள் அவர்களுடைய வேண்டுதல் ஒலிகளைக் கேட்டார்.

கடவுள் அவர்களிடம் ஒரு இறைவாக்கினரை அனுப்பினார்.

‘நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறினீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்தச் சோதனைகள்’ இறைவாக்கினர் சொன்னார்.

‘ஆம் உண்மை தான், நாங்கள் அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டோ ம். வேற்று தெய்வங்களுக்கு பலிபீடங்கள் அமைத்து பலி செலுத்தினோம். இதெல்லாம் தீமை என்பதை கடவுள் எங்களுக்குச் சொல்லியிருந்தார். நாங்கள் தான் கேட்கவில்லை. எங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காதா ? நாங்கள் மீட்படைய வழியே இல்லையா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுள் நினைத்தால் உங்கள் துயரங்களை நீக்க முடியும். அவரை மட்டும் நம்பி, அவரிடம் மன்றாடுங்கள்’ இறைவாக்கினர் சொன்னார்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாகக் கடவுளை வேண்டினார்கள். கடவுள் மனமிரங்கினார். யோவாசின் மகனான கிதியோன் மூலம் மக்களை மீட்க கடவுள் தீர்மானித்தார்.  தன்னுடைய தூதர் ஒருவரை கிதியோனிடம் அனுப்பினார். கடவுளின் தூதர் கருவாலி மரத்தின் அருகே வந்து அமர்ந்தார். அங்கே கிதியோன் மிதியானியர்களுக்குப் பயந்து தன்னுடைய தானியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘வீரனே…. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ தூதர் கிதியோனை வாழ்த்தினார்

‘இல்லை… கடவுள் எங்களோடு இல்லை. கடவுள் எங்களோடு இருந்திருந்தால் ஏன் எங்களுக்கு இத்தனை துன்பம்’ கிதியோன் விரக்தியாய்ச் சொன்னார்.

‘நீ ஏன் விரக்தியாய் பேசுகிறாய் ? கடவுள் உன்னுடைய மூதாதையர்களுக்குச் செய்த உதவிகளை நீ மறந்தாயா ?’

‘கதைகள் நினைவில் இருக்கின்றன. கடவுளைத் தான் காணோம்’

‘கதைகளா ? எகிப்தியர்களின் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் கிடந்த உன்னுடைய மூதாதையர்களைக் கடவுள் பல்வேறு அதிசய, அற்புதச் செயல்களின் மூலம் தான் மீட்டார் தெரியுமா ? செங்கடலையே இரண்டாகப் பிளந்து வழியமைத்தார் தெரியுமா ? இவைகளெல்லாம் கதைகளல்ல, உண்மைச் சம்பவங்கள் ‘ தூதர் சொன்னார்.

‘அப்படியானால் இப்போது எங்கே அந்த அதிசயச் செயல்கள் ? கடவுள் எங்களை மீண்டும் அடிமைகளாய் விட்டு விட்டாரே. எகிப்தியரிடமிருந்து மீட்டு மிதியானியர்களிடம் தானே அனுப்பி வைத்திருக்கிறார். எங்களை மீட்கவேண்டும் என்று தோன்றவில்லையா அவருக்கு ? எங்கள் கதறல் ஒலிகள் அவர் காதுகளை எட்டவில்லையா ? ‘ கிதியோன் கேட்டார்.

‘அதற்காகத் தானே உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ தூதர் சொன்னார்.

‘என்னையா ?’

‘ஆம்… உன்னைத் தான், உன் மூலமாகத் தான் கடவுள் இஸ்ரயேலர்களை மிதியானியரிடமிருந்து மீட்கப் போகிறார்.’

‘என்ன விளையாடுகிறீர்களா ? நான் என் குடும்பத்திலேயே மிகவும் சிறியவன். என்மூலமாக மீட்பா ? நல்ல வேடிக்கை தான். நான் இதற்குத் தகுதியானவன் அல்ல’

‘இல்லை நீ தான்.. நீ ஒருவன் இதற்குத் தகுதியானவன். நீ தனியாகவே சென்று மிதியானியரைத் தோற்கடிப்பாய். கடவுள் உன்னோடு இருப்பார்’ தூதர் அழுத்தமாய்ச் சொன்னார்.

‘தூதரே, நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நான் மிதியானியரோடு போரிடவேண்டும் என்கிறீர்களா ?’ கிதியோன் கேட்டார்.

‘ஆம்… உன் தலைமையில் ஒரு படையைத் திரட்டி நீ மிதியானியருக்கு எதிராகப் போரிடவேண்டும். கடவுள் உன்னை வழி நடத்துவார். ‘ தூதர் சொன்னார்.

‘தூதரே…ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உடனே வருகிறேன். எங்கும் போய்விடாதீர்கள்’ கிதியோன் தூதரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினார். வீட்டிற்குச் சென்று சில புளியாத அப்பங்களையும், கொஞ்சம் இறைச்சியையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

‘நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருந்தால், நீர் உண்மையிலேயே கடவுளின் தூதனாக இருந்தால், எனக்கு ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே கிதியோன் அப்பங்களையும் இறைச்சியையும் தூதரின் முன்னால் வைத்தார்.

‘ நீ கொண்டு வந்திருக்கும் இந்த அப்பங்களையும், இறைச்சியையும் வைத்தே நான் உனக்கு ஒரு இறை அடையாளத்தைக் காட்டுகிறேன். கொஞ்சம் அப்பத்தையும், இறைச்சியையும் எடுத்து அந்தப் பாறை மீது வை.’ தூதர் சொன்னார். கிதியோன் அவ்வாறே செய்தார்.
தூதர் அந்த அப்பங்களையும், இறைச்சியையும் தன்னிடமிருந்த கோலின் நுனியால் தொட்டார். உடனே நெருப்பு சட்டென்று தோன்றி அந்தப் பொருட்களை எரித்தது.

கிதியோன் பரவசமானார். கடவுள் நெருப்பை அனுப்பிப் பலி பொருட்களை எடுத்துக் கொண்டதை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

‘இப்போதாவது நம்பு…’ சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்தார் ஆண்டவரின் தூதர். கிதியோன் பயந்து போனார்.
‘ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். கடவுளின் தூதரை நான் நேருக்கு நேராய் சந்தித்தேனே…’ என்று பரவசமடைந்தார்.

அன்று இரவே கிதியோன் அன்னிய தெய்வங்களுக்காய் எழுப்பப்பட்டிருந்த பலிபீடங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார். இஸ்ரயேலரின் கடவுளுக்காய் அவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, அங்கே ஒரு கொழுத்த மாட்டை பலிசெலுத்தினார்.

மறுநாள் மக்கள் தங்கள் தெய்வங்களின் பலிபீடங்கள் தகர்ந்து கிடப்பதைக் கண்டு ஆவேசமடைந்தனர்.

‘இந்தக் கொடுமையைச் செய்த பாவி யார் ? அவனைக் கொல்லவேண்டும்’ என்று மக்கள் கோபமாகச் சுற்றித் திரிந்தனர்.

‘அது கிதியோன் தான்… இரவில் அவன் தன்னுடைய ஆட்களுடன் வந்து பலிபீடம் கட்டுவதைக் கண்டோ ம்…’ அந்தப் பக்கமாய் வசித்து வந்த மக்கள் சொன்னார்கள்.

‘அதெப்படி கிதியோன் எங்கள் கடவுளின் பலிபீடங்களை இடிக்கலாம். அவனை அழிக்காமல் விடப்போவதில்லை’ ஆவேசமடைந்த மக்கள் கிதியோனின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

‘கிதியோனே… வெளியே வா… உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்கள் கடவுளர்களை அவமானப் படுத்துவாய் ?’ மக்கள் கூச்சலிட்டனர்.

கிதியோனின் தந்தை வெளியே வந்தார். ‘கிதியோன் இங்கே இல்லை… என்ன விஷயம் ? ஏன் கூச்சலிடுகிறீர்கள் ?’

‘ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாயா ? எங்கள் கடவுளர்களின் பலி பீடங்களை உன் மகன் இடித்துத் தகர்த்திருக்கிறான். அவனைக் கொல்லவேண்டும்’

‘யார் உங்கள் கடவுள் ? ‘

‘பாகால் !… பாகாலின் பலிபீடத்தையும், அதன் அருகே நின்றிருந்த அசேராக் கம்பத்தையும் உன் மகன் அழித்திருக்கிறான்’ மக்கள் கத்தினார்கள்.

‘பாகால் !! அவன் என்ன பெரிய கடவுளா ? ‘ கிதியோனின் தந்தையும் கோபமானார்.

‘ஆம்.. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்’ மக்கள் சொன்னார்கள்.

‘அந்த பாகால் பெரிய சக்திவாய்ந்தவனாக இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும். நீங்கள் அவனைக் கொல்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் கையாலாகாதவர் என்று தான் அர்த்தம். போங்கள்… உங்கள் கடவுளிடம் சொல்லி என் மகனைக் கொல்லச் சொல்லுங்கள். உங்கள் கடவுளுக்கு வீரம் இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும்’ கிதியோனின் தந்தையும் பதிலுக்குக் கத்தினார்.

‘பாகாலின் கையால் அவன் சாகப் போவது உறுதி. அவனைப் பாகால் அழிப்பான் என்பதைக் குறிக்கும் விதமாக இனிமேல் அவனை நாங்கள் எருபாகால் என்று அழைப்போம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கலைந்து போனார்கள்.

கிதியோன் மக்களின் கையிலிருந்து தப்பினான். ஆனாலும் இன்னும் அவனுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘ இது ஒருவேளை கடவுளின் அழைத்தல் இல்லையென்றால் என்ன செய்வது ? கடவுள் தான் தூதரை அனுப்பினாரா ? இல்லை ஏதேனும் கண்கட்டு வித்தையா ?’
கிதியோனின் மனம் பல்வேறு கேள்விகளால் நிறைந்தது.

அவன் கடவுளை நோக்கி,’ கடவுளே… நீர் தான் என்னை அழைத்தீர் என்பதற்கு எனக்கு இன்னுமொரு அடையாளத்தைக் காட்டும். நான் என்னுடைய கம்பளி ஆடையை இன்று இரவு வெட்டவெளியில் வைப்பேன். என்னை அழைத்தது நீர் தான் என்றால் என்னுடைய ஆடையில் மட்டும் காலையில் பனி நிறைந்திருக்கட்டும். மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கட்டும்’ என்றார். சொல்லிவிட்டு அன்று இரவே தன்னுடைய கம்பளியைக் கழற்றி வெட்டவெளியில் வைத்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவருடைய கம்பளியில் மட்டும் பனி நிறைந்திருந்தது. தரை உலர்ந்து கிடந்தது.

‘ஒருவேளை தரையில் விழுந்த பனி உலர்ந்து போயிருக்குமோ ? கம்பளியானதால் மட்டும் உலராமல் ஈரமாய் இருக்கிறதோ ? இது இயற்கையாகவே நடக்கும் சாதாரண நிகழ்வோ ?’ கிதியோனின் மனம் மீண்டும் சந்தேகப் பட்டது.

அவன் மீண்டும் கடவுளை நோக்கி, ‘கடவுளே இன்னும் எனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் செய்து காட்டும். இன்றைக்கும் நான் என் கம்பளியை இங்கே வைத்து விட்டுப் போவேன். நாளைக் காலையில் நான் வந்து பார்க்கும்போது கம்பளியில் மட்டும் பனி இருக்கக் கூடாது. தரையெங்கும் பனி நிறைந்திருக்க வேண்டும். உம்மில் நம்பிக்கை வைக்கக் கடைசியாக எனக்கு இந்த அடையாளத்தைச் செய்து காட்டும்’ என்றான்.

மறுநாள். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. முந்தைய நாள் உலர்ந்து கிடந்த தரை இப்போது பனியில் குளித்து தொப்பலாய்க் கிடந்தது. புற்களின் தலைகளிலெல்லாம் பனிக் கூடுகள். ஆனால் கிதியோனின் கம்பளி மட்டும் உலர்ந்து கிடந்தது.

‘கடவுளே… என்னை அழைத்தது நீரே ! உம்மை நம்புகிறேன்’ கிதியோன் மண்டியிட்டு கடவுளிடம் பேசினான்.

மிதியானியருடம் போரிட கிதியோன் தயாரானான். அவன் மக்களை பெருமளவில் திரட்டி கடல் அலையென மிதியானியரை நோக்கிப் படையெடுத்தான். கடவுள் அவனை அழைத்தார்.
‘கிதியோனே… நீ இத்தனை மக்களை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். வெற்றி பெற்றபின் அவர்கள் கர்வம் கொள்வார்கள். மக்கள் சக்தியே வென்றது என்று அவர்கள் ஆணவம் அடைவார்கள். அவர்களில் சிலர் மட்டும் போதும் உனக்கு. அப்போதுதான் என்னுடைய வலிமையை மக்கள் உணர்வார்கள்’ கடவுள் சொன்னார்.

கிதியோன் கடவுளின் வார்த்தையின் படி மக்களை நோக்கி,’ உங்களில் யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை. போரில் ஆர்வம் இல்லாதவர்களும், பயப்படுபவர்களும் உடனே திரும்பிப் போய்விடுங்கள்’ என்றான்.

மக்களில் முக்கால் வாசி  பேர் உடனே திரும்பி நடந்தார்கள். மிச்சமிருந்த கூட்டம் சுமார் பத்தாயிரம் இருந்தது.

கடவுள் மீண்டும் கிதியோனிடம், ‘இதுவும் மிக அதிகமான கூட்டம் தான். இவர்களை அதோ அந்த நீர் நிலைக்கு அழைத்துப் போய் தண்ணீர் குடிக்கச் சொல். யாரெல்லாம் தண்ணீரை கைகளில் அள்ளிக் குடிக்கிறார்களோ அவர்களை தனியே நிற்க வை. யாரெல்லாம் மண்டியிட்டுக் குடிக்கிறார்களோ அவர்களை திரும்ப அனுப்பிவிடு’ என்றார்.

கிதியோன் மக்களை நோக்கி,’ நீங்கள் எல்லோரும் அந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.

அவர்களில் பெரும்பாலானோர்கள் மண்டியிட்டுத் தண்ணீர் குடித்தார்கள். வெறும் முந்நூறு பேர் மட்டுமே கைகளில் நீரை அள்ளிக் குடித்தார்கள்.
கிதியோன் கலங்கினார். ‘கடவுளே… மிதியானியரை அழிக்க வெறும் முந்நூறு பேர் போதுமா ?’.

கடவுள் அவரிடம் ‘போரிடப் போவது முந்நூறு பேர் என்றால் தோல்வி நிச்சயம் ! ஆனால் போரிடப் போவது முந்நூறு பேர் அல்லவே ! நான் ஒருவன் மட்டுமல்லவா ? அதனால் வெற்றி நிச்சயம் தான். கவலையை விடு’ கடவுள் பதிலளித்தார்.

அன்று இரவு கிதியோனின் நண்பன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு வட்டமான கோதுமை அப்பம் சுழன்று சென்று மிதியானியரின் கூடாரத்தை இடித்துத் தகர்த்தது. நண்பன் கிதியோனிடம் ஓடோ டி வந்தான்.

‘நண்பா… நீ வெற்றி பெறும் வேளை வந்துவிட்டது ! உன்னுடைய வாள் தான் அந்த அப்பம். நீ அவர்களை துரத்தும் நேரம் வ்ந்துவிட்டது என்பதைத் தான் கடவுள் என் கனவு வாயிலாகச் சொல்லியிருக்கிறார்’ நண்பன் சொன்னான்.

‘கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். நமக்கு நிச்சயம் வெற்றிதான். நாம் போருக்குத் தயாராவோம்’ கிதியோன் சொன்னான்.

கிதியோன் அந்த முந்நூறு பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்தார். அவர்களில் ஒவ்வொருவர் கைகளிலும் ஒவ்வொரு நெருப்புப் பந்தமும், ஒரு காலிப் பானையும், ஒரு எக்காளமும் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.

நள்ளிரவில் எல்லோரும் கைகளில் நெருப்புப் பந்தத்தோடும், காலிப் பானைகளோடும் மிதியானியர் கூடாரமடித்திருந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

கிதியோன் திடீரென்று எக்காளத்தை எடுத்து ஊதினார். உடனே மிதியானியர்களைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு எக்காளம் ஊதினார்கள். பெரும் சத்தத்தைக் கேட்ட மிதியானியர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அப்போது கிதியோனின் வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த பானையை ஒரே நேரத்தில் உடைத்து பெரும் சத்தம் எழுப்பினார்கள். மிதியானியர்கள் இதென்ன சத்தம் என்று அதிர்ந்து போய் நிமிர்கையில் கிதியோனின் வீரர்கள் எல்லோரும் ஒரே குரலாக

‘ஆண்டவருக்காக…. கிதியோனுக்காக’ என்று சத்தமிட்டார்கள். கிதியோனின் திட்டம் வெற்றியடைந்தது. மிதியானியர்கள் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். கடவுள் மிதியானியர்களுக்குள்ளேயே திடீர்க் கலகத்தை உண்டாக்கினார். இரவில் மிதியானியர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட ஆரம்பித்தார்கள்.

மிதியானியர்கள் தங்களுக்குள்ளேயே வெட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சிதறி ஓட, கிதியோன் மாபெரும் வெற்றி பெற்றார். கடவுளின் வழிகாட்டுதல் அவரை வெற்றி வீரனாக்கியது. மக்கள் எல்லோடும் அவரிடம் வந்து,’ இனிமேல் நீங்கள் தான் எங்களை ஆளவேண்டும்.. வாருங்கள். எங்கள் அரசராகுங்கள்’ என்று அழைத்தார்கள்.

அவரோ அவர்களிடம்,’ மீண்டும் தவறிழைக்காதீர்கள்.. கடவுள் ஒருவரே அரசர். அவர் சொல்வதை மட்டுமே கடைபிடித்து வாழுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தமிழிஷில் வாக்களிக்க…

புத்தாண்டு… வாழ்த்துக்கள்

துயர நிமிடங்களில்
பதறி ஓடி வரும்
நட்புகளும்,

உயர நிமிடங்களில்
நட்புகளைத் தேடி ஓடும்
மனமும்

இந்த ஆண்டு உங்களுக்கு வாய்க்கட்டும்.

இது புத்தாண்டு
கூடவே பத்தாண்டு !

மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

கவிதை : பிரிவுகள் பிரியத்துக்குரியவை !

பிரிவுகளை கொஞ்சம்
பிரியமாய் நேசியுங்களே.

வண்டுத் தேரேறி
பிரிந்து செல்லாத
மகரந்தத் துகள்களுக்கேது
மறுபிறப்பு ?

மேகத்தின் தேகம் விட்டு
பிரிய மறுக்கும்
ஈரத் துளிகளுக்கு
இங்கேது சிறப்பு ?

விதைகளை விட்டு
வெளியேறட்டும் கிளைகள்,

மூங்கிலை விட்டு
வெளியேறட்டும் இசைகள்,

பாறைவிட்டு
வெளிக்குதிக்கட்டும் சிலைகள்,

இதயம் விட்டு
வெளித்தாவட்டும் கலைகள்

தடுக்காதீர்கள்.

முட்டையோடான
பிரிவு
சிறகுச் சரித்திரத்தின்
முதல் சுவடு.

பிரியவிடுங்கள்,
இல்லையேல் பிரித்துவிடுங்கள்,
தொப்புள் கொடியை
யாரும்
தொடரவிடுவதில்லையே !

பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.

« பழைய வரவுகள்