கேட்டானே 32 கேள்வி…

IMG_09241. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிரியமாய் பெற்றோர் வைத்த பெயர் இது. தவமாய்த் தவமிருந்து ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்று நாகர்கோவில் சவேரியார் கோயிலில் செபித்த போது ஒரு காட்சி தோன்றி அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறப்பான் என அருள் கிடைத்ததாய் அம்மா சொல்வது பெயர் பிறந்த கதை. சவேரியாரின் நினைவு மறையாமல் இருக்கட்டும் என சேவியர் என வைத்து விட்டார்கள்.

சேவியர்- பெயரை மாற்றினா எழுத்துத் துறையில் உன்னை பெரிய ஆளாக்கிக் காட்டுகிறேன் என பத்திரிகை நண்பர்கள் சிலர் சொன்னார்கள். பெற்றோர் இட்ட பெயரை மாற்றி பெரிய ஆளாவதை விட பெற்றோரின் அன்பில் சின்ன ஆளாகவே இருந்து விடலாம் என அப்படியே இருந்து விட்டேன்.

என்னையும், என் பெயரையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

(ஜேஏவியார் – என யாரும் அழைக்காத போது (பெரும்பாலும் தெலுங்கு நண்பர்கள் ஜேவீயார், ஜேவியர், க்ஸாவீயர் என பல விதங்களில் அழைப்பார்கள். . Xerox – ஐ ஜெராக்ஸ் என்று சொல்லும் போ Xavier – ஷுட் பி ஜேஏவியார் னா என்று விளக்கம் வேறு )

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

தோழி ஜானகியின் ஆறுவயது மகன் விபத்தில் பலியான துயரத்தின் போது. பதினாறு நாட்களுக்குப் பின் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது மீண்டும் அழநேர்ந்தது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

புடிக்கும். முக்கியமா பிடித்தமானவர்களின் பெயர்களைத் தமிழில் எழுதும் போது.

4. பிடித்த மதிய உணவு என்ன?

சுடு சாதம் + மீன் குழம்பு + வெங்காயம் பச்சைமிளகாய் எல்லாம் போட்டு ஒரு டபுல் ஆம்லெட் + கடைசியா தயிரும் மோர் மிளகாயும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் பழகினாலே நண்பனாகி விடும் பழக்கம் எனக்கு உண்டு. அதன் பின் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தோன்றும். வீட்டுக் தெரியாமல் நண்பர்களின் தேவைக்காய் பல ஆயிரங்களை அள்ளிக் கொடுக்கும் திருட்டுக் குணமும் உண்டு

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?xavier4

அருவியில் குளிக்கவும்,

கடலில் குதிக்கவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அது நபரைப் பார்க்கும் இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் பொறுத்து மாறுபடும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : கோபப்படுத்திய, எரிச்சலூட்டிய, அவமானப்படுத்திய நிகழ்வுகளையெல்லாம் ஜஸ்ட் லைக் தேட் மறந்து விட முடிவது.

பிடிக்காதது : நண்பர்களின் பெயர்களைக் கூட சமயத்தில் மறந்து விட்டு குழம்புவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது

அலுவலகத்தில் வேலை செய்தாலும் தனது விருப்பமான பரத நாட்டியத்தைத் தொடர்வது, நான் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் சற்றும் பிசகாமல் அட்டவணை போட்டு ஞாபகமூட்டுவது, கோபத்தை ஒரு நாளுக்கு மேல் வளர்க்க விரும்பாதது எல்லாவற்றுக்கும் மேலே சூப்பராக சமைப்பது !

இத்யாதி இத்யாதி….

பிடிக்காதது :

“கிரிக்கெட் பாத்தது போதும் தூங்குங்க….”

“வேலை பாத்தது போதும் தூங்குங்க…”

“வீக் எண்ட்லயும் கம்ப்யூட்டரையே கட்டிகிட்டு அழுங்க…”

இத்யாதி..இத்யாதி…

 

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கூட்டுக் குடும்பத்துல இருந்து சென்னைக்கு வந்து குடியேறிய என்னைப் போன்ற ஒரு கிராமத்து மனுஷனை அலைக்கழிக்கும் கேள்வி இது !

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீல நிற  ஜீன்ஸ் + மஞ்சள் நிற – டி ஷர்ட். இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்

 

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

பார்ப்பது, சன்னல் வழியே  சாலையில் நடக்கும் இருளை.

கேட்பது, லவ் பேர்ட்ஸ் இசைக்கும் புரியாக் கவிதை.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

“பேனாக்களாக” எனில் எல்லா வண்ணமும்

14. பிடித்த மணம்?

புதிய புத்தகத்தின் வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

மனசாலும், எழுத்தாலும் வசீகரிக்கும் நண்பர் புகாரி.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நண்பர் விஜய் கோபால் சாமி எழுதும் “என்னமோ போடா மாதவா”. ரொம்பவே சுவாரஸ்யமான தொடர். வியக்கவும், ரசிக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

விளையாட, டேபிள் டென்னிஸ்.

பார்க்க – கிரிக்கெட்

 

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ், ஏதும் தேவைப்படாத பார்வை இருக்கிறது !

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஆங்கிலத்தில், அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் பிடிக்கும்.

ஹாலிவுட் படங்கள் எக்கச் சக்கமாய் பார்ப்பதுண்டு.

தமிழில் இயல்பான படங்கள். மொழி, அபியும் நானும்,

தவமாய் தவமிருந்து, போல

மலையாளத்தில்: நகைச்சுவைப் படங்கள் & பூதக்கண்ணாடி போல நண்பர்கள்

பரிந்துரைக்கும் படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஏண்டா பார்த்தோம், விதி விளையாடிடுச்சே, என நினைக்க வைத்த

எஸ்.ஜே சூர்யாவின் மூன்றாம் விதி !

 

20. பிடித்த பருவ காலம் எது?

கல்லூரி காலத்தில் படித்த “பருவகாலம்” பத்தி கேக்கறீங்களா ?

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க.. ?

ஈழக் கதவுகள், அருவி வெளியீடு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

படமே வைப்பதில்லை

பளிச் என இருந்தால் தான் பிடிக்கிறது

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பொலி

பிடிக்காத சத்தம் : பனை ஓலைகளினால் பாய் முடையும் போது எழும் ஒலி.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இதில் எது அதிக தொலைவோ அது. நிஜமாவே எனக்குத் தெரியாது

 

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சென்னை டிராபிக்கில் கோபப்படாமலேயே காரோட்டுவது !

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

குழந்தைகள் மீதான வன்முறை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல் சைக்கிள் கேப் கிடைச்சா ஒரு தூக்கம் போடணும்ன்னு தோணுது.

 

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குறிஞ்சி அல்லது நெய்தல்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இயல்பா…

31. கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

 

நீண்டகால நண்பர்களுடன் அரட்டை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மன்னிப்பை தயங்காமல் கேட்டும், தயங்காமல் கொடுத்தும் வாழுங்கள் வாழ்க்கை அர்த்தப்படும்

 

பின் குறிப்பு : அழைத்த சகோதரன் விஜய் கோபால் சாமிக்கு நன்றி !

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்..

மீண்டும் காதலிக்கலாம்…

2

1.

மெளனங்கள்
இறுகிக் கிடக்கும் பாறை போல
சுமையானவை.


உன்
கரம் கோர்த்த
மெளனத்தைத் தவிர

 

  

  

2.

எப்போதும்
உன்னுடன் இருப்பேன்
என்று
சொன்ன நினைவு மட்டும்
இப்போதும்
என்னுடன் இருக்கிறது

0

23.

உன்னுடைய
முத்தங்களின் ஒன்றைத்
திருட முடிந்தால்
என்
தனிமைகளின் உதடுகளுக்கு
தத்துக் கொடுத்திருப்பேன்.

0

4.

வயலில் இட்ட விதை நெல் போல
நடப்பட்டிருக்கிறது
உன் புன்னகை
என் இதய வயலில்.

உன் பார்வை ஈரத்தைப்
பரிமாறினால்
முளைத்து வளரும்
நீ அறியாத ஒரு கணத்தில்

0

5.

2நீ
என்னுடன் இருந்தால்
என் வாழ்க்கை
ஆனந்தமாகும்.


என் வாழ்க்கை
ஆனந்தமாய் இருந்தால்
நீ
என்னுடன் இருக்கிறாய் என்று அர்த்தம்.

0

6

நீ
விலகமாட்டாய் எனும்
என்
நம்பிக்கையின் அலட்சியமே
நீ
விலகிவிடக் காரணம்

0

7.

2

இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்களின்
கையில் என்கிறார்கள்
இளைஞர்களின் எதிர்காலம்
உன் கையில்
என்பதை அறியாதவர்கள்.

0

 

 

8

உனது
மனக் கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்க முனைகையில்,
நீ
கரையில் ஒதுங்கி
எனக்காய் காத்திருந்தாய்
காதல்
புரிந்தது எனக்கு.

0

9

2காதலிக்கும் இதயம்
நிலவுடன் கதை பேசும்.

காதலிக்கப்படும் இதயம்
நட்சத்திரங்களுடன் நாட்டியமாடும்.

எப்படியோ
காதலில் இருப்பவர்கள்
நிலத்தை நிராகரித்து
வானத்தில் மட்டுமே வலம் வருகிறார்கள்

0

10.

 

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
பரவசப் படியேறுகையில்
உணர்ந்தேன்
ஒவ்வோர் காதலுக்குள்ளும்
ஒவ்வோர்
பிரபஞ்சம் படுத்திருப்பதை

0

2

அங்கிங்கெனாதபடி
எங்கும்
உன் நினைவுகளின் உருவம்
புன்னகைத்தபோது
உளவியலார் சொன்னார்கள்
கடவுளுக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
உருவமில்லை என்று

 

 

பிடித்திருந்தால்…. தமிழிஷ் வாக்களியுங்கள்…

விபத்து

car-accident-lawyers

வண்டி கட்டுப்பாட்டை முழுமையாய் இழந்து சரிவில் உருண்டது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சரண்யா அதிர்ந்தாள். அருகில் அவளுடைய கணவன் கார்த்திக். பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான் அவர்களுடைய ஆறு வயது மகன் ராகுல்.

அந்த கொடூரமான வினாடியில் சரண்யாவின் பதை பதைப்பு முழுக்க ராகுலின் மீது தாவியது. பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்த அவன் பிடிமானம் ஏதுமின்றி வண்டி உருள உருள காருக்குள் தூக்கியடிக்கப்பட்டான்.

சரண்யா, சென்னையில் ஒரு முன்னணி கணினி நிறுவனத்தில் பணிபுரிகிறாள். துடுக்குத் தனம் + வெள்ளை மனசும் = சரண்யா என சுருக்கமாக அவளைப்பற்றி சொல்லி விடலாம். இயல்பாய் பழகுவதிலும், வேலையில் கவனமாய் இருப்பதிலும், சவால்களை ஆனந்தமாய் ஏற்றுக் கொள்வதிலும் அவளுக்கு நிகர் அவள் தான்.

கணவன் கார்த்திக் மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ். சென்னையில் வறுத்தெடுக்கும் வெயிலில் அலையும் சாபத்திலிருந்து சமீபத்தில் தான் விமோசனம் பெற்றிருந்தார். கிடைத்த ஒரு பதவி உயர்வு அவரை அலுவலகத்துக்குள்ளேயே பணிபுரியும் நிலையைத் தந்திருந்தது.

ராகுலைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவனுடைய மூன்றாவது வயதில் கிருஷ்ணரைப் போல வேடமிட்டு எடுத்த படம் ஒன்று எப்போதும் அவர்களுடைய வரவேற்பறையில் இருக்கும்.

“கிருஷ்ணர் படம் நல்லா இருக்கு, எங்கே வாங்கினீங்க… ” என்று வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் சட்டென சொல்லி விடுவார்கள்.

பின்பு தான் உற்றுப் பார்த்து “அட.. இது நம்ம ராகுலா ?” என வியப்பார்கள். அழகிலும், பார்வையிலும், நிறத்திலும் துறு துறுப்பிலும் அவன் மீது கண் வைக்காதவர்கள் பார்வை இல்லாதவர்கள் என்று பட்டென சொல்லிவிடலாம்.

“மம்மி… லீவ் கிடச்சதும் பாண்டிச்சேரில பாட்டியைப் பாக்க போலாமா “ என்ற ராகுலின் விண்ணப்பம் தான் இந்த பயணத்துக்குக் காரணம்.

சனிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து பிடித்தமான துணியை போட்டுக் கொண்டு ஆளுக்கு முன்பாக ஓடிப் போய் முன் சீட்டில் இடம் பிடித்துக் கொண்டான் ராகுல்.

அவனுக்குப் பிடித்தமான விஷயங்களில் முதலிடத்தில் இருப்பது கார் பயணம். அவனுக்காகவே இந்த காரை மிகுந்த சிரமத்துக்கிடையே வாங்கினார்கள் அவர்கள். முன் சீட்டில் ராகுல் அமர்ந்து ரோடை வேடிக்கை பார்க்கும் போது, கார் வாங்கியது எத்தனை ஆனந்தமானது என்று தோன்றும் சரண்யாவுக்கு.

அன்றும் அப்படித் தான் ஆரம்பமானது பயணம். உற்சாகமாய் சாலையைக் கவனித்துக் கொண்டே வந்தவன் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்ததும் சோர்வுக்குள் விழுந்தான். அதிகாலையிலேயே முழித்து விட்டதால் தூக்கம் அவனுடைய கண்களைச் சுழற்றி அடித்தது.

“மம்மி.. தூக்கம் வருது… நான் பின்னாடி போய் படுத்துக்கறேன்… அப்பாவை முன்னாடி வரச் சொல்லு” ராகுல் சொன்னான்.

அப்பாவும் பையனும் இடத்தை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது தான் நிகழ்ந்தது அந்த எதிர்பாராத விபத்து.

தனக்கு முன்னால் சட்டென வந்த பைக்கைப் பார்த்து சடர்ன் பிரேக் போட, வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சரிவில் உருண்டது.

பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராகுல், விழித்து என்ன நடக்கிறது என்பதை உணரும் முன் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிகளை வாங்கி இரத்தச் சுவடுகளோடு மயங்கினான்.

உருண்டு போன வண்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் கார்த்திக்கும், சரண்யாவும் தவித்தார்கள். யாருக்கு எங்கெங்கே அடிபட்டது, எங்கெங்கே வலிக்கிறது என்பதெல்லாம் புரியவே இல்லை. வண்டியின் கதவுகளெல்லாம் ஜாம் ஆகிவிட, பின்னால் குழந்தை மயங்கிக் கிடக்க பதறிப் போனார்கள் இருவரும்.

அதன் பின் நடந்தவையெல்லாம் சினிமா சமாச்சாரங்கள் போல நம்ப முடியாதவை. யாராரோ ஓடி வந்து கண்ணாடியை உடைத்து அவர்களை வெளியே எழுத்துப் போட்டார்கள்.

சரண்யாவால் கைகளைத் தூக்க முடியவில்லை. எங்கெங்கோ எலும்புகள் உடைந்திருக்க வேண்டும். கார்த்திக் முதுகில் பயங்கர வலி. அவர்களுடைய எண்ணமெல்லாம் ராகுலை எப்படியேனும் மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்பது மட்டுமே.

வந்து கொண்டிருந்த ஒரு கல்யாண ஊர்வலத்திலுள்ள ஒரு காரை நிறுத்தி அதில் அவர்களை ஏற்றி அவசர அவசரமாக அருகிலிருந்த மருத்துவமனை நோக்கி விரைந்தார்கள்.

அது ஒரு சின்ன மருத்துவமனை

“சார்… முதலுதவி எல்லாம் செஞ்சுட்டோம். ஆனா பையனுக்கு தலையில பலமா அடிபட்டிருக்கு. அதனால் இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்துல கோவிந்த் ஆஸ்பிடல் இருக்கு. அங்கே கொண்டு போங்க…”

வண்டி கோவிந்த் மருத்துவமனை நோக்கி பறந்தது.

“ஐயோ.. சார் இன்னிக்கு சி.டி ஸ்கேன் வர்க் ஆகல.. நீங்க நேரா பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கே போயிடுங்களேன்” கைவிரித்தது கோவிந்த் மருத்துவமனை.

விபத்தில் அடிபட்டவருக்கு உதவி செய்யப் போய் ஏதேனும் சிக்கல் வருமோ எனும் பயமா ? அல்லது உண்மையிலேயே சி.டி ஸ்கேன் வேலை செய்யவில்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை.

வண்டி பாண்டிச்சேரி நோக்கி ஓடியது.

இதைத் தான் விதி என்பதா தெரியவில்லை. விபத்து சென்னைக்கு அருகில் நடந்திருந்தால் சென்னையில் ஏதேனும் மருத்துவமனையில் சேர்த்திருக்கலாம். பாண்டிச்சேரி அருகே நடந்திருந்தால் நேரடியாக பாண்டிச்சேரி மருத்துவமனையில் சேர்த்திருக்கலாம்.

நடந்திருப்பது பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் நடுவே. பதட்டமும் குழப்பமும் வழிந்தது கார்த்திக்கின் மனதில்.

விபத்து நடந்த ஒரு மணி நேரத்தை “கோல்டன் அவர்” என்று சொல்வார்கள். அந்த நேரத்துக்குள் நல்ல மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து விட்டால் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதம். என்ன செய்வது நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே !

வண்டி வேகமாய் ஓடிக்கொண்டிருக்க, மயக்கத்தில் சரிந்தாள் சரண்யா….

சரண்யா மயக்கத்தில் ஒரு புறம் சரிய, சற்றும் எதிர்பாராத விதமாக, கையில் இருந்த ராகுல் மரணத்தில் விழுந்தான். இப்படி ஒரு நிகழ்வை கனவின் நுனியிலும் நினைத்திருக்காக கார்த்திக் இடி விழுந்த முட்டை போல சுக்கு நூறாய் உடைந்தான்.

மடியிலேயே தன் மகன் மரணமடைவதைக் காணும் துர்பாக்கிய நிலையில் உறைந்து போய் மொத்த வலுவையும் இழந்தான் கார்த்திக்.

மருத்துவமனையை அடைந்த போதே சொல்லி விட்டார்கள்.

“சாரி சார்.. பையன்…. ஏற்கனவே இறந்துட்டான்”

இப்படி ஒரு வார்த்தை மருத்துவரின் வாயிலிருந்து வரக் கூடாதே என பதறிக் கொண்டிருந்த கார்த்திக் மிச்சம் மீதி இருந்த சக்தியையும் இழந்து தலையில் கைவைத்துக் கொண்டே தரையில் அமர்ந்தான்.

சரண்யா அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள்.

“ஒருநாள் அப்சர்வேஷன்ல வெச்சிருக்கணும். அதுவரைக்கும் பையனைப் பற்றி அம்மா கிட்டே சொல்லாதீங்க…” மருத்துவர் சலனமே இல்லாமல் சொல்லிவிட்டு கடந்து போனார்.

அன்றைய தினம் எப்படிப் போனது என்று கார்த்திகிற்கு புரியவே இல்லை. யாருக்கோ போன் செய்து கதறலோடே விஷயத்தைச் சொல்ல, விஷயம் செல்போனில் தீயாய் பரவி உறவினர்களும், நண்பர்களும் பாண்டிச்சேரி அடைந்தார்கள்.

ஐசியுவிற்குள் வருபவர்களிடமெல்லாம் சரண்யா கேட்ட ஒரே விஷயம்

“ராகுலைப் பாத்தீங்களா ? நல்லா இருக்கானா ? ரொம்ப வலி இருக்குதாமா ?” என்றது தான்.

“நல்லா இருக்கான்… பேசாம படுத்திருக்கான்” என கதறலை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு பதில் சொன்னார்கள்.

“நல்ல வேளை கடவுள் தான் காப்பற்றினார். பயங்கர ஆக்சிடண்ட். நினைக்கவே பயமா இருக்கு” சிரித்துக் கொண்டே சொன்ன சரண்யாவை ஏறிட முடியாமல் கலங்கினார்கள் அனைவரும்.

அன்று மாலை தான் சரண்யாவுக்கு விஷயமே தெரிந்தது. கொதிக்கும் எண்ணைக்குள் குதித்ததாய் அலறினாள்…. கதறினாள்…

சிரிப்பும் சந்தோசமுமாக காலையில் கிளம்பிய குடும்பம் இரவில் அழுகையும், இழப்பும், கதறலுமாய் வீடு சேர்ந்தது.

அழுகையின் உச்சகட்டத்தில் மூழ்கியது வீடு.

தகவல் கேட்டவர்கள் எல்லாம் அதிர்ந்தனர். நம்ப முடியாமல் இரண்டு மூன்று தடவை திரும்பத் திரும்ப கேட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்கள். இப்படி ஒரு துயரத்தை யாரும் எள் முனை அளவும் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

எல்லாம் முடிந்து விட்டது.

பதினாறாவது நாள்.

ராகுல் இறந்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டிருந்தன.

அழுகை வழிந்து வழிந்து அறைகளெல்லாம் இறுக்கத்தால் நிரம்பியிருந்தன. கவலையின் கற்களால் கட்டப்பட்டதாய் தோன்றியது வீடு. ஆனந்தத்தின் அறைகளாய் இருந்தவை, துயரத்தின் தூண்களாய் மாறிப் போயின.

இங்கே தான் ராகுல் இருந்தான், இங்கே தான் டிவி பார்த்தான், இங்கே தான் விளையாடினான் என நினைவுகள் விசும்பல்களாய் வழிந்தன.

“ஐயோ.. அவனுக்கு வாங்கி வைத்திருந்த விளையாட்டுச் சாமான்களில் பாதி கூட இன்னும் அவனுக்குக் கொடுக்கலையே…” அவன் துணிகளை நெஞ்சோடணைத்துக் கதறினாள் சரண்யா.

“ஒரு நாள் கூட தனியா இருக்கமாட்டானே. இப்போ அவன் தனியா போய் பதினாறு நாளாச்சே…” பாட்டியின் புலம்பல் வாசல்களில் வழிந்தது.

“திடீரென ஒரு மிராக்கிள் நடக்காதா ? அவன் வந்து கதவைத் தட்டமாட்டானா ? “ கவலையின் தவிப்புடன் தந்தை மௌனமாய் கதறினார்.

ஒரு மழலையின் சின்னச் சிரிப்பே ஒரு யுகம் ரசிக்க வைக்குமெனில், ஆறு வருட வாழ்க்கை எத்தனை ஆழமாய் நினைவலைகளை எழுப்பியிருக்க வேண்டும்.

கிருஷ்ணர் வேடமிட்ட அவனுடைய படம் சுவரில் தொங்கியது.

“கடவுளாய் வேடமிட்டவன், கடவுளிடமே போய்விட்டானே. அவனுக்கு ஏன் இத்தனை அவசரம். என்னை விட்டு விட்டுப் போய்விட்டானே” சரண்யா அழுகையை நிறுத்தவே இல்லை.

எப்போதும் சிரிப்பும், உரையாடலும், கலகலப்பும் நிரம்பி வழியும் வீடு இப்போது மௌனத்தின் ஆழத்தில் மூழ்கியது.

மௌனத்தை விசும்பலும், அழுகையும் மட்டுமே கலைத்தன.

ஓரமாய் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த சரண்யா சட்டென நிமிர்ந்தாள்.

அவளுடைய மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. மெதுவாய் எழுந்தாள்.

“கார்த்திக்… கொஞ்சம் வெளியே போணும் வரீங்களா ?”

“இன்னிக்கு பையனோட காரிய தினம், பதினாறாவது நாள். இன்னிக்கு எங்கேயும் போகவேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் எடு” கார்த்திக் சொன்னான்.

சரண்யாவின் தோள்பட்டை எலும்பு முறிந்து போய் கட்டு போடப்பட்டிருந்தது. வலி உடல் முழுவதும் வியாபித்திருந்தது. எனினும் மகனின் இழப்புக்கு முன்னால் எந்த வலியும் அவளுக்கு வலியாகவே தெரியவில்லை.

“இல்லை.. வாங்க.. ஒரு கால் டாக்சி புடிங்க.. கண்டிப்பா போகணும்…”

“எங்கே போகணும் ?” கார்த்திக் கேட்டான்.

“சொல்றேன்.. வாங்க..” சரண்யா சொல்ல, அவளை எதிர்க்க வேண்டாம் எனும் சிந்தனையில் கார்த்திக்கும் கிளம்பினான்.

கால் டாக்சி ஒன்று வந்தது.

வண்டியில் ஏறிய சரண்யா போக வேண்டிய இடத்தைச் சொல்ல கார்த்திக் திடுக்கிட்டான்.

0

சரண்யாவும், கார்த்திக்கும் அந்த வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

“யாரு ?” கதவைத் திறந்த அம்மாவுக்கு ஐம்பது வயதிருக்கலாம்.

“சேஷகிரி வீடு இது தானே” ? சரண்யா மெதுவாய் கேட்டாள்.

“ஆமா…உள்ளே வாங்க…”

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

வீட்டின் நடுவே வாழை இலை போடப்பட்டு பூஜை நடந்ததற்கான அடையாளங்கள்.

புதிதாய் மாட்டப்பட்டிருந்த போட்டோவில் சேஷகிரி சிரித்துக் கொண்டிருந்தான். ஹாலில் ஆங்காங்கே சிலர் அமர்ந்து மௌனத்தைத் தின்று கொண்டிருந்தனர்.

“இன்னிக்கு அவன் பகவான் கிட்டே போய் பதினாறு நாள் ஆச்சு. ஒரே பையன்..” மேலே பேச முடியாமல் சேலைத் தலைப்பை எடுத்து வாயில் வைத்தாள் அவள்.

“நீங்க அவன் கூட வேலை பாக்கிறவாளா ?”

“இல்லை…” சரண்யா மெதுவாய் சொன்னாள்.

“பின்னே ?…”

கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின் சரண்யா சொன்னாள்.

“அவனை கொன்னவள்”

சரண்யா சொல்ல ஹாலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் சட்டென நிமிர்ந்தார்கள்.

“நான் அவனை கொன்னவள். என் கார்ல அடிபட்டு தான் உங்க பையன் இறந்து போயிட்டான். “ சரண்யா தலை கவிழ்ந்து விசும்பினாள்.

“என்னது… நீ தான் அந்த பாவியா.. என்ன தைரியம் இருந்தா இங்கே வருவே” ஒரமாய் அமர்ந்திருந்த உறவினர்களின் ஒருவர் விருட்டென கொதித்தெழுந்து அவர்களை நோக்கிப் பாய்ந்தார்.

“நீங்க என்னைக் கொன்னாலும் பரவாயில்லைன்னு தான் இங்கே வந்திருக்கேன். அந்த ஆக்சிடண்ட்லே என்னோட ஒரே பையனையும் இழந்துட்டேன். அவனுக்கு ஆறு வயசு. அவனோட இழப்பு எப்படிப்பட்ட வலியை தருதுன்னு எனக்குத் தான் தெரியும். ஒரு ஆறு வயசுப் பையனோட இழப்புல நான் இவ்ளோ அழுதா, இவ்ளோ துடிச்சா, இருபத்தாறு வயது பையனோட இழப்புல நீங்க எப்படி அழுவீங்க, எப்படி துடிச்சுப் போயிடுவீங்கன்னு எனக்கு யோசிக்க முடியுது” சரண்யா அழுது கொண்டே சொன்னாள்.

“இந்தப் பதினாறு நாள் வாழ்க்கை எனக்கு சொல்லிச்சு, ஒரு இழப்போட வலி என்னான்னு. அப்படிப்பட்ட இழப்புல இருக்கிற உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்க தான் நான் வந்தேன்” அழுது கொண்டே சரண்யா இருக்கையிலிருந்து எழுந்து சேஷாத்ரியின் அம்மாவின் பாதங்களுக்கு அருகே குனிந்தாள்.

சேஷாத்ரியின் அம்மா சட்டென அவளை தடுத்து நிறுத்தினாள்.

“வேண்டாம்மா… ஏனோ தெரியல. எனக்கு இப்போ மனசுல பாரம் குறையுது. என் பையனும், உம் பையனும் சந்தோஷமா சுவர்க்கத்துல இருப்பாங்க. குழந்தைங்க கடவுள் அனுப்பற தேவதைங்க. எப்போ கடவுளுக்குத் தேவயோ அவரு கூப்பிடுவாரு. கொடுக்கும்போ வேண்டாம்னும் சொல்ல முடியாது, கேக்கும்போ முடியாதுன்னும் சொல்ல முடியாது” சொல்லி விட்டு அழ ஆரம்பித்து விட்ட சேஷாத்ரியின் அம்மாவின் முன்னால் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சரண்யா

பிடித்திருந்தால் ஒரு கிளிக் = > தமிழிஷ் வாக்களிக்க…

0

இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் வன்முறை

13

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது.

இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் அலசப்பட்டது.

உலகெங்கும் பரவலாக வரும் இத்தகைய தகாத உறவுகள் பற்றிய செய்திகள், குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை பெருமளவு வலுவிழக்கச் செய்வதுடன், பெற்றோரின் மீது மிகப்பெரிய சுமையையும் சுமத்தி விடுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சுமார் 53 விழுக்காடு குழந்தைகள் குடும்பத்தினரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என திடுக்கிடும் முடிவை வெளியிட்டிருந்தது.

இத்தகைய ஆய்வுகள், நமது சமூகம் குழந்தைகள் மீதான பாலியன் வன்முறையை எத்தனை தூரம் நிகழ்த்தி வருகிறது என்பதையும், எத்தனை அலட்சியமாக அவை இருட்டுக்குள்ளேயே அமிழ்த்தப்படுகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

உலக குழந்தைகளில் பத்தொன்பது விழுக்காடு மக்கள் நமது இந்திய நாட்டில் இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் உலகோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குழந்தைகளை மையப்படுத்தி இன்னும் பாதுகாப்புகளோ, நலவாழ்வுத் திட்டங்களோ தேவையான அளவுக்கு இல்லாதது மிகப்பெரிய அவலம் என்றே சொல்லவேண்டும்.

பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்த போது நிகழாத அல்லது வெளிவராத இத்தகைய தவறான பாலியல் வன்முறைகள், குடும்பங்கள் சிறிது சிறிதாய் உடைந்து வாழத் துவங்கிய கலாச்சாரச் சூழலில் தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியிருக்கிறது. எனினும் இத்தகைய சிக்கல்கள் கூட்டுக் குடும்பம், மற்றும் தனியே வாழும் குடும்பம் என பாகுபாடின்றி நிகழ்வது கவனிக்கத் தக்கது.

அண்ணன் தங்கை, தந்தை மகள், வளர்ப்புத் தந்தை மகள் என அதிர்ச்சியூட்டும் பாலியல் உறவுகளும், திருமணங்களும் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டதாய் இருந்தாலும் சில நாடுகள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பது திகைப்பூட்டும் உண்மையாகும்.

11
ஜெர்மனியில் சட்டத்துக்கு விரோதமாக திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்ட பேட்ரிக் மற்றும் சூசன் எனும் அண்ணன் தங்கை தம்பதியர் சட்டத்தை எதிர்த்துப் போராடிய நிகழ்வு 2007ல் நடந்தது. பரபரப்பூட்டிய அந்த வழக்கில் அந்த உறவை தகாததென்றே முடிவு செய்து தீர்ப்பு வழங்கியது ஜெர்மன் அரசு.

பிரேசில், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய குடும்ப உறவுகள் அங்கீகரிக்கப் படுகின்றன. அப்படியா என அதிச்சியுடன் பார்க்கும் நம்மை நோக்கி “இந்தியாவில் சொந்த அக்காவின் மகளையே திருமணம் செய்வார்களாமே?” என வியப்புக் கேள்வியை விடுக்கின்றன மேலை நாடுகள்.

அங்கீகரிக்கப்பட்ட, மற்றும் அங்கீகரிக்கப்படாத குடும்ப உறவுகள் ஒருபுறம் இருக்க, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், சர்வதேசச் சிக்கலாகவும் உருவாகியிருக்கிறது. குழந்தைகள் மீதான இத்தகைய பாலியல் தொந்தரவுகள் அவர்களுடைய உடலையும், மனதையும் ஒருசேர பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன.

உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

உலகில் மூன்று பெண் குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரக் கணக்கு. இந்தியாவைப் பொறுத்தவரை ஐம்பது விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்கின்றது ஆராய்ச்சியாளர் லூயில் எங்கல்பிரக்ட் அவர்களது ஆய்வு முடிவு.

12

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 48 விழுக்காடு பெண் குழந்தைகள் தாங்கள் ஆண்களாய் பிறக்காததற்காய் வருத்தப்பட்டிருக்கிறார்கள். காரணம் பாலியல் தொந்தரவுகள் !. பெண்களை மதிப்பதாகவும், துதிப்பதாகவும் இனியும் கதை அளந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
வல்லரசாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என ஒருபுறம் கூவிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் குழந்தைகளை பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் அவலம் இந்தியாவில் தான் மிக மிக அதிகம். மும்பையில் மட்டுமே வருடத்துக்கு 70,000 பெண் குழந்தைகள் பாலியல் பலவந்தத்தில் விழுகிறார்கள் என்கிறார் ஸ்வான்சேட்டன் அமைப்பின் தலைவரான டாக்டர் ரஜத் மித்ரா.

 
இந்தியாவில் ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், டெல்லி போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிக அளவில் இருப்பதாக இந்திய அரசின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

சுமார் 5 இலட்சம் குழந்தைகள் இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பல இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் பரவலாக பணி செய்து கொண்டிருக்கிறார்கள், பல இலட்சம் குழந்தைகள் இந்தியா முழுவதும் ஆதரவின்றி உலவுகின்றனர். எனவே தான் இந்தியா குழந்தைகள் மீதான பாலியல் ஆக்கிரமிப்பு நிலமாகிப் போன துயரம் நேர்ந்திருக்கிறது.

திட்டமிட்டு செயல்படுத்தப்படும் ஆரோக்கியமான பாலியல் கல்வி கூட இல்லாத நமது நாட்டில், சமூகம், குடும்ப உறவுகள் எனும் இருவேறுபட்ட கழுகுக் கண்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் கடமை தாயின் தோள்களில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்.

மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

மூன்றாவதாக மிக முக்கியமான “பாலியல் தொந்தரவுத்” தொடுதல் பற்றி விளக்குங்கள். இந்தியாவில் 72.1 % குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்கிறது அரசு ஆய்வு. எனவே பாலியல் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி விடுதல் மிகவும் அவசியமாகிறது.

14

தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம் !

உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

“அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

depressedREX_291x450“அம்மாவிடம் சொல்லுவேன், அப்பாவிடம் சொல்லுவேன் “என பயமுறுத்தி யாராவது தொந்தரவு செய்தார்களா என்பதையும் கேட்டறியுங்கள். இத்தகைய “பிளாக் மெயில்” கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுக்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும்.

யாராவது ஏதாவது அன்பளிப்புகள், இனிப்புகள் தந்தார்களா ? அல்லது தருவதாக வாக்களித்திருக்கிறார்களா என்பதை கேளுங்கள். அப்படியெனில் யார் எதற்காக போன்ற செய்திகளையும் கவனமாய் கேட்டறியுங்கள். அவை பாலியல் தொந்தரவுக்கான முன்னுரையாய் இருக்கலாம்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என எந்த விதத்திலும் இருக்கலாம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யும் நபர். எனவே ஒரு பொதுவான எச்சரிக்கை உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டுதல் அவசியம்.

குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபர், புகைப்படம் வீடியோ போன்றவற்றை எடுத்தால் “வேண்டாம்” என கண்டிப்புடன் மறுக்க குழந்தைகளைப் பழக்குங்கள். தனியே குழந்தைகளை வைத்து தகாத படங்கள் எடுக்கும் நிலையிலிருந்து தப்பிக்கலாம்.

90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

தன் சிறகின் கீழ் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமை அன்னையர்க்கு உண்டு. அதை சரிவரச் செயல்படுத்த குடும்பம் எனும் கட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அன்னையர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டியது அவசியம்.

4_diverse_kids_smiling

பாலியல் தொந்தரவுகள் சில தவறான நம்பிக்கைகளும், உண்மையும்

நம்பிக்கை

குழந்தைகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவது பெரும்பாலும் நமக்குத் தெரியாத நபர்களே ! நமது உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் பரிசுத்தமானவர்கள்., அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச்

உண்மை
90 விழுக்காடு தொந்தரவுகளும் தெரிந்த நபர்களாலேயே வருகின்றன !

4_diverse_kids_smiling

—————————————————————
நம்பிக்கை

எனது குழந்தைகளிடம் ஏற்கனவே இதைப் பற்றி விளக்கிவிட்டேன் எனவே அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏதும் இருக்காது.

உண்மை

குழந்தைகளுக்கு அடிக்கடி இதைக் குறித்து உரையாடுங்கள். குழந்தை எச்சரிக்கையாய் இருந்தாலும் பலவந்தமாகவோ, ஏமாற்றியோ யாரேனும் அவர்களை தொந்தரவு செய்து விட முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

எனது குழந்தையுடன் எனக்கு மிக நல்ல நட்புறவு உண்டு. என்ன பாலியல் தொந்தரவு நடந்தாலும் குழந்தை என்னிடம் உடனடியாக சொல்லிவிடும்

உண்மை

குழந்தைகள் பெற்றோருடன் எத்தனை சகஜமான நட்புறவு கொண்டிருந்தாலும் பாலியல் தொந்தரவுகளை சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே தொடர்ச்சியான கவனிப்பும், பராமரிப்பும், பகிர்தலும் அவசியம்

4_diverse_kids_smiling

—————————————————————
நம்பிக்கை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நகரங்களில் மட்டுமே உண்டு

உண்மை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கிராமம், நகர்ப்புறம் என எல்லா இடங்களிலும் உண்டு என்பதே உண்மை

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

திருமணமான, அல்லது நடுவயது தாண்டியவர்கள் மட்டுமே இந்த பாலியல் தொந்தரவு செய்யும் பட்டியலில் வருவார்கள்.

உண்மை

பதின்வயது வாலிபர்கள் கூட பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

4_diverse_kids_smiling 

—————————————————————

நம்பிக்கை

ஏழை குடும்பங்களில் மட்டுமே பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.

உண்மை

ஏழை பணக்காரர் எனும் பாகுபாடு இன்றி பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

மனநோயாளிகள் தான் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள்.

உண்மை

நல்ல மனநலம், உடல் நலம் உடையவர்களே பெரும்பாலும் இத்தகைய வன் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த செயல்களையெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். எனவே இனிமேல் தனியே நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.

உண்மை

குழந்தைகளுக்கு இத்தகைய சிக்கல்களைக் குறித்து விளக்கும் பெரிய பொறுப்பு அன்னைக்கு உண்டு. தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் குழந்தைகளிடம் அனைத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்னையரின் கடமையாகும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

சிறு சிறு பாலியல் தொந்தரவுகள் ஆபத்தற்றவை.

உண்மை

சிறு சிறு தொந்தரவுகள் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும். அவர்களுடைய மனதிலும், உடலிலும், சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

 

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே.

உண்மை

மிக மிகத் தவறு. 6 சிறுவர்களில் ஒரு சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறான் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன அறிக்கை.

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

அவர் ரொம்ப நல்லவர், அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார், அல்லது தெரியாமல் தவறிழைத்திருப்பார். இனிமேல் நிச்சயம் நடக்காது. பழையவற்றை மனதில் வைத்திருக்கத் தேவையில்லை.

உண்மை

பாலியல் தொந்தரவு செய்பவர்கள் ஒருமுறையுடன் நிறுத்துவதில்லை. அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இருக்கும். அதற்காகவே நல்லவர்களாய் நடமாடுபவர்கள் தான் அதிகம். எச்சரிக்கை அவசியம் !

4_diverse_kids_smiling

—————————————————————

நம்பிக்கை

குழந்தைகளிடம் இதையெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.

உண்மை

குழந்தைகளிடம் மிக விரிவாக, தெளிவாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விதமாக இவற்றைப் பேசுவது மிகவும அவசியம்.

தமிழிஷ் வாக்களிக்க…

பெண்ணே நீ - இதழில் வெளியான கட்டுரை

 

கவிதை : சென்னை

100ft-bye-pass

அப்போதெல்லாம்
வெறும் ஐயாயிரம் தான்
நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால்
நான் கோடீஸ்வரன்
அங்கலாய்த்தார் நண்பர்

அப்போதெல்லாம்
இங்கே
ஆள் நடமாட்டமே இருக்காது
பயங்களின்
பதுங்கு குழிதான் இந்த இடம்
என்றார் இன்னொருவர்.

எங்கே மழை பெய்தாலும்
இங்கே தான்
வந்து தேங்கும்.
இது
ஏரியாய் கிடந்த இடமப்பா
என்றார் மற்றொருவர்

அதோ அந்த இடத்தில்
இருந்தது
ஒரே ஒரு ஒற்றையடிப்பாதை
சைக்கிளில் வரவே
சங்கடப்படவேண்டும் அப்போதெல்லாம்

இதோ இந்த ஏரியா
நான்கு ரவுடிகளின்
தீர்மானத் தளங்கள்னா நம்புவியா ?
இது
கொலைகளின் கூடாரமாமப்பா !

ஆளாளுக்கு
காலாட்டிக் கொண்டே
கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம்
கிரவுண்ட் ஐம்பது இலட்சம் தான்
நாலு வாங்கிப் போட்டிருக்கலாம்
என
பிற்காலத்தில் பேசக் கூடும்
நான்
என் மகனிடம்

ஆறு வயது, ஆறா மனது

tears
சில துயரங்களை வார்த்தைகளால் நிச்சயம் சொல்ல முடியாது.
உயிரை உலுக்கிப் போடும் நிகழ்வுகளைச் சொல்ல கண்ணீரால் தான் முடியும்.
சில துயரங்களைக் கண்ணீர் கூட சொல்லிவிடாது
உறைந்து போனபின் உருகுவது கூட கடினமாகிவிடுகிறது.

நீண்டகாலக் கனவாக இருந்து, நிஜமாய் மாறிய சொந்தக் காரில் குடும்பத்துடன் ஆனந்தமாய் பாண்டிச்சேரி பயணித்தபோது,
கோர விபத்து ஒன்றில் படுகாயமடைந்து
ஆறு வயதேயான தனது தேவதை போன்ற மகன் ராகுலை
இழந்து, படுகாயமடைந்து
சொல்லொண்ணாத் துயரத்தில்  இருக்கும் உயிர்தோழியும், சகபதிவருமான ( உன்னுடன் ) ஜானகி அவர்களின் துயரத்தை என்னால் எப்படியும் சொல்லி விட முடியாது.

“வாடா ராகுல்” என மகனின் உடலருகே, அவனுடைய ஆடைகளை நெஞ்சோடணைத்து அவர் கதறிய கதறலைக் கேட்டபின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

வாய் திறந்தால் அழுகை வெடித்துவிடுமோ எனும் பயத்தில் பேசாமலேயே இருந்து விடுகிறேன்.
அவருடைய துயரத்தில் பங்குகொள்ளும் விதமாய் எனது இரண்டு வலைத்தளங்களும் சில நாட்களுக்கு மெளனமாய் இருக்கும்.

12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் !

12-angry-men-1-800“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.

ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.

வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன்கள் புதிது புதிதாய் இருக்கவேண்டும் இல்லையேல் பார்வையாளனுக்குப் போரடிக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் இலக்கணங்களை உடைத்துக் காட்டும் பல திரைப்படங்கள் மேலை நாடுகளில் தான் பிறப்பெடுக்கின்றன என்றே கருதுகிறேன். போன்பூத் – சில வருடங்களுக்கு முன்பு அந்த வகையில் பிரமிப்பூட்டிய படங்களில் ஒன்று.

சரி, 12 Angry Men படத்தின் கதை தான் என்ன ?

தந்தையைக் கொலை செய்து விட்டான் எனும் குற்றச் சாட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் சேரியில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் கொலை செய்திருக்கிறான் என்பதை நம்பி விடுகிறது நீதி மன்றம்.

நேரில் பார்த்த பெண்ணின் சாட்சியம், கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கேட்ட சத்தங்கள், இளைஞன் அறையிலிருந்து ஓடி வருவதைப் பார்த்த முதியவர் என சாட்சியங்கள் எல்லாம் இளைஞன் குற்றவாளி என அடித்துச் சொல்கின்றன.

போதாக்குறைக்கு அந்த நேரத்தில் படம் பார்க்கப் போனேன் எனச் சொல்லும் இளைஞனுக்கு அந்த படத்தின் பெயரோ, கதையோ, கதாபாத்திரங்களோ எதுவும் நினைவில் இல்லை. பட்ட காலிலேயே படும் என்பது போல அவனிடமிருந்த கத்தியும் அந்த இரவில் காணாமல் போய்விடுகிறது.tn2_12_angry_men_4

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்பா – நீ குற்றவாளிதான் என நீதிமன்றம் ஏறக்குறைய முடிவெடுத்து விடுகிறது.

இனி இந்த வழக்கைக் கவனித்து வரும் 12 நடுவர்கள் இவன் தான் குற்றவாளி அல்லது நிரபராதி என்று ஒரு தீர்ப்பை எழுதவேண்டும் அவ்வளவு தான் பாக்கி. இந்தப் பன்னிரண்டு பேருமே ஒத்த முடிவுடன் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்பது தான் சட்டம்.

அந்த பன்னிரண்டு பேரும் முன்பின் அறிமுகமற்றவர்கள். புழுக்கமாய் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்து, “சரி சரி.. இவன் குற்றவாளி தானே. சீக்கிரம் முடிவெடுத்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்” என அமர்ந்தால், ஒருவர் மட்டும் (கதாநாயகன் ஹென்ரி பாண்டா ) இவன் நிரபராதியாய் கூட இருக்கலாமே என ஒரு வாதத்தை முன்வைக்கிறான்.

ஒரு வேற்றுக் கிரக வாசியைப் போலவும், தீண்டத்தகாதவனைப் போலவும் மற்ற பதினோரு பேரும் அவனைப் பார்க்கிறார்கள். “சரி.. என்ன தான் சொல்ல வரே ?” என அலட்சியமாய் கேட்கும் அவர்களிடம் “இது ஒரு இளைஞனுடைய வாழ்க்கைப் பிரச்சனை. எனவே இதைப் பற்றி நாம் கொஞ்ச நேரம் விவாதிப்போம்” என்கிறான்.

இளைஞன் கொலையாளி என்பதை சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் பதினோரு பேருமாக கதாநாயகனை ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கி, கடைசியில் எல்லோருமே இளைஞன் நிரபராதியாய் இருக்கலாம் என  படம் நிறைவுறுகிறது.

அந்த விவாதக் களமே முழு திரைப்படமும். கொலையோ, கொலை நிகழ்ந்த இடங்களோ, நபர்களோ யாருமே காட்சிகளாய் காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கதை வசனமே கதையை விளக்குவதும், நகர்வதும், நிற்பதும், ஓடுவதும், அழுவதும் என எல்லா வேலைகளையும் செய்கிறது.

ஒரு அறைக்குள் விவாதிக்கும்போது தெரியவரும் சங்கதிகளும், சந்தேகங்களும் ஏன் உண்மையான வழக்கு விசாரணையில் எழவில்லை எனும் நியாயமான கேள்விக்குப் பதிலாகத் தான் அந்த இளைஞன் சேரியில் வசிப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்பது நுட்பமான இழை.

பன்னிரண்டு வேறுபட்ட குணாதிசயமுடைய நபர்களின் இயல்புகளையும், அவர்களுடைய சிந்தனை ஓட்டங்களையும், சிக்கல்களையும், சண்டைகளையும் சற்றும் போரடிக்காமல் ஒன்றரை மணி நேரம் வார்த்தைகளாலேயே படமாக்கியிருக்கும் இயக்குனர் சிட்னி லூமெட் பிரமிக்க வைக்கிறார்.

இந்தத் திரைப்படம் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இதன் அசாத்தியத் தாக்கம் காரணமாக திரைப்படமாக வெளியிடப்பட்டதாம் ( இதை எழுதும் போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி திரை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்த டூயல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது )

1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் தாண்டிய இன்றைய நவீன திரைப்படங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கிறது என்றால் மிகையல்ல.

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்

உனது குரல்..

 neetu-chandra-42

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்

16

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.

பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.

பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’

‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.

‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.

பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’

161பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.

வீரர்கள்  மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,

‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.

‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.

பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.

‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.

பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.

கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.

மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.

உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.

கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.

‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும்  பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.

பாலாக்கின் அரண்மனை.

பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம்,  உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.

‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.

‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.

உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.

பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்

உடலைப் பேண பத்து கட்டளைகள்

 

ss 

 

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

  

  1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
  2.  

     

  3. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.  
  4.  

  5. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள். 
  6.  

  7. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
  8.  

  9. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
  10.  

  11. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 
  12.  

  13. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள். 
  14.  

  15. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
  16.  

     

  17. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
  18.  

  19. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம் !
  20.  

  நன்றி : தமிழ் ஓசை – களஞ்சியம்

« முந்தைய இடுகைகள் அடுத்த பக்கம் » அடுத்த பக்கம் »